Monday, September 24, 2007

இந்த சமயத்திலும் சமயமா?

இந்த பதிவை எழுதத்தான் வேண்டுமா என்று பல முறை யோசித்த பின் தான் எழுதுகிறேன். இதனால் என்னென்ன பட்டம் என்னை வந்து சேரப் போகிறதோ தெரியவில்லை. நடப்பது நடக்கட்டும்.

ரொம்ப சிறப்பாக தொடர் முழுவதும் விளையாடிய இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. மிகவும் அருமையான ஆட்டம். இரு அணிகளும் வெற்றி பெறக் கூட சாத்தியக்கூறு இருந்த ஆட்டம். கடைசியாக இந்தியா வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கும், அவர்களோடு கடைசி வரை போராடியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வளவு அருமையாக நடந்த ஆட்டத்தின் முடிவில் நெருடலாய் ஒரு விஷயம். அதுதான் கொஞ்சம் வருத்தத்தைத் தந்தது. காரணம் பாகிஸ்தான் அணியின் தலைவர் மாலிக். போட்டி முடிந்த பின் அவரிடம் கேட்கப் பட்ட ஒரு கேள்விக்கு அவர் தந்த பதில் இது - " First of all I want to say something over here. I want to thank you back home Pakistan and where the Muslim lives all over the world."

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்? உலகெங்கும் இருக்கும் முஸ்லீம்கள் பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என பிரார்த்தனை செய்தார்களா? அல்லது பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்களும் கிருத்துவர்களும் அவர்கள் தோற்க வேண்டும் என நினைத்தார்களா? இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் இந்தியாவை ஆதரிக்காமல் இவர்களை ஆதரிக்க வேண்டும் என்பது இவர்கள் எண்ணமா?

இந்த ஆட்டத்திலேயே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப் பட்டது மற்றொரு முஸ்லிமாகிய இர்பான் பதான் இல்லையா? அவரோடு உடன் ஆடியது அவருடைய சகோதரர் யூசுப் பதான் இல்லையா? அவர்கள் என்ன பாகிஸ்தானுக்காகவா விளையாடினர்? இப்படி ஒரு மதத்தினை ஒட்டிய ஒரு பேச்சு தேவையா?

தங்கள் வெற்றிக்குப் பின் தாங்கள் நம்பும் கடவுள் இருப்பதாகச் சொல்வது அவரவர் நம்பிக்கை - அப்ரிதி அல்லாவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது போல. ஆனால் தாங்கள் பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டின் கிரிக்கெட் அணி என்பதில்லாமல் சர்வதேச முஸ்லிம்களின் அணியாக உருவகப் படுத்திக் கொள்வது சரியா? பொறுப்பற்று கண்டபடி பேசும் நம் பதிவுலக நண்பர்கள் போன்று ஒரு பொறுப்பான அணித் தலைவர் இப்படி பேசலாமா? விளையாட்டினுள் மதத்தைக் கொண்டு வரும் இது போன்ற பேச்சுக்கள் தேவையா?

பி.கு. - இது பற்றி எழுதலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்த பொழுது இதே கருத்துடன் கிரிக்கின்போவில் கண்ட ஒரு கட்டுரை.

38 comments:

  1. விளையாட்டில் மதக்கலப்பு வேண்டாமே என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட பதிவு. இதற்கு மதச்சாயங்கள் பூசி பதிவின் நோக்கத்தை திசை திருப்பும் பின்னூட்டங்கள் வெளியிடப்படமாட்டாது.

    ReplyDelete
  2. மதக் கலப்பு விளையாட்டில் மட்டுமில்லை.......... அரசியலிலும் கூடாது.

    மதம் என்றது அவரவர் சொந்த விஷயம். இதை எப்படி எல்லாரும் வசதியா மறந்து போறாங்க உலகம்பூரா என்றதுதான் கவலை.

    இங்கே நியூசியிலும் ஒரு சர்ச் அரசியலில் இப்ப நுழையப்போறாங்களாம்.
    பதவிக்கு வந்துட்டா......... மற்ற மதக்காரர்களையும், அவுங்க சர்ச்சுக்கு
    வராதவங்களையும் என்ன பண்ணும் ஐடியாவோ?(-:

    ReplyDelete
  3. ஷோயப் மாலிக்கின் பேச்சு பொறுப்பற்றது என்பதில் துளியும் சந்தேகமில்லை. சர்வதேச அரங்குகளில் பேசும்போது பொறுப்புடன் பேச அவர் பழகவேண்டும். வயதில் இளையவர் என்பதால் பக்குவமற்று பேசியிருக்கிறார் என தோன்றுகிறது.

    ReplyDelete
  4. 'இராக்கில் அமெரிக்க உயிர் இழப்பு'; 'தாய்லாந்து விமான விபத்தில் எட்டு பிரிட்டிஷார் மரணம்' போன்ற தலைப்பு செய்திகளைப் போல் இதுவும் இன்னொன்று.

    மனதில் பட்டதை பூசி மெழுகி உள்ளொன்று வைக்காமல், பட்டுன்னு போட்டு உடைச்சிருக்காரே...

    ReplyDelete
  5. // பொறுப்பற்று கண்டபடி பேசும் நம் பதிவுலக நண்பர்கள் போன்று //

    அது :)))

    ReplyDelete
  6. //மனதில் பட்டதை பூசி மெழுகி உள்ளொன்று வைக்காமல், பட்டுன்னு போட்டு உடைச்சிருக்காரே...//

    யாரு? கொத்தனாரா இல்லை மாலிக்கா? என்னவோ சொல்ல நினைக்கிறீங்கன்னு தெரியுது, என்னனுதான் புரியலை!

    ReplyDelete
  7. கண்டனுத்துக்குரியது தான்,சின்ன பையன் தானே போகப்போக சரியாகிவிடும்.
    ஆமாம,் நம்ம தல "தோனி" சட்டை கயட்டினாராமே!!
    அதுவும் இதுவும் ஒன்றல்ல,இருந்தாலும் அதே சின்னபிள்ளைத்தனம் தான் தெரிகிறது.

    ReplyDelete
  8. // பொறுப்பற்று கண்டபடி பேசும் நம் பதிவுலக நண்பர்கள் போன்று //

    இது யாரு நம்ம அட்டைப் பூச்சியா இல்லை வேற யாராவதா?

    ReplyDelete
  9. //இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்? உலகெங்கும் இருக்கும் முஸ்லீம்கள் பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என பிரார்த்தனை செய்தார்களா? அல்லது பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்களும் கிருத்துவர்களும் அவர்கள் தோற்க வேண்டும் என நினைத்தார்களா? //

    :(

    இரு நாட்டு உறவுகளின் சிக்கலில் மதத்தையே முன்னிலைப் படுத்துவது பாகிஸ்தான் வீரர்களின் தவறான போக்கு, இந்திய அணியிலும் அஸ்சாருதின் மற்றும் பல இஸ்லாமிய வீரர்கள் விளையாட்டில் இருந்திருக்கின்றனர், இருக்கின்றனர்.

    ஒருவகையில் பார்த்தால் 50 ஓவர் உலக கோப்பையின் நம் அணி ஜெயிக்க வேண்டும் என்று ஹோமம் வளர்த்து ஆசிர்வதித்து போலத்தான் அதுவும். முடிவில் மண்ணைக் கவ்வியது வேற விசயம் :)

    ஆடுகளத்தில் ஆடும் போது உடல் உறுதியும், மனத்திடம் மட்டுமே முக்கியம். அதைவிடுத்து பிரார்தனைகளை செய்தால் அது பாகிஸ்தானாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி பார்க்கும் எதிரணிக்கு எரிச்சலாகத்தான் இருக்கும்.

    ஒருமுறை வெற்றிபெற்றவுடன் நம் இர்பான் பதானோ அல்லது கைப் போன்றவர்களோ ஆடுகளத்தில் வெற்றிக் களிப்பில் நமாஸ் செய்தால் பாகிஸ்தான் வீரர்கள் அது போன்ற செயல்களில் இனி ஈடுபடமாட்டார்கள்.

    பொது இடத்தில் வெற்றியடைந்தற்கா பிரார்த்தனை செய்வது மாற்று மதக் கடவுளை தாழ்த்தியும், தம் கடவுளை உயர்த்தியும் காட்டுவதாக புரிந்து கொள்ளப்படும். இறைநம்பிக்கையைவிட மதநம்பிக்கையே உயர்வு போன்று காட்டப்படும் அபாயம் இருக்கிறது.

    ReplyDelete
  10. //இங்கே நியூசியிலும் ஒரு சர்ச் அரசியலில் இப்ப நுழையப்போறாங்களாம்.
    பதவிக்கு வந்துட்டா......... மற்ற மதக்காரர்களையும், அவுங்க சர்ச்சுக்கு
    வராதவங்களையும் என்ன பண்ணும் ஐடியாவோ?(-://

    அடப்பாவிகளா!!! Separation of church and the state அப்படின்னு படிச்சது எல்லாம் சும்மாத்தானா? :(

    ReplyDelete
  11. //வயதில் இளையவர் என்பதால் பக்குவமற்று பேசியிருக்கிறார் என தோன்றுகிறது.//

    அதே. இப்பவே யாராவது சுட்டிக்காட்டி அவர் சரியாகப் பேசக் கற்றுக் கொண்டால் பரவாயில்லை.

    ReplyDelete
  12. //வயதில் இளையவர் என்பதால் பக்குவமற்று பேசியிருக்கிறார் என தோன்றுகிறது//
    எனக்கும் அப்படியே! இது ரமழான் மாதம் என்பதால் வாழ்த்துச் சொல்வதாக நினைத்து வார்த்தை மாறி இருக்கலாம்.
    மன்னிப்போம்.

    ReplyDelete
  13. //மனதில் பட்டதை பூசி மெழுகி உள்ளொன்று வைக்காமல், பட்டுன்னு போட்டு உடைச்சிருக்காரே...//

    அண்ணா, என்ன சொல்லறீங்க? ரொம்ப ஆழமான பின்னூட்டமா இருக்கே....

    ReplyDelete
  14. //// பொறுப்பற்று கண்டபடி பேசும் நம் பதிவுலக நண்பர்கள் போன்று //

    அது :)))//

    யப்பா ராசா, யதார்த்தமா சொன்னது. கிளப்பி விடாதீங்கய்யா....

    ReplyDelete
  15. //யாரு? கொத்தனாரா இல்லை மாலிக்கா? என்னவோ சொல்ல நினைக்கிறீங்கன்னு தெரியுது, என்னனுதான் புரியலை!//

    உங்களுக்குமா? எனக்கும்தான். :))

    ReplyDelete
  16. //கண்டனுத்துக்குரியது தான்,சின்ன பையன் தானே போகப்போக சரியாகிவிடும்.//

    அப்படியே ஆகட்டும்.

    //ஆமாம,் நம்ம தல "தோனி" சட்டை கயட்டினாராமே!!
    அதுவும் இதுவும் ஒன்றல்ல,இருந்தாலும் அதே சின்னபிள்ளைத்தனம் தான் தெரிகிறது.//

    அது பல விளையாட்டுக்களில் செய்வதுதான். அது மட்டுமில்லாமல் இன்று அவர் சட்டையைக் கழட்டி ஒரு சிறுவனுக்குப் பரிசாகத்தான் அளித்தார். அது எல்லாம் ஒரு உணர்ச்சி வசப்பட்டு செய்வதுதான்.

    ReplyDelete
  17. //இது யாரு நம்ம அட்டைப் பூச்சியா இல்லை வேற யாராவதா?//

    தல, இதெல்லாம் நான் பொதுவாச் சொன்னது. வம்பு எதனா கிளப்பி விடாதீங்கப்பா...

    ReplyDelete
  18. //ஒருவகையில் பார்த்தால் 50 ஓவர் உலக கோப்பையின் நம் அணி ஜெயிக்க வேண்டும் என்று ஹோமம் வளர்த்து ஆசிர்வதித்து போலத்தான் அதுவும்.//

    கண்ணன், இரசிகர்கள் அவர்கள் மனதிற்கேற்றவாரு செய்வதற்கும் அணித்தலைவர் பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா!

    //அதைவிடுத்து பிரார்தனைகளை செய்தால் அது பாகிஸ்தானாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி பார்க்கும் எதிரணிக்கு எரிச்சலாகத்தான் இருக்கும்.//

    இல்லீங்க. பிரார்த்தனை செய்வது எல்லாம் அவரவர் விருப்பம். பிரார்தனை செய்து விளையாட்டைக் கோட்டை விடும் அளவிற்கு பாகிஸ்தான் அணி சென்றவுடன் அங்கே அவர்களுக்கு எதிர்ப்பு வந்தது நமக்குத் தெரிந்ததுதானே.

    நானே சொல்லி இருக்கின்றேனே அப்ரிதி கடவுளுக்கு (அவருடைய கடவுளான அல்லாவிற்கு) நன்றி சொல்வது என் மட்டும் தப்பில்லை.

    //இறைநம்பிக்கையைவிட மதநம்பிக்கையே உயர்வு போன்று காட்டப்படும் அபாயம் இருக்கிறது.//

    இவ்வளவு கூட சொல்லவில்லை. விளையாட்டில் எதற்கு மத சம்பந்தமான அறிக்கைகள் என்றுதான் கேட்கிறேன்.

    ReplyDelete
  19. ////வயதில் இளையவர் என்பதால் பக்குவமற்று பேசியிருக்கிறார் என தோன்றுகிறது//
    எனக்கும் அப்படியே! இது ரமழான் மாதம் என்பதால் வாழ்த்துச் சொல்வதாக நினைத்து வார்த்தை மாறி இருக்கலாம்.
    மன்னிப்போம்.//

    மன்னிக்க எல்லாம் நாம யாரு வித்யா? இளையவர் அவருக்கு மத்தவங்க எடுத்துச் சொல்லி இனி இந்த மாதிரி பண்ணாம இருந்தா சரிதான். இல்லையா.

    ReplyDelete
  20. //தல, இதெல்லாம் நான் பொதுவாச் சொன்னது. வம்பு எதனா கிளப்பி விடாதீங்கப்பா... //

    //இரசிகர்கள் அவர்கள் மனதிற்கேற்றவாரு செய்வதற்கும் அணித்தலைவர் பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா!//

    தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பேசும்போது பொறுப்பாக வார்த்தைகளை கவனித்து பேசவேண்டும். இதையும் பொதுவாத்தேன் சொல்லிப்போட்டேன்! கும்மி அடிச்சுராதீங்க ராசா...

    ReplyDelete
  21. இலவச கொத்தனார்,
    நீங்கள் சொல்லுவது முற்றிலும் ஏற்கத்தக்கது .அவர் பேசியவுடனே நானும் உங்களைப் போலத் தான் நினைத்தேன் .ஆனால் பிள்ளையாரால் தான் இந்தியா வென்றது என்று தினமலர் போன்ற பத்திரிகைகளே எழுதும் போது ,பாவம் சின்னப் பையன் ஆர்வக்கோளாறில் சொல்லிவிட்டார் என்று விட்டுவிடுவோம்.பாவம் அவருக்கு இர்பான் போன்ற வீரர்கள் ,ஷாருக்கான் போன்றவர்கள் முஸ்லீம் என்று தெரியாதோ என்னமோ? அல்லது பாக்கிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லீம்கள் அதிகம் என்று தெரியாதோ?

    ReplyDelete
  22. அவர்கள் விளையாடியதைப் பார்த்தவுடன் கண்ணையுங் காதையும் மூடிக்கவேண்டியதுதான்.
    அதேபோல் பாட்டு பாடுபவர்கள் பாட்டு பாடுவதைக் கேட்டுவிட்டு மறந்து விட வேண்டும். இம்ரான்கான் மாதிரியும்
    பாப் டைலன் மாதிர்யும் தங்கள் துறையூம் மீறி அவர்கள் இறங்கும்போதுதான் அதை நாம் விவாதிக்க வேண்டும்.
    பாகிஸ்தான் அணித்தலைவர் எதாவது உளறிக்கொட்டுவதைக் கேட்பதும் அதை ஆராய்வதும் தேவையில்லை. இதன்மூலம் அவர் பெரிய அதாயம் தேட முற்படவில்லை என்னும்போது விட்டுவிடலாம்.
    லஞ்சத்தை ஒழிப்பது பற்றியும், கறுப்புப்பணம் ஒழிப்பது பற்றியும் திரைப்படம் எடுத்தவர்கள் செலவு, சம்பளத்துக்கெல்லாம் கணக்கு ரசீது வைத்திருப்பார்களா என்று ஆராய்வது அதை விட முக்கியம். ஏனெனில் மக்களுக்கு லஞ்சத்தைப் பற்றி இருக்கும் வெறுப்பைப் பயன்படுத்தி அவர்கள் தாங்கள் சம்பாதிக்கிறார்கள்.

    ReplyDelete
  23. இந்தியா வெற்றி பெற்றதற்கு உலகெங்கும் இருந்து வாழ்த்திய அன்பு மனங்களுக்கு என் நன்றியினைப் பதிவு செய்து கொள்கிறேன்...

    தல கிடைச்சக் கேப்ல்ல சொல்ல வேண்டிய விசயத்தை நாசுக்கா சொல்லி வைச்சதுக்கு உங்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்குறேன்...:))))

    ReplyDelete
  24. ஒரு விதமான இம்மெச்சூரிட்டி விட்டுத்தள்ளுங்க....

    எனக்கு இந்த இறைபக்தி பிடித்தே இருக்கிறது..... :-)

    வெற்றி-தோல்வி எல்லாம் போகட்டும் கிருஷ்ணனுக்கேன்னு சமர்பிக்கறமாதிரி.

    ReplyDelete
  25. இலவசம் சார், அந்த வாக்கியத்தில் ஏகத்துக்கு இலக்கணப் பிழை.அதனால் அவர் என்ன சொல்லவந்தார் என்று தெரியவில்லை.

    இன்று என்னிடம் ஒரு பாகிஸ்த்தானிய அன்பர் வழ்த்து தெரிவித்தார்.....so,
    yes, it is immaturiy and the sadness of losing the game...more to do with the person i guess

    ReplyDelete
  26. //பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டின் கிரிக்கெட் அணி என்பதில்லாமல் சர்வதேச முஸ்லிம்களின் அணியாக உருவகப் படுத்திக் கொள்வது சரியா?// சரியான கேள்வி. அவர் அப்படி பேசியது பொறுப்பற்ற பேச்சுதான். நெனப்புதான் பொழப்ப கெடுக்குமாம், இவர் பொழப்பு கெடாமல் இருந்தால் சரி. :-).

    ReplyDelete
  27. நேற்று நடந்த போட்டியிலேயே எனக்கு முகம் சுளிக்க வைத்த சம்வங்கள் இரண்டு. ஒன்று நீங்கள் குறிப்பிட்டது போல மாலிக்கின் பொறுப்பற்ற அறிவற்ற பேச்சு. மற்றொன்று ரசிகர் தரப்பிலிருந்து என்பதால் குறிப்பிட வேண்டாம் என விட்டு விடுகிறேன். ஏன் தான் விளையயட்டிற்குள்ளும் மதத்தை நுழைக்கிறார்களோ??

    ReplyDelete
  28. அடா, அடா... எல்லாரும் எம்புட்டு சாக்ரதையா மறப்போம், மன்னிப்போம்னு பெரிய மனுஷனாங்காட்டியும் எழுதறாங்க! அப்படியே புல்லரிக்குது போங்க! இதுவே, நம்ம டீம்ல ஒரு ஆளு இது மாதிரி பேசி இருந்தாக்க (சும்மா ஒரு பேச்சுக்குதேன்!) இதே 'பெருந்தன்மை' இருந்திருக்குன்றீங்க? அந்தத்துவா, இந்தத்துவான்னு ஒரு பெரிய கும்மிப்படையே வந்து பின்னி பெடலெடுத்திருக்கும்ல? நம்ம வள்ளுவரு ஏதோ சொல்றாரு கேளுங்க இப்போ: "செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான், அல்லிடத்து காக்கில் என்? காவாக்கால் என்?!!" இந்த நல்ல மனசு என்னைக்கும் இருக்கட்டும், எல்லாருக்கும் இருக்கட்டும். என்ன ரைட்டா? :))))))

    ReplyDelete
  29. கொத்துஸ்....

    எனக்கு இது ஆச்சரியமா இல்லை ஆனால் இதை என் பதிவில் குறிப்பிடலாம் என்று இருந்தேன். அப்புறம் வெற்றி மகிழ்ச்சி மிகுதியில் விட்டுடேன்... :)

    ஏன் ஆச்சரியமா இல்லை என்றால், இது ஒன்றும் முதல் தடவை இல்லையே... ஆனால் கேட்டவுடன் ஒன்று தோன்றியது.... "யூ டூ மாலிக்" என்று... :(

    ReplyDelete
  30. மாலிக்கின் பேச்சு நிச்சயமாகப் பொறுப்பற்றது. தினமலர் எழுதியது எவ்வளவு பொறுப்பற்றதோ அதே அளவிற்கு இதுவும் பொறுப்பற்றது. மதவெற்றி உலகம் முழுவதும் அந்த அளவுக்கு மக்க்களை மூடர்களாக்கிக் கொண்டிருக்கிறது.

    கொஞ்ச நாள் முன்னாடி கிரிக்கெட் பிள்ளையாரைக் கிண்டலடிச்சுப் பதிவு படிச்ச நினைவிருக்கு. பிள்ளையாரு ஜெயிக்க வெச்சாருன்னு பதிவுல கேட்டிருந்தாங்க. யார் எழுதுன பதிவுன்னு நினைவில்லை. அந்தப் பதிவு சொன்ன கருத்து மாலிக்குக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  31. //மதக் கலப்பு விளையாட்டில் மட்டுமில்லை.......... அரசியலிலும் கூடாது.

    மதம் என்றது அவரவர் சொந்த விஷயம்.//

    இதுதான் என் கருத்தும். நம் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது இது நமக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  32. பொறுப்பற்ற பேச்சு.. அனுபவமின்மையால் பேசிவிட்டார் என்று ஒதுக்கித்தள்ள முடியாத ஒன்று இது. இஸ்லாமியர் அனைவரும் பாகிஸ்தான் ஜெயிக்கவேண்டும் என விறும்புகிறார்கள் / கிரிக்கெட்டில் உலக இஸ்லாமியர்களின் பிரதிநிதி தம் அணி என தவறாக நினைத்துக்கோண்டு இருக்கிறார் என்பதை இந்த பேச்சு தெளிவாக்குகிறது.

    ReplyDelete
  33. போகுது விடுங்க, இதுக்குப் போய் உணர்ச்சி வசப் படறீங்களே? ரிலாக்ஸ், ரிலாக்ஸ், ஒரு "உப்புமா"ப் பதிவு, அல்லது என்னோட மொழியிலே ஒரு "மொக்கை"யோ எழுதுங்க, எல்லாம் சரியாப் போயிடும். :)))))

    ReplyDelete
  34. மாலிக் சொன்னது முற்றிலும் தவறு. அதுவும் இந்தியா போன்ற மத சார்பற்ற நாடுடனான போட்டியின் முடிவில், அனேக உலக மக்கள் முன்னிலையில் மதத்தை முன்னிலைப்படுத்தி பேசியது மாபெரும் தவறு.

    ReplyDelete
  35. ஈஸ்வரா. இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள்

    ReplyDelete
  36. மதத்தை யாரும் விட்டுவிடுவதாக இல்லை கொத்ஸ்.

    கடவுளைக் கூட மறந்துவிடுவார்கள்.

    இப்படி அவரும் சொல்ல வேண்டாம்.
    மறக்க வேண்டிய எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.
    தினமலரில் பிள்ளையார் வந்தாரா:)))
    பார்க்காமல் போயிட்டேனே.

    ReplyDelete
  37. இலவசம் சார், அவுட்லுக் படிக்கவும். உங்கள் கேள்விக்கு பதில் போல ஒரு கேள்விபதில் கட்டுரை வந்துள்ளது. மியாண்டாட் பதில் சொல்லியுள்ளார்.

    ReplyDelete
  38. CGS,

    நீங்க சொன்ன பின் அவுட்லுக் பக்கம் போய்ப் பார்த்தேன். அங்கே படித்தது.

    Shoaib Malik's apology to the Muslims of the world for the defeat has raised the hackles of Indian Muslims, given that two Muslim players—the Pathan brothers—were in the Indian squad?

    I think his statement has been misunderstood and exploited by the Indian media to its own advantage. What Shoaib meant was he was sorry for disappointing the Pakistani team's fans who are scattered all around the world.We need to appreciate the fact that the young man has shown immense sportsmanship and grace by taking full responsibility for the defeat.

    இதில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் இருப்பதாகத் தெரியவில்லையே...

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!