Saturday, September 16, 2006

ஏனுங்க இப்படி?

நானும் பார்த்துக்கிட்டேதான் இருக்கேன். இந்த ஒரு விஷயம் மட்டும் பிடிபடவே இல்லை. ஏன் இப்படி பண்ணறாங்கன்னு தெரியவே மாட்டேங்குது. நீங்க யாராவது கொஞ்சம் கேட்டுப் பார்த்து சொல்லுங்களேன்.

நான் சொல்லறது இந்த கிரிக்கெட் மாட்சுங்களைப் பத்திதான். எப்ப , எங்க போட்டி வைக்கணமுன்னுங்கிறது போட்டியில் கலந்துக்கற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் எல்லாம் கலந்து பேசி முடிவு பண்ணற ஒரு விஷயம். இதுல ஐ.சி.சியின் கமிட்டி ஒண்ணு வேற இருக்கு. இவங்க எல்லாம் ஒண்ணாக் கூடி டீ, பிஸ்கெட்டு எல்லாம் சாப்பிட்டுக்கிட்டு எப்ப, எந்த ஊரில் யாரு விளையாடணமுன்னு முடிவு பண்ணறாங்க.

எல்லாம் நல்லா படிச்சவங்கதானே. இவங்களுக்கு எந்த ஊரில் எப்ப மழைக்காலம், எப்ப மழை வாராது அப்படின்னு தெரியாது? தனக்கா தெரியலைனாலும் அந்தந்த பகுதியில் இருக்கும் வானிலை ஆராய்ச்சி மையங்கள் கிட்ட ஒரு பரிந்துரை வாங்கிக்க மாட்டாங்க? இப்படி எங்க போட்டி நடத்துனாலும் அங்க மழை பெய்யறதே ஒரு வாடிக்கையான நிகழ்வா ஆகிப் போச்சே.

சரி, இதையெல்லாம் பல மாதங்களுக்கு முன்னாடியே முடிவு பண்ணறாங்க. அதனால அந்த குறிப்பிட்ட நாளன்று வானிலை எப்படி இருக்குமுன்னு சொல்லறது முடியாத காரியம். ஆனா ஆகஸ்ட், செப்டம்பரில் கிழக்காசிய நாடுகளில் மழைக்காலம் என்ற அடிப்படை அறிவு கூடவா இல்லை?

மத்த விளையாட்டுங்களெல்லாமும் இந்த மாதிரிதானே முன்னாடியே முடிவு பண்ணறாங்க. இந்த அளவுக்கு வேறெந்த விளையாட்டும் மழைக் காரணமாக இந்த அளவு பாதிக்கப் படறதா தெரியலையே. அது ஏன்? ஒரு வேளை அங்க கமிட்டி எல்லாம் போடாம முடிவு பண்ணறதுனால சரியான முடிவுகள் எடுக்கறாங்களா? ஒண்ணும் புரியலையே.

இதுல மழை வரது இயற்கை நிகழ்வு. அதனால ஒரு பந்து கூட போடலையினாலும் டிக்கெட் காசை திருப்பி எல்லாம் தரமுடியாது அப்படின்னு ஏப்பம் வேற விடறாங்க. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் விளம்பரக் காசு எல்லாம் வராம போகுதுன்னு அதுக்கு வேற தனியா இன்ஷூரன்ஸ் பண்ணி அங்க வேற பணம் வாங்கிக்கறாங்க. ஒரு வேளை இதுக்கெல்லாம்தான் மழைக்காலமா பாத்து போட்டியை வைக்கறாங்களா?

சரி. அப்படி என்னதான் யோசிச்சு முடிவு எடுத்தாலும், அது என்னவோ தெரியலை என்ன மாயமோ தெரியலை, கிரிக்கெட் போட்டி நடத்துனா மட்டும் மழை வருது அப்படின்னு சொன்னீங்கன்னா, மழை இல்லாம தண்ணிக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற இடங்கள் எவ்வளவு இருக்கு. அங்கெல்லாம் போயி போட்டியை நடத்தி மழையை வர வையுங்கப்பா. உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.

இப்படிக்கு,
இணையத்தில் கிரிக்கெட் மாட்ச் பார்க்க முடியாவிட்டாலும் வர்ணனையையாவது படிக்கலாம் என தூக்கத்தைக் கெடுத்து எழுந்து உட்கார்ந்து இருக்கும்

அப்பாவி ரசிகன்.

Sunday, September 10, 2006

விடைபெறுகிறேன்

ஆஹா! தொல்லை விட்டுதுன்னு ஜாலியா பதிவை திறக்கும் மக்கள்களே. உங்களை அவ்வளவு சீக்கிரம் விடறதா இல்லை. கடந்த இரு நாட்களில் இரண்டு விடைபெறுதல்கள் நடந்தன. தத்தம் விளையாட்டுகளில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த இருவர், விளையாடியது போதும் என முடிவெடுத்து விட்டனர். எனது ஹீரோக்களான அவர்களை வாழ்த்திடவே இந்தப் பதிவு.



முதலில் சனிக்கிழமை அன்று யூ.எஸ். ஓப்பன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் தனது 50ஆவது வயதில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மார்டினா நவரத்திலோவா. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக டென்னிஸ் உலகில் தனது முத்திரையைப் பதித்த இவரது வெற்றிகளை முறியடிக்க இனி ஒருவர் பிறந்துதான் வர வேண்டும். தனது கடைசி ஆட்டத்திலும் மிகத் திறமையாய் விளையாடி கோப்பையை வென்ற இவருக்கு நமது வாழ்த்துக்கள்.



அடுத்ததாக இன்று இத்தாலிய கிராண்ட் பிரி போட்டியில் வெற்றிக் கனியை பறித்த கையோடு தனது ரிட்டயர்மெண்டை அறிவித்த மைக்கேல் ஷுமாக்கர். 90 வெற்றிகள், 68 முதலிடத் தகுதிகள், 1354 வெற்றிப் புள்ளிகள், 7 முறை உலக சாம்பியன் பட்டம் - வேறேதாவது சொல்ல வேண்டுமா? இந்த வருடமும் உலக சாம்பியன் பட்டம் பெற இவரை வாழ்த்தி, இவரின் இடத்திற்கு வர இருக்கும் கிமி ரெய்க்கோனனையும் வருக வருக என வரவேற்போம். ஃபெராரியில் மைக்கேலின் பங்கு என்னவென்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இருவரும் மனதே இல்லாமல்தான் பிரிவதாகத் தோன்றுகிறது. எல்லா வகைப்பட்ட சாதனைகளும் புரிந்திட்ட நிலையிலும் தாங்கள் பங்கு பெறும் ஒவ்வொரு போட்டியையும் ஒரு புதுமுகத்திற்குண்டான உற்சாகத்துடன் எதிர் கொண்ட இவர்கள் வாழ்வு நமக்கெல்லாம் ஒரு பாடம். இவர்களைப் பற்றி விரிவான பதிவுகள் வரும். வரவில்லையென்றால் நாமே போட வேண்டியதுதான்.

இந்த இருவருமே ஒரு வெற்றியோடு தாம் விலகுவதை அறிவித்த பாங்கு என்னைக் கவர்ந்தது. Way to go Champions!

படங்கள் இணையத்தில் திருடப்பட்டவை. தந்த தளங்களுக்கு நன்றி.

Tuesday, September 05, 2006

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி

நம்ம மக்கள் பியர் குடிக்கும்போது சும்மா குடிச்சாத்தான் தேவலையே. ஆனா சும்மா இருக்காம காரமா சைட் டிஷ் தேடி அலையறாங்க. அதுவும் வறுத்த ஐட்டமா இருந்தாதான் வசதியா இருக்கு. அது முறுக்கு, சிப்ஸ் அப்படின்னு ஆரம்பிச்சு சிக்கன் 65, சில்லி சிக்கன் அப்படின்னு போயி முடியுது. பியரை விட இந்த ஐட்டங்களில்தான் தொப்பை, தொந்தின்னு வந்து தங்கமணிங்க வாயில விழுந்து புறப்பட வேண்டியதா இருக்கு. அது மட்டுமில்லாம கொலஸ்ட்ரால், ட்ரைக்ளிஸரைட்ஸ் அது இதுன்னு வேற பயமுறுத்தறாங்க. இதுக்கெல்லாம் பயந்து அவனவன் பியர் குடிக்கறதையே விட்டுடுவான் போல இருக்கு.

இந்த போக்கே சரி இல்லையே. இவங்களுக்கு எல்லாம் நல்லதா எதாவது பண்ணணுமே அப்படின்னு ராத்திரி பகலுன்னு பார்க்காம நம்ம பக்கத்துல ஒரு ஆள் யோசிக்கிட்டே இருந்தாரு. அப்போ அவரு மூளையில திடீருன்னு உதிச்ச ஒரு உலகத்தையே புரட்டிப் போடக்கூடிய இந்த விஷயம்.



இதுதாங்க சில்லி பியர். மேட்டர் என்னான்னு படத்தைப் பார்த்தாலே புரிஞ்சு இருக்கும். " இந்த பியருக்கும் மத்த பியருக்கும் என்ன வித்தியாசம்? ஒரு மிளகாய். ஒரே ஒரு மிளகாய்" அப்படின்னு தமிழ் தெரியாத மெழுகு பொம்மை வந்து சொன்னாதான் புரியும் அப்படின்னு உங்களை நான் குறைச்சு மதிப்பிடாததுனாலதான் அதெல்லாம் பண்ணலை.

ஹேலப்பீனோ (Jalapeno) என்ற வகை மிளகாய் ஒன்றை எடுத்து ஒரு பாட்டில் பியருக்குள் போட்டு ஊற வைத்து விட்டார்கள். அதிலுள்ள காரம் எல்லாம் மெதுவாக இந்த பியருள் இறங்கி பியர் மிகுந்த சுவையோடு இருக்கிறது. நல்ல காரமாய் இருப்பதால் தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம். நமக்கு புரியற வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் -"அப்படியே சாப்பிடலாம்".

ஆகவே இந்த மாதிரி நம்ம மக்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இந்த மாதிரி ஒரு புதுமையான ஐட்டத்தைக் கண்டுபிடித்த மகானுபாவருக்கு ஒரு 'ஓ' போட்டுட்டு ஆக வேண்டிய வேலையைப் பாருங்கப்பா!

Friday, September 01, 2006

அட்லாஸ்(ட்) நன்றி

என்னடா இவன் நன்றி சொன்னா கிண்டல் பதிவு போடறான், இப்போ இவனே நன்றி சொல்லறான்னு பாக்கறீங்களா? இது விஷயம் வேற. நம்ம பசங்க எல்லாம் என்ன நீங்க எங்க எங்கயோ போயி பதிவு போடறீங்க. நாங்க எல்லாம் பதிவு படிக்கறதா இருந்தா உங்க பதிவுல மட்டும்தான் படிப்போம் அப்படின்னு ஒரே ரவுசு. இந்த அன்புக்கும் பாசத்துக்கும்தான் நன்றி. இந்த பசங்களுக்கு இப்படி எல்லாம் இருக்கக் கூடாது, அப்படின்னு சொல்லி இங்க சுட்டி தரேன் அப்புறமாவது போயி படிங்கன்னு சொல்லவும்தான் இந்த பதிவு.

ஜுலை மாதம் நம்ம வ.வா.சங்கத்தில நம்மளை அட்லாஸ் வாலிபரா தேர்ந்தெடுத்து வாரம் ஒரு பதிவு போடச் சொன்னாங்க. ஆடிக்கு ஒரு பதிவு, அமாவாசைக்கு ஒரு பதிவு போடற நம்மளால வாரம் ஒரு பதிவு போடமுடியுமான்னு ஒரே கவலை. ஓடினேன் பாரு ஒரு ஓட்டம். வாழ்க்கையின் எல்லை வரை ஓடலைன்னாலும் கிட்டத்தட்ட இந்த உலகின் எல்லை வரை ஓடி நம்ம துளசி டீச்சர் வீட்டுக் கதவைத் தட்டினேன். அவங்கதான் சொன்னாங்க, " கண்ணைத் திறந்து வச்சுக்கிட்டு இரு. நம்ம சுத்தி என்ன நடக்குதுன்னு பாரு. அதை வெச்சி வாரம் ஒரு பதிவு என்ன, ஒரு நாளைக்கு ஒரு பதிவு வேணாலும் போடலாம்." அப்படின்னு சொன்னாங்க. நாமளும் அதை சிரமேற்கொண்டு கண்ணை நல்லா திறந்து வெச்சுக்கிட்டு அலைஞ்சேன். அப்படித்தான் நான் போட்ட நாலு பதிவும் மாட்டிச்சு. ஒண்ணொண்ணா பார்க்கலாம்.

போட்ட முதல் பதிவு மண்டூகங்களுக்கு பின்நவீனத்துவ திறனாய்வு. நமக்கு வேண்டப்பட்ட ஆளு ஒருத்தரோட பேசிக்கிட்டு இருந்தம்போது வந்த ஐடியா இது. அது யாருன்னு கேட்டீங்கன்னா, வேற யாரும் இல்லை. நம்ம தளபதி நாமக்கல்லார்தான். அவரு நமக்கு புதுக்கவிதை பத்தி கிளாஸ் எடுக்கப் பாத்தாரு. நாம் அவருக்கு திறனாய்வு கிளாஸ் எடுத்துட்டோமில்ல!

அடுத்துப் போட்ட பதிவு - பரிணாம வளர்ச்சி. நம்ம தெக்கி போட்ட ஒரு பதிவு பத்தி அவரோட சாட் பண்ணும் போது வந்த ஐடியா இது. பேசிக்கிட்டே இருக்கும் போது வெகு வேகமா டெவலப் ஆச்சு. பதிவின் நீளம் கருதி யோசிச்ச சில ஐடியாக்கள் போட முடியாமப் போச்சு. தனக்கு ஒரு வளர்ச்சியும் சொல்லலையேன்னு செல்லமா திட்டினவங்க கூட உண்டு!

பரிணாம வளர்ச்சிக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 574. இது ஓடிக்கிட்டு இருக்கும் போதே ஒரு வாரம் போனதுனால அடுத்த பதிவு போடச் சொல்லி கைப்பு கிட்ட இருந்து ஒரே பிரஷர். அந்த சமயத்தில நம்ம போலிஸ்கார் வேற பின்னூட்டக் கயமைத்தனம் பத்தி போட்டாரா, நாமளும் அதைச் சாக்கா வைச்சு அடுத்த பதிவு ரெடி பண்ணியாச்சு - வ.வா. சங்கத்தினரின் மெகா பதிவுக் கயமைத்தனம்.

கடைசியாப் போட வேண்டியது நன்றி நவிலல்தானே. ஆனா அப்போ நம்ம தேன்கூடு போட்டி முடிஞ்சு எல்லாரும் நன்றி சொல்லிக்கிட்டு இருந்தாங்களா? நமக்குக் கொஞ்சம் டென்ஷனாகிப் போச்சு. சரின்னு அதை வெச்சே ஒரு நன்றி பதிவு போட்டாச்சு. அதான் தேன்கூடு போட்டி - நன்றி நவில்தல் .

இப்படித்தான் நம்ம அட்லாஸ் மாதம் ஓடிச்சு நண்பர்களே. இந்த பதிவுகளுக்கு காரணிகளாக இருந்த நண்பர்களுக்கும், இப்படி எல்லாம் கவனமா இருக்கச் சொன்ன டீச்சருக்கும், வந்து படிச்சவங்களுக்கும், செய்ய வேண்டியதை சரியா செஞ்ச நண்பர்களுக்கும், எனக்கு ஒரு சவுண்டிங் போர்டாக இருந்த (இருக்கும்)எஸ்.கே அவர்களுக்கும் நம்ம நன்றி.