போன பதிவைப் படிச்சுட்டு, மொக்கை போடறதே வழக்கமா வெச்சு இருக்கியே என்னிக்காவது கொஞ்சம் உருப்படியா எதாவது எழுதக் கூடாதான்னு நம்ம நண்பர் ஒருத்தர் தனிமடல் ஒண்ணு அனுப்பி ஆசீர்வாதம் பண்ணி இருந்தாரு. இவரை சந்தோஷப்படுத்தற மாதிரி பதிவு போட முடியுமான்னு பார்க்கத்தான் இந்தப் பதிவு.
எதை எழுதுவது என யோசிக்கையில் வழக்கம் போல் நம்ம மக்கள் கனகாரியமாக எழுப்பி இருக்கும் ஒரு கோரிக்கையைப் படிக்கப் போய் விஷயம் சிக்கியது. ஆனால் அதைப் பற்றி பேசும் முன் சில விளக்கங்கள்.
ஒரு பொருளை தற்போது வாங்காமல் சிறிது காலத்திற்குப் பின் குறிப்பிட்ட தொகைக்கு வாங்கவோ விற்கவோ செய்யப்படும் ஒப்பந்தங்கள் எதிர்(காலப்) பேரங்கள் (Futures Contracts) என அறியப் பெறுகின்றன. இவ்வகையில் வர்த்தகம் செய்யப்படும் பொருட்கள் அரிசி, கோதுமை, மாமிசம், எண்ணை என எது வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது அந்நிய செலாவணியாகக் கூட இருக்கலாம். இவ்வகைப் பேரங்கள் எதிர்(காலப்) பேரங்கள் (Futures Contracts), விருப்பப் பேரங்கள் (Option Contracts) என இரு வகைப்படுகின்றன.
அதாவது ஜூலை இறுதியில் ஒரு கிலோ அரிசியை ரூபாய் 40க்கு வாங்கிக் கொள்கிறேன் என நான் மளிகைக் கடை அண்ணாச்சியுடன் ஒரு பேரம் செய்து கொண்டேன் என்றால் அது ஒரு விதமான எதிர் பேரம். அந்த தேதியில் அரிசி என்ன விலைக்கு விற்றாலும் நான் அண்ணாச்சியிடம் 40 ரூபாய்க்கு ஒரு கிலோ என வாங்கியே ஆக வேண்டும். அவரும் அந்த விலைக்கு விற்றாக வேண்டும். அன்றைய விலை 35 ரூபாயாக இருந்தாலும் சரி 60 ரூபாயாக இருந்தாலும் சரி. இதுவே சற்று வேறு விதமாக ஜூலை இறுதியில் ஒரு கிலோ அரிசியை 40 ரூபாய்க்கு நான் கேட்டால் தரவேண்டும் என மாற்றி ஒப்பந்தம் செய்து கொண்டால் அது விருப்பப் பேரமாகிவிடும். இதில் வர்த்தகம் செய்யப்படுவது ஜூலை இறுதியில் 40 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியைக் கேட்கக்கூடிய உரிமை மட்டுமே. அன்று அரிசியின் விலை நிலவரத்தில் கணக்கில் கொண்டு நான் 40 ரூபாய்க்கு வாங்கவோ அல்லது வாங்காமல் இருக்கவோ எனக்கு உரிமை உண்டு. இவ்வித பேரங்களில் இவ்வுரிமையை வாங்குபவர், அந்த உரிமையை விற்பவருக்கு ஒரு தொகை தந்தாக வேண்டும்.
பொதுவாக இது போன்ற வர்த்தகத்தில் இரு விதமானவர்கள் ஈடுபடுவார்கள் - அந்தத் தேதியில் அந்த பொருள் தமக்குத் தேவை என நினைப்பவர்கள் (Hedgers) அல்லது ஊக வியாபாரம் செய்பவர்கள் (Speculators) . ஒருவர் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து புதரகம் செல்ல திட்டமிட்டு இருந்தாரென்றால் இன்றே புறப்படும் பொழுது ஆயிரம் புதரக டாலர்களை, ஒரு டாலர் 35 ரூபாய் என பேரம் பேசி ஒப்பந்தம் ஒன்று செய்தாரானால் அது முதல் வகை. டாலரே தேவை இல்லாத ஒருவர் பிற்தேதியில் டாலரின் மதிப்பு அதிகமாகலாம் என நினைத்து தனக்குத் தனியாக தேவை இல்லை என்றாலும் கூட இன்றே குறைந்த விலைக்கு அதனை வாங்க ஒரு எதிர் பேரம் செய்தாரானால் அது இரண்டாம் வகை.
இந்த இரண்டாம் வகைப் பேரங்களினால் கூட ஒரு பொருளின் விலை அதிகமாகக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இது போன்று செயற்கையான விலையேற்றங்களைக் குறைப்பதற்காக அரசாங்கம் இது போன்ற எதிர் பேர ஒப்பந்தங்கள் மீது பல வித கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. சமீப கால விலையேற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக பல பொருட்களில் எதிர் பேரங்களே கூடாது என்றும் கூட கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துவிட்டது இந்திய அரசாங்கம். இதன் பகுதியாக சென்ற வாரம் சோயா எண்ணை, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை மற்றும் ரப்பர் ஆகியவற்றில் எதிர் பேரங்கள் கூடாது என அரசாங்கம் ஆணை பிறப்பித்து இருக்கின்றது.
தலைப்பில் கடைசி நான்கு வார்த்தைகளுக்கு பதிவில் விளக்கம் தந்தாயிற்று. அடுத்து அமீரக இந்தியர்கள் என்ன ஆனார்கள் என்று பார்க்கலாமா? அவர்கள் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை வைத்து இருக்கின்றார்கள். சமீப காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து விட்டதால் அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் அந்நிய செலாவணியின் மதிப்பு குறைந்து விட்டதாம். இதனால் இந்திய அரசாங்கம் இதற்குப் பொறுப்பேற்று அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டுமாம். உதாரணத்திற்கு ஒரு டாலருக்கு 50 ரூபாய்கள் கிடைத்தது போய் இன்று 40 ரூபாய்கள்தான் கிடைக்கிறதாம். இந்த பத்து ரூபாய் நட்டத்தை அரசாங்கம் ஈடு கட்ட வேண்டுமாம். என்ன வாசாப்பு ஐயா இது?
இந்த ஈடு கட்டலுக்கு நீங்கள் என்ன இந்திய அரசாங்கத்துடன் ஒரு எதிர் பேரமா செய்து கொண்டு இருக்கிறீர்கள் இந்த நட்டத்தை அவர்கள் தர? இதையே சாக்காக எடுத்துக் கொண்டு 2100 வரைச் சென்ற இன்போசிஸ் பங்குகள் இன்று 1800 ரூபாய்க்குத்தான் விலை போகின்றது. இவ்வீழ்ச்சிக்கு அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையே காரணம். எங்கள் நட்டத்திற்கு ஈடு வேண்டும் என்று ஒரு சாரார் கிளம்பலாம். இன்னும் இது போன்று எத்தனையோ காரணங்களுக்கு மற்றவர்களும் கிளம்பலாம். இதெல்லாம் ரொம்பவே அதிகமாத் தோணலை? இதுவே ரூபாயின் மதிப்புக் குறைந்து டாலருக்கு 60 ரூபாய் ஆனால் இவர்கள் என்ன ஒரு பத்து ரூபாயை வேண்டாம் என்று அரசாங்கத்திற்கா தரப் போகிறார்கள்? என்ன ஒரு பொறுப்பில்லாத பேச்சோ தெரியலை.
செய்தியைப் படிக்கும் பொழுதே சிரிக்கவா அழவான்னு தெரியலை. அந்தத் தெரிவை நீங்களே செஞ்சுக்குங்க.
Showing posts with label அமீரக இந்தியர்கள். Show all posts
Showing posts with label அமீரக இந்தியர்கள். Show all posts
Monday, May 12, 2008
Subscribe to:
Posts (Atom)
