Friday, January 12, 2024

பெரு(ம்) பயணம் - 12


டாம்போபாட்டா ஆராய்ச்சி மையம். டாம்போபாட்டா வனப்பகுதியில், மனிதர் வசிப்பிடத்தில் இருந்து மிகவும் விலகி இருக்கும் விடுதி. முன்பே சொன்னது போலப் படகில் சென்று, படகுத்துறையில் இருந்து காட்டின் உள்ளே நடந்து சென்று அடைய வேண்டிய இடம். சுற்றிலும் காடு, பறவைகளின் சத்தம், பறந்து கொண்டே இருக்கும் பட்டாம்பூச்சிகள் என்ற இயற்கை சூழல். இங்கு நமக்கு ஒரே ஒரு வேலைதான். காலையும் மாலையும் அங்கிருக்கும் ரப்பர் காலணிகளை மாட்டிக் கொண்டு காட்டுக்குள் நடந்து செல்ல வேண்டியதுதான். 


கையில் தொலைநோக்கியோடு எரிக் முன் செல்வார். பலியாடு மாதிரி நாம் சத்தம் போடாமல் பின்னால் போக வேண்டும். திடீரென்று நிற்பார். வெறும் மரங்கள்தான் நம் கண்ணுக்குத் தெரியும். ஆனால் அவர் எப்படியே அதில் இருக்கும் குரங்குக் கூட்டத்தைப் பார்ப்பார், மரங்கொத்திப் பறவையைப் பார்ப்பார், நமக்குச் சுட்டிக் காட்டுவார். அவர் காட்டிய பின்புதான் அது நமக்குத் தெரியும். தொலைநோக்கியைத் தயார் செய்து நமக்குப் பார்க்க வசதி செய்து தருவார். அதன் மூலம் நம் கைபேசிகளில் படமெடுத்தும் தருவார். கொஞ்சம் தள்ளி வந்து நாம் பார்த்த விலங்கினைப் பற்றி விபரம் சொல்வார். நானூறு ஐந்நூறு வருடங்களாக இருக்கும் பிரம்மாண்டமான மரங்கள், பல வகைக் குரங்குகள், பறவைகள், அவற்றின் கூடுகள், அவற்றில் முட்டைகள், சிலந்திகள், இலையை வெட்டிக் கொண்டு செல்லும் எறும்புகள் எனப் பெரிய விலங்குகளில் இருந்து சிறு பூச்சிகள் வரை பலவற்றை நம்மால் பார்க்க முடியும். 








ஆனால் ஒன்றை மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். அமேசான் போன்ற மழைக்காடுகளில் விலங்குகளைப் பார்ப்பது ஆப்ரிக்கச் சமவெளிகளில் பார்ப்பது போல இல்லை. கூட்டம் கூட்டமாக விலங்குகள் நிற்கும், போகும் பொழுதெல்லாம் பார்க்கலாம் என்பது மழைக்காடுகளில் கிடைக்காது. அடர்த்தியாக இலைகள் அமைத்த விதானத்தினுள் மறைந்திருக்கும் விலங்குகளும் பறவைகளும். பார்ப்பது கடினம்தான். தொலைக்காட்சிகளில் பார்ப்பது போலத் தெளிவாகத் தொடர்ந்து பார்ப்பது அபூர்வம்தான். மின்னல் போலத் தோன்றி மறைந்து விடுகின்றன. நம்மால் பார்க்க முடிந்தது நமக்குப் பின் வரும் குழுவினருக்குப் பார்க்கக் கிடைக்காது. இந்தப் புரிதல் இல்லை என்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும். 







நடந்து போய்ப் பார்ப்பது போதாது என்று படகில் சென்று கரையோரம் இருக்கும் விலங்கினங்களைப் பார்த்தோம். எங்கள் படகு முன்னால் சென்றது. பின்னால் மற்றுமொரு படகு வந்தது. நாங்கள் தாண்டிச் சென்ற ஒரு பகுதியில் அவர்கள் பார்ப்பதற்கு அரிய ஜாகுவார் என்ற புலி போன்ற விலங்கினைப் பார்த்தார்கள். ஆனால் நாங்கள் படகைத் திருப்பிக்கொண்டு அந்த இடம் வருமுன் அது காட்டுக்குள் சென்றுவிட்டது. இது போலக் கிடைத்தால் உண்டு இல்லை என்றால் இல்லை என்ற புரிதலோடு இங்கு வருவது நல்லது. 


காலையிலும் மாலையிலும் பார்த்த காடு இரவில் எப்படி இருக்கும்? இரவுநேரத்தில் உலாவும் விலங்குகளைப் பார்க்க முடியுமா? இந்தக் கேள்விகளோடு ஓர் இரவு காட்டுக்குள் நடந்து சென்றோம். காரிருள், பூச்சிகளின் இரைச்சல், தொலைவில் கேட்கும் ஆந்தையின் அலறல் என வித்தியாசமான முகத்தைக் காண்பித்தது காடு. டாரண்டுலா சிலந்திகள், வண்ணமயமான தவளைகள் எனப் பகலில் பார்க்க முடியாதவற்றை இரவில் பார்க்க முடிந்தது. ஒரு சிலந்தி அதன் வலையில் இருப்பதைத்தான் பொதுவாகப் பார்ப்போம். ஆனால் இருநூறு முந்நூறு சிறு சிலந்திகள் சேர்ந்திருக்கும் வலையினைக் காண்பித்தார் எரிக். ஆந்தைகளைக் கேட்கத்தான் முடிந்ததே தவிரப் பார்க்க முடியவில்லை. இரவில் காட்டுக்குள் சென்றது வித்தியாசமான அனுபவம். புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் தளத்தில் ஒரு விடியோவை இணைத்திருக்கிறேன். விளக்கை அணைத்தால் ஒன்றுமே தெரியாத கும்மிருட்டையும் அப்பொழுது கேட்கும் ஒலிகளையும் அந்த விடியோவில் பார்க்கலாம், கேட்கலாம். 








நாங்கள் இருந்த நாட்களில் எல்லாம் மழை கொட்டப் போகிறது என்று பயமுறுத்திக் கொண்டே இருந்தது கருமேகங்கள் சூழ்ந்த வானம். கடைசி தினத்தன்றுதான் வானத்தைப் பார்க்க முடிந்தது. அன்று இரவு வானம் அவ்வளவு அழகாக இருந்தது. செயற்கை வெளிச்சமே இல்லாத இடமென்பதால் ஏராளமான நட்சத்திரங்களைப் பார்க்க முடிந்தது. பூமியின் வடபகுதியில் பார்க்க முடியாத தென்சிலுவை என்ற நட்சத்திரக் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது சிறப்பான அனுபவம். 





இப்படி இரண்டு நாட்களை மனித நாகரிகத்தின் சுவடே இல்லாத இடத்தில் கழித்துவிட்டு கொஞ்சமும் மனதே இல்லாமல் வீடு திரும்புவதற்கானப் பயணத்தைத் தொடங்கினோம். விடுதியில் இருந்து படகுத்துறைக்கு நடை, அங்கிருந்து பிலடெல்பியாவிற்குப் படகு, பிலடெல்பியாவில் இருந்து புயெர்த்தோ மால்டனாடோ விமானநிலையத்திற்குப் பேருந்து, அங்கிருந்து லீமாவிற்கு விமானம், லீமாவிலிருந்து பனாமா சிட்டி வழியாக மீண்டும் ஆஸ்டின் என நெடும்பயணம் செய்து வீடு வந்தடைந்தோம். 


பெருவின் தென்பகுதியின் இருக்கும் பூனோ நகரத்திற்குச் சென்று, அங்கிருந்து டிட்டிக்காக்கா ஏரியைச் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் இதுவரை பார்த்த இடங்களுக்கே இரண்டு வாரங்கள் தேவைப்பட்டதால் அங்கு போக முடியவில்லை. டிட்டிக்காக்கா மிகப்பெரிய ஏரி. கிட்டத்தட்ட எண்பத்து மூவாயிரம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் கடல் போல விரிந்துள்ளது இந்த ஏரி. கடல்மட்டத்தில் இருந்து பன்னிரண்டாயிரத்து ஐந்நூறு அடி உயரத்தில் பெருவிற்கும் பொலிவியாவிற்கும் இடையே அமைந்துள்ளது. உலகிலேயே பெரிய படகுகளைச் செலுத்தக்கூடிய ஏரிகளில் உயரமானது இதுதான் எனக் கருதப்படுகிறது. இன்கா இனத்தவரின் பூர்விகம் இதுதான். இங்குள்ள பழங்குடியினர் கோரைப்புற்களினால் செய்த செயற்கை தீவுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியைப் பார்க்க முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்தான். 


சாப்பாட்டைப் பற்றிப் பேசவில்லையே. லீமாவைப் பொருத்தவரை பெரிய நகரம் என்பதால் எல்லா விதமான உணவு வகைகளும் கிடைக்கின்றன. இங்கு Raw Cafe என்ற வீகன் உணவகத்தில் சாப்பிட்டதும் மந்த்ரா என்ற இந்திய உணவகத்தில் சாப்பிட்டதும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை. 


கூஸ்கோ பகுதியில் பாரம்பரிய உணவு வகைகள் நன்றாக இருந்தன. ஓயான்டைடாம்போ விடுதியில் அவர்களே விளைவிக்கும் காய்கறிகள் கொண்டு சமைத்த உணவு வகைகள் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தன. கூஸ்கோ நகர்ப்பகுதியில் Guinea Pig என்று அழைக்கப்படும் முயல் போன்ற விலங்கினையும் அல்பாகாவையும் உண்பது உள்ளூர் மக்களின் பழக்கமாக இருக்கிறது. பல வகை உருளைக்கிழங்குகளையும் சோளங்களையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் சோளத்தில் இருந்து தயார் செய்யப்படும் சிச்சா மொராடா என்ற பானத்தை அனைவரும் விரும்பிக் குடிக்கின்றனர். 


இங்கு கார்வால் இந்திய உணவகத்தில் உணவு வகைகள் நல்ல ருசியோடு இருந்தன. இந்த உணவகத்தை நடத்தி வரும் அமித் என்பவர் நன்றாகப் பேசிக் கொண்டு இருந்தார். இவர்களின் உணவகத்தில் அல்பாகா பிரியாணி கூடக் கிடைக்கிறது. அமேசான் காட்டுப் பகுதியில் இயன்றவரை ருசியாகச் செய்த உணவுப்பண்டங்களை அளித்தார்கள். சைவ உணவு உண்பவர்களுக்காக விசேஷ கவனம் எடுத்துக் கொண்டார்கள். 


சுற்றுலாவை நம்பி இருக்கும் நாடு என்பதால் உணவிலோ மற்றவற்றிலோ குறிப்பிட்ட தேவைகள் இருப்பின் முதலிலேயே சொல்லிவிட்டோம் என்றால் சரியான ஏற்பாடுகளைச் செய்து விடுகிறார்கள். நம்மால் எவ்வளவு தூரம் நடக்க முடியும், உயரத்தால் வரும் உடற்சிக்கல்கள் என எல்லாவற்றையும் கணித்து அதற்கு ஏற்றாற் போலத் திட்டங்களை ஒருங்கிணைக்கிறார்கள் வழிகாட்டிகள். எந்த வித அசௌகரியங்களும் நேராமல் பார்த்துக் கொள்கிறார்கள். 


வீட்டை விட்டு வந்து இரண்டு வாரங்கள் போனதே தெரியவில்லை. மிகச் சுவாரசியமான பயணம். வழிகாட்டிகள் கொட்டிய தகவல்களால்தான் இந்தத் தொடரை எழுதவே தோன்றியது. பெருநகரம், பாலைவனம், மலைகள், காடுகள் எனப் பலவித அனுபவங்களை அடைய முடிவதும் தொன்மையான வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளவும் முடிவதும் பெருவின் சிறப்பு. கட்டாயம் பார்க்க வேண்டிய இடம். 


என்னோடு இந்த பெரு(ம்) பயணத்தில் உடன் வந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றி. 


பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன -  அமேசான் புகைப்படங்கள் 



Thursday, January 11, 2024

பெரு(ம்) பயணம் - 11

 

யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும். மனிதர்கள் தவறிழைக்கும் பொழுது தம் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளுவதாகச் சொல்வார்கள். ஆனால் யானை தன் மீது மண்ணையும் சேற்றையும் போட்டுக் கொள்வது பூச்சிகளின் கடியில் இருந்து தப்ப என்தற்காகவே. ஆனால் கிளிகள் மண்ணை உண்பது பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இன்று முதலில் அதைத்தான் பார்க்கப் போகிறோம்.  


டாம்போபாட்டா காடுகளின் இயற்கை வளம் அதியற்புதமானது. அறுநூறு வகைப் பறவைகள், இருநூறு வகைப் பாலூட்டிகள், ஆயிரம் வகை வண்ணத்துப்பூச்சிகள், பத்தாயிரத்துக்கும் மேலான வகை மரம் செடி கொடிகள், எண்ணிலடங்கா வகை பூச்சிகள் என இங்கிருக்கும் உயிர்கள் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். கழுகுகள், பருந்துகள், வல்லூறுகள், டூகான்கள், மக்காவ்கள், கிளிகள் என நாங்களே பலவிதமான பறவைகளைப் பார்த்தோம். கிளிகளில் மட்டும் முப்பத்தியிரண்டு வகையும் ஆறு வகை மக்காவ் கிளிகளும் இங்கு உள்ளனவாம்.


டாம்போபாட்டா நதியின் கரைகள் களிமண்ணால் ஆனவை. அந்நதியின் நீரோட்டம் அதன் கரைகளை மெதுவாகக் கரைத்து சுவர் போலச் செய்கிறது. சமயத்தில் நீரோட்டத்தின் பாதை மாறும் பொழுது இந்தச் சுவர்கள் அப்படியே விடப்பட்டுவிடுகின்றன. ஒவ்வொரு தினமும் காலைப் பொழுதில் கிளிகளும் மக்காவ்களும் இப்படி சுவராய் நிற்கும் இடங்களுக்கு வந்து தங்கள் அலகினால் கொத்திக் கொத்திக் களிமண்ணை உண்கின்றன. இந்த இடங்களை க்ளே லிக்ஸ் (Clay Licks) என்று அழைக்கின்றனர். க்வெட்சுவா மொழியில் இவற்றுக்குப் பெயர் கொய்பா (Collpa). அப்படி ஒரு இடத்தைப் பார்க்கத்தான் விடிகாலையிலேயே எழுப்பி எங்களை அழைத்துச் சென்றார் எரிக். 



இங்கு வருவதற்கு நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து ஆற்றின் ஓட்டத்தை எதிர்த்து இரண்டரை மணி நேரம் படகில் பயணம் செய்ய வேண்டும். முதலில் வந்திறங்கிய பிலடெல்பியாவிற்குத் திரும்ப வந்து அதைத் தாண்டி தொடர்ந்து எதிர்த்திசையில் செல்கின்றது இந்தப் பயணம். காலைப் பொழுதில்தான் பறவைகள் இங்கு கூடும் என்பதால் விடிகாலையிலேயே கிளம்பிச் சென்றோம். இருளில் காட்டு வழி நடந்து படகுத்துறையை அடைந்து, அந்த இருளிலேயே பயணத்தைத் தொடங்கினோம். மழைக்காலம் என்பதால் பெய்திருந்த மழையில் அடித்து வரப்பட்ட மரங்கள் ஆற்றில் மிதந்து கொண்டே இருந்தன. அந்த இருளில் எப்படியோ இந்த மரங்களை எல்லாம் தவிர்த்து பாதுகாப்பாக படகினைச் செலுத்தினார் அப்படகின் ஓட்டுநர். சென்று கொண்டிருந்த பொழுதே பொலபொலவென விடிந்தது. அந்த வெளிச்சத்தில் நிசப்தமான காட்டையும் விரைந்தோடும் நதியையும் பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது.

 



படகு க்ளே லிக் பகுதியை அடையும் முன் கொஞ்சம் உயிரியல் பாடம் படிக்கலாம். கிளிகள் ஏன் களி மண்ணை உண்கின்றன? குழந்தைகள் கையில் கிடைத்ததை எல்லாம் வாயில் வைத்துக் கொள்வார்கள். மண்ணைத் தின்னும் கண்ணன் என்கின்ற நம் மரபுக் கதைகள். ஆனால் மண்ணைத் தின்னும் கிளிகள் பற்றி நாம் கேள்விப்பட்டதில்லையே. இதே கேள்வி எழுந்த விஞ்ஞானிகள் அது குறித்து ஆராய்ச்சி செய்தனர். கிளிகள் நாள் முழுதும் இக்காட்டில் விளையும் பழங்களையும் கொட்டைகளையும் தங்கள் உணவாகக் கொள்கின்றன. இவற்றில் டேனின் (Tanin) என்ற வேதிப்பொருள் இருக்கின்றது. இந்த டேனின் ஒரு நச்சுப் பொருள். அதிகம் உட்கொண்டால் அதனால் வயிறு சம்பந்தப்பட்டக் கோளாறுகள் வரும். வயிற்றில் களிமண் இருந்தால் அது ஸ்பாஞ்சைப்போல இந்த டேனினை உறிஞ்சிக் கொள்கிறது. கிளிகள் எச்சமிடும் பொழுது இந்தக் களிமண் வெளியே வந்துவிடுகிறது, அம்மண்ணோடு சேர்ந்து டேனினும் வெளியே வந்துவிடுகிறது. இதனால்தான் பழங்களை உண்ணக் கிளம்பும் முன் கிளிகள் முதலில் களி மண்ணை உண்கின்றன. இயற்கை இந்த உயிரினங்களுக்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இப்படி ஓர் அறிவை அளித்திருக்கிறது. 



அது மட்டுமில்லாமல் இந்தப் பகுதி கடலில் இருந்து வெகுதொலைவில் இருப்பதால் இங்குள்ள உயிரினங்களுக்கு உப்புச் சத்து (Sodium) கிடைப்பது கடினம். இந்தக் களிமண்ணில் இருந்து இவற்றிக்கு உப்புச் சத்தும் கிடைக்கிறது. அதனால்தான் காபிபாரா (Capybara) போன்ற பாலூட்டிகளும் கூடக் களிமண்ணை உண்கின்றன என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். இங்கு களிமண்ணை உண்ண வரும் பறவைகளையும் மற்ற விலங்குகளையும் வேட்டையாட பிற விலங்குகளும் கூட இங்கே வரும். 


இது பற்றி இணையத்தில் தேடிப் பார்க்கும் பொழுது இதே காரணங்களுக்காக உகாண்டாவில் உள்ள சிம்பன்ஸிக் குரங்குகளும் களிமண்ணையும் கரையான் புற்றுகளின் மண்ணையும் தின்கின்றனவாம். அது மட்டுமில்லை, அந்தப் பகுதியில் உள்ள பழங்குடி இனப் பெண்கள், வயிற்றுவலியின் போது பிரசவ காலத்திலும் களிமண்ணைத் தண்ணீரில் கரைத்துக் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனராம். சிறுவயதில் வயிற்றுவலி வந்தால் அம்மா நாகர்கோயிலில் இருக்கும் நாகக் கோயிலில் இருந்து வரும் புற்றுமண்ணை தண்ணீரில் கரைத்து வயிற்றில் தடவுவதும், கொஞ்சம் குடிக்கவும் தருவதுதான் ஞாபகத்திற்கு வந்தது. 


படகில் இருந்து இறங்கி அரைமணி நேரம் காட்டினுள் நடந்து சென்றால் பறவைகள் க்ளே லிக்ஸில் இருப்பதைப் பார்ப்பதற்கு வசதியாக மரத்தலான தளம் ஒன்றினை அமைத்துள்ளனர். கிளிகளும் மக்காவ்களும் பறப்பதும் மரங்களில் உட்காருவதும் போய் அந்தச் சுவர்களில் உட்கார்ந்து அதிலுள்ள மண்ணைக் கொத்துவதுமாய் இருந்தன. அவை எழுப்பிய சத்தம் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது. 


பச்சைக் கிளிகள் என்றே நமக்குத் தெரிந்தவற்றைச் சிறகின் வடிவம் கொண்டும் அவற்றின் மேலிருக்கும் கோடுகள் கொண்டும் வேறு வேறு வகைக் கிளிகள் என்று விளக்கினார் எரிக். எங்கு சென்றாலும் கையில் ஒரு தொலைநோக்கியோடுதான் அவர் வந்தார். அதன் மூலம் பறவைகளையும் விலங்குகளையும் துல்லியமாகப் பார்க்க முடிந்தது. அதன் மூலம் படங்களையும் எடுத்துத் தந்தார். இணைப்பில் இருக்கும் தளத்தில் அப்படங்களைப் பார்க்கலாம். விடியோக்களை கட்டாயம் பாருங்கள். அதில் இவற்றின் கீச்சொலிகளைக் கேட்கலாம். பல வகைக் கிளிகள், நான்கு வகை மக்காவ்கள் ஆகியவற்றை இங்கு பார்த்தோம். 






பறவைகளைப் பார்த்துக் கொண்டே காலை உணவையும் இங்கே உண்டோம். சாப்பாடு, காப்பி, நீர் என அனைத்தையும் ஏற்பாடு செய்து இந்த இடம் வரை தூக்கி வரவும் பரிமாறவும் பணியாளர்கள் கூடவே வந்தார்கள். இந்தப் பகுதியில் சுற்றுலாவை ஒருங்கிணைத்த நிறுவனம் இதை எல்லாம் நன்கு திட்டமிட்டு அழகாகச் செய்தது. 


இங்கிருந்து மீண்டும் படகேறி அடுத்துச் சென்றது டாம்போபாட்டா ஆராய்ச்சி மையம் (Tambopata Research Center). 1989ஆம் ஆண்டு இந்த க்ளே லிக்கைப் பார்க்க வந்த புகைப்படக் கலைஞர் எடுவார்டோ நைசாண்டர் விதிகளுக்குப் புறம்பாக பறவைகள் வேட்டையாடப்படுவதையும் இப்பகுதி பாதுகாக்கப்படாமல் இருப்பதையும் பார்த்து கவலை கொண்டார். இப்பகுதியைப் பாதுகாக்க இங்குள்ள மக்களோடும் அரசோடும் இணைந்து ஒரு ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கினார். அதோடு கூட சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். தங்கள் ஆராய்ச்சி மூலம் பல புதிய பூச்சி, பறவை, விலங்கினங்களைக் கண்டுபிடித்தனர் இந்த மையத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இங்கு மொத்தம் இருபத்தி நான்கு அறைகள்தாம். முன்பதிவு செய்வது மிக அவசியம். இதற்கும் முகவர் துணை இருத்தல் நலம். 


இந்த மையத்தில்தான் நம் பயணத்தின் கடைசி இரண்டு நாட்களைக் கழிக்கப் போகிறோம். அந்த அனுபவத்தை அடுத்து வரும் இந்தத் தொடரின் இறுதிப் பாகத்தில் பார்க்கலாம். 


பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன -  அமேசான் புகைப்படங்கள் 


Wednesday, January 10, 2024

பெரு(ம்) பயணம் - 10

 

பெருவின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் மாத்ரே தே தியோஸ் (Madre de Dios - கடவுளின் தாய்) தான் நமது அடுத்த இலக்கு. அதே பெயர் கொண்ட நதி இப்பகுதியில் ஓடுவதால் இப்பகுதிக்கே இந்தப் பெயர். பெருவியன் அமேசான் என்று அழைக்கப்படும் காடுகள் இங்கு உள்ளன. அமேசான் காடுகளில் ஒரு பகுதி இது.   கூஸ்கோவில் இருந்து சுமார் ஒரு மணி நேர விமானப்பயணத்திற்குப் பின் நாங்கள் இறங்கியது புயெர்த்தோ மால்டனாடோ (Puerto Maldonado) என்ற நகரம். இது மாத்ரே தே தியாஸ் பகுதியின் தலைநகரம். 



இங்கு எங்களைச் சந்தித்தார் வழிகாட்டி எரிக். நம்மை காட்டுக்குள் கூட்டிச் செல்லப் போவது இவர்தான். ஓர் ஆசிரியர் போல கண்டிப்பாக இருந்தார். இவர் சொல்வதைக் கேட்டு நடக்கத்தன் வேண்டும் போல. செல்ல இருப்பது நடுக்காடு. பழங்கதைகளில் வருவது போல ஏழு மலைதாண்டி ஏழு கடல்தாண்டி எல்லாம் செல்லத் தேவை இல்லை என்றாலும். விமானத்தில் வந்து இறங்கிய நம்மை ஒரு பேருந்தில் ஏற்றிக் கொண்டு ஒரு நதிக்கரையோரம் கொண்டு சென்றார். சிறிய சாலைதான் ஆனால் அத்தனை அழகாக இருந்தது. பொதுவாகவே  இந்தப் பகுதியில் மக்கள்தொகை கம்மி என்பதால் போக்குவரத்தும் அவ்வளவு இல்லை. ஒன்றரை மணி நேரம் பேருந்துப் பயணத்தில் நடுநடுவே வந்த சிற்றூர்களைத் தவிர ஆட்களையே பார்க்கவில்லை. 



இப்பகுதி முழுவதுமே வனாந்திரம்தாம். சுற்றுலா முக்கியமான தொழிலாக உள்ளது. இயற்கை வளத்தை பாதுகாக்க பெரு அரசு பல இடங்களை பாதுகாக்கப்பட்ட வனங்களாக அறிவித்துள்ளது. அதில் ஒன்றுதான் டாம்போபாட்டா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இது  டாம்போபாட்டா என்ற நதியைச் சுற்றி அமைந்துள்ளது. இந்த காடுகளுக்குள் செல்ல ஒரே வழி இந்த நதிகளில் படகோட்டிச் செல்வதுதான். நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் பிரயாணித்த பின் அதிலிருந்து பிரியும் மண் சாலை ஒன்றில் மேலும் அரை மணி நேரம் பயணம் செய்தால் வரும் சிற்றூர் பிலடெல்பியா (Filadelfia). இங்கிருந்து படகு ஒன்றில் ஏறி டாம்போபாட்டா நதியில் செல்லப் போகிறோம். 


டாம்போபாட்டா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி (இனி டாம்போபாட்டா காடுகள் என அழைப்போம்) இருபது லட்சம் ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. இதில் மழைக்காடுகள், சதுப்பு நிலங்கள் எனப் பலவிதமான நிலங்கள் உள்ளன. அதற்கேற்றாற்போல பல்வேறு வகை மரங்கள், பறவைகள், பூச்சிகள், நீர்வாழ் இனங்கள் என இயற்கை வளம் கொட்டிக் கிடக்கும் பகுதி. இது வரை நாம் பார்த்த தட்பவெட்ப நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இடம். நல்ல வெயில் அடித்தாலும் பெரிய மரங்கள் அதனைத் தடுத்துவிடுவதால் நேரடி வெயில் தரை மட்டத்திற்கு வருவதில்லை. பதினைந்து சதவிகித வெயில்தான் கீழே வருகிறது. ஆனால் வெப்பத்திற்குக் குறைவில்லை. காற்றில் ஈரப்பதம் நிறைந்திருப்பதால் கொஞ்சம் நேரம் வெளியில் இருந்தாலே வியர்வையில் நனைந்துவிடுகிறோம். எப்பொழுது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்பதால் சிறுபையில் மழைக்கோட்டு, தண்ணீர் எல்லாம் வைத்துக் கொள்ளுங்கள் என்று முதலிலேயே சொல்லிவிடுகிறார்கள். 



இங்கு நாங்கள் இரு வேறு விடுதிகளில் தங்கினோம். இரண்டிலுமே பொதுவான விதிகள் சில இருந்தன. காடுகளுக்குள் நடக்க அவர்கள் தரும் ரப்பர் பூட்ஸ் காலணிகளைத்தான் அணிய வேண்டும். திரும்பி வரும் சமயம் அவற்றை நீரில் கழுவி விடுதிகளுக்கு வெளியே வைத்துவிட்டு நம்முடைய காலணிகளை அணிந்து உள்ளே செல்ல வேண்டும். மழைக்காடுகள் என்பதால் சேறிலும் நீரிலும் நடக்க வேண்டி இருக்கிறது. அதற்கு அந்தக் காலணிதான் சரியாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அந்த சேறு விடுதிகளுக்குள் வராமல் இருக்க இந்த ஏற்பாடு. 



அதே போல நாம் தங்கும் அறைகளில் மூன்று சுவர்கள்தான். நான்காவது சுவர் இருக்க வேண்டிய இடத்தில் காடுதான் இருக்கிறது. அதனால் அறைக்குள் உணவுப் பொருட்களை கூடியமான வரை கொண்டு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார்கள். படுக்கையைச் சுற்றிக் கொசுவலைகளைச் சுற்றிவிடுகிறார்கள். இரவில் அந்த வலைகளுக்கு வெளிய விதவிதமான பூச்சிகள் ரீங்காரமிட்டுப் பறப்பது வித்தியாசமான அனுபவம்தான். 




விடுதியின் முன்னறையில் இருந்து நாம் தங்கும் அறைகளுக்குச் செல்ல மரப்பாதை அமைத்திருக்கிறார்கள். இப்பாதைகள் பெரும் மரங்களுக்கு நடுவே செல்வதால் அறைக்குச் செல்லும் பொழுது கூட நம் தலைமேல் கிளிகளும் மக்காவ் (Macaw) பறவைகளும் பறந்த வண்ணம் இருக்கின்றன. விடுதிக்கு வெளியே காடுதான் என்பதால் மூன்று வேளை உணவும் விடுதியிலேதான். புபே முறைதான். நமக்குண்டான கட்டுப்பாடுகளை முன்னரே சொல்லிவிட்டால் அதற்கு ஏற்றாற்போல் சமைக்கிறார்கள். 




விடுதியின் எல்லைக்குள் நாம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்கு வெளியே சென்றோமானால் நம் வழிகாட்டியின் துணை இல்லாது தனியாகக் செல்லக்கூடாது என உறுதிபடச் சொல்லிவிடுகிறார்கள். இங்கே பலவித ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுவதால் தினம் அவை குறித்த அளவளாவலும் உண்டு. 


சூரியஒளி மூலம் கிடைக்கும் மின்சாரம் மட்டும்தான் என்பதால் நாள் முழுவதும் மின்சாரம் இருக்கும் எனச் சொல்ல முடியாது. கிடைக்கும் பொழுது போட்டுக் கொள்ள அறையில் ஒரு மின்விசிறி இருக்கிறது. ஆனால் அதனால் பயன் அதிகமில்லை. மின்சாரம் இருக்கும் பொழுது இணையவசதி கிடைக்கிறது. வெந்நீருக்குப் பஞ்சமில்லை. ஆனால் வெளியே சென்று வந்தால் ஊற்றும் வியர்வைக்கும் சும்மா இருந்தால் கூட இருக்கும் புழுக்கத்திற்கும் தண்ணீரே போதுமானதாக இருந்தது. 


பிலடெல்பியாவில் இருந்து ஒரு மணி நேரம் நீரோடும் திசையிலே சென்றால் வருவது ரெப்யூஜியோ அமேசோனாஸ் என்ற விடுதி. இங்குதான் நாங்கள் முதலில் சென்றோம். படகில் இருந்து இறங்கி சிறிது தூரம் காட்டுக்குள் நடந்து சென்ற பின்னால்தான் விடுதி கண்ணில் படுகிறது. கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு வாருங்கள், வெயில் தாழுமுன் ஒரு முறை காட்டுக்குள் சென்று வருவோம் என்றார் எரிக். 



அரை மணி நேரத்திற்கு மேல் நடந்து சென்றோம். செல்லும் வழியில் தென்பட்ட பிரேசில்நட், சீடர், ஐயர்ன்வுட் போன்ற மரங்களைச் சுட்டிக் காட்டிக் கொண்டே வந்தார். அவர் காண்பித்த ஒரு மரம் விசித்திரமானது. அதன் பெயர் நடக்கும் பனை (Walking Palm). பெரிய மரங்களால் வெயில் தடுக்கப்படுவதால் இது நிழலில் இருந்து வெயிலைத் தேடி மெதுவாக நகரும். துடைப்பம் போன்ற வேர்ப்பகுதி இது போல அந்த மரம் மெதுவாக நகர்வதற்கு உதவுகிறது என்றார். வீட்டுக்கு வந்த பின் அது பற்றிப் படித்தால் அது வெறும் கதைதான் அப்படி ஒன்றும் அந்த மரம் நகர்வதில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். 



காட்டுக்கு நடுவே நூறு அடி உயரத்தில் ஒரு மேடை கட்டப்பட்டிருந்தது. அதில் ஏறினால், அங்குள்ள மரங்களின் உயரத்திற்கு நாம் செல்ல முடிகிறது. மேலிருந்து பார்க்கும் பொழுது மரங்களின் நடுவே தாவும் குரங்குகள், உயரப் பறக்கும் பறவை எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. 



அவற்றை எல்லாம் பார்த்துவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்தோம். சூரியன் மறைந்த பிறகு செய்ய ஏதுமில்லை என்பதால் சீக்கிரமே உறங்குங்கள். நாளை காலை நான்கு மணிக்கு கிளம்ப வேண்டும் என்றார் எரிக். 


பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன -  அமேசான் புகைப்படங்கள்


Tuesday, January 09, 2024

பெரு(ம்) பயணம் - 9


கூஸ்கோ. பதினோராயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள நகரம். பெருவின் ஏழாவது பெரிய நகரம். தனது பாரம்பரியத்தின் தலைநகர் எனப் பெரு அரசால் அறிவிக்கப்பட்ட இடம். இன்கா இனத்தவரின் புராதானத் தலைநகரம். தொடர்ந்து மூன்றாயிரம் வருடங்களாக மக்கள் வசித்து வரும் நகரம். யுனெஸ்கோவால் பாரம்பரியத் தலம் என அறிவிக்கப்பட்ட நகரம். ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரும் நகரம். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். என்னளவில் நான் பார்த்த மிக அழகான மலைநகரங்களில் ஒன்று. 






இன்காவினருக்கும் முன்பே மக்கள் வசித்து வந்த பகுதி இது. பொயுமு 500ஆம் ஆண்டில் இருந்தே இப்பகுதியில் மக்கள் வசித்து வந்துள்ளனர். கில்கே எனப்படும் இனத்தவர் பொயு 900ஆம் ஆண்டிலிருந்து 1200ஆம் ஆண்டு வரை இங்கு இருந்ததற்கானச் சான்றுகள் கிடைத்துள்ளன. அவர்களைத் தொடர்ந்து இன்காவினர் இந்தப் பகுதியின் சக்திவாய்ந்த  இனமாக விளங்கினர். அப்பொழுது கூஸ்கோவை தங்கள் தலைநகராகக் கொண்டனர். 


ப்யூமா எனப்படும் புலி இன மிருகம் இப்பகுதியில் காணக் கிடைக்கும் ஒன்று. இம்மிருகத்தை புனிதமாகக் கருதினர் இன்காவினர். அதனால் இந்நகரை ப்யூமா ஒன்றினைப் போல வடிவமைத்தார்கள். அதன் தலைப்பகுதிதான் நாம் முன்பு பார்த்த சக்ஸேவாமன் கோட்டை. அதன் வால் பகுதியில் ப்யூமாவின் வால் என்ற பெயரில் ஒரு நீரூற்று உள்ளது. இன்று அந்த வடிவத்தைத் தாண்டி பெருநகராக உருவெடுத்திருக்கிறது கூஸ்கோ. 


இன்காவினரைத் தோற்கடித்த பிஸாரோ முதலில் தனது இருப்பை நிலைநாட்டியது கூஸ்கோவில்தான். இதற்குப் பின்னரே லீமா உருவாக்கப்பட்டது. எனவே ஸ்பென் காலனியாதிக்கச் சமயத்திலும் கூஸ்கோ முக்கியமான ஒரு நகராக இருந்தது. இன்கா கோவில்கள் அழிக்கப்பட்டு அவற்றின் மேல் கிருத்துவ தேவாலயங்கள் கட்டப்படுவது இங்குதான் தொடங்கியது. இன்றும் பெரும் தேவாலயங்களைப் பார்த்தோமானால் அவற்றின் அடித்தளம் இன்காவினர் கட்டிய கற்களால் இருப்பதைப் பார்க்க முடிகிறது. பூச்சு கூட இல்லாமல் அடுக்கப்பட்ட கற்களை உடைக்க இரும்பு ஆணிகளை ஆப்பு போல வைத்து அடித்துதான் எடுக்க முடிந்தது ஸ்பானியர்களால். இன்றும் கூட இது போல ஆணிகள் அடிக்கப்பட்ட கற்களைக் காண முடிகிறது. 


இன்கா கற்களே அடித்தளம்

இன்காவினரின் கட்டமைப்பில் சுவர்கள் செங்குத்தாக இருப்பதில்லை. கீழிருந்து மேல் செல்லும் பொழுது சற்றே உள்ளே சரிவது போன்ற அமைப்பில்தான் அவர்கள் கட்டி இருக்கிறார்கள். இது பூகம்பத்தின் விளைவுகளைத் தாங்கக்கூடிய வடிவமைப்பு. மேலே கட்டப்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தாலும் இந்தக் கல் சுவர்கள் இன்னும் நிற்பதற்குக் காரணம் இந்த வடிவமைப்புதான் என விளக்கினார் நீலோ. இது போன்ற அமைப்பினை மாச்சுப் பிச்சு, சாக்ஸேவாமன் என எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. 


இன்காவினர் தங்கள் நாட்டினை டவாண்டின்ஸுயு (Tawantinsuyu) எனப் பெயரிட்டிருந்தனர். நான்கு பகுதிகளின் இணைப்பு என்பது இப்பெயரின் பொருள். அப்பெயருக்கு ஏற்ற மாதிரி நாடு நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. இந்த நான்கு பகுதிகளுக்கு நடுவே இருப்பதால் கூஸ்கோவை உலகின் தொப்புள் என்று அழைத்திருக்கிறார்கள். கூஸ்கோ என்ற பெயருக்கே நடு அல்லது தொப்புள் என்றுதான் பொருள். 


கூஸ்கோவிற்குக் கிழக்கே இருந்தது ஆண்டிஸுயு என்ற மலைப்பகுதி. இங்கு மரங்கள், பறவைகள், மருத்துவ குணம் கொண்ட செடிகள், தங்கம் போன்ற வளங்கள் மிகுந்திருந்தன. வடமேற்கில் இருந்தது சின்சாய்ஸுயு என்ற பகுதி. இது விவசாய நிலங்கள் மிகுந்த பகுதி. தென்கிழக்கே இருந்தது காண்டிஸுயு என்ற பகுதி. இது கடல்வளங்கள் மிகுந்த பகுதியாகத் திகழ்ந்தது. இறுதியாக தெற்கில் கொயாஸுயு எனப்படும் மலைப்பாங்கான சமவெளிகள். இங்கு யாமா, அல்பகா போன்ற மிருகங்கள் வளர்க்கப்பட்டன. உருளைக்கிழங்கு, உப்பு, தங்கம், வெள்ளி, செம்பு போன்றவை கிடைத்த பகுதி இது. தலைநகர் கூஸ்கோவில் இருந்து இந்த நான்கு பகுதிகளுக்கும் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. 


அல்பகா

ஸ்பானியர்கள் கூஸ்கோ வந்த பொழுது மலைக்குச் செல்லும் பாதையைக் காண்பித்து, இந்தச் சாலை செல்லும் மலைகளுக்குப் பெயர் என்ன எனக் கேட்டனராம். அவர்கள்  மொழி புரியாத இன்காவினர் அம்மலைகளில் வசிக்கும் இனத்தவர் பெயர்களைக் கேட்கிறார்கள் என நினைத்து ஆண்டிஸ் எனப் பதிலளித்தனராம். இப்படித்தான் அம்மலைத் தொடருக்கு ஆண்டிஸ் மலைத்தொடர் எனப்பெயர் வந்தது என்ற வரலாற்றுக் கதையைச் சொன்னார் நீலோ. கங்காரு என்ற பெயர் அவ்விலங்கிற்கு வந்தது கூட இது போல ஒரு மொழிப்பிரச்னையினால்தானே. 


கூஸ்கோ நகர் இரு பகுதிகளாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது. வடக்கில் இருந்த பகுதி சற்றே உயரத்திலும் தென்பகுதி சற்று உயரம் குறைவாகவும் இருந்தன.  தென்பகுதியை விட வடப்பகுதி மதிப்பு கொண்டதாய் இருந்தது. இவற்றிற்கிடையே உள்ள சதுக்கத்தில்தான் விழாக்கள் நடைபெறும். கூஸ்கோவில் இருந்த சூரியக்கோவில் மிகப்பிரச்சித்தமானது. இந்தக் கோயில் தங்கத்தால் வேயப்பட்டிருந்தது. அதே போல இங்கிருக்கும் நிலவுக்கோயில் வெள்ளியால் வேயப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட வயல்வெளி மாதிரிகள், மிருகங்களின் சிலைகள், பறவைகளின் சிலைகள் என விலைமதிப்பற்ற பொக்கிஷங்களால் இக்கோயில் நிறைக்கப்பட்டிருந்தது. தங்கத்தால் செய்யப்பட்டிருந்த சூரியனின் சிலையின் மாதிரிகளை பல இடங்களிலும் பார்க்கலாம். சுற்றுலாப் பயணிகளும் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். 


சூரியக் கோவில் சிதலத்தில் தேவாலயம்

சூரியன் சிலை


இந்த சூரியன் சிலை போலவே சுற்றுலாப் பயணிகள் பலரும் வாங்குவது எருது சிலைகளை. அருகில் உள்ள புக்காரா என்ற ஊரில் செய்யப்படுவதால் இதனை புக்காரா எருதுகள் என்கிறார்கள். இந்த புக்காரா எருது சிலைகளை வீட்டின் மேல் பொருத்துவது இவர்களின் வழக்கமாக இருக்கிறது. செழிப்பையும் நல்லூழையும் இவை கொண்டு வரும் என்பது இவர்கள் நம்பிக்கை. 





பிரம்மாண்டமான இந்தச் சூரியக் கோயிலை இடித்து அதன் மேல் சாண்டோ டொமினிகா மடாலயத்தைக் கட்டினார் பிஷப் வின்செண்டே டி வல்வெர்டே. இவர்தான் கூஸ்கோவின் முக்கியச் சதுக்கத்தில் வெற்றிகளின் தேவாலயம் என்ற பெயரில் பெரிய தேவாலயம் ஒன்றைக் கட்டினார். இதுவும் ஒரு இன்கா கோயிலை இடித்துக் கட்டப்பட்டதுதான். பூகம்பத்தால் சரிந்த இந்த தேவாலயம் மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது. நாங்கள் சென்றது கிருத்துமஸ் அன்று என்பதால் தங்கள் இல்லங்களில் பிறந்த யேசுவை ஒரு கூடையில் வைத்து இந்தத் தேவாலயத்திற்குக் கொண்டு வந்து ஆசி பெற்றுச் சென்றனர் இங்குள்ளவர். சதுக்கத்திலும் கிருத்துமஸ் கொண்டாட்டங்கள் பெரும் வாணவேடிக்கையோடு நடைபெற்றது. 






ரியோ டி ஜெனீரோ நகரில் இருப்பது போலவே இங்கு கைகள் விரித்தபடி இருக்கும் ஏசுவின் பெரிய சிலை ஒன்று இருக்கிறது. இந்தச் சிலையை வெள்ளைக் கிருத்து என அழைக்கிறார்கள். ஏனென்றால் இங்கு ஒரு கருப்பு கிருத்துவும் இருக்கிறார். உள்ளூர் மக்களை கத்தோலிக்க மதத்தைத் தழுவச் செய்ய, அவர்களைப் போலவே கிருத்துவையும் மாற்றினால் எளிதாக இருக்கும் என ஸ்பெயினின் பிலிப் III அரசர் நினைத்ததால் அப்படி ஒரு சிலை செய்யப்பட்டது. மிகவும் சக்தி வாய்ந்த சிலையாக இது கருதப்படுகிறது. 


சுவர்களில் வரையப்படும் கிராபிட்டி வகை கலை இங்கு பெரிதும் காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு கலைப் பகுதிகளை விற்பனை செய்ய ஒரு பகுதியே இருக்கிறது. பொதுவாகவே கலைகளுக்கு பெருமதிப்பு தரும் ஊராகத் திகழ்கிறது கூஸ்கோ. 


எளிமையான மக்கள், அருமையான தட்பவெட்பநிலை, அழகான ஊர் என கூஸ்கோ என் மனத்தை மிகவும் கவர்ந்துவிட்டது. ஆனால் இங்கிருந்து கிளம்பும் நேரம் வந்துவிட்டதே. உண்மையிலேயே காடு வா வா என்கிறது. 


பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன -  கூஸ்கோ புகைப்படங்கள்