Showing posts with label Management. Show all posts
Showing posts with label Management. Show all posts

Tuesday, December 25, 2007

பூனைக்குட்டி என்ன பூனைக்குட்டி. கொரில்லாவே வெளியே வந்துவிட்டதே!

இந்த பூனைக்குட்டி என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பார்த்த உடனேயே உங்களுக்கு ஞாபகத்தில் வரும் குறிச்சொற்கள் - விருது, OPML, திரட்டிகள், மட்டற்ற சுதந்திரம் என்பவைகளாக இருந்தால் நீங்க ரொம்ப நேரம் இணையத்தில் செலவழிக்கிறீர்கள். தமிழ்மணமேட்டிஸ் என்ற நோய் தாக்கி இருக்கும் வாய்ப்புகள் அதிகம். சனிக்கிழமைகளில் கணினி முன் உட்காராமல் சனி பகவானுக்கு எள் முடி ஏற்றினால் உசிதம். இல்லையென்றால் விருது குடுக்க உனக்கு என்ன தகுதி, நீயென்ன கிழிச்சன்னு கேட்டுக்கிட்டு அலைய வேண்டியதுதான். அப்புறம் நீங்க எதைக் கிழிப்பீங்கன்னு தெரியாம பீதியோட இருப்பாங்க உங்க கூட இருக்கறவங்க. சரி போகட்டும். விஷயத்துக்கு வருவோம்.

ஒரு வாரத்துக்கு முன்னாடி "நச் என்று ஒரு போட்டி" அப்படின்னு ஒரு பதிவு போட்டு இருந்தேன். ஒரு நகர் படம் ஒன்றைக் குடுத்து அதை ஒரே ஒரு முறை பார்த்துவிட்டு இரு கேள்விகளுக்கு விடை அளிக்க சொல்லி இருந்தேன். அதில் முதல் கேள்வியில் ஒரு பந்து தரையில் எத்தனை முறை தட்டப்பட்டது என கவனத்தை ஒரு முகப்படுத்தும்படியாக இருந்தது. அடுத்த கேள்வி வித்தியாசமாக எதாவது ஒரு சம்பவத்தை பார்த்தீர்களா என்றும் கேட்டிருந்தேன்.

நிறைய பேரு நிறையா விதமான பதில்களோட வந்திருந்தாங்க. ஆனா அங்க நடந்த ஒரு வித்தியாசமான சம்பவத்தைக் கவனிச்சு சொன்னவங்க ரொம்ப கொஞ்சம் பேருதான். அது என்ன தெரியுமா? பந்து விளையாடும் அரங்கில் கொரில்லா வேஷம் கட்டிய ஒருவர் நிதானமாக நடந்து வந்து ஒரு ஆட்டம் போட்டுவிட்டுப் போகிறார். ஆனால் இதைச் சொன்னவர்கள் வெகு சிலரே. அவர்களும் கூட முதல் முறை இதை பார்க்காமல், மீண்டும் பார்த்த பொழுதே இதை உணர்ந்து கொண்டதாகச் சொல்லி இருக்கின்றனர். பந்து தரையில் பட்டதை எண்ணும் ஜோரில் இதைப் பார்க்காமல் விட்டவர்கள் அனேகம்.

மீண்டும் ஒரு முறை இந்த நகர்படத்தைப் பார்க்க நினைத்தால் நீங்கள் சொடுக்க வேண்டிய உரல் இது.

இந்த விடியோவை பயன் படுத்துபவர்கள் யார் தெரியுமா? உலகப் புகழ் பெற்ற ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் (சுப்பிரமணியா சாமி நடத்தும் கிளாஸ் எல்லாம் இல்லைங்க) தலைமை பண்புகள் பற்றி எடுக்கப்படும் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ள நகர்படம் இது. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் ஒரு தலைவரின் பண்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றால், ஒரு சிறிய வேலையில் கவனம் செலுத்தும் பொழுது தன் கவனம் முழுவதையும் அதனில் செலுத்தாமல் சுற்றி நடப்பதையும் கவனிக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். When engaged in solving a small problem, the leader should never miss the big picture.

இதனை நேரடியாகச் சொல்லாமல் இப்படி ஒரு படத்தைக் காண்பித்து ஒரு விளையாட்டாக இப்பாடத்தினைச் சொல்லித் தருகிறார்கள். இதனைச் சார்ந்த மற்றொரு பாடம் - Don't sweat the small stuff! அதாவது சிறு விஷயங்களுக்கு தேவையான அளவு கவனம் மட்டுமே தாருங்கள் என்பது. இதற்கும் ஒரு உதாரணம் தருகிறார்கள்.

ஒரு ஜாடி நிறைய பெரும் கற்களைப் போட்டுவிட்டு அந்த ஜாடியில் இதற்கு மேல் எதையாவது போட முடியுமா எனக் கேட்கிறார் ஒருவர். ஜாடி நிறைந்து பெரும் கற்கள் இருப்பதால் முடியாதென்றே மற்றவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த விளையாட்டை நடத்துபவர் கொஞ்சம் அளவில் சிறிய கற்களை எடுத்து அந்த ஜாடியில் போடும் பொழுது அவை அப்பெரிய கற்களின் இடைவெளியில் சென்றுவிடுகின்றன. அதற்கு மேலும் அளவில் சிறியதான கற்களை போட அவைகளும் இடைவெளிகளுக்குள் சென்று விடுகின்றன. இறுதியாக அந்த கற்களுக்கு மேல் முடிந்த அளவு மணலையும் கொட்டுகிறார். கணிசமான அளவு மணலும் அந்த ஜாடியில் சேருகிறது.

அவர் அதற்குப் பின் "இந்த ஜாடியானது உங்களுக்கு இருக்கும் நேரத்தைக் குறிக்கிறது. அதனை முதலில் மணல் போன்ற சிறிய வேலைகளுக்குப் பயன்படுத்தினால் அதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது. ஆனால் அதையே முதலில் பெரிய காரியங்களுக்கு பயன்படுத்தினால் அதன் பின் சிறிய வேலைகளுக்கும் நேரம் கிடைக்கும்." என்று விளக்கம் தருகிறார். இவ்வாறு விளக்கியபின், அதே ஜாடியில் ஒரு பியரையும் ஊற்றினார் இதற்கென்ன பொருள் என்று மாணவர்கள் கேட்டதற்கு எவ்வளவு வேலை இருந்தாலும், பியருக்குக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் நேரம் நிச்சயம் கிடைக்கும் என்றார்.

இப்படி பலவிதமான உதாரணங்களின் மூலம் மேலாண்மை குறித்த பாடங்கள் கற்றுத் தரப் படுகின்றன என்று அவ்விதமான பயிற்சிக்கு சென்ற ஒருவர் என்னிடம் கூறினார். அவர் என்னோடு பகிர்ந்து கொண்டதில் சிலவற்றைத்தான் நான் இந்த இரு பதிவுகளில் பகிர்ந்து கொண்டேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

Wednesday, December 19, 2007

நச் என்று ஒரு போட்டி!

புதிரு போட்டின்னு எதனா செஞ்சுக்கிட்டு இருப்பியே. இப்போ என்னடான்னா புகைப்பட போட்டி, நச் கதை போட்டின்னு நீ பங்கெடுத்துக்கிட்டு புதிர் போடாம இருக்கியே அப்படின்னு நம்ம நண்பர் ஒருத்தர் திட்டுனதுனால இந்தப் பதிவு. இதுவும் ஒரு புதிர்தான், ஆனா வித்தியாசமான புதிர். இந்த புதிரை அதன் முழு சுவாரசியத்தோட விளையாடணமுன்னா நான் சொல்லும் விதிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும். சரியா?

ஒரு உரல் தரப் போறேன். அந்த உரலை சொடுக்கினால் வரும் பக்கத்தில் ஒரு நகர்படம் (அதாங்க வீடியோ) இருக்கும். இதுல ரெண்டு அணியினர், அணிக்கு ஒரு பந்தை வெச்சுக்கிட்டு விளையாடிக்கிட்டு இருப்பாங்க. ஒரு அணியினர் கருப்பு மேலாடையும் மற்றொரு அணியினர் வெள்ளை மேலாடையும் அணிந்து கொண்டிருப்பார்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ரொம்ப எளிமையான ஒரு வேலைதான். இந்த நகர்படத்தை ஒரே ஒரு முறை பாருங்கள். அப்படி பார்க்கும் பொழுது வெள்ளை மேலாடை அணிந்திருக்கும் அணியினர் பந்தினை எத்தனை முறை தரையில் தட்டுகிறார்கள் என எண்ணிச் சொல்ல வேண்டும். கவனமாய் எண்ணுங்கள். அவர்கள் தரையினில் படாமல் தூக்கிப் போட்டு பிடிக்கவும் செய்வார்கள். அதனால் கவனமாக வெள்ளை அணியினர் (எளிதாக வெள்ளை அணியினர், கருப்பு அணியினர் எனச் சொல்லலாம், சரியா) பந்தினை தரையில் எத்தனை முறை தட்டுகிறார்கள் என எண்ணி பின்னூட்டமாய் இடுங்கள்.

நீங்கள் சொடுக்க வேண்டிய உரல் இது.

பார்த்தாச்சா? எண்ணியாச்சா? பின்னூட்டம் போட்டாச்சா? என்னது போடலையா? முதலில் அதைச் செய்யுங்க. நான் சொன்னபடி கேட்டாத்தான் புதிரின் சுவாரசியமேன்னு சொல்லி இருக்கேன் இல்லையா. செய்யுங்க.

செஞ்சாச்சா? இப்போ அடுத்தது. எண்ணச் சொன்னதை சரியா எண்ணினீங்க. வேற என்ன கவனிச்சீங்க? இதை முதலில் காண்பிச்ச நண்பர் ஒருவர் சொன்ன விஷயம் இது - "வெள்ளை அணியில் இருக்கும் பெண் தன்னிடம் பந்து வருகையில் தரையில் ஒரு முறையாவது தட்டிய பிந்தான் அடுத்தவரிடம் தந்தார். மற்றொரு நண்பர் சொன்னது - "வெள்ளை அணியைச் சேர்ந்த ஒரு ஆண் ஒரு தடவை கூட தரையில் பந்தைத் தட்டவே இல்லை." இது போன்று நீங்கள் எதாவது வித்தியாசமாகப் பார்த்தீர்களா? அதனை அடுத்த பின்னூட்டமாகப் போடுங்கள்.

மீண்டும் சொல்கிறேன் ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்துவிட்டு பின்னூட்டங்களை அளியுங்கள்.

வழக்கம் போல் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படாது. ஆனால் நீங்கள் சொன்ன விடைக்கு எனது பதில்கள் வெளியிடப்படும். இந்திய நேரம் திங்கள்கிழமை காலை இந்த புதிருக்கான விளக்கம் வெளியிடப்படும். அப்பொழுது உங்கள் விடைகள் வெளியிடப்படும்.

அந்த பதிவை எதிர்பார்த்திருங்கள். உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது!!