
Freeயா விடு மாமே....

எங்கள் தெருவில் இருக்கும் வீடுகள் எல்லாம், கிராமப்புற அக்கிரகார வீடுகளின் இலக்கணம் மாறாமல், ஓடு வேய்ந்த கூரை, திண்ணை, ரயில் பெட்டிகளைக் கோத்தாற்போல் ஒன்றன்பின் ஒன்றாக அறைகள் என்று நீண்டு செல்லும். இதில் எங்கள் வீடு கொஞ்சம் வித்தியாசப்படும். அது இரண்டு வீடுகளை இணைத்துக் கட்டப்பட்ட ஒன்று. வெளியில் இருந்து பார்த்தால் இரண்டு வாயில்கள், இரண்டு கதவிலக்கங்கள் என்றிருக்கும். ஆனால் பாதி தூரத்தில் இரண்டு வீடுகளும் ஒன்றாகி விடும். இப்படி இரண்டு வாயில்கள் இருந்ததால் இரண்டு திண்ணைகள் உண்டு.
தாத்தா இருந்த வரை, இடப்பக்கத் திண்ணை அவர் ராஜ்ஜியம். மரத்தாலான கணக்குப்பிள்ளை மேஜை ஒன்றைப் போட்டுக் கொண்டு எதோ கணக்கு எழுதுவார். அந்த மேஜையில் மேல் புறம் ஒரு கதவு போல திறக்கும். அதற்குள் பேப்பர் வைக்க, ரூபாய் நோட்டுகள் வைக்க, காசு வைக்க என்று அறைகள் இருக்கும். பேங்கர் மாமா என்று அழைப்படும் அவர் வேட்டியும், மேலுடலை மூடிய அங்க வஸ்திரமும், கோபி சந்தனமுமாய் நெடிய உருவமுமாய் மேஜைக்குப் பின் அமர்ந்திருக்கும் பாங்கே தெருவில் போய் வருபவர்களை ஒரு கும்பிடு போடச் செய்யும், பேங்கர் மாமா எனக் கூப்பிடச் சொல்லும்.
சமயத்தில் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பார். அப்பொழுது வேட்டி மடிப்பில் ஆரஞ்சு வில்லையோ அல்லது பைசா வடிவத்தில் இருக்கும் பிஸ்கட்டோ அள்ளி வைத்திருப்பார். தெருவில் அலையும் சிறார்களுக்கு எல்லாம் அது ஈயப்படும். இதனால் சிறுவர்களிடையே அவருக்கு வில்லைத்தாத்தா என்ற பெயரும் உண்டு. குடும்பத்தில் யாருக்கேனும் குழந்தை பிறந்திருந்தால், மூட்டை நெல்லைப் பிரித்து வைத்துக் கொண்டு தெருவில் போவோர்க்கெல்லாம் ஒரு படி நெல் அளிக்கும் வழக்கம் அன்றிருந்தது.
காலையில் பத்து பத்தரை மணிக்கெல்லாம் சாப்பாட்டுக் கடை முடிந்துவிடும். இன்று போல காலையில் டிபன் பின் மதியம் என்ற வழக்கம் அப்பொழுது கிடையாது. சாப்பிட்ட பின் திண்ணையில் கொஞ்சம் சாய்ந்து கொண்டோ அல்லது நன்றாகவே படுத்துக் கொண்டோ ஒரு தூக்கம் போடும் வழக்கமும் அவருக்கு இருந்தது. அதிகம் வீட்டுக்குள்ளே செல்லக்கூட மாட்டார். சாயங்காலம் காப்பி எல்லாம் திண்ணையில்தான். அதற்குப் பின் அவர் நண்பர்களோடு ஜமா சேர்ந்து கொண்டு சீட்டு விளையாட்டு தொடங்கிவிடும். அவர்களுக்கெல்லாமும் காப்பி பக்ஷணம் என்று உபச்சாரம் நடக்கும். அதெல்லாம் போதாது என்று அவர் மடியில் சொருகி வைத்திருக்கும் டப்பியில் இருந்து மூக்குப்பொடி விநியோகம் வேறு நடக்கும்.
அவர் காலத்துக்குப் பின் திண்ணை அப்பா வசம் வந்தது. ஆனால் அப்பாவுக்கு ஏனோ வலப்பக்கத் திண்ணைதான். மற்றபடி அப்பாவுக்குத் தப்பாத மகனாக அவரும் திண்ணைக் காப்பி, சீட்டாட்டம் என்று காலத்தைக் கழித்தார். காய்கறி விற்பவர், அரைக்கீரை முளைக்கீரை தண்டுக்கீரை என வகைவகையாக கீரை விற்பவர், மோர் தயிர் வெண்ணெய் கொண்டு வருபவர், பேப்பர் போடுபவர் எனத் தெரு வழியாக வியாபாரம் செய்து கொண்டு போகும் அனைவரும் ஒரு நிமிடமாவது எங்கள் வீட்டுத் திண்ணையில் பாரத்தை இறக்கி வைத்துக் கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டுதான் போவர். ஒரு புறம் அவர்களிடம் கறாராகப் பேரம் பேசும் அம்மா, வியாபாரம் முடிந்தது அவர்கள் குடிக்க வெண்ணெய் எடுத்த மோரைத் தருவதும் பழைய துணிகள் இருந்தால் தருவதும் எனக் கருணை வடிவாக மாறிவிடுவார். வியாபாரம் இல்லை என்றாலும் கூட அம்மா எனக் குரல் கொடுத்துக் கொண்டு அவர்கள் ஆஜராகாமல் போனதே இல்லை.
பெரியவர்கள் அப்படி என்றால் சிறுவர்களுக்குத் திண்ணைகள் எல்லாம் விளையாட்டுத் திடல்கள். தாயம், ஆடுபுலி ஆட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள், சீட்டு, செஸ், கேரம் போர்ட் என்று நவீன விளையாட்டுகள், ஒரு சுவரில் துணியைக் கட்டி திரைப்பட அரங்கில் கெஞ்சிக் கூத்தாடி வாங்கி வந்த பிலிம்களை வைத்துப் படம் காட்டுதல் என்று விதவிதமாக விளையாடுவது உண்டு. திண்ணைக்குக் கீழ் இருக்கும் சுவரில் செங்கல்லால் ஸ்டம்ப் வரைந்து அதன் முன் பேட்ஸ்மன் இருக்க, விக்கெட் கீப்பர் திண்ணையில் சப்பளமிட்டு அமர்ந்து விளையாடும் விநோதமெல்லாம் ஊரில் உண்டு.
![]() |
| கையை விட்டுப் போன பின் அழகு அழிந்து போன எங்கள் வீடு. |
தொலைக்காட்சிப் பெட்டிகள் வரத் தொடங்கிய காலத்தில் அவை திண்ணைக்கு அடுத்து இருக்கும் அறையில்தான் வைக்கப்பட்டிருக்கும். அந்த வீட்டில் உள்ளவர்கள் தங்கள் நெருங்கிய நண்பர்களோடு அறையில் உட்கார்ந்து பார்க்க, எங்களைப் போன்ற அரை டிக்கெட்டுகள் திண்ணையில் அடித்துப் பிடித்து அமர்ந்துகொண்டு அங்கிருக்கும் ஜன்னல் வழியாகப் பார்ப்போம். மாலை நேரங்களில் மின்சாரம் போய்விட்டால் தெருவில் இருக்கும் அனைவரும் திண்ணைக்கு வந்துவிடுவர். வயதான ஆண்கள் ஒரு வீடு, வயதான பெண்கள் ஒரு வீடு, இளம் வயதுப் பெண்கள் வேறு ஒரு வீடு எனப் பிரிந்து அவரவர் வயதுக்கேற்ற அரட்டையை அடித்துக் கொண்டிருப்பார்கள். ஆண்கள் எல்லாரும் ஒரு வேட்டியை விரித்துக்கொண்டு திண்ணையிலேயே படுத்துத் தூங்கவும் செய்வர்.
சில வீடுகளில் வேறு எந்த வேலையும் இல்லாத தாத்தன்மார் திண்ணையில் அமர்ந்து கொண்டு தெருவில் போவோரிடம் யார், எங்கிருந்து வருகிறார், எங்கே போகிறார், எந்த விஷயமாகப் போகிறார் என்றெல்லாம் ஸ்காட்லாந்து யார்டு லெவலுக்கு விசாரணை நடத்துவர். வேலையாய்ப் போகிறவர்கள் நிற்கவும் முடியாமல் போகவும் முடியாமல் அவஸ்தைப் படுவர். உள்ளிருந்து பாட்டி, என்ன வேலையாய் போகிறார்களோ அவர்களை நிறுத்தி வைத்துக் கொண்டு என்ன நாட்டாமை என்று ஒரு குரல் விட்ட உடன் இவருக்கு விடுதலை கிடைக்கும், சிட்டாய் பறந்து விடுவர்.
தெருவில் இருப்பவர் எல்லோரும் பெரும்பாலும் உற்றார் உறவினராக இருப்பர். அதனால் செய்திருக்கும் பண்டங்கள் இந்த வீட்டுத் திண்ணையில் இருந்து அந்த வீட்டுத் திண்ணைக்கு அனுப்பப்படும். சிறு வயதுப் பயல்கள்தான் பெரும்பாலும் கூரியர் வேலை பார்ப்பர். அவரவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு உள்ளூர் உலகச் செய்திகளோடு தம் வீட்டுச் செய்திகளையும் ஒலிபரப்புவர். இப்படி பல்சுவை விருந்தளிப்பதால்தானோ என்னவோ இப்படி வம்படிப்பதற்குத் திண்ணைக் கச்சேரி என்று பெயர்.
இன்று தெருவில் முக்கால்வாசி பேர் வீடுகளை விற்றுவிட இந்த குடும்பப் பின்னணி குலைந்து போய்விட்டது. வீடு வாங்கியவர்களும் ஒட்டி இருக்கும் வீடுகளை இடித்துவிட்டுத் தனித்தனியாக இருக்கும்படி வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள். திண்ணை இருந்த இடத்தில் இன்று பெரிய கேட் போட்டு மூடிய வண்ணம் பல வீடுகள் இருக்கின்றன.
திண்ணைக் கச்சேரிக்கு மங்களம் பாடியாகிவிட்டது.
தொடக்கப்பள்ளியில் தரையில்தான் உட்கார்ந்து கொள்ள வேண்டும். அந்த சிமெண்டுத் தரையில் உட்காருவதாலும் தேய்த்துக் கொண்டே நகர்வதாலும் போட்டுக் கொண்டிருக்கும் அரை டிராயர்களின் (பூவைப்…) உட்காரும் பகுதி பிரிப்பிரியாக கிழியும். வருட ஆரம்பத்தில் புதுத்துணி எடுத்துத் தந்தாலும் பாதி வருடம் முடிவதற்கு முன் அது பழைய டவுசர் (பூவென்றும்… ) கிழிந்த இடத்திலேயே கிழிந்துவிடும். “உட்காரும் இடத்தில் கத்தியாடா இருக்கு?” என்று வசை அனேகமாக எல்லார் வீட்டிலும் கேட்டிருக்கும்.
யாருக்கேனும் நன்றாகக் கிழிந்துவிட்டால் அன்று பூராவும் அவனைத் தபாலாபீஸ் என்றுதான் அழைப்போம். கையில் கிடைக்கும் பேப்பர், சாக்பீஸ் துண்டு, சிறு கூழாங்கற்கள் என எல்லாவற்றையும் அந்த ஓட்டை வழியாகப் போட்டுவிட்டு சார் போஸ்ட் என்று கூவுவது ஒரு விளையாட்டு. இதிலிருந்து அவன் தப்பிக்கப் பார்ப்பதும், அவனைச் சுற்றி மற்றவர்கள் ஓடுவதுமாகப் பொழுது போகும். இதுதான் சாக்கு என்று அவன் கொஞ்சம் பெரிதாகக் கிழித்துக் கொள்வான், அப்பொழுதுதான் ஒட்டுப் போட்டு விடாமல் புது டௌசர் ( புய்ப்பம் என்றும்…) கிடைக்கும் என்பது அவன் எதிர்பார்ப்பு. ஆனால் பெரிய ஒட்டுப் போட்டுக் கொண்டு அந்த அரைக்கால்சட்டை (நீங்க சொல்ற மாதிரியும்..) மீண்டும் சுழற்சிக்கு வரும்.
இத்தனைக்கும் இன்றிருப்பது போல் நைஸான துணிகள் எல்லாம் கிடையாது. அது ஒரு முரட்டுத் துணி, காக்கிக் கலரில் இருக்கும். அதையும் கூடக் கிழிக்க முடிவது என்பது ஒரு தனித்திறமைதான். இதில் என் பாடு கொஞ்சம் பரவாயில்லை. என் அண்ணன்மார் வயதில் பெரியவர்கள் என்பதால் அவர்கள் போட்டுக் கொண்டது மறுசுழற்சி முறையில் எனக்கு வராது. ஆனால் சில வருடங்களே மூத்தவர்கள் வீட்டில் இருந்தார்களேயானால் அவர்கள் போட்டுக் கொண்ட துணிதான் வழி வழியாக வரும். கொஞ்சம் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் ‘Ship of Theseus’ என்று சொல்லப்படும் கதையில் வருவது போல எது அசல் துணி எது ஒட்டு என்று தெரியாத வகையில் ஒரு கதம்பமாகப் போட்டுக் கொண்டு வருவார்கள்.
தொடக்கப் பள்ளி விட்டு உயர்நிலைப்பள்ளிக்குப் போன பொழுது சீருடை எல்லாம் நல்லபடியாகப் போட்டுக் கொண்டு வரவேண்டும் என்ற விதிகள் எல்லாம் இருந்ததால் இந்த தபாலாபீஸ் மொத்தமாக இழுத்து மூடப்பட்டுவிட்டது. அதன்பின் கிழிந்த உடைகளை எல்லாம் போட்டுக் கொள்ள சந்தர்ப்பம் வராதது நல்லூழ்தான்.
அமெரிக்காவில் அரசுப்பள்ளிகளில் சீருடைகள் எல்லாம் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. என் பையன் கையில் கிடைத்த சட்டையையும் கால்சட்டையையும் மாட்டிக் கொண்டு கிளம்பிவிடுவான். ஆனால் மகள் அப்படி எல்லாம் செய்ய மாட்டாள். நேர்த்தியான உடைகள், அதிலும் அந்த வண்ணத்திற்கு இந்த வண்ணம் சேரும் சேராது என்று போடும் உடையைத் தேர்ந்தெடுப்பதையே ஓர் அறிவியல் செயல்திட்டமாகச் செய்வாள். அந்த வயதினருக்கே உரிய எதிர்பார்ப்புகள் அவளுக்கு உண்டு. பிரபல நிறுவனங்களின் துணிமணிகளை வாங்கிக் கொள்ள விருப்பபடுவாள். சமயத்தில் விலை அதிகமாக இருந்தால் அவ்வளவு விலைக்குத் தேவையா என்று கேட்பேன். என் நண்பர்கள் எல்லாம் கேட்பதில் கால்வாசி கூட நான் கேட்பதில்லை என்பாள்.
அவளுடைய நெருங்கிய தோழி ஒருவள் அப்படி விலை உயர்ந்த துணிகளை அணிவாள். அவள் போடும் உடைகளில் விலையைப் பற்றி என் மகள் சொல்லும் பொழுது எனக்கு பகீரென்று இருக்கும். அன்றொரு நாள் அந்தப் பெண் வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் போட்டு இருந்த கால்சட்டைதான் என் கவனத்தை ஈர்த்தது. அதில் துணியை விட கிழிந்த பகுதிதான் அதிகமாக இருந்தது. அதுதான் இன்றைய போக்காம், அந்த கிழிந்த துணிக்கு விலை வேறு அதிகமாம். நமக்கென்ன தெரியும்.
அவள் வீட்டுக்குள் நுழைந்த உடனே கையில் இருக்கும் பேப்பரை கிழிந்த இடத்தில் நுழைத்துவிட்டு ‘சார் போஸ்ட்’ என்று கத்த மனம் பரபரத்தது. கந்தல் கதை இருக்கட்டும், நம் கதை கந்தலாகிவிடும் என்பதால் நினைத்ததோடு நிறுத்திவிட்டேன்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் என் மகளுக்கு இந்திய உணவு வேண்டும் அதிலும் தென்னக, தமிழக உணவுகள் இருக்க வேண்டும். எங்கேனும் பயணம் செய்யும் பொழுது கூட மூன்று நான்கு நாட்கள் நம் உணவு கிடைக்கவில்லை என்றால் தோசைக்கடை ஒண்ணைப் பாரப்பா என்பாள். தயிர் சாதத்திற்குத் தொட்டுக்க என்ன பிடிக்கும் என்ற குறிப்புக்குக் கட்டுரை எழுத வேண்டும் என அவளிடம் சொன்னேன். அதற்குப் பதிலாக, “தயிர்சாதத்திற்கு எதுக்குப்பா தொட்டுக்க ஏதேனும்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டாள்.
நான் செய்யும் தயிர்சாதம் அவளுக்குப் பிடிக்கும். அப்படியே சாப்பிடலாம் என்ற விளம்பரம் போல, அதை அப்படியே சாப்பிடுவாள். அந்தத் தயிர்சாதம் பற்றித் தெரிந்து கொள்ள கல்லிடைக்குறிச்சிக்குத்தான் செல்ல வேண்டும்.
மார்கழி மாதம். பனிக்கொட்டும் அதிகாலை நேரம். பஜனைக்கு நேரமாச்சு என்று எழுப்பிவிட்டுவிடுவார்கள். நாங்கள் வசித்த தெரு முனையில் மூன்று கோயில்கள். வாய்க்காலை ஒட்டிப் பிள்ளையார் கோயில். அதற்கு இந்தப் பக்கம் ஒரே சுற்றுச் சுவருக்குள் சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும். இந்த பெருமாள் கோயிலில் ஒரு பஜனை மடம் உண்டு. அங்கிருந்து கிளம்பி கோயில்களைச் சுற்றி இருக்கும் நான்கு தெருக்களில் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே செல்லவேண்டும். சில பெரியவர்கள் முன்னே பாடிக் கொண்டு செல்ல, சிறுவர்கள் அவர்கள் பின்னே அவர்கள் பாடியதைத் திரும்பப் பாடிக் கொண்டே செல்ல வேண்டும். தம் வீடுகளின் வழியே செல்லும் பொழுது பிரதான பாடகர் வைத்திருக்கும் துணிப்பையில் அரிசி போடுவார்கள்.
இப்படி நான்கு தெருக்களையும் சுற்றி வந்த பின்னும் பஜனை மடத்தில் உட்கார்ந்து பாடல்கள் தொடரும். சிறுவர்கள் எல்லாரும் எப்படா முடிப்பார்கள் எப்படா பிரசாதம் கிடைக்கும் என்ற நினைப்பிலேயே அமர்ந்திருப்போம். புளியோதரை, எலுமிச்சை சாதம், எள்ளு சாதம் என கலந்த சாதம் ஏதாவது கிடைக்கும். கூடவே தயிர் சாதம். தொன்னை (இலைகளால் செய்த கிண்ணம்) வழிய இரண்டையும் தருவார்கள். அது தனித்தனியாக எல்லாம் இருக்காமல், ஒன்றோடொன்று கலந்து ஒரு புதப் பதார்த்தமாக உருவெடுக்கும். சில நாட்களில் வெறும் தயிர்சாதம்தான் இருக்கும். கையில் பிடிக்க முடியாத சூட்டில் இருந்தாலும் அந்த அதிகாலை குளிருக்கு அருமையாக இருக்கும்.
குழைய வடித்த சாதம். சாதம் வடித்த கஞ்சியால் கொஞ்சம் சொதசொத என்றே இருக்கும். அதை நன்றாகப் பிசைந்து, அதில் போடப்பட்ட கல் உப்பு, கொஞ்சம் பால், கொஞ்சம் தயிர். அவ்வளவுதான். ஆனால் அதன் மேல் தாராளமாக பச்சை மிளகாய், இஞ்சி, உளுத்தம் பருப்பு, கடுகு தாளித்து கொட்டி மேலே கொத்தமல்லித் தழையைத் தூவி இருப்பார்கள். அந்த வாசம் பாத்திரத்தைத் திறக்கும் பொழுதே மூக்கைத் துளைக்கும். வாயில் உமிழ் நீர் ஊறும். வயிற்றில் கடா முடா எனச் சத்தம் வரும். இதை எழுதும் பொழுது கூட பஜனை மடத்தின் பழைய வாசனை, பூ வாசனை, ஊதுப்பத்தி வாசனை, எண்ணெய் விளக்குகளின் வாசனை, அந்த எண்ணெய் பிசுக்கோடு இருக்கும் அழுக்குத்துணி வாசனையோடு இந்தத் தயிர்சாத வாசனையையும் என்னால் முகர முடிகிறது.
அப்படித் தயிர்சாதத்தை வீட்டில் செய்தால் எவ்வளவு செய்தாலும் பாத்திரம் காலி ஆகிவிடும். சட்டென வாயில் அகப்படும் கல் உப்பு, தூக்கலாக இருக்கும் இஞ்சிக் காரம், கொத்தமல்லி வாசம், கடித்துச் சாப்பிட வேண்டிய கஷ்டமெல்லாம் இல்லாத தயிர்சாதத்தை உண்ணத் தொட்டுக் கொள்ள எல்லாம் ஒன்றுமே வேண்டாம். தேவாமிர்தம் தேவாமிர்தம் என்பார்களே, அது கூட இதுக்கு அடுத்த படிதான். “அது என்னவோ நீ செய்வதைப் போல அம்மா செய்வது ருசிப்பதில்லை” என்ற பாராட்டு கொஞ்சம் கூடுதல் ருசியை வேறு தரும்.
![]() |
| நானே சமைச்சதுன்னா நம்பணும்! |
இந்த திராட்சைப்பழம், மாதுளம் பழம், முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை எல்லாம் போட்ட ஹோட்டல் தயிர்சாதம் எல்லாம் கணக்கிலேயே சேர்த்துக் கொள்ளக்கூடாது. சிலர் நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவுவார்கள். அது சாம்பர்வடைக்குப் பொருத்தமே தவிர தயிர்சாதத்திற்குச் சேராது. உள்ளி என நாங்கள் சொல்லும் சின்ன வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறு உப்பில் பிரட்டித் தொட்டுக் கொள்ளலாமே தவிர அதைச் சாதத்தில் எல்லாம் போடக்கூடாது. இந்த சேமியா பகளாபாத் என்ற கொடுமையை எல்லாம் தயிர்சாத வகைகள் வரிசையில் சேர்க்கவே கூடாது.
கலந்த சாதம் செய்தால் அந்தப் புளியோதரைக்கோ எலுமிச்சை சாதத்திற்கோ தயிர்சாதத்தைத் தொட்டுக் கொள்வது உண்டு. ஒரே தொன்னையில் கலந்து கட்டிய நினைவினைக் கிளறுவதாலோ என்னவோ இந்தக் கலப்புப் பிடிக்கும். மத்தபடி ஒரு கரண்டி ரசம், வத்தக் குழம்பு, வடு மாங்காய், ஆவாக்காய் தொக்கு என மாங்காய் ஊறுகாய், பூண்டு, நெல்லிக்காய், உப்பு எலுமிச்சை, கார எலுமிச்சை, ஈர நார்த்தங்காய், காய்ந்த நார்த்தங்காய் போன்ற ஊறுகாய் வகைகள், வேப்பிலைக்கட்டி என வழங்கப்படும் கறிவேப்பிலைக்கட்டி மோர் மிளகாய், கார வேர்க்கடலை, மசாலா வேர்க்கடலை, மிக்ஸர் என்பதை எல்லாம் மற்றவர்கள் சொல்வதுதான்.
மாங்காயைத் தோலைச் சீவி விட்டு பல் போன்ற அளவில் வெட்டி அதில் உப்புக் காரம் போடும் மிளகாய் மாங்காயை ஏனோ யாரும் சொல்வதில்லை. அது போல காலையில் வைத்து மீதமான குழம்பையும் கீரையையும் ஒன்றாகச் சேர்த்து கட்டியான பதம் வரும் வரை கொதிக்க விடும் குழம்புங்கீரையையும் அதிகம் தெரிவதில்லை.
சின்ன வயதில் விடுமுறைக்கு வந்திருக்கும் சொந்தக்காரப்பிள்ளைகள் எல்லாரும் முற்றத்தில் அரைவட்டமாக உட்கார்ந்து கொள்ள ஒரு சட்டியில் தயிர்சாதத்தைப் பிசைந்து, ஒரு கவளம் எடுத்து அதில் தன் கட்டைவிரலால் அழுத்திப் பள்ளமொன்றைச் செய்து, அந்தப் பள்ளத்தில் குழம்புங்கீரையையோ வத்தக்குழம்பையோ நிரப்பி அம்மா ஒவ்வொருவர் கையிலும் தருவாள். அதை வாயில் போட்டு முழுங்குவதற்குள் மற்றவர்களுக்கு ஒரு முறை கொடுத்து மீண்டும் நம் முறை வந்துவிடும். எதேதோ கதைகள் சொல்லி அவள் இப்படித் தரும் பொழுது எவ்வளவு சாப்பிட்டோம் என்றே தெரியாமல் வயிறுமுட்டத் தின்போம். தின்று முடிக்கும் பொழுது தூக்கம் கண்களைச் சுற்றிக் கொண்டு வந்துவிடும்.
தயிர்த்தாய் வாழ்த்து எனச் சொன்ன பின் ஒரு வெண்பாவேனும் எழுத வேண்டாமா.
முன்னொரு நாளெங்கள் முற்றத்தில் வைத்தெனக்கு
அன்னையும் தந்தாள் அமிர்தமதை - அந்தோ
உயிரினும் மேலாம் உறவைத் தொலைத்தேன்
தயிர்சாதம் தந்த தவிப்பு!
அம்மா, முற்றம், அவள் கதைகள், சுற்றி அமர்ந்து உண்ணும் பழக்கம் என எல்லாவற்றையும் தொலைத்தாகிவிட்டது. தயிர்சாதம் ஒன்றுதான் எஞ்சி இருக்கிறது.
“ஐயா ராஜேஷ் அவர்களே, தீபாவளி நெருங்குகிறதே, தங்கள் இல்லத்தில் எத்துணைத் தித்திப்புப் பண்டங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள்?” என்று சங்கத்தமிழில் பேசிக்கொண்டே வீட்டுக்குள்ளே நுழைந்தான் சுரேஷ்.
“என்னடா? தமிழ் எல்லாம் ரொம்ப பலமா இருக்கு? என்ன விஷயம்?”
“நீ வேற கதை, கட்டுரை, புத்தகம்ன்னு எழுத ஆரம்பிச்சுட்டியா? அதான் நானும் நல்ல தமிழில் பேசலாம்ன்னு பார்த்தேன்”.
“நினைச்சது சரிதான். ஆனா நீ பேசின தமிழில் ஒரு குழப்பம் இருக்கே”
“அப்படி என்னடா தப்பாப் பேசிட்டேன்?”
“எத்துணைத் தித்திப்புப் பண்டங்கள்ன்னு ஏன் கேட்ட? எத்தனைத் தித்திப்புப் பண்டங்கள்ன்னு ஏன் கேட்கலை?”
“இது என்னடா பிரச்சனையாப் போச்சு? எத்தனைன்னா பேச்சுத் தமிழ். எத்துணைன்னா இலக்கியத் தமிழ். அவ்வளவுதானே. இதுக்குப் போய் ஏன் இவ்வளவு அலட்டிக்கற?”
“அங்கதாண்டா விஷயமே இருக்கு. எத்தனை வேற, எத்துணை வேற. ஒரு கேள்வி கேட்கறோம். அதுக்கு விடை எண்ணாக இருந்தால் அப்போ கேள்வியில் எத்தனைன்னு இருக்கணும். ஆனா விடை அளவாக இருந்தால் அங்க எத்துணை வரணும்”.
“என்னடா குழப்பற? எனக்குப் புரியற மாதிரி எடுத்துக்காட்டோட சொல்லு”.
“பரோட்டாக் கடைக்குள்ள வந்து சூரி பரோட்டா தின்னுக்கிட்டு இருக்கும் போது அங்க கேட்க வேண்டிய கேள்வி, பரோட்டா சூரி எத்தனைப் பரோட்டா தின்னாருன்னுதான். இங்க எத்துணைப் பரோட்டா தின்னாருன்னு கேட்கக்கூடாது. ஏன்னா இருபத்து மூன்று பரோட்டாக்களை தின்றார், அதுக்கு அப்புறம் கோட்டை அழிச்சுட்டு திரும்பி முதலில் இருந்து ஆரம்பிச்சார்ன்னு சொல்லும் போது உன் கேள்விக்கு விடை இருபத்து மூன்றுன்னு எண்ணிக்கையா வருது பார்த்தியா. அப்போ அங்க கேள்வி எத்தனைன்னுதான் இருக்கணும்”.
“ஓஹோ, இது சரியான மேட்டரா இருக்கே. சரி, நம்பரா பதில் வரும்ன்னா கேள்வி எத்தனைன்னு இருக்கணும். இதே மாதிரி எத்துணைக்கு ஒண்ணு சொல்லு பார்ப்போம்”.
“அவ்வளவுதானே. லவ் டுடேன்னு ஒரு படம். அதுல எஸ்பிபி பாடற பாட்டு ஒண்ணு வரும். என்ன அழகு, எத்தனை அழகு, கோடி மலர் கொட்டிய அழகுன்னு கேட்க ரொம்ப நல்லா இருக்கிற பாட்டு. ஆனா நாம என்ன சொன்னோம். எத்தனைன்னு வந்தா பதில் எண்ணிக்கையில் இருக்கணும்ன்னு சொன்னோம். அப்போ எத்தனை அழகுன்னு கேட்டா அஞ்சு புள்ளி நாலு ஏழுன்னா சொல்லுவோம்? அங்க எத்தனை அழகுன்னு கேட்கக் கூடாது. எத்துணை அழகுன்னுதான் கேட்கணும். பாடல் எழுதின வைரமுத்துவுக்குத் தமிழ் தெரியாதா? அவர் மெட்டுக்கு அமையணும்ன்னு எத்தனை அழகுன்னு போட்டுட்டார். ஆனா ரொம்ப அழகு, மிகவும் பெரியது, ரொம்ப நேரம் ஆச்சுன்னு எண்ணிக்கையில் இல்லாம அளவாக பதில் வரும் இடத்தில்தான் எத்துணைதான் போடணும்”.
“புரியுது, அப்போ இந்த எவ்வளவு அப்படின்னு சொல்லறோமே அது?”
“அது நாம் பார்த்த ரெண்டுக்குமே பொதுவானது. உன் கையில் எவ்வளவு விரல்கள்ன்னு கேட்கலாம்? அதுக்கு ஐந்துன்னு எண்ணிக்கையில் பதில் வரும். எவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்கன்னு கேட்கலாம்? ரொம்ப நேரமா அல்லது கொஞ்ச நேரமாகத்தான்னு பதில் வரும். இதே மாதிரிதான் இத்தனை இத்துணை இவ்வளவு, அத்தனை அத்துணை அவ்வளவு எல்லாமே”.
“நன்றாகப் புரிகிறது ஐயா. எனக்கு இது இனிப் பிரச்சனையல்ல என்று நம்புகிறேன்”.
“ம்ஹூம். பிரச்சனை இருக்கு”.
“ஐயையோ, திரும்ப முதலேர்ந்தா? இப்போ என்ன செஞ்சேன்”.
“இது நீ மட்டும் இல்லைடா, பொதுவாகவே நிறையா பேரு செய்யற தப்புதான். பாக்கெட்ல காசு இருக்கான்னு கேட்டா, இருக்கு அல்லது இல்லை. அவ்வளவுதான். அந்த மாதிரி வேற ஆப்ஷன் இல்லாத இடத்தில்தான் இல்லைன்னு சொல்லணும். கேஸ் தீர்ந்து போச்சா? இருக்கு அல்லது இல்லை. அதோட ஓவர்.
ஆனா, நீ கமல் ரசிகனான்னு அந்த காலத்து ஆட்களைக் கேட்டா அவங்க ரஜினி ரசிகனா இருக்கும் பட்சத்துல நான் கமல் ரசிகனல்லன், ரஜினி ரசிகன்னு சொல்லணும். அங்க நான் கமல் ரசிகனில்லைன்னு சொன்னாச் சரி வராது. அதனாலதான் கவிஞர் எப்படிப் பாட்டு எழுதினார் நான் கவிஞனுமில்லை, நல்ல ரசிகனுமில்லை. அங்க இல்லை, அவ்வளவுதான் அதுக்கு மேல ஒண்ணும் கிடையாது.
ஆனா அவரே வேற ஒரு பாட்டு எழுதும் பொழுது வான் நிலா நிலா அல்ல அப்படின்னு எழுதினாரு. ஏன்னா அதுக்கு மாற்றா அடுத்த வரியில் உன் வாலிபம் நிலான்னு எழுதினாரு பாரு. அப்போ வானத்துல இருக்கிற நிலாவுக்கு மாற்றா வாலிபத்தைச் சொல்லும் பொழுது அங்க வான் நிலா நிலா இல்லைன்னு எழுதலை நிலா அல்லன்னு எழுதினாரு. இதெல்லாம் அவரு பாட்டா எழுதி அதுக்கு மெட்டுப் போட்டாங்களா அல்லது மெட்டுக்கு இவர் பாட்டு எழுதினாரான்னு தெரியாது. ஆனா இலக்கணத்தை மீறாம பாட்டு எழுதினதுனாலதான் அவர் கவிஞர். அவருக்கு ஈடு வேற யாரும் ‘இல்லை’. அவ்வளவுதான் மேட்டர்”.
“இரு இரு. நாம பேச ஆரம்பிச்சது அல்ல, ஆனா நீ சொன்ன உதாரணத்தில் ஏன் ரசிகன் அல்லன்னு இருக்கு?”
“வெரி குட். நல்லாத்தான் கவனிக்கற. அல்ல என்பதை எல்லாத்துக்கும் சொல்லக் கூடாது. பேசப்படறது அஃறிணைப் பொருளா, உயர்திணையா, ஒருமையா, பன்மையான்னு எல்லாம் பார்த்து அதுக்கு எது சரியான சொல்லோ அதைத்தான் பயன்படுத்தணும்.
அஃறிணை ஒருமைன்னா அன்று - நான் பார்த்த ஆடு அதுவன்று”.
“டேய், இலக்கணம் சொல்லச் சொன்னா ஆடுன்னு அரசியலை எல்லாம் இழுக்கற?”
“அடப்பாவி. அக்கிரமம் பண்ணாதீங்கடா. சொல்ல வந்ததைச் சொல்ல விடு.
ஆடு - அன்று. சரியா? அதையே ஆடுகள்ன்னு பன்மையில் சொன்னோம்ன்னா அதுக்குத்தான் அல்ல. நான் பார்த்த ஆடுகள் அவையல்ல அப்படின்னு சொல்லற மாதிரி.
இதையே உயர்திணையை எடுத்துக்கிட்டா மூணு விதம் இருக்கு. ஒருமை ஆண், ஒருமை பெண், பன்மை. இந்த மூணும் வரும் போது அதே வரிசைல அல்லன், அல்லள், அல்லர் அப்படின்னு வரணும். உதாரணத்துக்கு
நான் பார்த்த பெண் இவள் அல்லள்
நான் பார்த்த ஆண் இவன் அல்லன்
நான் பார்த்த காவலர்கள் இவர்கள் அல்லர்.
இப்படி மொத்தம் அஞ்சு விதம் இருக்கு”.
“அல்லன், அல்லள், அல்லரா? எனக்கு இந்த அல்லலே வேண்டாம். தலை சுத்துது. இவ்வளவு குழப்பம் இல்லாத வேற எதையாவது சொல்லுடா”.
“உலகத்துல ஆர்வமா இலக்கணம் கத்துக்கறதுன்னா நீ ஒருத்தனாத்தான் இருப்ப போல”.
“இந்த மாதிரி சினிமா உதாரணமெல்லாம் வெச்சுச் சொல்லித் தந்திருந்தா பள்ளிக்கூடத்தில் தமிழ் வாத்தியாருக்குச் சில்லரய சிதற விட்டு இருக்கலாமேடா”
“மூணாவதா இதையே எடுத்துப்போம். சில்லறையா சில்லரையான்னு பலபேருக்குக் குழப்பம் வரும். பெரிய நோட்டுக்குச் சில்லறை, சின்ன நோட்டுக்குச் சில்லரைன்னு கம்பர் காலத்திலேர்ந்து கடி ஜோக் வேற சொல்லுவாங்க. ஆனா இந்த வார்த்தைக்கு அர்த்தம் புரிஞ்சா இந்தக் குழப்பமே வராது”.
“சரி, சொல்லு. அதையும் தெரிஞ்சுக்கறேன்”.
“முழுசா இருக்கிற ஒண்ணை, சிறிய பகுதிகளா மாத்திக்கறதுக்குப் பேருதானே சில்லறை. ஒரு நூறு ரூபாய் நோட்டுக்குச் சில்லறை குடுங்கன்னு கேட்டா, பத்து பத்து ரூபாய் காயின் வரலாம், அஞ்சு இருபது ரூபாய் நோட்டு வரலாம். அம்பது ரூவா நோட்டு ஒண்ணு, அஞ்சு ரூவா காயின் பத்து கூட கிடைக்கலாம். இல்லையா? இப்படி முழுசா இருக்கிற ஒண்ணைப் பல பகுதிகளாக்கறதுக்குப் பேருதான் சில்லறை.
பகுதிக்கு அறைன்னு ஒரு சொல் இருக்கு. அதனாலதான் முழுசா இருக்கிற வீட்டின் ஒரு பகுதியை சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறைன்னு பிரிக்கறோம். சில அறைகள் என்பதைச் சேர்த்தா சில்லறைன்னு வருது பாரு. அதுதான் சரியான சொல்.
அரைன்னா என்ன? பாதி. மேல சொன்ன மாதிரி நூறு ரூபாய்க்குச் சில்லறை கேட்டா எப்பவுமே சரி பாதியா ரெண்டு அம்பது மட்டும்தான் தருவாங்களா என்ன? அதனால சில்லரைன்னு சொன்னாத் தப்புதான்”.
“சூப்பர்டா. அம்மா ஸ்வீட் ரெடி ஆயிருச்சு வந்து டேஸ்ட் பாருன்னு கூப்பிடுவாங்கன்னுதான் உன் வாயைப்புடுங்கிக்கிட்டு இருந்தேன். வாசனை வருது. ரெடி ஆயிருச்சுன்னு நினைக்கறேன். நான் அங்க போய் என்ன நடக்குதுன்னு பார்க்கறேன். ஓக்கே பை!”