Showing posts with label யோகா. Show all posts
Showing posts with label யோகா. Show all posts

Friday, March 21, 2008

பிரம்ம ரசம் பொங்க சூப்பர் மூளைப் பயிற்சி!!

நம்ம வவாசங்கத்தினர் அவங்களோட ரெண்டாவது வயதைக் கொண்டாட பிரம்ம ரசத்தை ஓடவிடும் போட்டி ஒண்ணை அறிவிச்சு இருக்காங்க. கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டியில் ஜெயிக்க உங்களுக்கு உதவலாமே என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்தப் பதிவு. இந்தப் பதிவில் நான் சொல்லித் தரப் போவது ஒரு எளிமையான உடற்பயிற்சி. இதை தொடர்ந்து செய்து வந்தீங்கன்னா உங்க மூளைக்கு அதிக அளவில் சக்தி கிடைத்து சூப்பர் மூளையாகிடுமாம். அது என்ன அப்படின்னு பார்க்கறதுக்கு முன்னாடி எதுக்காக உடற்பயிற்சி அப்படின்னு பார்க்கலாம்.

உடற்பயிற்சி என்பது வெறும் உடலுக்கு மட்டும் இல்லாது மூளைக்கும் பயன் தரக்கூடியது என சமீப காலத்தில் கண்டுபிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். மறதியைக் குறைத்து நினைவாற்றலைப் பெருக்குமாம். அப்படியே மனதை ஒருமுகப்படுத்துவது, அல்சைமெர்ஸ் போன்ற வியாதிகள் வருவதைத் தாமதப்படுத்துவதுன்னு ஏகப்பட்ட பயன்கள் உள்ளனவாம். எப்படின்னா உடற்பயிற்சியின் மூலம் மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. அதனால் மூளையில் அதிக சக்தி வர ஏதுவாகி அவை நல்ல முறையில் இயங்க உடற்பயிற்சி உதவி புரிகிறதாம். முன்பெல்லாம் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்தால் அவைகளுக்கு மாற்றாக புதிய அணுக்கள் வருவதில்லை என நினைத்திருந்தார்கள். ஆனால் உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல் மற்றும் படிப்புக்கு ஏதுவாக இருக்கும் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதியில் புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன எனக் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

இப்போ நாம அந்த சூப்பர் மூளைப் பயிற்சி என்னன்னு பார்க்கலாம். யோகாசனங்களில் ஒன்றாகக் கருதப்படும் இது அக்யூபஞ்சரின் நலன்களையும் தருதாம். யேல் பல்கலைக்கழகத்தின் யூஜீனியஸ் ஆங் என்பவர் கண்டறிந்து இருக்கும் தகவல் இது. மிக எளிமையான இந்த யோகாசனத்தைச் செய்வது எப்படி என்று பார்க்கலாமா?

1) இடது கையால் வலது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.

2) வலது கையால் இடது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.

3) இப்படிப் பிடிக்கும் பொழுது நம் இடது கை உட்புறமாக உடலின் அருகேயும், வலது கை வெளியிலும் இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் சக்தி மேல் நோக்கிப் பாய்ந்து நம் மூளைக்குப் பயன் தரும்.

4) அப்படி இரு கைகளாலும் காது மடல்களைப் பிடித்துக் கொண்டே, முதுகை நேராக வைத்துக் கொண்டு, முட்டியை மடக்கி குந்த வைத்து எழுந்திருக்கவும். இப்படி உட்காருகையில் மூக்கின் வழியாக சுவாசத்தினை உள்ளே இழுக்கவும். எழுந்திருக்கையில் வாய் வழியாக மூச்சுக் காற்றை வெளியே விட வேண்டும். இப்படி 10 -12 முறையாவது செய்ய வேண்டும்.

சரியாக புரிந்து கொள்ள இந்தப் படத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்!

ஆமாங்க ஆமாம். அதேதான். நம்ம ஊர் தோப்புக்கரணம் போடறதைத்தான் இந்த சூப்பர் மூளைக்கான பயிற்சியா சொல்லறாங்க! இந்த செய்தியின் மூலத்தைப் பார்க்க இங்க போங்க. அதுல மாஸ்டர் சோவா கோக் சூய் என்பவரின் சூப்பர் ப்ரெயின் யோகா என்ற தளத்திற்கு சுட்டி குடுத்து இருக்காங்க. அங்க இதை இன்னும் விளக்கமாச் சொல்லி இருக்காங்க.

எங்க உறவினர் ஒருவர் அனுப்பின இந்த சுட்டியைப் பார்த்துட்டு எங்க அண்ணன் அடிச்ச கமெண்டு - "யோகா எல்லாம் செய்ய வேண்டியதுதாண்டா, ஆனா இந்த யோகாவைச் செய்யும் பொழுது எதிரில் தங்கமணி இல்லாமப் பார்த்துக்குங்க. ஏற்கனவே உங்க பேருஒரு மாதிரியாத்தான் இருக்கு!!" அண்ணன் சொன்னதை அப்படியே சங்கத்து சிங்கங்களுக்கு ஒரு ரிப்பீட்டேய் எனச் சொல்லி, அனைவரும் இந்த யோகாசனத்தை செய்து சூப்பர் மூளை பெற்று நம்ம சங்கத்துப் போட்டியில் வெல்ல வேண்டும் என வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்!