Sunday, January 27, 2013

சர்க்கரை இனிக்கிற சர்க்கரை!


வழக்கம் போல ட்விட்டர் புராணம்தான். வழக்கம் போல ஆரம்பிச்சு வெச்சுது நம்ம @nchokkanதான்.

நான் எதையோ எழுதும் பொழுது சந்திப்பிழை செய்ய, நீர் செய்வது ஆயாசம் அளிக்கிறது. பதிலுக்குப் பாயாசம் அளியும் என்ற ரேஞ்சில் ஒரு ட்விட்டைப் போட்டுட்டு பாயாசமா, பாயசமா என்ற கேள்வியையும் இலவச இணைப்பாகக் கேட்டுட்டுப் போயிட்டார்.

பாயசம்தான் சரி, ஆனால் ஏன் அந்தப் பெயர் வந்தது என்று எனக்குத் தெரியாது என்று நான் விவகாரம் சின்னதாக இருக்கும் பொழுதே அமுக்கிவிட நினைத்தாலும் நடக்கிறதா? விதி @anoosrini @krangana @kekkepikkuni ரூபத்தில் வந்து விளையாட்டை ஆரம்பித்தது.பாயசம் கொஞ்சம் நிறம் மாறி திருக்கண்ணமுது, அக்காரவடிசல் என்று சுவையேறத் தொடங்கியது.

அக்காரம் என்றால் வெல்லம். அடிசில் என்றால் சோறு. இதை அக்காரவடிசில் என்றுதான் சொல்ல வேண்டும் என @ragavang ஜீப்பில் ஏறிக் கொண்டார். இதை இன்னும் அழகாகக் கன்னலமுது எனச் சொல்லாமே, கன்னல் என்றால் சர்க்கரை என்று நினைக்கிறேன் என அனுராதாவும் அக்காரவடிசிலில் வெல்லம்தானே அதில் எங்கே சர்க்கரை வந்தது என்று கிருஷ்ஷும் விவாதத்தை பாயசத்தில் இருந்து வெல்லம், சர்க்கரை பக்கம் திருப்பினர். இந்த பேச்சு நடந்து கொண்டு இருக்கும் பொழுது  @sathishvasan @akaasi  @Jsrigovind @4sn எனப் பலரையும் இணைத்துக் கொண்டு ஒரு சின்ன பொதுக்கூட்டமே போட்டோம்.

கன்னல் என்றால் கரும்பு. அந்தக் கரும்பில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரையையும் கன்னல் என்று சொல்லுவார்கள். கோதை நாச்சியார் தாலாட்டு என்ற தொகுதியில் செந்நெல் விளைய செகமுழுதும் தான்செழிக்க, கன்னல் விளைய கமுக மரம்தான் பழுக்க என்று வரும். இங்கு கரும்பு என்ற பொருளில்தான் கன்னல் என்ற சொல் வந்திருக்கின்றது. அதே தொகுதியில் வேறு ஒரு இடத்தில் கன்னல் மொழி என இனிமையான சுவைகூடிய என்ற பொருளிலும் வருகின்றது. நண்பர் ஒருவர் தம் மகளுக்குக் கன்னல் என்றே பெயர் சூட்டி இருக்கின்றார். சுவையான பெயர் என்பதில் சந்தேகமே இல்லை.

கன்னலாகட்டும், வெல்லம் ஆகட்டும். சர்க்கரை ஆகட்டும், கரும்பினில் இருந்து எடுக்கப்படும் தித்திப்பினைத் தரும் பண்டம்தானே. இவற்றிடையே வேறுபாடு உண்டா என்றால் கிடையாது. ஆனால் தற்காலத்தில் Refined Sugar என ஆங்கிலத்தில் வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை சர்க்கரை என்றும் அப்படி வெள்ளையாக இல்லாத சர்க்கரையை நாட்டு சர்க்கரை என்றும் வெல்லம் என்றும் குறிப்பிடத் தொடங்கிவிட்டோம். (Refined என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? சுத்திகரிக்கப்பட்ட என்பது எனக்கு சரியாகப்படவில்லை.)

சர்க்கரை என்பது இந்தியாவில்தான் முதன்முதலாகத் தயாரிக்கப்பட்டது என்றே அறிஞர்கள் கூறுகின்றனர். மற்ற நாடுகளில் தேன் மட்டும்தான் பயன்பாட்டில் இருந்தது. இங்கு இருந்தே சர்க்கரை பற்றிய மற்றவர்கள் தெரிந்து கொண்டார்கள். இந்தியாவில் பெரும்பாலான மொழிகளில் சர்க்கரை என்பதே இதற்கான சொல்லாக இருக்கின்றது. ஆங்கிலத்தில் வழங்கும் Sugar என்பதற்கும் சர்க்கரை என்பதுதான் வேர்ச்சொல். அரேபிய, பெர்ஷியன், ஜெர்மன், போலிஷ், ரஷ்யன், பழைய ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், போர்த்துகீஸ் என பல மொழிகளிலும் சர்க்கரைக்கான சொல்லிற்கு மூலம் நம் சர்க்கரையே. (இங்கு நம் என நான் குறிப்பிடுவது இந்தியாவை. வடமொழியில் இருந்து தமிழிக்கு சர்க்கரை வந்ததா அல்லது இங்கு இருந்து அங்கு சென்றதா என்பது பற்றி எனக்குத் தெரியாது.)

தொடர்ந்து பேசும் பொழுது ஜீனி பற்றியும் பேசினோம். நெல்லைப்பக்கம் சீனி என்போம். சீனியவரைக்காய், சீனிக்கிழங்கு என்று காய்கறிகளுக்குக் கூட சீனி என்ற இனிஷியலைச் சேர்த்துவிட்டோம். இதன் மூலம் தெரியவில்லை, தேடிப்பார்க்க வேண்டும். தமிழில் சீனி என்றால் மரத்தாலான சேணம் என்கிறது என் அகராதி. அது எப்படி சர்க்கரைக்கு மாற்றாக வந்ததோ தெரியவில்லை. இதற்கு ஏதேனும் வடமொழி மூலம் உண்டா என்று தெரிந்து கொள்ள வேண்டும். சைனாவில் இருந்து வந்த வெள்ளைச் சர்க்கரைக்கே (Refined Sugar) சீனி என்ற பெயர் என்கிறார்கள் சிலர்.

சர்க்கரை, சீனி, வெல்லம், அக்காரம் என்றெல்லாம் பேசிய பொழுது ஆட்டத்திற்கு வராமல் இருந்த ஒன்று கருப்பட்டி. இன்று கருப்பட்டி என்று வழங்கப்பட்டாலும் அதைச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் கருப்புக்கட்டி என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளையாக இல்லாமல் கரிய நிறம் கொண்ட கட்டி கருப்புக்கட்டி. எளிமையான பெயர் என்றால் இதுதான். பனங்கருப்பட்டி, தென்னங்கருப்பட்டி என்று பல விதங்கள் உண்டு. இதைப் பற்றிப் பேசவே இல்லை. அதில் எனக்கு வருத்தம்தான். அதனால்தான் இங்கு நுழைத்துவிட்டேன்.

ஆனால் அஸ்கா பற்றிப் பேசினோம். நான் பணி நிமித்தம் கோவைக்கு மாற்றலாகிப் போன பொழுதுதான் இந்த வார்த்தையை முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். அது என்ன அஸ்கா என்று நண்பனிடம் தந்தையிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அஸ்கா என்பது ஒடிஷா மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறிய நகரத்தின் பெயர். இந்தியாவில் தொடங்கப்பட்ட சர்க்கரை ஆலைகளில் மிகப்பழைய ஆலை ஒன்று இங்குள்ளதுதான். இன்றும் அஸ்கா கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ற பெயரில் இந்த ஆலை இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த ஆலைக்கு தமிழகத்தில் இருந்து, அதுவும் குறிப்பாக மேற்கு தமிழகத்தில் இருந்து கரும்பு செல்வது வழக்கம்.

நாட்டுச் சர்க்கரையை மட்டுமே அறிந்த மக்கள், இந்த ஆலையில் இருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை நாட்டுச் சர்க்கரையில் இருந்து வித்தியாசப்படுத்துக் காண்பிப்பதற்காக அதைக் கொண்டு வந்த இடத்தை / தயாரிக்கப்பட்ட ஆலையை சேர்த்து அஸ்கா சர்க்கரை என வழங்கினர். நாளடைவில் சர்க்கரை என்ற வார்த்தையை விடுத்து அஸ்கா என்றாலே சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என்றாகிவிட்டது. இந்த அஸ்கா கதை பலருக்கும் தெரியாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமே.

நிற்க.

உலகத்திலேயே இந்தியாவில்தான் நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் அதிகமாம். ஒரு சந்திப்பிழைக்கு இந்த ரேஞ்சில் சர்க்கரை பத்திப் பேசினா ஏன் இருக்காதுங்கறேன்.

Saturday, January 26, 2013

விஸ்வரூபம் - தானே உலகாகி தனக்குள்ளே தானடங்கி


நுணலும் தன் வாயால் கெடும்ன்னு சொல்லுவாங்க. ஆனா ட்விட்டரில் எதையாவது உளறி வைக்க அது சுவாரசியமான கருத்துப் பரிமாற்றமா மாறுது. அதான் ட்விட்டரில் எனக்குப் பிடிச்சது.
இப்படித்தான் பாருங்க, ரெண்டு நாள் முன்னாடி இந்த விஸ்வரூபம் படம் பத்திப் பேச்சு. அப்போ ஒரு நண்பர் விளையாட்டா மகாபாரதத்தில்தானே ஒரிஜினல் விஸ்வரூபம் அதைத் தடை செய்யச் சொல்லி யாரும் போராடலையான்னு சொன்னாங்க. நான் பாரதத்தில் மட்டும்தானா விஸ்வரூபம்? ராமாயணத்தில் கூட இருக்கேன்னு சொல்லி வெச்சேன். எங்கேயோ வாமன ரூபம். இராகவ ரூபம், யாதவ ரூபம்ன்னு மூணு விஸ்வரூபங்கள் பத்திப் படிச்ச ஞாபகம்.
@kekkepikkuni @padmaa @ragavang @nchokkan என நண்பர்கள் அனைவரும் களத்தில் குதிக்க அன்றைய பொழுது (வேறொரு) விஸ்வரூபம் பற்றிப் பேசிக் கழிந்தது. அனுமனும் கூட விஸ்வரூபம் எடுத்ததுண்டு ஆனால் விஷ்ணுவின் விஸ்வரூபமே விசேஷமாகப் பேசப்படுகிறது. ராமருக்கு தான் அவதாரம் என்பது தெரியாதே. பின் எப்படி அவரால் விஸ்வரூபம் எடுக்க முடியும்? விஸ்வரூபம் என்றால் என்ன தெளிவான விளக்கம் வேண்டும் என்றெல்லாம் மிகச் சுவாரசியமாக சென்ற கலந்துரையாடல் அது. அப்பொழுது ராகவன், கண்ணதாசன் விஸ்வரூபம் பற்றிய எழுதியதாகத் தந்த வரிகள்தான் தலைப்பு - தானே உலகாகி தனக்குள்ளே தானடங்கி! எவ்வளவு எளிமையாகச் சொல்லிட்டார் பார்த்தீங்களா?
சரி, விஷயத்திற்கு திரும்ப வருவோம். சமீபத்தில்தானே படிச்சோம் அந்த மூன்று ரூபங்கள் பத்தின்னு தேடிக்கிட்டே இருந்தேன். அப்போதான் நான் செஞ்ச தப்பு தெரிஞ்சது. நான் படிச்சது மூன்று விஸ்வரூபங்கள் இல்லை. மூன்று சிம்மரூபங்கள் பற்றி.
நம்ம எல்லாருக்கும் பிரகலாதன் கதையில் வரும் நரசிம்மர் பத்தி நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆனா ராமாயணத்தில் யுத்தம் நடக்கும் பொழுது அனுமன் மேல அம்புகளை மழை மாதிரி பொழியும் பொழுது தன் பக்தனுக்குப் பிரச்சினையா என சிம்மமா மாறினாராம் ராமர். அதுக்கு இராகவசிம்மம் அப்படின்னு பேராம். கம்பன் இதைச் சொல்லி இருக்காரான்னு பார்க்கணும்.
மூணாவதா பாரதத்திலும் பீஷ்மர் அர்ஜுனனைக் கடுமையாத் தாக்கும் பொழுது கோபம் வந்த கிருஷ்ணர் சிம்ம அவதாரம் எடுத்து பீஷ்மரைக் கொல்லப் போயிட்டாராம். கிருஷ்ணர்தான் நான் ஆயுதம் ஏந்த மாட்டேன் சண்டை போட மாட்டேன்னு சொன்னாரே. ஆனா இப்படிச் செஞ்சாரா? இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. படிச்சுப் பார்க்கணும்.
இப்படி தன்னோட பக்தனுக்கு எல்லாம் பிரச்சினை வரும் பொழுது சிம்ம அவதாரம் எடுத்ததா நண்பர் ஆர்விஎஸ் எழுதின இந்தப் பதிவுல படிச்சேன். அதைத்தான் விஸ்வரூபம்ன்னு குழப்பிக்கிட்டேன். என் குழப்பத்தினால் நல்லாப் பொழுது போச்சு.
சரி, சிம்மத்தை விட்டுட்டு இன்னமும் விஸ்வரூபத்தையே புடிச்சுக்கிட்டுப் போகலாம். இந்த முறை திரைப்படம். திரைப்படம்தானே, இதுக்கு எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்? என அதில் அதிக ஆர்வம் இல்லாத எனக்கும் கூட ஆர்வம் வர வைச்சதுதான் இந்த போராட்டம் பண்ணினவங்க செஞ்ச காரியம். உபிச @dynobuoy முதல் நாள் முதல் காட்சிக்கே போகலாம் வான்னு கூப்பிட, கடைசியா முநாமுகா போன படம் எதுன்னு கூட தெரியாத நானும் படம் பார்க்கக் கிளம்பிட்டேன். படம் நல்லாத்தான் இருந்தது. முடிஞ்சதும் இதுக்காடா இம்புட்டு ஆர்ப்பாட்டம்ன்னு ஒரு பக்கம். இரண்டாம் பாகம் வேற இருக்கே அதுக்கு என்னென்ன செய்யப் போறாங்களோன்னு கடுப்பு இன்னொரு பக்கமா திரையரங்கை விட்டு வெளிய வந்தேன்.
படத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுதித் தந்தே ஆகணும்ன்னு @njganesh கத்தியைக் காட்டி மிரட்டி வாங்கிட்டுப் போயிட்டாரு. தமிழோவியத்தில் வந்திருக்கும் விமர்சனத்தை ஒரு நடை போய் படிச்சுப் பார்த்துக்குங்க -
விஸ்வரூபம் விமர்சனம்
இந்த விமர்சனம் இருக்கே, இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விமர்சனம். உபிச @penathal பார்க்கறதுக்கு முன்னாடி, விமர்சனம் எழுதறதுக்கு முன்னாடி, என்னைப் பாருடான்னு சொல்லி என்னைப் பார்க்க வைக்கறதுக்கு முன்னாடி, பார்த்துட்டு இதெல்லாம் படமாடான்னு நான் திட்டறதுக்கு முன்னாடி, திரை உலக வரலாற்றில் நான் அவனுக்கு முன்னாடி பார்த்த முதல் படம், அதற்கான விமர்சனம் என்பதை வரலாற்றில் பதிவு செய்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.
விமர்சனத்தைப் பார்த்துட்டு @eramurukan விமர்சனம் எல்லாம் சரி, படத்தைப் பத்தின வெண்பா எங்கன்னு கேட்டாரு. விமர்சனமா எழுதினா கொஞ்சம் பேராவது படிப்பாங்க வெண்பாவா எழுதினா நீங்களும் நானும்தான் படிக்கணும்ன்னு ஒரு பாட்டம் அலுத்துக்கிட்டு கையோட ஒரு வெண்பாவும் எழுதினேன்.
கள்ளமும் இல்லை கபடமும் இல்லையே
நல்ல படமிது நாடிடு – தொல்லையும்
கூடாது தோற்கவும் கூடாது ஆனால்
பாடாப் படுவதவன் பாடு
இதோட (இப்போதைக்குன்னும் சொல்லலாம்) விஸ்வரூபப் படலம் ஓவர். நல்லா இருங்க மக்கா.

Friday, January 04, 2013

நிறுத்தணும்! எல்லாத்தையும் நிறுத்தணும் - 1!


வழக்கம் போல இந்தப் பதிவுக்கும் காரணம் அண்ணன் @nchokkanதான். எங்கேயோ வெளியாகியிருந்த ஒரு ஆங்கிலக் கட்டுரையை அனுப்பி இது மாதிரி தமிழிலும் செஞ்சா என்னன்னு கேட்டு இருந்தாரு. இது மாதிரி அவர் நிறைய கேப்பார். ஆனாலும் நமக்கு வசதி எதுவோ அதைத்தான் எடுத்துக்கறது. அடிக்கடி கண்ணில் படும் இலக்கண / எழுத்துப்பிழைகள் என்பதே அந்தக் கட்டுரையின் சாராம்சம். 
தமிழில் நம்ம கண்ணில் படறது ஒண்ணா ரெண்டாய்யா இப்படி எல்லாம் தொகுத்துப் பட்டியல் போட என்று தட்டிக் கழித்தாலும் இது மாதிரி செஞ்சா என்ன அப்படின்னு உறுத்திக்கிட்டே இருந்தது. இது போல மேட்டரை அடிக்கடி ட்விட்டர்லே செய்யறதாலேயே நிறையபேர் என்னை அன்ஃபாலோ பண்ணிட்டாங்க. அன்பாலே சொன்னதற்கு அன்பாலோ நியாயமா? இருந்தாலும் என் பணி கடன் செய்து கிடப்பதே!
நினைத்த மாத்திரத்தில் அடிக்கடி பார்த்ததாய் தோன்றும் பத்து தவறுகளின் பட்டியல் இது. பொதுவாக, நம்ம மக்கள் ஃபேஸ்புக் ட்விட்டர்லே எழுதற வார்த்தைகளை மட்டும்தான் எடுத்துகிட்டிருக்கேன். ஆசையோடதான் எல்லாரும் தமிழ் எழுதறாங்க, சரி, அதுக்காக படிக்கறவங்க கண்ணை ஏன் குத்தணும்? அதைக் கொஞ்சம் சரியா எழுதப் பார்க்கலாமே.  

கண்ணில் படுவது: அதற்க்கு / முயற்ச்சி
எழுத வேண்டியது: அதற்கு / முயற்சி

ரொம்ப சிம்பிளான மேட்டர்ப்பா. ற் வந்தா அதுக்குப் பின்னாடி வேற புள்ளி வெச்ச எழுத்து வரக்கூடாது. அதற்கு, இதற்கு, முயற்சின்னு எழுதணும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முயற்சி முயற்ச்சி ஆகாது. இது க்,ச்,ட்,த்,ப் - எல்லா வல்லின மெய்களுக்குமே பொருந்தும்.  

கண்ணில் படுவது: பின்ணணி / பிண்ணணி 
எழுத வேண்டியது: பின்னணி

இணையத்தில் நம்ம ஆட்கள் அதிகம் பேசுவது சினிமாவும் சினிமா இசையும்தான். அதிலும் புதுசா படம் வந்தாலோ, தம் ஆதர்ச இசையமைப்பாளர் பத்தியோ பேச ஆரம்பிச்சா முதலில் வருவது இந்தப் பின்னணி இசைதான். ஆனா அதை பிண்ணணி, பின்ணணின்னு எழுதி நாராசமாக்கிடறாங்க. அணின்னா அலங்காரம். முன்னாடி நடிகர்கள் காட்சிகள் இருந்தாலும் பின்னாடியே இருந்து அழகு செய்யும் இசை என்பதால் அது பின்+அணி = பின்னணி இசை. அதை சின்ணாப்பிண்ணமா, ச்சே சின்னாப்பின்னமா ஆக்கிடாதீங்கப்பா. 

கண்ணில் படுவது: விமர்சணம்
எழுத வேண்டியது: விமர்சனம் 

நம்ம ஊரில் ஒரு கலாச்சாரம் உண்டு. சுவரில் ஒட்டி இருக்கும் போஸ்டர் பிடிக்கலைன்னா அது மேல சாணி அடிப்பாங்க. பெரும்பாலான விமர்சனங்கள் குறைகளையே சொல்லி வருதா, ஒரு வேளை அதனாலதான் அதை விமர்சாணம், ச்சே, விமர்சணம்ன்னு எழுதிடறாங்களோன்னு ஒரு சந்தேகம். விமர்சனத்தின் கனம் எவ்வளவு கூடினால்கூட விமர்சணம் ஆகாது! நோ விமர்சணம். 

கண்ணில் படுவது: சுவற்றில் / கிணறில் 
எழுத வேண்டியது: சுவரில் / கிணற்றில் 

போஸ்டர்ன்னு சொன்ன உடனேதான் ஞாபகத்திற்கு வருது. சுவரில்ன்னு எழுத வேண்டிய இடங்களில் சுவற்றில்ன்னு எழுதினா இலக்கியத்தரமா இருக்குன்னு சில பேர் செய்யறாங்க. அதுல ஒரு தரமும் இல்லை தப்புதான் இருக்கு. கிணறு உ-ன்னு முடியுது. அதனால கிணறு+இல் என்பது கிணற்றில்ன்னு ஆகுது. ஆனா சுவரு இல்லை. அது சுவர்தான். சுவர்+இல் என்பது சுவரில்ன்னுதான் வரணுமே தவிர சுவற்றில்ன்னு வரக்கூடாது. 

கண்ணில் படுவது: பொருப்பு
எழுத வேண்டியது: பொறுப்பு

ரகர றகர கன்ப்யூஷந்தான். பொறுப்போட எழுதணும், பொறுப்பில்லாம இருக்காதேன்னு சொல்லணும். புரியற மாதிரி சொல்லணும்ன்னா சின்ன பொறுப்பு, பெரிய பொறுப்புன்னு வித்தியாசம் எல்லாம் கிடையாது. பொறுப்புன்னு வந்துட்டாலே அது பெரிய விஷயம்தான். அதனால றகரம்தான் போடணும். பொருப்புன்னா மலை.

”செருப்புக்குத் தோல் வாங்கி வந்தாயே, என் பொருப்புக்கு என்ன வாங்கிவந்தாய்” - இது யாரோ தமிழ்லே விளையாடின காதலி, வீரன் கிட்ட கேட்ட கேள்வியாம். மீனிங்: செரு - போர். போருக்குப்போய் தோல் (யானையைக்) கொன்றாயே, என் கழுத்துக்கு (இடக்கரடக்கல்பா) என்ன வாங்கி வந்தாய்ன்னு அர்த்தம். எந்நேரமும் பொருப்பைப் பத்திப் பேசறது பொறுப்பில்லை :-)

கண்ணில் படுவது: சில்லரை
எழுத வேண்டியது: சில்லறை

வாங்கறதைப் பத்திப் பேசினா உடனே அடுத்து நம்ம ஞாபகத்துக்கு சில்லறைதான் வருது. ஒரு முழு நோட்டை மாத்தினா வருவது சில்லறை. அறைன்னா துண்டுன்னு ஒரு அர்த்தம் உண்டு. சில அறைகள் என்பதையே சில்லறைன்னு சொல்லறோம். அரைன்னா பாதி. நோட்டைக் கிழிச்சா ரெண்டு பாதிதான் கிடைக்கும். சில என்பது ரெண்டுக்கும் மேல இல்லையா, அதனால சில்லரைன்னு சொன்னா சில அரைகள், அதாவது, எதோ ஆயிரம் குடு பத்தாயிரம் தரேன் ரேஞ்சு மோசடியா ஆயிரும். அது நமக்கு வேண்டாம். சில்லறைன்னே சொல்லுவோம். சில பிரபல எழுத்தாளர்கள் கூட சில்லரைன்னு எழுதறாங்க. அதான் சோகம். 

கண்ணில் படுவது: அருகாமையில் 
எழுத வேண்டியது: அருகில் 

பிரபல எழுத்தாளர்கள்ன்னு சொன்ன உடனே அடுத்த கடுப்பு இந்த அருகாமையில்தான். அருகில்ன்னு எழுதினா சாதாரணமா இருக்குன்னு நினைச்சு அருகாமைன்னு எழுதிடறாங்க. ஆனா அர்த்தம் அநர்த்தம் ஆயிடுது. அறியாமைன்னா தெரியாம இருக்கறது. போதாமைன்னா போறாம இருக்கிறது. அப்போ அருகாமைன்னா அருகாம இருக்கிறதுதானே. அருகுன்னா சமீபம். அப்போ அருகாமைன்னா அருகில் இல்லாமல் தள்ளி இருக்கிறது, அதை அருகில் என்ற பொருளில் சொல்லலாமோ? சொல்லறாங்க. நாம சொல்லாம இருப்போம். 

கண்ணில் படுவது: கோர்த்து
எழுத வேண்டியது: கோத்து

அதே இலக்கிய வாசம் மேட்டர்தான் இதுவும். கோ - இந்த ஒத்த எழுத்துக்கு தமிழில் ஏகப்பட்ட அர்த்தம் இருக்கு,.பசு, அரசன், ஆண்டவன், இந்திரன், சுவர்க்கம், ஆகாயம், பூமி, தரி, தவிர்ன்னு சொல்லிக்கிட்டே போகலாம். ஏன் இப்படி ஒரு முக்கியம் இந்த எழுத்துக்குன்னு தெரியலை. ஆனா தொடுக்கிறது என்ற பொருளும் உண்டு. கோவை என்றால் தொடுத்தல் என்று பொருள். அதனால கோக்கவோன்னுதான் கேட்கணும். கோர்க்கவோன்னு சொல்லறது சரி இல்லை. துரியோதனனே சொன்னாலும் தப்பு தப்புத்தான் - http://www.youtube.com/watch?v=n4MyXUWNxv0#t=56m20s

கண்ணில் படுவது: முயற்சிக்கிறேன்
எழுத வேண்டியது: முயல்கிறேன் 

ஆகக் கடுப்பேத்தும் விஷயம் இது. முயல், முயலல், முயற்சி. இதைச் செய்யும் போது முயன்றேன், முயல்கிறேன், முயல்வேன்னு சொல்லணும். இல்லை முயற்சி செய்தேன் / செய்கிறேன் / செய்வேன். முயற்சிக்கிறேன்னு எல்லாம் சொல்லக் கூடாது. முயல் ஒண்ணு வந்து நானே சிக்கிக்கிறேன்னு சொன்னா வேணா முயற்சிக்கிறேன்னு சொல்லிட்டுப் போகட்டும். மனுசங்க நாம சரியாச் சொல்லுவோம். 

கண்ணில் படுவது: ஒரு அழகி
எழுத வேண்டியது: ஓர் அழகி

ஆங்கிலத்தில் யாராவது A, An தப்புப் பண்ணினா சிரிக்கும் மக்கள் தமிழில் ஓர் ஒரு தப்பு பண்ணும் போது கண்டுக்கறதே இல்லை. ஆங்கிலம் தமிழ் ரெண்டுலேயும் அதே லாஜிக்தான். உயிரெழுத்து வந்தா அதுக்கு முன்னாடி ஓர் வரணும். உயிர்மெய் எழுத்து வந்தா ஒரு போடணும். ஓர் அழகி, ஒரு முத்தம், ஒரு வாழ்க்கை, ஓர் ஆப்பு! இங்கிலீஷ்லே கேஜி முடிக்கும்போதே கரெக்டா சொல்ற மேட்டர். இங்க டன் கணக்குல படிச்சவங்களும் தப்பு பண்றோம்!

அப்பாடா அவ்வளவுதானான்னு ரொம்பவே ரிலாக்ஸ் ஆகாதீங்க. அப்பப்போ இந்த மாதிரி ஒரு லிஸ்ட் போடுவேன். இந்த எச்சரிக்கையோட இப்போ நிறுத்திக்கறேன்.