Wednesday, April 24, 2013

Happy Birthday Sachin! - ஒரு விருத்த விளையாட்டு.


இன்னுமோர் நூற்றாண்டிரும்! 

இன்றைய விருத்த விளையாட்டு - Happy Birthday Sachin! 

இந்த ஈற்றடி வெச்சுத்தான் போன முறை நாம எல்லாம் வெண்பா எழுதினோம்  - http://elavasam.blogspot.com/2012/04/blog-post.html

சொக்கனும் நானும் சேர்ந்து விருத்தம் எழுதப் பழகிக்கிட்டு இருக்கோம். இந்தத் தளத்தில் போனா இதுவரை எழுதிய விருத்தங்களைப் பார்க்கலாம் - http://6seer.wordpress.com

இன்னிக்கு விருத்தம் வழியே சச்சினுக்கு வாழ்த்து சொல்லிடலாம்ன்னு எழுதிட்டோம்.
எண்ண முடியா ஓட்டங்கள்
...எடுத்தாய் நீயே வல்லவனே
பண்ண ஏதும் பாக்கியுண்டா
...பாரினில் வேறு சாதனையே
மண்ணில் இருந்து மாறாகால்
...மனத்தில் இருத்து வேண்டுமதே
அண்ணன் சொல்லைக் கேட்டதினால்
...அமைதி தானுன் வாழ்வதிலே

உலகம் முழுதும் ரசித்திடுமே
...உந்தன் பேட்டிங் தானதையே
பலநாள் அதையே பார்த்தாலும் 
...பழசே ஆகா கலையதுவே
சிலபேர் பலதும் சொல்வார்கள்
...சிந்தை தனிலே ஏற்றாதே
விளையா டிடுவாய் பலகாலம்
...விருந்தாய் ரசிப்போம் நாங்களுமே!

வரிகள் நூறு போதாது
...வார்த்தை வழியே சொல்லிடவே
அறிந்தோம் ஆட்டம் அதனழகை
...அற்பு தமாய்நீ ஆடிடவே 
சிறந்த மனிதன் நீதானே
...சிரித்தே இருக்கும் வரம்பெறுவாய்
பிறந்த நாளாம் இன்றைக்கு
...பிரியம் தருவோம் பரிசாக!

சொக்கன் எழுதியது 
பால்மணம் கமழ்கிற பாலகனாய்ப்
....பாரதம் பார்த்தது அப்பயலை,
‘நூல்தரம் உணர்ந்திட அட்டையினை
....நோக்குதல் போதுமா?’ என்றவனும்
வேல்கரம் ஏந்திய முருகனைப்போல்
....வெறியுடன் ஆடினன் தாண்டவமே,
ஆல்மரம் போலவே தன்விதையை
....ஆடிய களம்தொறும் பதித்துவிட்டான்!

சுருள்கிற முடியினில் சூட்சுமமோ?
....சுழல்கிற பந்துகள் சிதறடிப்பான்,
வெருட்டிடும் விரைவுடன் வீசிடினும்
....வேகமாய் பவுண்டரி அவன்குவிப்பான்,
கருத்தினைக் குவித்தெவர் முனைந்திடினும்
....கட்டிடக் கூடுமோ காற்றினைத்தான்?
வருத்திய பவுலரென் றெவருமில்லை,
....வாமனன் இவன்புகழ் குறையவில்லை!

இவன்பொழி ரன்மழை தினங்களிலே,
....இந்திய தேசமே திளைத்திருக்கும்,
உவப்புடன் கண்ணிமை கொட்டாமல்
....ஊரெலாம் அவன்திறம் பார்த்திருக்கும்,
நவமணி ஒருஉரு எடுத்ததுபோல்
....நாயகன் ஆட்டமும் ஜொலிப்பதனால்,
தவம்புரி வோர்பலர் டீவிமுன்பு,
....தாமதம் தான்பிற வேலையெல்லாம்!

சோர்வினில் கிடக்கிற மனத்துக்கும்,
....சுமைகளில் களைக்கிற உடலுக்கும்,
ஓர்மருந் தாகிடும் இவன்ஆட்டம்,
....உடனடி வைட்டமின், கொண்டாட்டம்!
சீர்நிறை குணங்களின் உறைவிடமாய்ச்
....செந்நெறி உணர்த்திடும் சீராளன்!
பார்புகழ் குறைவறக் கிடைத்ததுவே,
....பண்புடன் உழைப்பினைக் கலந்ததனால்!

செஞ்சுரி செஞ்சிரு தொடங்கிஇவன்
....செய்தவை எழுதிடத் தாள்போதா,
எஞ்சிய சாதனை ஒன்றிரண்டே,
....இமயமும் இவனது இணையாமோ?
விஞ்சிட ஒருவரும் இலைஎனினும்
....வெற்றியில் கருவமும் கொள்ளாதோன்,
கொஞ்சிடத் துடித்திடும் இந்நாடே,
....கோமகன் சச்சினின் புகழ்பாடி!

இதைப் பார்த்த பெனாத்தலால சும்மா இருக்க முடியுமா? 
அடித்துக் களைப்பான் என்றெதிரி
... ஆவல் கொண்டே இருக்கையிலே
வெடித்துக் களத்தில் அதகளமாய்
... வேரை அறுத்து ஓட்டத்தை
முடித்துக் கொடுத்து வந்திடுவான்
...முழுமை தந்தே தான்சிரிப்பான்
படித்து மாளா சாதனையே
... பலநாள் சுகமாய் வாழ்ந்திடுநீ!

Happy Birthday Sachin! May you live another 100 years!

Sunday, April 21, 2013

இத்தாம்ப பெர்ய மன்சன்றது....

ஞாயிற்றுக்கிழமை கார்த்தால. வீட்டுல வேலையா உள்ள இருக்காங்க. இவன் சும்மாத்தானே இருக்கான், எப்படி, சும்-மாத்-தா-னே இருக்கான் அப்படின்னு குழந்தையை இவன் இருக்கிற ரூமில் விட்டுட்டுப் போய் இருக்காங்க. இவன் போனில் பேசிக்கிட்டு இருக்கான். அன்னிக்கு என்ன ஆபீஸ் மேட்டராப் பேசப் போறான், சாயங்காலம் என்ன சினிமாப் போகலாம்ன்னு ப்ளான் பண்ண ஒரு போன். 

இவன் இப்படி போனில் பேசும் போது குழந்தை அழுவுது. இவன் இப்படித் திரும்பி பேசறான் அப்படித் திரும்பிப் பேசறான் ஆனா குழந்தை அழுதுக்கிட்டே இருக்கு. இவனுக்குப் போனையும் விட மனசில்லை. உடனே உள்ள பார்த்து, ஏ இவளே இந்த சனியன் கத்திக்கிட்டே இருக்கு கொஞ்சம் என்னான்னு பாருங்கறான். என்னாது, இந்த சனியன். இப்படித்தான் பொதுவா எல்லாருமே சொல்லறது. 

புலவர் கீரன் கானடாவுல பேசின ஒரு சொற்பொழிவோட ஒலிப்பதிவு கிடைச்சுது. தொடர்ந்து பல நாட்கள் ராமாயணம் பத்திப் பேசறார். கிஷ்கிந்தா காண்டம். அனுமன் ராமனைப் பார்க்கறான். அது பத்தி உணர்ச்சிகரமாப் பேசறார். அனுமன் மனத்தில் ஏற்பட்ட மரியாதை பத்திப்பேசும் பொழுது குரல் கம்முது. குரலை அப்படியே கீழ இறக்கி அது பத்திப் பேசறார். 

அப்போ ஒரு குழந்தை வீல்வீல்ன்னு கத்துது. அந்த குழந்தையோட அம்மா, குழந்தையை அடக்க முடியாம, அந்த மண்டபத்துக்கு வெளிய குழந்தையைக் கூட்டிக்கிட்டுப் போகப் பார்க்கறாங்க. அதனால கூட்டத்துல ஒரு சின்ன சலசலப்பு. 

நார்மலா என்ன நடக்கும்? கூட இருக்கறவங்க எல்லாம் உஷ் உஷ்ம்பாங்க. பேசறவரு பேசறதை நிறுத்திட்டு மூஞ்சியில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அப்படியே பார்த்துக்கிட்டு இருப்பாரு. முன்ன சொன்ன மாதிரி சனியனேன்னு வாயால சொல்லலைன்னாலும் சொன்னா மாதிரியே இருக்கும். 

இவரு என்ன பண்ணறாரு.”குழந்தைன்னா அழத்தான் செய்யும் கத்தத்தான் செய்யும். அழுதாத்தான் குழந்தை கத்துனாத்தான் குழந்தை. அதுக்கு எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன்?

நீங்க எல்லாம் தொலைவுலேர்ந்து வரீங்க. வர ஒரு மணி நேரம் போக ஒரு மணி நேரம். நான் பாட்டுக்கு ஒன்றரை மணி நேரம் கேப் விடாமப் பேசிக்கிட்டு இருக்கேன். மொத்தமா மூணு நாலு மணி நேரம் ஆயிடுது. சினிமாப் போனாலே ஒரு மணி நேரம் ஆச்சுதுன்னா இண்டர்வல் விடறான். நாம் அதை எல்லாம் செய்யறது இல்லை. பாஆஆவம் குழந்தைங்க. எவ்வளவு நேரம்தான் சும்மா இருக்கும். 

அதுக்காக குழந்தையை எடுத்துக்கிட்டு வெளிய எல்லாம் போகாதீங்க. அது ஒரு கட்டை குரலில் அழுதா நான் ஒன்றரைக் கட்டை குரலில் பேசிட்டுப் போறேன். இங்க சொல்லறது ராமனோட கதை. அது குழந்தை காதுல விழுந்தா நல்லது. குழந்தை இங்கவே இருக்கட்டும். குழந்தைகளோட வந்திருக்கிற தாய்மார்கள் பெரியோர்கள் இது பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம். அப்படியே உக்காந்து கதையைக் கேளுங்க.” 

பெரிய மன்சன் பெரிய மன்சன்றாங்களே. இந்தோ இவருதான்யா பெரிய மன்சன்! 

(நடந்த இந்த நிகழ்வைப்  பத்தி புலவர் கீரன் அவர்களே பேசி இருந்தா எப்படிப் பேசி இருப்பாருன்னு அவரோட ஸ்டைலில் எழுதிப் பார்த்தேன். அவர் பேசிக் கேட்டவர்கள் அவர் குரலிலேயே படிச்சுக்குங்க!)

Saturday, April 13, 2013

ராம காதைக்குக் கொத்தனார் நோட்ஸ்

நம்ம சொக்கன் இருக்காரே சொக்கன், கொஞ்ச நாளா கம்பராமாயணத்தில் மூழ்கி இருக்காரு. பாட்காஸ்ட் என்ன, பதிவுகள் என்னன்னு புகுந்து விளையாடிக்கிட்டு இருக்கார். 

இதெல்லாம் போறாதுன்னு இன்னிக்கு நம்ம ஹரி அண்ணா தலைமையில் வாரம் 100 கம்பராமாயணப் பாடல்களைப் படிப்பதும் அதற்கு விளக்கம் சொல்வதும் என்று ஒரு புதிய முயற்சியை ஆரம்பித்து இருக்கிறார்.

இதை எல்லாம் வெளியூர்காரர்கள் தவற விடுகிறோமே எப்படிக் கலந்து கொள்வது எனப் பார்த்தால் பெங்களூர் வந்து சேர் என்கிறார். சரி கம்பன் தந்த ராமாயணம் கை வரவில்லை என்றால் என்ன கொத்தனாரே ராமாயணம் எழுதுவான் என களத்தில் இறங்கி விட்டேன்.

அறுசீர் விருத்த பா வகையில் சுருக்கமாக கதையின் முக்கிய இடங்களைச் சொல்ல ஒரு முயற்சி செய்தேன். படித்து கருத்தினைத் தெரிவித்தால் மகிழ்வேன்.

பக்தியோடு இக்காதையைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சம்பத்துகளும் வாய்க்கும், மோட்ச பலன் கிட்டும்! :)


முத்துப் போன்ற மூவருக்கு
...முன்னம் வந்தான் முதல்வனவன்
தத்தை போன்ற பெண்ணவளை
...தனுசை உடைத்துக் கைப்பிடித்தான்

சித்தி சொன்ன காரணத்தால்
...சிரித்தே சென்றான் காட்டுக்கு
தொத்திக் கொண்டான் தம்பியுமே
...தொண்டு செய்யத் துணையாக


பத்தில் பாதி ஐந்தாக
...பரமன் கண்டான் குகனைப்பின்
பத்தி முத்திப் பாட்டியவள்
...பழங்கள் கடித்துத் தந்தனளே

பத்து தலையன் ராவணனும்
...பற்று வைத்தான் பிறன்மனைமேல்
எத்தன் மாரீ சன்துணையால்
...எடுத்தே சென்றான் இலங்கைக்கு

பித்தம் பிடித்தப் பெருமானும்
...பிரிய அனுமன் தனைக்கண்டான்
சித்தம் மாறி வாலியினை
...சீறும் அம்பால் அவன்வென்றான்

பக்தன் அனுமன் இலங்கைக்கு
...பறந்து சென்று பார்த்தவுடன்
ரத்தம் கொதித்து அவ்விடத்தை
...ரணமும் செய்து வந்தானே

மொத்தக் குரங்குப் படைகொண்டு
...மோத ராமன் முடிவெடுத்தான்
சத்தக் கடல்மேல் கல்போட்டு
...சாதித் திடத்தென் திசைசென்றான்

வித்தை பலவும் செய்தாலும்
...வீணாய்ப் போனர் இலங்கையரும்
யுத்தம் தனிலே யுவராசர்
...யுதிரம் கொட்டி வீழ்ந்தனரே

செத்துத் தொலைந்தான் ராவணனும்
...சேர்ந்தாள் சீதை ராமனுடன்
அத்தி தாண்டி அவர்களெல்லாம்
...அயோத்தி சென்று அடைந்தனரே!

நோட்ஸ்! 

பாடலைக் காண்பித்த பொழுது நண்பர்கள் சிலர் அது என்ன சத்தக்கடல் என்று கேட்டார்கள். அலையோசை மிகுந்த கடலே சத்தக்கடல்.

சரி, அது என்ன அத்தி? அத்தி என்றால் கடல். பாற்கடலில் படுத்துறங்கும் திருமாலுக்கு அத்திசயனன் என்று ஒரு பெயர் உண்டு. 

Thursday, March 14, 2013

Voices Within - Bombay Jayashri & T M Krishna with Mythili Chandrasekar


Coffee Table Book என்றாலே உடனே என்ன தோன்றும்? வழவழத் தாளில் படங்கள், அங்கும் இங்குமாய் கொஞ்சமே கொஞ்சம் வார்த்தைகள், கெட்டியான அட்டை, தூக்க முடியாத எடை, நட்சத்திர ஹோட்டல் அல்லது பெரும் பணக்காரர்கள் வீட்டு வரவேற்பறையில் இருக்கும், யாரும் படிக்க மாட்டார்கள். இதுதானே நினைவுக்கு வரும். எதோ இயற்கை காட்சிகள் என்றால் படமாவது பார்க்கும்படியாக இருக்கும் ஆனால் இசை பற்றிய அதுவும் பாரம்பரிய இசை பற்றிய புத்தகம் என்றால்?
 
பார்க்கலாம், படிக்கலாம், பிரமிக்கலாம், சேமிக்கலாம், இன்னும் பல -லாம்கள் போடலாம். கர்நாடக சங்கீத உலகில் கொடி கட்டிப் பறக்கும் பாம்பே ஜெயஸ்ரீயும் டி.எம்.கிருஷ்ணாவும், விளம்பர உலகில் புகழ் பெற்று விளங்கும் மைதிலி சந்திரசேகருடன் இணைந்து வெளியிட்டு இருக்கும் Voices Within என்ற புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறு விமர்சனம்தான் அது. படங்கள், வழவழ பக்கங்கள், கெட்டி அட்டை, ஒற்றைக் கையால் தூக்க முடியாத எடை என்ற சம்பிராதயமான விஷயங்கள் எதிலும் குறை வைக்காமல் இருந்தாலும் சுவாரசிய தகவல்களையும் சம்பவங்களையும் அள்ளித் தெளித்து கையில் எடுத்தபின் முழுவதும் படிக்காமல் கீழே வைக்க முடியாமல் செய்தது வித்தியாசம்தான்.  
 
கர்நாடக சங்கீத உலகில் கோலோச்சிய ஏழு பிரபலங்களின் வாழ்க்கையை பற்றிய சிறு குறிப்பு வார்த்தைகளாவும் படங்களாகவும் இப்புத்தகத்தின் மூலம் செய்யப்பட்டிருக்கிறது. இது வெறும் புத்தகம் அல்ல இவர்கள் ஏழு பேர்களுக்கும் எங்கள் வணக்கம் என்று முன்னுரையில் சொல்லப்பட்டு இருப்பது புத்தகத்தின் எல்லா பக்கத்திலும் கொஞ்சமும் மாற்றமில்லாமல் பின்பற்றப்பட்டு இருக்கிறது. சரிகமபதநி என்ற சப்த ஸ்வரங்கள் தொடங்கி கர்நாடக சங்கீதத்தில் ஏழு என்ற எண்ணிற்கு எப்பொழுதுமே ஒரு முக்கியத்துவம் உண்டு. அதை ஒட்டியே இவர்களும் ஏழு ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தங்கள் புகழ்மாலையாக இப்புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள் இவ்விருவரும். 

யார் அந்த எழுவர்? எத்தனையோ பேர் இருக்கும் பொழுது ஏன் இவர்கள் மட்டும்? இக்கேள்விகளுக்கும் புத்தகத்திலேயே விடை இருக்கிறது. 
 
  •  அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் - இன்றைய கச்சேரி முறையை அறிமுகப்படுத்தி கர்நாடக சங்கீதத்தை பெரும்பான்மையிடம் கொண்டு சேர்க்கும் அரிய காரியத்தைச் செய்தவர்.
  •  டி.என்.ராஜரத்தினம் பிள்ளை - நாகஸ்வர ராஜா. நாகஸ்வர வித்தையையும் தாண்டி நின்ற ஆளுமை. தனக்கான, தன் இசைக்கான இடத்தைப் பெற போராடத் தயங்காத போராளி.
  •  செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் - கர்நாடக சங்கீத உலகின் பீஷ்ம பிதாமகர். இசை தாண்டி பலவித ஒழுங்குமுறைகள் வரக் காரணமாக இருந்தவர்.
  •  ஜி.என்.பாலசுப்ரமணியம் - தேன் குரலோன். தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி அதுவரை இல்லாத ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்தவர்.
  •  பாலக்காடு மணி ஐயர் - மிருதங்கம் என்றால் மணி ஐயர். மணி ஐயர் என்றால் மிருதங்கம் என்ற அளவிற்கு திறமை கொண்டவர்.
  • எம்.எஸ்.சுப்பலக்ஷ்மி - இசைக்குயில். கர்நாடக சங்கீதத்தை இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலகமே அறியச் செய்தவர். நம் பாரதத்தின் ரத்தினம்.
  •  டி.ஆர்.மஹாலிங்கம் - புல்லாங்குழலுக்கென்றே பிறந்தவர். ஜீனியஸ். எந்த விதமான சட்டதிட்டங்களும் தம்மை பாதிக்காமல் இருந்த புரட்சியாளர்.
இவர்கள்தான் அந்த ஏழு பேர். ஒவ்வொரு கலைஞனுக்கும் 25 - 30 பக்கங்களில், அவரின் வாழ்க்கை பற்றிய குறிப்புகள், சம்பவங்கள், அவர்களின் கலை, அவர்களின் பழக்கவழக்கங்கள் என்று கலவையாகத் தொகுத்து எழுதப்பட்ட பக்கங்கள். இதற்குத் துணையாக அரிய கருப்பு வெள்ளை படங்கள் என்று அமர்க்களமாய் செய்திருக்கின்றார்கள். 

மூத்த கலைஞர் முசிறி சுப்ரமணிய ஐயருக்கு பதிலாக களமிறங்கிய சின்ன வயது ஜிஎன்பியின் கச்சேரியை விவரிக்கும் விதமாகட்டும், அரியக்குடி காலை எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை அவருடைய நாள் ஒன்றை விவரிக்கும் விதமாகட்டும் நாமும் அவர்கள் கூடவே இருப்பது போன்ற விவரிப்பு. எனக்கு குழலை விட வயலின் நன்றாக வரும் எனச் சொல்லும் மாலி, என் கச்சேரிக்கு நேரம் நிர்ணயிக்க நீங்கள் யார் என்று ஆல் இந்திய ரேடியோவை கேள்வி கேட்ட பிள்ளைவாள், மற்றவர்களை விட தனக்கு ஒரு ரூபாயாவது அதிகம் சன்மானம் தர வேண்டும் எனச் சொன்ன அரியக்குடி என்பது போன்ற சுவாரசியத்திற்கு குறைவில்லா தகவல்கள் நிறைந்த புத்தகம். வெறும் பெருமைகளை மட்டும் சொல்லாமல் அரியக்குடியின் கருமித்தனம், மாலியின் சூதாட்டம் என்று அவர்களை சாதாரண மனிதர்களாகவே சொல்லி இருப்பது எனக்குப் பிடித்தது. 

ஆனால் Coffee Table Book என்பதால் தேடித்தேடித் தேர்ந்தெடுத்த படங்கள்தான் புத்தகத்தின் ஹைலைட். ராஜாவைப் போன்ற ராஜரத்தினம் பிள்ளை, ராஜா வேஷத்தில் சினிமாவில் நடித்த ஜிஎன்பி, செம்மங்குடியின் இளமை முதுமை காலப் படங்கள் என்று அற்புதமான படங்களோடு, 78ஆர்பிஎம் ரெக்கார்டுகளின் படங்கள், 1943ஆம் ஆண்டு அரியக்குடி பாடிய கச்சேரியின் பாட்டு லிஸ்ட்(ஹமாம் விளம்பரத்துடன்), எம்.எஸ் ஆங்கில உரை ஒன்றை எழுதி வைத்துக் கொண்டு தயார் செய்கையில் சரியான உச்சரிப்புக்காக அதில் தமிழில் எழுதிக் கொண்ட படம் என வித்தியாசமான படங்கள் பலவற்றையும் தந்திருக்கிறார்கள். 

2007ஆம் ஆண்டு வெளியான இந்தப் புத்தகம், கர்நாடக இசைக்கலைஞர்கள் பற்றி அத்துறை வல்லுநர்களால் எழுதப்பட்டிருக்கும் புதிய முயற்சி என்பதே வாங்கிப் படிக்கவும் பாதுகாத்து வைத்துக் கொள்ளவும் போதுமான காரணம். இதன் தமிழ் மொழியாக்கம் ஒன்றும் வந்திருக்கிறது. அதை படித்துப் பார்க்கவில்லை என்பதால் மொழியாக்கம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. 

Voices Within | Bombay Jayashri, TM Krishna | 188 Pages | Rs.1900 | http://www.matrka.org/voiceswithin/index.html 

ஆம்னிபஸ் என்ற தளத்தில் தினம் ஒரு புத்தகத்தின் விமர்சனத்தினை வெளியிடுகிறார்கள். அத்தளத்தில், ஒரு வாரம் முழுவதும் அவர்கள் இசை பற்றிய புத்தகங்களின் விமர்சனங்களை வெளியிட்ட பொழுது, எழுதியது - http://omnibus.sasariri.com/2013/03/voices-within-bombay-jayashri-t-m.html


Wednesday, March 06, 2013

தமிழ் வளர்க்க சங்கம். சரி, ஆனால் தமிழைக் கற்க?

நண்பர் @anoosrini எழுப்பும் கேள்வி இது. விளையாட்டாய் பலரும் வாத்தி என்று ட்விட்டரில் அழைப்பதால் இதை என்னிடம் கேட்டுவிட்டார் போல! அவர் என்னிடம் கேட்டு கொஞ்ச நாள் ஆனது. ஆனால் என்னிடம் பதில் இல்லை. இது குறித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். 

இனி அனுவின் கேள்வி 

தமிழை தனிப்பட்ட முறையில், பள்ளி சாராமல், ஒரு மொழியாக கற்க முடியுமா? இது எனக்குள்ள ரொம்ப நாளா இருக்கற கேள்வி. நான் பள்ளியில் இரண்டாவது மொழியாக தமிழ் படித்தேன்.  ஆனால் பள்ளியில் தமிழை ஒரு மொழியாகச் சொல்லித் தராமல் ஒரு பாடமாகத்தான் சொல்லித் தருகிறார்கள்.

 நான் பள்ளி வழியாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் இந்தி படித்திருக்கிறேன். அதற்கு தக்ஷிண பாரத் இந்தி ப்ரசார் சபா இருக்கு. ஃப்ரென்ச் படித்திருக்கிறேன், Alliance Française இருக்கு. ஸ்பானிஷ் படித்திருக்கிரேன், Instituto de Cervantes இருக்கு. மாண்டரின், ஆங்கிலம், ஜாப்பனீஸ், ஜெர்மன், என்று எல்லா முக்கிய மொழிகளையும் உலகம் முழுவதும் படிக்க முடியும். அதற்கான கட்டமைப்புகள் உள்ளன.

அவ்வளவு ஏன்? சென்னையிலேயே இவை அனைத்தையும் படிக்க முடியும். ஆனால் தமிழ் கற்றுக் கொடுக்க, இப்படி ஒரு அமைப்பு இல்லையே என்ற ஆதங்கம் வெகு நாட்களாக எனக்கு உண்டு.

நான் சென்னையில் இருந்த போது, பக்கத்து வீட்டிற்கு ஒரு ஃப்ரென்ச் குடும்பம் குடி வந்தது. அந்த ஃப்ரென்ச் அம்மணி என்னிடம் "நான் தமிழ் படிக்க விரும்புகிறென். இங்கு எதாவது ஸ்கூல் இருக்கிறதா?" என்று கேட்டார். தனியாக ட்யூட்டர் வைத்து படிக்கலாம் என்றேன். "தமிழ்நாட்டில் தமிழ் ஸ்கூல் இல்லையா?" என்று வியந்தார். நானும் யோசித்தேன்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோம் என்று பெருமை பேசுவதைத் தவிர வேறு ஒன்றும் புதுசாக யாரும் செய்யவில்லை. தமிழ்ப் படங்களை தடை செய்வதை விட்டு, தமிழைக் கற்றுத் தர வழி செய்யலாமே!

பி.கு. - ட்விட்டர் நிறுவனத்தார் இந்த பாஸ்டரஸ் தளத்தினை வாங்கிவிட்டார்கள். ஏப்ரல் மாதத்தோடு இந்த சேவைக்கு சங்கு ஊதப் போகிறார்களாம். வழக்கம் போல மீண்டும் ப்ளாக்ஸ்பாட்டுக்கே போக வேண்டியதுதான் போல. செய்வோம். 

 

Posted via email from elavasam's posterous

Tuesday, February 05, 2013

நிறுத்தணும்! எல்லாத்தையும் நிறுத்தணும் - 2!


போன முறை இந்த நிறுத்தணும் பதிவு போடும் பொழுது இவ்வளவு பேர் படிப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை. இவ்வளவு பேர் ஆர்வமாப் படிக்கறாங்க என்பதே என்னை அடுத்த பதிவை எழுத தூண்டி விடுது. (அதுக்காக இந்தப் பதிவை படிக்காம விட்டா நிறுத்திடுவேன்னு நினைக்காதீங்க!)

இந்த முறை குறிப்பிடும் தவறுகள் முன்பே பல முறை சொல்லி இருப்பதுதான். ஆனாலும் தொடர்ந்து கண்ணில் தவறான வடிவம் பட்டுக் கொண்டே இருப்பதால் திரும்பவும் சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. சொல்லும் முறை மாறினாலாவது மனத்தினுள் செல்கிறதா என்று பார்க்கலாம்.

கண்ணில் படுவது  :  அமுல்
எழுத வேண்டியது  : அமல்

அமல் என்றால் கட்டாயமாக செயல்படுத்துதல் என்று பொருள். இன்றிரவு முதல் புதிய ரயில் கட்டணங்கள் அமுலுக்கு வருகின்றன். அந்த விதியை அப்படியே அமுல் செய்வது ஆபத்தானது என்று அச்சு ஊடகத்தில் கூட அதிகம் பார்க்கிறோம். அமுல் என்பது தவறான பயன்பாடு. அமல் என்பதே சரியான சொல். Enforcement Directorate என்பதை அமலாக்கத்துறைன்னு தமிழில் எழுதுவது. இதை அமுலாக்கத்துறைன்னு சொன்னாத் தப்புஅமல் செய்வது என்றால் செயல்படுத்துவது அமுல் செய்வது என்றால் எதோ பால் சம்பந்தப்பட்ட மேட்டர்அமுல் பால், அமலா பால்இல்லையாஅமலா பாலில்லை என்று ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியதுதான்

கண்ணில் படுவது : பொரி
எழுத வேண்டியது : பொறி

பொரி, பொறி ரெண்டுமே தமிழ் வார்த்தைகள்தான். ஆனா வேற வேற அர்த்தம். பொரி என்றால் எண்ணெய் கொண்டோ, அது இல்லாமலோ வறுப்பது.  அப்படி வறுத்த அரிசியையும் பொரி என்கிறோம். பொரித்த மீன், பொரியுருண்டை என்றெல்லாம் சொல்லும் பொழுது இந்தப் பொரி என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஒருவர் கடுமையாகத் திட்டிப் பேசுவதையும் பொரிந்து தள்ளுகிறான் என்கிறோம்.

பொறி என்னும் சொல்லுக்குப் பல விதமான அர்த்தங்கள் உண்டு. தீப்பொறி, எலிப்பொறி, பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டியது என்றெல்லாம் சொல்லும் பொழுதே - Spark, Trap, Carve என அர்த்தம் தெளிவாகவே தெரிகிறது அல்லவா?  பொறி வைத்துப் பிடித்தேன் என்று எழுத வேண்டிய இடத்தில் பொரி வைத்துப் பிடித்தேன் என்றால் எலியும் அணிலும்தான் கிடைக்கும் இல்லையா.  பொரி - Fry, பொறி - Machine

கண்ணில் படுவது :  உரி
எழுத வேண்டியது : உறி

பொரி பொறி போன்று உரி, உறி இரண்டுமே தமிழ்ச் சொற்களே. ஆனால் பொருள் வேறு.  உரி என்றால் தோல். அதனால்தான் மரவுரி எனச் சொல்கிறோம். இந்த தோலை அகற்றுவதையும் உரி என்கிறோம்.  வாழைப்பழத் தோலை உரித்த பின் உண்ண வேண்டும். உறி என்பதற்கு முக்கியமாய் இரண்டு அர்த்தங்கள். உறிஞ்சிக் குடிப்பது மற்றும் கயிறு கொண்டு கட்டி மேலெழுப்புவது.  மோர் தயிர் பாத்திரங்களை அப்படி மேலே கட்டி இருப்பதனால்தான் உறி எனப் பெயர். உறியில் இருப்பதை உறிஞ்சு.  உரி- Peel உறி - Sip


கண்ணில் படுவது : பண்ணிரெண்டு
எழுத வேண்டியது : பன்னிரண்டு

பண் என்றால் பாடல்.  பண் என்றால் இசை.  பண் என்றால் தகுதி. எண் என்பதற்கு எதுகை என்பதைத் தவிர பண்ணுக்கும் எண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  பதினொன்று எனச் சொல்கிறோம். பத்து+ இன் + ஒன்று = பதினொன்று என வருகிறது. அது போல பத்து+ இரண்டு என்பது பன்+இரண்டு = பன்னிரண்டு என மாறுகிறது. இதை பண்ணிரெண்டு, பண்ணிரண்டு என்றெல்லாம் எழுதினால் தவறு.  பண்ணிரண்டுன்னா ரெண்டு பாட்டு. பன்னிரண்டுதான் 12.

கண்ணில் படுவது: அணைத்து
எழுத வேண்டியது : அனைத்து

மீண்டும் ணகரக் குழப்பம். அனைத்து உயிர்கள்பால் அன்பு செலுத்த வேண்டும் என்பதை அணைத்து உயிர்கள்பால் அன்பு செலுத்த வேண்டும் என்றால் அநர்த்தம் ஆயிடும். இந்த மாதிரி ணகரப்பிழைகளுக்குக் காரணம் தவறான உச்சரிப்புதான். உச்சரிக்கும் பொழுது சரியாக அனைத்து எனச் சொல்லத் தொடங்கினால் எழுதும் பொழுது பிழை வராதுஅனைத்து மக்களையும் அணைத்து வாழவேண்டும். அணைத்து பெண்களை மதிக்க வேண்டும் என்றால் எவனாச்சும் அதைப் பண்ணப் போய் - எதுக்கு வம்பு?

கண்ணில் படுவது : நாகரீகம்
எழுத வேண்டியது : நாகரிகம்

விளக்கம் எனத் தொடங்கினால் பெரிதாகப் போகும் அபாயம். சுருங்கச் சொல்லப் பார்க்கிறேன். நகரத்தன்மை என்பதே நாகரிகம் என வழங்கப்படுகிறது.  இகம் என்றால் இருப்பது, இந்த உலகம் என்று பொருள். அதாவத் நகரத்தன்மை இருப்பது நாகரிகம். அது என்ன நகரத்தன்மை என்று தொடங்கினோமானால், நாகரிகம் என்றால் என்ன என்று பல பக்கங்களுக்குச் சொல்ல வேண்டியது வரும். அது இப்பொழுது வேண்டாம்.  நகர் + இகம் என்பது புணர்ந்து வரும் பொழுது நாகரிகம் என்றாகிறது.

அதே மாதிரிதான் தேசியம், காந்தியம், மார்கசியம் என்றுதான் சொல்ல வேண்டும். தேசீயம்காந்தீயம் என்று ஈயத்தைக் காய்ச்சி ஊற்றாமல் இருப்போம்இந்த இகம் இயம் எல்லாம் அளவா வச்சுக்கணும். இழுத்தா அறுந்துடும்

கண்ணில் படுவது : கறுப்பு
எழுத வேண்டியது : கருப்பு

ரொம்பவே சண்டை வரக்கூடிய விஷயம். மீண்டும் விளக்கம் சொல்லத் தொடங்கினால் பக்கம் பக்கமாகப் போய்விடக்கூடிய அபாயம். எனவே எது சரி என்பதோடு நிறுத்தி விடுகிறேன்.  நிறத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது கருப்பு என்று சொல்ல வேண்டும். கருமை, கருங்குரங்கு என்று எல்லா இடங்களிலும் இடையின ரகரம் வருவதை நினைவில் கொண்டால் கருப்பு என்றே எழுதுவோம். அப்போ கறுப்பு என்றால்? எனக் கேள்வி கேட்பவர்களுக்கு. கறுப்பு என்றால் சினம். இப்போதைக்கு இது போதும்.  கருப்பு கலர் கறுப்பு சினம்.

கண்ணில் படுவது : அய்யா
எழுத வேண்டியது : ஐயா

ஐ என்றால் கடவுள், தலைவன் எனப் பல பொருட்கள் உண்டு. அந்த ஆண்டவனையோ, தலைவனையோ மரியாதையாக அழைக்கும் பொழுது ஐயா என்று அழைக்கிறோம். அய் என்றால் ஒரு பொருளும் கிடையாது எனவே அய்யா என்று அழைத்தால் மரியாதை என்றாகப் போவதில்லை. ஐ என்பதற்கு அய் போலி என்று சிலர் சொல்லக்கூடும்.  ஐயோ என்பதை அய்யோன்னு சொல்லலாமோ? சரியாகச் சொல்ல முடிகிற பொழுது போலி எதற்கு?  ஐயோ பாவம் ஐயா என்றே சொல்லுவோம் அய்யோப் பாவம் அய்யா வேண்டாம்.

கண்ணில் படுவது: ஞாயம்
எழுத வேண்டியது : நியாயம்

அய்யா இந்த ஞாயத்தைக் கேட்க மாட்டீங்களா? இப்படி ஒரு வரியை பார்த்தா என் அடிவயிற்றில் அமிலம்தான் சுரக்கிறது. அய்யாவைப் பார்த்தாச்சு. அடுத்தது இந்த ஞாயம். பேசும் பொழுது ஞாயம் என்றே உச்சரிப்பதினால் வரும் தவறு. நியாயம் என்பதே சரி. ஞாயம் என்று தமிழில் ஒரு வார்த்தையே கிடையாது. ஞாபகத்தில் இருக்கட்டும் நியாயம்தான் சரி.

கண்ணில் படுவது: தோழி மார்
எழுத வேண்டியது : தோழிமார்

சரியான எழுத்துகளைக் கொண்டு எழுதினால் எழுத்துப்பிழை இல்லாமல் இருக்குமா? இருக்காது. தேவை இல்லாத இடங்களில் கொஞ்சம் இடம் விடாமல் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு வைரமுத்து தோழிமார் கதை எழுதி இருக்கார். ஆனா அதை விமர்சனம் பண்ணறேன் பேர்வழின்னு நாம வைரமுத்துவின் தோழி மார் கதை பிரமாதம்ன்னு நாம எழுதினா அர்த்தம் எப்படி மாறிப் போயிடுது பார்த்தீங்களா? ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் போதிய இடைவெளி தரவேண்டும். ஆனால் தேவையில்லாத எழுத்துகளுக்கு நடுவே இல்லை.

அடுத்த முறை இன்னும் பல பிழைகளோட வரேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் அன்பு…...


Monday, February 04, 2013

குஞ்சரி மணவாளா...

முருகா என்றதும் உருகாதா மனம் மோகன குஞ்சரி மணவாளா!

பாட்டு பிரபலம்தான்.

ஆனா அது என்ன மோகன குஞ்சரி?

இங்க ஒரு எட்டு போய்ப் பாருங்க.  -  http:// 4varinote.wordpress.com/2013/02/04/guest05/

எந்த பதிவைப் பார்க்க? 

எல்லாம் நம்ம பதிவுதேன்...

 

Posted via email from elavasam's posterous

Sunday, January 27, 2013

சர்க்கரை இனிக்கிற சர்க்கரை!


வழக்கம் போல ட்விட்டர் புராணம்தான். வழக்கம் போல ஆரம்பிச்சு வெச்சுது நம்ம @nchokkanதான்.

நான் எதையோ எழுதும் பொழுது சந்திப்பிழை செய்ய, நீர் செய்வது ஆயாசம் அளிக்கிறது. பதிலுக்குப் பாயாசம் அளியும் என்ற ரேஞ்சில் ஒரு ட்விட்டைப் போட்டுட்டு பாயாசமா, பாயசமா என்ற கேள்வியையும் இலவச இணைப்பாகக் கேட்டுட்டுப் போயிட்டார்.

பாயசம்தான் சரி, ஆனால் ஏன் அந்தப் பெயர் வந்தது என்று எனக்குத் தெரியாது என்று நான் விவகாரம் சின்னதாக இருக்கும் பொழுதே அமுக்கிவிட நினைத்தாலும் நடக்கிறதா? விதி @anoosrini @krangana @kekkepikkuni ரூபத்தில் வந்து விளையாட்டை ஆரம்பித்தது.பாயசம் கொஞ்சம் நிறம் மாறி திருக்கண்ணமுது, அக்காரவடிசல் என்று சுவையேறத் தொடங்கியது.

அக்காரம் என்றால் வெல்லம். அடிசில் என்றால் சோறு. இதை அக்காரவடிசில் என்றுதான் சொல்ல வேண்டும் என @ragavang ஜீப்பில் ஏறிக் கொண்டார். இதை இன்னும் அழகாகக் கன்னலமுது எனச் சொல்லாமே, கன்னல் என்றால் சர்க்கரை என்று நினைக்கிறேன் என அனுராதாவும் அக்காரவடிசிலில் வெல்லம்தானே அதில் எங்கே சர்க்கரை வந்தது என்று கிருஷ்ஷும் விவாதத்தை பாயசத்தில் இருந்து வெல்லம், சர்க்கரை பக்கம் திருப்பினர். இந்த பேச்சு நடந்து கொண்டு இருக்கும் பொழுது  @sathishvasan @akaasi  @Jsrigovind @4sn எனப் பலரையும் இணைத்துக் கொண்டு ஒரு சின்ன பொதுக்கூட்டமே போட்டோம்.

கன்னல் என்றால் கரும்பு. அந்தக் கரும்பில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரையையும் கன்னல் என்று சொல்லுவார்கள். கோதை நாச்சியார் தாலாட்டு என்ற தொகுதியில் செந்நெல் விளைய செகமுழுதும் தான்செழிக்க, கன்னல் விளைய கமுக மரம்தான் பழுக்க என்று வரும். இங்கு கரும்பு என்ற பொருளில்தான் கன்னல் என்ற சொல் வந்திருக்கின்றது. அதே தொகுதியில் வேறு ஒரு இடத்தில் கன்னல் மொழி என இனிமையான சுவைகூடிய என்ற பொருளிலும் வருகின்றது. நண்பர் ஒருவர் தம் மகளுக்குக் கன்னல் என்றே பெயர் சூட்டி இருக்கின்றார். சுவையான பெயர் என்பதில் சந்தேகமே இல்லை.

கன்னலாகட்டும், வெல்லம் ஆகட்டும். சர்க்கரை ஆகட்டும், கரும்பினில் இருந்து எடுக்கப்படும் தித்திப்பினைத் தரும் பண்டம்தானே. இவற்றிடையே வேறுபாடு உண்டா என்றால் கிடையாது. ஆனால் தற்காலத்தில் Refined Sugar என ஆங்கிலத்தில் வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை சர்க்கரை என்றும் அப்படி வெள்ளையாக இல்லாத சர்க்கரையை நாட்டு சர்க்கரை என்றும் வெல்லம் என்றும் குறிப்பிடத் தொடங்கிவிட்டோம். (Refined என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? சுத்திகரிக்கப்பட்ட என்பது எனக்கு சரியாகப்படவில்லை.)

சர்க்கரை என்பது இந்தியாவில்தான் முதன்முதலாகத் தயாரிக்கப்பட்டது என்றே அறிஞர்கள் கூறுகின்றனர். மற்ற நாடுகளில் தேன் மட்டும்தான் பயன்பாட்டில் இருந்தது. இங்கு இருந்தே சர்க்கரை பற்றிய மற்றவர்கள் தெரிந்து கொண்டார்கள். இந்தியாவில் பெரும்பாலான மொழிகளில் சர்க்கரை என்பதே இதற்கான சொல்லாக இருக்கின்றது. ஆங்கிலத்தில் வழங்கும் Sugar என்பதற்கும் சர்க்கரை என்பதுதான் வேர்ச்சொல். அரேபிய, பெர்ஷியன், ஜெர்மன், போலிஷ், ரஷ்யன், பழைய ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், போர்த்துகீஸ் என பல மொழிகளிலும் சர்க்கரைக்கான சொல்லிற்கு மூலம் நம் சர்க்கரையே. (இங்கு நம் என நான் குறிப்பிடுவது இந்தியாவை. வடமொழியில் இருந்து தமிழிக்கு சர்க்கரை வந்ததா அல்லது இங்கு இருந்து அங்கு சென்றதா என்பது பற்றி எனக்குத் தெரியாது.)

தொடர்ந்து பேசும் பொழுது ஜீனி பற்றியும் பேசினோம். நெல்லைப்பக்கம் சீனி என்போம். சீனியவரைக்காய், சீனிக்கிழங்கு என்று காய்கறிகளுக்குக் கூட சீனி என்ற இனிஷியலைச் சேர்த்துவிட்டோம். இதன் மூலம் தெரியவில்லை, தேடிப்பார்க்க வேண்டும். தமிழில் சீனி என்றால் மரத்தாலான சேணம் என்கிறது என் அகராதி. அது எப்படி சர்க்கரைக்கு மாற்றாக வந்ததோ தெரியவில்லை. இதற்கு ஏதேனும் வடமொழி மூலம் உண்டா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை, சீனி, வெல்லம், அக்காரம் என்றெல்லாம் பேசிய பொழுது ஆட்டத்திற்கு வராமல் இருந்த ஒன்று கருப்பட்டி. இன்று கருப்பட்டி என்று வழங்கப்பட்டாலும் அதைச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் கருப்புக்கட்டி என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளையாக இல்லாமல் கரிய நிறம் கொண்ட கட்டி கருப்புக்கட்டி. எளிமையான பெயர் என்றால் இதுதான். பனங்கருப்பட்டி, தென்னங்கருப்பட்டி என்று பல விதங்கள் உண்டு. இதைப் பற்றிப் பேசவே இல்லை. அதில் எனக்கு வருத்தம்தான். அதனால்தான் இங்கு நுழைத்துவிட்டேன்.

ஆனால் அஸ்கா பற்றிப் பேசினோம். நான் பணி நிமித்தம் கோவைக்கு மாற்றலாகிப் போன பொழுதுதான் இந்த வார்த்தையை முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். அது என்ன அஸ்கா என்று நண்பனிடம் தந்தையிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அஸ்கா என்பது ஒடிஷா மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறிய நகரத்தின் பெயர். இந்தியாவில் தொடங்கப்பட்ட சர்க்கரை ஆலைகளில் மிகப்பழைய ஆலை ஒன்று இங்குள்ளதுதான். இன்றும் அஸ்கா கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ற பெயரில் இந்த ஆலை இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த ஆலைக்கு தமிழகத்தில் இருந்து, அதுவும் குறிப்பாக மேற்கு தமிழகத்தில் இருந்து கரும்பு செல்வது வழக்கம்.

நாட்டுச் சர்க்கரையை மட்டுமே அறிந்த மக்கள், இந்த ஆலையில் இருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை நாட்டுச் சர்க்கரையில் இருந்து வித்தியாசப்படுத்துக் காண்பிப்பதற்காக அதைக் கொண்டு வந்த இடத்தை / தயாரிக்கப்பட்ட ஆலையை சேர்த்து அஸ்கா சர்க்கரை என வழங்கினர். நாளடைவில் சர்க்கரை என்ற வார்த்தையை விடுத்து அஸ்கா என்றாலே சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என்றாகிவிட்டது. இந்த அஸ்கா கதை பலருக்கும் தெரியாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமே.

நிற்க.

உலகத்திலேயே இந்தியாவில்தான் நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் அதிகமாம். ஒரு சந்திப்பிழைக்கு இந்த ரேஞ்சில் சர்க்கரை பத்திப் பேசினா ஏன் இருக்காதுங்கறேன்.

Saturday, January 26, 2013

விஸ்வரூபம் - தானே உலகாகி தனக்குள்ளே தானடங்கி


நுணலும் தன் வாயால் கெடும்ன்னு சொல்லுவாங்க. ஆனா ட்விட்டரில் எதையாவது உளறி வைக்க அது சுவாரசியமான கருத்துப் பரிமாற்றமா மாறுது. அதான் ட்விட்டரில் எனக்குப் பிடிச்சது.
இப்படித்தான் பாருங்க, ரெண்டு நாள் முன்னாடி இந்த விஸ்வரூபம் படம் பத்திப் பேச்சு. அப்போ ஒரு நண்பர் விளையாட்டா மகாபாரதத்தில்தானே ஒரிஜினல் விஸ்வரூபம் அதைத் தடை செய்யச் சொல்லி யாரும் போராடலையான்னு சொன்னாங்க. நான் பாரதத்தில் மட்டும்தானா விஸ்வரூபம்? ராமாயணத்தில் கூட இருக்கேன்னு சொல்லி வெச்சேன். எங்கேயோ வாமன ரூபம். இராகவ ரூபம், யாதவ ரூபம்ன்னு மூணு விஸ்வரூபங்கள் பத்திப் படிச்ச ஞாபகம்.
@kekkepikkuni @padmaa @ragavang @nchokkan என நண்பர்கள் அனைவரும் களத்தில் குதிக்க அன்றைய பொழுது (வேறொரு) விஸ்வரூபம் பற்றிப் பேசிக் கழிந்தது. அனுமனும் கூட விஸ்வரூபம் எடுத்ததுண்டு ஆனால் விஷ்ணுவின் விஸ்வரூபமே விசேஷமாகப் பேசப்படுகிறது. ராமருக்கு தான் அவதாரம் என்பது தெரியாதே. பின் எப்படி அவரால் விஸ்வரூபம் எடுக்க முடியும்? விஸ்வரூபம் என்றால் என்ன தெளிவான விளக்கம் வேண்டும் என்றெல்லாம் மிகச் சுவாரசியமாக சென்ற கலந்துரையாடல் அது. அப்பொழுது ராகவன், கண்ணதாசன் விஸ்வரூபம் பற்றிய எழுதியதாகத் தந்த வரிகள்தான் தலைப்பு - தானே உலகாகி தனக்குள்ளே தானடங்கி! எவ்வளவு எளிமையாகச் சொல்லிட்டார் பார்த்தீங்களா?
சரி, விஷயத்திற்கு திரும்ப வருவோம். சமீபத்தில்தானே படிச்சோம் அந்த மூன்று ரூபங்கள் பத்தின்னு தேடிக்கிட்டே இருந்தேன். அப்போதான் நான் செஞ்ச தப்பு தெரிஞ்சது. நான் படிச்சது மூன்று விஸ்வரூபங்கள் இல்லை. மூன்று சிம்மரூபங்கள் பற்றி.
நம்ம எல்லாருக்கும் பிரகலாதன் கதையில் வரும் நரசிம்மர் பத்தி நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆனா ராமாயணத்தில் யுத்தம் நடக்கும் பொழுது அனுமன் மேல அம்புகளை மழை மாதிரி பொழியும் பொழுது தன் பக்தனுக்குப் பிரச்சினையா என சிம்மமா மாறினாராம் ராமர். அதுக்கு இராகவசிம்மம் அப்படின்னு பேராம். கம்பன் இதைச் சொல்லி இருக்காரான்னு பார்க்கணும்.
மூணாவதா பாரதத்திலும் பீஷ்மர் அர்ஜுனனைக் கடுமையாத் தாக்கும் பொழுது கோபம் வந்த கிருஷ்ணர் சிம்ம அவதாரம் எடுத்து பீஷ்மரைக் கொல்லப் போயிட்டாராம். கிருஷ்ணர்தான் நான் ஆயுதம் ஏந்த மாட்டேன் சண்டை போட மாட்டேன்னு சொன்னாரே. ஆனா இப்படிச் செஞ்சாரா? இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. படிச்சுப் பார்க்கணும்.
இப்படி தன்னோட பக்தனுக்கு எல்லாம் பிரச்சினை வரும் பொழுது சிம்ம அவதாரம் எடுத்ததா நண்பர் ஆர்விஎஸ் எழுதின இந்தப் பதிவுல படிச்சேன். அதைத்தான் விஸ்வரூபம்ன்னு குழப்பிக்கிட்டேன். என் குழப்பத்தினால் நல்லாப் பொழுது போச்சு.
சரி, சிம்மத்தை விட்டுட்டு இன்னமும் விஸ்வரூபத்தையே புடிச்சுக்கிட்டுப் போகலாம். இந்த முறை திரைப்படம். திரைப்படம்தானே, இதுக்கு எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்? என அதில் அதிக ஆர்வம் இல்லாத எனக்கும் கூட ஆர்வம் வர வைச்சதுதான் இந்த போராட்டம் பண்ணினவங்க செஞ்ச காரியம். உபிச @dynobuoy முதல் நாள் முதல் காட்சிக்கே போகலாம் வான்னு கூப்பிட, கடைசியா முநாமுகா போன படம் எதுன்னு கூட தெரியாத நானும் படம் பார்க்கக் கிளம்பிட்டேன். படம் நல்லாத்தான் இருந்தது. முடிஞ்சதும் இதுக்காடா இம்புட்டு ஆர்ப்பாட்டம்ன்னு ஒரு பக்கம். இரண்டாம் பாகம் வேற இருக்கே அதுக்கு என்னென்ன செய்யப் போறாங்களோன்னு கடுப்பு இன்னொரு பக்கமா திரையரங்கை விட்டு வெளிய வந்தேன்.
படத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுதித் தந்தே ஆகணும்ன்னு @njganesh கத்தியைக் காட்டி மிரட்டி வாங்கிட்டுப் போயிட்டாரு. தமிழோவியத்தில் வந்திருக்கும் விமர்சனத்தை ஒரு நடை போய் படிச்சுப் பார்த்துக்குங்க -
விஸ்வரூபம் விமர்சனம்
இந்த விமர்சனம் இருக்கே, இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விமர்சனம். உபிச @penathal பார்க்கறதுக்கு முன்னாடி, விமர்சனம் எழுதறதுக்கு முன்னாடி, என்னைப் பாருடான்னு சொல்லி என்னைப் பார்க்க வைக்கறதுக்கு முன்னாடி, பார்த்துட்டு இதெல்லாம் படமாடான்னு நான் திட்டறதுக்கு முன்னாடி, திரை உலக வரலாற்றில் நான் அவனுக்கு முன்னாடி பார்த்த முதல் படம், அதற்கான விமர்சனம் என்பதை வரலாற்றில் பதிவு செய்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.
விமர்சனத்தைப் பார்த்துட்டு @eramurukan விமர்சனம் எல்லாம் சரி, படத்தைப் பத்தின வெண்பா எங்கன்னு கேட்டாரு. விமர்சனமா எழுதினா கொஞ்சம் பேராவது படிப்பாங்க வெண்பாவா எழுதினா நீங்களும் நானும்தான் படிக்கணும்ன்னு ஒரு பாட்டம் அலுத்துக்கிட்டு கையோட ஒரு வெண்பாவும் எழுதினேன்.
கள்ளமும் இல்லை கபடமும் இல்லையே
நல்ல படமிது நாடிடு – தொல்லையும்
கூடாது தோற்கவும் கூடாது ஆனால்
பாடாப் படுவதவன் பாடு
இதோட (இப்போதைக்குன்னும் சொல்லலாம்) விஸ்வரூபப் படலம் ஓவர். நல்லா இருங்க மக்கா.

Friday, January 04, 2013

நிறுத்தணும்! எல்லாத்தையும் நிறுத்தணும் - 1!


வழக்கம் போல இந்தப் பதிவுக்கும் காரணம் அண்ணன் @nchokkanதான். எங்கேயோ வெளியாகியிருந்த ஒரு ஆங்கிலக் கட்டுரையை அனுப்பி இது மாதிரி தமிழிலும் செஞ்சா என்னன்னு கேட்டு இருந்தாரு. இது மாதிரி அவர் நிறைய கேப்பார். ஆனாலும் நமக்கு வசதி எதுவோ அதைத்தான் எடுத்துக்கறது. அடிக்கடி கண்ணில் படும் இலக்கண / எழுத்துப்பிழைகள் என்பதே அந்தக் கட்டுரையின் சாராம்சம். 
தமிழில் நம்ம கண்ணில் படறது ஒண்ணா ரெண்டாய்யா இப்படி எல்லாம் தொகுத்துப் பட்டியல் போட என்று தட்டிக் கழித்தாலும் இது மாதிரி செஞ்சா என்ன அப்படின்னு உறுத்திக்கிட்டே இருந்தது. இது போல மேட்டரை அடிக்கடி ட்விட்டர்லே செய்யறதாலேயே நிறையபேர் என்னை அன்ஃபாலோ பண்ணிட்டாங்க. அன்பாலே சொன்னதற்கு அன்பாலோ நியாயமா? இருந்தாலும் என் பணி கடன் செய்து கிடப்பதே!
நினைத்த மாத்திரத்தில் அடிக்கடி பார்த்ததாய் தோன்றும் பத்து தவறுகளின் பட்டியல் இது. பொதுவாக, நம்ம மக்கள் ஃபேஸ்புக் ட்விட்டர்லே எழுதற வார்த்தைகளை மட்டும்தான் எடுத்துகிட்டிருக்கேன். ஆசையோடதான் எல்லாரும் தமிழ் எழுதறாங்க, சரி, அதுக்காக படிக்கறவங்க கண்ணை ஏன் குத்தணும்? அதைக் கொஞ்சம் சரியா எழுதப் பார்க்கலாமே.  

கண்ணில் படுவது: அதற்க்கு / முயற்ச்சி
எழுத வேண்டியது: அதற்கு / முயற்சி

ரொம்ப சிம்பிளான மேட்டர்ப்பா. ற் வந்தா அதுக்குப் பின்னாடி வேற புள்ளி வெச்ச எழுத்து வரக்கூடாது. அதற்கு, இதற்கு, முயற்சின்னு எழுதணும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முயற்சி முயற்ச்சி ஆகாது. இது க்,ச்,ட்,த்,ப் - எல்லா வல்லின மெய்களுக்குமே பொருந்தும்.  

கண்ணில் படுவது: பின்ணணி / பிண்ணணி 
எழுத வேண்டியது: பின்னணி

இணையத்தில் நம்ம ஆட்கள் அதிகம் பேசுவது சினிமாவும் சினிமா இசையும்தான். அதிலும் புதுசா படம் வந்தாலோ, தம் ஆதர்ச இசையமைப்பாளர் பத்தியோ பேச ஆரம்பிச்சா முதலில் வருவது இந்தப் பின்னணி இசைதான். ஆனா அதை பிண்ணணி, பின்ணணின்னு எழுதி நாராசமாக்கிடறாங்க. அணின்னா அலங்காரம். முன்னாடி நடிகர்கள் காட்சிகள் இருந்தாலும் பின்னாடியே இருந்து அழகு செய்யும் இசை என்பதால் அது பின்+அணி = பின்னணி இசை. அதை சின்ணாப்பிண்ணமா, ச்சே சின்னாப்பின்னமா ஆக்கிடாதீங்கப்பா. 

கண்ணில் படுவது: விமர்சணம்
எழுத வேண்டியது: விமர்சனம் 

நம்ம ஊரில் ஒரு கலாச்சாரம் உண்டு. சுவரில் ஒட்டி இருக்கும் போஸ்டர் பிடிக்கலைன்னா அது மேல சாணி அடிப்பாங்க. பெரும்பாலான விமர்சனங்கள் குறைகளையே சொல்லி வருதா, ஒரு வேளை அதனாலதான் அதை விமர்சாணம், ச்சே, விமர்சணம்ன்னு எழுதிடறாங்களோன்னு ஒரு சந்தேகம். விமர்சனத்தின் கனம் எவ்வளவு கூடினால்கூட விமர்சணம் ஆகாது! நோ விமர்சணம். 

கண்ணில் படுவது: சுவற்றில் / கிணறில் 
எழுத வேண்டியது: சுவரில் / கிணற்றில் 

போஸ்டர்ன்னு சொன்ன உடனேதான் ஞாபகத்திற்கு வருது. சுவரில்ன்னு எழுத வேண்டிய இடங்களில் சுவற்றில்ன்னு எழுதினா இலக்கியத்தரமா இருக்குன்னு சில பேர் செய்யறாங்க. அதுல ஒரு தரமும் இல்லை தப்புதான் இருக்கு. கிணறு உ-ன்னு முடியுது. அதனால கிணறு+இல் என்பது கிணற்றில்ன்னு ஆகுது. ஆனா சுவரு இல்லை. அது சுவர்தான். சுவர்+இல் என்பது சுவரில்ன்னுதான் வரணுமே தவிர சுவற்றில்ன்னு வரக்கூடாது. 

கண்ணில் படுவது: பொருப்பு
எழுத வேண்டியது: பொறுப்பு

ரகர றகர கன்ப்யூஷந்தான். பொறுப்போட எழுதணும், பொறுப்பில்லாம இருக்காதேன்னு சொல்லணும். புரியற மாதிரி சொல்லணும்ன்னா சின்ன பொறுப்பு, பெரிய பொறுப்புன்னு வித்தியாசம் எல்லாம் கிடையாது. பொறுப்புன்னு வந்துட்டாலே அது பெரிய விஷயம்தான். அதனால றகரம்தான் போடணும். பொருப்புன்னா மலை.

”செருப்புக்குத் தோல் வாங்கி வந்தாயே, என் பொருப்புக்கு என்ன வாங்கிவந்தாய்” - இது யாரோ தமிழ்லே விளையாடின காதலி, வீரன் கிட்ட கேட்ட கேள்வியாம். மீனிங்: செரு - போர். போருக்குப்போய் தோல் (யானையைக்) கொன்றாயே, என் கழுத்துக்கு (இடக்கரடக்கல்பா) என்ன வாங்கி வந்தாய்ன்னு அர்த்தம். எந்நேரமும் பொருப்பைப் பத்திப் பேசறது பொறுப்பில்லை :-)

கண்ணில் படுவது: சில்லரை
எழுத வேண்டியது: சில்லறை

வாங்கறதைப் பத்திப் பேசினா உடனே அடுத்து நம்ம ஞாபகத்துக்கு சில்லறைதான் வருது. ஒரு முழு நோட்டை மாத்தினா வருவது சில்லறை. அறைன்னா துண்டுன்னு ஒரு அர்த்தம் உண்டு. சில அறைகள் என்பதையே சில்லறைன்னு சொல்லறோம். அரைன்னா பாதி. நோட்டைக் கிழிச்சா ரெண்டு பாதிதான் கிடைக்கும். சில என்பது ரெண்டுக்கும் மேல இல்லையா, அதனால சில்லரைன்னு சொன்னா சில அரைகள், அதாவது, எதோ ஆயிரம் குடு பத்தாயிரம் தரேன் ரேஞ்சு மோசடியா ஆயிரும். அது நமக்கு வேண்டாம். சில்லறைன்னே சொல்லுவோம். சில பிரபல எழுத்தாளர்கள் கூட சில்லரைன்னு எழுதறாங்க. அதான் சோகம். 

கண்ணில் படுவது: அருகாமையில் 
எழுத வேண்டியது: அருகில் 

பிரபல எழுத்தாளர்கள்ன்னு சொன்ன உடனே அடுத்த கடுப்பு இந்த அருகாமையில்தான். அருகில்ன்னு எழுதினா சாதாரணமா இருக்குன்னு நினைச்சு அருகாமைன்னு எழுதிடறாங்க. ஆனா அர்த்தம் அநர்த்தம் ஆயிடுது. அறியாமைன்னா தெரியாம இருக்கறது. போதாமைன்னா போறாம இருக்கிறது. அப்போ அருகாமைன்னா அருகாம இருக்கிறதுதானே. அருகுன்னா சமீபம். அப்போ அருகாமைன்னா அருகில் இல்லாமல் தள்ளி இருக்கிறது, அதை அருகில் என்ற பொருளில் சொல்லலாமோ? சொல்லறாங்க. நாம சொல்லாம இருப்போம். 

கண்ணில் படுவது: கோர்த்து
எழுத வேண்டியது: கோத்து

அதே இலக்கிய வாசம் மேட்டர்தான் இதுவும். கோ - இந்த ஒத்த எழுத்துக்கு தமிழில் ஏகப்பட்ட அர்த்தம் இருக்கு,.பசு, அரசன், ஆண்டவன், இந்திரன், சுவர்க்கம், ஆகாயம், பூமி, தரி, தவிர்ன்னு சொல்லிக்கிட்டே போகலாம். ஏன் இப்படி ஒரு முக்கியம் இந்த எழுத்துக்குன்னு தெரியலை. ஆனா தொடுக்கிறது என்ற பொருளும் உண்டு. கோவை என்றால் தொடுத்தல் என்று பொருள். அதனால கோக்கவோன்னுதான் கேட்கணும். கோர்க்கவோன்னு சொல்லறது சரி இல்லை. துரியோதனனே சொன்னாலும் தப்பு தப்புத்தான் - http://www.youtube.com/watch?v=n4MyXUWNxv0#t=56m20s

கண்ணில் படுவது: முயற்சிக்கிறேன்
எழுத வேண்டியது: முயல்கிறேன் 

ஆகக் கடுப்பேத்தும் விஷயம் இது. முயல், முயலல், முயற்சி. இதைச் செய்யும் போது முயன்றேன், முயல்கிறேன், முயல்வேன்னு சொல்லணும். இல்லை முயற்சி செய்தேன் / செய்கிறேன் / செய்வேன். முயற்சிக்கிறேன்னு எல்லாம் சொல்லக் கூடாது. முயல் ஒண்ணு வந்து நானே சிக்கிக்கிறேன்னு சொன்னா வேணா முயற்சிக்கிறேன்னு சொல்லிட்டுப் போகட்டும். மனுசங்க நாம சரியாச் சொல்லுவோம். 

கண்ணில் படுவது: ஒரு அழகி
எழுத வேண்டியது: ஓர் அழகி

ஆங்கிலத்தில் யாராவது A, An தப்புப் பண்ணினா சிரிக்கும் மக்கள் தமிழில் ஓர் ஒரு தப்பு பண்ணும் போது கண்டுக்கறதே இல்லை. ஆங்கிலம் தமிழ் ரெண்டுலேயும் அதே லாஜிக்தான். உயிரெழுத்து வந்தா அதுக்கு முன்னாடி ஓர் வரணும். உயிர்மெய் எழுத்து வந்தா ஒரு போடணும். ஓர் அழகி, ஒரு முத்தம், ஒரு வாழ்க்கை, ஓர் ஆப்பு! இங்கிலீஷ்லே கேஜி முடிக்கும்போதே கரெக்டா சொல்ற மேட்டர். இங்க டன் கணக்குல படிச்சவங்களும் தப்பு பண்றோம்!

அப்பாடா அவ்வளவுதானான்னு ரொம்பவே ரிலாக்ஸ் ஆகாதீங்க. அப்பப்போ இந்த மாதிரி ஒரு லிஸ்ட் போடுவேன். இந்த எச்சரிக்கையோட இப்போ நிறுத்திக்கறேன்.