என் பெற்றோருக்கு நான் கடைசி மகன். அதனால் வளரும் பருவத்தில் கல்லிடைக்குறிச்சியிலும் பின் சென்னையிலும் அவர்களுடன் பல வருடங்கள் இருக்க எனக்கு வாய்த்தது. படிப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்து முதலில் கோவையிலும் பின்னர் பெங்களூரிலும் வாழ நேர்ந்த பொழுதும் கூட அவர்கள் என்னுடனே இருந்தார்கள்.
அமெரிக்கவில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்த பொழுது அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீ கவலைப்படாமல் போ என்று என்னை அனுப்பியது என் அண்ணன்மார் இருவரும்தான். அதன்படியே என் தாய் தந்தை இருவரும் மறையும் வரை அவர்கள்தான் பார்த்துக் கொண்டார்கள். முதுமையில் அவர்களைப் பார்த்துக் கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் இன்று வரை எனக்கு உண்டு. ஆனால் அதற்கு அண்ணன்மார் இருந்தது ஒரு விதத்தில் ஆசுவாசம் அளித்ததும் உண்மைதான்.
அந்த ஆதரவு இல்லை என்றால் என்ன ஆயிருக்கும் என்பது நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பது. பெற்ற குழந்தைகள் ஒருவரோ இருவரோ இருந்தாலும் அவர்கள் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் இருப்பதால் தனிமையில் இருக்கும் பெற்றோர் பலரைப் பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமாக இருக்கும்.

என் நண்பர் மருத்துவர் விஜய் (Vijay Sadasivam) சமீபத்தில் இந்தத் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய குறுந்தொடர் என் எண்ணங்களை கிளர்ந்தெழச் செய்தது. இது குறித்த ஒரு விழிப்புணர்வும், உரையாடலும் இன்றைய சூழலில் அவசியம் என்று எண்ணி அந்தத் தொடரை அப்படியே மொழிமாற்றம் செய்யாமல், அதன் சாராம்சத்தை எடுத்துக் கொண்டு அதை தமிழில் மறு உருவாக்கம் செய்ய நினைத்தேன்.
அந்தத் தொடரின் முதல் பாகம் சொல்வனம் இதழில் இப்பொழுது வெளியாகி இருக்கிறது. கட்டாயம் படித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

0 comments:
Post a Comment