Tuesday, October 03, 2006

தமிழில் பேசினால் தீவிரவாதியா?

விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்த ஒருவர் தனது செல்பேசியில் தமிழில் பேசினாராம். அதனால் சந்தேகப்பட்டு போலீஸார் அவரை விசாரணைக்கு கொண்டு சென்றனராம். பாவம், அவரும் இதனால் தனது விமானத்தைத் தவற விட்டுவிட்டாராம். அதைப் பற்றிய ரீடிஃப் செய்தியைப் பாருங்கள். இன்றைக்கு அமெரிக்காவில் இருக்கும் கட்டுப்பாடுகள் ஒரு அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கை என்ற போர்வையில் இதை அனுமதித்தாலும் கூட, இச்செய்தியின் கடைசி வரியைப் பாருங்கள். இனி விமான நிலையங்களில் அன்னிய மொழிகளில் பேசுவதில்லை என அவர் அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளாராம்.

என்ன கொடுமை இது சரவணன். இனி விமான நிலையத்திலிருந்து என் மனைவியிடம் பேச வேண்டுமானால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டுமா? அவர்களுக்கு ஆங்கிலம் தெரியும் சரி. ஆனால் என் தாயாரிடம் பேச வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அதையும் சொல்வார்களா? தமிழ் பேசும் நல்லுலகே, உங்கள் கருத்துகளைப் போட்டுத் தாக்குங்க.

இதுதான் அந்தச் செய்தி.

A Tamil-speaking man in the US missed his flight from Seattle over the weekend because at least one person thought he was suspicious.

According to a report in Seattle Post Intelligencer, the man was speaking Tamil and some English in a conversation over his cellphone about a sporting rivalry when getting ready to board an American Airlines flight to Dallas' Fort Worth International Airport.

An off-duty airline employee heard the conversation and alerted the flight crew.

"It's a big misunderstanding," said Bob Parker, the airport spokesman. "He had a perfectly innocent explanation that all added up."

The spokesman noted that it was mandatory for airport officials to investigate reports of suspicious activity. The man was supposed to be talking of a sporting rivalry involving his alma mater.

Parker had no explanation as to why a man speaking Tamil would be considered suspicious. The person who contacted airport officials could give an answer to that question, he added.

The detained person was said to be cooperative and later boarded a flight to Texas. He reportedly told airport officials that he will not speak a foreign language on his cellphone at an airport in the future.

Monday, October 02, 2006

புதுச்சேரி கச்சேரி... (கொஞ்சம் பெரிய பதிவு)

இரண்டு விஷயங்கள் பத்திப் பேசலாம்.

முதலில் இந்த மாதத்திலிருந்து பாண்டிச்சேரி புதுச்சேரி என அழைக்கப்படப் போகிறதாம். இந்த பெயர் மாற்றம் ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. வெள்ளைக்காரன் வாயில் நுழையாமல் மாற்றி வைத்த பேரை நாம் மாற்றுவது தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. பெரிய நகரங்களின் பெயர் மட்டும்தான் மாறுகிறதா? சிறிய ஊர்களின் பெயர்களும் மாற்றப் படுகின்றனவா? உதாரணமாக வத்திராயிருப்பின் பெயர் மாற்றப்பட்டுவிட்டதா? இப்படி மாற்றுவதற்கு என்ன செலவாகிறது? இதற்காக அங்கு இருக்கும் எல்லா அலுவலகங்களும் தங்கள் லெட்டர்ஹெட், விசிட்டிங் கார்ட் உட்பட எல்லாவற்றையும் மாற்ற நிர்பந்திக்கப் படுகின்றனரா? அதனால் விளையும் பொருள் சேதமென்ன? இந்த மாதிரி பெயர் மாற்றத்தினால பாதிக்கப் பட்ட யாராவது சொல்லுங்களேன்.

புதுச்சேரி கச்சேரி அப்படின்னு பேரு வெச்சாச்சு. அதான் புதுச்சேரி பத்தி பேச வேண்டியதாப் போச்சு. உண்மையில் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் ஏன் வலையுலகில் பேசப்படறது இல்லைன்னு அப்படின்னு தெரியலை. பேசலாமே அப்படின்னு சொல்லறவங்க எல்லாம் வாங்க, இப்போ பேசலாம்.

இன்னைக்கு அடுத்த டாபிக் கச்சேரி. இன்னிக்கு கூட யாரோ வலைப்பதிவர் இந்த வார்த்தையை நீதிமன்றம் என்ற பொருளில் உபயோகப்படுத்தியுள்ளதைப் படித்தேன். இதைப் பல பழைய திரைப்படங்களிலும் இந்த பொருள் வருமாறு உபயோகப்படுத்தியதையும் கவனித்துள்ளேன். கன்னடத்தில் கூட கச்சேரி என்றாம் நீதிமன்றம்தான் என நினைக்கிறேன். இந்த வார்த்தை எப்படி சங்கீத கச்சேரி என்ற பொருளில் வருமாறு மாறியது? யாராவது விளக்குங்களேன்.

கச்சேரி என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது நம்ம பெரியவர் எழுதிய ஒரு நகைச்சுவை கட்டுரைதான். நிலாச்சாரலில் வெளிவந்த அந்த கட்டுரையை அவர் அனுமதியுடன் இங்கு மீள்பதிவு செய்கிறேன். (இதெல்லாம் போடலையின்னா வலையுலகில் போராட்டம் நடக்குமாமே ...:) )

கச்சேரிக்கு கூட்டமும், காணாமல் போன எஸ்.என்.ஜெ.வும்

எனது நண்பர் எஸ்.என்.ஜெ. ஒரு கர்நாடக இசை வல்லுநர். (ஆமாம், இவங்க எல்லாருமே மூணு எழுத்துல ஒரு பேர் வச்சுக்கராங்களே, நம்ம சிந்து பைரவி ஜே.கே.பி. மாதிரி. அது ஏன்?) அவரிடம் பேசும்போது அடிக்கடி அவர் வருத்தப்படுவது கச்சேரிகளுக்கு இளைஞர்கள் வருவதேயில்லை, சரியான கூட்டம் இருப்பதில்லை என்பதுதான். நம்மைப் பற்றி தெரிந்தும் இப்படி சொல்லலாமோ? எடுத்துவிட்டேன் கூட்டம் சேர்க்கும் வழிகளை. இதோ வரேன்னு சொல்லிட்டு போனவர்தான். ஆளையே காணும். அப்படி என்னதான்யா சொன்னே என்று கேக்கறீங்களா. மேலே படியுங்கள். சாரி, கீழே படியுங்கள்.

என்ன செய்யணும் என்பதற்கு முன்னால் என்ன நடக்குதுன்னு பார்ப்போம். கச்சேரிக்கு என்று போனால், உள்ளே இருப்பது முக்கால்வாசி கிழங்கள்தான். அந்த வழுக்கைத் தலைகளையும், நரைத்த முடிகளையும் பார்த்தால், நமக்கும் வயசாகி விட்டதோ என்ற பயம்தான் வருகிறது. அதிலும் பாதி பேர் வீட்டில் மருமகள் பாடும் கோபப் பாட்டைக் கேட்க மனமில்லாமல் இங்கே வந்துவிட்டு மண்டையாட்டி ரசிப்பது போல் ஒரு குட்டி தூக்கம் போடும் வெரைட்டி. இவங்களைத்தாண்டி பார்வையை ஓட விட்டால், ராகம் பாடும் போது நெற்றி சுருக்கி, புருவத்தைத் தூக்கி, பின் கீர்த்தனை வரும் போது கர்நாடிக் கான்ஸர்ட் கைடில் அவசரம் அவசரமாய் ராகம் தேடும் கத்துக்குட்டிகள் ஒரு புறம். பட்டு புடவை சரசரக்க வந்து 'கோமதி மாமி பொண்ணு அமெரிக்கனை கல்யாணம் பண்ணிண்டுட்டாளாமே' என வம்படிக்கும் மாமிகள் மறுபுறம். நடு நடுவே ஒன்றும் புரியாவிட்டாலும், ஓரிடத்தில் அசையாமலிருந்து் எதையோ அனுபவிக்கும் குர்த்தா பைஜாமா வெள்ளைக்காரர்கள், கூடவே குங்கும நெற்றியும், கனகாம்பரமும், சல்வாருமாய் அவர்கள் சகதர்மிணிகள். இவர்களோடு இந்த சபாவில் பாடுவது யார் என்பதை விட காண்டீன் போடுவது யார் என்று ஆராய்ந்து வைத்துக் கொண்டு தனியாவர்த்தனத்தின் போது வெளிநடப்பு செய்து, பாடகர்களின் பிளட் பிரஷரை ஏத்தும் சாப்பாட்டு ராமர்கள். கடைசியாய், எனக்கு இவரைத் தெரியும் என்று அலட்டிக் கொள்ளவே வந்து, தப்பு தப்பாய் தாளம் போடும் பந்தா பார்ட்டிகள். இதுதான் கூட்டம்.

சரி இப்போ கச்சேரிக்கு வருவோம். வர்ணம், ஒரு பிள்ளையார் பாட்டு, ராக ஆலாபனையுடன் ஓரிரண்டு கீர்த்தனைகள், நிரவல், ஸ்வரப் பிரஸ்தாரங்கள், நடு நடுவே ஒரு வேகமான பாட்டு, தனி ஆவர்த்தனம், ராகம் - தானம் - பல்லவி (முடிந்தால்), துக்கடாக்கள், ஒரு தில்லானா, மங்களம் என ஒரு மாற்றமே இல்லாத ஒரு பழம் பாணி. இதில் 'சாருக்கு ஒரு காப்பி', என்பது போல் வரும் நேயர் விருப்ப சீட்டுகளும், அது தமிழில் வந்தால் படிக்கத் தெரியாமல் முழிக்கும் பாடகர்களும் ஒரு தனி காமெடி ட்ராக். சில இடங்களில் தமிழ்ப் பாட்டு, தமிழ்ப் பாட்டு என்ற ஏலம் வேறு தனியாக ஒரு பக்கம் நடக்கும். இவ்வளவுதான். அப்புறம் எங்கயிருந்தய்யா வரும் கூட்டம், அதுவும் இளைஞர் கூட்டம்?

சும்மா புதுசு புதுசா மாற்றங்கள் வேண்டாமோ? சாம்பிளுக்கு சிலது பார்ப்போம்.

- இனிமேல் பாடகர்கள் உட்கார்ந்து கொண்டு பாடக்கூடாது. சும்மா மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி நடனமாடிக் கொண்டே பாடவேண்டும். அதிலும் பாடகர்களும், பாடகிகளும் சேர்ந்து கும்பலாய்ப் பாடினால் இன்னும் விசேஷம். கூடவே துணைப்பாடகர்கள், பாடகிகள் எல்லாம் வெள்ளை கவுன் போட்டுக் கொண்டு பின்னாடி ஆடலாம்.

- அதிலும் ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு உடை அணிந்து கொண்டு வந்தால் இண்டிரஸ்டிங்காய் இருக்கும். இதற்குத் தனியாய் ஸ்பான்ஸர்ஷிப் வேறு கிடைக்கும். பாடகிகள் அட்லீஸ்ட் ஒரு ஜன்னல் வைத்த ஜாக்கெட்டாவது போட்டுக் கொண்டு வர வேண்டும். அப்போதான் அதை பார்த்து காமெண்ட் அடிக்க ஒரு தாய்மார் கூட்டம் வரும்.

- ராகமாலிகை மாதிரி பாகவதர்மாலிகை என்று ஒரு முயற்சி செய்யலாம். ஒரே பாட்டை ஐந்தாறு பாகவதர்களைக் கொண்டு் பாட வைக்காலாம். அதிலும் ஹிந்திக்காரர்கள் இரண்டு பேர் வந்து முக்கி முக்கி பாடினால் நல்ல வரவேற்பு இருக்கும்.

- இரு பாடல்களுக்கு நடுவே ஒரு சேஞ்சுக்கு ஃபேஷன் ஷோ, மிஸ். கச்சேரி் என வெரைட்டி தரலாம்.

- ஸ்வரம் பாடும் போது நடுவில் கேட்பவர்களையும் பாடச் சொல்லி, கச்சேரியை இண்டராக்டிவாகச் செய்யலாம்.

- வயலின், மிருதங்கம், கஞ்சிரா என ஒவ்வொரு பாட்டுக்கும் வேறு வேறு ஆட்களை மேடைக்கு நடுவே கொண்டுவந்து வாய்பாட்டுக்காரரை ஒரு பக்கமாகத் தள்ளலாம். ஒரு வித்தியாசமாகவும் இருக்கும். சில பாடகிகள் மேல் ஸ்தாயியில் பாடும் போது, முகம் அஷ்டகோணலாய் போவதை பார்க்கவேண்டிய கட்டாயமும் இருக்காது.

- சும்மா 20 ரூபாய், 50 ரூபாய் என வெறும் டிக்கெட் போடாமல் தூங்குபவர்களுக்கு ஸ்பெஷலாய் பெர்த் டிக்கெட் குடுக்கலாம். அப்புறம் ஆர்.ஏ.சி., வெயிட்டிங் லிஸ்ட் என்று நல்ல பணம் பண்ணலாம். 65 வயதுக்கு மேலிருந்தால் லோயர் பர்த் கியாரண்டி எனப் புதுத் திட்டம் கொண்டு வரலாம். கூடவே, குறட்டை வித்துவான்களுக்கென, ஸவுண்ட் ப்ரூப் கம்பார்ட்மெண்ட் எல்லாம் போடலாம். நல்ல ஐடியாவாய் இருக்கும்.

- அப்படியே மெயின் ராகம் முடிஞ்சா மசால் தோசை, துக்கடா பாடும்போது பக்கோடா என்ற கணக்கில் முன்பே ஆர்டர் வாங்கி சீட்டுக்கு வந்து சப்ளை செய்தால் தனியாவர்தனத்தின் போது வாக்கவுட் செய்பவர்கள் இல்லாமல் செய்யலாம். புதுசா, செவிக்குணவு இருக்கும்போதே வயிற்றுக்கும் ஈயப்படும்ன்னு விளம்பரம் எல்லாம் கூட செய்யலாம்.

- புதிதாய் ஒரு பாட்டை பாட முயலுமுன் 'கர்நாடக சங்கீத உலகில் முதன்முறையாக' என்று அடிக்குரலிலோ ' சும்மா நச்சுனு இருக்கு இந்த பாட்டு' என்றோ விளம்பரம் செய்யலாம்.

- கச்சேரியின் இறுதியில் டிக்கெட்டை குலுக்கி போட்டு பரிசு தரலாம். கடைசி வரை கூட்டம் இருக்கும். கூடவே இன்றைய கச்சேரியின் மூன்றாவது பாடல் எந்த ராகம் என்ற ரேஞ்சில் கேள்விகள் கேட்டு ரகசிய புதையல் எல்லாம் குடுக்கலாம்.

- இன்னும் மங்களம் முதலில் என்று ஆரம்பித்து கடைசியாய் வர்ணம் பாடி முடிக்கலாம்.

- ரொம்ப முக்கியமான கச்சேரிகளுக்கு தலைக்கு 50 ரூபாய், பிரியாணி பொட்டலம் என ரேட் பேசி லாரி லாரியாய் ஆள் சேர்க்கலாம்.

முதல்ல இதெல்லாம் செஞ்சு பாருங்க. இதுக்கும் கூட்டம் வரலைன்னா திருப்பி வாங்க, இன்னும் கொஞ்சம் சொல்லறேன்னு சொன்னேன். என்ன தப்பா சொல்லிட்டேன்? ஏன் அப்போ போனவரை இன்னும் காணும்? நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்களேன்.

Saturday, September 16, 2006

ஏனுங்க இப்படி?

நானும் பார்த்துக்கிட்டேதான் இருக்கேன். இந்த ஒரு விஷயம் மட்டும் பிடிபடவே இல்லை. ஏன் இப்படி பண்ணறாங்கன்னு தெரியவே மாட்டேங்குது. நீங்க யாராவது கொஞ்சம் கேட்டுப் பார்த்து சொல்லுங்களேன்.

நான் சொல்லறது இந்த கிரிக்கெட் மாட்சுங்களைப் பத்திதான். எப்ப , எங்க போட்டி வைக்கணமுன்னுங்கிறது போட்டியில் கலந்துக்கற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் எல்லாம் கலந்து பேசி முடிவு பண்ணற ஒரு விஷயம். இதுல ஐ.சி.சியின் கமிட்டி ஒண்ணு வேற இருக்கு. இவங்க எல்லாம் ஒண்ணாக் கூடி டீ, பிஸ்கெட்டு எல்லாம் சாப்பிட்டுக்கிட்டு எப்ப, எந்த ஊரில் யாரு விளையாடணமுன்னு முடிவு பண்ணறாங்க.

எல்லாம் நல்லா படிச்சவங்கதானே. இவங்களுக்கு எந்த ஊரில் எப்ப மழைக்காலம், எப்ப மழை வாராது அப்படின்னு தெரியாது? தனக்கா தெரியலைனாலும் அந்தந்த பகுதியில் இருக்கும் வானிலை ஆராய்ச்சி மையங்கள் கிட்ட ஒரு பரிந்துரை வாங்கிக்க மாட்டாங்க? இப்படி எங்க போட்டி நடத்துனாலும் அங்க மழை பெய்யறதே ஒரு வாடிக்கையான நிகழ்வா ஆகிப் போச்சே.

சரி, இதையெல்லாம் பல மாதங்களுக்கு முன்னாடியே முடிவு பண்ணறாங்க. அதனால அந்த குறிப்பிட்ட நாளன்று வானிலை எப்படி இருக்குமுன்னு சொல்லறது முடியாத காரியம். ஆனா ஆகஸ்ட், செப்டம்பரில் கிழக்காசிய நாடுகளில் மழைக்காலம் என்ற அடிப்படை அறிவு கூடவா இல்லை?

மத்த விளையாட்டுங்களெல்லாமும் இந்த மாதிரிதானே முன்னாடியே முடிவு பண்ணறாங்க. இந்த அளவுக்கு வேறெந்த விளையாட்டும் மழைக் காரணமாக இந்த அளவு பாதிக்கப் படறதா தெரியலையே. அது ஏன்? ஒரு வேளை அங்க கமிட்டி எல்லாம் போடாம முடிவு பண்ணறதுனால சரியான முடிவுகள் எடுக்கறாங்களா? ஒண்ணும் புரியலையே.

இதுல மழை வரது இயற்கை நிகழ்வு. அதனால ஒரு பந்து கூட போடலையினாலும் டிக்கெட் காசை திருப்பி எல்லாம் தரமுடியாது அப்படின்னு ஏப்பம் வேற விடறாங்க. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் விளம்பரக் காசு எல்லாம் வராம போகுதுன்னு அதுக்கு வேற தனியா இன்ஷூரன்ஸ் பண்ணி அங்க வேற பணம் வாங்கிக்கறாங்க. ஒரு வேளை இதுக்கெல்லாம்தான் மழைக்காலமா பாத்து போட்டியை வைக்கறாங்களா?

சரி. அப்படி என்னதான் யோசிச்சு முடிவு எடுத்தாலும், அது என்னவோ தெரியலை என்ன மாயமோ தெரியலை, கிரிக்கெட் போட்டி நடத்துனா மட்டும் மழை வருது அப்படின்னு சொன்னீங்கன்னா, மழை இல்லாம தண்ணிக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற இடங்கள் எவ்வளவு இருக்கு. அங்கெல்லாம் போயி போட்டியை நடத்தி மழையை வர வையுங்கப்பா. உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.

இப்படிக்கு,
இணையத்தில் கிரிக்கெட் மாட்ச் பார்க்க முடியாவிட்டாலும் வர்ணனையையாவது படிக்கலாம் என தூக்கத்தைக் கெடுத்து எழுந்து உட்கார்ந்து இருக்கும்

அப்பாவி ரசிகன்.

Sunday, September 10, 2006

விடைபெறுகிறேன்

ஆஹா! தொல்லை விட்டுதுன்னு ஜாலியா பதிவை திறக்கும் மக்கள்களே. உங்களை அவ்வளவு சீக்கிரம் விடறதா இல்லை. கடந்த இரு நாட்களில் இரண்டு விடைபெறுதல்கள் நடந்தன. தத்தம் விளையாட்டுகளில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த இருவர், விளையாடியது போதும் என முடிவெடுத்து விட்டனர். எனது ஹீரோக்களான அவர்களை வாழ்த்திடவே இந்தப் பதிவு.



முதலில் சனிக்கிழமை அன்று யூ.எஸ். ஓப்பன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் தனது 50ஆவது வயதில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மார்டினா நவரத்திலோவா. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக டென்னிஸ் உலகில் தனது முத்திரையைப் பதித்த இவரது வெற்றிகளை முறியடிக்க இனி ஒருவர் பிறந்துதான் வர வேண்டும். தனது கடைசி ஆட்டத்திலும் மிகத் திறமையாய் விளையாடி கோப்பையை வென்ற இவருக்கு நமது வாழ்த்துக்கள்.



அடுத்ததாக இன்று இத்தாலிய கிராண்ட் பிரி போட்டியில் வெற்றிக் கனியை பறித்த கையோடு தனது ரிட்டயர்மெண்டை அறிவித்த மைக்கேல் ஷுமாக்கர். 90 வெற்றிகள், 68 முதலிடத் தகுதிகள், 1354 வெற்றிப் புள்ளிகள், 7 முறை உலக சாம்பியன் பட்டம் - வேறேதாவது சொல்ல வேண்டுமா? இந்த வருடமும் உலக சாம்பியன் பட்டம் பெற இவரை வாழ்த்தி, இவரின் இடத்திற்கு வர இருக்கும் கிமி ரெய்க்கோனனையும் வருக வருக என வரவேற்போம். ஃபெராரியில் மைக்கேலின் பங்கு என்னவென்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இருவரும் மனதே இல்லாமல்தான் பிரிவதாகத் தோன்றுகிறது. எல்லா வகைப்பட்ட சாதனைகளும் புரிந்திட்ட நிலையிலும் தாங்கள் பங்கு பெறும் ஒவ்வொரு போட்டியையும் ஒரு புதுமுகத்திற்குண்டான உற்சாகத்துடன் எதிர் கொண்ட இவர்கள் வாழ்வு நமக்கெல்லாம் ஒரு பாடம். இவர்களைப் பற்றி விரிவான பதிவுகள் வரும். வரவில்லையென்றால் நாமே போட வேண்டியதுதான்.

இந்த இருவருமே ஒரு வெற்றியோடு தாம் விலகுவதை அறிவித்த பாங்கு என்னைக் கவர்ந்தது. Way to go Champions!

படங்கள் இணையத்தில் திருடப்பட்டவை. தந்த தளங்களுக்கு நன்றி.

Tuesday, September 05, 2006

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி

நம்ம மக்கள் பியர் குடிக்கும்போது சும்மா குடிச்சாத்தான் தேவலையே. ஆனா சும்மா இருக்காம காரமா சைட் டிஷ் தேடி அலையறாங்க. அதுவும் வறுத்த ஐட்டமா இருந்தாதான் வசதியா இருக்கு. அது முறுக்கு, சிப்ஸ் அப்படின்னு ஆரம்பிச்சு சிக்கன் 65, சில்லி சிக்கன் அப்படின்னு போயி முடியுது. பியரை விட இந்த ஐட்டங்களில்தான் தொப்பை, தொந்தின்னு வந்து தங்கமணிங்க வாயில விழுந்து புறப்பட வேண்டியதா இருக்கு. அது மட்டுமில்லாம கொலஸ்ட்ரால், ட்ரைக்ளிஸரைட்ஸ் அது இதுன்னு வேற பயமுறுத்தறாங்க. இதுக்கெல்லாம் பயந்து அவனவன் பியர் குடிக்கறதையே விட்டுடுவான் போல இருக்கு.

இந்த போக்கே சரி இல்லையே. இவங்களுக்கு எல்லாம் நல்லதா எதாவது பண்ணணுமே அப்படின்னு ராத்திரி பகலுன்னு பார்க்காம நம்ம பக்கத்துல ஒரு ஆள் யோசிக்கிட்டே இருந்தாரு. அப்போ அவரு மூளையில திடீருன்னு உதிச்ச ஒரு உலகத்தையே புரட்டிப் போடக்கூடிய இந்த விஷயம்.



இதுதாங்க சில்லி பியர். மேட்டர் என்னான்னு படத்தைப் பார்த்தாலே புரிஞ்சு இருக்கும். " இந்த பியருக்கும் மத்த பியருக்கும் என்ன வித்தியாசம்? ஒரு மிளகாய். ஒரே ஒரு மிளகாய்" அப்படின்னு தமிழ் தெரியாத மெழுகு பொம்மை வந்து சொன்னாதான் புரியும் அப்படின்னு உங்களை நான் குறைச்சு மதிப்பிடாததுனாலதான் அதெல்லாம் பண்ணலை.

ஹேலப்பீனோ (Jalapeno) என்ற வகை மிளகாய் ஒன்றை எடுத்து ஒரு பாட்டில் பியருக்குள் போட்டு ஊற வைத்து விட்டார்கள். அதிலுள்ள காரம் எல்லாம் மெதுவாக இந்த பியருள் இறங்கி பியர் மிகுந்த சுவையோடு இருக்கிறது. நல்ல காரமாய் இருப்பதால் தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம். நமக்கு புரியற வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் -"அப்படியே சாப்பிடலாம்".

ஆகவே இந்த மாதிரி நம்ம மக்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இந்த மாதிரி ஒரு புதுமையான ஐட்டத்தைக் கண்டுபிடித்த மகானுபாவருக்கு ஒரு 'ஓ' போட்டுட்டு ஆக வேண்டிய வேலையைப் பாருங்கப்பா!

Friday, September 01, 2006

அட்லாஸ்(ட்) நன்றி

என்னடா இவன் நன்றி சொன்னா கிண்டல் பதிவு போடறான், இப்போ இவனே நன்றி சொல்லறான்னு பாக்கறீங்களா? இது விஷயம் வேற. நம்ம பசங்க எல்லாம் என்ன நீங்க எங்க எங்கயோ போயி பதிவு போடறீங்க. நாங்க எல்லாம் பதிவு படிக்கறதா இருந்தா உங்க பதிவுல மட்டும்தான் படிப்போம் அப்படின்னு ஒரே ரவுசு. இந்த அன்புக்கும் பாசத்துக்கும்தான் நன்றி. இந்த பசங்களுக்கு இப்படி எல்லாம் இருக்கக் கூடாது, அப்படின்னு சொல்லி இங்க சுட்டி தரேன் அப்புறமாவது போயி படிங்கன்னு சொல்லவும்தான் இந்த பதிவு.

ஜுலை மாதம் நம்ம வ.வா.சங்கத்தில நம்மளை அட்லாஸ் வாலிபரா தேர்ந்தெடுத்து வாரம் ஒரு பதிவு போடச் சொன்னாங்க. ஆடிக்கு ஒரு பதிவு, அமாவாசைக்கு ஒரு பதிவு போடற நம்மளால வாரம் ஒரு பதிவு போடமுடியுமான்னு ஒரே கவலை. ஓடினேன் பாரு ஒரு ஓட்டம். வாழ்க்கையின் எல்லை வரை ஓடலைன்னாலும் கிட்டத்தட்ட இந்த உலகின் எல்லை வரை ஓடி நம்ம துளசி டீச்சர் வீட்டுக் கதவைத் தட்டினேன். அவங்கதான் சொன்னாங்க, " கண்ணைத் திறந்து வச்சுக்கிட்டு இரு. நம்ம சுத்தி என்ன நடக்குதுன்னு பாரு. அதை வெச்சி வாரம் ஒரு பதிவு என்ன, ஒரு நாளைக்கு ஒரு பதிவு வேணாலும் போடலாம்." அப்படின்னு சொன்னாங்க. நாமளும் அதை சிரமேற்கொண்டு கண்ணை நல்லா திறந்து வெச்சுக்கிட்டு அலைஞ்சேன். அப்படித்தான் நான் போட்ட நாலு பதிவும் மாட்டிச்சு. ஒண்ணொண்ணா பார்க்கலாம்.

போட்ட முதல் பதிவு மண்டூகங்களுக்கு பின்நவீனத்துவ திறனாய்வு. நமக்கு வேண்டப்பட்ட ஆளு ஒருத்தரோட பேசிக்கிட்டு இருந்தம்போது வந்த ஐடியா இது. அது யாருன்னு கேட்டீங்கன்னா, வேற யாரும் இல்லை. நம்ம தளபதி நாமக்கல்லார்தான். அவரு நமக்கு புதுக்கவிதை பத்தி கிளாஸ் எடுக்கப் பாத்தாரு. நாம் அவருக்கு திறனாய்வு கிளாஸ் எடுத்துட்டோமில்ல!

அடுத்துப் போட்ட பதிவு - பரிணாம வளர்ச்சி. நம்ம தெக்கி போட்ட ஒரு பதிவு பத்தி அவரோட சாட் பண்ணும் போது வந்த ஐடியா இது. பேசிக்கிட்டே இருக்கும் போது வெகு வேகமா டெவலப் ஆச்சு. பதிவின் நீளம் கருதி யோசிச்ச சில ஐடியாக்கள் போட முடியாமப் போச்சு. தனக்கு ஒரு வளர்ச்சியும் சொல்லலையேன்னு செல்லமா திட்டினவங்க கூட உண்டு!

பரிணாம வளர்ச்சிக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 574. இது ஓடிக்கிட்டு இருக்கும் போதே ஒரு வாரம் போனதுனால அடுத்த பதிவு போடச் சொல்லி கைப்பு கிட்ட இருந்து ஒரே பிரஷர். அந்த சமயத்தில நம்ம போலிஸ்கார் வேற பின்னூட்டக் கயமைத்தனம் பத்தி போட்டாரா, நாமளும் அதைச் சாக்கா வைச்சு அடுத்த பதிவு ரெடி பண்ணியாச்சு - வ.வா. சங்கத்தினரின் மெகா பதிவுக் கயமைத்தனம்.

கடைசியாப் போட வேண்டியது நன்றி நவிலல்தானே. ஆனா அப்போ நம்ம தேன்கூடு போட்டி முடிஞ்சு எல்லாரும் நன்றி சொல்லிக்கிட்டு இருந்தாங்களா? நமக்குக் கொஞ்சம் டென்ஷனாகிப் போச்சு. சரின்னு அதை வெச்சே ஒரு நன்றி பதிவு போட்டாச்சு. அதான் தேன்கூடு போட்டி - நன்றி நவில்தல் .

இப்படித்தான் நம்ம அட்லாஸ் மாதம் ஓடிச்சு நண்பர்களே. இந்த பதிவுகளுக்கு காரணிகளாக இருந்த நண்பர்களுக்கும், இப்படி எல்லாம் கவனமா இருக்கச் சொன்ன டீச்சருக்கும், வந்து படிச்சவங்களுக்கும், செய்ய வேண்டியதை சரியா செஞ்ச நண்பர்களுக்கும், எனக்கு ஒரு சவுண்டிங் போர்டாக இருந்த (இருக்கும்)எஸ்.கே அவர்களுக்கும் நம்ம நன்றி.

Wednesday, August 30, 2006

வாள மீனுக்கும்.....


இது இன்றைய தினமலர் இணையப் பதிப்பில் வந்த புகைப்படம். பார்த்தவுடன் மனதில் தோன்றிய வரிகள்.....

"வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" . என்ன வைகோதான் விரலை நீட்டாம விட்டுட்டார்.

திஸ்கி:

இது வெறும் நகைச்சுவைக்காகத்தான். படத்தில் இருக்கும் தலைவர்களை கிண்டல் செய்யும் நோக்கத்தில் இல்லை. கொஞ்சம் டென்சன் ஆகாம சிரிச்சு வையுங்க மக்களே.

Monday, August 07, 2006

யோகன் பாரிஸ் அவர்கள் கவனத்திற்கு

நண்பர் லதா அவர்கள் தனி மடலில் அனுப்பியது. யோகன் பாரிஸ் அவர்களைப் பற்றி ஆனந்த விகடன் இதழில் வந்துள்ள செய்தி. அவர் பார்த்துள்ளாரா எனத் தெரியவில்லை. ஆகவே இந்தப் பதிவு. அவரிடம் தொடர்பு கொள்ள முடிந்தவர்கள் தயவு செய்து அவரிடம் இந்த சேதியை தெரிவிக்கவும்.

இனி செய்தி. இது 13 08 2006 தேதியிட்ட ஆனந்த விகடன் சுஜாதா கற்றதுப் பெற்றதும் பகுதியில் எழுதியது.

====
விகடன் 23.07.06 இதழ் க.பெ.பகுதியில் பத்மநாதனின் கவிதையில், 'கடகம்' என்ற சொல்லுக்குச் 'சும்மாடு' என்ற விளக்கம் தவறு என்று, யோகன் பாரிஸ் மின்னஞ்சல் செய்துள்ளார். ஈழத்தில் கடகம் என்று குறிப்பிடுவது , பொருள்களைச் சுமக்க பாவிக்கும், பனையோலையால் இழைத்து அதன் வெளிப்பகுதிக்குப் பனை நாரால் மேலிழைப்பு செய்து, வாய்ப்பக்க விளிம்பில் தடித்த நார் வைத்த பெட்டி. அது இன்றும் பாவனையில் உள்ளதாம். (பாவனை - பயன்பாடு)

====

வாழ்த்துக்கள் யோகன் பாரிஸ்.

Sunday, June 25, 2006

ஆறிப் போகுமுன் ஒரு ஆறு பதிவு

இந்த ஆறு விளையாட்டுக்கு நம்மளை அழைத்தது குமரன். என்ன எழுதலாமுன்னு யோசிக்கும் போது எண்ணங்கள் ஆறா ஓடுனதுல ஒரு ஆறு சங்கதிகள் மட்டும் சொல்லறேன். அட இதுக்கே ஓடினா எப்படி? ஆறு மனமே ஆறு.

ஆறுதான் நம்ம எண்களிலேயே முதல் மாசறு எண் (Perfect Number). அதாவது ஒரு எண்ணை வகுத்தால் வரும் முழு எண்களைப் பெருக்கினாலோ, கூட்டினாலோ, வகுக்கப்பட்ட அதே எண் வந்தால் அது மாசறு எண்ணாகும். இங்கு ஆறை வகுத்தால் வரக்கூடிய எண்கள் 1,2 மற்றும் 3. இந்த மூன்று எண்களை கூட்டினாலோ, பெருக்கினாலோ 6 வருவதால் அது மாசறு எண் என அழைக்கப்படுகிறது. (இதுக்கு வேற பேர் இருக்காங்க? எனக்கு தெரியலை. சும்மா மாசறு எண் அப்படின்னு நானா மொழிபெயர்ப்பு செஞ்சுக்கிட்டேன்). சரி கணக்கு தெரியும் என கணக்கு காட்டியாகிவிட்டதா? இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்.

1) ஆறு பற்றி சொல்ல வந்தா முதலில் நம் ஆறுமுகனின் ஆறுபடைவீடுகள்தான் ஞாபகம் வரும். ஒவ்வொன்றிற்கும் ஒரு ஒரு வரி செய்தி. தெரிந்தவர்கள் மேலதிக விபரங்கள் சொல்லுங்களேன். எல்லாம் பலவேறு இடங்களில் படித்தது. தப்பா இருந்தா சொல்லுங்கப்பூ.

திருப்பரங்குன்றம் - நக்கீரர் திருமுருகாற்றுப்படை எழுதியது இங்குதான்.

திருச்செந்தூர் - குன்றில் அமையாமல் கடற்கரையில் அமையப் பெற்ற கோயில் என கூறப்பட்டாலும் இக்கோயிலின் கருவறை அமைந்த இடம் ஒரு சிறு குன்று.

திருவாவினன்குடி - பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த கோவில்தான் அறுபடை வீடுகளில் ஒன்று. அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாக புராணங்கள் கூறுகின்றன.

சுவாமிமலை - இங்கு கோயிலுக்கு செல்ல 60 படிக்கட்டுகள் உள்ளன. இவை பழைய தமிழ் முறைப்படி இருந்த 60 வருடங்களைக் குறிக்கின்றன.

திருத்தணி - முருகனே தனக்குப் பிடித்த மலையாக திருத்தணியை கூறியதாக கந்தபுராணம் கூறுகின்றது.

பழமுதிர்சோலை - சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம்.

2) விளையாட்டை எடுத்துக்கிட்டீங்கன்னா, பல விளையாட்டுகளில் இந்த எண் முக்கியமானதா இருக்கு. கிரிக்கெட்டில் ஆறு ரன்கள்தான் அதிகமாகப் பெறக்கூடியது. அதே போல் ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள். டென்னிஸில் ஒரு செட் முடிய ஆறு ஆட்டங்கள்தான் பொதுவாக ஜெயிக்க வேண்டும். அமெரிக்காவில் விளையாடும் ஃபுட்பாலில் டச்டவுண் செய்தால் ஆறு புள்ளிகள். ஆஸ்திரேலியாவில் விளையாடப்படும் ஒரு விதமான ஃபுட்பாலிலும் ஒரு கோல் அடித்தால் ஆறு புள்ளிகள். வாலிபாலில் ஒரு அணியில் ஆறு பேர்கள்தான் விளையாடுவார்கள். அதே கதைதான் ஐஸ் ஹாக்கியிலும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி என்ன ஆறுக்கும் விளையாட்டுக்கும் சம்பந்தம்? யாராவது கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.

3) இப்போ நமக்குப் பிடித்தமான ஒரு விஷயம் - சாப்பாடு! அறுசுவை விருந்து எனச் சொல்கிறோம். அந்த ஆறு சுவைகள் என்னன்னு கேட்டா தித்திப்பு, காரம், புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு அப்படின்னு ஒரு லிஸ்ட்டும் போடுவோம். ஆனா நம்ம ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில்லெல்லாம் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு சக்தி இருக்கிறதாவும் அதனால எல்லா விதமான சுவையையும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் ஆனால் அளவாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள். இந்த பலன்கள் என்னவென்று பார்ப்போமா?

துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

ஆனா நம்ம அலோபதி மருத்துவத்தில் இந்த மாதிரி இல்லை. இதைப் பற்றி அந்த துறை சார்ந்தவர்கள் கொஞ்சம் விவரமா சொல்லுங்க. எது சரி?

4) அடுத்ததா நம்ம மற்றொரு விருப்பமான விஷயமான சினிமாவுக்கு போகலாம். கெவின் பேக்கனின் ஆறு பாகைகள் (Six Degrees of Kevin Bacon ) அப்படின்னு ஒரு விளையாட்டு இருக்கு. இந்த கெவின் பேக்கன் ஒரு அமெரிக்க நடிகர். உலகத்தில் எந்த நடிகரை எடுத்துக் கொண்டாலும் அவருடன் இணைந்து நடித்தவர்களைச் சங்கிலியாகக் கொண்டு கெவின் வரை வர ஆறு இணைப்புகளே போதும் என்பதுதான் இந்த விளையாட்டு. உதாரணமாக நம்ம ரஜினியை எடுத்துக் கொண்டால் அவர் நடித்த கிஷன் கன்னேயா என்ற திரைப்படத்தில் உடன் நடித்தவர் சாயீத் ஜாப்ரி. இவர் டே ஆப் த சைரன்ஸ் என்ற படத்தில் ஜான் மொராய்ட்டிஸ் என்பவருடன் நடித்துள்ளார். ஜான், வேர் த ட்ரூத் லைஸ் என்ற படத்தில் கெவினுடன் நடித்துள்ளார். ஆகவே சூப்பர் ஸ்டாரின் கெவின் எண் 3. இதே போல் கமலை எடுத்துக்கொண்டால் அவர் இதே சாயீத்துடன் சாகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆகவே இவரின் கெவின் எண்ணும் 3. (அப்பாடா ரெண்டு பக்கமும் அடிக்க மாட்டாங்க). யாராக இருந்தாலும் ஆறு படிகளில் கெவினை அடைந்து விடலாமாம்.

இதற்காக வெர்ஜினியா பல்கலைகழகத்தில் ஒரு வலைப்பக்கம் அமைத்து இந்த விளையாட்டுக்காக வசதி செய்துள்ளார்கள். நீங்கள் விளையாடிப் பார்த்து யாருக்காவது ஆறு படிகளுக்கு மேல் வருகிறதா எனப் பாருங்களேன். (நம்ம புரட்சிக் கலைஞர் இந்த லிஸ்ட்டில் இல்லவேயில்லை. நீங்கள் அவர் பெயரைப் போட்டு விட்டு காணவில்லை என என்னை அடிக்க வராதீர்கள்.)

5) சினிமா பத்தி பேசும் போது மற்றொரு முக்கியமான விஷயம் ஞாபகத்துக்கு வருது. நம்ம தளபதி சிபி இருக்காரே. அவரோட ஃப்ரெண்டு (பின்ன என்ன வெறும் நட்புன்னுதானே அறிக்கை எல்லாம் விட்டுக்கறாங்க) நயன்தாராவிற்கு ஒரு கையில் ஆறு விரலாம். ஆனா அது வெளிய தெரியாத மாதிரி பாத்துக்கறாங்களாம். மெய்யாலுமாப்பா?

6) கடைசியா (உண்மையில் முதலிலேயே) ஆறு என எண்ணத் தொடங்கிய உடன் நினைவுக்கு வருவது சிக்ஸ் பேக் பியர்தான். அடிக்கிற வெயிலுக்கு அதுதான் சரிப்படும். வாங்கிட்டு வந்ததை கவனிக்கணும். அதனால இதோட ஆட்டம் க்ளோஸ்.

போறதுக்கு முன்னாடி நான் யாரையாவது ஆறு பேரைக் கூப்பிடணும். போன தடவை இந்த மாதிரி நாலு விளையாட்டு விளையாடும் போது கூப்பிட்ட நாலு பேரில் மூணு பேர் இப்ப எழுதவே காணும். அதனால வேண்டியவங்களைக் கூப்பிடவே பயமா இருக்கு. சரின்னு அந்த ஆறுமுகன் மேல பாரத்தைப் போட்டுவிட்டு கூப்பிடறேன். இதில் யாராவது ஏற்கனவே கூப்பிடப் பட்டிருந்தால் சொல்லுங்க. மாத்திடலாம்.

1. வெண்பா வாத்தி ஜீவா
2. வரலாற்று டீச்சர் துளசி
2.பாலர் கதை சொல்லும் பரஞ்சோதி
2. சங்கச் சிங்கம் ஜொள்ளுப்பாண்டி
3. டா கில்லி கோட் தந்த பெனாத்தலார்
3. செய்திகளைச் சூடாகத் தரும் ஆவி பறக்கும் இட்லிவடையார்
4. நம்ம ர.ம.செ.த, தேவு தம்பி
5. பமகவின் நிரந்தர தலை முகமூடியார் (உள்குத்து எல்லாம் இல்லாம சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு தலைவா.)
5. காமெடி ஸ்பெஷலிஸ்டாக உருவாகி வரும் கோவி.கண்ணன்
6. பெரியவர் ஹரிஹரன்ஸ் (இப்போவாவது மீண்டும் பதிவு போட ஆரம்பிக்கறாரான்னு பார்ப்போம்)

(சிலர் பல முறை அழைக்கப்பட்டு விட்டதால், அதே எண்களில் இன்னும் சிலர்.)

கஷ்டப்பட்டு எழுதியாச்சு. ஒரு 'ஆறு'தல் பரிசாவது தாங்கப்பா.

Friday, June 02, 2006

தரமாய் பதிவொன்று தா (வெ.வ.வா)

மதுமிதா அவர்கள், அவர் எடுத்துக் கொண்டிருக்கும் ஆராய்ச்சிக்காக வலைப்பதிவர்கள் அனைவரும் தங்களைப் பற்றிய விபரங்களையும், வலைப்பூவைத் தொடங்கிட தூண்டுதலாய் இருந்தது என்னவென்பதையும் ஒரு பதிவாய்ப் போட்டு, அதன் சுட்டியை அவருக்கு அனுப்புமாறு சொன்னார்கள். அதன்படி அநேகம் பேர் அனுப்பிவிட்ட நிலையில், இதோ என்னைப் பற்றிய விபரங்கள்.

வெறும் விபரங்களைப் பதிவாய் போட வேண்டாமே என யோசித்து அவர் கேட்டதையே ஒரு வெண்பாவாய் வடித்திருக்கிறேன். அதன் ஈற்றடிதான் 'தரமாய் பதிவொன்று தா'. இதை வைத்து சற்றே வேகம் குறைந்த வெண்பா வடிக்கலாம் வா தொடரை மீண்டும் துவங்குகிறேன். இந்த வாரத்தின் ஈற்றடியை வைத்து வெண்பா வடிக்கவே வாருங்களேன். முதலில் என் முயற்சி.

வலைஞரைக் கேட்டார் மதுமிதா வாகாய்
'சளைக்காமல் சொல்வாய் சரியாய் - வலைப்பூக்
குரமாகி வந்தவொரு உந்துத லென்ன?
தரமாய் பதிவொன்று தா'.

மதுமிதாவிற்காக என் விபரங்கள்.

வலைப்பதிவர் பெயர் : இலவசக்கொத்தனார்

வலைப்பூ பெயர் : இலவசம் தான் வேறென்ன?

சுட்டி(url) : http://elavasam.blogspot.com

ஊர் : எடிஸன், நியூ ஜெர்ஸி

நாடு : அமெரிக்கா

வலைப்பூ அறிமுகம் செய்தவர் : சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் அப்போதைய தலைவர், திரு. முத்துசாமி செல்வராஜ். இவர் வலைப்பூ வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் பெரும்பாலான பதிவுகளைப் படித்துவிடுவார். அவரின் மூலம் முதலில் அறிமுகமானது என் பள்ளி ஜூனியராக ஆகிப்போன டுபுக்குவின் வலைப்பூ . அதன் மூலம் அப்படியே தமிழ்மணத்தில் நுழைந்து, இப்பொழுது போதை தலைக்கேறி தமிழ்மணம் பக்கம் வராமல் இருக்க முடியாத நிலமை.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஜனவரி 10, 2006

இது எத்தனையாவது பதிவு : 27

இப்பதிவின் சுட்டி(url) : http://elavasam.blogspot.com/2006/06/blog-post.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள் : தமிழ் மறந்து போவது போல ஒரு உணர்வு. முதலில் மற்ற பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன். பின் பின்னூட்டங்கள் இடத் தொடங்கினேன். கடைசியில் நமக்கே நமக்கான்னு ஒரு வலைப்பூ.

சந்தித்த அனுபவங்கள் : ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு சந்திப்பும் ஒரு புது அனுபவம்தான். அதான் எந்த ஊருக்கு போனாலும் யாராவது வலைப்பதிவாளர்களைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறோமே.

பெற்ற நண்பர்கள் : எந்த ஊர்ப் போனாலும் பார்ப்பதற்கு நண்பர்கள். அதில் சிலர் பதிவுகளையும் தாண்டி நல்ல நண்பர்களாய் இருப்பது.

கற்றவை : முதலில் மனசு வெச்சா நம்மால எதுவும் முடியும் என்ற நம்பிக்கை. சீரியஸ் கட்டுரை, நகைச்சுவைக் கட்டுரை, வெண்பா என எல்லாமே கைப்பழக்கம்தான் என்ற புரிதல். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம் : புதிர், பயணக்கட்டுரை, வெண்பா, சமையற்குறிப்பு, சமயக்குறிப்புன்னு நினைச்சதை எழுத முடியுது. நம்ம பதிவில் எல்லாரும் ஆடுற பின்னூட்ட விளையாட்டைப் பத்திக் கேட்கவே வேண்டாம்.

இனி செய்ய நினைப்பவை : புதுசா என்ன? இப்படியே யாருக்கும் மனக்கஷ்டம் வராம பதிவெழுதிக்கிட்டுப் போகவேண்டியதுதான்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சராசரி ஆசைகள் உள்ள ஒரு சராசரி மனிதன். அவ்வளவுதான். நம்மைப் பத்தி சில விஷயங்கள் சொன்ன பதிவு இது.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம் : இருக்கும் கொஞ்ச நாள் எல்லாரையும் அரவணைத்து சச்சரவு இல்லாமல் விட்டுக்கொடுத்துதான் செல்வோமே.