Tuesday, February 27, 2007

சக்சஸ்! சக்சஸ்!

என்னடா இவன் பராசக்தியில் நடிகர் திலகம் சொன்ன வசனத்தை மீள்பதிவு செய்யறானேன்னு பாக்கறீங்களா! வேற ஒண்ணுமில்லை மக்கள்ஸ். நாம் நடத்திய சோதனை பெரும் வெற்றியைப் பெற்று விட்டது என்பதைச் சொல்லத்தான் இந்த பதிவு.

தமிழ்மணத்தில் பின்னூட்டங்கள் இற்றைப்படுத்துகையில் பின்னூட்டங்களின் உயரெல்லை முப்பதாக (இப்படி கரடுமுரடா வார்த்தைகளை எங்க இருந்து பிடிக்கறாங்கப்பா!) தீர்மானிக்கப் பட்டு அது சார்ந்த அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து, அதற்கு முன் சில பிரச்சனைகளை சந்தித்தாதால், வார்ப்புருவில் மாற்றங்கள் தேவையில்லை என்பதனை நிரூபணம் செய்துகொள்ள நான் மேற்கொண்ட சோதனை பதிவு பற்றியும் அனேகர் அறிவீர்கள்.

அந்த பதிவு வெற்றிகரமாக தமிழ்மணத்தில் சேர்க்கப்பட்டு பின்னூட்டங்களும் திரட்டப்பட்டதால் வார்ப்புருவில் எந்த விதமான மாற்றங்களும் தேவையில்லை என்பது தெளிவாகிற்று. பதிவிட்ட பின் முகப்பில் வழக்கம் போல் வந்த பதிவு, பின்னூட்டங்கள் 30 (குமரனின் பேராதரவுடன்!) தாண்டியபின் நிர்வாகத்தினர் சொன்னது போல் காணாமலேயே போனது.

ஆனால் முகப்பில் வரவில்லை என்றாலும் தொடர்ந்து திரட்டப்படும் என நிர்வாகத்தினர் சொல்லி இருந்ததால் ஒரு வேளை "கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" என்ற பகுதியிலாவது வருகிறதா என பார்த்தால் அங்கும் வரவில்லை. அதனால் தொடர்ந்து திரட்டப்படுவது என்பது பற்றி நிர்வாகத்தினரிடம் கேட்டுள்ளேன். அவர்கள் பதில் அளித்தவுடன் இங்கு இடுகிறேன்.

30க்கு பின்னால் என்ன? என்ற ஒரு குழப்பம் நம்மிடையே நீடிக்கும் (அட்லீஸ்ட் எனக்கு மட்டுமாவது இருக்குங்க) நிலையில், இந்த கேள்வியும் அதற்கான பதிலும் நமக்கு ஒரு தெளிவைத் தரும் என்பதற்காகவே இந்த பதிவு.

மற்றபடிஅனானி ஆட்டமில்லாமல், அடுத்தவரை வசை பாடாமல் வெறும் ஜாலிக்கு பின்னுட்ட விளையாட்டு நடந்தால், வழக்கம் போல பதிவுக்கு வரும் நண்பர்களும் வந்து கொண்டுதான் இருப்பதால் பின்னூட்ட விளையாட்டுக்கு உடனடி ஆபத்தில்லை என்பதும் நிச்சயமாகிறது.

இங்கு குறிப்பிட்டு இருந்த பதிவு தமிழ்மண நிர்வாகத்தினரால் நீக்கப்பட்டு விட்டது. இனி இங்கிருந்தால் விளம்பரம் தருவது போலாகும் என்பதால் நானும் அது பற்றிய குறிப்பினை எடுத்து விடுகிறேன். தமிழ்மணத்தின் தரம் காக்கும் நிர்வாகத்தினரின் இந்த செய்கைக்கு எனது நன்றி.

Monday, February 26, 2007

சோதனைப் பதிவு

டிஸ்கி: இது ஒரு சோதனைப் பதிவு. சொல்லப் போவது என் சோகக் கதையை. வேண்டாதவர்கள் சாய்ஸில் விட்டு விடுங்கள்.

சனிக்கிழமை வரை ஒழுங்காக தமிழ்மண முகப்பில் வந்து கொண்டிருந்த எனது பதிவுகள், திடீரென ஞாயிற்றுக் கிழமையிலிருந்து அண்மையில் மறுமொழியப்பட்ட பதிவுகளில் வரக் காணோம். இத்தனைக்கும் நான் வார்ப்புருவில் எந்த வித மாற்றமும் செய்யவில்லை. என்ன செய்வது எனத் தெரியாது திணறி நின்ற பொழுது இந்தப் பதிவு கண்ணில் பட்டது.

தமிழ்மண நிர்வாகக் குழுவினர் இனி 30 பின்னூட்டங்களுக்கு மேல் போகும் பதிவுகளை திரட்ட போவதில்லை என்ற அவர்களது முடிவை வெளியிட்டு இருக்கும் பதிவு இது. இந்த அறிவிப்பு இவர்கள் இன்றுதான் வெளியிட்டு இருந்தாலும் ஒரு வேளை அதற்குரிய மென்பொருளை நேற்றே சோதனை செய்து இருப்பார்களோ, அதனால்தான் முப்பதிற்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் இருக்கும் அந்தப் பதிவு தெரியாமல் போனதோ என சந்தேகம்.

இந்த பதிவும், இதில் வரும் மறுமொழிகளும் தமிழ்மணத்தில் சரிவரத் தெரிந்தால் வார்ப்புருவில் கை வைக்க வேண்டாம். அல்லது அதில் என்ன பிரச்சினை எனப் பார்க்க வேண்டும். அந்த சோதனைக்காகவே இந்தப் பதிவு. இவ்வளவு நேரம் பொறுமையாக எதேனும் இருக்கும் எனப் படித்து இருந்தீர்களானால் என்னை மன்னிக்கவும். இது உண்மையிலேயே ஒரு சோதனைப் பதிவு.

Friday, February 23, 2007

இண்டிபிளாக்கீஸைத் தொடர்ந்து ஒரு கின்னஸ் சாதனை!

இப்போதான் இண்டிபிளாக்கீஸ் தேர்தலில் நம்ம பினாத்தலார் வெற்றி பெற்ற சந்தோஷச் செய்தியை பகிர்ந்துகிட்டேன். அதுக்குள்ள அடுத்த செய்தி. இது கின்னஸ் சாதனை. பின்னூட்டத்தில் கின்னஸ் சாதனை செஞ்சதா நம்ம பேரு வந்திருக்கா? ச்சீ, ச்சீ அதெல்லாம் இல்லைங்க. இது வேற ஒரு இனிப்பான செய்தி.

அதாவது உலகத்திலே அதிக காரமுள்ள மிளகாயா நம்ம அசாம் மாநிலத்தில் விளையும் ஒரு ரக மிளகாயைத் தெரிவு செஞ்சிருக்காங்க. அதுதான் அதிக காரமுள்ள மிளகாய் என்ற சாதனை என்பதை கின்னஸ் நிறுவனத்தாரும் உறுதி செஞ்சுருக்காங்க. இப்போ சொல்லுங்க. இது இனிப்பான செய்திதானே. இன்னும் கொஞ்சம் தகவல் சொல்லறேன் கேட்டுக்குங்க.

இந்த மிளகாயின் பெயர் பூத் ஜோலோகியா (Bhut Jolokia), அதாவது பூத மிளகாய். இந்த மிளகாய் விஷ மிளகாய், நாகா மிளகாய், ராஜ மிளகாய் என்றெல்லாமும் அழைக்கப் பெறுகிறது. அசாம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் பங்களாதேசத்தின் சில பகுதிகளில் பயிராகிறது. இந்த மாதம் அமெரிக்காவில் உள்ள நியூ மெக்ஸிகோ மாநில பல்கலைக்கழகத்தின் மிளகாய் மன்றத்தின் (New Mexico State University Chili Pepper Institute) பேராசிரியர் போஸ்லேண்ட் என்பவர் நடத்திய ஆய்வுகளின் இறுதியில் இந்த முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது.

சரி. இந்த மிளகாயின் காரத்தை எப்படி அளக்கிறார்கள் என்று கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா? காரத்தின் அளவு ஸ்கோவில் அளவுகோலால் (Scoville Scale) நிர்ணயிக்கப்படுகிறது. 1912ஆம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானி வில்பர் ஸ்கோவில் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகோல் இது. மிளகாயின் சாற்றில் காரம் தெரியாத அளவு சர்க்கரைத் தண்ணீரைச் சேர்க்கிறார்கள். சேர்க்கப்படும் தண்ணீரின் அளவினைக் கொண்டு காரத்தின் அளவை நிர்ணயிக்கிறார்கள். தற்பொழுது இதனை விட துல்லியமான அளவுகளுக்காக High Performance Liquid Chromatography என்ற முறையையும் கையாள்கிறார்கள்.

நம்ம ஹீரோ (பெனத்தலார் இல்லைங்க நம்ம பூத் ஜோலோகி) ஸ்கோவில் முறைப்படி 1,001,304 கார அளவினைப் பெற்றுள்ளார். இதற்கு முன் எந்த மிளகாய்க்கும் இந்த அளவு ஒரு மில்லியனைத் (10 இலட்சம்) தாண்டியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்னங்க இவ்வளவு அருமையான செய்தியைத் தேடி தருகிறானே என கண்ணீர் வருகிறதா!!

இன்னும் ஒரு மிளகாய் செய்தி. மனிதர்கள் சுமார் 6100 ஆண்டுகளுக்கு முன்பாகவே மிளகாய்ச் செடிகளை வளர்த்துள்ளனராம். அது பற்றிய செய்திக் குறிப்பு இதோ. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய காரம் சேர்க்கும் பழக்கம் போல இருக்கிறது. அது எந்த வகை மிளகாய்ன்னு பார்க்கணும்.

சாதனை குறித்த செய்தி

பூத் ஜோலோகியா குறித்த விக்கி குறிப்பு
ஸ்கோவில் அளவுகோலைக் குறித்த விக்கி குறிப்பு

Thursday, February 22, 2007

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ....

என்னவென்று சொல்வதம்மா இன்று வந்த செய்திதனை..

செய்தியைக் கேட்ட உடனே எம்புட்டு சந்தோஷமா இருக்கு. கையும் ஓடலை காலும் ஓடலை அப்படின்னு சொல்ல வந்த கை எப்படிடா ஓடுமுன்னு ஒரு டெவில் ஷோ நடத்துவீங்களோன்னு பயமா இருக்கு. அதனால அதைச் சொல்லலை.

ஆனா செய்தியைக் கேட்ட உடனே சும்மா இருக்க முடியுதா? அதான் இல்லை. வீட்டு சோபாவில் துள்ளிக் குதிச்சதைப் பார்த்து தங்கமணி டென்சனானதுதான் மிச்சம். அதுவும் வாயெல்லாம் பல்லா இருக்கா, விஷயத்தைச் சொல்லாம ஆடுறானேன்னு ஒரே கடுப்பு. என்னது?, உங்களுக்கும் அதே கடுப்புதானா? விஷயத்தைச் சொல்லணுமா? சரி சொல்லறேன்.

இண்டிபிளாக்கீஸ் தேர்தல் முடிவு வந்திருச்சுங்க!

நம்ம ஆளு, விக்கி சகோதரர், நகைச்சுவை மன்னர், நக்கல் நாயகன் பினாத்தலார் 2006ன் சிறப்பான பதிவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். வெற்றி பெற்ற நம்மவர் அண்ணன் பினாத்தலார் அவர்களுக்கு அனைவரும் ஒரு பெரிய ஓ! போடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


(ஏன் மஞ்ச கலரா? அதான்ய்யா ஆளுங்கட்சி கலரு, அதான். இதே வேற சமயமா இருந்த பச்சையா போட்டு இருக்க மாட்டோம்.)

அதுவும் வெற்றின்னா வெற்றி, சாதாரண வெற்றி இல்லைங்க. மகத்தான வெற்றி. அவரது வெற்றிக்கு காரணமாய் இருந்த நம் சக வலைப்பதிவர்கள் அனைவரும் என் நன்றிகள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட அளவு பின்னூட்டங்கள் விரைவில் வந்து சேர ஏற்பாடு செய்யப்படும். பினாத்தலார் பதவி ஏற்றுக்கொண்ட உடன் இடும் முதல் கையெழுத்து பின்னூட்ட போலீஸ்துறையை கலைப்பதாகத்தான் இருக்கும். ஆகவே இனி பின்னூட்டங்களுக்குப் பஞ்சமே இருக்காது!

இந்நேரத்தில் வெறும் ரீமேக் செய்ததற்கே இப்படி எல்லாம் பட்டம் கிடைக்கையில் நீர் சொந்தமாக எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற பாசிச பேச்சுகள் எதையும் பேசி அண்ணன் அவர்கள் மூடை அவுட் ஆக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகார பூர்வ அறிவிப்பில் கள்ள ஓட்டுக்களை கண்டுபிடித்து நீக்கிவிட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள். அது கண்டுபிடிக்க முடியாத வகையில் கள்ள ஓட்டுக்களைப் போட்டு கழக பலத்தை காட்டிய கண்மணிகளுக்கு என் நன்றி. நல்ல வோட்டு மட்டுமே போட்ட பொதுஜனங்களுக்கும் எனது நன்றி. (கூட ரெண்டு வோட்டு போட்டு இருந்தா குறைஞ்சா போவீங்க?). பினாத்தலாரின் பெருவெற்றிக்கு அயராது உழைத்த அனைவருக்கும் என் நன்றியைக் கூறி அண்ணன் அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்களைக் கூறி இப்பதிவை முடித்துக் கொள்கிறேன். நன்றி! வணக்கம்!



இண்டிபிளாக்கின் அதிகார பூர்வ முடிவறிவிப்பு

அண்ணன் வாங்கிய வாக்கு விபரங்கள்

Thursday, February 15, 2007

இரு தலை கொள்ளி எறும்பு

இப்படி என் நிலமை ஆகுமுன்னு எதிர்பார்க்கவே இல்லையே. எந்த விஷயமா இருந்தாலும், என்னதான் நடுநிலமைவியாதி (நன்றி: யாருக்குன்னு உங்களுக்கே தெரியும்) வேஷம் போட்டாலும், உள்ளுக்குள்ள நம்ம வோட்டு எந்தப் பக்கமுன்னு சரியாத் தெரியுமே. ஆனா இன்னைக்கு நம்மளை இப்படித் தொங்க விட்டுட்டாங்களே! மேட்டர் என்னான்னு கேட்கறீங்களா? எல்லாம் இந்த பாழாப்போன இண்டிபிளாக்கீஸ் தேர்தல்தாங்க.

எப்பவும் தேர்தல்ன்னு வந்தா நம்ம வோட்டு யாருக்குன்னு எளிதா முடிவு பண்ணிட்டு, தேர்தல் நாளன்று வோட்டு போட முடியாமல் எங்கயாவது வெளியூரில் ஆணி புடுங்குறதுதானே நம்ம வழக்கம். ஆனா இந்த முறை பாருங்க அந்த மாதிரி ஒரு முடிவுக்கு வர முடியாதபடி தவிக்க விட்டுட்டாங்களே. போதுமய்யா புலம்பல், மேட்டருக்கு வான்னு சொல்லறீங்களா? இருங்க வரேன்.

இந்த இண்டிபிளாக்கீஸ் இருக்காங்களே, இவங்களுக்கு வேற வேலையே இல்லை. வருஷா வருஷம் சிறந்த பதிவுகள் அப்படின்னு சில பதிவுகளைத் தேர்வு செய்து அவங்களுக்கு பரிசெல்லாம் குடுத்து அவங்களைக் குட்டிச்சுவராக்கறதே வேலையாப் போச்சு. அதுல பல பிரிவுகள் வேற. நமக்குத் தமிழ்மணத்தை விட்டு வேற என்ன தெரியும்? அதுனால இந்த தேர்தலை எல்லாம் சாய்ஸில் விட்டு வேடிக்கைப் பார்க்கலாம்ன்னு நினைத்தால் சிறந்த தமிழ்ப் பதிவு அப்படின்னு ஒரு பிரிவை வெச்சுத் தொலச்சுட்டாங்க. 24 மணி நேரமும் தமிழ்மணத்தில் குடியிருக்கற நாம இந்த தேர்தலில் பங்கேற்று ஓட்டுப் போடாம யாரு போடப்போறாங்கன்னு உள்ள போயி பார்த்தா அங்கதான் நமக்கு அதிர்ச்சி.

ஆமாங்க, நம்ம பசங்களோட பசங்களா, விக்கி பசங்களா இருக்கிற ரெண்டு பசங்களை இந்த தேர்தலில் மோத விட்டு இருக்காங்க, இந்த பாழாப் போன இண்டிபிளாக்கீஸ். அதுவும் ரெண்டு பேரும் நமக்கு ரொம்பவே நெருக்கமான, வேண்டியப்பட்ட பசங்க. அது மட்டும் இல்லாம நம்ம ப.ம.க.வில் வேற ரெண்டு பேரும் பெரும் தலைங்க. இப்போ நான் யாருக்குன்னு வோட்டு போட? அதான் என்ன பண்ணினேன், இவருக்கு ரெண்டு வோட்டு, அவருக்கு ரெண்டு வோட்டுன்னு பிரிச்சுப் போட்டு இருக்கேன். என்ன பண்ண, நம்ம நிலமை அக்னி நட்சத்திரம் விஜயகுமார் மாதிரி ஆகிப் போச்சே!

என்னது யாரு அந்த ரெண்டு பேரா? சரியாப் போச்சு. நம்ம பெனாத்தலாரும், ரஷ்ய மருத்துவர் ராமநாதனும்தாங்க அவங்க. நீங்களும் என்ன பண்ணுங்க, இவருக்கு ஒரு வோட்டு, அவருக்கு ஒரு வோட்டுன்னு ஒண்ணுக்கு ரெண்டா ஓட்டு போட்டு நம்ம ஆளுங்களை பெருவாரியான வோட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வையுங்க.

வோட்டு போடறது எல்லாம் ரொம்ப சிம்பிளுங்க. வோட்டுக்கு ஒரு மெயில் ஐடி வீதம் ரெண்டு மெயில் ஐடி வேணும். அதை வெச்சுக்கிட்டு இந்த தளத்துக்குப் போங்க. போயி உங்க மெயில் ஐடியைக் குடுத்தீங்கன்னா அந்த மெயில் ஐடிக்கு ஒரு மெயில் வரும். அதில் ஒரு சுட்டி இருக்கும். அதை சொடுக்கி வோட்டிடும் பக்கத்திற்குப் போங்க. அங்க இரண்டாவது பக்கத்தில் indic blog (tamil) என்ற பிரிவு இருக்கும். அங்க போயி Theriyala என்ற தளத்திற்கு ஒரு வோட்டும், Penathals என்ற தளத்திற்கு ஒரு வோட்டும் போடுங்க.

ஞாபகம் இருக்கட்டும் ஒரு மெயில் ஐடிக்கு ஒரு வோட்டுதான். அதனால இவங்க ரெண்டு பேருக்கும் வோட்டு போட ரெண்டு ஐடி வேணும். எனக்கு ரெண்டு ஐடி இல்லை அப்படின்னு பொய் சொல்ல நினைக்காதீங்க, அப்படி இல்லைன்னு சொன்னா நம்ம கிட்ட சொல்லுங்க இலவசமா ஒரு ஜிமெயில் ஐடி தரேன்!

போடுங்கய்யா வோட்டு, விக்கி பசங்கள பாத்து!
போடுங்கம்மா வோட்டு, விக்கி பசங்கள பாத்து!