Friday, October 19, 2007

இதுக்குப் பேரு இனவெறியா?

டிஸ்கி : இது கொஞ்சம் சீரியஸ் பதிவு.

கடந்த சில தினங்களாக கிரிக்கெட் உலகில் அடிபடும் ஒரு சொல் இனவெறி அதாவது ரேசிசம். விஷயம் என்னன்னா, அவுஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸைப் பார்த்து நாக்பூர், மும்பை எனச் சில இடங்களில் ரசிகர்கள் குரங்கு என அழைப்பதும் அவரைப் பார்த்து குரங்கினைப் போல் சேட்டைகள் செய்வதுமாய் கடுப்படித்து இருக்கிறார்கள். இதற்காக இவர்கள் மேல் இனவெறிக் குற்றச்சாட்டு பாய்ந்துள்ளது. அவுஸ்திரேலிய அணித் தலைவராகட்டும், ஐ.சி.சி ஆகட்டும் இது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம், இதனைப் பொறுப்பது ஆகாது என்பது போல் பேசி வருகின்றனர்.

மும்பை போலீஸரும் நான்கு ரசிகர்களை கைது செய்துள்ளனர். பொது இடங்களில் முறையற்று நடந்ததாக அவர்கள் மேல் குற்றம் சாற்றப்பட்டுள்ளது . தலா 1,200 ரூபாய்கள் அபராதம் செலுத்திய பின்னர் அவர்கள் விடுவிக்கப் பட்டுள்ளனர். இது இனவெறியோ இல்லையோ ஒருவரின் புற தோற்றத்தை வைத்து அவரை கேலி செய்வதென்பது தவிர்க்க வேண்டிய செயல். அப்படிச் செய்பவர்களை தண்டித்தும் கண்டித்தும் வைக்க வேண்டியது அவசியம். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இந்த செயல் இனவெறிச் செயல் என கூறப்படுவதில்தான் எனக்கு சம்மதமில்லை. இனவெறிச் செயல் என்றால் என்ன? ஒருவர் ஒரு குறிப்பிட்ட இனத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக தனிப்படுத்தப் படுவதும், அதனால் ஒதுக்கி வைக்கப்படுவதும், சலுகைகள் / உரிமைகள் மறுக்கப் படுவதும்தான் இனவெறி. Racism refers to race-based bigotry, prejudice, violence, oppression, stereotyping or discrimination.

ஆனால் இங்கு நடந்தது அப்படிப்பட்ட ஒரு நிகழ்வா? சைமண்ட்ஸ் அவுஸ்திரேலிய பழங்குடி இனத்தவரைச் சார்ந்தவராம். உண்மையில் இன்று ஒரு நண்பர் சொல்லித்தான் எனக்கு இது தெரியும். அதனால் அவரது தோற்றத்தை வைத்து அவரை குரங்கென்று கேலி செய்கிறார்களாம் நம் ரசிகர்கள். அப்படி அவருடைய பழங்குடி இனத் தோற்றத்தை கேலி செய்வதால் இது இனவெறிச் செயலாம்.

ஆனால் நடப்பது என்ன என்று பார்த்தால், இதனைச் செய்பவர்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். ரசிகர்கள் எனச் சொல்வது மற்ற ரசிகர்களுக்கு இழுக்கு. அதனால் இந்திய கிரிக்கெட் வெறியர்கள். அவர்கள் விரும்பும் அணியின் வெற்றிக்கு குறுக்காக நிற்பவர்களை கண்டு எரிச்சலுற்று அவர்களைக் கேலி செய்து அதில் இன்பம் காண்பவர்கள். கேலி செய்வதற்கு வேறு விஷயம் கிடைக்காமல் அவர்களின் உருவத் தோற்றத்தை வைத்து கேலி செய்வது என்பது எங்கும் நடப்பதுதான். முன்பு கானடாவில் நடந்த போட்டியில் இன்சமாம் உக் ஹக்கை உருளைக்கிழங்கு என கேலி செய்ததும் இப்படித்தான். நம் வலையுலகிலேயே "டீமை விட்டு விலகாமல் அட்டை போல் ஒட்டிக் கொன்டு நம் மானம் எனும் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.. இந்த கிழவர்கள்." என்றெல்லாம் நமது அணியினரே வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லையா? அல்லது அஜீத் அகர்கரின் காதின் சைஸ் பற்றித்தான் யாரும் பேசியதே இல்லையா? இதுவே சைமண்ட்ஸ் நன்றாக விளையாடாமல் வேறு ஒருவர் நன்றாக விளையாடி இருந்தால் அவர் பருமனாக இருந்து அவரைப் பூசணிக்காய் என அழைத்திருந்தால் அது இனவெறிச் செயலா இல்லையா?

சைமண்ட்ஸ் பழங்குடி இனத்தவராக இருந்ததால் அவரது தோற்றத்தை வைத்து செய்த கேலி இனவெறிச் செயலாக மாறிவிட்டதா? எனக்கு இது விளையாட்டினை ஒட்டிய கலகம் செய்யும் செயலாகவே தெரிகிறது. This sounds more of hooliganism rather than racism. மீண்டும் சொல்கிறேன். இது தவறென்பதில் இரு கருத்து இல்லை. ஆனால் இது இனவெறிச் செயல் என்றும் அதனை ஒட்டிய பிரச்சாரங்களும் தவறு என்பது என் எண்ணம். உங்கள் கருத்து என்ன?

51 comments:

  1. இதைப் பத்தி நண்பர் ஒருவரிடம் பேசிக்கிட்டு இருந்த போது இதைப் பத்திப் பேச தகுதி கிடையாத ஆளுங்கன்னா அது இந்த அவுஸ்திரேலியா ஆளுங்கதான் அப்படின்னு சொன்னாரு.

    அவரு போட்ட கோட்டில் ஒரு ரோடு போட பார்த்தா....

    இங்கிலாந்து அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்கையில் இங்கிலாந்தி வீரரான மாண்டி பனேசரைப் பார்த்து Stupid Indian என ஆரம்பித்து வசவு வார்த்தைகளை அள்ளி வீசினாரே ஒரு ரசிகர். இது என்னளவில் இனவெறித்தனம்தான். இதுவாவது ஒரு ரசிகர் சொன்னது. ஆனால் ஸ்ரீலங்காவின் ரோஷன் மகனாமா சொல்வதைப் பாருங்கள். 1996ஆம் ஆண்டு நடந்த போட்டி ஒன்றில் அவுஸ்திரேலிய வீரர் க்ளென் மெக்ராத், ஸ்ரீலங்காவின் சனத் ஜெயசூர்யாவைப் பார்த்து கருங்குரங்கு என்று கூறினார் என்கிறார்.

    எதுக்கும் இதையும் , இதையும் , இதையும் படிச்சுக்கோங்க!

    ReplyDelete
  2. இனவெறிக்கும் இதற்கும் தொடர்பே இல்லை. ரசிகர்கள் கிண்டல் அடித்தார்கள் அவ்வளவே, அதுவும் அவரை மட்டுமே. இனவெறி என்று சொல்வது - ஆஸ்திரேலிய அணியின் திசை திருப்பல். ஆஸ்திரேலியாவில் இல்லாத இனவெறியா ? இந்தியர்கள் சீனர்கள் அனைவரையும் 'ஆசியர்கள்' என்ற சொல்லில் பழிக்கவே செய்கின்றனர்.

    ஆசி அணி செய்வது ஊருக்கு உபதேசம் !

    ReplyDelete
  3. நாம எல்லாமே குரங்கில் இருந்து தானே வந்தோம்? (100% நிரூபிக்கப்படவில்லை என்றாலும்..)அதெப்படி சைமன் மட்டும் தனியாக பார்க்கப்படலாம்??
    ஆயிரம் பேர் இருக்கும் அரங்கத்தின் உள் சிலர் இப்படி இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ஏனென்றால் 11 பேர் உள்ள டீமின் உள்ளேயே சிலர் இப்படி வசை மொழி பாடியிருக்கிறார்களே??
    இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை.

    ReplyDelete
  4. மற்ற எவரையும் விடுத்து, சைமண்ட்ஸை மட்டும் இப்படிச் சொல்லி கேலி செய்திருப்பது, இனவெறிச் செயல்தான்!
    இதில் ஐயமில்லை.
    வெட்கப்பட வேண்டிய விஷயத்துக்கு வக்காலத்து வாங்காதீர்கள், கொத்ஸ்!

    ReplyDelete
  5. அவங்களுக்கு யாரைப் பத்தியும் சொல்ல வகையே கிடையாது.

    அந்த க்ரெக் மாத்யூஸ்னு ஒண்ணு இருப்பாரே அவர் எப்படி நம்ம டீமை டீஸ் ,செய்தார் என்பது என்னால் மறக்கவே முடியாது.
    அந்த மாட்ச் (tie?) டையில் முடிந்ததற்கே அவர்தான் காரணம்.

    கண்டிக்கணும் என்று சொன்னா பெரிய லிஸ்டே தயார் செய்யணும்.
    இந்த மாதிரி நடத்தை எல்லா ஊரிலேயும் தான் இருக்கு. இனவெறி இல்ல்லை. ஆட்ட வெறிதான்:))0

    ReplyDelete
  6. //சைமண்ட்ஸ் பழங்குடி இனத்தவராக இருந்ததால் //

    No.. He is from Ingland.

    ReplyDelete
  7. கொத்ஸ்,
    எனது நண்பர் அரவிந்த் விளக்கமாக எழுதி இருக்கிறார். இதையும் பாருங்க
    :)

    ReplyDelete
  8. இதுக்குப் பேரு இனவெறிதான். புரட்சி பத்தியெல்லாம் நீங்க கேள்விப்பட்டதில்லையா? வரலாறு காணாத ஆர்ப்பாட்டம்? பாசிஸ வெறி? வார்த்தைகள் எல்லாம் அர்த்தம் இழந்து போயி ரொம்ப நாள் ஆச்சு ஸ்வாமி!

    //இதைப் பத்தி நண்பர் ஒருவரிடம் பேசிக்கிட்டு இருந்த போது இதைப் பத்திப் பேச தகுதி கிடையாத ஆளுங்கன்னா அது இந்த அவுஸ்திரேலியா ஆளுங்கதான் அப்படின்னு சொன்னாரு. // அந்த நண்பர் நான் தான் ஸ்வாமி! பேரைப் போட்டே இருக்கலாமே! (நான் என்ன உபாதை பத்தியா பேசினேன் - பெயர் சொல்ல விரும்பாத நண்பர்ன்றதுக்கு :-)

    ReplyDelete
  9. நான் நினைத்ததை அப்படியே பதிவா போட்டுட்டிங்க கொத்ஸ்...

    தனிப்பட்ட முறையில் உருவத்தை வைத்து கேலி செய்தது தவறு தான். ஆனால் அதை இனவெறியாக மாற்றம் அடையும்படி செய்தது கொடுமையான விசயம்.

    ReplyDelete
  10. இது சீரியசானப் பதிவு தான்னு நானும் ஒத்துக்குறேன் .

    ReplyDelete
  11. //சைமண்ட்ஸ் அவுஸ்திரேலிய பழங்குடி இனத்தவரைச் சார்ந்தவராம். உண்மையில் இன்று ஒரு நண்பர் சொல்லித்தான் எனக்கு இது தெரியும்//

    இது எத்தனை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு (இல்லை....
    வெறியர்களுக்குத்) தெரியும்? மீடியாவினால் இனி பலருக்கும் தெரிய வாய்ப்பு உண்டாகலாம்!

    பரவலாக ஒருவர் பற்றித் தெரிந்து அப்போது கேலி செய்தால் இனவெறி தான்!
    அது வரை இது கண்டிக்கப்பட வேண்டிய "அழிச்சாட்டியம்"! அவ்வளவு தான்!

    (இது போல் சைமண்ட்ஸை மற்ற நாட்டு ரசிகர்கள், முன்பு எப்பவாச்சும் கேலி செய்துள்ளார்களா கொத்ஸ்?)

    ReplyDelete
  12. //மற்ற எவரையும் விடுத்து, சைமண்ட்ஸை மட்டும் இப்படிச் சொல்லி கேலி செய்திருப்பது, இனவெறிச் செயல்தான்!
    இதில் ஐயமில்லை.//

    இந்த தொடர் முழுவதும் நன்றாக விளையாடியது சைமண்ட்ஸ் தான். தொடர் நாயகன் விருது பெற்றவரும் அவர் தான். அதனால் தான் அவரின் மேல் இந்திய ரசிகர்களுக்கு ஒரு சின்ன ஆத்திரம். அந்த ஆத்திரத்தை கேலியாக காட்டி உள்ளார்கள். அது தவறு என்பது தான் எல்லாருடைய கருத்தும். இதே இந்த தொடரில் வேறு யாரும் நன்றாக விளையாடி இருந்தால் கண்டிப்பாக சைமண்ட்ஸை விடுத்து அந்த நபரை தான் கேலி செய்து இருப்பார்கள்.

    ஆஸ்திரேலியாவில் முரளிதரனையை செய்யாத கேலியா... அதையே இனவெறியின் கீழ் கொண்டு வரப்படவில்லை. இது மட்டும் ஏன்?

    //வெட்கப்பட வேண்டிய விஷயத்துக்கு வக்காலத்து வாங்காதீர்கள், கொத்ஸ்!//

    இங்கு அந்த செயலுக்கு யாரு வக்காலுத்து வாங்கவில்லை. இனவெறி என்ற பெயரால் பிரச்சனையை வேறு பக்கம் கொண்டு போவது தான் தவறு என்று சொல்லுகிறோம்.

    ReplyDelete
  13. // சைமண்ட்ஸ் அவுஸ்திரேலிய பழங்குடி இனத்தவரைச் சார்ந்தவராம்.//

    விக்கிபீடியாவில், அவர் மேற்கு இந்திய வம்சத்தில் வந்தவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது.. மேலும் அவர் பிறந்தது இங்கிலாந்தில்..

    இது ஆஸ்திரேலியாவே வைத்து கொண்ட சூடு மாதிரி தான் தெரிகிறது.. நாக்பூரில், (அல்லது பரோடாவா?) குரங்கு மாதிரி கத்துகிறார்கள் என்று மீடியாவிடம் அழ வேண்டியது.. அதை மீடியாவும் ஊதி ஊதி மும்பையில் இந்த மாதிரி மக்கள் செய்திருக்கிறார்கள்.. ஆஸியின் off-field tactic பேக்ஃபையர் ஆகிவிட்டது..

    ReplyDelete
  14. Racism: Prejudice or discrimination based on an individual's race; can be expressed individually or through institutional policies or practices.

    கூகிளாண்டவரோட முதல் டெபனிஷன்.. இதுலேயே உங்களுக்கான விடை இருக்குதுன்னு நினைக்கிறேன்.

    ஒருவர் குண்டாக இருப்பதால் உருளைக்கிழங்கு என்று கிண்டல் செய்யப்படுவதற்கும், ஒரு குறிப்பிட்ட இனத்தில் பரவலாகக் காணப்படும் முகவமைப்பை கொண்டதனால் மட்டும் "குரங்கு" என்று கிண்டல் செய்யப்படுவதற்கும் வேறுபாடு இல்லையா?

    அவர்கள் டைனோஸார், நாய், கழுதை என்று வேறு எதையாவது குரங்குக்கு பதிலாக செய்திருந்தால் இது நிச்சயம் பிரச்சனை ஆகியிருக்காது என்பதும் உண்மை.

    இப்படியான sensitivites பற்றி ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். தெரிந்தும் இருக்கலாம். ஆனால் தெரியாமல் செய்ததனால் மட்டும் இது இனவெறி செயல் இல்லையென்று ஆகிவிடாது. கண்டிப்புடன் அணுகப்படவேண்டும். சென்ற நூற்றாணடுகளில் நடத்தப்பட்ட பல இனவெறிக் கொடுமைகளுக்கு இந்த 'தெரியாது' தான் மூல காரணம்.

    அப்புறம் அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேனு நாயகன் டயலாக் விடறதுக்கெல்லாம்... :)))

    நீண்டு கொண்டே போறது. திரும்ப வரேன்.

    ReplyDelete
  15. //ஆசி அணி செய்வது ஊருக்கு உபதேசம்.
    அவங்களுக்கு யாரைப் பத்தியும் சொல்ல வகையே கிடையாது.//

    இதற்கு மாற்றுக் கருத்தே கிடையாது!

    ReplyDelete
  16. நன்றி கோவியாரே...

    கொத்ஸ்..( ஆகா நல்ல பேரய்யா..)
    நான் வழி மொழிகிறேன்..
    கிரிகின்போவிலே முகல் கேசவன்னு ஒருத்தர், நாம எல்லாம்..இனவெறி பிடிச்சு ஆடுறதா எழுதியிருக்காரு...
    அவரைக் கொஞ்சம்..இந்தப் பக்கம் வர சொல்லியிருக்கேன்..
    ஆசி ஆட்டக்காரர்கள் மட்டுமில்லை....கிரிஸ் பிராடு கூட அதே வகையறா தான்...

    //*கோவி.கண்ணன் said...

    கொத்ஸ்,
    எனது நண்பர் அரவிந்த் விளக்கமாக எழுதி இருக்கிறார். இதையும் பாருங்க
    :)*//

    ReplyDelete
  17. கொத்ஸ்

    ஆஸ்திரேலியாகாரன் தெறமயா வெளயாடலாம். ஆனா அவனுங்களை மனுசனா மதிக்குறது பதிவுலகத்துலேயே ரெண்டு பேருதான் :-)

    'உப்புமா பதிவு போடாதய்யா'ன்னு உம்மப் பாத்து பெனாத்தல் சொல்ற மாதிரிதான் இது :-) (எப்படி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா :-))

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  18. குரங்கு என்று சொன்னது கண்டிப்பாக தவறுதான்.ஆனால் பாகிஸ்தான் வீரர்களை கூட இதுவரை இப்படி கிண்டல் செய்யாத இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியா அணியினரை கிண்டல் செய்ய காரணம் என்ன என யோசித்து பார்க்கவேண்டும்.ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் ஆசிய வீரர்கள் இதை விட கேவலமாக அவமதிக்கப்படுகிறார்கள். அதெல்லாம் டிவியிலும் வலைதளங்களிலும் காட்டப்படுகிறது.கோபத்தில் இந்திய ரசிகர்கள் இப்படி (தவறான முறையில்) உணர்ச்சி வசப்படுகிறார்கள்.

    ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கை முதலில் கைவிட வேண்டும்.

    ReplyDelete
  19. இலவசம்,

    // "டீமை விட்டு விலகாமல் அட்டை போல் ஒட்டிக் கொன்டு நம் மானம் எனும் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.. இந்த கிழவர்கள்." // இந்தக்கருத்தை சிவபாலன் எழுதிய பொழுது யார்வேண்டுமானாலும் யாரைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுவதுதான் கருத்துச்சுதந்திரம் ஆகிவிட்டதென மனம் வெதும்பிச்சொன்னீரே...

    அதன் பிறகு உங்க நண்பர் முகமூடி சகபதிவரை "மாயவரத்து பட்டிக்காட்டான்" என அதே கருத்துச் சுதந்திரத்துடன் விளித்தபோது ஜால்ராவை பலமாக தட்டினீரே...

    "கிழவர்கள்-பட்டிக்காட்டான்" - இது இரண்டுக்குமான "உங்களுடைய" ஒரே ஒரு நாகரீக வித்தியாசத்தை மட்டும் உங்களால் விளக்க முடியுமா? :)

    ReplyDelete
  20. முதலில் ஆஸி அணியினர் செய்யும் ஸ்லெட்ஜிங் (Sledging) என்ற சமாச்சாரத்திற்க்கும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிற விவகாரத்திற்க்கும் நிறைய வேறுபாடு இருக்கு.

    - விளையாட்டில் ஒருவரை ஒருவர் டீஸிங்காக பேசுவது என்பது வேறு. சர்வ சாதாரணமாக நான்கெழுத்து வார்த்தைகள் வந்து விழும். அது சில சமயம் எல்லை மீறிப்போனாலும் இது வரை ஆஸி அணிக்கெதிராக யாரும் official-ஆக புகார் கொடுத்தது இல்லை.

    - கவாஸ்கரை சொன்னார், சர்வானை சொன்னார்கள், மகாநாமாவை சொன்னார்கள் என்று எல்லாம் second hand / third hand தகவல்கள்தான். கவாஸ்கரோ, ஜெயசூர்யாவோ நேராக சென்று இது 'racial abuse' என்று புகார் தரவில்லை என்பதுதான் உண்மை. அது அவர்களது பெருந்தன்மையாக இருக்கலாம். அவர்கள் அது வெறும் விளையாட்டில் இருக்கும் ஸ்லெட்ஜிங் என்று நினைத்து இருக்கலாம். அப்படித்தான் நாமும் நினைக்க வேண்டியிருக்கிறது. மற்றவை எல்லாம் வெறும் வதந்தியாகத்தான் நாம் எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது.

    - பொதுவாகவே பழங்குடியினரை குரங்காக உருவகபடுத்துவது எங்கும் நடக்கும் போக்காவகவே இருக்கிறது. அவர் மேற்கிந்திய தீவினத்தவராக இருந்தாலும் அவர் தாய் பழங்குடி வம்சத்தினர். இது தெரிந்தோ தெரியாமலோ வெகுசில பார்வையாளர்களால் அவரை கிண்டல் செய்ய உபயோகபடுத்தப்பட்டது.

    - அந்த முதல் கிண்டல் அவர் மனதை காயப்படுத்தியிருக்கலாம். புகார் செய்ய சொல்லியிருக்கலாம். ஆனால் பிறகு அது ஒரு crowd behaviour-ஆக மாறி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

    - ஒரு திக்குவாயரை பார்த்தால் மூக்கை சொறிவது போல்தான் இது. அது எப்படி அவரை பாதிக்கிறது தெரியாமலே எல்லாரும் செய்து கொண்டிருப்பார்கள்.

    - கொஞ்ச நாட்களுக்கு முன்னால் டீன் ஜோன்ஸ் தென்னாப்பிரிக்கா வீரர் அம்லா ஒரு கேட்சை தவறவிட்ட போது, 'the terrorist dropped the catch' என்று வர்ணனை செய்தார். அது ஒரு racial abuse-ஆக கொள்ளப்பட்டது. அவர் மன்னிப்பும் கோரினார்.

    - சிம்மண்ட்ஸ் விஷயத்தில் அவர் யாரையும் குறிப்பிட்டு குற்றம் சொல்ல முடியாது. ஆனால் பார்வையாளர்கள் ஒரு ஊனமுற்றவரை பார்த்து கிண்டல் செய்யாதிருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது போல அவரை மாதிரி பழங்குடி இனத்தவரோடு தொடர்புள்ளவர்களை குரங்கு என்று சொல்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில் தவறென்ன?

    - கடைசியாக இது சிமண்ட்ஸ் அளவில் ஒரு racial abuse-ஆக கருதப் படுகிறது. அதற்கு அவருக்கு காரணமும் இருக்கிறது. மதித்து நடந்து கொள்வது நமது கையில்தான் இருக்கின்றது.

    ReplyDelete
  21. இது இனவெறி என்பதை ஏற்க முடியாதுதான். ஒரு டான்ஸ் நடக்கிறது. 'ஏய் டுபுக்கு ஒழுங்கா ஆடுலே' என்று பார்வையாளரொருவர் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வார்களோ அப்படித்தான் இதையும் ஏற்க வேண்டும். ரேசிஸம் என்பதெல்லாம் ஆஸி. வீரர்கள் வேண்டுமென்ற சொல்லும் விஷயம்.

    ReplyDelete
  22. ஜிடான் x மாட்டராசி தலைமுட்டல், நியு யார்க் ஜெட்ஸ் x பேட்ரியாட்ஸ், யாங்கீஸ் x ரெட் சாக்ஸ் ஆட்டத்தில் எல்லாம் இந்த மாதிரி நிகழ்வது சாதாரணம். அவை ஆட்டக்காரர்களுக்கும் மோதல்களுக்கும் புகழ் சேர்த்து வருகையாளர்களைப் பெருக்குவதிற்கு உதவுகின்றன.

    இந்தியாவில் ஆட்டக்காரர்கள் மேல் பாட்டில் வீசுகிறார்கள்; எதிரணி ஃபீல்டிங் செய்யும்போது அவர்களுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள். அதற்கு அபராதம் போட முடியாத மாதிரி தேசப்பற்று (?) தடுத்தாட்கொள்கிறது.

    அதற்காக இந்த மாதிரி நடவடிக்கை எடுத்து ரசிகர்களைக் கட்டுக்குள் வைப்பது ஒகேதான்.
    ----
    என்ன பின்னூட்டம் போடலாம் என்று யோசித்தபோது கிடைத்தவை:

    1. காந்தி பிறந்த மண்ணில் சத்யாக்கிரக முறையில் போராடியவருக்கு இந்த நிலை

    2. மோடியின் அடக்குமுறை ராஜ்ஜியத்தில் இதுவும் நடக்கும்; இதற்கு மேலும் சாத்தியக்கூறுகள் உண்டு.

    ReplyDelete
  23. சைமண்ட்ஸ் இல்லாமல் அந்த இடத்தில் வேறு யார் இருந்தாலும் இதுதான் நடந்து இருக்கும். இதுக்கு இனம் எல்லாம் அவுங்களா கண்டுபுடிச்ச காரணம். எப்படியோ கொடி புடிப்பாங்க. அதுக்கு காரணம் எல்லாம் தேவை இல்லை. கிரண்மோர்க்கு தவளை மாதிரி காட்டுனாரு. அப்போ கிரண்மோர் என்ன தவளை இனமா?

    என்னைப் பார்த்து குரங்கு மாதிரி பழிப்பு காட்டி இருந்தாங்கன்னா குரங்கு எல்லாம் சேர்ந்து, இன வெறின்னு கொடி புடிச்சு இருக்கும்.

    ReplyDelete
  24. ரெண்டு பேரு கூட்ட நெரிசலில் வியர்வையால் நனைந்த சட்டையின் அரிப்பு அவஸ்தையால் விலாவில் சொரிந்து கொண்டால் இனவெறியா ?:)))

    சைமண்ஸைப் பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்தது தங்கள் அணியின் தோல்விக்கு இவர் முக்கிய காரணம் என்ற ஆன்டி ஹீரோ மனப்பான்மைதான் தவிர இனவெறியெல்லாம் இல்லை..ஆஸ்திரேலியா அதை இன வெறியாக்கி அழுவாச்சி காவியமெல்லாம் பாடுவதற்கு காரணம் நம்ம ஜனங்களின் காத்து பட்டிருக்கலாம்..ஞாநி கருணாநிதியை ரிட்டையர் ஆகச்சொன்னதுக்கு பார்ப்பனீயம் தான் காரணம் என்பது போல..அல்லது சில இடங்களில் ஆபிஸரை பழிவாங்க ஊழியர் என்னை ஜாதியை சொல்லி திட்டிட்டான் என புகார் கொடுப்பது போல!!!!

    எதைச் சொன்னால் நமக்கு சாதகம் என்று பார்த்து அதைச் சொல்லும் உத்திதான் இது.

    ReplyDelete
  25. வாங்க கண்ணன்,

    //இனவெறிக்கும் இதற்கும் தொடர்பே இல்லை. ரசிகர்கள் கிண்டல் அடித்தார்கள் அவ்வளவே, அதுவும் அவரை மட்டுமே.//

    ஆமாம். ஆனால் கொஞ்சம் நாகரீகமற்ற கிண்டல்தான்.

    //ஆசி அணி செய்வது ஊருக்கு உபதேசம் !//

    அவன் செய்யறான் நான் செய்யறேன். அவனை நிறுத்தச் சொல்லு, நானும் நிறுத்தறேன். இதெல்லாம் தேவையா? நாம நல்லபடியா இருக்கலாமே.

    ReplyDelete
  26. //இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை.//

    ஆமாம் குமார். ஆனா இதை எப்படி பெரிய விஷயமா ஆக்கறாங்க பாருங்க. அதான் கொஞ்சம் கடுப்பா இருந்தது.

    ReplyDelete
  27. வாங்க எஸ்.கே.

    //மற்ற எவரையும் விடுத்து, சைமண்ட்ஸை மட்டும் இப்படிச் சொல்லி கேலி செய்திருப்பது, இனவெறிச் செயல்தான்!//

    இல்லைங்க. இந்த முறை அவர் நல்லா விளையாடியதுனாலதான் அவர், இல்லை வேற யாரோவா இருந்திருக்கும்.

    //இதில் ஐயமில்லை.
    வெட்கப்பட வேண்டிய விஷயத்துக்கு வக்காலத்து வாங்காதீர்கள், கொத்ஸ்!//

    வக்காலத்து வாங்கலை. அவங்க செஞ்சது தப்புன்னு சொல்லியாச்சே. ஆனா அதுக்காக இது இனவெறி எனச் சொல்வது தப்புதாங்க.

    ReplyDelete
  28. //அந்த க்ரெக் மாத்யூஸ்னு ஒண்ணு இருப்பாரே அவர் எப்படி நம்ம டீமை டீஸ் ,செய்தார் என்பது என்னால் மறக்கவே முடியாது.
    அந்த மாட்ச் (tie?) டையில் முடிந்ததற்கே அவர்தான் காரணம்.//

    வாங்க வல்லிம்மா, இந்த மேட்டரை கொஞ்சம் விலாவாரியா சொல்லறது.

    //இனவெறி இல்ல்லை. ஆட்ட வெறிதான்:))0//

    ஆமாங்க. அதனாலேயே கண்டிக்கப்பட வேண்டியதுதான்.

    ReplyDelete
  29. //No.. He is from Ingland.//

    ஆமாங்க. இவரைப் பத்தி விக்கி சொல்வதைப் பாருங்கள்.

    Andrew Symonds (born 9 June 1975, Birmingham, England)[1] is an Australian cricketer of West Indian heritage who moved to Australia with his parents, after they adopted him, when he was three months old.[2]

    உண்மையில் சர்வதேச விளையாட்டு வீரர்தான் போல!!

    ReplyDelete
  30. //கொத்ஸ்,
    எனது நண்பர் அரவிந்த் விளக்கமாக எழுதி இருக்கிறார். இதையும் பாருங்க
    :)//

    முன்னமே படிச்சேன். அவுஸ்திரேலியா பண்ணாத அட்டகாசமா? அதனால நாம பண்ணினால் தப்பில்லை என்பது போல் இருந்தது. நமக்கு அதுவும் ஒப்புதல் இல்லாததினால்தான் இந்தப் பதிவே.

    ReplyDelete
  31. //இதுக்குப் பேரு இனவெறிதான். புரட்சி பத்தியெல்லாம் நீங்க கேள்விப்பட்டதில்லையா? வரலாறு காணாத ஆர்ப்பாட்டம்? பாசிஸ வெறி? வார்த்தைகள் எல்லாம் அர்த்தம் இழந்து போயி ரொம்ப நாள் ஆச்சு ஸ்வாமி!//

    அது சரி. பதிவுலகத்தில் மட்டும்தான் அப்படின்னு நினைச்சேன். சர்வதேச கிரிக்கெட்டிலும் அப்படித்தானா? அங்க நடக்கிற அடிதடி பார்த்தாலும் அப்படித்தான் இருக்கு! :))

    //அந்த நண்பர் நான் தான் ஸ்வாமி! பேரைப் போட்டே இருக்கலாமே! (நான் என்ன உபாதை பத்தியா பேசினேன் - பெயர் சொல்ல விரும்பாத நண்பர்ன்றதுக்கு :-)//

    கனவில் தமிழ்மணம் அது இதுன்னு உம்ம ரேஞ்சே வேறயா இருக்கு. இப்படி சின்ன மேட்டருக்கெல்லாம் உம்ம பேரை இழுத்தா நம்மளைப் பார்த்து Name Dropping அப்படின்னு நாளைக்கு எவனாவது சொல்லிடப் போறானேன்னு ஒரு பயம்தான். ஹிஹி...

    ReplyDelete
  32. //நான் நினைத்ததை அப்படியே பதிவா போட்டுட்டிங்க கொத்ஸ்...//

    புலி, பார்த்து. அப்புறம் நீங்கதான் நான் அப்படின்னு சொல்லிடப் போறாங்க! :))

    //தனிப்பட்ட முறையில் உருவத்தை வைத்து கேலி செய்தது தவறு தான். ஆனால் அதை இனவெறியாக மாற்றம் அடையும்படி செய்தது கொடுமையான விசயம்.//

    நான் பதிவாப் போட்ட மேட்டரை இப்படி ஒரு வரியில் சொல்லிட்டீரே! சபாஷ்!

    ReplyDelete
  33. //இது சீரியசானப் பதிவு தான்னு நானும் ஒத்துக்குறேன் .//

    ஒத்துக்கிட்டதுக்கு நன்றி தேவு!

    ReplyDelete
  34. //பரவலாக ஒருவர் பற்றித் தெரிந்து அப்போது கேலி செய்தால் இனவெறி தான்!
    அது வரை இது கண்டிக்கப்பட வேண்டிய "அழிச்சாட்டியம்"! அவ்வளவு தான்!//

    வாங்க ரவி. அதுதான் நானும் சொல்லறது.

    //(இது போல் சைமண்ட்ஸை மற்ற நாட்டு ரசிகர்கள், முன்பு எப்பவாச்சும் கேலி செய்துள்ளார்களா கொத்ஸ்?)//

    தெரியலையே. விக்கி பசங்களை வேணா கேட்டுப் பார்க்கலாம்.

    ReplyDelete
  35. //இங்கு அந்த செயலுக்கு யாரு வக்காலுத்து வாங்கவில்லை. இனவெறி என்ற பெயரால் பிரச்சனையை வேறு பக்கம் கொண்டு போவது தான் தவறு என்று சொல்லுகிறோம//

    நன்றி சிவா.

    ReplyDelete
  36. //ஆஸியின் off-field tactic பேக்ஃபையர் ஆகிவிட்டது..//

    அப்படியா ஏஸ்? எனக்கென்னமோ ரொம்ப வெற்றிகரமான உத்தியாகத்தான் தோணுது.

    ReplyDelete
  37. //முகவமைப்பை கொண்டதனால் மட்டும் "குரங்கு" என்று கிண்டல் செய்யப்படுவதற்கும் வேறுபாடு இல்லையா?//

    சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் கண் பெரிதாக இருப்பவனை தேவாங்கு என்றும் பல் எடுப்பாக இருந்தால் அதற்கு கிண்டலும் செய்வதில்லையா? அது போலத்தான் இது. உடல் அமைப்பை கொண்டு செய்யப்படும் கிண்டல். அவரது பூர்வீகம் தெரிந்து அடிக்கப்படும் கிண்டல் இல்லை.

    //. கண்டிப்புடன் அணுகப்படவேண்டும். சென்ற நூற்றாணடுகளில் நடத்தப்பட்ட பல இனவெறிக் கொடுமைகளுக்கு இந்த 'தெரியாது' தான் மூல காரணம்.//

    கண்டிப்புடன் அணுக வேண்டும். ஆனால் இது இனவெறி இல்லை. அதுதான் நான் சொல்வது.

    ReplyDelete
  38. //இதற்கு மாற்றுக் கருத்தே கிடையாது!//

    அவங்க செஞ்சா நாம செய்யணுமா ரவி?

    ReplyDelete
  39. //நான் வழி மொழிகிறேன்..
    கிரிகின்போவிலே முகல் கேசவன்னு ஒருத்தர், நாம எல்லாம்..இனவெறி பிடிச்சு ஆடுறதா எழுதியிருக்காரு...//

    வாங்க டி.பி.சி.டி. இது இனவெறியாப் படலை. ஆனா அவசியமற்ற கிண்டல்தான். கண்டிக்கப்படவேண்டியது.

    ReplyDelete
  40. //ஆஸ்திரேலியாகாரன் தெறமயா வெளயாடலாம். ஆனா அவனுங்களை மனுசனா மதிக்குறது பதிவுலகத்துலேயே ரெண்டு பேருதான் :-)

    'உப்புமா பதிவு போடாதய்யா'ன்னு உம்மப் பாத்து பெனாத்தல் சொல்ற மாதிரிதான் இது :-) (எப்படி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா :-))//

    வாரும்வே. வந்து சொன்னது ரெண்டு வரி. அதுல இம்புட்டு உள்குத்தா. நல்லா இரும்வே!

    ReplyDelete
  41. //ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கை முதலில் கைவிட வேண்டும்.//

    செல்வன் நீங்களுமா அவங்களை நிறுத்தச் சொல்லி நான் நிறுத்தறேன்!! :))

    ReplyDelete
  42. //அதன் பிறகு உங்க நண்பர் முகமூடி சகபதிவரை "மாயவரத்து பட்டிக்காட்டான்" என அதே கருத்துச் சுதந்திரத்துடன் விளித்தபோது ஜால்ராவை பலமாக தட்டினீரே...//

    இரண்டு பதிவர்கள் இடையே நடக்கும் சண்டையும் ஒருவர் வாய்க்கு வந்தபடி இந்திய விளையாட்டு வீரர்களை சொல்வதும் ஒன்றா? அது மட்டுமில்லாமல் அவர் பதிவில் பின்னூட்டமிட்டால் அவர் சொல்வது அனைத்திலும் எனக்கு உடன்பாடுண்டா?

    ஒரு கேள்வி கேட்டால் சம்பந்தமில்லாமல் எதிர் கேள்வி கேட்டு உணர்ச்சியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கலாம் என இருக்கும் நீங்கள் இன்றைய திராவிட அரசியலில் நன்றாக மிளிரலாமே.

    ReplyDelete
  43. //கடைசியாக இது சிமண்ட்ஸ் அளவில் ஒரு racial abuse-ஆக கருதப் படுகிறது. அதற்கு அவருக்கு காரணமும் இருக்கிறது. மதித்து நடந்து கொள்வது நமது கையில்தான் இருக்கின்றது.//

    ஸ்ரீதர், அவர் ஒண்ணும் பிராது குடுத்ததா தெரியலையே. இங்கேயும் அவர் சும்மா இருந்தாலும் மத்தவங்க பண்ணும் அட்டகாசம்தான் தாங்கலை. அதான் பதிவே!! மற்ற தகவல்களுக்கு நன்னி. :)

    ReplyDelete
  44. //ஒரு டான்ஸ் நடக்கிறது. 'ஏய் டுபுக்கு ஒழுங்கா ஆடுலே' என்று பார்வையாளரொருவர் சொல்வதை //

    எங்கள் அண்ணன் டுபுக்கு அவர்களை இனவெறித் தாக்குதல் செய்யும் ஆடுமாடு அவர்களை வன்முறையாக கண்டிக்கிறோம்!! :)))

    ReplyDelete
  45. வாங்க பாபா

    உங்க கிட்ட இருந்து இம்புட்டு பெரிய பின்னூட்டமா? என்ன தவம் செய்தனை கொத்ஸப்பா, எங்கும் லிங்க்கிடும் பாபா பின்னூட்ட... :))

    //2. மோடியின் அடக்குமுறை ராஜ்ஜியத்தில் இதுவும் நடக்கும்; இதற்கு மேலும் சாத்தியக்கூறுகள் உண்டு.//

    நாக்பூர், மும்பை எல்லாம் அவர் ஆட்சிக்கு கீழ் வந்தாச்சா?

    ReplyDelete
  46. //என்னைப் பார்த்து குரங்கு மாதிரி பழிப்பு காட்டி இருந்தாங்கன்னா குரங்கு எல்லாம் சேர்ந்து, இன வெறின்னு கொடி புடிச்சு இருக்கும்.//

    இளா, என்னாத்த சொல்ல!

    :))))

    ReplyDelete
  47. //ரெண்டு பேரு கூட்ட நெரிசலில் வியர்வையால் நனைந்த சட்டையின் அரிப்பு அவஸ்தையால் விலாவில் சொரிந்து கொண்டால் இனவெறியா ?:)))//

    அனானி, :))

    //எதைச் சொன்னால் நமக்கு சாதகம் என்று பார்த்து அதைச் சொல்லும் உத்திதான் இது.//

    இதுதான்!! :))

    ReplyDelete
  48. சரி. இதெல்லாம் சொல்லறீங்களே. அப்போ ஒருத்தன் தப்பு செய்யும் போது அவன் ஜாதியை சொல்லி திட்டறதும் இனவெறிதானே?

    அப்போ ஞாநியை பார்ப்பான் அப்படின்னு திட்டறதும் இனவெறிதானே? இதுக்கு எங்க போயி கேஸ் போடறது?

    ReplyDelete
  49. அனானி, வாங்க.

    இனவெறிக்கு டெபனிஷன் குடுத்தா அப்படித்தான் சொல்லறாங்க.அந்த டெபனிஷன் படி ஞாநி பார்ப்பான்னு சொல்லி கட்டம் கட்டினா இனவெறிதான்.

    ஆனா நம்ம அரசியல் டெபனிஷன்படி பார்ப்பானை என்ன சொல்லி திட்டினாலும் சரிதான் என இருப்பதால் கேஸ் எல்லாம் குடுக்க முடியாது. :))

    ReplyDelete
  50. ஆக மொத்தம்...

    ஆன்ரூ சைமண்ட்ஸுக்கு நடந்த கொடுமைய பத்தி எழுதறேனு சொல்லி அம்பது தொட்டுட்டீரு.

    நம்மூர் மீடியாக்கள மிஞ்சிட்டீரு்.. :)))

    ReplyDelete
  51. //நம்மூர் மீடியாக்கள மிஞ்சிட்டீரு்.. :)))//

    ஹிஹி.. 50ன்ன உடனே மூக்கில் வேர்த்துவிட்டதாக்கும்.

    நன்னி. நன்னி.

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!