Monday, May 29, 2006

பசும்பழமும் ஜிகர்தண்டா சண்டையும்

கால்கரி பயணம் - முதல் பகுதி , இரண்டாம் பகுதி

சிவா வீட்டுக்குப் போயாச்சு. போன தடவை அவர் வீட்டைப் பற்றி எழுதும் போது ஒரு முக்கியமான ஆளைப் பத்தி எழுத மறந்துபோச்சு. அது அவரு வீட்டில் வளரும் கிளி. அவர்தான் தன்னைப் பற்றிய குறிப்பில் முன்பு தானொரு பறவை ரசிகர் எனக் கூறியிருந்தாரே. அதன் பெயர் நீமோவாம். அழகாய் சுப்பிரமணி, கல்யாணி எனத் தமிழ்ப் பெயர் வைக்காமல் ஏன் இப்படி எனச் செல்லமாய் கடிந்து கொண்டேன். நல்லா பேசுமாம். ஆனால் எங்கள் கொட்டத்தைக் கண்டு அன்று சற்றே அடங்கியேயிருந்தது. என் மகனைக் கண்டவுடன் மட்டும் குஷியாய்க் கத்தத் தொடங்கியது. தன்னைப் போல் ஒரு சிறிய உருவமாய் இருந்ததால் நட்பா அல்லது போட்டிக்கு வந்த மாதிரியான எண்ணமாவெனத் தெரியவில்லை.

அதற்கான அறை, விளையாட்டுச் சாமான், போர்வை என நன்றாக செட்டில் ஆகியிருந்தது. இவ்வகை கிளிகள் 25 வருடங்கள் வரை வாழுமாம். இதோ அவரின் புகைப்படம்.



நீமோவுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு பின் சிவாவின் வீட்டு முகப்பில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தோம். மலையேறிவிட்டு வந்தது களைப்பாக இருந்ததாலும், வெய்யிலின் கொடுமையால் நாக்கு வரண்டு போனதாலும் சிவாண்ணா தங்கள் ஊரின் லோக்கல் சரக்கான கோக்கனி (Kokanee) என்ற பியரை கொடுத்து உபசரித்தார். பின் தங்கக்கழுகு, அரசமீனவன் போல் அதன் பெயரையும் தமிழ்ப் படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார். கோக்கனி என்ற பெயரே தமிழ்தானே என்றவுடன் ஒரு மாதிரி என்னைப் பார்த்தவரிடம் கோக்கனி என்பதன் விளக்கம் பசும்பழம்தானே என்றேன். அவர் ரொம்ப ஓவாராகிவிட்டது என்று அதற்கு மேல் பசும்பழம் வேண்டாமெனக் கூறிவிட்டார். :-)

அடுத்தது சாப்பாடு. பாவம் அவங்க வீட்டம்மா. இவரு வேலைக்கெல்லாம் போக வேண்டாம் வரவங்களப் பார்த்தா நல்லா நாலு விதமா சாப்பிட்டு வளர்ந்தவங்க மாதிரி தெரியுது. அதனால நீ லீவைப் போட்டு நல்லா சமைன்னு சொல்லி இருப்பாரு போல. அவங்களும் வித விதமா சமைச்சு வெச்சிருந்தாங்க. நாங்க ஊரைச் சுற்றி வந்த பசியில் போட்டோ எல்லாம் எடுக்காம புகுந்து விளையாடிட்டோம். சாரி துளசியக்கா, அதையெல்லாம் உங்க கண்ணில் காமிக்க முடியாம ஆகிப்போச்சு. ஆனாலும் மெனு சொல்லறேன் நோட் பண்ணிக்குங்க - காஞ்சீவரம் இட்லி, சட்னி, வெஜிடெபிள் புலவ், ரெய்தா, அப்புறம் நமக்காக அவரு அடி வாங்கி குறிப்பு போட்ட சால்னா (வெஜிடேரியன் வெர்ஷன்). நாங்க எல்லாம் சைவம் என்பதாலும் அன்று அவங்களுக்கு சைவ வெள்ளியாய் ஆனதாலும் கோழி / முட்டை எதுவும் இல்லை. சாப்பாட்டை பற்றி ஒரு வரி. ஒரு வரிதான். நன்றாக வெட்டினோம். திருமதி சிவா அவர்களே, மீண்டும் ஒரு முறை நன்றி.

சாப்பிட்ட களைப்பு தீர இளைப்பாறிவிட்டு, (யோவ், எதுக்குத்தான் ரெஸ்ட் என ஒரு நியாயம் இல்லையா எனத் திட்டுவோர்க்கு. அதுக்கெல்லாம் கால்கரி போய் ஒரு கட்டு கட்டினால்தான்யா தெரியும்!) பிறகு அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஜிகர்தண்டா. அவ்வளவு நேரம் உப்புக்குச் சப்பாணியாய் ஆடிக்கொண்டிருந்த சிவாண்ணா வீறு கொண்டு எழுந்தார். சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் டேபிள் மீது தனக்கு தேவையான சாமான்களைப் பரப்பினார். எனக்கென்னவோ அவருக்கு இதற்கு முன் ஒரு வண்டியில் அடுக்கி வைத்த பிராக்டீஸ் இருந்த மாதிரி ஒரு பீலிங்!

முன்றைய தினம் ஊற வைத்த கடற்பாசியை கிளாஸில் விட்டு அதற்குமேல் நன்னாரி சர்பத்தையும் பாலையும் விட்டு கலக்கி ஜிகர்தண்டா செய்தார். அவரின் குறிப்பில் 'இன்னும் கொஞ்சம் சுவை வேண்டுமென்றால் இதற்கு மேல் வெண்ணிலா ஐஸ்கீரிம் அல்லது 33% விப்பிங் கீரிம் சேர்க்கலாம்' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்குத் தேவையில்லாமல் இப்படி செய்தது நன்றாகவே இருந்தது. என் மனைவியார் ஜிகர்தண்டா குடித்தது அதுவே முதல்முறை. அதனால் அவர் கடற்பாசி வெஜிடேரியந்தானே என கேட்டு உறுதி செய்து கொண்டார். நன்றாகவே இருந்தது என நான் கூறியவுடன், சிவாண்ணா ஒரு முறை காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார். அந்த வட்டக் கழுத்து டீ ஷர்ட்டில் அவர் அதை எப்படி செய்தாரோ தெரியவில்லை.

ஆனால் அவர் மனைவி 'இதெல்லாம் என்ன ஜிகர்தண்டா. பால்கோவா போடாத ஜிகர்தண்டாவெல்லாம் ஒரு ஜிகர்தண்டாவா?' என சவுண்ட் விட்டார். அட, இதைப் பற்றி அண்ணன் பதிவில் ஒன்றும் சொல்லவில்லையே எனக் காதைத் தீட்டிக்கொண்டேன். இவரும் விடாமல் அதெல்லாம் மேட்டுக்குடிகளின் பழக்கம், ஏழைத் தொழிலாளிகள் குடிப்பது இதைப் போன்ற ஜிகர்தண்டாதான் என வாதாட. நிலமை தமிழ்மணம் போல் மாறத் துவங்கியதால் நான் இது நன்றாக இருக்கிறது. அதுவும் நன்றாக இருக்கும் போலவே தோன்றுகிறது என ஒரு சாலமன் பாப்பையாத்தனமான தீர்ப்பைக் கொடுத்து தப்பித்துக் கொண்டேன். மதுரைக்காரய்ங்களா வந்து தீர்ப்பு சொல்லுங்க. இப்படி ஒரு சாப்பாடும் ஜிகர்தண்டாவும் குடித்த பின் நாங்கள் இருந்த நிலையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்ல வேளை அதற்கு முன் அவரின் தோட்டத்தில் எடுத்த ஒரு படம் இருந்ததால் தப்பித்தேன். இதோ எங்கள் நிலை.



அதன்பின் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்களிடம் விடை பெற்றோம். சிவாண்ணா, ஒரு அருமையான மாலைப் பொழுதுக்கு ( சரி, சரி - அதற்கும் மூன்று பதிவெழுத மசாலா கொடுத்ததுக்கும்) நன்றி உங்களுக்கும் உங்கள் இல்லத்தாருக்கும். திரும்பி வரும் போது விமானப்பயணம் ஒரே கூத்து. அதை சொல்லணும்னா தனிப் பதிவுதான் போடணும். ஆனா அப்படி போட்டா உங்களில் நிறையா பேர் உதைக்க வருவீங்க என்பது தெரியும் என்பதால் ஒரே ஒரு வரி. பத்திரமாய் வந்து சேர்ந்தாச்சு. அவ்வளவுதான்.

Thursday, May 25, 2006

தமிழ்மணத் தாக்கமும் கவிப்பூ திறனாய்வும்

கால்கரி பயணம் பற்றிய முதல் பதிவு

நாங்கள் உணவருந்தச் சென்ற இடம் கால்கரியில் உள்ள மைசூர் பாலஸ் என்ற உணவு விடுதி. உள்ளே சென்று அமர்ந்ததும் அவர்கள் தந்த உணவுப் பட்டியலில் அவர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு இருந்தது. அதில் முதல் வரி - "Welcome to Mysore Palace, the South Indian Chettinadu restaurant".



வித்தியாசமானதொரு கூட்டணியாகத் தெரிகிறதா? சற்றே சிந்தித்தால் கூட்டணி என்றவுடன் நினைவுக்கு வருவது அரசியல்தான். அதிலும் மைசூர் என்றவுடன் நினைவுக்கு வருபவர் யாரென்று தெரியாதா? அதே போல் செட்டிநாட்டின் அரசியல் முகம் நமது நிதியமைச்சர்தானே. சரிதான். மற்ற கட்சிகளும் இருக்கிறதா எனப் பார்த்தால் அங்கு உதயசூரியனுக்கு இடமே இல்லை. அவர்கள்தான் இல்லை தமிழ்க்குடிதாங்கி அவர்களின் சின்னமாம் மாம்பழமாவது இருக்கிறதா எனப் பரிமாறுபவரை அழைத்துக் கேட்டால் அதுவும் இல்லை. ஆக முன்னேறிய வருக்கமான பார்ப்பனர்களும் செட்டியார்களும் இடம் பெற்று இருக்கும் அந்த விடுதியிலே ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் போனதேன்? இது அம்மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதியல்லவா? இச்சதிக்கு துணை போகும் அவ்விடுதியின் உரிமையாளர்களுக்கு என்ன முத்திரை குத்த வேண்டுமென நமக்குத் தெரியாதா?

ஒண்ணுமில்லைங்க. இப்போ வரும் தமிழ்மணப் பதிவுகள் எல்லாம் படிச்சு, இப்படித்தான் யோசிக்கத் தோணுது. நான் மாம்பழம் இருக்கான்னு கேட்ட போது என்னை ஒரு மாதிரி பார்த்த சிவா, நான் ஏன் கேட்டேன் என விளக்கியதும் பார்த்த பார்வை இருக்கிறதே. செம காமெடி போங்க. உண்மையை சொல்லுங்க, மைசூர் அரண்மனை என பெயர் வைத்துக் கொண்டு செட்டிநாடு உணவகம் எனச் சொன்னா நல்லாவா இருக்கு? ஆனா உண்மையாகவே அந்த விடுதி மேல கோபம்தாங்க. பின்ன என்ன, தங்கக்கழுகும் இல்லை, மீன்கொத்தியும் இல்லை. சரி நம்ம சரக்குதான் இல்லை, உள்ளூர் சரக்காவது இருக்கான்னு பார்த்தா அதுவும் இல்லை. கடைசியாக அவங்களே முடிவு செய்து தண்ணீரைப் போல இருக்கும் ஹெய்னிகன் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

அந்த உணவுப் பட்டியலின் முதல் பக்கத்தைத் தாண்டிச் சென்றால் அடுத்தது Appetizers எனும் துவக்க உணவுகளின் விபரம். அதில் முதலாவதாக இருந்தது கவிப்பூ வறுவல். கவிதை எழுதினால்தான் அதைப் பிய்த்து பொரித்து எடுக்கிறார்கள் என்றால் இங்கு உண்மையாகவே அதனை வறுத்து கொடுக்கிறார்களே என ஆச்சரியப்பட்டு, அது என்ன என விசாரித்தால் அது காலிஃபிளவர் ஃபிரையாம். காலிஃபிளவரருக்கு கவிப்பூ என கவித்துவமான பெயர் சூட்டிய மகான் யாருன்னு தெரியலை. ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்தால் எங்களுக்கு தமிழில் என்ன சொல்லுவோம் என ஞாபகத்திற்கு வரவில்லை. எனக்கு தெரிந்து பூக்கோஸ் (முட்டைக்கோஸ் போல) எனச் சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கேன். ஆக, கால்கரி சென்றதனால் நானும் சிவாண்ணாவும் காலிஃபிளவருக்கு தமிழ் பெயர் அறிந்து கொண்டோம். இதையும் சிவாண்ணா அவர் பதிவில் என் வருகையால் கிடத்த புதையல் லிஸ்டில் சேர்க்க வேண்டும்.



இதற்குப் பின் விசேஷமாக எந்த நிகழ்வும் இல்லாமல் அன்றைய இரவுணவு முடிந்தது. துளசியக்கா, அங்கு ஒரு மிகப்பெரிய யானை சிற்பமொன்று வைத்திருந்தார்கள். பார்த்தவுடன் உங்கள் ஞாபகம்தான் வந்தது! அதை எப்படி கொண்டு வந்திருப்பார்கள் என்பது என் மனைவிக்கு மிகப் பெரிய கேள்வியாய் இருந்தது. அதிகப்பிரசங்கித்தனமாக பதில் ஏதும் சொல்லாததால் என் தலை தப்பியது. அந்தப் படம் உங்களுக்குத் தனி மடலில் அனுப்பறேன்.

அடுத்த நாள், நாங்கள் திட்டமிட்டபடி பான்ஃப் சென்று வந்தோம். அது Rocky Mountains என அழைக்கப்படும் மலைத்தொடரில் இருந்தது. குளிராக இருக்கும், மழை வருமெனவெல்லாம் பயமுறுத்தினார்கள், ஆனால் நாங்கள் சென்ற அன்று வெயில் காய்ந்தது. ஒரு மலை மீது ஏற Gondola எனும் கம்பி வழி செல்லும் இழுவண்டி ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதை போன்ற வண்டிகளில் நாங்கள் இந்தியாவிலும் மலம்புழா மற்றும் ஹரித்துவாரில் போய் இருக்கிறோம். குஜராத்திலும் ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். அம்மலையில் Sulphur Springs என அழைக்கப்படும் சுனைகள் இருக்கின்றன. வருடமுழுவதும் அங்கு சூடான நீர் வருமாம். அதில் குளித்தால் உடம்புக்கு நல்லதாம். இங்கு எடுத்த படங்களை வேறொரு நாள் பதிவில் போடுகிறேன். (அதாவது எழுத சரக்கு இல்லாமல் போனா படங்காட்டறேன்!)

மலையிலிருந்து கீழே இறங்கி நேராக சிவாண்ணா வீட்டுக்கு போனோம். அங்க என்ன நடந்தது? ஜிகர்தண்டா கொடுத்தாரா? இதெல்லாம் அடுத்த பதிவில். :)

Sunday, May 21, 2006

கால்கரியில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு

நள்ளிரவு நேரம். கால்கரி வந்து இறங்கியாகி விட்டது. மடியில் கனமிருப்பதால் வழியில் பயமாய் இருக்கிறது. விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் எங்களையே பார்ப்பது போல ஒரு உணர்வு. திருட்டு முழியால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என நம்மை நாமே காட்டிக்கொடுத்து விடப் போகிறோமோ என ஒரு பயம். சகஜமாய் பேசிக் கொண்டிருப்பது போல் நடித்தாலும் நெற்றியில் வழிந்து வரும் வேர்வை வெய்யிலினால் இல்லை என்ற உண்மை சுட்டுக் கொண்டே இருக்கிறது. சுங்க சோதனை சாவடிகளைத் தாண்டும் போது இதயத் துடிப்பால் உடம்பு முழுவதும் நடுங்குவது போல் ஒரு உணர்வு. அங்குள்ள ஊழியர் 'தங்கள் வருகை நல்லபடியாக அமையட்டும்' என ஒரு புன்னகையுடன் வாழ்த்தி வரவேற்றது கூட மனதில் படாமல் வெளியே ஓடி வந்து வாடகைக் காருக்கு நிற்கும் பொழுது மெல்ல இதமாய் வருடிச் சென்ற குளிர்ந்த காற்றுதான் எங்களை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தது. நாங்கள் கால்கரிக்குள் நுழைந்து விட்டோம். அதுவும் சிவாவிற்காக கடத்திக் கொண்டு வந்த பொருட்களுடன், யாரிடமும் மாட்டாமல்! இனி நிம்மதியாக விடுதிக்கு சென்று உறங்கலாம்.

யப்பா, கிரைம் நாவல் எழுதற பார்ட்டிங்களா, இப்படி நாலு வரி எழுதறதுக்கு முன்னமே முட்டுது. உங்களுக்கெல்லாம் ஒரு பெரிய கும்பிடு. ஆக மொத்தம் சொல்ல வந்தது என்னன்னா, கால்கரி போயி சேர்ந்தாச்சு. ஒரு பிராபளமும் இல்லை. அய்யா கார்த்திக் அவர்களே, நான் பார்த்த வரை அங்க ஒரு நாயும் இல்லை, நாங்களும் நாய் படாத பாடு படலை. ஆகவே வாங்கி வெச்ச 100 ஊசியையும் வேஸ்ட் பண்ணாம நீங்களே அலகு குத்திக்குங்க.

அடுத்த நாள் மாலை ஒரு போன் போட்டு சிவாவை ஹோட்டல் ரூமுக்கு வரச் சொல்லியாச்சு. அவரும் வேலை நேரம் வரை அலுவலகத்தில் இருந்துவிட்டு அப்புறமா வந்தார். முதலில் ஒரு சிறு அதிர்ச்சி. கோபால் பல்பொடி மற்றும் தமிழ்மணத்தில் அடிக்கடி கூறுவது போலிகளைக் கண்டு ஏமாறாதீர். அதுபோல இன்னும் ஒன்று - போட்டோக்களைக் கண்டு ஏமாறாதீர். அவர், தான் எழுதும் அரபி அனுபவங்களுக்குத் தோதாக இருப்பதால் ஒரு பழைய பஞ்சத்தில் அடிபட்ட போட்டோவைப் போட்டுக்கொண்டு திரிகிறார். ஆள் அப்படி இல்லவே இல்லை. இருந்தாலும் வந்தவர்தான் சிவாண்ணா என நம்பிக்கொண்டு அவரை குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்துவிட்டு என்ன செய்யலாம் என ஒரு சதியாலோசனையில் ஈடுபட்டோம். கடைசியில் அன்று அவருடன் அவரது வீட்டிற்குச் சென்று, பின் அவர் குடும்பத்துடன் வெளியில் சாப்பிடச் செல்வது என முடிவானது.

அவரது இல்லத்திற்கு சென்று அவரது மனைவி மக்களுடன் அறிமுகம் செய்து கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு வலைப்பூக்கள் பக்கம் திரும்பும் போதெல்லாம் மனைவியர் இருவரும் கடுப்பாக பார்க்க, ஆஹா, எல்லார் வீட்டிலும் நிலமை இதுதான் போலிருக்கிறது என சிரித்துக் கொண்டோம். வாரயிறுதியில் செய்யும் வேலைகள் பற்றி பேசும்போது இளவேனிற்காலம் வந்துவிட்டதால் வீட்டைச் சுற்றி இருக்கும் புல்வெளியைக் கொத்தவேண்டுமென கூறினார். சரி, இதுதான் நம் துறையாயிற்றே என இலவச ஆலோசனைகள் சிலவற்றைக் கூறினேன். இலவசமானதால் சிவா சரியாக காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவர் பதிவிலும் சற்று மாற்றி எழுதிவிட்டார். சரியான ஆலோசனைக்கு அணுகவேண்டிய முகவரி - elavasam.blogspot.com. (ஆமாங்க, இந்த மாதிரி எல்லாம் பொடி வைக்கலைன்னா பின்னூட்டம் வாங்கறது எப்படி?)

பிறகு அடுத்த நாள் என்ன செய்யாலாம் என அவரைக் கேட்டு பான்ஃப் (Banff) எனும் மலைவாசஸ்தலத்துக்குப் போய் வரலாம் என முடிவு செய்தோம். ஆனால் கால்கரி மொத்தத்திலும் ஒரு வாடகை கார் கூட கிடைக்கவில்லை. திங்களன்றும் விடுமுறையாம் அதனால் தீர்ந்துவிட்டதாம். சரியென்று ஒரு பேருந்தில், (அட, சரிங்க. உண்மையைச் சொல்லறேன். சொகுசுப் பேருந்துதான்.) முன்பதிவு செய்துவிட்டு சாப்பிடக் கிளம்பினோம்.

அங்கு சென்றால் இரு வேறு உணர்வுகள். திராவிட பாரம்பரியத்தை திட்டமிட்டு புறக்கணிக்கும் ஒரு வேண்டத்தகாத சதி உலகெங்கும் நடப்பது நாமனைவரும் அறிந்ததே. அது கால்கரியிலும் வேரூன்றியிருப்பதை அறிந்த போது என் மனம் சொல்லெண்ணாத் துயருற்றது. அதே சமயத்தில் தமிழ் வளர்ப்பதில் கால்கரி யாருக்கும் சளைக்கவில்லை என அறிந்த போது என் மனம் ஆனந்தக் கூத்தாடியது. இவைகள் பற்றி அடுத்த பதிவில்.

பி.கு. : இக்கட்டுரையின் தலைப்பு திரு.மாயவரத்தான் அவர்களுக்கு சமர்ப்பணம்.

Sunday, May 07, 2006

கொத்ஸு பரோட்டா

என்னடா இவன் இப்படி ஒரு பதிவு போடறானேன்னு பார்க்காதீங்க. இதுக்கு பின்னாடி இருக்கற காரணங்களை முதல்ல சொல்லறேன். ஆபிஸில் ரொம்ப வேலை, எழுதறத விடுங்க தமிழ்மணம் பக்கம் வந்து படிக்கக்கூட முடியலை. அதனால பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. நம்ம ரசிகர்கள் எல்லாம் வேற என்ன ஆச்சு, என்ன ஆச்சுன்னு மெயிலும் போனுமா ஒரே அன்புத் தொல்லை. அது மட்டுமில்லாம இந்த தேர்தல் ஜுரத்தில் வேற எந்த பதிவு போட்டாலும் எடுபட மாட்டேங்குது. இதெல்லாம் விட்டா வீட்டுல வேற ஒரு வேலையும் பண்ணறது இல்லைன்னு கம்பிளெய்ண்ட். பதிவு எழுதறதா அல்லது வீட்டு வேலை பாக்கறதா? நீங்களே சொல்லுங்க.

சென்ற வாரம் ஒரு நாள் சப்பாத்தியும் சாதமும் அலுத்துப் போச்சு. வேறேதாவது செய்யலாமே என சொல்லப்போக, வந்தது வினை. நீங்களே செய்யுங்களேன் என சீறிப் பாய்ந்தது ஒரு ஏவுகணை. நுணலும் தன் வாயால் கெடும் (சிலேடை எல்லாம் இருக்குங்க) என நொந்துகொண்டே என்ன செய்வது என யோசித்து பிரிட்ஜை குடையும்போது முன்பு வாங்கி வைத்திருந்த குளிருறைக்கப்பட்ட (அதாங்க frozen) பரோட்டா பாக்கெட் ஒன்று கண்ணில் பட்டது. சரிதான் இதை வைத்து எதாவது செய்யலாம் என முடிவு பண்ணி கையில் கிடைத்தவையெல்லாம் போட்டு செய்த பதார்த்தம்தான் கொத்ஸு பரோட்டா. நாங்க சாப்பிட்டோம் நல்லா இருந்தது, பக்கத்து வீட்டு நண்பர் கோபி வேற வந்து சூப்பரா இருக்குன்னு உசுப்பேத்தி விட்டுட்டார். ஆகவே மக்களே உங்களுக்காகவே கொத்ஸு பரோட்டா செய்முறை. நல்லா இருந்தா இங்க வந்து சொல்லுங்க, நல்லா வரலைன்னா உங்களுக்கு செய்யத் தெரியலை. என்கிட்ட மீண்டும் எப்படி செய்யணும்ன்னு கேளுங்க. சொல்லித்தரேன்.

முதல்ல என்ன வேணும்ன்னு ஒரு லிஸ்ட் போடுவோமா?

  • Frozen பரோட்டா - 1 பாக்கெட்.
(இது கிடைக்காதவங்க பக்கத்து ஹோட்டலில் வாங்கிட்டு வந்திருங்க. அப்படி நாந்தான் பண்ணுவேன்னு அடம் பிடிக்கறவங்க எப்படி செய்யணும்னு இணையத்தில் தேடிப் பார்த்து பண்ணிக்குங்க.)
  • வெங்காயம் - 2 (கொஞ்சம் பெரிய சைஸ்)
  • தக்காளி - 1 (இதுவும் பெருசுதான்)
  • முட்டை - 3 (சைவப் பார்ட்டிகள் இதை சாய்ஸில் விடவும்)
  • இஞ்சி / பூண்டு - சுவைக்கு ஏற்ப. (பேஸ்ட் கிடைத்தாலும் பரவாயில்லை.)
  • பச்சை மிளகாய் - 3
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி, மிளகுத்தூள் - ஒன்றொன்றும் 1/2 தேக்கரண்டி
  • கடுகு, உப்பு, பெருங்காயம், எண்ணை - தேவையான அளவு
சமைக்க கிளம்பறதுக்கு முன்னாடி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் எல்லாத்தையும் சின்ன சின்னதா நறுக்கி வச்சுக்கோங்க. முட்டையை உடைச்சு அடிச்சு வச்சுக்கோங்க. பரோட்டாவை சின்ன சின்னதாய் பிச்சு வச்சுக்கோங்க. இப்போ செய்முறை.

  • வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடிக்கவிடவும்.
  • பின் அதில் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் வெங்காயத்தை போட்டு கிளறவும்.
  • அதன் மேல் மேற்கூறிய பொடிகள் அனைத்தையும் போடவும்.
  • வெங்காயம் வதங்கிய பின் பிய்த்து வைத்த பரோட்டாவையும் போட்டு கிளறவும்.
  • அதன் மேல் உடைத்து வைத்த முட்டையை விட்டு மேலும் கிளறவும்.
  • இவை நன்றாக வதங்கிய பின் தக்காளியை சேர்த்து கிளறவும்.
  • அவ்வளவுதான்! சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்.
இதுக்கும் கொத்து பரோட்டாவிற்கும் என்ன வித்தியாசம், அது என்ன கொத்ஸு பரோட்டான்னு பேருன்னு கேட்கறவங்களே. கொத்து பரோட்டாவில் சால்னா விடணும் அது இல்லைன்னா செய்யறது கொத்து பரோட்டாவே இல்லைன்னு மதுரைக்காரய்ங்க வைவாய்ங்க. அதனாலதான் இந்த பேரு.

ஆங். சொல்ல மறந்துட்டேனே. தொட்டுக்க சில்லுன்னு kingfisher வாங்கி வச்சுக்குங்க மாமோவ்.

Monday, April 03, 2006

குன்றில் குமரனைக் காண் (வெ.வ.வா)

ஒரு பத்து பதினைந்து நாட்களாய் ரொம்ப வேலை. அதில் இரண்டு நாட்களுக்கு மினியாப்போலிஸும் மூன்று நாட்களுக்கு லண்டன் பயணமும் வேறு அடுத்தடுத்து. பயணக் கட்டுரைன்னு நம்ம ரசிகர்கள் எல்லாம் ஒரேடியா தொல்லை. (எழுதிட கிழிதிடப் போற என்று அன்பான வேண்டுகோள் வைத்தவர்கள்தான் அதிகம். ஹிஹி.) ஆனா வெறும் வேலை சம்பந்தப்பட்ட விஜயமாகிப் போனதுனால சுவாரசியமா ஒண்ணும் இல்லை. இருந்தாலும் கொஞ்சம் எழுதலாமேன்னுதான் இந்தப் பதிவு.

முதலில் உள்நாட்டு விசிட். மினியாப்போலிஸில் இரு நாட்களுக்கு வேலை என முடிவானதும் நம்ம குமரனைக் கூப்பிட்டு 'உங்க ஊர் பக்கம் வரேன்யா. நாம சந்திக்கலாம்' அப்படின்னு சொன்னேன். அவரும் பெருசா 'வாங்க வாங்க எப்ப வரீங்க?'ன்னு கேட்டாரு. ஆளு யாஹூ சாட் பண்ணும்போதே அப்பப்போ அப்ஸ்காண்ட் ஆயிடுவாரே, அவருக்கு முன்னமே விஷயத்தை சொல்லிட்டா பார்ட்டி 'ஐயாம் தி எஸ்கேப்'ன்னு காணாம போயிடுவாரேன்னு யோசிக்காம நானும் வந்து போகிற தேதியை சொல்லிட்டேன். குமரனும் கரெக்ட்டா நான் குடும்பத்தோட லாஸ் வேகஸ், லாஸ் ஏஞ்சலஸ், லாஸ்(ட்டா) டிஸ்னிலேண்ட் என ஒரு டூர் போறேனே அப்படின்னு சொல்லிட்டாரு. சொன்னா மாதிரி காணாமலும் போயிட்டாரு. குமரன், சும்மா டமாஸுக்கு. நீங்க வேற கோச்சுக்காதீங்க. ஸ்மைலி எல்லாம் போட்டுடறேன். :) :) :)

ஆக மொத்தம் விசேஷமாய் அந்த ஊரில் ஒண்ணும் பண்ணலை. நம்ம சிவ புராணம் சிவாவுக்கு மட்டும் போன் பண்ணி பேசினேன். அவர் பேசி கேட்கும்போதே 'அமெரிக்க கண்டமிது ஆனாலுமே, நெல்லைத் தமிழ் வந்து பாயுமே காதினிலே'ன்னு மனசுக்குள்ள ஒரு கும்மாளம், கொண்டாட்டம். எங்கேயோ ஒரு இடத்தில வந்து நம்ம ஊரு பாஷையை கேட்கறதுன்னா சும்மாவா? என்ன மக்கா, நாம சரியாத்தானே சொல்லுதோம். அவரைப் பார்க்கத்தான் முடியாம போயிருச்சு. இவ்வளவுக்கும் அவர் ஆபீஸ் பக்கம் இருக்கற ஒரு பில்டிங்கில்தான் இருந்திருக்கிறேன். அடுத்த முறை கட்டாயம் போய் பார்க்க வேண்டும்.

இந்த ஜீவா வெண்பா வடிக்கலாம் வான்னு கூப்பிட்டாலும் கூப்பிட்டார். இப்போ கிட்டத்தட்ட ஒரு பயித்தியம் பிடிக்கற லெவலுக்கு அடிக்ட்டாயாச்சு. இந்த பதிவையே வெண்பாவா எழுதலாமான்னு யோசிக்கற நிலமைக்கு கொண்டு போய் விட்டுட்டாரு. இப்படி ஆரம்பிச்சு விட்டுட்டு அவர் மட்டும் ஹாயா லீவு போட்டுட்டு போயிட்டார். ஈற்றடி இல்லாம இப்போ நமக்குத்தான் நமநமன்னு இருக்கு. நம்மளை மாதிரி ஒரு நாலு பேராவது இருக்க மாட்டாங்களா? அவங்களுக்கு ஒரு உதவியா இருக்கட்டுமேன்னு ஜீவா வர வரைக்கும் நம்ம இந்த வெண்பா வடிக்கலாம் வா விளையாட்டை இங்க வச்சுக்கலாம். ஜீவா, உங்க பதிவை ஹைஜாக் பண்ணறேன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்க வந்த உடனே ஹேண்டோவர் பண்ணிடறேன்.

இந்த பதிவுல குமரனை பார்க்க முடியாததை குறிக்கும் படியாக 'குன்றில் குமரனைக் காண்' என்ற ஈற்றடி கொண்டு விளையாடலாம். ஜிரா, குன்று குமரன்னு எல்லாம் எழுதியிருக்கேன், மரியாதையா வந்துருங்க. ஆமா. முதல்ல நம்ம போணி.

மலையில்லா மாநகர்மி னீயாப்போ லீஸில்
அலைந்தேன் குமரனைத் தேடி - வலைப்பதிவீர்!
சொன்னார்கள் காலத்தே சான்றோர் சரியாக
குன்றில் குமரனைக் காண்.

Thursday, March 30, 2006

Voipstunt - வெறும் ஸ்டண்ட்?

Voipstunt . இப்பொழுது இணையத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சேவை இது. கணினியிலிருந்து கிட்டத்தட்ட ஐம்பது நாடுகளில் உள்ள தொலைபேசிகளை இலவசமாக அழைக்க முடியும் என்பதுதான் இந்த சேவை. இந்த நாடுகளில் இந்தியர்கள் அனேகம் பேர் வசிக்கும் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் அடக்கமென்பதால் அதிக அளவில் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தளமாய் விளங்கி வருகிறது. நமது தமிழ் மணத்தில் கூட ஒரு நண்பர் இதைப் பற்றி எழுதியிருந்தார்.

உலகெங்கிலும் இலவச தொலைபேசி அழைப்புகள், 100% சதவிகிதம் இலவசம், என பெரிய எழுத்துகளில் விளம்பரம் செய்யப்படுகின்ற ஒரு தளம் இது. இவர்களின் முதற் பக்கத்திலேயே கிட்டத்தட்ட 10 இடங்களில் இலவசம், முற்றிலும் இலவசம் போன்ற வார்த்தைகள் வருமாறு அமைக்கப் பட்டுள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மையான ஒரு கூற்று என்பதைப் பார்ப்போம். இணையத்தில் இருக்கும் நண்பர்கள் மட்டுமின்றி பதிவிடப்பட்டிருக்கும் நாடுகளில் உள்ள தொலைபேசி எண்களை இலவசமாக அழைக்கலாம் என்னும் விளம்பரத்தின் கீழே பொடி எழுத்துகளில் தெரியப்பட்டிருக்கும் விதிமுறைகள் கீழ் வருமாறு.

'இத்தளத்தைத் தவறாக பயன்படுத்த இயலாமல் செய்வதற்காக இலவசமாக அழைக்கக்கூடிய வசதி ஒரு நிமிடத்திற்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. அதற்குமேல் இவ்வசதியை வேண்டுவோர், ஒரு நிலுவைத்தொகையை செலுத்தவேண்டும். இந்தத்தொகை நீங்கள் வெறும் இலவச சேவையை மட்டும் உபயோகிக்கும் வரையிலும், அதிகபட்சமாக 120 நாட்கள் வரையிலும் தொடப்படமாட்டாது.'

அதாவது 120 நாட்களுக்குப் பின் இத்தொகை அவர்களைச் சேர்ந்துவிடும். குறைந்த பட்சமாக 10 யூரோவாவது செலுத்தப்பட வேண்டும். ஆக மொத்தம், 120 நாட்கள் இந்த இலவச சேவையை உபயோகிக்க 10 யூரோ கொடுக்க வேண்டுமாம். ஆனால் இது இலவச சேவையாம். எப்படி இருக்கிறது பாருங்கள் இந்தக் கதை. இந்த மாதிரி தவறுதலாக வழி காட்டக்கூடிய விளம்பரங்களை எதிர்த்து யாரேனும் தட்டிக் கேட்க வேண்டாமோ? 'There is no such thing as free lunch' என்னும் கூற்றைத்தான் இத்தளம் மெய்ப்பிக்கின்றது.

இதை ஒட்டி நான் முன்னமே எழுதிய ஒரு பதிவையும் இப்பொழுது மீள்பதிவு செய்கிறேன்.

மொத்த ஆளுமை விலை

முன்பெல்லாம் வன்பொருள் வாங்கினால் பல்வேறு மென்பொருட்களை இலவசமாக தருவார்கள். இன்றைக்கோ நிலமை தலைகீழ். வன்பொருள் விலைகள் சடசடவென சரிய, மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதுவும் சில சமயம் சகாய விலையில் கிடைத்தாலும், upgrade செய்யும் பொழுது மூக்காலே அழ வேண்டியிருக்கிறது. ஜோசஃப் சாரை இது பற்றி விரிவாய் ஒரு பதிவு போட சொல்ல வேண்டியதுதான்.

மென்பொருள் என்றில்லை. ப்ரிண்டர்களை கிட்டதட்ட இலவசமாகவே கொடுத்து பின் அதற்கான கேபிள், மசி என்று கடனட்டையை நிரப்ப செய்யும் வியாபார யுக்திகள். இன்னும் சில தளங்களில், இலவசமாக உங்கள் புகைப்படத்தை அச்சிட்டு தருகிறோம், வெறும் தபால் கட்டணம் தந்தால் போதுமென விளம்பரம் செய்து பல மடங்கு கட்டணம் வசூல் செய்யும் வசூல்ராஜாக்கள். எங்களிடம் இரு வருட சேவைக்கு ஒப்பந்தம் செய்து கொண்டால், இலவசமாய் razrயும் rockrயும் தருவோம் எனச்சொல்லி அதிக விலை திட்டங்களை தலையில் கட்டும் தொ(ல்)லைபேசி நிறுவனங்கள்.

இங்கு இதெல்லாம் போதாதென்று mail in rebate என்று ஒரு கொடுமை. (இதற்கு தனிப்பதிவுதான் போடவேண்டும்.)

எதற்காக இதெல்லாம் சொல்கிறேன் என்றால், இலவசமாய் கிடைக்கிறது, சகாய விலையில் கிடைக்கிறது என்று எதையாவது வாங்கிவிட்டு அதற்கு தீனி போட்டு கட்டுப்படியாகாமல் கஷ்டப்படாதீர்கள்.

ரொம்ப சீரியஸாய் போச்சோ? வீட்டில் உள்ள (இலவசமாய் கிடைத்த) பிரிண்டரில் மசி தீர்ந்துவிட்டது. புதிய மசி தோட்டாவிற்கு (cartridge என்றால் தோட்டா தானுங்களே) கொடுத்த விலையை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. அதான். :)

இதற்கு பின் இன்றைய இலவசமாய் ஒரு நகைச்சுவை துணுக்கு. சற்றே அசைவ வகை. ஆகவே பிடிக்காதோர் மன்னித்துவிட்டு அடுத்த பதிவிற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை ஆங்கிலத்திலே சொல்வது சற்றே எளிதாக இருக்கிறது. ஆகவே மற்றுமோர் மன்னிப்பு.

"There is sex for money and there is sex for free. And sex for free costs more!"

புரிந்ததா. இதைத்தான் TCO - Total Cost of Ownership (தமிழிலே என்னங்க?) என்று குறிப்பிடுகின்றனரோ.

Monday, March 13, 2006

கணக்கொன்று போட்டேன்

அலுவலகத்தில் பணி கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதனால் புதிதாகப் பெரிய பதிவொன்றும் போட முடியவில்லை. ஆனாலும் நண்பர்கள் வருகை இருப்பதை StatCounter மூலம் பார்க்கிறேன். அவர்கள் ஆவலுக்காக ஒரு சிறிய புதிர்.

பி.பி.சி.யில் பாட்டொன்று கேட்டேன் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. அந்நிகழ்ச்சியை நடத்துபவர், 'பாட்டொன்று கேட்டேன்' என்று மிக அழகாக சொல்லுவார். அதைப் கேட்டதிலிருந்து அதைப்போலவே ஒரு தலைப்பு வைக்க ஆசை. வைத்தாகிவிட்டது. அவர் சொல்வதைப் போலவே ராகமாய் படித்துக் கொள்ளுங்கள்.

நண்பர் பாலராஜன்கீதா அவர்கள் தனிமடலில் இப்புதிரினை அனுப்பி, வேண்டுமென்றால் பதிவிலும் போட்டுக்கொள்ளுங்கள் என அனுமதியும் தந்தார். நன்றி நண்பரே.

நான் போட அதிக சமயம் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், நன்றாக இருந்ததால் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணம். நீங்களும் முயன்று பாருங்களேன். பதிலை மட்டும் தராமல் போட்ட விதத்தையும் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

வழக்கம்போல் விடைகள் உடனடியாகப் பதிவிலிடப்படா. சரியா தவறா என்ற எனது பதிலே பதிவிலிடப்படும். இப்பொழுது புதிர்.

அ + ஆ = இ
ஈ - உ = ஊ
எ = ஏ X ஐ

இங்கு அ முதல் ஐ வரையான எழுத்துகளுக்கு 1லிருந்து 9 வரையான எண்களைப் பொருத்த வேண்டும். ஒரு எழுத்துக்கு ஒரு எண்தான் வரும். எல்லா எண்களும் ஒரு முறை வர வேண்டும். பொருத்திய பின் மேலிருக்கும் சமன்பாடுகள் சரியாக வருமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அது மட்டுமல்லாது இ / ஊ = ஐ என்ற சமன்பாடும் சரியாக வரவேண்டும்.

எங்கே முயலுங்களேன். மறக்காமல் போட்ட விதத்தையும் சொல்லுங்கள்.

Sunday, March 05, 2006

ஒரு வாரமாய் பௌர்ணமி

இப்படித்தான் சொல்லத் தோணுது. பின்ன நம்ம நிலா இந்த வாரம் பூரா இப்படி ஒளி வீசும்போது பௌர்ணமி இல்லாம என்னவாம். வாழ்த்துக்கள் நிலா.

படமெடுத்து போடறாங்க, சந்தோஷமா எப்படி இருக்குக்கறதுன்னு சொல்லறாங்க, கல்கியில வந்த கதையை எடுத்து போடறாங்க, என்னென்னவோ பண்ணறாங்க. அதுல நமக்கு தெரிஞ்சது இந்த போட்டிதான். பூப்பறித்த அனுபவம்ன்னு அவங்க சொல்லிட்டாங்க. ஒரு போட்டியாளனா, சில சமயம் பார்வையாளனா நான் என்ன செஞ்சேன், திரைக்குப் பின் என்ன நடந்தது, எப்படி உணர்ந்தேன்னு சொல்லலாமேன்னுதான் இந்த பதிவு.

போட்டிக்கு முன்னால்

நம்ம நடத்துற புதிர்ப் போட்டிகளினால நிலாவைத் தெரியும். தெரியும்ன்னா என்ன, ஒரு சக பதிவர் என்ற முறையில் தெரியும் அவ்வளவுதான். இவங்ககிட்ட இருந்து ஒரு தனி மடல் வருது. நான் ஒரு போட்டி வைக்கப் போறேன், கலந்துக்கறீங்களான்னு. என்னடா இது, நமக்கு போட்டியா, இல்லை நமக்கே போட்டியான்னு ஒரு சந்தேகம். ரெண்டு, மூணு தடவை படிச்சு பாத்துட்டுதான் நான் ரெடி, நீங்க ரெடியான்னு பதில் போட்டேன். அமெரிக்காவில் இன்னும் ஒரு ஆளு வேணுமேன்னு திரும்பி வந்தாங்க. நம்ம இன்னொரு பிளாக்கர் ஐ.டி. பதிவு செஞ்சு டபுள் ஆக்சன் குடுக்கலாமான்னு ஒரு ஐடியா. அப்புறம் சரின்னு நம்ம கௌசிகனை இழுத்துவிட்டாச்சு.

அப்புறம் நமக்கு தோழர், நம்ம கைப்புன்னு சொன்னாங்க. சரி, காமெடி கிளப் அப்படின்னு அணிக்கு பேர் வச்சுக்கலாமேன்னு மனக்கோட்டை எல்லாம் கட்டி அவருக்கு மெயில் போட்டா ஆளு அப்பீட்டு. என்ன ஆனாருனே தெரியலை. நிலா நம்ம கிட்டயே வந்து இந்தியாவில் சப்ஸ்டிட்யூட் ஒரு ஆளைப் பிடிங்கன்னு சொன்னாங்க. சரின்னு அதுக்கும் நமக்கு புதிர் போட உதவர பெரியவர் பேரை சொல்லியாச்சு. சொல்லி இந்த பக்கம் திரும்பினா அடுத்த மெயில். ஜிரா விளையாட முடியாதுன்னு சொல்லிட்டார், அதனால அவர் இடத்திற்கு ஹரிஹரன்ஸை தள்ளியாச்சு. இன்னும் ஒரு ஆளைப் பிடியுங்கன்னு. எனக்கு ஒரு சந்தேகம். இப்படி ஆள் பிடிக்கிற திறமையை சோதிக்கத்தான் போட்டியோன்னு. (இது ஆறாம் சுற்றில் உண்மையாச்சு. அது பத்தி அப்புறம்.) நானும் சளைக்காம நம்ம பதிவுக்கு வரவங்களுக்கு மெயில் அனுப்பி பார்த்தா அவங்க எல்லரும் இந்தியாவிற்கு வெளில இருக்காங்க. (இதுல ஒருத்தரை நம்ம ரசிகர் மன்ற தலைவின்னு (ர.ம.த.) எல்லாம் எழுதிட்டாங்க. அதெல்லாம் இல்லைங்க. நீங்க மன்னிச்சு விட்டுருங்க. உங்களுக்கு ஓக்கேன்னா சொல்லுங்க. உங்க பேரைச் சொல்லறேன்.) ஆக மொத்தம் ரெண்டு பக்கமும் கமிஷன் வாங்கியிருந்தா இந்நேரம் கொஞ்சம் பணம் பண்ணியிருக்கலாம். ஹூம்.

கடைசில நமக்குத் தோழர் குமரன்னு முடிவாச்சு. நீங்க ரெண்டு பேருமே அமெரிக்காவில் இருக்கறதுனால உங்களுக்கு கொஞ்சம் பலகீனம்தான், சமாளிங்கன்னு வேற நிலா சொல்லிட்டாங்க. சரிதான் ஆடிப் பார்த்திட வேண்டியதுதான் என களத்தில் இறங்கியாகிவிட்டது. இதுக்கு நடுவிலே, நம்ம 4X4 பதிவுல இந்த போட்டியை பத்தி சொல்லப் போக, நீ எப்படி சொல்லலாம்ன்னு சண்டை வேற போட்டாங்க இந்த நிலா. இதற்கு வேற ஒரு KSKV (அதாங்க கதவை சாத்தி கால்ல விழறது) பண்ண வேண்டியதாப் போச்சு.

போட்டி
ஆறு சுற்று. எல்லாவற்றிலேயும் நல்லா செய்தாதான் வெற்றி. இவ்வளவுதான் தெரியும். இந்த ஆழமான அறிவோட போட்டியில இறங்கியாச்சு. ஒவ்வொரு ரவுண்டா பாக்கலாம்.

சுற்று 1
போட்டியன்று அமெரிக்க காலை. கண்விழித்தால் சுற்று 1-க்கான கேள்விகள் வந்திருந்தது. மொத்தம் 5 கேள்விகள். அதில் மூன்றுக்கு பதில் வேற சொல்லி முடித்துவிட்டார்கள். சரிதான் நமக்கு இந்த போட்டி சரிவரப் போவதில்லை என்றே முடிவு கட்டியாகிவிட்டது. பின் குமரனுடம் ஆலோசித்து இரண்டு தவறான விடைகளுக்குப் பின் ஒரு சரியான விடையை சொல்லியாகி விட்டது. நம்ம ர.ம.த (இப்போதைக்கு இப்படி சொல்லறேன், அவங்க பேர் போட அனுமதி தந்தாங்கனா அவங்க பேரைத்தான் படிக்கணும். ஓக்கே.) வேற தனிமடலில் விடையை சொல்லிப் போட சொன்னார்கள். மீதமிருந்த கேள்விக்கு விடையை தேடி நம்ம நண்பர் குழாமை முடுக்கி விட்டேன். ஐந்தே நிமிடங்களில் விடை வந்தது. ஆனால் நான் பார்க்காமல் விட்டுவிட்டேன். பார்த்து போடுவதற்குள் கௌசிகன் முந்தி விட்டார். மன்னியுங்கள் பதில் தந்த நண்பரே. ஆகவே கிடைத்தது 10 புள்ளிகள். விட்டது 40.

சுற்று 2
தலைவரை பத்தி பேசி உசுப்பேற்றி விட்டார்கள் நிலா. உடன் நண்பர்கள் குழாமுடன் ஆலேசனை. நல்லதாக ரெண்டு ஐடியாக்கள் கிடைக்க, அதை செய்வதற்குள் செல்வன் அதை ஒட்டியே ஒரு விளம்பரம் போட, மீண்டும் வரைபலகைக்கு. இந்த சுற்றுக்கு நேரம் இருக்கிறதே. பிறகு வரலாம் என்று விட்டோம். நடுவில், வந்தேண்டா பால்க்காரனை உல்டா செய்து குமரனுக்கு அனுப்பினேன். அவர் நமது தமிழை சரி செய்து, அவர் பங்குக்கு வார்த்தைகளைப்போட்டு விட்டு இதனை அனுப்பி விடலாம் அல்லது முதலில் ஆன மாதிரி வேறு யாராவது இதைப்போல் செய்துவிடப்போகிறார்கள் என சொன்னார். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. இது மிக அருமையாய் வந்திருக்கிறது என நாங்களே பாராட்டிக் கொண்டு அனுப்பி விட்டோம். அதன் பிறகு நண்பர்கள் திட்டியதை அச்சிலேற்ற முடியாது. விட்டு விடுவோம். நல்ல வேளை இம்முடிவு வரும் பொழுது எங்கள் அணி வலுவான நிலையில் இருந்ததால் தப்பித்தோம்.

சுற்று 3
இது கொஞ்சம் சுலபமாகவே இருந்தது. குமரனும் நானும் பேசி பதிலை அனுப்பி விட்டோம். நமது ர.ம.தவும் விடை சரியானதுதான் என உறுதி செய்தார். கூடவே மேலும் இரு விடைகளையும் போட்டோம். சிக்கலில்லாத சுற்று. குமரன் சொன்னது போல் இந்த சுற்று தான் எங்கள் தன்னம்பிக்கையை மீட்ட சுற்று. நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்தது கலந்து பேசிக்கொள்ள உதவியாய் இருந்தது. இச்சுற்றின் பின்னூட்டத்தில்தான் ர.ம.தவிற்கு அப்பட்டம் கிடைத்தது! இச்சுற்றின் இறுதியில் நாங்கள் மல்லிகை அணியுடன் கூட்டாக இரண்டாமிடத்தில் இருந்தோம்.

சுற்று 4
மீண்டும் 5 கேள்விகள் இந்திய பகல் நேரத்தில். ஆனால் சுற்று ஒன்றின் அனுபவம் காரணமாக அதிகாலையிலேயே எழுந்தாயிற்று. அதற்குள் தேவ் இரு பதில்களைப் போட்டு இருந்தார். நானும் கஷ்டப்பட்டு ஒரு பதிலைப் போட்டேன். மீதம் இருந்தது இரு கேள்விகள். என்ன தேடியும் விடைகள் கிடைக்கவில்லை. குமரன் நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிமடல் அனுப்பி விடைகளை வாங்குகிறேன் என்றார். வாங்கியும் விட்டார். அதில் இவரைத் தவிர வேறு யாருமே மெயில் அனுப்பவில்லை என்று இருவரும் சொன்னதுதான் இவரின் முயற்சிக்கு சர்டிபிகேட். நிலா சொல்வது போல் இதுதான் இனிஷியேட்டிவ். பலருக்கும் இந்த சுற்று பிடிக்கவில்லை. ஆனால் நிலாவின் கருத்துகளை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆக மொத்தம் எங்களுக்கு 30 மதிப்பெண்கள். முக்கியமாக முதலிடத்தில் இருந்த சாமந்தியினருக்கு எதுவுமில்லை. இப்பதிவின் பின்னூட்டங்களை கட்டாயம் படியுங்கள். குமரனும் நானும் ஆடிய பிள்ளையார், முருகன் விளையாட்டு எனக்குப் பிடித்தது.

சுற்று 5
அணியினர் இருவரும் கலந்தாலோசித்தால் மட்டுமே பதில் கூற முடியும் என்பதான கேள்விகள். நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்ததால் மிகச் சுலபமாக முடித்துவிட்டோம். விதிமுறைகளை சரியாகப் படிக்காததால் ஒரு 5 புள்ளிகள் கோட்டை விட்டேன். குமரனின் பெருந்தன்மை என்னை திட்டவில்லை. அது மட்டுமில்லை இப்பதிவின் பின்னூட்டத்தில் 'இங்கேயும் கொஞ்சம் அவசரப்பட்டு 5 புள்ளிகளைத் தவறவிட்டுட்டோம். ' என எழுதி என் தவறில் அவரும் பங்கெடுத்துக்கொண்டார். Hats Off Kumaran. இருந்தாலும், இச்சுற்றின் முடிவில் நாங்கள் முன்னணியில்.

சுற்று 6
இதுதாங்க நம்ம சுற்று. 5-ம் சுற்று வரும் போழுதே இதுவும் வந்துவிட்டது. ஆனால் அதைப் போடும் மும்முரத்தில் இதை கவனிக்கவில்லை. ஐந்தாம் சுற்றை முடித்துவிட்டு பார்த்தால் ஒரு வோட்டு கூட விழவில்லை. நிலா வேறு பிரச்சாரம் செய்யலாம் என்று முடுக்கிவிட்டார். என்ன செய்வது என்று ஆலோசனை. குமரனுக்கு அதிகம் பேரைத்தெரியுமென்பதால் அவர் வீடு வீடாகச் சென்று வோட்டு கேட்பது என்றும், நான் பதிவு போட்டு பொது மக்களை அழைப்பது என்றும் முடிவானது. நண்பர்களையும் வோட்டு சேகரிக்க அழைத்தோம். இந்த உத்தி சரியாக வேலை செய்ததால் மற்ற அணியினராலும் காப்பியடிக்கப்பட்டது.

அது மட்டுமில்லாமல் இரண்டாம் சுற்றின் முடிவுகள் தெரியாததால், இரண்டாமிடத்திலிருந்த சாமந்தியை விட குறைந்தபட்சம் 25 வாக்குள் பெற்றால் போட்டியை வென்றுவிடலாம் என கணக்கிட்டு, இதுதான் நமது இலக்கு என செயல்பட ஆரம்பித்தோம். நான்காம் சுற்றில் உதவிய சிவாவும், மதியும் முதலிரண்டு வோட்டுக்களை பதிய இச்சுற்று எங்களுக்கு சாதகமாகவே தொடங்கியது. செல்லக்கூடிய வோட்டுகளில் முதல் 20 வோட்டுகள் எங்களுக்கு விழுந்தது ஆச்சரியம்தான். சாமந்தியினரை விட 22 வாக்குள் மட்டுமே அதிகம் பெற முடிந்தாலும், (எங்கள் இலக்கு 25) இச்சுற்று எங்களுக்கு மகத்தான வெற்றி என்பதில் சந்தேகமில்லை. நிலா சொல்லியது போல் உழைப்பில்லாமல் இவ்வெற்றி வந்திருக்க வாய்ப்பேயில்லை. இதில் குமரனின் பங்கு அதிகம். சாமந்தியினர் இருவரும் வலையுலகிற்கு புதிது என்பதால் அவர்களுக்கு அதிகம் பேரைத்தெரியாமல் போனது அவர்களின் பலவீனமாய் ஆனது. எங்களுக்கு பெரும் பின்னடைவைத் தந்த இரண்டாம் சுற்றிற்கு மாற்றாக அமைந்தது இச்சுற்று.

வெற்றி! வெற்றி! இப்படியாக போட்டியை வென்றாகியாயிற்று.

போட்டிக்கு பின்

இதுவே பெரிய பதிவாய் போனதால் ஒரு வரி செய்திகள் வடிவத்தில்.

முதலாவது, இந்த போட்டியை, நினைத்து, நடத்தி, வெற்றிகண்ட நிலாவிற்கு பாராட்டுகள். கூடவே நம்ம குமரனுக்கும், வோட்டு போட்ட மக்கள்களுக்கும், உதவிய நண்பர்களுக்கும் எனது நன்றி. (ஆமாம் இப்பதான் பார்த்தேன். உங்க அறிமுக பதிவுல 'தமிழ்மணம் கொஞ்ச நாளா டல் அடிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்.'ன்னு எழுதியிருக்கீங்களே நிலா, நாங்க போட்டி எல்லாம் நடத்தி, பின்னூட்ட சாதனையெல்லாம் பண்ணினது உங்க கண்ணில் படலையா?)

நல்ல நண்பர்களின் அறிமுகம். முக்கியமாக தருமி அய்யா. (ஆமாம் அய்யாதான், தருமி அய்யா!). அது மட்டுமில்லாது தெரியாத பலருக்கு நம்மை தெரிய வைத்த ஒரு சந்தர்ப்பம்.

நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்த ஒரு பலகீனத்தை பலமாய் மாற்றி வெற்றி கண்டதில் கொஞ்சம் கூடுதல் பெருமை.

நமக்கும் புதிர்கள் அல்லாத சில வேலைகளைச் செய்ய முடியும் எனக்கண்டது ஆச்சரியம்தான். இதனால் புதிர்களிலிருந்து கொஞ்சம் விலகி வேறு பதிவுகளும் போடலாமென ஒரு ஐடியா. என்ன சொல்லறீங்க?

வீட்டில் இரு நாட்கள் ஒன்றும் செய்யாமல் இருந்ததற்கு பரிகாரமாக, நிலா பரிசாக தரும் DVDயை துணைவியாருக்கு பிடித்ததாய் தேர்ந்தெடுக்கச் சொல்லி ஒரு மாதிரி சரிகட்டிவிட்டேன். (அய்யய்யோ, நமக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு சொல்லிட்டேனே)

நிலா, தருமி, தேவ் எல்லாரும் சேர்ந்து இ.கோ., மேஸ்திரி, கொளுத்து என்றெல்லாம் அழைக்கப்பட்ட நம்மை கொத்ஸ் ஆக்கிவிட்டார்கள். இப்படியே போய் தக்காளி கொத்ஸு, கத்திரிக்காய் கொத்ஸு என மாறி, கடைசியில் யோவ் தக்காளி, என்ன குண்டு கத்திரிக்காய் என்றெல்லாம் அழைக்கப்படாமல் இருந்தால் சரி. :)

நாம் ரெகமெண்ட் செய்த கௌசிகனும், ஹரிஹரன்ஸும் நன்றாக விளையாடி மானத்தை காப்பாற்றி விட்டார்கள். வாழ்த்துக்கள் நண்பர்களே.

இரண்டு நாட்களாக, இந்த போட்டியினால் செய்யாமல் விட்ட பணிகளை செய்ய வேண்டி வந்ததாலும், தூங்காமல் இழந்த தூக்கத்தை ஈடுகட்ட வேண்டியிருந்ததாலும், இப்பதிவு கொஞ்சம் லேட். மன்னிச்சுக்கோங்க. மறக்காம நிறையா பின்னூட்டம் போடுங்க. ஓக்கேவா?

Tuesday, February 28, 2006

உடன்பிறப்பிற்கு ஒரு கடிதம்

உடன்பிறப்பே,

கழக வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு போர் தொடங்கியிருக்கிறது. நாம் புதிர்தானே போட்டுவிடலாம் என்று எண்ணியிருக்க 'பூப்பறிக்க வருகிறோம்' போட்டி இப்பொழுது நமது தமிழின பெருமையை உலுக்கிப்பார்க்கும் ஒரு போராய் மாறிவிட்டது. வால் நீட்டும் பகைப்படை நடுங்க வேண்டுமானால், நாம் பண்பாடு குறையாமல் சீறிக்காட்டவேண்டும். என்ன இது, ஒரு இணையப்போட்டிதானே என்று மந்தமாய் இருந்துவிடுவாயோ என்ற ஐயப்பாட்டுடனே இக்கடிதத்தைத் தொடங்குகிறேன்.

வெண்முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதியாம் நம் நிலா அவர்கள் இணையத்தின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்கும் வகையில் ஒரு போட்டியை அறிவித்துவிட்டார். இதில் நம் அணியினர் பெரும் வெற்றியைப் பெற்று, இணைய வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டித்தான் நான் மீண்டும் மீண்டும் கடிதமெழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டிய பணி எளிதானதுதான். நாளைக் காலை (மார்ச் முதலாம் நாள்) இந்திய நேரப்படி காலை மூன்று மணிக்குள் உங்கள் பொன்னான வாக்குகளை நம் ரோஜா அணியினருக்கு அளித்து, http://nilaraj.blogspot.com/2006/02/6_28.html என்ற தளத்திற்கு சென்று பின்னூட்டமிடு்.

இதோ கிளம்பிற்று காண் தமிழ் சிங்கக்கூட்டம்,
கிழித்தெறிய தேடுது காண் பகைக்கூட்டத்தை,
மனம் பெரிய இணையத்தில் ரோஜாக்கள் அல்லார்
வால் நீட்டினால் சீறிடும் பாம்பாய்
செயலில் காட்டிடும் பணியாய்
செறுமுனைக்கு அஞ்சா இளைஞர் அணியாய்
செம்மாந்து கிளம்பிடு

கண்மணிகளாம் உடன்பிறப்புகாள்
இப்போதே இப்பயணம் தயாராகட்டும்
பின்னூட்டம் இட்டிடுவோம்
பகைவரை முட்டிடுவோம்.

Monday, February 27, 2006

பூப்பறிக்க வருகிறோம் சுற்று 2

இதுதான் எங்கள் விளம்பரம் - பாண்டி நாட்டு தங்கம்ஸ்.

விளம்பரம் என்றாலே, பாட்டும் ஆட்டமும் வேணும். அது துணிமணியா இருந்தாலும் சரி, பல்பொடியா இருந்தாலும் சரி. சினிமா விளம்பரம் அது இல்லாம முடியுமா? அதனால பாட்டு வேணும்ன்னு முடிவாச்சு.

தமிழ் தெரியாத குழந்தைகளும் ஆடுவது ரஜினி பாட்டுக்குதான். அதனால் அவர் பட விளம்பரத்தில் அவர் பாட்டு வருவதுதானே முறை. ரஜினிக்கு மிக பொருத்தமான பாட்டு என்று பார்த்தால், நம்ம வந்தேண்டா பால்காரன் பாட்டுதான். அதனால் அதையே கொஞ்சம் ரெடி பண்ணி, ரஜினி டான்ஸோட அனுப்பறதுன்னு முடிவு பண்ணியாச்சு. இப்போ பாட்டு. (பேக்கிரவுண்ட் இசைக்கு இங்க போய் கிளிக் பண்ணிக்கோங்க.)

வந்தேண்டா ஜுலாவிக்கு,
அட நான்
சிவாஜி பத்தி பாட போறேன்
புது பாட்டு கட்டி ஆட போறேன்
(வந்தேண்டா)

எங்களுக்கு ஷூட்டிங்குக்கு
நல்லதொரு இடம்வேணும் தம்பி
அதுக்காத்தான் ஜூலாவிக்கு
வந்தோமே உங்களையே நம்பி
(வந்தேண்டா )

நியூஸிலாந்து சுவிட்சர்லாந்து எல்லாமே போயிருக்கேன்
டூயட்டுக்கு தான்னாகுமப்பா
இங்லாந்தில் அயர்லாந்தில் ஷூட்டிங்கில் நானிருந்தா
கூட்டம்தான் சேருதப்பா
(நியூஸிலாந்து)

பாட்ஷா படம்தான் வரலாறு
படையப்பா சொல்றேன் நீ பாரு
சிவாஜி படத்தை எதிர் பாரு
க்ளைமேக்ஸ் சீன்தான் வெகுஜோரு

நீ அனுமதி இன்னும் கொடுக்கலையே
படபிடிப்பு இன்னும் முடிக்கலையே
(வந்தேண்டா)

தந்தனா தந்தனா தந்தனானா
தந்தனா தந்தனா தந்தனானா

ஜூலாவில் லொக்கேஷன் எல்லாமே பாத்தாச்சு
ரொம்பவும்தான் சூப்பருங்க
பகலெல்லாம் பனியாச்சு, இரவெல்லாம் நிலவாச்சு
ஷூட்டிங்குக்கு சூப்பருங்க
(ஜூலாவில்)

டூயட் எல்லாம் நான் பாட
ஜூலா தேவதைங்க தேவைதானுங்க
சண்டை எல்லாம் நான் போட
உங்கூரு மலைங்க தோதாச்சுங்க

இப்போ வேணும் உங்க அனுமதிதான்
அதை தந்தா கொடுப்போம் வெகுமதிதான்
(வந்தேண்டா)
(வந்தேண்டா)

இந்த பாட்டையும் ஆட்டத்தையும் பார்த்தா ஷூட்டிங்குக்கு அனுமதி என்ன, ஜூலாவிக்கே முதல்வரா ஆக்கிடுவாங்க. என்ன சொல்லறீங்க?