Thursday, February 19, 2026

பிள்ளையார் எழுத்து!

 

என் வீட்டில் பெற்றோரும் சரி அண்ணன்மாரும் சரி, எப்பொழுதுமே படிப்பதை உற்சாகப்படுத்துவார்கள். அந்தந்த வயதுக்கான தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் எப்பொழுதுமே வீட்டில் இறைந்து கிடக்கும். அதையும் தாண்டி மற்றவற்றைப் பற்றிக் கேட்டாலும் அதெல்லாம் உனக்கெதற்கு என்று தட்டிக் கழிக்காமல் பதிலும் சொல்வார்கள். படித்ததெல்லாம் ஆங்கில வழிக் கல்விதான் என்றாலும் நான் ஆங்கிலத்தைச் சரியாகக் கற்றுக் கொண்டது, வீட்டில் ‘தி இந்து’ நாளிதழைப் பார்த்துதான். கையில் பேப்பரும் பக்கத்தில் அகராதியுமாகத்தான் பொழுதுகள் விடியும். இதெல்லாம் பின்னாட்களில்.
சிறு வயதில் நமக்குத் தெரிந்த எழுத்துகள் அந்த நாளிதழில் காணக்கிடைக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சிதான் தொடர்ந்து நான் படிக்கக் காரணம் என்று மனமார நம்புகிறேன். ஆனந்த விகடனைப் பார்க்கும் பொழுதெல்லாம் அதில் தென்படும் ஆ என்ற எழுத்து எனக்குத் தெரிந்த ஒன்று என்பதால் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அம்மாவிடம் காண்பிப்பேன். விகடன் தாத்தாவின் பொக்கை வாய்ச் சிரிப்பைப் போல என் முகத்திலும் சிரிப்பிருக்கும். அது போல இந்து பேப்பரில் தென்பட்ட ஆங்கில எழுத்துகளும், அவற்றைச் சேர்த்து சிறு சிறு சொற்களாகப் படிக்கும் பொழுதும் ஏற்பட்ட ஆச்சரியம் இன்னமும் என் நினைவில் தங்கி இருக்கிறது. இப்பொழுதும் எதேனும் புதிய இடங்களுக்குச் செல்லும் பொழுது விளம்பரப் பதாகைகளில் இருக்கும் எழுத்துகளைப் புரிந்து கொண்டு படித்துப் பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு.
அப்படி ஆங்கில எழுத்துகளைப் படிக்கும் பொழுது ஒரு சமயம் எதோ ஒரு வித்தியாசமான எழுத்து தென்பட அப்பாவிடம் போய், “பிள்ளையார் எழுத்தை என்ன சொல்ல வேண்டும்?” எனக் கேட்டேன்.
பிள்ளையார் எழுத்து என எதைச் சொல்கிறேன் என்றே அவருக்குப் புரியவில்லை. எதைச் சொல்கிறேன் என்று காட்டச் சொன்னார். நானும் நாளிதழை எடுத்துக் கொண்டு போய் அவரிடம் காட்டினேன். நான் சுட்டிக் காட்டிய எழுத்து - &. சின்னதாகத் தலையும், தொப்பையும், தும்பிக்கை போல வளைந்த பகுதியுமாய் இந்த எழுத்து எனக்குப் பிள்ளையாரை ஞாபகப்படுத்தியது ஆச்சரியமில்லை. அது எழுத்து இல்லை, அது and என்ற சொல்லுக்கான குறியீடு என்று அப்பா அன்றைக்குச் சொல்லித் தந்தார். அதன் பின் அவரோடு எங்கேனும் செல்லும் பொழுது கடைகளின் பதாகையில் ‘& சன்ஸ்’ என்றெல்லாம் பார்க்கும் பொழுது அவரிடம் பிள்ளையார் எழுத்து என்றே காண்பிப்பேன்.


அப்பா இதை and என்ற சொல்லுக்கான குறியீடு என்றாலும் அதற்கென்று ஒரு பெயர் உண்டு என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டேன். அப்பெயர் ஆம்பெர்சேண்ட் (Ampersand). அதற்கும் பின்னர் மொழிகளின் மீது காதல் வந்து அவற்றைப் பற்றி விரும்பிப் படிக்கத் தொடங்கிய பொழுது ஆம்பர்செண்ட் பற்றிய ஆர்வம் மீண்டும் தலை தூக்கியது. ஏன் இந்தப் பிள்ளையார் வடிவம் என்று படிக்கத் தொடங்கினேன்.
உண்மையில் ஆம்பெர்சேண்ட் வெறும் குறியீடாகத் தொடங்கவில்லை. அது ஆங்கில எழுத்துகளில் ஒன்றாகவே இருந்தது. ஏபிசிடி எனச் சொல்ல ஆரம்பித்து எக்ஸ் வொய் ஸீ (இஸெட்) என்று அப்பொழுது முடிப்பதில்லை. “X, Y, Z, and per se and.” என்று சொல்லுவதே வழக்கமாக இருந்திருக்கிறது. per se என்ற லத்தீன் பதத்திற்கு அதாகவே என்று பொருள். எக்ஸ் வொய் ஸீ இவற்றுடன் அதாகவே and என்ற பொருட்படும்படிதான் “and, by itself, and.” என்று சொல்லி இருக்கிறார்கள். இது நாளடைவில் ampersand என்று மருவி வழங்கப்படுகிறது.
அப்படியானால் இதற்கு & என்ற வடிவம் எப்படி வாய்த்தது? அதற்கும் லத்தீன் மொழிதான் காரணம். அம்மொழியில் ‘et’ என்பது and என்ற பொருளுக்கான பதம். பதப்படுத்தப்பட்ட தோலிலும் பாபிரஸ் காகிதங்களிலும் எழுதும் பொழுது இவ்விரு எழுத்துகளைச் சேர்த்து எழுதத் தொடங்கினர். அப்படிச் சேர்த்து எழுதப்பட்ட வடிவம் உருமாறி உருமாறி இன்றைக்கு & என்று வந்து நிற்கிறது.
இன்னுமொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் இதே ‘et’ என்ற பதம்தான் நாம் மற்ற பிற என்பதைக் குறிக்க எழுதும் ‘etc.’ என்பதில் இருக்கும் ‘et’! ‘etc.’ என்பது ‘et cetera’ என்பதன் குறுக்கம். ‘cetera’ என்ற சொல்லுக்கு மற்றயவை என்று பொருள் கொள்ளலாம். ‘et cetera’ என்றால் இவற்றோடு மற்றயவையும் என்பது பொருளாகும். இப்படி நாம் அடிக்கடி பயன்படுத்தும் & என்ற குறியீட்டுக்கும் ‘etc.’ என்ற குறுக்கத்திற்கும் ஒரே வேர் என்பது தெரியாமலேயேதான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
பொதுவாக முறை சார்ந்து எழுதும் பொழுது & என்ற குறியீட்டைப் பயன்படுத்துவது தவறு என்றே கருதப்படுகிறது. முறையாக எழுதும் தருணங்களில் இப்படிக் குறியீடுகளும் குறுக்கங்களும் பயன்படுத்து தவிர்க்க வேண்டிய ஒன்று என்றே விதிகள் சொல்கின்றன. ஆனால் மற்ற குறுக்கங்களும் குறியீடுகளும் தவிர்க்கப்பட்டாலும் & அதற்கான இடத்தைக் கொண்டே இருக்கிறது.
தமிழில் ஏதோவும் ஏதோவும் பின்னே ஞானும் என்பது போன்ற தலைப்புகள் பொதுவாக மனத்திற்குப் பிடித்தவை. அது போல நான் மிகவும் விரும்பிப் படித்த இலக்கண நூல் ஒன்றின் பெயர் - ‘Eats, Shoots & Leaves: The Zero Tolerance Approach to Punctuation’. இப்படி இலக்கண நூலின் தலைப்பில் கூட தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது இந்த ஆம்பர்சேண்ட்.
ஆனால் உலகமே இன்றைக்கு ஆம்பர்சேண்ட் என்றாலும் எனக்கு என்னவோ & என்பதைப் பார்க்கும் பொழுதெல்லாம் முதலில் பிள்ளையார்தான் ஞாபகத்திற்கு வருகிறார்!
பிகு: கணினி விசைப்பலகையில் உள்ள ̀~!@#$%^&*()_-+=;:"'|\{[}]<,>.?/ ஆகிய சிறப்பெழுத்துகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு அதைப்பற்றிய உங்கள் கருத்துகளை, நினைவுகளை எழுதுங்கள் என்ற குறிப்புக்காக எழுதியது.

0 comments: