Thursday, November 21, 2013

தேனீர் போடும் லாவகம்!

இன்று எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில், இலங்கையில் இருக்கும் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய அம்மா என்ற சிறுகதையைப் படித்தேன். நிற்க. இது அந்தக் கதையைப் பற்றிய விமர்சனம் அல்ல. 

நுவரெலியா தேயிலைத் தோட்டப் பகுதிகளில் நடப்பதாக எழுதப்பட்ட அக்கதையில் தொடர்ந்து தேனீர் என்றும் லாவகம் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதைப் படிக்கும் பொழுது என்னடா ஒரு பெரிய எழுத்தாளர் இப்படி எழுதுகிறாரே என்ற வருத்தம்தான் வந்தது.

தேயிலையின் சுருக்கம் தே. அந்தத் தேயிலையைக் கொதிக்க வைத்த நீர் என்ற வகையில் தே+நீர் என்பது தேநீர் என்றே ஆகும். தேனைச் சேர்த்த நீர் என்பதை வேண்டுமானால் தேன்+நீர் = தேனீர் என எழுதிக் கொள்ளலாம். 

அதே போல லகு என்ற சொல்லிற்கு நுண்மை என்ற ஒரு பொருள் உண்டு. மிகவும் நுண்மையாக ஒரு செயலைச் செய்வதற்கு லாகவமாகச் செய்கிறான் எனச் சொல்ல வேண்டும். லாவகம் என்ற ஒரு சொல்லிற்கு பொருள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

இதை நான் சுட்டிக் காட்ட, சுட்டிக் காட்டப்பட்டது சரியா தவறா என்ற சிந்தனையை விட்டு விட்டு, தன் ஆதர்ச எழுத்தாளரின் தளத்தில் வெளியிடப்பட்ட கதையில் குற்றம் கண்டுபிடிக்கலாமா என வெகுண்டு எனக்குப் ப்ரூப் ரீடர் பட்டம் கட்டி சமாதானமடையக் கிளம்புவர் சிலர். 

இணையத்தில் எத்தனையோ பேர் தவறாக எழுதி வருகிறார்கள். அவர்கள் எல்லாரையும் திருத்த நான் கிளம்பப் போவதில்லை. சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள ஆர்வமிருப்பவர்களிடம் மட்டுமே சொல்லி வருகிறேன். 

நான் இங்கு சொல்வது எந்த பெரிய எழுத்தாளர்களிடமும் போய்ச் சேரப் போவதுமில்லை. அப்படியே சேர்ந்தாலும் அவர்கள் அதிலிருக்கும் நியாயத்தை எடுத்துக் கொள்ளப் போவதுமில்லை. 

ஆனால் பெரிய எழுத்தாளர்கள் தொடர்ந்து தவறான சொற்களைப் பயன்படுத்தி வந்தால் அவர்களைப் படிப்பவர்கள் அதுவே சரியான சொல் என நினைத்து பயன்படுத்தத் தொடங்குவர். அந்தத் தவறான வடிவம் சரியான சொல்லின் மாற்று வடிவமாகவும் மாறிவிடும். 

அந்நேரம் அது தவறெனச் சுட்டிக் காட்டப்பட்டால், இந்த எழுத்தாளர்களின் எழுத்துகளே அந்த மாற்று வடிவமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றே என்பதற்கான சான்றாக முன் வைக்கப்படும். அங்கு தவறெனச் சுட்டிக் காட்டுபவர்களுக்கு மிகைதிருத்தப் பேர்வழிகள் என்ற பட்டமும், மொழிவளமையை குறைக்க வரும் ஆட்கள் என்ற சித்தரிப்புமே மிஞ்சும். 

இன்று பலரும் நாகரீகம் ஆன்மீகம் எனப் பிரபல எழுத்தாளர்கள் எழுதுவதைக் காட்டி அவரே அப்படித்தான் எழுதுகிறார், நீங்கள் மட்டும் ஏன் அவை தவறு எனச் சொல்கிறீர்கள் எனக் கேட்பது அடிக்கடி நடப்பதுதான். 

தவறாக எழுதித்தான் தமிழின் வளம் மேம்படவேண்டும் என்பதில்லை. இது போன்ற தவறான சொற்கள் மொழியில் நுழைவது தேவையும் இல்லை. எனவே இந்த ஒரு காரணத்திற்காகவாவது எழுத்தாளர்கள் சரியாக எழுத வேண்டும் அல்லது எழுதிய பின் அதனை யாரேனும் சரி பார்த்த பின் வெளியிட வேண்டும் என்பதே என் கோரிக்கை. 

ஊதும் சங்கை நான் ஊதிக்கொண்டே இருக்கிறேன். யார் காதிலாவது விழுந்தால் சரி. 

Saturday, November 02, 2013

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா!

முன் குறிப்பு: தீபாவளி (அல்லது) விடுமுறை நாட்களில் சினிமா சம்பந்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் தருவது நம் பொழுதுபோக்கு ஊடகங்களின் பாரம்பரியம். நீங்கள் அனைவரும் படித்து மகிழும் நம் பதிவிலும் அந்த பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க உந்துசக்தியாய் இருந்த நண்பர் சொக்கனுக்கு நம் நன்றிகள்.

இனி பதிவு. 

சொக்கன் இன்று உய்யலாலா என்ற பதத்தின் பொருள் என்ன என்று வினவி இருந்தார். பொருளற்ற சொல்லாக இருக்குமோ என்ற ஐயத்தால் எழுந்த வினா அது என்று உணருதல் அவ்வளவு சிரமமில்லை. ரஜினி சார் நடித்த பாண்டியன் திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்றில் உய்யலாலா என்ற சொல்லைப் பயன்படுத்தியது பஞ்சு அருணாசலம்.  கண்ணதாசன் தயாரிப்பென்பதால் அத்துணை பொறுப்பின்றி தமிழைக் கையாண்டிருக்க மாட்டார் என நம்பிக்கை நமக்குண்டு.

முதலில் அப்பாடல் வரிகளைப் பார்க்கலாம்.


பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டிநின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தேன் கல்யாண மாலை
மையல் கொண்டேன் நானிந்த வேளை

மொத்தப் பாடலையும் பற்றிப் பேசத் தொடங்கினால் இன்று ஒரு நாள் போதாது என்று சொல்லத்தக்க அளவு சிறந்த பாடல். நாம் உய்யலாலா என்ற பதத்தினை மட்டும் பார்க்கலாம். 

இந்தப் பாடலில் உய்யலாலா என்ற சொல்லைக் கவிஞர் மிகவும் அழகாகக் கையாண்டிருக்கிறார். முதலில் நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். இங்கு உய்யலாலா என்பது செயற்கையாக உருவாக்கம் செய்யப்பட்ட ஒரு பதம் அல்ல. உய்யல், ஆலா என்ற இரண்டு சொற்களின் கூட்டே அந்தப் பதம். புணர்ச்சி விதிகளின்படி உய்யல் + ஆலா என்ற இரு சொற்கள் கூடி உய்யலாலா என்ற பதம் நமக்குக் கிடைக்கிறது. 

அது என்ன உய்யல்? அது என்ன ஆலா? அதை ஏன் இங்கு கவிஞர் பயன்படுத்தி இருக்கிறார் என்ற கேள்விகள் நமக்கு எழுவது இயற்கையே. இந்தக் கவிதை ஆழமாகப் படித்துப் புரிந்து அனுபவிக்க முயற்சி செய்தோமானால் கவிஞர் எத்துணை அழகாக இச்சொற்களை ஆண்டிருக்கிறார் என்பது புரியவரும். வாருங்கள் பார்க்கலாம். 

நாயகனை தலைவனாக, அரசனாகப் பாவிப்பது என்பது தமிழ் மரபு. கவிஞர் மரபுவழி வந்தவர் என்பதால் அதிலிருந்து சிறிதும் வழுவாமல் தலைவனை ஒரு அரசனாகவும் அவன் எவ்வளவு பெரிய நாட்டினை ஆண்டு வருகிறான் என்பதையும் முதல் வரியில் கவிஞர் எடுத்துரைக்கிறார். அப்பொழுது மிகவும் அழகாக அறிவியல் துணுக்கொன்றையும் நமக்குத் தருகிறார். 

உய்யல் என்றால் உயர்தல். நம் நாயகனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அப்படி உயர்ந்து நிற்பது எது என்றால் ஆலா என்ற ஒரு பறவையாம். அதனால்தான் அந்த நாட்டில் உயர்ச்சி என்பதே ஆலா எனப் பொருள் வருமாறு கவிஞர் பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யல் ஆலா என்கிறார். 

ஆலா என்றால் ஆங்கிலத்தில் Tern என அழைக்கப்படும் பறவை. அதிலும் குறிப்பாக Arctic Tern என்ற வகை ஒன்று உண்டு. இப்பறவை என்ன செய்யும் என்றால் வடதுருவப்பகுதிகளில் குளிர்காலம் ஆரம்பிக்கும் முன் அங்கிருந்து பறக்கத் தொடங்கி தென் துருவப் பகுதிகளுக்குச் செல்லும். அதே போல தென் துருவத்தில் குளிர் தொடங்கும் முன் மீண்டும் வட துருவத்திற்குப் பறந்து செல்லுமாம். இது அப்படி ஓர் ஆண்டில் பறக்கும் தூரம் 70,000 கிலோமீட்டர்களுக்கும் அதிகம். 

பாண்டியனின் ராஜ்ஜியம் அப்படிப் பரந்து விரிந்தது. அதை முழுவதும் பார்க்கக்கூடியது ஆலாப் பறவைகள் மட்டுமே என்று ஒரு வரியில் நாயகனின் பெருமையையும் கூடவே ஒரு அருமையான அறிவியல் குறிப்பையும் தருகிறார் கவிஞர். 

சரி. பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யல் ஆலா. அதைத் தொடர்ந்து அது என்ன வேண்டி நின்றப் பைங்கிளிக்கு உய்யலாலா? 

கவிஞரின் மொழிவளமைக்குச் சான்று இது. அழகான சொல் விளையாட்டு. நாயகனுக்கு முதல் வரியைத் தந்தவர் அடுத்த வரியில் நாயகிக்குச் செல்கிறார். நாயகியைப் பைங்கிளியாக உருவகப்படுத்தியவர் அந்த கிளிக்கு என்ன தேவை எனச் சொல்கிறார்? 

உய்தல் என்ற சொல்லின் மற்றொரு பொருள் வாழ்தல். அந்தப் பைங்கிளி வாழ என்ன தேவை எனச் சொல்கிறார்.

நம் கிராமப்புறங்களில் ஆற்றங்கரையில் ஆலமரங்கள் இருக்கும். அவற்றில் கிளிக்கூட்டங்கள் வசிக்கும். எப்பொழுது கீகீ எனக் கத்திக் கொண்டு ஆரவராமாய் வாழும் அக்கிளிக்கள் புசிப்பது அந்த ஆலமரத்தில் இருக்கும் பழங்களை. 

ஆனால் இந்தப் பைங்கிளிக்கு ஆலம்பழமா தேவை? இந்தக் கேள்வியையே  வேண்டி நின்றப் பைங்கிளிக்கு உய்யல் ஆலா? என எழுதுகிறார் கவிஞர்.  இங்கு தேவை அது இல்லையே. அதை உணர்ந்தே தான் அவள் கையில் கல்யாண மாலையை நான் தந்தேன் என நாயகன் பாடுவதாகப் போகிறது இந்தப் பாடல். 

தமிழ் மரபு சார்ந்த நாயக உருவாக்கம், மிகைப்படுத்தல், அறிவியல் செய்தி, சொல் விளையாட்டு என இரண்டு வரிகளில் பஞ்சு அருணாச்சலம் செய்து இருப்பது திரையிசைப்பாடல்களில் ஒரு உச்சம் எனச் சொல்லலாம். இந்தப் பாடலை மீண்டும் ஒரு முறை அசை போட சந்தர்ப்பம் தந்த சொக்கனுக்கு நன்றி.

நேயர்கள் அனைவரும் நம் தீபாவளி (அல்லது) விடுமுறை தின வாழ்த்துகள்.