Friday, October 10, 2025

உடற்பயிற்சிக் காதை!


நண்பர் என். சொக்கன் நடத்திய எழுத்துப் பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்கள் தொடர்ந்து உரையாட ஒரு வாட்ஸாப் குழுமம் இருக்கிறது. தொடர்ந்து எழுதும் பழக்கம் வர அக்குழுவில் நிதம் ஒரு தலைப்பு தந்து சிறுகுறிப்போ, கதையோ, கட்டுரையோ ஏதேனும் எழுதச் சொல்வார். பாடம் முடிந்த பின்னரும் தொடர்ந்து வழிகாட்ட அவர் எடுக்கு முனைப்பு பாராட்டுக்குரியது.

நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் என்னவென்பது நேற்று அவர் கேட்ட கேள்வி. எப்பொழுதுமே சிறு குறிப்புகள் எழுதுகிறோமே. ஒரு மாற்றத்திற்குப் பாட்டாக எழுதினால் என நினைத்து முயன்று பார்த்தேன். எழுதுவது கடினமாக இல்லை. ஓரளவு நன்றாகவே வந்திருக்கின்றது என நினைக்கிறேன்.
ஒரு காலத்தில் சொக்கன், பெனாத்தல், நான் என ஒரு ஜமாவே தொடர்ந்து பாட்டும் பாவும் வெண்பாமும் போட்டது நினைவிற்கு வந்தது. ஹூம். அது ஒரு காலம்!
நேற்று எழுதிய பாட்டு இது.
இளைக்கவே ஆயிரம் வழிகளுமிங்கே
    இருக்குது என்று சொன்னாரே
சளைப்பே துளியும் இல்லாமல்தான்
    சரியனெ நானும் செய்தேனே
கையும்காலும் காயம் பட்டுக்
    காயலான் கடைக்குத் தான்போச்சே
ஐயமின்றி அடித்தே சொன்னேன்
    ஐயா எனக்கிது ஆகாதே
காலை அல்லது கருக்கலில் தினமும்
    கையை வீசி நடக்கையிலே
வேலையில் செய்ய வேண்டியவைதான்
    வேர்வையில் நனையுமென் நினைப்பாச்சே
பிளக்கும் வெய்யில் பித்தனாய் ஆக்கிடும்
    பிடிக்காதெனக்கு அதனாலே
குளத்தில் இறங்கி நீச்சல் அடித்துக்
    குளிப்பது வேறொரு வழியாச்சே
புதிதாய் வேறு செய்யத் துணிந்தால்
    புண்ணாய் என்னுடல் ஆகிடுமே
அதிகம் பயிற்சி ஆகாதெனக்கு
    அளவாய் இவையே போதுமப்பா!

0 comments: