Wednesday, March 12, 2008

தமிழ் வளர்ப்பு - அறிஞர் பேட்டியும் கொத்தனாரின் குழப்பமும்!

"தனி ஒரு மனிதனுக்கு பதிவிட நேரமில்லையெனில்......" இதுதாங்க நம்ம தன்னிலைச் செய்தி! அப்படி ஒரு செய்தி போடற அளவுக்கு நமக்கு ஆணி! அந்த தன்னிலைச் செய்தியைத் தொடர்ந்து அடுத்ததா ".... பதிவை குழுமப் பதிவாய் ஆக்கிடுவோம்!" அப்படின்னு சொல்லி இலவசத்தில் எழுத வாருங்கள் அப்படின்னு விளம்பரம் பண்ணக்கூட தயார் ஆகிட்டேன். ஆனாப் பாருங்க, ஒரு வேலையாய் மேற்கு கடற்கரை வரை சென்று வர வேண்டியதாக ஆயிற்று. ஆறு மணி நேர விமானப் பயணம். கையில் மடிக்கணினியையும் கூடவே கடந்த இரு மாதங்களாக படிக்காமல் வைத்திருந்த தென்றல் இதழ்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பியாகி விட்டது. (இணையத்தில் படிக்கக் கிடைக்கும் தென்றல் இதழைப் படித்துப் பாருங்கள். நல்ல மாத இதழ். அதிலும் என்னைக் கவர்ந்தது நண்பர் வாஞ்சி தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்.)

இந்த மாத இதழில் கல்வியாளர் முனைவர் வா செ குழந்தைசாமி அவர்களுடனான நேர்காணல் இடம் பெற்று இருந்தது, மிகச் சுவையாக பல விஷயங்களைப் பற்றிப் பேசி இருந்தார். அதில் பதிவு போட விஷயம் கிடைத்ததுதான் விசேஷமே!!

அந்த நேர்காணலில் இருந்து இரு கேள்வி பதில்கள்!

கேள்வி: தற்போது தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் பட்டப்படிப்பு முடித்துவிடலாம் என்ற நிலை நிலவுகிறது. இது சரியானதுதானா?

பதில்: நான் மிகுந்த தமிழ்ப் பற்று உள்ளவன் என்பதை ஒப்புக் கொள்வீர்கள். இருந்த போதிலும் தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடிக்க முடியும் என்பதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை.

பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059. எந்த ஆண்டும் சதவிகித அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்த சிலர் தமிழ்ப் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டுவிடும்? இதுவே சற்று அதிகம் என்றால் நாம் அதைக் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்தான். பெரும்பாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இதர மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சில குழந்தைகள் பள்ளிகளில் தமது தாய்மொழியைப் பயில்கிறார்கள். உருது கற்கும் இஸ்லாமியர் தவிர எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த சிலரே தத்தம் தாய்மொழிகளைப் பயில்கிறார்கள். படித்துவிட்டுப் போகட்டும். உண்மையான ஆபத்து வேறுபல இடங்களில், வேறு பல வடிவங்களில் வந்து கொண்டு இருக்கிறது. அதைக் குறித்து ஏனோ யாரும் சிந்திப்பதில்லை.

கேள்வி: தென்றல் வாசகர்களுக்கும், உலகளாவிய தமிழர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பதில்: பொதுவாக, இந்தியாவிலுள்ள பள்ளிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் உள்ளவர்கள் நிதி திரட்டி கணிப்பொறிகள் இதர தளவாடங்களை வாங்கி அனுப்பிவது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இது நல்ல பணிதான். இருந்தாலும் ஒன்று சொல்வேன். இந்தியா ஒரு மாபெரும் நாடு. இதன் பிரச்சனைகளை உங்களால் தீர்த்து வைக்க முடியாது. அதற்குப் பதிலாக வசதிமிக்க நாடுகளில் வாழும் தமிழர்கள், மொரிஷியஸ், பிஜி, ரீயூனியன், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தம் அடையாளத்தை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றைப் பற்றி எண்ணி ஏற்றது செய்ய உதவுவதே சாலச் சிறந்தது. (எனத் தொடங்கி ஒரு நீண்ட பதிலை தந்துள்ளார்)

இந்த இரண்டு கருத்துக்களை எடுத்துக் கொண்டோமானால் ஒன்றில் உடன்படுகிறேன், மற்றொன்றில் வேறுபடுகிறேன். முதலாவது கருத்தின் சாரத்தை நான் அப்படியே ஒப்புக் கொள்கிறேன். சொல்லி இருக்கும் காரணங்களிலும் முறையிலும் சற்றே வேறுபடுகிறேன். என்னளவில் எதையுமே இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டளை இடுவது என்பது தவறான ஒரு அணுகுமுறை. ஒரு மாணவன் தனக்கு எதன்பால் ஈர்ப்பு இருக்கிறதோ அதனைத்தான் படிக்கச் சொல்லவேண்டுமே தவிர்த்து இதைத்தான் படித்தாக வேண்டும் என்ற கட்டாயப்படுத்துதல் தவறு. நம்மிடையே கூட படிக்கும் காலத்தில் வேப்பங்காயாகத் தமிழ் கசந்தது எத்தனை பேருக்கு என நம்மை நாமே கேட்டுக் கொண்டு பாருங்களேன். எனக்கு இப்பொழுது தமிழின் மேல் இருக்கும் ஆர்வத்தில் ஒரு பங்கு கூட படிக்கும் பொழுது கிடையாது. அவ்வகை கற்பித்தலை மாற்றி நல்ல ஆர்வம் வரக்கூடிய முறையில் கற்பிக்கும் முறையைக் கொண்டு வருதல் அவசியம். அப்படி ஆகுமே ஆனால் தமிழை விரும்பி படிப்பவர் எண்ணிக்கை தன்னால் ஏறும். இன்று பல இடங்களில் நாம் காணும் கட்டாயத் தமிழ் பாடம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்படி ஒரு தமிழார்வலரின் எண்ணமும் அது போல் இருப்பது ஆச்சரியமே!

அடுத்த பதிலைப் பார்த்தோமானால் அதில் எனக்குத் துளியும் உடன்பாடு இல்லை. நாம் இன்று தமிழகத்தில் இந்தியாவில் இருக்கும் பள்ளிகளுக்கு உதவி செய்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நாம் பிறந்த மண்ணில் நம்மால் ஆன உதவி செய்ய வேண்டும், நமக்குக் கிடைத்த / கிடைக்காத சந்தர்ப்பங்கள் இன்றைய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதானே குறிக்கோளாக இருக்கும். இதில் எனது மண் செழிக்க வேண்டும் என்ற சுயநலம் இழையோடுவதை மறுக்க முடியுமா? அது என் பள்ளி, என் ஊர், என் மாவட்டம், எனது மாநிலம் என எல்லைகள் விரியும். அவ்வளவுதான். ஆனால் இதை விடுத்து மொரிஷியசில் தமிழ் வளர்ச்சி என்றெல்லாம் என்னால் யோசிக்க முடியவில்லை. நான் என் சுயநலம் கலந்த உதவிகளைச் செய்யப் பார்க்கின்றேன். தமிழை வளர்க்க என்னை விடப் பெரியவர்கள், அவர்கள் நடத்தும் அரசாங்கம் பாடுபடட்டும் .

என்ன சொல்லறீங்க?

டிஸ்கி: முனைவர் குழந்தைசாமி அவர்கள் என் பதிவைப்படிக்கமாட்டார், எனவே "ஐயோ! என்னை மட்டும் குறிவச்சு எழுதறாண்டா!" என்ற அவச்சொல் இந்தப்பதிவுக்கு வராது! அவரை மட்டும் குறிவைத்துக் கேள்வி கேட்கப்படவில்லை என்பதால் நீங்களும் உங்கள் கருத்தை எடுத்து வையுங்கள்.

111 comments:

said...

டாக்டர் வா.செ. குழந்தைசாமிக்கு 2008க்கான கலைஞர் விருது

இந்தத் தென்றல் இதழ் அச்சேறத் தயாராகும் நிலையில் டாக்டர் வா.செ. குழந்தைசாமி இந்த ஆண்டுக்கான 'கலைஞர் விருது'க்குத் தேரெதெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. தமிழ் மொழி, இலக்கியம், கலாசாரம் ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றும் ஒருவருக்கு முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கலைஞர் விருது அளிக்கப்படுகிறது. பிப்ரவரி 15ம் தேதியன்று தமிழக முதல்வரின் கையால் இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. ஒரு பாராட்டுப் பத்திரமும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் இதில் அடங்கும்.


வாழ்த்துகள் திரு.குழந்தைசாமி அவர்களே!

said...

முதல் பதில் மிகச் சிறப்பானது. யார் மீதும் யாரும் எம்மொழியையும் திணிக்கக் கூடாது.

//உண்மையான ஆபத்து வேறுபல இடங்களில், வேறு பல வடிவங்களில் வந்து கொண்டு இருக்கிறது. அதைக் குறித்து ஏனோ யாரும் சிந்திப்பதில்லை//
இது என்னவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ஆங்கிலக் கலப்போடு தமிழ் பேசுவதைக் குறிப்பிடுகிறாரா?

இரண்டாவது பதில் - ஹ்ம்ம்ம்....கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. ஒரு வேளை கிறித்தவ மிஷனரிகளைப் போல 'தமிழ் மிஷனரிகள்' என்று ஒரு சாரார் இந்நாடுகளில் தமிழ் சேவை ஆற்றச் சொல்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

said...

இரண்டாவது கருத்தில் குழந்தைசாமி வித்தியாசமாக யோசிக்கிறார்,ஆனால் செயல்பாடு கஷ்டங்கள் நிறையவே வரும்.இதை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தி இருந்தால் கொஞ்ச நஞ்சம் இருந்த தமிழ் உணர்வு செத்துபோகாமல் இருந்திருக்க கூடும்.ஒரு தலைமுறையே தமிழ் வாசனையே இல்லாமல் செய்துவிட்டு இப்போது ஆரம்பித்தால் விளைவுகளை காண வெகு நாட்கள் ஆகும்.

said...

கொத்ஸ்,
அவரோட முதல் கருத்துக்கு நானும் ஒத்துப்போகிறேன். கட்டாயப்படுத்துவதாலோ, தமிழ்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதாலோ தமிழ் வளர்ந்து விடப்போவதில்லை. தமிழ்மட்டுமில்ல எல்லா பாடங்களிலும் மாணவர்களுக்கு இயல்பா ஆர்வம் வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாவது கருத்துல அவர் உதவவேண்டாமுன்னு சொல்லையே? அத்தோட இதையும் செய்தா நல்லா இருக்குமுன்னு சொல்லுறாரு.

said...

//என்னளவில் எதையுமே இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டளை இடுவது என்பது தவறான ஒரு அணுகுமுறை. ஒரு மாணவன் தனக்கு எதன்பால் ஈர்ப்பு இருக்கிறதோ அதனைத்தான் படிக்கச் சொல்லவேண்டுமே தவிர்த்து இதைத்தான் படித்தாக வேண்டும் என்ற கட்டாயப்படுத்துதல் தவறு.//

'பத்தாவது வரை தமிழ் படிப்பது கட்டாயம்' என உத்தரவு வந்ததிலிருந்து இம்மாதிரியான அபத்தக்குரல்கள் ஓங்கி ஒலிக்கிறது 'தனிமனித விருப்பம்' என்ற பெயரில்.

'மாணவன்' என்பவன் யார்?
கற்பவன் - பால்வாடி முதல் பல்கலை வரை.

'எதன்பால் ஈர்ப்பு' என ஒரு மாணவன் அறிவது எந்த வயதில்?

பால்வாடி/ஆரம்பகல்வி மாணவனுக்கு பள்ளியின்மீதே ஈர்ப்பில்லை. அதட்டி பள்ளியில் சேர்ப்பது பெற்றோர் கடமையா இல்லையா?

தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் (நன்கு எழுத/படிக்க) தமிழ்கற்றுக்கொள்வது இங்கு சமூகவாழ்வுக்கு அவசியமா இல்லையா?. கற்றுகொடுப்பது அரசின் கடமையா இல்லையா?

சரி, ஒரு மாணவனுக்கு ஆங்கிலத்தின் மீது அல்லது கணக்கின் மீது அல்லது வேறுபாடத்தின் மீது ஈர்ப்பு இல்லையென்றால் அதை படிக்காமல் தவிர்க்க (உயர்நிலை வரை) வழி இருக்கிறதா? இல்லாதபோது, அது கட்டாயபடுத்தல் ஆகாதா?


பிடித்தோ பிடிக்காமலோ பத்தாவது வரை அனைவரும் ஒரு பாடத்திட்டத்தை படித்துதான் தீரவேண்டும். ஒரு மாணவன் தன்னை ஈர்க்கும் பாடம் எது என அறியக்ககூட பாடங்களின் அறிமுகமும் அறிவதற்கான காலமும் அறிந்துகொள்ளும் முதிர்ச்சியும் தேவை. அதற்குதான் பத்தாண்டுகள் நம் கல்வி திட்டத்தில். அதன்பின் தன் விருப்பப்படி தேர்வு செய்ய (ஓரளவு) வழி இருக்கிறது.

ஆக, அரசு தன் கடமையைச் செய்கிறது. செய்யவிடுங்கள்!

said...

"தென்றல்" பத்திரிகையை இணையத்தில் நானும் படித்து வருகிறேன். குழந்தை சாமியின் மேற்கூறிய இரு கருத்துக்களிலும் எனக்குச் சற்றும் உடன்பாடு இல்லை. மற்றபடி மொழியைக் கற்பது மாணவரின் இஷ்டமே என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. அரசும் இந்த நிலைப்பாட்டையே எடுத்துக் கொள்ளவேண்டும், முதலில் நம் நாட்டிலேயே முறையான பள்ளி வசதிகள் கிராமப் புறங்களில் இல்லை, என்பதோடும் கிராமப் புற மாணவர்களின் கல்வியின் தரத்தையும் உயர்த்த வேண்டிய கட்டாய நிலையிலும் உள்ளது. அதற்கு மற்ற மாநிலங்களைப் போல் இங்கேயும், "நவோதயா" பள்ளிகளைத் திறக்கச் செய்வதே ஒரே வழி. தமிழ், ஆங்கிலத்தோடு, ஹிந்தியும் கற்பிக்கப் படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, அரசியல் நோக்கில், தமிழ் நாட்டில் மட்டும், நவோதயா பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வரும் மாநில அரசுகள் அனுமதி கொடுப்பதில்லை. அந்த நிலை மாற வேண்டும். எட்டாம் வகுப்பு வரையில் தான் ஹிந்தி படிக்கவேண்டும், நவோதயா பள்ளிகளைப் பொறுத்த வரையில், கேந்திரிய வித்யாலயா மாதிரி +2 வரையிலும் தொடராது. அந்த உத்தரவாதத்தை மத்திய அரசு கொடுத்தும் மாநில அரசுகள் ஒத்துழைக்காதது ஒரு வருத்தமான விஷயம். இன்றைய சூழ்நிலையில்மாநிலக் கட்சிகளின் உடன்பாட்டோடு, மத்திய அரசு அமையும் சூழ்நிலையில், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் கூடத் தனியாக ஹிந்தி கற்க ஆரம்பித்திருப்பதோடு, தம் வாரிசுகளையும் கற்க வைக்கின்றார்கள். சாமானிய கிராமத்து மாணவனுக்கும் உள்ள அந்த உரிமையை நாம் வாங்கிக் கொடுத்தாலே போதும், மத்திய அரசு தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் சி.பி.எஸ்.இ. படிப்பு முறையின் தரத்துக்கு மற்றப் படிப்பு முறைகள் ஈடு கொடுக்க முடியாதது. ஆகவே சாமானியன் ஆனக் குப்பனுக்கும், சுப்பனுக்கும் அதே படிப்பு முறையைக் கொடுக்கக் கூடிய அதுவும் மத்திய அரசின் சலுகையோடு, கிடைக்கக் கூடிய அந்த வாய்ப்பை நாம் கிராமப் புறங்களில் கட்டாயம் கொண்டு வரவேண்டும். டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் இந்த முயற்சிக்குப் பெருமளவில் பாடுபட்டாலே எதிர்கால மாணவ சமுதாயம் அவருக்குப் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கும்.

ஹிஹிஹி, ரொம்ப நீஈஈஈஈஈளமாப் போச்சுனு நினைக்கிறேன். ஆனால் இது பற்றி இன்னும் நிறையவே எழுதலாம். :(

said...

இந்த இடுகையோட தலைப்பை விட மின்னஞ்சல் தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு. :-)

கொத்தனாரின் குழப்பத்தைத் தீர்க்கும் அறிவு இந்த குறைமதிக்கு இருக்கான்னு தெரியலை. கொஞ்சம் நாள் கழிச்சு திரும்பி வர்றேன்.

said...

//முதல் பதில் மிகச் சிறப்பானது. யார் மீதும் யாரும் எம்மொழியையும் திணிக்கக் கூடாது. //

கைப்ஸ், திணிப்பு கூடாது என்பது சரிதான். ஆனா சொன்ன காரணம் கொஞ்சம் சரியாப் படலை. 2% ஓக்கேன்னா எது ஓக்கே இல்லை? 20%?

//ஒரு வேளை கிறித்தவ மிஷனரிகளைப் போல 'தமிழ் மிஷனரிகள்' என்று ஒரு சாரார் இந்நாடுகளில் தமிழ் சேவை ஆற்றச் சொல்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.//

பொதுவா மிஷனரீஸ் கூட கைக்காசு போட்டு செய்யறது கம்மி. அவங்களுக்குப் பின்னாடி பெரும் இயக்கங்கள் இருக்கும் இல்லையா?! ஆனா நம்ம நாட்டுக்கு உதவி செய்ய வேண்டாம், இங்க உள்ள பிரச்சனையை எல்லாம் தீர்க்க முடியாதுன்னு சொல்லறது எல்லாம் ரொம்ப ஓவரா இல்லை? :)

said...

என்ன ரொம்ப நாளா காணோமேன்னு நினச்சா ஒரு நல்ல பொருள் பொதிந்த பதிவோடு வந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

1. தமிழ் கட்டாயப்பாடமாக இருப்பது சரியா, தவறா... தமிழ் ஒரு மொழிப்பாடமாக கட்டாய பாடமாக இருப்பதில் தவறில்லை.

தமிழிலேயே அறிவியல், பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்விகளே வர வேண்டும் என்று விரும்பும்பொழுது மொழிப் பாடமாக கட்டாயப் படுத்துவதில் தவறில்லை.

மற்ற மொழிகளை மொழிப்பாடமாக எதற்காக படிக்கிறார்கள்? பெரும்பாலும் அதிக மதிப்பெண்களுக்காகத்தான். தமிழில் அவ்வளவு எளிதாக அதிக மதிப்பெண்கள் பெற முடியாது.

2. புரியவில்லை. இந்தியாவில் இருக்கும் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் பிஜி, தென்னாப்பிரிக்கா நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு என்ன மாதிரி உதவ வேண்டும் என்று சொல்கிறார்?

தமிழ் டயஸ்போரா என்ற அளவில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருத்தல் வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் நமது பிறந்த மண்ணை எதற்காக ஒதுக்க வேண்டும் என்பதுதான் புரியவில்லை.

ஆங்கில வார்த்தைகளை பெரும்பாலும் உங்கள் பதிவுகளில் தவிர்ப்பீர்கள்.... ஆனால் இந்த பதிவில் மீண்டும் மீண்டும் 'டாக்டர்'தானா? அவரை முனைவர் என்றும் குறிப்பிடலாமே. :-)

said...

எனக்குத் தான் நெறய ஆணி சேந்து போச்சி, எப்ப விடியுது எப்ப இருட்டுதுதுன்னு தெரியாம கெடக்கேன்னு பாத்தா நீரு எனக்கு மேல இருக்கீரு?

பிகு: ஆமா, தமிழ்மணத்துல என்ன தான் நடக்குது? கொஞ்ச நாள் இந்த பக்கம் வரலியா, ஒன்னுமே புரிய மாட்டேங்குது.

said...

அப்பாடா...நல்ல வேளை .. ரிப்பீட்டேய் போடுறதுக்கு ஒண்ணுக்கு ரெண்டு ஆளு கிடச்சிட்டாங்க ...நவீனும்,ஸ்ரீதர் நாராயணனும்.

அதிலும் நவீன் சொன்னதும் சொன்ன முறையும் பிடிச்சிருக்கு

said...

இ.கொ,

ஒரு முக்கியமான விசயத்தோடதான் வந்திருக்கீங்க.

நானும் பொறுமையா எல்லா பின்னூட்டங்களையும் படிச்சிட்டே வந்தேன் அதில தருமி கவனிச்சது மாதிரியே தம்பீ நவினும் (அசத்திபுட்டே), ஸ்ரீதரும் ஒரு மொழி சார்ந்து இருக்க வேண்டிய என் எண்ண நிலையை முன் வைத்திருப்பதனைப் போல உணர முடிந்தது.

said...

ஆஹா, இப்பத்தான் கவனிச்சேன் நான் தம்பின்னு விளிச்சு எழுதின நவீன்... நான் நினைச்ச நவீன் இல்லைன்னு... (சாரி).

said...

//எனக்கு இப்பொழுது தமிழின் மேல் இருக்கும் ஆர்வத்தில் ஒரு பங்கு கூட படிக்கும் பொழுது கிடையாது.//
எனக்கும் தான்

//அவ்வகை கற்பித்தலை மாற்றி நல்ல ஆர்வம் வரக்கூடிய முறையில் கற்பிக்கும் முறையைக் கொண்டு வருதல் அவசியம்.//
உண்மை. மிகப்பெரிய உண்மையை வெகு சாதாரனமாக கூறிவிட்டீர்கள் :) :)

////உண்மையான ஆபத்து வேறுபல இடங்களில், வேறு பல வடிவங்களில் வந்து கொண்டு இருக்கிறது. அதைக் குறித்து ஏனோ யாரும் சிந்திப்பதில்லை//
இது என்னவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ஆங்கிலக் கலப்போடு தமிழ் பேசுவதைக் குறிப்பிடுகிறாரா?//

1. தமிழ் படித்தவர் தமிழை ஒழுங்காக படிக்காதது
2. ஆங்கில கலப்போடு தமிழ்.... இல்லை.. தமிழ் கலப்போடு ஆங்கிலம் பேசி அதை தமிழ் என்பது


மற்றப்படி, தமிழ் கட்டாயமாக ஒரு பாடமாக படிக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து

ஆனால் தமிழ் வழி கல்வியை கட்டாயப்படுத்தாமல் அவரவர் விருப்பப்படி விட வேண்டும் என்பதும் என் கருத்து

said...

நம் அரசாங்க அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சு பணியாலர்கள் பெரும்பாலும் தமிழ் வழி படித்தவர்கள்தான்.

பின் ஏன் அனைத்தையும் (அல்லது பெரும்பாண்மையான கடிதங்களை) ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என்பது எனக்கு புரியாத கேள்வி

கையெழுத்து கூட தமிழில் போடுவது கிடையாது :( :( :(

said...

கொத்ஸ்,
வரும் தலைமுறைக்குத் தமிழறிவு கட்டாயம் வேண்டும். அதில் ஒரு மாற்று அபிப்பிராயமும் இருக்க் முடியாது.

ரெண்டாவது சொல்வதுதான் சரியாகப் படவில்லை. நம் நாட்டை முதலில் கவனிக்கலாம். அதற்கே போதுமான சக்தி உண்டா என்று பார்க்க வேண்டும்.

said...

தமிழ் பெயரால் இயக்கம்/கட்சி நடத்துபவர்களால் தமிழனுக்கு கால் காசு பிரயோசனமில்லை.

தமிழனை அழித்து அதன்மூலம் தமிழை வளர்ப்பது என்பதை ஒரு கொள்கையாகவே இந்த தனித்தமிழ் இயக்கங்கள் செயல்படுத்தி வருகின்றன. பள்ளிகளில் கட்டாய தமிழ்வழி கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என கூறி நெடுமாறன்&co இயக்கம் நடத்தினர்.அப்போது ஒரு பத்திரிக்கையாளர் "உங்கள் பேரன்/பேத்தி யாராவது தமிழ்வழி பள்ளியில் படிக்கிறார்களா?" என கேட்டார்.அனைவரும் அசடு வழிந்தனர்.ஏன் என்றால் அவர்கள் யாருடைய பேரன் பேத்தியும் தமிழ்வழி பள்ளியில் படிக்கவில்லை.

1996 - 2001ல் கருணாநிதி ஒரு மீட்டிங்கில் "தமிழ் வழி கல்வி படித்தவர்கள் வாழ்க்கையில் உயர முடியுமென்பதற்கு நானும் அன்பழகனும் உதாரணம்" என பேசினார்.அதையடுத்து நிருபர்கள் கருணாநிதி/ அன்பழகனிடம் "திமுக மந்திரிகள் யாருடைய மகன்/ பேரன்/ பேத்தியாவது தமிழ்வழி கல்வியில் படிக்கிறார்களா?" என கேட்டபோது பதில் சொல்லாமல் சீறி விழுந்தார்.

தமிழ் எனும் ஓபியத்தை கொடுத்து தமிழனை மயக்கத்தில் ஆழ்த்துவது இக்கட்சிகளுக்கு கைவந்த கலை.

தமிழ்நாட்டில் இருக்கும் தெலுங்கன், மலையாளி,கன்னடனெல்லாம் தமிழனாம். ஏனென்றால் அவனுக்கு கன்னடம்/ மலையாளம்/ தெலுங்கு எழுத (அ) படிக்க தெரியாதாம். அப்படியானால் சிங்கப்பூரில்/ பெங்களூரில்/ ஐதராபாத்தில் இருக்கும் புலம் பெயர்ந்த தமிழன் சிங்கப்பூரானாகவும், தெலுஙனாகவும், கன்னடனாகவும் தானே இருக்க வேண்டும்? அவனுக்கு தமிழ் தெரியவில்லை என்று நாம் வருத்தப்படுவதில் எதாவது பிரயோசனம் உண்டா?

இங்கிருக்கும் கன்னடன்/ தெலுங்கன்/ மலையாளி அவனவன் தாய்மொழியை கற்றுக்கொள்வதில் எந்த ஆர்வமும் காட்டுவதில்லை. தமிழை தாய்மொழியாக ஏற்று உள்ளூர் ஜோதியில் சங்கமித்து விட்டான். அதே மாதிரிதான் தென்னாப்பிரிக்க/பெங்களூர் தமிழனும். அவன் உள்ளத்தால் தென்னாபிரிக்கன்/கன்னடன் தானே தவிர தமிழன் அல்ல.
அதனால் வெளிநாட்டில் தமிழ் மொழியை வளர்க்கிறேன் என கிளம்புவதால் குந்துமணி அளவுக்கு கூட எவனுக்கும் பலனில்லை.

தமிழை கட்டாய பாடமாக்குவது, தமிழ் வழி கல்வி, தமிழ் செம்மொழி எல்லாம் ஓட்டு வங்கி அரசியலுக்கு நன்கு பயன்படும்.

தமிழை வளர்க்கிறேன் என்று கடலில் கொட்டிய பெருங்காயமாய் காசை கரியாக்குவதற்கு பதில் உருப்படியாய் ஸ்கூல்களை கட்டினால் தமிழன் உருப்படுவான்.இங்கே தமிழை வளர்க்கிறேன் என்ற பெயரில் வள்ளுவருக்கு 10 கோடியில் சிலை, ஆந்திராவில் ஐம்பது கோடியில் திராவிட பல்கலைகழகம் அமைப்பது, நூறு கோடி ரூபாய் செலவில் உலக தமிழ் மாநாடு நடத்துவது,வள்ளுவர் கோட்டம் கட்டுவது என ஒபிய வியாபாரம் நடக்கிறது.

said...

//1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059. //

ஏதோ நெருடுகிறது.

10 வது வகுப்பை பல வாரியங்களில் எழுதலாம் (boardக்கு தமிழ் வாரியம்தானே !!)

1. SSLC.
2. Matriculation.
3. Anglo Indian.
4. CBSE.

இதில் Matriculation மற்றும் Anglo Indian படிப்பவர்கள் 10வது முடிந்தபின் மாநில வாரியத்தில்தான் 11, 12 படிக்க முடியும்

CBSE படிப்பவர்கள் 12வது வரையில் CBSEல் படிக்கலாம்.

SSLCல் தமிழுக்கு பதில் பிற மொழிகளை (உதாரணம் தெலுங்கு, கன்னடம்) மொழியாக படிப்பது தமிழகத்தின் வட மாவட்டங்களில் (தெலுங்கு - திருவள்ளூர், வேலூர்; கன்னடம் - வேலூர், தர்மபுரி, கிருஷ்னகிரி) பிற மாவட்டங்களில் இது கிட்ட தட்ட கிடையாது என்றே கொள்ளலாம்

தமிழுக்கு பதில் பிற மொழிகளை (உதாரணம் ஹிந்தி) மொழியாக படிப்பது பெரும்பாலும் Matriculation, Anglo Indian, மற்றும் CBSE வாரியங்களில் தான்.
இது தமிழகம் முழுவதும் உள்ளது

SSLC படிப்பது சுமார் 12 லட்சம் மாணவர்கள் (9ஆவது வகுப்பில் 6 லட்சம், 10ஆவது வகுப்பில் 6 லட்சம்)
Matriculation, Anglo Indian, மற்றும் CBSE படிப்பது சுமார் 7 லட்சம் மாணவர்கள் (9ஆவது வகுப்பில் 3.5 லட்சம், 10ஆவது வகுப்பில் 3.5 லட்சம்)

எனவே மொத்தமாக தமிழ் படிக்காமல் 10வது வகுப்பு தேர்வு எழுதுவது எத்தனை பேர் என்று பார்த்தால் கண்டிப்பாக அது வெறும் 2 சதவிதம் மட்டும் அல்ல. மிகவும் அதிகம்
சரியான தகவல் வேண்டும் என்றால் அரசைத்தான் கேட்க வேண்டும்

said...

//இரண்டாவது கருத்தில் குழந்தைசாமி வித்தியாசமாக யோசிக்கிறார்,ஆனால் செயல்பாடு கஷ்டங்கள் நிறையவே வரும்.இதை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தி இருந்தால் கொஞ்ச நஞ்சம் இருந்த தமிழ் உணர்வு செத்துபோகாமல் இருந்திருக்க கூடும்.ஒரு தலைமுறையே தமிழ் வாசனையே இல்லாமல் செய்துவிட்டு இப்போது ஆரம்பித்தால் விளைவுகளை காண வெகு நாட்கள் ஆகும்.//

குமார், முதலில் ப்ரோபைல் படம் ரொம்ப நல்லா இருக்கு. இவ்வளவு நாளா நான் இதைச் சொல்லவே இல்லையே. ஏன்னு தெரியலை.

செய்யலாம் தப்பே இல்லை. ஆனா நம்ம ஊருக்கு உதவி செய்வதற்குப் பதிலாக இதைச் செய்யுங்கன்னு சொல்லறத்தான் உதைக்குது!

said...

//அவரோட முதல் கருத்துக்கு நானும் ஒத்துப்போகிறேன். கட்டாயப்படுத்துவதாலோ, தமிழ்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதாலோ தமிழ் வளர்ந்து விடப்போவதில்லை. தமிழ்மட்டுமில்ல எல்லா பாடங்களிலும் மாணவர்களுக்கு இயல்பா ஆர்வம் வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.//

ஆமாம் சந்தோஷ், இதுதான் கிட்டத்தட்ட என் நிலையும். ஆனா கவலை வேண்டாம் என்பதற்கு அவர் சொன்ன காரணங்கள் ஒத்து வரலை. ஆனால் தமிழ் படிப்பதை உற்சாகப்படுத்த வேண்டும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதே என் எண்ணம்.

//இரண்டாவது கருத்துல அவர் உதவவேண்டாமுன்னு சொல்லையே? அத்தோட இதையும் செய்தா நல்லா இருக்குமுன்னு சொல்லுறாரு.//

அப்படிச் சொல்லி இருந்தால் பரவாயில்லையே. அதுக்குப் பதிலா இதுன்னு இல்ல சொல்லி இருக்காரு. அதுதான் பிரச்சனையே.

said...

//'பத்தாவது வரை தமிழ் படிப்பது கட்டாயம்' என உத்தரவு வந்ததிலிருந்து இம்மாதிரியான அபத்தக்குரல்கள் ஓங்கி ஒலிக்கிறது 'தனிமனித விருப்பம்' என்ற பெயரில்.//

என்ன சொல்ல வருகிறேன் என்பதை தெரிந்து கொள்ளாமலேயே அபத்தம் என்று முடிவு கட்டினால் அதற்கு மேல் என்ன சொல்ல!

//'எதன்பால் ஈர்ப்பு' என ஒரு மாணவன் அறிவது எந்த வயதில்?

பால்வாடி/ஆரம்பகல்வி மாணவனுக்கு பள்ளியின்மீதே ஈர்ப்பில்லை. அதட்டி பள்ளியில் சேர்ப்பது பெற்றோர் கடமையா இல்லையா?//

எப்படி என் மகன் சிறக்க எந்த பள்ளியில் சேர வேண்டும் என்று நான் முடிவு செய்கிறேனோ அதைப் போல் அவன் நல்ல மதிப்பெண்கள் பெற என்ன வழிகளுண்டோ அத்தனையும் நான் மேற்கொள்வேன். அதனால் அவன் ப்ரெஞ்ச், ஜெர்மன் என படித்தால் மதிப்பெண்கள் பெறுவது எளிது என்பதால் அதையே செய்வேன். ஆனால் தமிழ் தெரிவதற்காக அவனுக்கு நான் வீட்டில் தமிழ் போதிப்பேன். இன்று அவன் பெறும் / இழக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணாலும் அவன் தலைவிதி மாறும் நிலை இருக்கும் பொழுது பள்ளியில் தமிழ் பயில்வதால் அவனுக்குப் பாதிப்புண்டாகும் என்றால் அவன் பள்ளியில் தமிழ் படிக்கத் தேவை இல்லை என்றே முடிவு செய்வேன்.

வேறொரு சம்பவம். என் நண்பர் ஒருவர் வங்கியில் வேலை செய்பவர், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம் மாற வேண்டும். தமிழ்நாட்டின் உள்ளேயே இருக்க முடியும் என்ற உத்திரவாதம் எதுவும் கிடையாது. அப்படி இருக்கையில் எங்கு சென்றாலும் தடையின்றி படிக்கக்கூடிய பாடங்களை அவன் தேர்ந்தெடுக்கத்தான் நான் சிபாரிசு செய்வேன்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இதை எல்லாம் சரி செய்யாமல் தமிழைக் கட்டாயம் கற்றாகவேண்டும் என்ற நிலைப்பாடில் எனக்கு சம்மதம் இல்லை.

//தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் (நன்கு எழுத/படிக்க) தமிழ்கற்றுக்கொள்வது இங்கு சமூகவாழ்வுக்கு அவசியமா இல்லையா?. கற்றுகொடுப்பது அரசின் கடமையா இல்லையா?//

கட்டாயம் கற்றுத் தர வேண்டும். அதற்கான எல்லா கதவுகளையும் திறக்க வேண்டும். ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது. Incentivise, dont force. இதுதான் நான் சொல்ல வருவது.

//சரி, ஒரு மாணவனுக்கு ஆங்கிலத்தின் மீது அல்லது கணக்கின் மீது அல்லது வேறுபாடத்தின் மீது ஈர்ப்பு இல்லையென்றால் அதை படிக்காமல் தவிர்க்க (உயர்நிலை வரை) வழி இருக்கிறதா? இல்லாதபோது, அது கட்டாயபடுத்தல் ஆகாதா?//

மொழி என்பது வேறு, மற்ற பாடங்கள் என்பது வேறு. கணக்கை தமிழிலும் படிக்கலாம் ஆங்கிலத்திலும் படிக்கலாம். அதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நம்மிடையே இருக்கிறது. ஒருவர் நன்றாக விளையாடினாலோ படம் வரைந்தாலோ அவருக்கு கணக்கில் நாட்டமில்லாமல் போனால் விட்டு விட வேண்டும் என்றும் கூறுபவர்கள் உண்டு. அது சரியாகக் கூட இருக்கலாம். ஆனால் எனக்கு, அந்த முறை கல்வியைக் கொண்டு நன்றாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இன்னும் வரவில்லை.

//பிடித்தோ பிடிக்காமலோ பத்தாவது வரை அனைவரும் ஒரு பாடத்திட்டத்தை படித்துதான் தீரவேண்டும். ஒரு மாணவன் தன்னை ஈர்க்கும் பாடம் எது என அறியக்ககூட பாடங்களின் அறிமுகமும் அறிவதற்கான காலமும் அறிந்துகொள்ளும் முதிர்ச்சியும் தேவை. அதற்குதான் பத்தாண்டுகள் நம் கல்வி திட்டத்தில். அதன்பின் தன் விருப்பப்படி தேர்வு செய்ய (ஓரளவு) வழி இருக்கிறது.//

மாணவனுக்கு முதிர்ச்சி இல்லை என்றாலும் அவனை வழிநடத்தும் பெற்றோருக்கு அது உண்டு. அந்த உரிமையை இல்லாமல் செய்வது சரி இல்லை என்பதுதான் என் எண்ணம்.

//ஆக, அரசு தன் கடமையைச் செய்கிறது. செய்யவிடுங்கள்!//
கட்டாயமாக தமிழ் கற்க வேண்டும் எனச் சொல்வது நீங்கள் கடமை என்று சொல்கிறீர்கள். நான் இல்லை எனச் சொல்கிறேன். அதில்தானே இந்த விவாதமே.

said...

//தென்றல்" பத்திரிகையை இணையத்தில் நானும் படித்து வருகிறேன். குழந்தை சாமியின் மேற்கூறிய இரு கருத்துக்களிலும் எனக்குச் சற்றும் உடன்பாடு இல்லை.//

அந்த அபூர்வமான இதழை நான் மட்டுமே படிப்பதாக நினைத்தேன். நீங்களுமா! :))

எனக்கு முதல் கருத்தில் உடன்பாடு உண்டு. அதற்குச் சொல்லப்பட்ட காரணத்தில்தான் உடன்பாடு இல்லை.

நான் தமிழைப் பத்திப் பேசினா நீங்க ஹிந்தி பத்திப் பேசறீங்க. அது வேற ஒரு நாளைக்குப் பேச வேண்டிய மேட்டர். இப்போதைக்கு அதை சாய்ஸில் விடறேன்.

said...

//இந்த இடுகையோட தலைப்பை விட மின்னஞ்சல் தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு. :-)

கொத்தனாரின் குழப்பத்தைத் தீர்க்கும் அறிவு இந்த குறைமதிக்கு இருக்கான்னு தெரியலை. கொஞ்சம் நாள் கழிச்சு திரும்பி வர்றேன்.//

குமரன், உள்ளேன் ஐயாவை இப்படிக் கூட சொல்லலாமா!! கத்துக்கறேன் ஐயா கத்துக்கறேன்.

said...

//தமிழிலேயே அறிவியல், பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்விகளே வர வேண்டும் என்று விரும்பும்பொழுது மொழிப் பாடமாக கட்டாயப் படுத்துவதில் தவறில்லை.//

தமிழில் எல்லா இயல் பாடங்களும் வரட்டும் வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால் தமிழைப் பள்ளியில் படித்தே ஆக வேண்டும் என்பது சரி இல்லை என்பதே என் வாதம்.

//மற்ற மொழிகளை மொழிப்பாடமாக எதற்காக படிக்கிறார்கள்? பெரும்பாலும் அதிக மதிப்பெண்களுக்காகத்தான். தமிழில் அவ்வளவு எளிதாக அதிக மதிப்பெண்கள் பெற முடியாது.//

நீங்களே சொல்கிறீர்களே. நிலமை இப்படி இருக்க ஒவ்வொரு மதிப்பெண்ணுமே முக்கியம் என்று இருக்கும் இந்நாட்களில் பள்ளியில் நீ தமிழ் படிக்க வேண்டாம் எனச் சொல்லும் உரிமை எனக்கு வேண்டும். நான் வீட்டில் தமிழ் சொல்லிக் கொடுப்பேன் அதன் சுவைக்காக மட்டுமே!

//ஆனால் நமது பிறந்த மண்ணை எதற்காக ஒதுக்க வேண்டும் என்பதுதான் புரியவில்லை.//

அதுதான் என் ஆச்சரியமும் கூட. இப்படி ஏன் சொன்னார் என்று.

//ஆங்கில வார்த்தைகளை பெரும்பாலும் உங்கள் பதிவுகளில் தவிர்ப்பீர்கள்.... ஆனால் இந்த பதிவில் மீண்டும் மீண்டும் 'டாக்டர்'தானா? அவரை முனைவர் என்றும் குறிப்பிடலாமே. :-)//

மன்னிக்க வேண்டும். மாற்றி விட்டேன். பதிவு எழுதியது விமானத்தில். டாக்டர் என்றால் முனைவர்தானா என்று ஒரு சந்தேகம் கேட்க ஆட்களும் இல்லை இணையமும் இல்லை. அப்படியே போட்டு விட்டேன். நீங்கள் சுட்டிக் காட்டிய உடன் மாற்றி விட்டேன். கூடவே ஸ்டேட்டஸ் மெசேஜ் என்ற பதத்திற்கு தன்னிலைச் செய்தி என்றும் முழி பெயர்த்து, மன்னிக்கவும், மொழி பெயர்த்து விட்டேன். தவறு செய்யும் பொழுதெல்லாம் இப்படிக் குட்டுங்கள். நன்றி.

said...

//எனக்குத் தான் நெறய ஆணி சேந்து போச்சி, எப்ப விடியுது எப்ப இருட்டுதுதுன்னு தெரியாம கெடக்கேன்னு பாத்தா நீரு எனக்கு மேல இருக்கீரு?//

எல்லாம் ஹெட்லெட்டர். என்ன செய்ய! :((

//பிகு: ஆமா, தமிழ்மணத்துல என்ன தான் நடக்குது? கொஞ்ச நாள் இந்த பக்கம் வரலியா, ஒன்னுமே புரிய மாட்டேங்குது.//

நிம்மதியாத்தானே இருக்கீரு. அப்புறம் என்ன இதெல்லாம் புரிஞ்சுக்கணமுன்னு. சும்மாப் போவீரா... :))

said...

// அப்பாடா...நல்ல வேளை .. ரிப்பீட்டேய் போடுறதுக்கு ஒண்ணுக்கு ரெண்டு ஆளு கிடச்சிட்டாங்க ...நவீனும்,ஸ்ரீதர் நாராயணனும்.//

தருமி, வெறும் ரிப்பீட்டேய்ய்ய்ன்னு போனா நியாயமா?

said...

இந்த பதிவை முழுசா படிச்சிட்டு வர்றேன்... அதுவரைக்கு இதை பாருங்க...
உங்க தன்னிலைச் செய்தியை நான் ஒரு நாள் முன்னரே போட்டுவிட்டேன்...

http://boochandi.blogspot.com/2008/03/blog-post_11.html

said...

//நானும் பொறுமையா எல்லா பின்னூட்டங்களையும் படிச்சிட்டே வந்தேன் அதில தருமி கவனிச்சது மாதிரியே தம்பீ நவினும் (அசத்திபுட்டே), ஸ்ரீதரும் ஒரு மொழி சார்ந்து இருக்க வேண்டிய என் எண்ண நிலையை முன் வைத்திருப்பதனைப் போல உணர முடிந்தது.//

எனக்கு அந்த கருத்துக்களோட உடன்பாடு இல்லை. அவ்வளவுதான்.

said...

//மற்றப்படி, தமிழ் கட்டாயமாக ஒரு பாடமாக படிக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து

ஆனால் தமிழ் வழி கல்வியை கட்டாயப்படுத்தாமல் அவரவர் விருப்பப்படி விட வேண்டும் என்பதும் என் கருத்து//

ப்ரூனோ, மத்த எல்லா விஷயங்களிலும் ஒத்துப் போகிறோம். இந்த ஒன்றைத் தவிர. கட்டாயமாக்குதல் வேண்டாம். அதற்கு பரிசளித்தல் (இன்செண்டிவைஸ்) என்ற வழிமுறை மேல் என்று சொல்கிறேன்.

said...

//நம் அரசாங்க அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சு பணியாலர்கள் பெரும்பாலும் தமிழ் வழி படித்தவர்கள்தான்.

பின் ஏன் அனைத்தையும் (அல்லது பெரும்பாண்மையான கடிதங்களை) ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என்பது எனக்கு புரியாத கேள்வி//

எல்லாக் கடிதங்களும் தமிழிலும் எழுதப்படவேண்டும் அப்படின்னு சட்டம் ஒண்ணும் இல்லையா?

//கையெழுத்து கூட தமிழில் போடுவது கிடையாது :( :( :(//

கையெழுத்து எதில் போட்டா என்ன? இவங்க தமிழில் கையெழுத்துப் போட்டாதான் என்ன ஆகப் போகுது. எல்லாம் ஒரே கோழிக் கிறுக்கலாகத்தான் இருக்கு. இதுக்கெல்லாம் வருந்தி மனதை கஷ்டப்படுத்திக்காதீங்க.

said...

//வரும் தலைமுறைக்குத் தமிழறிவு கட்டாயம் வேண்டும். அதில் ஒரு மாற்று அபிப்பிராயமும் இருக்க் முடியாது.//

வல்லிம்மா, நீங்க சொல்லறது சரிதான். ஆனா அதுக்காக தமிழ் படிச்சே ஆகணும் அப்படின்னு கட்டாயப்படுத்தறது சர்வாதிகாரம். அது சரி இல்லை என்பதுதான் என் வாதம்.

//ரெண்டாவது சொல்வதுதான் சரியாகப் படவில்லை. நம் நாட்டை முதலில் கவனிக்கலாம். அதற்கே போதுமான சக்தி உண்டா என்று பார்க்க வேண்டும்.//

அதே!

said...

ஐயா விஜயபுரி வீரரே, உம்ம கருத்துக்களில் முக்கால்வாசிக்கு மேல எனக்கு தேவை இல்லாதது. ஆனா தமிழ் என்ற மந்திர வார்த்தையை வைத்து இங்கு செய்யப்படும் அக்கிரமங்கள் கண்டு கொஞ்சம் கலக்கமாகவே இருக்கிறது.

நீங்க சொன்ன லிஸ்டில் திரைப்படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டினால் வரிவிலக்கு என்ற முக்கியமான தமிழ் வளர்ப்பு மேட்டரை விட்டுட்டீங்களே.....

said...

//எனவே மொத்தமாக தமிழ் படிக்காமல் 10வது வகுப்பு தேர்வு எழுதுவது எத்தனை பேர் என்று பார்த்தால் கண்டிப்பாக அது வெறும் 2 சதவிதம் மட்டும் அல்ல. மிகவும் அதிகம்
சரியான தகவல் வேண்டும் என்றால் அரசைத்தான் கேட்க வேண்டும்//

எனக்கு இந்தப் புள்ளி விபரமே வேண்டாம். உங்கள் பதிவில் சொன்னதுதான்.

//ப்ரூனோ,நீங்களும் என்னைத் தப்பாக புரிந்து கொண்டு விட்டீர்கள் என்றே நினைக்கிறேன். நான் சொல்ல வந்தது 2% தானே கவலை வேண்டாம் என்பது சரியான வாதம் இல்லை என்பதே. 2%க்குக் கவலை வேண்டாம் என்றால் எதற்குக் கவலைப்பட வேண்டும்? 5% / 10% / 20% ? இப்படி கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான். சதவிகித வாதமே தவறென்பதால்தான் நான் அந்த புள்ளி விபரத்தை பெரிதாக மதிக்கவில்லை.//

தமிழை வளர்க்க எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதற்கு 2%, 20% என்ற வாதமே வேண்டாம். ஆனால் அதற்காக கட்டாயப்படுத்துதல்தான் வழி என்பது மட்டுமே எனக்கு ஒவ்வாத விஷயம்.

said...

இ.கொ,
பதிவுக்கு மிக்க நன்றி.
இந்தப் பதிவின்ரை பொருள் குறிச்சு நான் ஒண்டும் பறைய விரும்பேல்லை.

ஆனால், தமிழகத்தின் நிலமைகளை ஆவலோடை அவதானித்து வருபவன் எண்ட முறையிலை உங்கடை பதிவையும், வவ்வாலின் பதிவு, அந்தப் பதிவுகள் குறிச்சு வாற பின்னூடங்களையும் விடாமல் வாசிச்சுக் கொண்டு வாறேன்.

ரண்டு பேற்றை பதிவிலை இருந்தும், அது குறிச்சு வாற பின்னூடங்கள்ளை இருந்தும் கன சங்கதிகளைத் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்குது.

பி.கு:- வவ்வாலின் பதிவிலை போட்ட பின்னூட்டத்திலை சில மாற்றங்கள் செய்து வெட்டி ஒட்டியிருக்கிறேன்.

said...

கொத்ஸ்,
நீங்க கொழம்பவே வாணாம். தமிழ்நாட்டுல இருந்தா, தமிழ் கட்டாயமா படிச்சுதான் ஆகனும். இப்பவாவது இத கட்டாயப் படுத்துனாங்களேன்னு சந்தோசப்படனும். தமிழ், ஆங்கிலம் - கட்டாயம். இந்தியோ வேறு எந்த மொழியோ - விருப்பப்பட்டால் படிக்கலாம்.

அவர் சொன்ன இரண்டாம் கருத்து பற்றி: முதலில், இந்த தொண்டு நிறுவனங்களின் மூலம் குடுக்கப்படும் இலவசங்களை நிறுத்த வேண்டும். எதுவுமே இலவசமாக கொடுக்கக்கூடாது. இது என் சொந்த அனுபவம். மீன் இலவசமா தருவதை விட மீன் பிடிப்பது எப்படின்னு கத்துக் குடுக்கனும்னு சொல்லுவாங்க. வெளிப் பங்களிப்பு 80% ஊர்ப் பங்களிப்பு 20% இருந்தால்தான் உதவியின் அருமை தெரியும்.

அதே மாதிரி, இந்தியாவிலேயே (தமிழ்நாட்டுலேயே) நிறைய கிராமங்களில் உதவி தேவைப்படுகிறது. அதை விட்டு விட்டு, மொரிஷியஸ், பிஜின்னு போய் என்ன செய்ய முடியும்? தமிழ் இணையப் பல்கலை ஏற்கனவே சேவை செஞ்சுகிட்டு இருக்கு உலகத் தமிழர்களுக்கு. அதை வெளி பரப்பினாலே போதும்.

said...

அன்புள்ள கொத்தனார்

தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் என்று சட்டம் கொண்டு வராவிட்டால் வேறு எங்கு கொண்டு வருவது.

தமிழ் நாட்டில் தமிழ் படிக்காதவர்களுக்கான சிறந்த சதவீதம் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும்.

எந்நாட்டினர் யாவரும் தமிழ் கற்று சிறந்தார் எனக் கேட்டிடும் நாளும் எந்நாளோ.

தமிழ் இருக்கும் நாடே தமிழ் நாடு.

தமில் வேண்டாம் என்பவர்கள் தமிழ் நாட்டுக்கு வேண்டாம்.

தங்களுக்கு கொழப்பம் வேண்டாம். :)

said...

வெற்றி, வருகைக்கு நன்றி.

said...

//தமிழ்நாட்டுல இருந்தா, தமிழ் கட்டாயமா படிச்சுதான் ஆகனும். இப்பவாவது இத கட்டாயப் படுத்துனாங்களேன்னு சந்தோசப்படனும்.//

ஏன்? அதுதான் எனக்குப் புரியலை. கட்டாயமா இதைப் படிக்கணும் அதைப் படிக்கணும் அப்படின்னு உத்தரவு போட நாம இருக்கிறது என்ன மக்களாட்சியா இல்லை வேற எதாவதா?

தமிழ் படிச்சா அதற்கு எதாவது ஊக்கம் தந்தா சரி. அதற்காக தமிழை எடுத்துப் படிக்கிறவங்க அதிகமாகலாம். ஆனா கட்டாயமா படிச்சே ஆக வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

உங்க இரண்டாவது கருத்து எனக்கு சரிதான்.

said...

//தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் என்று சட்டம் கொண்டு வராவிட்டால் வேறு எங்கு கொண்டு வருவது.//

நான் இங்கயே வேண்டாம் என்கிறேன். நீங்க என்னடான்னா வேற எங்க கொண்டு வரலாமுன்னு கேட்கறீங்க. தமிழில் படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை. அதுக்கு எதாவது incentive குடுத்தாலும் சரிதான். ஆனா இந்த கட்டாயமாக்கல் வேண்டாமே.

//தமிழ் நாட்டில் தமிழ் படிக்காதவர்களுக்கான சிறந்த சதவீதம் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும்.//

புரியலை.

//எந்நாட்டினர் யாவரும் தமிழ் கற்று சிறந்தார் எனக் கேட்டிடும் நாளும் எந்நாளோ.

தமிழ் இருக்கும் நாடே தமிழ் நாடு.

தமில் வேண்டாம் என்பவர்கள் தமிழ் நாட்டுக்கு வேண்டாம்.//

யாதும் ஊரேன்னு சொன்னவங்க நாம. அதே மாதிரி எல்லாரும் நம்ம ஊருக்கும் வருவாங்க. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அப்படின்னு வேற சொல்லறோம். இதுல தமிழை படிக்கலைன்னா வெளிய போன்னு சொன்னா என்ன நியாயம்? மத்த மொழிகளை படிக்கும் பொழுது கிடைக்கும் சௌகரியங்கள் தமிழை படித்தாலும் கிடைத்தது என்றால் எதற்குக் கட்டாயம் எல்லாம்?

said...

// 2%க்குக் கவலை வேண்டாம் என்றால் எதற்குக் கவலைப்பட வேண்டும்? 5% / 10% / 20% ? //

0.02 சதவீதம் என்றால் கூட கவலைதான்.

சிறந்த சதவீதம் பூஜ்ஜியம்.

//நான் இங்கயே வேண்டாம் என்கிறேன். நீங்க என்னடான்னா வேற எங்க கொண்டு வரலாமுன்னு கேட்கறீங்க. தமிழில் படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை. அதுக்கு எதாவது incentive குடுத்தாலும் சரிதான். ஆனா இந்த கட்டாயமாக்கல் வேண்டாமே.
//

பலனிருந்தால்தான் தமிழ் படிப்போம் என்பது நல்ல வாதமாக தெரியவில்லை.

தமிழ் இம்மண்ணின் மொழி. இங்கு இருக்க வேண்டியது தமிழ். அதை உறுதிப்படுத்துவது அரசின் கடமை.

தமிழ் ஒருவரது தாய்மொழியாக இல்லாத பட்சத்தில் அவரது தாய்மொழியை அவர் தமிழுக்கு பதிலாய் கற்கலாம். ஆனால் தாய்மொழிக்கான சான்றிதழ் தருவதை கட்டாயமாக்க வேண்டும்.

தாய்மொழி தமிழாக இருக்கும் ஒருவர் எதற்கு தமிழை விடுத்து பிறமொழி கற்கவேண்டும்.

//மத்த மொழிகளை படிக்கும் பொழுது கிடைக்கும் சௌகரியங்கள் தமிழை படித்தாலும் கிடைத்தது என்றால் எதற்குக் கட்டாயம் எல்லாம்?
//

மற்றமொழி படிப்பதால் என்ன செளகரியம் கிடைக்கிறது என்பதை விளக்கினால் நலம்.

அதேபோல் ஆங்கிலம் தமிழ் என இரு மொழிகளும் பாடதிட்டத்தில் இருக்க, தமிழை ஒரு பாடம் என்ற அளவில் படிப்பதால் இழப்பது என்ன.

தாய் தந்தையரை பார்த்து நீங்கள் எனக்கு பெற்றோராய் இருப்பதால் பயன் என்ன என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி.

//வந்தாரை வாழவைக்கும் தமிழகம்//

ஆம். தமிழகம் இங்கு வந்து தமிழை ஏற்பவர்களை வாழவைக்கவே செய்கிறது. அவர்கள் பேசும் மழலைத் தமிழை மகிழ்ச்சியாக ஏற்கவும் செய்கிறது. தமிழை வாழ்விடமாக தேர்ந்தபின் தமிழை ஏற்பதில் என்ன தயக்கம்.

அமெரிக்காவை வாழிடமாக தேர்வு செய்யும் பலர் ஆங்கிலத்தை மொழியாக ஏற்றுக்கொள்வதில்லையா. அமெரிக்காவில் இருப்பேன் ஆனால் ஆங்கிலம் தேவை இல்லை என்று வாதிட முடியுமா.

தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாய் வாழ்வோம். ஆனால் தமிழ் தேவை இல்லை என்பதை எவ்வாறு ஏற்க முடியும்.

இருப்பினும் தமிழக அரசு இந்திய அரசின் இறையாண்மைக்கு உட்பட்டே தமிழ் கட்டாயப்பாடம் என்னும் சட்டம் இயற்றுகிறது. இந்திய அரசியலமைப்புப் படி பொதுமொழியாக ஆங்கிலம் தொடர்கிறது. மற்றமொழியை கற்க விரும்புபவர்கள் மூன்றாவது மொழியாக விருப்பப் பாடமாக பயில வழிவகை செய்யலாம்.

//இதுல தமிழை படிக்கலைன்னா வெளிய போன்னு சொன்னா என்ன நியாயம்?//

இது தமிழனாக இருந்து கொண்டு தமிழ் வேண்டாம் என்று சொல்பவர்களுக்காக சொல்லப்பட்டது.

நன்றி.

said...

பேட்டி எடுத்தவன் என்ற முறையில் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

==========
எனவே மொத்தமாக தமிழ் படிக்காமல் 10வது வகுப்பு தேர்வு எழுதுவது எத்தனை பேர் என்று பார்த்தால் கண்டிப்பாக அது வெறும் 2 சதவிதம் மட்டும் அல்ல. மிகவும் அதிகம்
சரியான தகவல் வேண்டும் என்றால் அரசைத்தான் கேட்க வேண்டும்

===========

இது published source விவரம்தான். தமிழ்நாட்டின் பொதுக் கல்வி இயக்ககம் வெளியிட்ட விவரக் குறிப்புகளை எனக்கு எடுத்துக் காட்டினார். அதிலிருந்துதான் விவரங்களைக் குறித்துக் கொண்டோம். 20 சதம் என்றால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். அதையும் நான் தொகுப்பில் எழுதியிருந்தேன். அந்த வரியும் தென்றலில் இடம் பெற்றிருக்கிறது அல்லவா?

said...

//ஏன்? அதுதான் எனக்குப் புரியலை. கட்டாயமா இதைப் படிக்கணும் அதைப் படிக்கணும் அப்படின்னு உத்தரவு போட நாம இருக்கிறது என்ன மக்களாட்சியா இல்லை வேற எதாவதா?//

நாம இப்போ இருக்குற அமெரிக்காவுலயும் மக்கள் ஆட்சி (அப்பிடித்தான் நெனைக்கிறேன் :)) தான் நடக்குது. பள்ளிகளில் போய் பாருங்க. ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாத மாணவர்களுக்கு 'கட்டாயம்' ஆங்கில போதனை நடக்கிறது. English as Second Language (ESL) class ன்னு அதுக்குப் பேரு. நான் தமிழன், ஆங்கிலமெல்லாம் படிக்க என் பிள்ளையை அனுமதிக்க மாட்டேன்ன்னு சொல்ல முடியுமா? அமெரிக்காவில் பல்லை இளிச்சுகிட்டு அந்த பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் நாம், தமிழ் நாட்டில் ஏன் தமிழ் கட்டாயம் என்பதை ஏற்க மறுக்கிறோம்?

said...

//எல்லாக் கடிதங்களும் தமிழிலும் எழுதப்படவேண்டும் அப்படின்னு சட்டம் ஒண்ணும் இல்லையா? //

இருக்கு. ஆனால் நடைமுறையில் தொழில்நுட்ப விஷயங்களை தமிழில் எழுதுவதில் சில சிரமங்கள் இருக்கின்றது/

ஆனால் விடுமுறை விண்ணப்பம், பணிமாறுதல், ஊதிய உயர்வு போன்றவைகளை தமிழில் எழுதலாம்.

அதை கூட எழுதுவது இல்லை என்பது தான் ஆதங்கம்.

said...

//என் நண்பர் ஒருவர் வங்கியில் வேலை செய்பவர், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம் மாற வேண்டும். தமிழ்நாட்டின் உள்ளேயே இருக்க முடியும் என்ற உத்திரவாதம் எதுவும் கிடையாது. அப்படி இருக்கையில் எங்கு சென்றாலும் தடையின்றி படிக்கக்கூடிய பாடங்களை அவன் தேர்ந்தெடுக்கத்தான் நான் சிபாரிசு செய்வேன்.//

அப்படியென்றால் கன்னடம் அல்லது மராத்தி படிக்க சொல்லுங்கள். இந்த இரு மாநிலங்களிலும் கண்டிப்பாக அம்மொழியை படிக்க வேண்டும் :) :) :)

said...

//ஆனால் அதற்காக கட்டாயப்படுத்துதல்தான் வழி என்பது மட்டுமே எனக்கு ஒவ்வாத விஷயம்.//

இந்த incentive எனக்கு புரியவில்லை.

ஒப்ரு மனிதனின் மிகப்பெரிய incentive அவனது உயிர் !!!. அதை பற்றி கூட கவலைபாடாமல் தலைக்கவசம் அணியாத நம்ம்வர்கள் சட்டம் என்றவுடன் ஜூன் 1ஆம் தேதி தலைக்கவசம் அணிந்தார்கள்

என்வே incentive சில நேரங்களில்தான் வேலை செய்யும். சட்டமும் தேவை

(ஒருவர் சரியான நேரத்திற்குவேலைக்கு வருவதற்கு காரணம் incentive ஆ அல்லது சட்டமா)

said...

//நாம இப்போ இருக்குற அமெரிக்காவுலயும் மக்கள் ஆட்சி (அப்பிடித்தான் நெனைக்கிறேன் :)) தான் நடக்குது. பள்ளிகளில் போய் பாருங்க. ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாத மாணவர்களுக்கு 'கட்டாயம்' ஆங்கில போதனை நடக்கிறது. English as Second Language (ESL) class ன்னு அதுக்குப் பேரு. நான் தமிழன், ஆங்கிலமெல்லாம் படிக்க என் பிள்ளையை அனுமதிக்க மாட்டேன்ன்னு சொல்ல முடியுமா? அமெரிக்காவில் பல்லை இளிச்சுகிட்டு அந்த பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் நாம், தமிழ் நாட்டில் ஏன் தமிழ் கட்டாயம் என்பதை ஏற்க மறுக்கிறோம்?//

தஞ்சாவூரார் ,
அசத்திட்டிங்க போங்க :-))

அங்கேலாம் சனநாயகம் பேசினா கழுத்தப்பிடிச்சு தள்ளிப்புடுவாங்களே அதான், அதை விட இப்போ அமெரிக்காவிற்கு இந்தியாவில் இருந்து மணமாகி செல்லும் பெண்ணும் விசா பெற வேண்டுமெனில் ஆங்கில தேர்வில் தேர்ச்சியாக வேண்டும்னு அமெரிக்க அரசு சட்டம் போட்டு இருக்கே அது குறித்து இன்னும் தகவல் அங்கே வரலையா?

காரணம் அமெரிக்க மருமகள்களை கொடுமை படுத்துவது அதிகரித்துள்ளதாம், பெரும்பாலான பெண்கள் புகார் கொடுக்காதற்கு காரணம் ஆங்கிலம் தெரியாமை என , இப்போ வரும் போதே ஆங்கில அறிவுடன் வர சொல்லிட்டாங்க!

said...

கொத்ஸு,
ரெண்டு கருத்திலுமே எனக்கு ஒப்புதல் இல்லை.

தமிழை கண்டிப்பாக கட்டாய பாடமாக்க வேண்டும். தமிழக அரசு கடினமான முதுநிலை தமிழ் இலக்கியத்தையா கட்டாயப்பாடமாக்க சொல்லுது? அடிப்படை தமிழ் இலக்கணம் தானே? அதுவும் தவிர, நடைமுறையில் பத்தாம் வகுப்பு வரையில் தானே? பத்தாவது வரைக்கும் நாற்பது மதிப்பெண்கள் வாங்கினால் என்ன நூத்துக்கு நூறு வாங்கினால் என்ன?

எப்படியும் வேண்டிய உயர்நிலை வகுப்புகளில் சேரத்தேவைப்படும் பாடங்களில் (கணிதம் மற்றும் அறிவியல்) மட்டும், பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால், கண்டிப்பாக நீங்கள் குறிப்பிடும் 'நல்ல வாழ்க்கை'க்கு எவ்வித இடையூறும் வரப்போவதில்லை. ஆகவே பத்தோடு பதினொன்றாக தமிழையும் கற்றுக்கொள்வதால் ஒரு குடியும் மூழ்கப்போவதில்லை. இதனால் மட்டும் தமிழ் வளர்ந்து விடப்போகிறதா என்ற கேள்வி இத்திட்டம் நிறைவேற்றப்படும் முறையை குறித்தது. இடஒதுக்கீட்டினால் என்ன பயன், ஏழைகளுக்கான சலுகைகளால் என்ன பயன் என்பது போன்ற அர்த்தமற்ற கேள்வியாகிவிடும் அபாயம் இருப்பதால் கண்டிப்பாக திட்டத்தை குறித்து உங்கள் கேள்வி இல்லை என்பது என் துணிபு. முறைகளை மேம்படுத்த வழிசொல்வது வேறு, ஊழலையோ இன்னபிறவற்றையோ காரணம் காட்டி திட்டங்களையே வேண்டாம் என்று சொல்வது வேறு அல்லவா?

'தமிழகத்தில்' தமிழை கட்டாய பாடமாக்க வேண்டுமா வேண்டாமா என்பது விவாதத்துக்குரியதாக இருக்க முடிகிறது என்பதைத்தவிரவும் உண்மையான மக்களாட்சி நடைபெறுகிறது என்பதற்கு என்ன சான்று வேண்டும்? இங்கே பலர் குறிப்பிட்ட படி, சீனாவிலோ ரஷ்யாவிலோ ஜெர்மனியிலோ ப்ரான்சிலோ, ஏன் ‘உண்மையான' மக்களாட்சி நடைபெறும் இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ அந்தந்த மொழிகள் கட்டாயமாக இருக்கிறதா இல்லையா?

தமிழர்களாய் பிறந்து தமிழை படிக்க/எழுத முடியாமல் இருப்பது 0.2% சதவிகிதம் ஆனாலும் நாம் கவலைப்படத்தான் வேண்டும். அதோடுகூட ஏனைய 99.8% சதவீகிதத்தினரின் தமிழறிவை வேறு எவ்வகைகளில், பாடத்திட்ட சீர்த்திருத்தம் உட்பட, செம்மைப்படுத்தலாம் என்பதும் தமிழர்களும் தமிழக அரசும் கவலைப்படவேண்டிய விடயமே.

நீங்கள் சொல்லும் ஊக்கப்படுத்துதல் என்பதை கொச்சையாக சொன்னால் லஞ்சம் கொடுத்தல். திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு ஆயிற்று. அடுத்து என்ன? வீட்டில் தமிழில் பேசினால் வரிவிலக்கு, குழந்தைகளுக்கு தமிழில் பெயரிட்டால் வரிவிலக்கு கொடுக்க வேண்டுமா? இது கேவலமாகப் படுகிறது எனக்கு. தமிழை கட்டாயம் கற்கட்டும். முடிந்தவர்கள் வேற்று மொழிகளையும் கற்கட்டும். இரண்டாவது அல்லது மூன்றாவது பாடமாக. அப்படி தமிழ் தவிர ஏனைய மொழிகளை கற்பவர்களுக்கு வேண்டுமானால் ஊக்கத்தொகை கொடுங்கள். ஆனால் நாம் இருக்கும் காலம் வரையிலுமாவது தமிழ்நாட்டில் தமிழ் கற்பதற்கே ஊக்கத்தொகை கொடுக்கவேண்டிய அவலத்தை பார்க்க வேண்டியிருக்கக்கூடாது என்றுதான் விரும்புகிறேன்.

அடுத்து மற்ற நாட்டில் வாழும் தமிழர்கள். தமிழ்நாட்டில் தமிழ் மென்மேலும் பொதுக்களத்தில் உயர்ச்சியும், பயன்பாடும் பெற பாடுபடும் அதே வேளையில் மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் உதவ முற்பட்டால் அதில் பொருள் உண்டு. அவ்வாறன்றி, தமிழ் கற்பது அவசியமானதொன்று என்று தமிழ்நாட்டு தமிழர்களுக்கே லஞ்சம் கொடுத்து தாஜா செய்யவேண்டிய பரிதாப நிலையில் தமிழகம் இருக்கையில்,மற்ற நாடுகளில் பலதலைமுறையாக வாழ்வோருக்கு தமிழர்களின் பண்பாட்டையும் தமிழின் மேன்மையும் பற்றி விளக்கம் கொடுக்கமுடியுமா?

அதே நேரத்தில் மொரீஷியல், ரீயூனியன் போன்ற நாடுகளில் தமிழ்மொழி திட்டமிட்ட முறையில் விலக்கிவைக்கப்படுகிறது. சிலநாடுகளில் தமிழர்களே வலிந்து தங்கள் தமிழ் அடையாளத்தை தொலைக்க பெரும்பாடு படுகின்றனர். உதாரணத்திற்கு மொரீஷியஸ். அங்கே மொத்த தமிழர் வழி வந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இன்றைக்கு தமிழ்மொழி பேசுவோரின் எண்ணிக்கை 20%. இதுபோன்ற கொடுமைகள் வேறு நாடுகளிலும் நடந்துவருகின்றன. என்ன காரணத்தாலோ மலேசியாவும், சிங்கப்பூரும், இலங்கையும் தமிழகத் தமிழருக்கு தெரிந்த அளவு மற்ற நாடுகள் தெரியாமல் போனது துரதிருஷ்டமே.

said...

//நாம இப்போ இருக்குற அமெரிக்காவுலயும் மக்கள் ஆட்சி (அப்பிடித்தான் நெனைக்கிறேன் :)) தான் நடக்குது. பள்ளிகளில் போய் பாருங்க. ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாத மாணவர்களுக்கு 'கட்டாயம்' ஆங்கில போதனை நடக்கிறது. English as Second Language (ESL) class ன்னு அதுக்குப் பேரு. நான் தமிழன், ஆங்கிலமெல்லாம் படிக்க என் பிள்ளையை அனுமதிக்க மாட்டேன்ன்னு சொல்ல முடியுமா? அமெரிக்காவில் பல்லை இளிச்சுகிட்டு அந்த பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் நாம், தமிழ் நாட்டில் ஏன் தமிழ் கட்டாயம் என்பதை ஏற்க மறுக்கிறோம்?//

ஆங்கிலம் விஞ்ஞானம் போன்றவற்றில் உலக ஆளும் மொழியாகி விட்டது. ஆகையால் தமிழை ஆங்கிலத்தை ஒப்பிடுவது சரியான வாதம் அல்ல.

இன்னும் வரும் நாட்களில், இந்த உத்தரவால் Matriculation பள்ளிகள், CBSE ஆகி விடும்.

said...

//0.02 சதவீதம் என்றால் கூட கவலைதான்.

சிறந்த சதவீதம் பூஜ்ஜியம்.//

சரிதான் அரைப் பிளேடு. அதனாலதான் சொன்னேன். அவர் சொன்ன காரணம் எனக்கு ஒத்துக்க முடியலைன்னு.

//பலனிருந்தால்தான் தமிழ் படிப்போம் என்பது நல்ல வாதமாக தெரியவில்லை.//

கொஞ்சம் நான் சொல்வதைக் கேளுங்க. இப்போ எல்லாம் 8 / 9 ஆம் வகுப்பிலேயே பலரும் நுழைவுத் தேர்வுகளுக்குப் படிக்கத் தொடங்கி விடுகின்றனர். அப்பொழுது ப்ரெஞ்ச் அ, ஆ படிக்க அரை மணி நேரம் போதும். மத்த நேரத்தை மற்ற பாடங்களுக்குச் செலவழிக்கலாம். ஆனா தமிழுக்கு அதிக நேரம் செலவழிக்கணும். என் மகன் என்னையும் ப்ரெஞ்ச் படிக்க வெச்சு இருக்கலாமே. என் நண்பர்கள் அளவு என்னால் நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்து கொள்ள முடியவில்லையே என்று வந்தால் நான் என்ன சொல்வது? இது ஒரு எடுத்துக்காட்டுதான். நான் தமிழுக்கு எதிரி இல்லை. என் மகனுக்குத் தமிழ் கற்றுத் தரத்தான் செய்வேன். ஆனால் அதை பள்ளியில்தான் படித்தாக வேண்டும் என்று கட்டாயப் படுத்துதல்தான் என்னால் சரி என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

//அமெரிக்காவில் இருப்பேன் ஆனால் ஆங்கிலம் தேவை இல்லை என்று வாதிட முடியுமா. //

இது தஞ்சாவூரானுக்கும் சேர்த்துதான். அதிபராக வரத் துடிக்கும் /துடித்த சிலர் உட்பட பல பேர் அமெரிக்க குடியுரிமை பெற வேண்டுமென்றால் ஆங்கில அறிவு அவசியம் என்று சொல்ல அதற்கு பெருத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது ஆங்கிலம் தேவை இல்லை என்று வாதிடுகிறார்கள்.

//இது தமிழனாக இருந்து கொண்டு தமிழ் வேண்டாம் என்று சொல்பவர்களுக்காக சொல்லப்பட்டது.//

மீண்டும் சொல்கிறேன். தமிழ் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதனை கட்டாயமாக்கல் மட்டுமே சரி இல்லை என்று சொல்கிறேன்.

said...

ஹரி கிருஷ்ணன்,

வருகைக்கு நன்றி.

//20 சதம் என்றால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். அதையும் நான் தொகுப்பில் எழுதியிருந்தேன். அந்த வரியும் தென்றலில் இடம் பெற்றிருக்கிறது அல்லவா?//

ஆமாம். ஆனால் அதைத்தான் தவறான அணுகுமுறை என்று சொல்கிறேன். தமிழை மேம்படுத்த எந்த வித சதவிகிதமும் இன்றி பாடுபடுதல் அவசியம். ஆனால் அதற்காக தமிழைக் கட்டாயமாக்குதல் சரி இல்லை என்பது என் எண்ணம்.

இது போன்று நல்ல விவாத களன் அமைக்க ஒரு வாய்ப்பு தந்த உங்கள் நேர்காணலுக்கு நன்றி.

said...

//நாம இப்போ இருக்குற அமெரிக்காவுலயும் மக்கள் ஆட்சி (அப்பிடித்தான் நெனைக்கிறேன் :)) //

புஷ் ஆட்சி விமர்சகர்களைக் கேட்டா இல்லைன்னு சொல்லுவாங்க! :)))


/பள்ளிகளில் போய் பாருங்க. ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாத மாணவர்களுக்கு 'கட்டாயம்' ஆங்கில போதனை நடக்கிறது. English as Second Language (ESL) class ன்னு அதுக்குப் பேரு. நான் தமிழன், ஆங்கிலமெல்லாம் படிக்க என் பிள்ளையை அனுமதிக்க மாட்டேன்ன்னு சொல்ல முடியுமா? அமெரிக்காவில் பல்லை இளிச்சுகிட்டு அந்த பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் நாம், தமிழ் நாட்டில் ஏன் தமிழ் கட்டாயம் என்பதை ஏற்க மறுக்கிறோம்?//

எனக்குத் தெரிந்த விஷயத்தைச் சொல்கிறேன். ஆங்கில வழியில் போதிக்கும் கல்வி ஸ்தாபனங்களில் சேர ஆங்கில அறிவு அவசியம். அதற்காகதான் டோபல் போன்ற தேர்வுகள் நடக்கின்றன. ஆனால் ஆங்கிலம் கட்டாயமாக போதிக்கப் படுகிறது என்பது சரியா எனத் தெரியவில்லை. பள்ளி செல்வதையே கட்டாயமாக்க முடியாத பொழுது இதையா செய்ய முடியும்? அது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் செய்தால் கூட தனியார் பள்ளிகளிலும் அது செய்யப்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். ஏனென்றால் எனக்கு அரசு பள்ளிகளின் ஆங்கிலக் கட்டாயம் வேண்டாமென்றால் ஒரு மாற்று இருக்குமல்லவா.

நான் இருக்கும் எடிஸன், பக்கத்தில் உள்ள சாமர்செட் போன்ற இடங்களில் பள்ளிகளில் ஹிந்தி, சைனீஸ் போன்ற மொழிகள் இரண்டாம் மொழியாகக் கற்றுத் தரப் படுகின்றன.

said...

//ஆனால் விடுமுறை விண்ணப்பம், பணிமாறுதல், ஊதிய உயர்வு போன்றவைகளை தமிழில் எழுதலாம்.

அதை கூட எழுதுவது இல்லை என்பது தான் ஆதங்கம்.//

உங்கள் வருத்ததில் நானும் பங்கு கொள்கிறேன். :(

said...

//அப்படியென்றால் கன்னடம் அல்லது மராத்தி படிக்க சொல்லுங்கள். இந்த இரு மாநிலங்களிலும் கண்டிப்பாக அம்மொழியை படிக்க வேண்டும் :) :) :)//

ப்ரூனோ, இந்தத் தப்பைத்தான் நாமும் செய்ய வேண்டுமா?

அங்குள்ள CBSE பள்ளிகளிலும் கூடவா இந்தக் கட்டாயம்? நான் பெங்களூர் சென்றால் என் மகன் கன்னடம் கற்றுக் கொண்டே ஆக வேண்டுமா? இப்படி நான் விசனப்படுவது போல் தமிழகம் வருபவர்களும் கவலைப் படுவார்கள் அல்லவா? அதைத்தான் வேண்டாம் என்கிறேன்.

said...

//இந்த incentive எனக்கு புரியவில்லை.//

தமிழ் படித்தால், தமிழ் படிக்காதவர்களுக்கு கிடைக்காத சலுகைகள் தரப்பட வேண்டும். தமிழ் படிக்காத காரணத்தால் அவர்கள் பெறும் அனுகூலங்கள் தமிழில் படிப்பவர்களுக்குக் கிடைத்திடச் செய்ய வேண்டும்.

அரசு பள்ளிகளில் கட்டாயமாக்கினால் கூட மற்றவர்களுக்கு மாற்று தரப்பட வேண்டும்.

said...

//அங்கேலாம் சனநாயகம் பேசினா கழுத்தப்பிடிச்சு தள்ளிப்புடுவாங்களே அதான், அதை விட இப்போ அமெரிக்காவிற்கு இந்தியாவில் இருந்து மணமாகி செல்லும் பெண்ணும் விசா பெற வேண்டுமெனில் ஆங்கில தேர்வில் தேர்ச்சியாக வேண்டும்னு அமெரிக்க அரசு சட்டம் போட்டு இருக்கே அது குறித்து இன்னும் தகவல் அங்கே வரலையா?

காரணம் அமெரிக்க மருமகள்களை கொடுமை படுத்துவது அதிகரித்துள்ளதாம், பெரும்பாலான பெண்கள் புகார் கொடுக்காதற்கு காரணம் ஆங்கிலம் தெரியாமை என , இப்போ வரும் போதே ஆங்கில அறிவுடன் வர சொல்லிட்டாங்க!//

வவ்வால், இங்க கூட மொழியைக் கட்டாயப் படுத்த வேண்டும் என ஒரு சிலர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எந்தத் தடையும் இல்லை. அவர்கள் மேல் எந்த முத்திரையும் இல்லை.

ஆனால் நீங்கள் சொல்லி இருக்கும் அமெரிக்க விதி பற்றிய சுட்டிகள் எதாவது தர முடியுமா? இது குறித்து இத்துறையில் இருக்கும் சில நண்பர்களிடம் பேசினேன். அவர்களும் இப்படி ஒன்றும் இல்லை. அப்படி அது போல் இந்தியாவில் செய்தி வந்திருந்தால் தகவல் தாருங்கள் எனச் சொல்கிறார்கள்.

இங்கு மொழியின் காரணமாக எந்த வித பாரபட்சமும் காண்பித்தல் ஆகாது என்பதில் கொஞ்சம் கறாராகவே இருக்கிறார்கள். மொழி தெரியாதவர்களுக்கு உதவவே மொழிபெயர்ப்பாளர்கள் குழு பல இடங்களில் இயங்குகின்றது.

குறிப்பாக மருத்துவமனைகளில் மொழி தெரியாததால் தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமல் போய்விடக் கூடாது என்பதற்காக இது போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் பல மொழிகளுக்கும் இருக்கின்றனர்.

மருத்துவக் கையேடுகள் தமிழிலும் கூடக் கிடைக்கின்றன. Homeland Security என அழைக்கப்படும் அரசு துறையின் வெளியீடுகள் கிட்டத்தட்ட 60 மொழிகளில் வெளியிடப்படுகின்றன. மற்ற மொழியினரை அவமதிக்கக் கூடாது என்பதால் கலாச்சார வித்தியாசங்கள் பற்றிய வகுப்புகளும் அனேக அரசு துறையினருக்கு உண்டு.

நீங்கள் குறிப்பிட்டபடி குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பல தன்னார்வக் குழுக்கள் உதவி செய்து வருகின்றன. மாநில அரசாங்கங்கள் கூட இவர்களுக்கு உதவி புரிவதற்கான accompaniments என்ற உதவியாளர்களை நியமித்து உள்ளன. எனக்குத் தெரிந்தவர்கள் கூட இது போன்ற வேலைகளைச் செய்து வருகின்றனர். ஆங்கில அறிவு இல்லாதவர்கள் மட்டுமில்லை நன்றாக ஆங்கிலம் தெரிந்த, கை நிறைய சம்பாதிப்பவர்கள் கூட இவர்கள் உதவியை நாடுகின்றனர்.

இது நம்ம ஊர்காரர்களுக்கு மட்டுமில்லை. தென் அமெரிக்கா, சைனா, அமீரகம் என பல பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கும் மொழிப் பிரச்சனை இருக்கிறது. அதனால் நீங்கள் குறிப்பிட்டபடி ஆங்கில அறிவு கட்டாயம் என ஒரு விதிமுறை இருந்தால் அது பற்றி மேலும் கொஞ்சம் தெரியக் குடுங்களேன். அது குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் பேச ஏதுவாக இருக்கும். நன்றி.

said...

வாய்யா இராம்ஸூ

//பத்தாவது வரைக்கும் நாற்பது மதிப்பெண்கள் வாங்கினால் என்ன நூத்துக்கு நூறு வாங்கினால் என்ன?//

இது நீங்க சொல்லறீங்க. ஆனா எல்லார் வீடுகளிலும் முதல் மார்க் அவங்க பசங்களே வாங்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். நான் சொன்னது போல் 8/9 ஆம் வகுப்பு மாணவர்கள் எளிதாக கற்றுக் கொள்ளக் கூடிய மொழிகளால் அடையக் கூடிய பலனைப் பேசினேன். தாற்காலிகமாக தமிழகம் வருபவர்கள் நிலமையைப் பற்றிப் பேசினேன். அடிக்கடி பணியிடம் மாறுபவர்களை நிலையைப் பேசினேன். இவர்களுக்கு எல்லாம் ஒரு மாற்று கொடுங்கள் எனக் கேட்கிறேன்.

//முறைகளை மேம்படுத்த வழிசொல்வது வேறு, ஊழலையோ இன்னபிறவற்றையோ காரணம் காட்டி திட்டங்களையே வேண்டாம் என்று சொல்வது வேறு அல்லவா?//

ஊழல் எல்லாம் பின்னாடி, முதலில் இந்த கட்டாயம் வேண்டாம் என்பவர்களுக்கு மாற்று கொடுங்கள். அவர்களுக்கு அரசு பள்ளியில் இடம் தர வேண்டாம் தனியாரை அனுமதியுங்கள். அவர்களுக்கு மாதாமாதம் அதிக சம்பளம் கட்ட வேண்டும் எனச் சொல்லுங்கள். தமிழை எடுத்துக் கொண்டால் உபகாரச் சம்பளம் எனச் சொல்லுங்கள். (சினிமா தலைப்புக்குக் கொடுக்கப்படும் வரிவிலக்கை நீக்கி அதனால் வரும் வரியை இதற்குக் கொடுத்தால் கூட போதுமென்றே நினைக்கிறேன்.)

இவை எல்லாமே சரிதான். ஆனால் கட்டாயம் வேண்டாம் ஒரு மாற்றுக் கொடுங்கள் என்று சொல்கிறேன்.

//ஏன் ‘உண்மையான' மக்களாட்சி நடைபெறும் இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ அந்தந்த மொழிகள் கட்டாயமாக இருக்கிறதா இல்லையா?//

நிறையா பேரு இந்த கேள்வியைக் கேட்டாச்சு, நானும் எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லியாச்சு.

//தமிழர்களாய் பிறந்து தமிழை படிக்க/எழுத முடியாமல் இருப்பது 0.2% சதவிகிதம் ஆனாலும் நாம் கவலைப்படத்தான் வேண்டும். //

இதில் ரகர றகர வம்பு, லகர ளகர ழகர குழப்பம், ந/ன/ண கஷ்டம் என்றெல்லாம் பார்த்தா இது 90%ல் இல்ல போய் நிற்கும். சரியாச் சொல்லித்தர ஏற்பாடு செய்யணும். அப்புறம் யார் தமிழர்கள் என்ற கேள்வி எல்லாம் கேட்க வைக்கிறீங்க. இதெல்லாம் சரி இல்லை சொல்லிட்டேன். :P

//நீங்கள் சொல்லும் ஊக்கப்படுத்துதல் என்பதை கொச்சையாக சொன்னால் லஞ்சம் கொடுத்தல். திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு ஆயிற்று. //

இதெல்லாம் தேவையா? இதனால தமிழ் வளரப் போகுதா? அதுக்குப் பதிலா பள்ளியில் தமிழ் படிச்சா உபகாரச் சம்பளமுன்னு சொன்னா ஒண்ணும் தப்பில்லை.

said...

//கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி//

ரவிசங்கர், பேசும் சுதந்திரம் இருக்கேன்னு பெருமைப் படுங்க. அதுக்காக பேசினாலே தப்புன்னு சொன்னா எப்படி?

கட்டாயமாக்க வேண்டாம் அப்படின்னு சொல்லறேன். நான் சொல்வது ஏன் தப்புன்னு சொல்லுங்க மாத்திக்கறேன். அதை விட்டுட்டு வெறும் செண்டிமெண்ட் பேசினா என்னத்த சொல்ல?

said...

//ஆங்கிலம் விஞ்ஞானம் போன்றவற்றில் உலக ஆளும் மொழியாகி விட்டது. ஆகையால் தமிழை ஆங்கிலத்தை ஒப்பிடுவது சரியான வாதம் அல்ல.//

தமிழும் அந்த நிலமைக்கு கொண்டு வர வேண்டும், நான் அதை வேண்டாம் என்று சொல்லவே இல்லை. அதுக்கு அரசு என்ன விதமான முயற்சிகள் எடுக்குதுன்னு தெரிஞ்சுக்க ஆசைதான்.

//இன்னும் வரும் நாட்களில், இந்த உத்தரவால் Matriculation பள்ளிகள், CBSE ஆகி விடும்.//

அப்போ CBSE பள்ளிகளில் இந்தக் கட்டாயம் கிடையாதா? அப்படி இருந்தாக் கூட போதும்தான். என்ன இன்னும் கொஞ்சம் அதிகம் அந்த பள்ளிகள் வரும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தடுக்கக் கூடாது. அம்புட்டுதான்.

said...

இ.கொ,

அமெரிக்கா போட்ட புதிய உத்தரவு குறித்து சுட்டி தேடுகிரேன், அதற்கிடையே நேற்று தமிழ் மணத்தில் ரிஷான் ஷெரிப் பதிவினைப்பார்த்தேன், அதில் பிரிட்டன் செல்லும் ஆங்கிலம் தெரியாத மருமகள்கள் கட்டாயம் ஆங்கில தேர்வில் தேர்ச்சி பெறனும்னு போட்டு இருக்கார், பிரிட்டன் எப்போதும் வெளியுறவு கொள்கைகளில் அமெரிக்க வழி என்பது தெரிந்ததே.சுமார் 3 மாதத்திற்கு முன்னர் அமெரிக்கா பற்றிய அச்செய்தியைப்பார்த்தேன். விரைவில் விவரம் சொல்கிறேன்.

http://mrishan.blogspot.com/2008/02/blog-post_23.html

இந்தியாவில ரூபா நோட்டில 18 மொழி போட்டு இருக்கு என்பதால் எல்லா மொழிக்கும் சம உரிமைதான்னு சொல்விங்க போல :-))

said...

வவ்வால், பிரிட்டன் செய்து இருப்பது சரியான முடிவே இல்லை என்பது என் எண்ணம். அங்கிருப்பவர்கள் மேலும் தகவல் தரலாம்.

அமெரிக்கா பற்றி நீங்கள் சொன்னதை இங்கு நண்பர்கள் பலரிடம் (குடியுரிமை பெற்றுத் தரும் வழக்கறிஞர்கள் போன்றோர்) பேசினேன். அவர்களுக்கும் இந்தத் தகவல் புதிதாகவே இருக்கிறது.

ஆகையால் முடிந்தால் சுட்டிகள் இருந்தால் கட்டாயம் தரவும். என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்.

said...

//அப்பொழுது ப்ரெஞ்ச் அ, ஆ படிக்க அரை மணி நேரம் போதும். மத்த நேரத்தை மற்ற பாடங்களுக்குச் செலவழிக்கலாம். ஆனா தமிழுக்கு அதிக நேரம் செலவழிக்கணும். என் மகன் என்னையும் ப்ரெஞ்ச் படிக்க வெச்சு இருக்கலாமே. என் நண்பர்கள் அளவு என்னால் நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்து கொள்ள முடியவில்லையே என்று வந்தால் நான் என்ன சொல்வது?//

'கட்டாயம்' என்றாகிவிட்ட பின்பு உங்கள் மகனின் நண்பனும் இங்கு தமிழ் படித்துதானே ஆகவேண்டும். அப்புறம் என்னங்க பிரச்சனை? ஒருவேளை வெளிமாநிலத்தில்/நாட்டில் இருக்கும் நண்பனா?

said...

////ஆங்கிலம் விஞ்ஞானம் போன்றவற்றில் உலக ஆளும் மொழியாகி விட்டது. ஆகையால் தமிழை ஆங்கிலத்தை ஒப்பிடுவது சரியான வாதம் அல்ல.////

//தமிழும் அந்த நிலமைக்கு கொண்டு வர வேண்டும், நான் அதை வேண்டாம் என்று சொல்லவே இல்லை. அதுக்கு அரசு என்ன விதமான முயற்சிகள் எடுக்குதுன்னு தெரிஞ்சுக்க ஆசைதான்.//

ஐயா!, நீங்கள் எங்கே இருக்கிறிர்கள்? வானத்திலா? இல்லை பூமியிலா?. எப்ப விஞ்ஞானத்தமிழ் வளர்வது? சூரியன் பூமியை விழுங்கிய பின்னரா? யதார்த்தாமாக யோசியுங்கள்.

“பருவெண் மட்டுழைத்த” என்றால் என்ன தெரியுமா? விஞ்ஞானத்தை தமிழ் படுக்கிற கூத்தில் தமிழில் படித்த பலரும், மேல் படிப்பில் தடுமாறுகிறார்கள். (ஒன்று/ இரண்டு பேர் தூக்கு மாட்டி இறந்தார்கள், எவ்வளவு வேதனை).யோசியுங்கள்.

விஞ்ஞானத் தமிழை வளப்படுத்த அரசால் ஒன்றும் பெரிதாக சாத்யப்படாது. இந்த உண்மை புரிந்ததால்தான் பெற்றோர்கள் தடுமாறால் சின்ன வயதிலேயே, பிள்ளைகளுக்கு ஆங்கில ஆளுமை வேண்டும் என்று அலைகிறார்கள். இவர்களுக்கு தேவை நல்ல ஆங்கில ஆசிரியர்கள். விஞ்ஞானத்தை தமிழோடு கலந்த ஆங்கிலத்தில் சிறிய வயதிலேயே கற்ப்பித்தால் ஒரு குடியும் மூழ்காது. ஒரு கல்லிலே இரண்டு மாங்காய் அடித்த மாதிரி விஞ்ஞானமும் தெளிவாக புரியும்; மேல் படிப்பு ஆங்கில வார்த்தைகளும் பழக்கமாகும்.

//பிரிட்டன் செய்து இருப்பது சரியான முடிவே இல்லை என்பது என் எண்ணம். அங்கிருப்பவர்கள் மேலும் தகவல் தரலாம்.//

அவர்கள் தங்கள் பிரஜைகள் (குறிப்பாக வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள்) த்ங்களைப் பாதுகாத்து கொள்வதற்கு ஓரளவு ஆங்கிலம் வேண்டும், அரசால் முழு பாதுகாப்பு செய்ய இயலாது என்ற எண்ணத்தில் உதித்த உத்திரவு அது. ஆங்கிலத்தை வளர்ப்பதற்காக போட்ட உத்தரவு அல்ல; தனி மனிதன் எந்த தனி மனிதன் எந்த பாஷையில் கற்கிறான் என்பதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்வது இல்லை.
// அப்போ CBSE பள்ளிகளில் இந்தக் கட்டாயம் கிடையாதா?//
அவைகள் மைய்ய அரசு பள்ளிகள்; இந்த உத்தரவு கட்டு படுத்தாது என நினைக்கிறேன்,தமிழ் நாட்டில் இருப்பவர்கள் confirm செய்யலாம்.

"பருவெண் மட்டுழைத்த” என்றால் frequency modulated’aam!

said...

//'கட்டாயம்' என்றாகிவிட்ட பின்பு உங்கள் மகனின் நண்பனும் இங்கு தமிழ் படித்துதானே ஆகவேண்டும். அப்புறம் என்னங்க பிரச்சனை? ஒருவேளை வெளிமாநிலத்தில்/நாட்டில் இருக்கும் நண்பனா?//

கல்லூரி நுழைவுத் தேர்வுகள் பற்றி பேசுவதால் வெளி மாநில நண்பன் என்றே வைத்துக் கொள்ளலாம். :))

said...

////'கட்டாயம்' என்றாகிவிட்ட பின்பு உங்கள் மகனின் நண்பனும் இங்கு தமிழ் படித்துதானே ஆகவேண்டும். அப்புறம் என்னங்க பிரச்சனை? ஒருவேளை வெளிமாநிலத்தில்/நாட்டில் இருக்கும் நண்பனா?//

கல்லூரி நுழைவுத் தேர்வுகள் பற்றி பேசுவதால் வெளி மாநில நண்பன் என்றே வைத்துக் கொள்ளலாம். :))//

மீசைல மண் ஒட்டலைனு பேசும் விருப்பமா இ.கொ?

வெளி மாநில மாணவன் எனில் அவன் என்ன மொழி படித்தால் என்ன? அவன் தமிழனாக இருந்தாலும்(10, அல்லது 12 ஆம் வகுப்புகள் எந்த மாநிலத்தில் படித்தான் என்ற அடிப்படையில்) கடைசியில் other state quota என்ற வகையில் மட்டுமே அவனால் தமிழக புரொபெஷனல் கல்லூரி நுழைவுத்தேர்வுகளில் கலந்து கொள்ள முடியும், இங்கே தமிழக சூழலை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம் என நான் நினைக்கிறேன்!

said...

//"பருவெண் மட்டுழைத்த” என்றால் frequency modulated’aam!//

அப்படியா? தகவலுக்கு நன்றி. இந்த மாதிரி முழிபெயர்ப்புகள் கொஞ்சம் கஷ்டாமாத்தான் இருக்கு. :)

said...

//கடைசியில் other state quota என்ற வகையில் மட்டுமே அவனால் தமிழக புரொபெஷனல் கல்லூரி நுழைவுத்தேர்வுகளில் கலந்து கொள்ள முடியும்,//

IIT-JEE எல்லாம் நுழைவுத் தேர்வு இல்லையா? அது எல்லாம் இந்தியா முழுசுக்குமே பொதுதானே?

//இங்கே தமிழக சூழலை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம் என நான் நினைக்கிறேன்!//

இங்கு என் மகன் / மகளின் வாழ்க்கை(அது தமிழகத்திலோ, வெளி மாநிலங்களிலோ, வெளிநாடுகளிலோ) சிறப்பாக என்ன எல்லாம் செய்யலாம் என்பதையும் பற்றி அல்லவா யோசிக்கிறேன்.

நான் சொல்வது எல்லாம் கட்டாயப்படுத்தாதீர்கள். அவ்வளவுதான்.

said...

//இங்கு என் மகன் / மகளின் வாழ்க்கை(அது தமிழகத்திலோ, வெளி மாநிலங்களிலோ, வெளிநாடுகளிலோ) சிறப்பாக என்ன எல்லாம் செய்யலாம் என்பதையும் பற்றி அல்லவா யோசிக்கிறேன்.

நான் சொல்வது எல்லாம் கட்டாயப்படுத்தாதீர்கள். அவ்வளவுதான்.//

என் மகனுக்கு ஆங்கிலம் சுத்தமாக வரவில்லை. தமிழ் பிரமாதமாக வருகிறது. தமிழிலேயே மேற்படிப்பு வரை படித்தால் அவன் வாழ்க்கை மிகச்சிறப்பாக அமையும். அவனும் அப்படித்தான் சொல்கிறான். ஆனால் பாருங்கள் தமிழ்நாட்டில் வழியில்லை. பல 'கட்டாயங்கள்'. வேறு எங்காவது வழியிருக்கிறதா என கேட்கிறார் ஒரு நண்பர் அப்பாவியாக.

நீங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர் !

said...

அய்யா,
கட்டாயத் தமிழ் மட்டும்தான் படிக்கணுமாங்கய்யா, இல்ல நமது எம்ஜியார், முரசொலி, தொல்காப்பியப்பூங்கா, புதிய கலாச்சாரம்னு ஆட்சி மாறறதுக்கு ஏத்த மாதிரி பாடத்திட்டமும் மாறுமுங்களாய்யா?
ஒரே குழப்பமா இருக்குதுங்களே அய்யா!

அப்படியே,தமிழ் ஓவரா வளர்ந்து போயி, நாளைக்கு ஒரு மிகப் பிற்படுத்தப்பட்ட தமிழன் மலேசியாவுக்கு குடும்பத்தோட ஆறுமாசம் போற அளவுக்கு வளந்துட்டா, அந்த ஆறு மாசத்துக்காக அவன் மலாய் கத்துக்கணுமா - அப்படின்றதையும் பு த செ வி.

டிஸ்கி:
இது மலேசியாவுலேயே குந்திகினு க்ரீன் கார்ட் வாங்கி அங்கேர்ந்து ஆபீஸ் நேரத்துல தமிழ் வளர்த்து, தமிழ்நாட்டு மக்கள் உரிமைக்காக போராடுறவங்களுக்கு அப்ளை ஆவாதுன்றதால, தனிமனிதத் தாக்குதல் இல்லீங்கய்யா.

said...

//வேறு எங்காவது வழியிருக்கிறதா என கேட்கிறார் ஒரு நண்பர் அப்பாவியாக.//

அதுக்கு வழி செய்யணும். அதை சரி பண்ணறது என் பையனை தமிழ் படிக்கச் சொல்லி கட்டளை போடுவதின் மூலம் வராது. அம்புட்டுதான்.

said...

//IIT-JEE எல்லாம் நுழைவுத் தேர்வு இல்லையா? அது எல்லாம் இந்தியா முழுசுக்குமே பொதுதானே?//

iit -jee க்கு எல்லாம் நீங்க எவ்வளு டோட்டல் மார்க் எடுக்கிறிங்க என்பது கணக்கே கிடையாது நுழைவுத்தேர்வில் எவ்வளவு எடுக்கறிங்க அதன் அடிப்படையில் மட்டுமே இடம், எனவே நீங்க பள்ளியில் எந்த பாடத்தையும் படிக்காமல் பாஸ் ஆகிற அளவுக்கு படிச்சுட்டு நுழைவு தேர்வில் கவனம் செலுத்தலாமே :-))
(ஸ்கூல் பாடத்தை ஒழுங்கா படிக்காதவன் தான் நுழைவுத்தேர்வில் கிழிக்க போறானா)

//இங்கு என் மகன் / மகளின் வாழ்க்கை(அது தமிழகத்திலோ, வெளி மாநிலங்களிலோ, வெளிநாடுகளிலோ) சிறப்பாக என்ன எல்லாம் செய்யலாம் என்பதையும் பற்றி அல்லவா யோசிக்கிறேன்.
//

உண்மைல ரொம்ப தான் கொழம்பிட்டிங்கனு நினைக்கிறேன்,

1)தமிழ அரசின் சட்டம் தமிழகத்தில் படிப்பவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

2)அனைவரும் தமிழ் படிக்க வைப்பதன் மூலம் ஒருவர் மட்டும் எளிதாக பிரெஞ்ச் /ஜெர்மன் எனப்படித்து அதிக மதிப்பெண் வாங்கும் சூழல் ஏற்படாது ஏன் எனில் அவர்களும் தமிழ் படிக்க வேண்டும்.

3)வெளி மாநில, நாடு என்று இருப்போர் அவர்கள் அங்கே உள்ள கல்விமுறையில் எதை வேண்டுமானாலும் படித்துக்கொள்ளட்டும்.

வீட்டில் தமிழ் சொல்லிக்கொடுத்து வளர்த்து விடுவேன் என்கிறீர்கள், அப்படினா எல்லா பெற்றோரும் வீட்டில் பாடம் சொல்லிக்கொடுத்தே தனித்தேர்வர்களாக தேர்வெழுத வைத்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கலாமே எதுக்கு நல்ல பள்ளியில் சேர்க்க பல ஆயிரம் செலவு, சிபாரிசுலாம் பிடிக்கிறாங்க :-))

வீட்டில் பையனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பொறுமை எத்தனைப்பெற்றோருக்கு இருக்கு ?

//நான் சொல்வது எல்லாம் கட்டாயப்படுத்தாதீர்கள். அவ்வளவுதான்.//

எதையும் கட்டாயம் செய்யக்கூடாது என்ற கொள்கை உடையவரோ, அப்படி எனில் அமெரிக்காவில் 14-15 வயதில் உடல் உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு சுதந்திரம் உண்டு, அந்த வயதில் அனைத்தும் அனுபவித்து பார்த்துவிடுவதாக சொல்கிறார்கள், எனவே உங்கள் பிள்ளைகளுக்கும் அப்படிப்பட்ட சுதந்திரம் கொடுங்கள், இந்திய , தமிழ் கலாச்சாரம் என்று கட்டாயப்படுத்தாதீர்கள் :-))

இதற்கும் மேலும் எதுவும் சொல்வதற்கில்லை, உங்களுக்கு சந்தேகம் எனில் ஒரு முயல் பிடித்து அதன் கால்களை எண்ணிப்பார்த்துக்கொள்ளவும் :-))

said...

முயலுக்கு எத்தனை கால் என்று ஒரு பதிவர் கேட்டிருக்கிறார். ஆதலால் பொதுநலத்தை முன்னிட்டு முயல்களைப்பற்றிய நினைவிலிருந்து


கி.பி 1212ஆம் ஆண்டு வரை பல முயல்களுக்கு 2 கால்கள்தான் என்று ஆங்கில விஞ்ஞானி டர்னர் ஆராய்ச்சி செய்து சொல்லியிருக்கிறார்.
ஜான்ஸ்டாப் பெஸ்கோ ன்ற டட்சுக்காரர்தான் பாரீஸ் ராணி தொலைத்த முயலைக் கண்டுபிடித்தார். நவீன விலங்கியலில் முயலுக்கு ஆவரேஜாக 3.75 கால்கள் மட்டுமே என்று விக்கிபீடியா சொல்கிறது.

மீதமிருக்கும் அந்த 0.25% எங்கே போனதென்ற பதட்டத்தில் தான் 1998-ல் ஸ்டாக் மார்கெட் வீழ்ச்சி கூட நடந்தது. அந்த வருடம் மட்டும் புல் பியர் என்று ஸ்டாக் மார்க்கெட்டை அழைக்காமல் ராபிட் இயர் என்று சொல்கிறார்கள்

இந்த அனானி இருக்கும் இடத்தில் யாராவது முயலைப் பத்தி பேசலாமா? அவ்வளவு தைரியம் வந்துவிட்டதா?

said...

ஆந்தை செம நக்குலு

said...

//iit -jee க்கு எல்லாம் நீங்க எவ்வளு டோட்டல் மார்க் எடுக்கிறிங்க என்பது கணக்கே கிடையாது நுழைவுத்தேர்வில் எவ்வளவு எடுக்கறிங்க அதன் அடிப்படையில் மட்டுமே இடம், எனவே நீங்க பள்ளியில் எந்த பாடத்தையும் படிக்காமல் பாஸ் ஆகிற அளவுக்கு படிச்சுட்டு நுழைவு தேர்வில் கவனம் செலுத்தலாமே :-))
(ஸ்கூல் பாடத்தை ஒழுங்கா படிக்காதவன் தான் நுழைவுத்தேர்வில் கிழிக்க போறானா)//

வவ்வால், நான் மட்டும் டோட்டல் மார்க் பத்தியா பேசறேன். காண்டெக்ஸ்ட் இல்லாம பதில் சொன்னா நான் பதில் சொல்லத்தான் முடியாது. "இப்போ எல்லாம் 8 / 9 ஆம் வகுப்பிலேயே பலரும் நுழைவுத் தேர்வுகளுக்குப் படிக்கத் தொடங்கி விடுகின்றனர். அப்பொழுது ப்ரெஞ்ச் அ, ஆ படிக்க அரை மணி நேரம் போதும். மத்த நேரத்தை மற்ற பாடங்களுக்குச் செலவழிக்கலாம். ஆனா தமிழுக்கு அதிக நேரம் செலவழிக்கணும். என் மகன் என்னையும் ப்ரெஞ்ச் படிக்க வெச்சு இருக்கலாமே." என்று என் மகன் கேட்டால் என்ன செய்வது என்பதில்தான் இந்த நுழைவுத் தேர்வு பற்றிய பேச்சே வந்தது. மற்றபடி பள்ளியில் 40 மார்க் வாங்கி பாசானாலும் கூட நுழைவுத் தேர்வுகளில் நன்றாக மார்க் எடுப்பவன் நிலைதானே நன்றாக இருக்கிறது.

//உண்மைல ரொம்ப தான் கொழம்பிட்டிங்கனு நினைக்கிறேன்,//

இப்படி எல்லாம் சம்பந்தா சம்பந்தம் இல்லாம சுத்தி அடிச்சாத்தான் குழப்பம் வருதுன்னு நினைக்கறேன்.

//வெளி மாநில, நாடு என்று இருப்போர் அவர்கள் அங்கே உள்ள கல்விமுறையில் எதை வேண்டுமானாலும் படித்துக்கொள்ளட்டும்.//

ஆனால் அவர்களுடன் போட்டியிட வரும் பொழுது எந்த விதத்திலும் என் மகன் குறைந்து விடக்கூடாது என்று பார்க்க வேண்டும்.

//வீட்டில் தமிழ் சொல்லிக்கொடுத்து வளர்த்து விடுவேன் என்கிறீர்கள், அப்படினா எல்லா பெற்றோரும் வீட்டில் பாடம் சொல்லிக்கொடுத்தே தனித்தேர்வர்களாக தேர்வெழுத வைத்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கலாமே எதுக்கு நல்ல பள்ளியில் சேர்க்க பல ஆயிரம் செலவு, சிபாரிசுலாம் பிடிக்கிறாங்க :-))//

செய்ய முடிந்தவர்கள் செய்யட்டும். என்னால் எல்லா பாடங்களும் கற்றுத் தர முடியாது அதனால் பள்ளிக்கு அனுப்புகிறேன்.

//வீட்டில் பையனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பொறுமை எத்தனைப்பெற்றோருக்கு இருக்கு ? //

இருக்கிறவங்களையாவது செய்ய விடலாமே....

//எனவே உங்கள் பிள்ளைகளுக்கும் அப்படிப்பட்ட சுதந்திரம் கொடுங்கள், இந்திய , தமிழ் கலாச்சாரம் என்று கட்டாயப்படுத்தாதீர்கள் :-))//

சரிங்கண்ணா, நாங்க பாத்துக்கறோம். ஆனா இதுக்கும் எதாவது ஆர்டர் போட்டுடாதீங்க.

//இதற்கும் மேலும் எதுவும் சொல்வதற்கில்லை, //

ரொம்ப நன்றிங்கண்ணா. ஆனா அந்த அமெரிக்க உத்தரவு பற்றிய சுட்டிகளை மட்டும் கொஞ்சம் தாங்கண்ணா. எனக்கு இது வரை கிடைக்கலை. இங்க நிறையா பேரு கிட்ட கேட்டுட்டேன் அவங்களும் இது பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்காங்க.

said...

//இந்த அனானி இருக்கும் இடத்தில் யாராவது முயலைப் பத்தி பேசலாமா? அவ்வளவு தைரியம் வந்துவிட்டதா?//

முயலைப் பத்தி ஆந்தை பேசுவது அழகுதான் போங்கள்! :))

said...

//ஆந்தை செம நக்குலு//

ஆஆ!! நக்கலா! அது புரியாம நான் என்னமோ சொல்லிட்டேனே!! :P

said...

இ.கொ,

//"இப்போ எல்லாம் 8 / 9 ஆம் வகுப்பிலேயே பலரும் நுழைவுத் தேர்வுகளுக்குப் படிக்கத் தொடங்கி விடுகின்றனர். அப்பொழுது ப்ரெஞ்ச் அ, ஆ படிக்க அரை மணி நேரம் போதும். மத்த நேரத்தை மற்ற பாடங்களுக்குச் செலவழிக்கலாம். ஆனா தமிழுக்கு அதிக நேரம் செலவழிக்கணும். என் மகன் என்னையும் ப்ரெஞ்ச் படிக்க வெச்சு இருக்கலாமே." என்று என் மகன் கேட்டால் என்ன செய்வது என்பதில்தான் இந்த நுழைவுத் தேர்வு பற்றிய பேச்சே வந்தது.//

நீங்க இம்புட்டு புத்திசாலியா தெரியாம போச்சே, அதான் எல்லாரும் தமிழ் படிக்கணும்னு சட்டம் போட்ட பொறவும்,, இங்கே ஒருத்தன் மட்டும் பிரென்ச் படிச்சு நேரம் மிச்சம் பண்றான்னு சொல்ல எப்படி வாய்ப்பு வரும்னு கேட்கிறேன்?

எவனா இருந்தாலும் தமிழ் படிக்கத்தான் போறான் எனவே எப்படி அவன் மட்டும் பிரெஞ்ச் படிச்சு நேரம் மிச்சம் செய்வான், தமிழ் மட்டும் தனியா உங்க பையன் எந்த லோகத்தில படிச்சு நேரம் வீண் பண்ணப்போறன் புரியல்ல தயவு செய்து விளக்கவும்(நன்றி:திபிசிடி)

//சரிங்கண்ணா, நாங்க பாத்துக்கறோம். ஆனா இதுக்கும் எதாவது ஆர்டர் போட்டுடாதீங்க//

சரிங்கண்ணா அப்போ இதையும் தமிழ் நாட்டில் வசிக்கிற(நாங்க தானே இங்கே எங்க பசங்களை படிக்க வைக்க போறோம்) நாங்க பாத்துக்கிறோம் நீங்க வீணா கவலைப்பட்டு உடம்பைக்கெடுத்துக்க வேண்டாம் :-))

இன்னொரு சந்தேகம் , நீங்க சொன்னது,
//நான் இருக்கும் எடிஸன், பக்கத்தில் உள்ள சாமர்செட் போன்ற இடங்களில் பள்ளிகளில் ஹிந்தி, சைனீஸ் போன்ற மொழிகள் இரண்டாம் மொழியாகக் கற்றுத் தரப் படுகின்றன.//

அப்படினா அந்த பள்ளியில் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக படிக்காமல் இருக்க முடியுமா?

அனேகமாக முடியாது என்றே நினைக்கிறேன்,(இரண்டாம் மொழினு சொல்லியாச்சு அப்போ அங்கே என்ன முதல் மொழி?) உங்கள் பதிலை பொறுத்து அடுத்த பதில் :-))

said...

//எவனா இருந்தாலும் தமிழ் படிக்கத்தான் போறான் எனவே எப்படி அவன் மட்டும் பிரெஞ்ச் படிச்சு நேரம் மிச்சம் செய்வான், தமிழ் மட்டும் தனியா உங்க பையன் எந்த லோகத்தில படிச்சு நேரம் வீண் பண்ணப்போறன் புரியல்ல தயவு செய்து விளக்கவும்(நன்றி:திபிசிடி)//

உங்களுக்குப் புரிய வைக்கும் அளவு சக்தி இல்லை. தூங்கினாத்தானே எழுப்ப.

தமிழக மாணவர்கள் பல்வேறு தேர்வுகளில் மற்ற மாநில மாணவர்களுடன் போட்டி போடுவார்கள். அதற்கான படிப்பிற்காக இவர்களை விட மற்றவர்களுக்கு நேரம் அதிகம் கிடைக்கும். இது கூட கட்டாயமாக்கலால் வரக்கூடிய பல இடர்பாடுகளில் ஒன்று எனத்தான் சொல்லி இருக்கிறேன். இன்னும் புரியவில்லை என்றால் விட்டு விடுங்கள்.

//சரிங்கண்ணா அப்போ இதையும் தமிழ் நாட்டில் வசிக்கிற(நாங்க தானே இங்கே எங்க பசங்களை படிக்க வைக்க போறோம்) நாங்க பாத்துக்கிறோம் நீங்க வீணா கவலைப்பட்டு உடம்பைக்கெடுத்துக்க வேண்டாம் :-))/

என்ன முட்டாள்தனமான பேச்சு. நான் தமிழ்நாட்டில் இல்லை என்பதால் இதைப் பற்றி பேசக்கூடாதா? நானும் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்தால் அங்குதானே என் மக்கள் படித்தாக வேண்டும். அதனால் நான் பேசத்தான் பேசுவேன். என்னைப் பேசாதே எனச் சொல்ல உங்களுக்கு எந்த விதமான உரிமையும் இல்லை.

//அப்படினா அந்த பள்ளியில் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக படிக்காமல் இருக்க முடியுமா? //

உங்களுக்கு விருப்பமாக இருந்தால் பள்ளிக்கே அனுப்பக்கூட வேண்டாம். யாராலும் கட்டாயப் படுத்த முடியாது. பள்ளிக்கு அனுப்புவதே உங்கள் விருப்பம் என இருக்கையில் என்ன படிப்பது என்றா சட்டம் இருக்கப் போகிறது?

ஆங்கில கல்வி இல்லாமல் சொல்லித் தரும் தனியார் பள்ளிகள் வரக்கூடாது என சட்டம் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

அதற்கு நல்ல demand (இதுக்கு தமிழ்ல சரியான என்ன சொல்லலாம்? தேவை = need, கிராக்கி என்பது நல்ல தமிழ்ச் சொல்லா?) இருந்தால் அப்படி ஒரு பள்ளி ஆரம்பிப்பார்களாக இருக்கும்.

said...

//IIT-JEE எல்லாம் நுழைவுத் தேர்வு இல்லையா? அது எல்லாம் இந்தியா முழுசுக்குமே பொதுதானே?//

IIT-JEE என்ன, தன் மகன்/ள் வேறுபல உலகப்புகழ் பெற்ற பல்கலைகளில் மேற்படிப்பு படித்தால் வாழ்க்கை இன்னும் மிகச்சிறப்பாக இருக்கும் எனக்கூட பல பெற்றோர்கள் விரும்பலாம். ஆனால், அதற்காக அந்நாடுகளின் பாடத்திட்டங்களையெல்லாம் கொண்ட பள்ளிகளை தமிழக அரசு தமிழகத்தில் அறிமுகப்படுத்தவேண்டும் எனக் கோரினால் ஏதாவது அர்த்தம் இருக்குமா? அப்படி இருக்கிறது உங்கள் வாதம்.
அவையெல்லாம் பெற்றோரின் தனிப்பட்ட விருப்பங்கள். அவர்கள்தான் வெளிமாநிலங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ தன் மகன்/ள்-ஐ அனுப்பி படிக்க வைக்கவேண்டும். அல்லது தனிப்பட்ட முறையில் தயார்செய்து கொள்ளவேண்டும். அதற்கு இங்கு தடை சொல்வார் யாருமில்லை.

தமிழக அரசு தமிழ்மக்களுக்கும், மொழிக்கும் தான் பொதுவில் செயலாற்றும்.

said...

தமிழ் உணர்வு தமிழ் வாசனை என்றால் என்ன?

தமிழை கட்டாயமாக்கினால் தமிழ் வளர்ந்துவிடுமா?

கட்டாயமாக்காமல் இருந்ததினால் தமிழ் செத்துவிட்டதா?

மொழியை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள், மொழியைவைத்து இந்தியாவை துண்டாட செய்யதுடிக்கும் அந்நியநாடுகளின் ஏஜண்டுகள்.


ஆங்கிலத்தை இந்திய மொழியாக்கி இந்திய மொழிகளை கிளாசிகள் இந்தியன் லாங்குவஜ் ஆக்கி ஆப்ஷனில் விட்டுவிட வேண்டும்.
அப்படிவிட்டால் உண்மையிலேயெ மொழி ஆர்வமுள்ளவர்கள் அதை வளர்ப்பார்கள்.

மாஸ் இருந்தால் வளராது

said...

கட்டாயப்படுத்துவது என்பது திணிப்பது போல் ஆகிவிடும். எதுவுமே திணிக்கக்கூடாது. இதற்குப் பதிலாக மூன்றாம் மொழியாக தமிழை வைத்து மற்ற மொழி மாணவர்களுக்குக் கற்றுத் தரலாம். இதன் மதிப்பெண்களை மொத்த மதிப்பெண்களில் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த முறை அந்த காலத்தில் இருந்தது. நான் ஹிந்தி அப்படித்தான் கற்றுக் கொண்டேன்.

அவரின் அடுத்த கருத்தில் எனக்கு ஓரளவு ஒப்புதல் உள்ளது. தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு உதவுவது போல மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்.

said...

//தமிழக மாணவர்கள் பல்வேறு தேர்வுகளில் மற்ற மாநில மாணவர்களுடன் போட்டி போடுவார்கள். அதற்கான படிப்பிற்காக இவர்களை விட மற்றவர்களுக்கு நேரம் அதிகம் கிடைக்கும்.//

நாட்டில் இருக்கிறதே மொத்தமோ அஞ்சோ ஆறோ தான் iit அதுல படிக்கப்போறது என்னமோ சில நூறு பேர்தான் அவர்களுக்காக பல லட்சம் மாணவர்களின் தலை விதியை மாற்றனுமா?

இப்போ தமிழ் நாட்டில் கட்டாய தமிழ் இல்லைனா என்ன ஆகும் தெரியுமா வசதி இருக்க மெட்ரிக் பள்ளி மாணவன் கொஞ்ச நேரம் செலவு செய்து பிரெஞ் அ, ஆ படிச்சுட்டு அதிக மார்க் வாங்கி, தமிழ் நாட்டுக்குள்ளவே மெடிக்கல், எஞ்சினியரிங்க் இடத்தை எல்லாம் பிடிச்சுடுவான், அரசு பள்ளி மாணவனுக்கு வாய்ப்பு குறையும், இப்போ இரண்டு பேருமே தமிழ் படிங்கடா என்றால் ஓரளவு சமச்சீரான போட்டி இருக்கும். இது ஏன் உங்க கண்ணுக்கு தெரியலை, iit படிக்க்க போறவனுக்கு வாய்ப்பு கெட்டுப்போகுதுனு மட்டும் சொல்லிக்கிட்டு இருக்கிங்க!

நீங்க சொன்னது தான் தூங்குறவங்கள எழுப்பலாம்! :-))

தமிழக அரசு என்ன செய்யும் இங்கே இருக்க சமச்சீர் இன்மையை நீக்கத்தான் செயல்பட முடியும் இந்தியாவுக்கே செயல்பட முடியுமா?

//சரிங்கண்ணா, நாங்க பாத்துக்கறோம். ஆனா இதுக்கும் எதாவது ஆர்டர் போட்டுடாதீங்க.
//

என்ன முட்டாள் தனம் ,நான் அமெரிக்காவில் இல்லை என்பதால் அங்குள்ள குழந்தைகளுக்கான சுதந்திரம் பற்றிப்பேசக்கூடாதா? நாங்கல்லாம் அமெரிக்கா பக்கமே வர மாட்டோம்னு நினைத்தீர்களா ,எங்க பசங்களை அங்கே சுதந்திரமா வளர்க்க மாட்டோமா? நீங்க மட்டும் எப்படி அப்படி சொல்லலாம் , என்னைப்பார்த்து சொன்னது இப்போ உங்களுக்கு:-))

//அதற்கு நல்ல demand (இதுக்கு தமிழ்ல சரியான என்ன சொல்லலாம்? தேவை = need, கிராக்கி என்பது நல்ல தமிழ்ச் சொல்லா?) இருந்தால் அப்படி ஒரு பள்ளி ஆரம்பிப்பார்களாக இருக்கும்.//

தேவை இன்றைய நிலை என்ன என்பதற்கான பதில், அங்கே ஆங்கிலமே என்ற மொழியைப்படிக்காமல் படிக்க பள்ளி இருக்கா இல்லையா?

என்னமோ தமிழ் நாட்டில் மட்டும் பள்ளிக்கு அனுப்ப சொல்லி கட்டாய சட்டம் போட்டார்ப்போல சொல்றிங்க, இங்கேயும் யாரும் பள்ளிக்கு அனுப்ப தேவை இல்லை, எல்லாம் விருப்பத்தின் படி, தமிழ் படினு சொல்வது கூட படிக்காமல் ஏமாற்ற ஆரம்பித்ததால் தான்?

இந்தியாவில் அனைத்து மாநில பாடத்திட்டத்திலும் ஆங்கிலம் என்ற மொழியே கட்டாயப்பாடமாக தானே இருக்கு, அந்த பாடம் இல்லாமல் படிக்கவே முடியாது, நமது தேவைக்கு அதனை தவிர்த்து படிக்கும் வசதியே இல்லையே ஏன்? கட்டாயப்படுத்துதல் கூடாது எனில் ஆங்கிலம் படிப்பதையும் ஆப்ஷனில் விட வழி வேண்டும் :-))

நானும் என் பையனுக்கு ஆங்கிலத்தை வீட்டில் போதிப்பேனாம் :-))

said...

அட... தமிழ்னு சொன்னாலே ஜிவ்வுன்னு ப்ரஷர் எகிறி, வாள்க தமிள் வெல்க தமிள்னு பிரியாணி குவார்ட்டர் அடிக்கிற கூட்டமாட்டம் டென்சன் ஆகறவங்க நிறைய பேரு இங்கன சுத்திகிட்டு திரியிறாங்க போலிருக்கு.

முதல்ல இந்த தமிழ்/தமிழன் கான்செப்டுக்கு வருவோம். ethnicityயும் raceஐயும் languageஐயும் போட்டு மிக்ஸியில அடிச்சா வரும் சவசவ சட்னிதான் இப்போதைய ‘தமிழர்' என்று சொல்லப்படும் அடையாளம். எல்லாத்துக்குமே கட் ஆப் வச்சிருக்கிற நாம கால சர்ப்ப தோஷங்களப் பொறுத்து, எவ்வளவு நூற்றாண்டுகளுக்கு முன்னாடி நமக்கு சவுகரியப்படுகிற கலாச்சாரம் தோன்றியதோ - கல் தோன்றி மண் தோன்றாக் காலமாகவே அது இருந்தாலும், arbitrary ஆக எடுத்துகிட்டதுதான் இந்த அடையாளம்.

essentialism தியரியெல்லாம் தெரியாமலேயே 'தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு'னு பட்டுக்கோட்டை சொல்லிட்டுப்போனாலும் போனாரு, அதையே பிடிச்சுகிட்டு தொங்கிகிட்டிருக்கோம். அது என்ன தனி குணம், தமிழர் எல்லாருக்கும் அந்த குணம் இருக்கணுமா, இருந்தாதான் தமிழனா அப்படினெல்லாம் ஆராய்ச்சி செஞ்சு அலட்டிக்கிறது ரொம்ப மூளை உபயோகிக்க வேண்டிய விஷயம்கறதாலே, தமிழனா பொறந்தா எல்லாருக்குமே இந்த இந்த குணங்கள் இருந்தே ஆகணும் - இல்லாட்டி போனா அவன் தமிழனே இல்லைனு ஒரு dog tagஐ மாட்டிகிட்டு திரியிற நிலைமைக்கு நம்ம அரசியல்வியாதிகள் தான் கொண்டு வந்துநிறுத்திருக்காங்கன்னா, அதை அப்படியே ‘வேத வாக்கா' எடுத்துகிட்டு படிச்ச மக்களும் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்குங்குற மாதிரி கோஷம் போட்டுகிட்டிருக்கோம்.

இப்படி ஒரே நேர்கோட்டில குதிரை மாதிரி ஓடினா மட்டுமே தெளியிற விளக்கங்களும் கிண்டல்களும் தான் ‘நீ தானே.. தமிழப்பத்தி உனக்கென்ன அக்கறை.. வந்தேறி வகையறா'. ஒரு சமூகத்தில் எல்லா மக்களும் ஒரே மாதிரியாக யோசிக்கக மாட்டாங்கங்கறது அடிப்படையான விஷயம். அப்படி ஒரே மாதிரி யோசிக்கத்தான் மந்திரிச்சு விட்ட கோழி மெண்டாலிடி தான் வேணும்.

said...

தமிழை ஏன் கட்டாயமாக்கக்கூடாது - இங்க நான் பார்த்த வரைக்கும் இரண்டு வகையான பதில்களே இருக்கு - ‘தமிழ் வாழ்க' அல்லது 'தமிழ் மட்டுமே கற்கமுடிந்த மாணவர்களுக்கும் பிற மொழி படிக்க முடிகிற மாணவர்களுக்குமான இடைவெளியை குறைப்பது'. இரண்டாவது அபத்தத்தின் உச்சம். ஐ.டி துறையினரின் அதிக சம்பளத்தை கண்டு பொருமும் மற்றத் துறையினரின் எரிச்சலுக்கு நிகரானது. நம் துறையை எப்படி முன்னேற்றுவது என்பதை விடுத்து அவனை எப்படி கீழே இறக்கலாம் என்று ஆராய்ச்சி செய்வதற்கு ஒப்பானது.

தமிழ் வளர்வதற்கு தமிழை கட்டாயப்படுத்தினால் ஆயிற்றா? பள்ளிப்பாடங்களின் சுமையை மேலும் மேலும் அதிகமாக்குவதன் மூலம் வருங்கால ‘தமிழர்களின்' எண்ணங்களில் தமிழ் என்பது ஒரு திணிக்கப்பட்ட பாடம் என்ற பிம்பம் ஏற்படக்கூடும். அதனால் இத்திட்டத்தினால் ஏற்படும் நல்லவற்றை விட மாணவர்களின் மனதில் திணிக்கப்பட்டது என்ற எண்ணமே மேலோங்கும். மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியால் தமிழ்நாட்டில் விளைந்திருக்கும் இந்தி துவேஷத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும், நாம் பேசுவது எல்லாம் 'பள்ளிப்பருவத்தில் இனி கட்டாயமாக தமிழ் படிக்கவேண்டியிருக்கும் மாணவர்களின்' கண்ணோட்டத்திலிருந்து இல்லை. சுமையை அறியாமல்; பொழுதுபோக தமிழ் வளர்க்கும் நாம் பேசுவது நம் கண்ணோட்டத்திலிருந்துதான். இருக்கிற பாடங்களில், ப்ரெஞ்சோ என்னவோ எடுத்துத்தொலைத்தால் எளிதாக மதிப்பெண் பெறலாம் என்று சொல்லும்வேளையில்: அப்பாடத்திற்கான சுமை குறைவு என்பதும் ஏனைய பாடங்களில் மேலும் கவனம் செலுத்தலாம் என்பதுவும் அதன் மறைபொருள் ஆகும். அதைவிடுத்து ஐடியலிஸம் பேசும் அரசியல்வியாதிகளைப் போலே நாமும் பிள்ளைகளின் மேல் மற்றுமொரு பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன நியாயமோ தெரியவில்லை.

ஆங்கிலம், அறிவியல் கற்க வேண்டியதெல்லாம் கட்டாயமாக இருக்கிறதே என்ற கேள்வி கேட்பவர்கள் தாராளமாக கேளுங்கள். இன்றைய நிலையில் ஆங்கிலமோ கணிதமோ உயிரியலோ கட்டாயமாகப் படிக்கத்தேவையில்லை என்பது தற்கொலைக்கொப்பானதாகும். ஒவ்வொருவரின் கருத்து இதில் மாறுபடலாம். ஆனால் பொதுவாக, எந்த ஒரு தகப்பனும் தன் பிள்ளை மருத்துவராக மட்டுமே ஆகவேண்டும் என்று அஞ்சாம் வகுப்பு முதல் கங்கணம் கட்டிக்கொண்டு கணக்குப்பாடம் வேண்டாம் என்று ஒதுக்கமாட்டான். காரணம் உயர்நிலை வகுப்புகளில் பிள்ளைகளுக்கு கிடைக்கவிருக்கும் choice மிகவும் குறைந்துவிடும் என்ற பயத்தினாலேயே. ஆனால், தமிழ் இங்கே அந்த வகையில் வராது. ஆங்கிலத்துக்கு ஈடும் ஆகாது கல்வியைப் பொறுத்தவரை.

ஏன் இத்தனை ஆண்டுகளாகியும் ஈடாகவில்லை என்பதை அரசும் அறிஞர்களும் ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்ய வழிகோல வேண்டும். முதலில் தமிழைப் படிப்பதன் மூலம் பயனிருக்கிறது என்பது புரிந்தாலேயொழிய விருப்பப்பாடமாக சேரமாட்டார்கள். இதில் தமிழ்விரோதம் கிஞ்சித்தும் இல்லை. ப்ராக்டிகாலிட்டி மட்டுமே. இப்படி பல மாணவர்கள் மதிப்பெண் வேண்டி ப்ரெஞ்சும் சமஸ்கிருதமும் பள்ளிகளில் படிப்பதனால் அந்த மொழிகள் தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கின்றனவா என்பதையாவது யோசித்துப் பார்க்கவேண்டும். ஏன் அவற்றை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது புரிந்தாலே ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் பள்ளிகளில் கட்டாயமாகவோ விருப்பப்பாடமாகவோ ஆக்குவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று விளங்கும்.

said...

பள்ளிகளில் படித்துதான் தமிழ் புரிய வேண்டுமென்ற நிலைமையிலா நாம் இருக்கிறோம்? உதாரணத்திற்கு வெளி மாநிலங்கள் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமிழை பள்ளிகளில் கற்காமலேயே தமிழ் பேசுவது நாம் அறியாததா? கொஞ்சம் கேடுபட்ட தமிழில் தான் பேசுவார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டில் தமிளர்கள் பேசும் மொழியோடு ஒப்பிடுகையில் அந்த இடைவெளி குறைந்துவிடுகிறதே? மேலும், எப்படி மும்பை சென்று ஒரு வருடம் அச்சா அச்சா சொன்னாலே ஹிந்தியை புரிந்துகொண்டு சரளமாக பேச வருகிறதோ அதுபோலவே தமிழகத்தில் சில காலம் இருந்தாலே பிடிபட்டுவிடுகின்ற வகையில் தானே தமிழும் இருக்கிறது?

இதுவரைக்கும் தமிழ் படித்திருக்கிறார்களே. இப்போதைய தமிழர்கள். இவர்களுள் (என்னையும் சேர்த்து) எத்தனை பேருக்கு நாலுவரிகள் எழுத்துப்பிழை, சந்திப்பிழை இல்லாமல் தமிழ் பேச/எழுத தெரியும்? இப்படித்தமிழை கொலைசெய்வதால் தமிழ் வளர்கிறதா என்ன? இல்லையே தமிழை சீரழிக்கிறார்கள் என்றும் நிதமும் புலம்புகிறோமே. தமிழையும் ஆங்கிலத்தையும் போட்டுக்குழப்புவதுடன், தமிழையே சரியாக உச்சரிக்க இயலாத தலைமுறைகளை உருவாக்குவதன் மூலம் நம் தமிழ் வளரப்போகிறதா என்று எண்ணிப்பார்க்க வேண்டாமா? இப்படி அரைவேக்காட்டுத்தனமான தமிழ் பேசுவோரின் எண்ணிக்கையை ஆறு கோடியிலிருந்து பத்துகோடி ஆக்குவது தமிழ் வளர்ச்சியா அல்லது தமிழை செம்மையாக வருங்கால சந்ததியினரிடத்தில பரப்புவது திட்டத்தின் நோக்கமா என்பது விவாதத்துக்குட்படுத்தவேண்டும்.

தமிழகத்தில் தமிழை ஏன் விருப்பப்பாடமாக மாணவர்களோ பெற்றோர்களோ தேர்ந்தெடுக்க மறுக்கிறார்கள் என்று யோசித்து அதனை சரிசெய்ய முற்படாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திணிப்பதால் என்ன பயன் உண்டாகிவிட முடியும்? தமிழ் திணித்தலை எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழர்களே அல்ல என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்க பலத்த முயற்சிகள் நடைபெறுவது ஆபத்தானவை. பெற்றோர்களுக்கு, இப்போது உள்ள தெரிவுகளை மட்டுமாவது காத்துக்கொள்ள உரிமை இருக்கவேண்டும். மற்றவர்கள் பார்வையில் பார்க்கவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் தமிழ் போதை ஏறிய அரசியல்வாதிகளின், அவர்களின் வெண்சாமரப்பணியாளர்களின் வேற்றுப் பிரச்சினைக்குத் தீர்வாக தமிழைக் கட்டாயமாக்குவதன் மூலம் இன்னும் அதிகப்பிளவைத்தான் உருவாக்குகிறோம் என்ற குறைந்தபட்சப் புரிதலாவது வேண்டும்

‘தமிழ் என் பேச்சு! தமிழ் என் மூச்சு!' என்று கொள்கையில் உறுதியாய் நிற்போர் தம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத்தரும் பள்ளியிலோ, ஏன் தமிழ் வழி பாடத்திட்டம் மட்டுமேயுடைய பள்ளிகளிலோ தாராளமாக சேர்த்துக்கொள்ளட்டும். ஆங்கிலம் கலக்காமல் தமிழிலேயே உயர்நிலை வரை படிக்கும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. இன்று நாம் எப்படி ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்று பொழுதெல்லாம் பாடிக்கொண்டே வெளிநாடுகளில் குடியுரிமை வாங்க/அல்லது வருடக்கணக்காக தங்க விசா வாங்குகிறோமோ - அதைப்போலவே இதுவும் ஒரு ப்ராக்டிகல் முடிவு.

இந்த நவீன உலகத்தில், தன் பிள்ளைகளுக்கு தமிழ் கட்டாயமாக தேவையா இல்லையா என்ற விவாதத்தில் 'வேண்டாம்' என்று முடிவெடுப்போர் மேற்சொன்ன ப்ராக்டிகல் காரணங்களுக்காகத்தான் அம்முடிவை எடுக்கிறார்களேயன்றி தமிழின் மேல் இருக்கும் முன்ஜென்மப் பகை காரணமாகவோ அல்லது அவர்கள் தமிழ் அழிய வேண்டுமென்ற விருப்பமுடையவர்களோ நிச்சயமாக இல்லை. அம்மாதிரி கேனத்தனமான முத்திரை குத்தவும் வேறு ‘எந்த பச்சை தமிளனுக்கும்' உரிமை கிடையாது.

said...

// அமெரிக்காவிற்கு இந்தியாவில் இருந்து மணமாகி செல்லும் பெண்ணும் விசா பெற வேண்டுமெனில் ஆங்கில தேர்வில் தேர்ச்சியாக வேண்டும்னு அமெரிக்க அரசு சட்டம் போட்டு இருக்கே//

அந்த அமெரிக்க சட்டம் எங்கண்ணே?இன்னும் தயார் செய்யவில்லயா அண்ணே?

said...

இந்த வார குமுதத்திலிருந்து : (ஞானியின் ஓ பக்கங்கள்) :

தன் பேரக் குழந்தைகளை தமிழ் கற்பிக்கும் டெல்லி தமிழ்ச் சங்கப் பள்ளிகளில் சேர்க்காமல் ஆங்கில கான்வெண்ட்டில் சேர்த்துப் படிக்க வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளான பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் வழிக் கல்வியை ஏற்படுத்திவிடுவார் என்று எப்படி முன்னாள் துணை வேந்தர்கள் வசந்தி தேவி, அவ்வை நடராஜன் போன்றோர் நம்புகிறார்கள் ? வேட்பாளர் சொத்துக் கணக்கு வெளியிடுவது போல தமிழ் வழிக்கல்வி பற்றிப் பேசும் அரசியல்வாதிகள் தங்கள் குடும்பக் குழந்தைகள் யார் யார் எந்தெந்தப் பள்ளிகளில் என்ன படிக்கிறார்கள் என்ற விவரங்களை உடனடியாக வெளியிட முன்வருவார்களா? ஆரம்பக் கல்வியை தமிழ் வழிக் கல்வியாக மாற்றக் கோருபவர்கள், முதல் கட்டமாக தங்கள் வீட்டுக் குழந்தைகளை ஏற்கெனவே தமிழ் மீடியம் இருக்கும் எண்ணற்ற அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 1 முதல் மாற்றி அனுப்புவார்களா ? தமிழ் வழிக்கல்வி என்பது ஏழைத் தமிழர்களுக்கு மட்டும்தானா?

said...

//அப்படியே,தமிழ் ஓவரா வளர்ந்து போயி, நாளைக்கு ஒரு மிகப் பிற்படுத்தப்பட்ட தமிழன் மலேசியாவுக்கு குடும்பத்தோட ஆறுமாசம் போற அளவுக்கு வளந்துட்டா, அந்த ஆறு மாசத்துக்காக அவன் மலாய் கத்துக்கணுமா - அப்படின்றதையும் பு த செ வி.//

யப்பா ராசா, உன் டிஸ்கியைப் பார்த்தா நீ கன்பியூஸ்ட் மாதிரித் தெரியலையே. ரொம்பத் தெளிவா இருக்கிற மாதிரி இல்ல இருக்கு. :)

said...

//ஆனால், அதற்காக அந்நாடுகளின் பாடத்திட்டங்களையெல்லாம் கொண்ட பள்ளிகளை தமிழக அரசு தமிழகத்தில் அறிமுகப்படுத்தவேண்டும் எனக் கோரினால் ஏதாவது அர்த்தம் இருக்குமா?//

அதுக்காக இருக்கிறதை எடுக்கணுமா? அது பாட்டுக்கு இருக்கட்டுமே..

said...

//மாஸ் இருந்தால் வளராது//

சிவாண்ணா, மத்த விஷயமெல்லாம் ஒக்கேதான். இதுதான் உதைக்குது. மாஸும் வேணும்தானே..

said...

//இந்த முறை அந்த காலத்தில் இருந்தது. நான் ஹிந்தி அப்படித்தான் கற்றுக் கொண்டேன். //

பாருங்க ரவி, நல்லதை எல்லாம் விட்டுடறோம். (நான் ஹிந்தி படிப்பதை சொல்லவில்லை ஐயா!)

//தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு உதவுவது போல மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.//

ஆனா இவரு அதுக்குப் பதிலா இதுன்னு இல்ல சொல்லறாரு. அதுதான் சரி இல்லைன்னு சொல்லறேன்.

said...

//இப்போ இரண்டு பேருமே தமிழ் படிங்கடா என்றால் ஓரளவு சமச்சீரான போட்டி இருக்கும்.//

அவங்க ஏன் தமிழில் படிக்காம வேற மொழிக்குப் போறாங்கன்னு ஒரு root cause analysis பண்ணலாம். அந்த பிரச்சனைகளை சரி செஞ்சா தானா வரப்போறாங்க. அதை விட்டுட்டு கட்டாயப்படுத்தறது எல்லாம் treating the symptoms.

//நீங்க மட்டும் எப்படி அப்படி சொல்லலாம் , என்னைப்பார்த்து சொன்னது இப்போ உங்களுக்கு:-))//
அட லூஸு. அது கிண்டல் அப்படிங்கிறது கூடப் புரியலையா. கிண்டலா பேசினேன் பாரு என்னை.....

//நானும் என் பையனுக்கு ஆங்கிலத்தை வீட்டில் போதிப்பேனாம் :-))//

செய்யுங்களேன். அதுக்கு வழியைப் பாருங்க. அதை விட்டுட்டு நானும் தமிழ்தான் பள்ளியில் படிக்கணும் அப்படின்னு அடம் பிடிச்சா எப்படி?

said...

//ஒரு சமூகத்தில் எல்லா மக்களும் ஒரே மாதிரியாக யோசிக்கக மாட்டாங்கங்கறது அடிப்படையான விஷயம். அப்படி ஒரே மாதிரி யோசிக்கத்தான் மந்திரிச்சு விட்ட கோழி மெண்டாலிடி தான் வேணும்.//

ஆமாங்க போதை இல்லாப் பேதை. அதுனாலதான் கட்டாயப்படுத்தல் எல்லாம் கூட தவறுன்னு சொல்லறேன்.

said...

//‘தமிழ் வாழ்க' அல்லது 'தமிழ் மட்டுமே கற்கமுடிந்த மாணவர்களுக்கும் பிற மொழி படிக்க முடிகிற மாணவர்களுக்குமான இடைவெளியை குறைப்பது'. இரண்டாவது அபத்தத்தின் உச்சம். ஐ.டி துறையினரின் அதிக சம்பளத்தை கண்டு பொருமும் மற்றத் துறையினரின் எரிச்சலுக்கு நிகரானது. நம் துறையை எப்படி முன்னேற்றுவது என்பதை விடுத்து அவனை எப்படி கீழே இறக்கலாம் என்று ஆராய்ச்சி செய்வதற்கு ஒப்பானது.//

ஆமாம்! இதேதான் நான் சொல்வது. ஏன் தமிழ் படிக்காமல் விலகிப் போகிறார்கள் என்பதைப் பார்த்து அதனை சரி செய்ய வேண்டுமே தவிர கட்டாயப்படுத்துதல் என்பது தீர்வு அல்ல.

//மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியால் தமிழ்நாட்டில் விளைந்திருக்கும் இந்தி துவேஷத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.//

இதைப் பற்றி நான் வேண்டுமென்றே பேசவில்லை. நீங்கள் இதையும் சொல்லிவிட்டீர்கள்.

//இப்படி பல மாணவர்கள் மதிப்பெண் வேண்டி ப்ரெஞ்சும் சமஸ்கிருதமும் பள்ளிகளில் படிப்பதனால் அந்த மொழிகள் தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கின்றனவா என்பதையாவது யோசித்துப் பார்க்கவேண்டும். ஏன் அவற்றை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது புரிந்தாலே ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் பள்ளிகளில் கட்டாயமாகவோ விருப்பப்பாடமாகவோ ஆக்குவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று விளங்கும்.//

சூப்பராகச் சொல்லி இருக்கீங்க. ரொம்ப நன்றிங்க. நான் சொல்ல வந்ததை ரொம்ப அருமையாகச் சொல்லி இருக்கீங்க.

said...

//இப்படி அரைவேக்காட்டுத்தனமான தமிழ் பேசுவோரின் எண்ணிக்கையை ஆறு கோடியிலிருந்து பத்துகோடி ஆக்குவது தமிழ் வளர்ச்சியா அல்லது தமிழை செம்மையாக வருங்கால சந்ததியினரிடத்தில பரப்புவது திட்டத்தின் நோக்கமா என்பது விவாதத்துக்குட்படுத்தவேண்டும்.//

விவாதமா? இதைப் பற்றி பேசினாலே, ஐயோ தமிழைப் பற்றி தமிழனே இப்படிப் பேசறானே. மத்த மொழிகளில் எல்லாம் இது போல் உண்டான்னு ஒப்பாரி இல்ல வைக்கிறாங்க.

//தமிழகத்தில் தமிழை ஏன் விருப்பப்பாடமாக மாணவர்களோ பெற்றோர்களோ தேர்ந்தெடுக்க மறுக்கிறார்கள் என்று யோசித்து அதனை சரிசெய்ய முற்படாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திணிப்பதால் என்ன பயன் உண்டாகிவிட முடியும்? தமிழ் திணித்தலை எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழர்களே அல்ல என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்க பலத்த முயற்சிகள் நடைபெறுவது ஆபத்தானவை. பெற்றோர்களுக்கு, இப்போது உள்ள தெரிவுகளை மட்டுமாவது காத்துக்கொள்ள உரிமை இருக்கவேண்டும்.//

இந்த மூணு பாயிண்டுமே நான் மீண்டும் மீண்டும் சொல்லறதுதான்.

//இந்த நவீன உலகத்தில், தன் பிள்ளைகளுக்கு தமிழ் கட்டாயமாக தேவையா இல்லையா என்ற விவாதத்தில் 'வேண்டாம்' என்று முடிவெடுப்போர் மேற்சொன்ன ப்ராக்டிகல் காரணங்களுக்காகத்தான் அம்முடிவை எடுக்கிறார்களேயன்றி தமிழின் மேல் இருக்கும் முன்ஜென்மப் பகை காரணமாகவோ அல்லது அவர்கள் தமிழ் அழிய வேண்டுமென்ற விருப்பமுடையவர்களோ நிச்சயமாக இல்லை.//

ரொம்ப அருமையாச் சொல்லி இருக்கீங்க. திணிக்க வேண்டாம் எனச் சொன்ன முனைவர் குழந்தைசாமி ஆகட்டும். அல்லது இந்த விவாதத்தை முன் வைத்த நானாகட்டும் தமிழ் நல்லா இருக்கணும் என்பதில் ஆர்வமுடையவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

said...

போதை இல்லாப் பேதை அவர்களே, நான் சொல்ல வந்த கருத்துக்களை நான் சொன்னதை விட ஆணித்தரமாக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். என் வாதங்கள் உங்கள் ஒருவருக்காவது புரிந்ததே என்று நான் திருப்திப் பட்டுக்கொள்கிறேன். மீண்டும் நன்றி.

said...

//ஆரம்பக் கல்வியை தமிழ் வழிக் கல்வியாக மாற்றக் கோருபவர்கள், முதல் கட்டமாக தங்கள் வீட்டுக் குழந்தைகளை ஏற்கெனவே தமிழ் மீடியம் இருக்கும் எண்ணற்ற அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 1 முதல் மாற்றி அனுப்புவார்களா ? தமிழ் வழிக்கல்வி என்பது ஏழைத் தமிழர்களுக்கு மட்டும்தானா?//

இதெல்லாம் அரசியல் அனானி! அதெல்லாம் கண்டுக்கக்கூடாது.

said...

போதை இல்லா(ப்) பேதை! உங்க மூன்று பின்னூட்டங்களும் அருமை.சொல்கிற விஷயத்தை இவ்வளவு அழ்காக செதுக்கியிருக்கிறீர்களே, ஏங்க வக்கீலுக்கு படிச்சிங்களா? [ஜோதியோட வேலை காலியாக இருக்கு; அம்மாவுக்கு உங்களை மாதிரி ஒரு ஆள் தேவைப்படுது].

said...

//அதுக்காக இருக்கிறதை எடுக்கணுமா? அது பாட்டுக்கு இருக்கட்டுமே..//

ஊருக்கு ஒரு நியாயம்... உங்களுக்கு ஒரு நியாயமா? நல்லா இருக்குண்ணே :)

said...

முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் இரண்டு விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தமிழ் அல்லாத பிற பயிற்றுமொழிகளை கற்கின்றனராதலால் அவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம், என கூறியிருந்தார்.

இதில் இந்த "இரண்டு விழுக்காடு மாணவர்கள்" என்று அறியப்படுபவர்கள் யார் என்று பார்க்க வேண்டும்.

௧) தமிழை பயிற்று மொழியாகவோ இரண்டாம் மொழி-பாடமாகவோ எடுத்துக்கொண்டால் மற்ற பாடங்களில் (முக்கியமாக கணிதம் மற்றும் அறிவியல்) முழு கவனம் செலுத்த முடியாது என்றும் ஆதலால் அதிக மொத்த-மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்று கருதுபவர்கள்.
இதற்கு முதன்மை காரணம் என்னவென்றால் பறங்கி-மொழி வட-மொழி ரூசிய-மொழி ஆகியவைகளில் பாடத்திட்டம் தமிழைக்காட்டிலும் எளிதாக மதிப்பெண் பெற்றுவிடும் அளவில் அமைக்கப்பட்டிருப்பதே.

௨) பொருளாதார அடிப்படையில் உயர் மட்ட வகுப்பில் இருப்பவர்கள்.

இந்த இரு பிரிவினரிலும் கணிசமான அளவு மாணாக்கர்கள் (குழந்தைகள்)
- ஓரளவு அறிவார்ந்தவர்களாகவும் (பெற்றோர்களும் படித்தவர்களாக இருக்கும் பட்சத்தில்)
- மேற்படிப்புகள் படிபபவர்களாகவும்
உள்ளனர்.

இன்றைய நிலையில் தமிழ் என்றல்ல, எல்லா இந்திய மொழிகளுக்கும் தேவை
- ஆராய்ச்சி
- பதிவுகள் (எல்லா ஊடகங்களிலும்)
- ஆரோக்யமான வாதங்கள்
- முறைப்பாடுகள்
மேலுள்ள தேவைகள் போல இன்னும் எத்தனை எத்தனையோ உள்ளன. அத்தனையும் தமிழுக்கு ஊக்கங்களே

98 விழுக்காட்டினர் செய்யபபோகதவைகளையா இந்த இரண்டு விழுக்காட்டினர் செய்துவிடப்போகின்றனர் என்று நீங்கள் கேக்கலாம்.

நிச்சயமாக இல்லை. ஆனால், இந்த இரண்டு விழுக்காட்டினர் தமிழுக்கு தரப்போகும் பயன்களை நாம் என் உதறித்தள்ள வேண்டும்.

ஆங்கிலத்தினை நிச்சயம் மாணவர்கள் பயிலாமல் போவதில்லை. உலகத்தினரோடு உரையாட அது நிச்சயம் இன்றியமையாதது.

வேறென்ன. இந்த தலைப்பில் அதிக வாதங்கள் வேண்டாம்.

தமிழ் வாழ்க
தமிழர் வளர்க

said...

முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் இரண்டு விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தமிழ் அல்லாத பிற பயிற்றுமொழிகளை கற்கின்றனராதலால் அவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம், என கூறியிருந்தார்.

இதில் இந்த "இரண்டு விழுக்காடு மாணவர்கள்" என்று அறியப்படுபவர்கள் யார் என்று பார்க்க வேண்டும்.

௧) தமிழை பயிற்று மொழியாகவோ இரண்டாம் மொழி-பாடமாகவோ எடுத்துக்கொண்டால் மற்ற பாடங்களில் (முக்கியமாக கணிதம் மற்றும் அறிவியல்) முழு கவனம் செலுத்த முடியாது என்றும் ஆதலால் அதிக மொத்த-மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்று கருதுபவர்கள்.
இதற்கு முதன்மை காரணம் என்னவென்றால் பறங்கி-மொழி வட-மொழி ரூசிய-மொழி ஆகியவைகளில் பாடத்திட்டம் தமிழைக்காட்டிலும் எளிதாக மதிப்பெண் பெற்றுவிடும் அளவில் அமைக்கப்பட்டிருப்பதே.

௨) பொருளாதார அடிப்படையில் உயர் மட்ட வகுப்பில் இருப்பவர்கள்.

இந்த இரு பிரிவினரிலும் கணிசமான அளவு மாணாக்கர்கள் (குழந்தைகள்)
- ஓரளவு அறிவார்ந்தவர்களாகவும் (பெற்றோர்களும் படித்தவர்களாக இருக்கும் பட்சத்தில்)
- மேற்படிப்புகள் படிபபவர்களாகவும்
உள்ளனர்.

இன்றைய நிலையில் தமிழ் என்றல்ல, எல்லா இந்திய மொழிகளுக்கும் தேவை
- ஆராய்ச்சி
- பதிவுகள் (எல்லா ஊடகங்களிலும்)
- ஆரோக்யமான வாதங்கள்
- முறைப்பாடுகள்
மேலுள்ள தேவைகள் போல இன்னும் எத்தனை எத்தனையோ உள்ளன. அத்தனையும் தமிழுக்கு ஊக்கங்களே

98 விழுக்காட்டினர் செய்யபபோகதவைகளையா இந்த இரண்டு விழுக்காட்டினர் செய்துவிடப்போகின்றனர் என்று நீங்கள் கேக்கலாம்.

நிச்சயமாக இல்லை. ஆனால், இந்த இரண்டு விழுக்காட்டினர் தமிழுக்கு தரப்போகும் பயன்களை நாம் என் உதறித்தள்ள வேண்டும்.

ஆங்கிலத்தினை நிச்சயம் மாணவர்கள் பயிலாமல் போவதில்லை. உலகத்தினரோடு உரையாட அது நிச்சயம் இன்றியமையாதது.

வேறென்ன. இந்த தலைப்பில் அதிக வாதங்கள் வேண்டாம்.

தமிழ் வாழ்க
தமிழர் வளர்க

said...

செம்மொழித் திட்டம் குறித்த சர்ச்சைகள் இந்த வார குமுதத்திலிருந்து (Reporter):

தமிழ் வளர்ச்சிக்காக ஏற்கெனவே உள்ள அரசு சார்ந்த நிறுவனங்கள் கும்பகர்ண உறக்கத்தில் இருக்க, புதிதாக செம்மொழித் திட்டத்துக்காக சென்னை அருகே எழுபத்தாறு கோடி ரூபாய் செலவில் கட்டடம் கட்டப் போகிறார்கள் என்ற செய்தி தமிழ் ஆர்வலர்களுக்கு எக்கச்சக்க எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

என்றுமுள தென்தமிழ், உயர்தனிச் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டபின், செம்மொழி உயராய்வு மையம் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, பேராசிரியர் ராமசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த செம்மொழி உயராய்வு மையம் செயல்படும் இடம் மைசூர். அங்கே மத்திய அரசு நிறுவனமான இந்திய மொழிகளின் மைய நிறுவனத்தில்தான் செம்மொழி உயராய்வு மையம் செயல் பட்டு வருகிறது.

இந்தநிலையில்தான், செம்மொழிக்குத் தனிக் கட்டடம் வேண்டும் என்று தி.மு.க. அரசு கோரிக்கை எழுப்ப, அதையேற்று எழுபத்து மூன்று கோடியே அறுபது லட்ச ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள சோழிங்கநல்லூரில் பதினேழு ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்க, அங்கு விரைவில் நாற்பது கோடி ரூபாய் செலவில் கட்டடப் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில்தான் புதிய சர்ச்சை.

இந்த சர்ச்சை தொடர்பாக சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், செம்மொழி அந்தஸ்துக்காக ஆரம்பத்தில் இருந்தே போராடியவரும், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும், தற்போது தமிழக வரலாற்றுக் குழுவின் தலைவராகவும் இருக்கும் பேராசிரியர் பொற்கோவை நாம் சந்தித்துப் பேசினோம்.

“தற்போது தமிழ் வளர்ச்சிக்காக அரசு சார்ந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், அறிவியல் தமிழ் மன்றம், தொல்பொருள் ஆய்வு நிறுவனம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் போன்றவை செயல்படுகின்றன. ஆனால், இவற்றின் செயல்பாடுகள் போதிய அளவுக்கு இல்லை. செம்மொழித் திட்டமும் இதேபோல் இருந்துவிடுமோ என்ற அச்சம் என்னைப் போலவே பலருக்கு ஏற்பட்டிருக்கிறது’’ என்றவர், தொடர்ந்தார்.

“தமிழ்ப் பல்கலை புதிய வெளியீடுகள் மூலம் தமிழுக்கு பல நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறது. தமிழ் இணையப் பல்கலைக்கழகமோ துணைவேந்தர், பாடத்திட்டங்கள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. வடமொழிக்கு என்று பல நிறுவனங்கள் இருக்கும்போது, செம்மொழிக்கு என்று தனி அமைப்பு உருவாக்கப்பட்டது பெரிய விஷயம்தான். ஆனால், இந்த அமைப்பும் ஏற்கெனவே உள்ள அமைப்புகள் போல ஆகிவிடக்கூடாது.

சர்வதேசத் தரத்தில் உலக இலக்கியங்களைக் கொண்டு வருவதற்காக 1970_ம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சரியான முறையில் செயல்பட்டிருந்தால், செம்மொழித் திட்டமே தேவைப்பட்டிருக்காது என்பதுதான் என் கருத்து. அந்த நிறுவனம் தொடங்கப்பட்டபோது, மு.வரதராசனார் இயக்குனராக இருந்தார். க.மீனாட்சிசுந்தரம் தலைவராக இருந்தார். அங்கு பல நல்ல காரியங்களைச் செயல்படுத்த முயன்றும் முடியாமல் போய், க.மீனாட்சிசுந்தரம் விலகிக் கொண்டார். அங்கு போதிய பணியிடங்கள் பல நிரப்பப்படாமலேயே உள்ளன.

தற்போது நல்ல தலைமை அமையாமல் போனது தான் அதன் தொய்வுக்குக் காரணம். நான் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் தொடக்கத்தில் இருந்த போது, டைடல் பார்க்கில் அலுவலகம் போட்டு செயல் பட்டார்கள். ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் செயல்பாடும் சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கவில்லை. இதுதவிர, மாநில பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்காகச் செயல்படும் வகுப்புகள் வெறும் துறை என்ற அளவில்தான் உள்ளன. தமிழ் வளர்ச்சி நிறுவனங்களுக்கு ஆட்களைப் போடும்போது தகுதியானவர்களைப¢ போட வேண்டும். முன்பு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ் பயிற்று மொழிக்குழு ஒன்றை உருவாக்கினார்கள். இதன் தலைவராக நியமிக்கப்பட்டவர் ஏ.எல்.முதலியார். ‘அவர் ஆங்கில ஆதரவாளர். அவர் எப்படி தலைவராக இருக்க முடியும்?’ என்று நானும், தமிழறிஞர் சி.சுப்ரமணியம் போன்றவர்களும் சண்டை போட்டோம்.

பொதுவாக, ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்போது தொலைநோக்குப் பார்வை இருக்கவேண்டும். தற் போதுள்ள பல தமிழ் அறிஞர்கள் தமிழின் பெருமைகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு.போப் அவரது நூலில், ‘நான் குறிப்பிட்டதில் தவறு இருக்கிறது. நேட்டிவ் ஸ்காலர் தேவைப்படுகிறார்’ என்றிருக்கிறார். ஆனால் நம்மவர்களோ ஜி.யு.போப் போன்றவர்கள் சொல்வதே உண்மை என்ற மனப்பான்மையில் செயல்படுகிறார்கள். இவர்களுக்கு இன்னும் அடிமைப்புத்தி போகவில்லை.

அதுபோல, தொல்காப்பியர் காலம் கி.மு. 5 என்பது தான் உண்மை. ஆனால் நம்மில் சிலர் கி.மு. 3_க்கு முன், அசோகரின் கல்வெட்டுக்கு முன்னதாக எந்த ஆதாரத்தையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அப்படி இவர்கள் ஏற்றுக் கொண்டால் இதுநாள் வரை அவர்கள் செய்த ஆராய்ச்சியெல்லாம் வீணாகிவிடும் என்பதுதான் காரணம். இது வரலாற்றை மறைக்கும் அப்பட்டமான சதி. இவர்களைப் போன்றவர்கள் தமிழ் வளர்ச்சி அமைப்புகளின் தலைமைப் பதவிக்கு வந்துவிட்டால், இவர்களது கருத்துக்கள்தான் அடுத்த தலைமுறைக்கும் திணிக்கப்படும்.

எனவே, செம்மொழித் திட்டத்திற்கென நல்ல கட்ட மைப்பு, தொலைநோக்குப் பார்வை, சரியான செயல் திட்டம், நிதி ஆதாரம் ஆகியவற்றோடு சரியான நபர்களையும் தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மற்ற அமைப்புகளைப் போல் இதுவும் வேடிக்கைப் பொருளாக ஆகிவிடும்’’ என நிஜமான அக்கறையில் பேசி முடித்தார் பேராசிரியர் பொற்கோ.

செம்மொழித் திட்டம் குறித்து பேராசிரியர் பொற்கோ எழுப்பிய இந்த சந்தேகக் கேள்விகளுக்கு, செம்மொழி உயராய்வு மன்றத்தின் தலைவர் ராமசாமியிடம் விளக்கம் கேட்டோம்.

“மற்ற தமிழ் ஆய்வு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட தொய்வு கண்டிப்பாக செம்மொழித் திட்டத்திற்கு நேராது. இது மத்திய அரசின் நிறுவனம். மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில், மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் இத்துறை செயல்படும். இது ஒரு தன்னாட்சி அமைப்பு. நிதி, ஆட்கள் நியமனம் என அனைத்தையும் மத்திய அரசுதான் செயல்படுத்தும். எனவே, தொய்வு வரும் என்று எதிர்மறையாகச் சிந்திக்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் சில தமிழ் ஆய்வு நிறுவனங்களுக்குத் தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். செம்மொழி நிறுவனம் அவற்றையும் தொடர்ந்து நல்ல முறையில் கொண்டு செல்லப் பாடுபடும். இதற்கான நல்ல அடிப்படையைப் போட்டுள்ளோம். அதனால் எதனோடும் இதனை ஒப்பீடு செய்ய வேண்டாம். எங்களது நோக்கம் மிகத் தெளிவாகவே உள்ளது. சர்வதேச அளவில் தமிழைக் கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்’’ என்றார் அவர் உறுதியாக. எப்படியோ செம்மொழி திட்டம் குறித்த சர்ச்சைகள் முடிவுக்கு வந்தால் சரி.

said...

//அட லூஸு. அது கிண்டல் அப்படிங்கிறது கூடப் புரியலையா. கிண்டலா பேசினேன் பாரு என்னை.....//
அட அசடே நான் கிண்டல் பண்ணது கூட புரியலையே சிரிப்பான் எல்லாம் போட்டப்பிறகும் அப்படித்தானா?

"root cause" பார்க்கணும்னு சொன்னிங்க என்ன பெரிய காரணம் , ரொம்ப மெனக்கெடமா படிக்கணும் பாடத்தை , அப்போ தமிழிலும் 10 இல் , அ,ஆ, அம்மா, ஆடு, இலை ஈ , னு படிக்கிறாப்போல சிலபஸ் வைக்கணும் அதான் தீர்வு, இப்படியே ஒரே அடியா தமிழை ஊத்தி மூடிறலாம்.

அரசாங்க பள்ளிகளில் படிப்பவன் எக்கேடு கெட்டால் என்ன, iit -jee படிக்க வழி வேண்டும் என்ற மனோபாவம் இருக்கவங்க எல்லாம் தமிழ் பற்றாளர்கள் தான்னு உலகமே சொல்லுதே :-))

இந்த பதிவால் என்ன பயனோ தெரியாது நான் கண்டப்பலன், உங்கள் வாயால என்னைலாம் தமிழ் படின்னு சொல்லாதிங்கனு ஒத்துக்கிட்டது தான் கொத்தனார்,

//அதுக்கு வழியைப் பாருங்க. அதை விட்டுட்டு நானும் தமிழ்தான் பள்ளியில் படிக்கணும் அப்படின்னு அடம் பிடிச்சா எப்படி?//

ரொம்ப நன்றிங்கண்ணா :-))

உபரி சந்தேகம்,

எதோ உங்க வீட்டாண்ட இந்திலாம் சொல்லித்தர இஸ்கோல் இருக்குனு சொன்னிங்க , அங்கே இங்கிலிபீசு படிக்காமலே படிப்பை முடிக்க முடியுமானு கேட்டேன், முடியும் ,முடியாது எதாவது சொல்லிட்டுப்போலாமே :-))

said...

//போதை இல்லா(ப்) பேதை! உங்க மூன்று பின்னூட்டங்களும் அருமை.சொல்கிற விஷயத்தை இவ்வளவு அழ்காக செதுக்கியிருக்கிறீர்களே, ஏங்க வக்கீலுக்கு படிச்சிங்களா? //

ஆமாம் ரொம்ப நல்லா எழுதி இருக்காரு. இது இவர் எழுதி இருக்க வேண்டிய பதிவு போல!

//ஜோதியோட வேலை காலியாக இருக்கு; அம்மாவுக்கு உங்களை மாதிரி ஒரு ஆள் தேவைப்படுது].//

ஆஹா, உடனேயே இப்படி ஆப்பு வைக்கறீங்களே!!

said...

//ஊருக்கு ஒரு நியாயம்... உங்களுக்கு ஒரு நியாயமா? நல்லா இருக்குண்ணே :)//

அனானி, எனக்கு மட்டுமா கேட்டேன்?! பொதுவா கட்டாயப்படுத்துதல் வேண்டாம் எனச் சொல்லத்தானே பதிவு. :)

said...

பத்மாக்ஷி (இது சரிதானே?)

நீங்க சொல்லும் கருத்துக்கள் எல்லாமே சரிதான். அந்த 2 சதவிகிதத்தினரும் தமிழையே தேர்ந்தெடுக்க என்ன செய்ய வேண்டும் எனப் பார்த்து அதனை செய்ய வேண்டுமே தவிர கட்டாயப்படுத்துதல் கூடாது என்பதுதான் என் நிலைப்பாடு.

said...

அனானி,

76 கோடி ரூபாய்க்கு கட்டிடங்களா? நல்லது. இப்போ கொஞ்சம் மேட்டர் புரியுது! :))

தலைவர் ராமசாமி கடைசி பத்தியில் சொல்லி இருக்கிறது எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா மத்திய அரசாங்கம் என்ன அவங்களே நினைச்சா முடிவு எடுக்கப் போகுது. நம்ம ஊரில் என்ன சொல்லறாங்களோ அதைத்தான் செய்யப் போகுது. நம்ம ஊரில் ஆரம்பிச்ச மத்த தமிழ் வளர்ப்பு வேலைகள் சரியா நடக்கலைன்னு சொல்லும் போது இதுவாவது சரியா நடக்குமான்னு யோசிக்க வேண்டியதா இருக்கு.

அதெல்லாம் அவங்க செய்யட்டும். தமிழ் வளரட்டும். அதாங்க நம்ம நம்பிக்கை.

said...

//அட அசடே நான் கிண்டல் பண்ணது கூட புரியலையே சிரிப்பான் எல்லாம் போட்டப்பிறகும் அப்படித்தானா? //

மொத தடவை சொன்னா கிண்டல். அதையே திரும்பச் சொன்னா கிளிப்பிள்ளை. ஆனா நீங்க அதுவும் இல்லையே அதான் குழப்பம்.

//"root cause" பார்க்கணும்னு சொன்னிங்க என்ன பெரிய காரணம் , ரொம்ப மெனக்கெடமா படிக்கணும் பாடத்தை , அப்போ தமிழிலும் 10 இல் , அ,ஆ, அம்மா, ஆடு, இலை ஈ , னு படிக்கிறாப்போல சிலபஸ் வைக்கணும் அதான் தீர்வு, இப்படியே ஒரே அடியா தமிழை ஊத்தி மூடிறலாம்.//

ஏன், மற்ற மொழிகளை அவ்வளவு அடிப்படையா இல்லாமக் கூட மாத்தலாம். எடுத்தேன் கவிழ்தேன்னு பேசற விஷயம் இல்லை. ஆனா நமக்குத்தான் உணர்ச்சிப் பெருகிட்டா நிதானமே கிடையாதே. இதைச் செய்ய தமிழறிஞர்கள் (நீங்க புதிசா பட்டம் குடுத்து இருக்கும் தமிழறிஞர்களைச் சொல்லலை. இவங்க எல்லாம் நிஜ அறிஞர்கள்!) பார்த்துச் செய்ய வேண்டிய வேலை.

//அரசாங்க பள்ளிகளில் படிப்பவன் எக்கேடு கெட்டால் என்ன, iit -jee படிக்க வழி வேண்டும் என்ற மனோபாவம் இருக்கவங்க எல்லாம் தமிழ் பற்றாளர்கள் தான்னு உலகமே சொல்லுதே :-))//

நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் அவங்களிலும் தமிழ் மேல் பற்று கொண்டவர்கள் அதிகம் பேர் உண்டு. ஆனா அதையும் நம்ம மக்கள் வருங்காலத்தையும் குழப்பிக்கிற அளவுக்கு பக்குவம் இல்லாதவங்க இல்லை.

//இந்த பதிவால் என்ன பயனோ தெரியாது நான் கண்டப்பலன், உங்கள் வாயால என்னைலாம் தமிழ் படின்னு சொல்லாதிங்கனு ஒத்துக்கிட்டது தான் கொத்தனார்,//

பேஷ் பேஷ். என்னைத் தமிழ்தான் படிக்கணும் அப்படின்னு கட்டாயப்படுத்தாதீங்க அப்படின்னு சொன்னேனே தவிர என்னைத் தமிழ் படின்னு சொல்லாதீங்கன்னு சொல்லலை. இது ரெண்டுக்கும் வித்தியாசம் இன்னமும் புரியலைன்னா பரிதாபமாத்தான் இருக்கு.

//எதோ உங்க வீட்டாண்ட இந்திலாம் சொல்லித்தர இஸ்கோல் இருக்குனு சொன்னிங்க , அங்கே இங்கிலிபீசு படிக்காமலே படிப்பை முடிக்க முடியுமானு கேட்டேன், முடியும் ,முடியாது எதாவது சொல்லிட்டுப்போலாமே :-))//

நம்ம ஊரிலேயே ஆங்கிலம் இல்லாம படிப்பை முடிக்க முடியாது. இங்க மட்டும் முடியுமா? இன்னிக்கு தேதியில் ஆங்கிலத்தில் கல்வி புகட்டும் பள்ளிகள்தான் இங்கு இருக்கு. ஸ்பானிஷ் மொழியில் கற்றுத் தரும் பள்ளிகள் இருக்கலாம். தெரியாது. ஆனா ஒண்ணு புரிஞ்சுக்குங்க. இந்த நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத மொழிகளைக் கூட அம்மொழி பேசுபவர்கள் இங்கு வருவதால் அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும் என்ற சூழல் இருக்கிறது என்பதைச் சொல்லத்தான் அப்படிச் சொன்னேன்.

மற்றபடி அமெரிக்காவில் ஆங்கிலத்தில்தானே எல்லாம் என்ற நீங்கள் பேசினால் பேசிக் கொண்டே இருங்கள். ஏன் என்றால் இந்தப் பதிவில் கூட ஆங்கில அறிவென்பது அனைவருக்கும் தேவை என எத்தனை பேர் சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள்.

said...

//மற்றபடி அமெரிக்காவில் ஆங்கிலத்தில்தானே எல்லாம் என்ற நீங்கள் பேசினால் பேசிக் கொண்டே இருங்கள். ஏன் என்றால் இந்தப் பதிவில் கூட ஆங்கில அறிவென்பது அனைவருக்கும் தேவை என எத்தனை பேர் சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள்.//

அது சரி பேதைகளும், அனானி அப்ரண்டிஸ்களும் தான் எங்கே இருந்தாவது வந்து கருத்தக்கக்கிட்டு போறாங்களே அதை எல்லாம் கண்டிப்பாக பார்க்கத்தான் வேணும்(அது சரி பேதைக்கு ஆப்பு வைத்தால் நீங்க ஃபீல் பண்ரிங்களே :-))

ஆனா என்னை பார் மகனே பார் என்றவர் , எத்தனை பதிவுகள் தமிழ் மொழி கட்டாயம்னு என்பதற்கு ஆதரவாக வந்திருக்கு அதை எல்லாம் ஏன் பார்க்கலையோ :-))சொல்லபோனால் தமிழ் வேண்டும் என்று வந்த பதிவுகள் எண்ணிக்கை அதிகம்(இப்போ உடனே எண்ணிக்கை முக்கியம் அல்லனு ரிவர்ஸ் அடிப்பிங்களே)

அனானி /பேதைகள் சொன்னா அதான் வேதவாக்கு , ஆனால் பதிவா வந்த அது உணர்ச்சிவசப்பட்டு சொன்னதா போய்டும் :-))

முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த நாட்டிலும் அந்த மண்ணின் முதன்மை மொழி இல்லாமல் படிக்கவே முடியாது, அதே போல நாம் ஆங்கிலம் வேண்டும் என்று எடுத்துக்கொண்டாலும் நம் மண்ணின் முதன்மை மொழி தமிழ் இல்லாமல் படிக்க வைக்கும் ஒரு அமைப்பு ஏன்?

தனிப்பட்ட சிலரின் எதிர்கால நன்மைக்கு முக்கியத்துவம் தரும் அளவில் கொஞ்சமாவது ஒட்டும்மொத்த சமுதாயத்தின் எதிர்காலத்திற்கும் கொடுக்கலாமே, அப்படி சொன்னா அது இங்கே தப்பா போய்டுது :-))

சட்டம் போட்டது போட்டாச்சு இனிமேல் நீங்கள் புலம்புவது உங்கள் நேர்த்திக்கடன் :-))உச்ச நீதி மன்றமே தடை விதிக்கமாட்டேன் என்று சொல்லியாச்சு! உங்க கிட்டே இருந்து ஆசிர்வாதம் வாங்காம எப்படினு இருக்குமே :-))

said...

//சட்டம் போட்டது போட்டாச்சு இனிமேல் நீங்கள் புலம்புவது உங்கள் நேர்த்திக்கடன் :-))உச்ச நீதி மன்றமே தடை விதிக்கமாட்டேன் என்று சொல்லியாச்சு! உங்க கிட்டே இருந்து ஆசிர்வாதம் வாங்காம எப்படினு இருக்குமே :-))//

சட்டமே போடப்பட்டாலும் அது சரி இல்லை எனச் சொல்லும் உரிமை எனக்கு உண்டு. அதனால் சொல்லத்தான் செய்வேன். நாட்டில் கைவசம் தேவையான எம் எல் ஏக்கள் இருந்தால் என்ன சட்டம் வேண்டுமானாலும் போடலாம். அப்படி நம்ம முன்னாள் முதல்வர் போட்ட சட்டம் பலது திரும்பப் பெறப்படவில்லையா? அந்த மாதிரி எப்பவாவது நம்மை ஆள்பவர்கள் சிந்தித்து இந்த சட்டத்தையும் திரும்பப் பெறலாம். அது வரை என்னைப் போல் ஆசாமிகள் இப்படி பேசிக் கொண்டே (உங்கள் அளவில் பேத்திக் கொண்டே...) இருந்து விட்டுப் போகிறோம். அது நேர்த்திக்கடனாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

said...

இன்னைக்கு பூரா ரண்டு மனி நேரம் செலவழித்து இந்தப் பதிவு மட்டும் பின்னூட்டங்களைப் படித்திருக்கிறேன்.ஏன்னா வேற வேலை எதுவும் இல்லாததால்.

ஒரு விசயம் புரியலை. இலவசமும் வவ்வாலும் அதுக்கு ஆதாரம் குடு அது பத்தி சொல்லு அப்படீன்னு பின்னூட்டக் கடைசீல லெட்டருல முடிவுல எழுதுவாங்களே" இப்படிக்கு உங்களன்புள்ள" அப்புடீன்ற மாதிரி எழுதி கேட்டுக்கிட்டு இருந்தாங்க..ஒரு கட்டத்துல வவ்வாலுக்கு இலவசகம் பதில் சொல்லிரிச்சு..வவ்வாலு இன்னும் சொல்லலை " இன்னும் அந்த ஆதாரம் தேடிக்கிட்டு இருக்கோ ?"

அடிக்கடி நெறைய பதிவுல பார்க்கிறேன் ..வவ்வாலு இங்கன சொன்ன மாதிரி " அது சரி பேதைகளும், அனானி அப்ரண்டிஸ்களும் தான் எங்கே இருந்தாவது வந்து கருத்தக்கக்கிட்டு போறாங்களே அதை எல்லாம் கண்டிப்பாக பார்க்கத்தான் வேணும் " அப்படீன்னு முத்து உதுத்து இருக்காரு.ஏனுங்கண்ணா அனானி அப்படீன்னு போட்டா கருத்து கக்கக் கூடாதுங்களாண்ணா ? அதே "வவ்வாலு " அப்படீங்குற குல தெய்வத்துக்கு முன்னால மொட்டை போட்டு வச்ச குடும்பப் பெயரோட வந்தா எது வேணா சொல்லலாமுங்களாண்ணா?.அப்படி குடும்பப் பெயர் வச்சுருந்தாதான் கருத்தரிச்சு (கருத்து அரிச்சு என்று பதம் பிரித்துப் பொருள் கொள்க) வாந்தி எடுக்கணுமுங்களா. இந்த தமிழ் பதிவுலக ரூல்ஸ் ஒண்ணும் புரியல போங்க.

உனக்கு ஏண்டா/டீ பொத்துக்குனு வருது அப்படீன்னு கேக்குறீங்களா.நாங்க அனானியாதான் அல்லா எடத்திலியும் பின்னூட்டம் வைக்கிறதுங்கண்ணா..அதான் அனானி பாசபம் பொத்துக்கிடுச்சு .

அனானியா பேமானியான்னு பாக்காதீங்க வவ்வாலண்னா.கமண்டு ரீஜண்டா கீதா அல்லது தனி நபர் தாக்குதல் ரேஞ்சுல கீதா அப்படீன்னு பாருங்கண்ணா.

இது கூட இலவச கொத்தனார் அனானியா வந்து போட்டுக்கினார் அப்படீன்னு நீங்க சொல்லிக்கிடலாமுங்க.அது உங்க பாடு அல்லது இலவசத்துனுடைய பாடு.

said...

அனானி ,

நீங்க எல்லாம் உலக தெய்வம் போல :-)))

//ஒரு கட்டத்துல வவ்வாலுக்கு இலவசகம் பதில் சொல்லிரிச்சு..//

ஓஹ் பதில் சொல்லிரிச்சா எங்கேண்ணா அந்த பதில் ... வாழைப்பழ காமெடி போல அதான் இது என்று பேசுவது தான் பதிலா!

தஞ்சாவூரார் , அமெரிக்காவில் ஆங்கிலம் கட்டாயமாக இல்லையா என்றதுக்கு என்ன சொன்னார் , இலவசம், எடிசனில் இந்தி சொல்லித்தறாங்க, அப்படினு சொன்னார், அப்படினா அவர் நேரடியாக கட்டாயம் இல்லாத போல ஒரு தோற்றம் உருவாக்கினார், நான் இந்தி சொல்லித்தர பள்ளியில் ஆங்கிலம் என்பது ஒரு பாடமாக கூட இல்லையா என்றதும், ஆங்கிலம் முக்கியமான மொழி எனவே அதைப்படிப்பதை கட்டாயம் என்று சொல்ல கூடாதுனு பல்டி அடிச்சார், இதானா அந்த பதில் :-))

அப்போ என்னோட பதில், அதான் பிரிட்டனில் சட்டம் போட்டு இருக்காங்களே, அங்கேயும் தமிழர்கள் இருக்காங்க தானே!

அப்புறம் அனானி , இப்போ நீங்க ஒரு அனானியா வந்து மண்ணைக்கவ்விட்டு அடுத்த நாள் அது யாரோ போல வருவிங்க, அது எனக்கு சாத்தியமில்லை, வவ்வால் என்று பிலாக் இருக்கு அது ஒன்றே போதும், பதிவருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அனானிகளுக்கு எப்போதும் கிடைக்காது!
எனவே அனானிக்கு எல்லாம் அதிகம் முக்கியத்துவம் தர இயலாது.