Monday, December 23, 2013

புக் வித்த காசு....

சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டரில் நண்பர்கள் சிலர் தங்களின் புத்தகங்களை வாங்கிச் சேர்க்கும் அனுபவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். சொக்கன் தான் வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் தன்னிடமே இருக்கிறது, அவற்றை அன்பளிப்பாகவோ விற்பனை மூலமோ தருவது கிடையாது. புத்தகங்கள் விஷயத்தில் தான் ரொம்பப் பொசசிவ் என்றார். சிலர் குறிப்பிட்ட புத்தகங்களைத் தவிர மற்றவற்றைத் தருவதில் பிரச்னை இல்லை என்றார்கள். இரவல் தந்து காணாமல் போனப் புத்தகங்கள் பற்றிய சோக கீதங்களும் இசைக்கப் பெற்றன. 

எங்கள் வீட்டிலும் இப்படிப் புத்தகங்கள் குமிந்து கிடக்கும். இவற்றில் பலவற்றை இனி சீந்தப் போவதுமில்லை என்பது தெரியும். சும்மாக் கொடுத்தால் அது அரசாங்கம் தரும் (http://chennai.olx.in/q/sale-government-laptop/c-835) மடிக்கணினி மாதிரி மதிப்பில்லாது போய்விடும் என்பது தெரியும். என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாத ஒரே காரணத்தினால் வீட்டில் வைத்துக் கொண்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகம். என் வீட்டை விட என் அண்ணன் வீட்டில் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். 

குடும்பத்தில் அனைவரும் புத்தகக்காதலர்கள் என்பதால் அண்ணன் வீடு எங்கு காணினும் புத்தகங்களடா என்பது போலத்தான் இருக்கும். எல்லா அறைகளிலும், கட்டில்களின் கீழ், மாடிப்படிகளின் கீழ் என புத்தகங்கள் இல்லாத இடங்களே கிடையாது. அங்கு போகும் பொழுது, எதையாவது தேடப் போய் எதிர்பார்க்காத பொக்கிஷங்கள் கையில் மாட்டும் அனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. ஒரு சமயத்தில் இவற்றைக் கட்டி மேய்ப்பது முடியாத காரியம், எதேனும் செய்தாக வேண்டும் என்ற நிலை வந்த பொழுது அண்ணன் எடுத்த முடிவு அலாதியானது. 

அவர் பழைய புத்தகங்கள் கிடைக்கும் இடங்களில் போய் மேலும் புத்தகங்கள் வாங்கினார். ஆமாம், இருக்கும் புத்தகங்களை என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாத நிலையில் மேலும் புத்தகங்கள் வாங்கினார். ஆனால் சேகரித்து வைக்க அல்ல. விற்க.  புனைவு, மேலாண்மை, சமயம், வரலாறு, பொருளாதாரம், விஞ்ஞானம், கணினிவியல் என எல்லா விதமான தலைப்புகளிலும் புத்தகங்கள் விற்பனைக்குத் தயராக இருந்தன. 

சாதாரண புத்தக விற்பனையாக இருக்க வேண்டாம். இதில் தனக்கேதும் லாபம் வேண்டாம். வரும் தொகையை நன்கொடையாகத் தந்துவிடலாம் என்பது முதல் முடிவு. 

எங்கே சென்று இதைச் செய்வது? வீட்டில் இருந்தே செய்ய முடியுமா? என யோசிக்கும் பொழுது, தான் வேலை பார்த்த நிறுவனத்தில் இதைச் செய்தால் என்ன என எண்ணி அந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். அங்கு மனிதவள மேம்பாட்டுத்துறையில் இருந்த நண்பர் ஒருவர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்தார். இதற்கான நாளும் குறிக்கப் பெற்றது. சம்பளம் கைக்கு வந்த வாரத்தில் இந்நிகழ்ச்சி அமையப் பெற்றது யதேச்சையான விஷயம் என அண்ணன் சொன்னதை நாமும் அப்படியே நம்பி வைப்போம். 

கிட்டத்தட்ட 500 புத்தகங்கள் சேர்த்தாயிற்று. என்ன விலைக்கு வைக்கலாம்? அமெரிக்க நூலகங்களில் இது போல பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் பொழுது Hardcover புத்தகங்கள் ஒரு டாலர், Paperback புத்தகங்கள் 50 செண்ட் என விலையைக் குறிப்பிடுவார்கள். அப்படிச் செய்யலாமா என எண்ணும் பொழுது வேறு ஒரு யோசனை தோன்றியது. 

ஒரு உண்டியலை வைத்து விடலாம். இந்த விற்பனை மூலம் வரும் பணம் அனைத்தும் நன்கொடையாகத் தரப்படும் என்பதை விளம்பரப்படுத்திவிடலாம். வாங்குபவர்கள் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்ளட்டும். அவர்கள் அப்புத்தகங்களுக்கு எவ்வளவு தர வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து அதை அந்த உண்டியலில் போட்டுவிடலாம். யார் எவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்பது அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்த யோசனை அந்நிறுவனத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

அதன்படி அனைத்து ஊழியர்களுக்கும் இது குறித்த மின்னஞ்சலும் அனுப்பப்பட்டது. எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், அதற்கு தான் நினைக்கும் தொகையைத் தந்தால் போதும் என்ற விதமே அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்தது. 

இந்த விற்பனை மூலம் ரூபாய் 15,000 வரை சேரும் என்பது அண்ணனின் எதிர்பார்ப்பு. கொண்டு சென்ற புத்தகங்கள் பெரும் பகுதி குறித்த நேரத்திற்கு முன் எடுத்துச் செல்லப்பட்டன. சேர்க்கப்பட்ட தொகையோ கிட்டத்தட்ட ரூபாய் 39,000. 

தன் கையில் இருந்து கொஞ்சம் சேர்த்து ரூபாய் 40,000த்தை அந்நிறுவனம் மூலமாகவே Sambhav Foundation (https://www.facebook.com/pages/Sambhav-Foundation/166563906715082) என்ற சேவை இல்லத்திற்கு அனுப்பி வைத்தது மனதை நெகிழ வைத்ததாக இருந்தது என்றார் அண்ணன். 

இந்நிகழ்ச்சி நடந்த சில நாட்களுக்குப் பின் புத்தகங்களை வாங்கிய ஒருவர் அண்ணனை தொலைப்பேசியில் அழைத்து தான் உண்டியலில் இட்ட பணம் போதாது, இன்னும் கொஞ்சம் தந்திருக்க வேண்டும், எப்படித் தரலாம் எனக் கேட்டதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றி. Talk about reverse of Buyer's remorse.

அண்ணன் அவ்வழி என்றால் தம்பி நானும் என் வழியில் இதைப் போல ஒன்றைச் செய்தேன். 

நான் "ஜாலியா தமிழ் இலக்கணம்" (https://www.nhm.in/shop/978-81-8493-744-2.html) என்ற புத்தகத்தை எழுதியது பலருக்கும் தெரியும். இங்குள்ள நண்பர்கள் அதனை இந்தியாவில் இருந்து தனித்தனியாக வரவழைப்பதற்குப் பதிலாக என்னையே மொத்தமாக வரவழைத்துத் தர முடியுமா எனக் கேட்டார்கள். 

நானும் அப்படியே செய்து தந்தேன். நண்பர்களிடையே தரும் பொழுது விலைக்கு என வேண்டாம் நீங்கள் என்ன தந்தாலும் அதற்கு சமமான தொகையைச் சேர்த்து நன்கொடையாகத் தரப் போகிறேன் என்று சொல்லி இருந்தேன். ஆர்வமுடன் அவர்கள் தந்ததோடு என் பங்கையும் சேர்த்து ரூபாய் 18,000த்தை சென்னையில் டாக்டர் சுந்தர் நடத்தி வரும் Freedom Trustக்கு (http://www.freedomtrustchennai.org) அளித்தேன். 

இந்த வருடம் உருப்படியாக எதோ ஒன்று செய்த ஒரு திருப்தி. 

Sunday, December 22, 2013

சொன்னது சாருவா? சொல், சொல், சொல்....

இதை எழுதும் போது எனக்கு என்ன தோணிச்சுன்னா தேவர்மகன் க்ளைமேக்ஸில் கமலஹாசர் சொல்லும் "கடைசியில் என்னையும் கத்தி தூக்க வெச்சுட்டீங்களேதான்." போகட்டும்.
எனக்குச் சாருவின் எழுத்துகள் பிடிக்காது. அவரின் பதிவுகள் பக்கம் கூடப் போக மாட்டேன். நமக்கு ஒவ்வாத கருத்துகளைப் படித்து நம் ரத்தக்கொதிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டாமே என்ற நல்ல எண்ணம்தான். ஆனாலும், நண்பர்கள்(?) சமயத்தில் தரும் சுட்டிகளால் சிலவற்றைப் படிக்க வேண்டியதாகி விடுவதுண்டு. இன்று அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது அரவிந்தன். இந்த சுட்டியைத் தந்தார். பின்புலம் தெரிவதற்காக அதற்கு முந்தைய பதிவொன்றும் படித்தேன். ஒரு சிறிய இன்ப அதிர்ச்சிதான்.
எனக்குப் புரிந்த அளவுக்கு விஷயம் இதுதான். பேஸ்புக்கில் எழுதி வரும் ஓர் இளம் எழுத்தாளர் ஒருவர் தன் முதல் நாவலை எழுதி இருக்கிறார். அதன் வெளியீட்டு விழாவில் பங்கேற்க சாருவிற்கும் அழைப்பு போய் இருக்கிறது. ஆனால் புத்தகத்தைப் படித்த சாருவிற்கு அந்த நாவல் பிடிக்கவில்லை. அதனால் விழாவிற்கு வர முடியாது என்றும், வேறொரு நாள் அந்த எழுத்தாளரிடம் தன் கருத்துகளைச் சொல்வதாகவும் சொல்லி இருக்கிறார். இதற்குப் பொங்கிய சிலர் வழக்கம் போல சாருவைத் திட்டித் தீர்த்திருக்கிறார்கள் போல. 
தனக்குப் பிடிக்கவில்லை என்ற பொழுதில் அவ்விழாவிற்கு சென்று போலியாக சில வார்த்தைகளைப் பேசுவதில் தனக்கு ஒப்புதல் இல்லை. அதே சமயம் அங்கு ஒரு இளம் எழுத்தாளரின் குறைகளைப் பட்டியலிட மனது வரவில்லை. எனவே தான் வரவில்லை என்று அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை என்பதே என் எண்ணம். 
இது குறித்த அவர் பதிவில் கூறி இருக்கும் வேறு ஒரு கருத்துதான் எனக்கு இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. 
ஒரு வாக்கியம் கூட இலக்கணமாக இல்லை.  தமிழை அவர் rape செய்திருக்கிறார்.  இலக்கணத்தை உடைக்கலாம்.  ஆனால் அதை பிரக்ஞாபூர்வமாகச் செய்ய வேண்டும்.  இலக்கணமே தெரியாமல் செய்யக் கூடாது.  ஒரு வாக்கியம் கூட வாக்கியமாக இல்லை.
எழுதும் அனைவரும், முக்கியமாக, எழுத்தாளன் எனக் கருதிக் கொள்பவர்கள் அனைவரும் மொழியை சரியாகக் கையாள வேண்டியது அவசியம். எழுத்தாளர்களின் பிரபலம் கூடக்கூட இந்தப் பொறுப்பும் அதிகரிக்கிறது. ஆனால் இன்றைய எழுத்தாளர்கள் பலரும் இதைச் சொன்னால் கோபப்படுகிறார்களே தவிர அதன் பின் இருக்கும் உண்மையை உணர்வதே இல்லை. 
இன்று வெளியாகும் வலைப்பதிவுகள், கதைகள், நாவல்கள், பொதுஜன ஊடகக் கட்டுரைகள், செய்திகள் என அனைத்திலும் எழுத்துப்பிழைகள், வரிவடிவப்பிழைகள் என விதவிதமாய்ப் பிழைகள்தான் மலிந்திருக்கின்றன. இதற்குப் பிரபலங்களும் விதிவிலக்கல்ல.
இப்படி எழுதலாமா எனக் கேட்டால், பாரதி, "நல்லதோர் வீணை" என எழுதவில்லையா என்பார்கள். அவன் எங்கு ஓர் எங்கு ஒரு எழுத வேண்டும் எனத் தெரியாமல் எழுதவில்லை. அதே போல கவிதையின் சந்தத்திற்காகச் செய்யப்படும் சில மாற்றங்களை உரைநடையில் அனுமதிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 
"ஒரு வீடு ஒரு உலகம்" எனத் தலைப்பு வைத்த ஜெயகாந்தன் கூட அது இலக்கண மீறல் என்று அறிந்துதான் செய்திருக்கிறார். அதற்கு பின் இருந்த சிந்தனை எவ்வளவு பெரிய விளக்கமாய் வந்திருக்கிறது பாருங்கள்.

தான் எழுதுவதே தமிழ், தனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்றும் இருக்கும் இலக்கணத்தை விட்டுவிட்டு புதிய இலக்கணங்கள் வேண்டும் எனப் பேசும் பிரபலங்கள் மத்தியில் இந்தக் கருத்தை சொல்லி இருக்கும் பிரபலமான சாரு நிவேதிதாவிற்கு என் வாழ்த்துகள். 
இதே கருத்தை வலியுறுத்தி நான் சில நாட்களுக்கு முன் எழுதிய மற்றுமொரு பதிவு இது!
பிகு: இதை எல்லாம் சொன்னவர், ஆன்மீகம் என்பது தவறு என யாரேனும் சுட்டிக் காட்டி ஆன்மிகம் என எழுதத் தொடங்குவாரானால்  அவரின் நேர்மைக்கு அது சான்றாக இருக்கும். 

Friday, December 13, 2013

அழகுத் தமிழும் அம்பேல்!

இன்று வதனப்புத்தகத்தில் நண்பர் Murthy Subra அம்பேல் என்ற சொல் தமிழ்தானா என்று கேட்டார். அதற்கு இலக்கண வாத்தியார், வெண்பா வேந்தர் அண்ணன் என். சொக்கன் அது தமிழ் வார்த்தை இல்லை, ஆங்கிலேயர் I am bailing out எனச் சொல்வதை அரைகுறையாகக் கேட்டுக் கொண்டு I am bail என மாற்றி அது அம்பேல் ஆனது என்று ஒரு விளக்கம் அளித்திருந்தார்.

அம்பேல் தமிழ்தான் என நிறுவ வேண்டி இருப்பது காலத்தின் கட்டாயமே. ஆங்கிலத்திலோ லத்தீனிலோ இது போன்ற கேள்விகள் எழுவதே இல்லை. அவர்களுக்கு தம் மொழி மேல் இருக்கும் நம்பிக்கை அத்துணை மகத்தானது. நம் தமிழுக்குத்தான் பாவம் இந்தக்கதி.

போகட்டும், அம்பேலுக்கு வருவோம். அம்பேல் என்றால் அந்த இடத்தை விட்டுக்காணாமல் போய்விடுவதுதானே. அதில் இருக்கும் ஏல் என்பதை என்ன எனப் புரிந்தால் அம்பேல் தமிழ்தானா என்ற கேள்வியே எழாது.

ஏல் என்பது இயல் என்பதன் திரிபு. அகராதியைப் புரட்டினோமானால் ஏல் என்பதற்குப் பல பொருள் உள்ளது விளங்கும்.

ஏல் (p. 151) [ ēl ] , V. v. t. receive, accept, admit, allow, ஒப்புக்கொள்; 2. stretch out hands in begging, receive alms, பிச்சைவாங்கு; 3. oppose in battle, ஏதிர்; 4. love, அன்புகூர்; 5. be equal, ஒத்திரு. v. i. be suitable for, agreeable to, becoming, இசை; 2. be excessive, abound, மிகு; 3. change, மாறுபடு; 4. happen, occur, சம்பவி, as in "ஏற்றதையுணர்கிலமென்று" (வில்லி;) 5. awake from sleep.

இதில் நாம் பார்க்க வேண்டியது ஒத்திரு என்னும் விளக்கத்தை மட்டுமே. அம்பினை ஒத்திருப்பது அம்பேல். அம்பு+ஏல்= அம்பேல்.

வில்லினிலிருந்து ஏவப்பட்ட அம்பானது எப்படி, அவ்விடத்தை விட்டு கடி வேகம் கொண்டு காணாமல் போகிறதோ அதைப் போல நானும் இவ்விடத்திலிருந்து அகல்வேன் எனச் சொல்லவே நாம் அம்பேல் என்கிறோம்.

இங்கு ஒரு சுவாரசியம். நாம் வேகமாகச் செல்வதை வில்லில் இருந்து கிளம்பும் அம்பாக உருவகப்படுத்துகிறோம். ஆனால் கம்பன் ராமனின் வில்லில் இருந்து கிளம்பிச் செல்லும் அம்பின் வேகத்தைப் பற்றி என்ன சொல்கிறான் தெரியுமா?

நம் வாயில் இருந்து செல்லும் வார்த்தைகளின் வேகம் போல் ராமன் எய்த அம்பு விரைந்தது என்கிறான். தாடகை வதம். அவளைக் கொல்ல ராமன் அம்பினை எய்கிறான். அதைச் சொல்லும் பொழுது கம்பன்

சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல் 
அல்லொக்கும் நிறத்தினாள் மேல் விடுத்தலும்...

எனச் சொல்கிறான். கோபத்தில், சற்றும் எண்ணாமல், பேசிடும் பொழுது சொல்லானது நம் வாயில் இருந்து வேகமாய்ச் செல்வது மட்டுமல்லாது அதைக் கேட்பவரைக் காயமும் படுத்தும் அல்லவா? அதைப் போல வேகமாய்ச் சென்று காயப்படுத்தும் அம்பு எனச் சொல்வது எத்துணை பொருத்தம்!

அப்படிச் சொல்லின் வேகத்தைப் போலச் சீறிப் பாயும் அம்பினை ஒத்து நானும் செல்கிறேன் என்பதைத்தான் நான் அம்பேல் எனச் சுருங்கச் சொல்கிறோம்.

அம்பேல் தூயதமிழ்ச் சொல்லே. இனியும்  இது குறித்த ஐயம் வேண்டாம்.

#எல்லாமேதமிழ்தான்

Thursday, November 21, 2013

தேனீர் போடும் லாவகம்!

இன்று எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில், இலங்கையில் இருக்கும் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய அம்மா என்ற சிறுகதையைப் படித்தேன். நிற்க. இது அந்தக் கதையைப் பற்றிய விமர்சனம் அல்ல. 

நுவரெலியா தேயிலைத் தோட்டப் பகுதிகளில் நடப்பதாக எழுதப்பட்ட அக்கதையில் தொடர்ந்து தேனீர் என்றும் லாவகம் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதைப் படிக்கும் பொழுது என்னடா ஒரு பெரிய எழுத்தாளர் இப்படி எழுதுகிறாரே என்ற வருத்தம்தான் வந்தது.

தேயிலையின் சுருக்கம் தே. அந்தத் தேயிலையைக் கொதிக்க வைத்த நீர் என்ற வகையில் தே+நீர் என்பது தேநீர் என்றே ஆகும். தேனைச் சேர்த்த நீர் என்பதை வேண்டுமானால் தேன்+நீர் = தேனீர் என எழுதிக் கொள்ளலாம். 

அதே போல லகு என்ற சொல்லிற்கு நுண்மை என்ற ஒரு பொருள் உண்டு. மிகவும் நுண்மையாக ஒரு செயலைச் செய்வதற்கு லாகவமாகச் செய்கிறான் எனச் சொல்ல வேண்டும். லாவகம் என்ற ஒரு சொல்லிற்கு பொருள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

இதை நான் சுட்டிக் காட்ட, சுட்டிக் காட்டப்பட்டது சரியா தவறா என்ற சிந்தனையை விட்டு விட்டு, தன் ஆதர்ச எழுத்தாளரின் தளத்தில் வெளியிடப்பட்ட கதையில் குற்றம் கண்டுபிடிக்கலாமா என வெகுண்டு எனக்குப் ப்ரூப் ரீடர் பட்டம் கட்டி சமாதானமடையக் கிளம்புவர் சிலர். 

இணையத்தில் எத்தனையோ பேர் தவறாக எழுதி வருகிறார்கள். அவர்கள் எல்லாரையும் திருத்த நான் கிளம்பப் போவதில்லை. சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள ஆர்வமிருப்பவர்களிடம் மட்டுமே சொல்லி வருகிறேன். 

நான் இங்கு சொல்வது எந்த பெரிய எழுத்தாளர்களிடமும் போய்ச் சேரப் போவதுமில்லை. அப்படியே சேர்ந்தாலும் அவர்கள் அதிலிருக்கும் நியாயத்தை எடுத்துக் கொள்ளப் போவதுமில்லை. 

ஆனால் பெரிய எழுத்தாளர்கள் தொடர்ந்து தவறான சொற்களைப் பயன்படுத்தி வந்தால் அவர்களைப் படிப்பவர்கள் அதுவே சரியான சொல் என நினைத்து பயன்படுத்தத் தொடங்குவர். அந்தத் தவறான வடிவம் சரியான சொல்லின் மாற்று வடிவமாகவும் மாறிவிடும். 

அந்நேரம் அது தவறெனச் சுட்டிக் காட்டப்பட்டால், இந்த எழுத்தாளர்களின் எழுத்துகளே அந்த மாற்று வடிவமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றே என்பதற்கான சான்றாக முன் வைக்கப்படும். அங்கு தவறெனச் சுட்டிக் காட்டுபவர்களுக்கு மிகைதிருத்தப் பேர்வழிகள் என்ற பட்டமும், மொழிவளமையை குறைக்க வரும் ஆட்கள் என்ற சித்தரிப்புமே மிஞ்சும். 

இன்று பலரும் நாகரீகம் ஆன்மீகம் எனப் பிரபல எழுத்தாளர்கள் எழுதுவதைக் காட்டி அவரே அப்படித்தான் எழுதுகிறார், நீங்கள் மட்டும் ஏன் அவை தவறு எனச் சொல்கிறீர்கள் எனக் கேட்பது அடிக்கடி நடப்பதுதான். 

தவறாக எழுதித்தான் தமிழின் வளம் மேம்படவேண்டும் என்பதில்லை. இது போன்ற தவறான சொற்கள் மொழியில் நுழைவது தேவையும் இல்லை. எனவே இந்த ஒரு காரணத்திற்காகவாவது எழுத்தாளர்கள் சரியாக எழுத வேண்டும் அல்லது எழுதிய பின் அதனை யாரேனும் சரி பார்த்த பின் வெளியிட வேண்டும் என்பதே என் கோரிக்கை. 

ஊதும் சங்கை நான் ஊதிக்கொண்டே இருக்கிறேன். யார் காதிலாவது விழுந்தால் சரி. 

Saturday, November 02, 2013

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா!

முன் குறிப்பு: தீபாவளி (அல்லது) விடுமுறை நாட்களில் சினிமா சம்பந்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் தருவது நம் பொழுதுபோக்கு ஊடகங்களின் பாரம்பரியம். நீங்கள் அனைவரும் படித்து மகிழும் நம் பதிவிலும் அந்த பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க உந்துசக்தியாய் இருந்த நண்பர் சொக்கனுக்கு நம் நன்றிகள்.

இனி பதிவு. 

சொக்கன் இன்று உய்யலாலா என்ற பதத்தின் பொருள் என்ன என்று வினவி இருந்தார். பொருளற்ற சொல்லாக இருக்குமோ என்ற ஐயத்தால் எழுந்த வினா அது என்று உணருதல் அவ்வளவு சிரமமில்லை. ரஜினி சார் நடித்த பாண்டியன் திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்றில் உய்யலாலா என்ற சொல்லைப் பயன்படுத்தியது பஞ்சு அருணாசலம்.  கண்ணதாசன் தயாரிப்பென்பதால் அத்துணை பொறுப்பின்றி தமிழைக் கையாண்டிருக்க மாட்டார் என நம்பிக்கை நமக்குண்டு.

முதலில் அப்பாடல் வரிகளைப் பார்க்கலாம்.


பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டிநின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தேன் கல்யாண மாலை
மையல் கொண்டேன் நானிந்த வேளை

மொத்தப் பாடலையும் பற்றிப் பேசத் தொடங்கினால் இன்று ஒரு நாள் போதாது என்று சொல்லத்தக்க அளவு சிறந்த பாடல். நாம் உய்யலாலா என்ற பதத்தினை மட்டும் பார்க்கலாம். 

இந்தப் பாடலில் உய்யலாலா என்ற சொல்லைக் கவிஞர் மிகவும் அழகாகக் கையாண்டிருக்கிறார். முதலில் நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். இங்கு உய்யலாலா என்பது செயற்கையாக உருவாக்கம் செய்யப்பட்ட ஒரு பதம் அல்ல. உய்யல், ஆலா என்ற இரண்டு சொற்களின் கூட்டே அந்தப் பதம். புணர்ச்சி விதிகளின்படி உய்யல் + ஆலா என்ற இரு சொற்கள் கூடி உய்யலாலா என்ற பதம் நமக்குக் கிடைக்கிறது. 

அது என்ன உய்யல்? அது என்ன ஆலா? அதை ஏன் இங்கு கவிஞர் பயன்படுத்தி இருக்கிறார் என்ற கேள்விகள் நமக்கு எழுவது இயற்கையே. இந்தக் கவிதை ஆழமாகப் படித்துப் புரிந்து அனுபவிக்க முயற்சி செய்தோமானால் கவிஞர் எத்துணை அழகாக இச்சொற்களை ஆண்டிருக்கிறார் என்பது புரியவரும். வாருங்கள் பார்க்கலாம். 

நாயகனை தலைவனாக, அரசனாகப் பாவிப்பது என்பது தமிழ் மரபு. கவிஞர் மரபுவழி வந்தவர் என்பதால் அதிலிருந்து சிறிதும் வழுவாமல் தலைவனை ஒரு அரசனாகவும் அவன் எவ்வளவு பெரிய நாட்டினை ஆண்டு வருகிறான் என்பதையும் முதல் வரியில் கவிஞர் எடுத்துரைக்கிறார். அப்பொழுது மிகவும் அழகாக அறிவியல் துணுக்கொன்றையும் நமக்குத் தருகிறார். 

உய்யல் என்றால் உயர்தல். நம் நாயகனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அப்படி உயர்ந்து நிற்பது எது என்றால் ஆலா என்ற ஒரு பறவையாம். அதனால்தான் அந்த நாட்டில் உயர்ச்சி என்பதே ஆலா எனப் பொருள் வருமாறு கவிஞர் பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யல் ஆலா என்கிறார். 

ஆலா என்றால் ஆங்கிலத்தில் Tern என அழைக்கப்படும் பறவை. அதிலும் குறிப்பாக Arctic Tern என்ற வகை ஒன்று உண்டு. இப்பறவை என்ன செய்யும் என்றால் வடதுருவப்பகுதிகளில் குளிர்காலம் ஆரம்பிக்கும் முன் அங்கிருந்து பறக்கத் தொடங்கி தென் துருவப் பகுதிகளுக்குச் செல்லும். அதே போல தென் துருவத்தில் குளிர் தொடங்கும் முன் மீண்டும் வட துருவத்திற்குப் பறந்து செல்லுமாம். இது அப்படி ஓர் ஆண்டில் பறக்கும் தூரம் 70,000 கிலோமீட்டர்களுக்கும் அதிகம். 

பாண்டியனின் ராஜ்ஜியம் அப்படிப் பரந்து விரிந்தது. அதை முழுவதும் பார்க்கக்கூடியது ஆலாப் பறவைகள் மட்டுமே என்று ஒரு வரியில் நாயகனின் பெருமையையும் கூடவே ஒரு அருமையான அறிவியல் குறிப்பையும் தருகிறார் கவிஞர். 

சரி. பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யல் ஆலா. அதைத் தொடர்ந்து அது என்ன வேண்டி நின்றப் பைங்கிளிக்கு உய்யலாலா? 

கவிஞரின் மொழிவளமைக்குச் சான்று இது. அழகான சொல் விளையாட்டு. நாயகனுக்கு முதல் வரியைத் தந்தவர் அடுத்த வரியில் நாயகிக்குச் செல்கிறார். நாயகியைப் பைங்கிளியாக உருவகப்படுத்தியவர் அந்த கிளிக்கு என்ன தேவை எனச் சொல்கிறார்? 

உய்தல் என்ற சொல்லின் மற்றொரு பொருள் வாழ்தல். அந்தப் பைங்கிளி வாழ என்ன தேவை எனச் சொல்கிறார்.

நம் கிராமப்புறங்களில் ஆற்றங்கரையில் ஆலமரங்கள் இருக்கும். அவற்றில் கிளிக்கூட்டங்கள் வசிக்கும். எப்பொழுது கீகீ எனக் கத்திக் கொண்டு ஆரவராமாய் வாழும் அக்கிளிக்கள் புசிப்பது அந்த ஆலமரத்தில் இருக்கும் பழங்களை. 

ஆனால் இந்தப் பைங்கிளிக்கு ஆலம்பழமா தேவை? இந்தக் கேள்வியையே  வேண்டி நின்றப் பைங்கிளிக்கு உய்யல் ஆலா? என எழுதுகிறார் கவிஞர்.  இங்கு தேவை அது இல்லையே. அதை உணர்ந்தே தான் அவள் கையில் கல்யாண மாலையை நான் தந்தேன் என நாயகன் பாடுவதாகப் போகிறது இந்தப் பாடல். 

தமிழ் மரபு சார்ந்த நாயக உருவாக்கம், மிகைப்படுத்தல், அறிவியல் செய்தி, சொல் விளையாட்டு என இரண்டு வரிகளில் பஞ்சு அருணாச்சலம் செய்து இருப்பது திரையிசைப்பாடல்களில் ஒரு உச்சம் எனச் சொல்லலாம். இந்தப் பாடலை மீண்டும் ஒரு முறை அசை போட சந்தர்ப்பம் தந்த சொக்கனுக்கு நன்றி.

நேயர்கள் அனைவரும் நம் தீபாவளி (அல்லது) விடுமுறை தின வாழ்த்துகள். 

Tuesday, October 29, 2013

அவையத்து முந்தி இருப்ப...

படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என் மகன் சொன்னான். “You know Dad, I wasn't comfortable".

வீட்டிற்கு அருகிலேயே உள்ள மால், அங்கே புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஐமாக்ஸ் திரையரங்கம், முழு உடலையும் உள்ளே இழுத்துக்கொள்ளும் குஷன் நாற்காலிகள், பாப்கார்னா ஐஸியா என்று பார்த்துப்பார்த்து உபசரிக்கும் தேவதைகள் - இதில் எதுதான் அன்கம்ஃபர்டபிள் என்று எனக்குப் புரியவில்லை. கேட்டேன்.

“I cant see these types of movies with you dad" என்றான். இத்தனைக்கும் அனிமேட்டட் படம். அவன் வளர்ந்துவிட்டானாம். நிழலிலேயே வளர்ந்தவனுக்குத் தெரியுமா நிழலின் அருமை?

அவனுக்கு என்ன தெரியும்? அப்பாவுடன் படம் பார்ப்பதில் உள்ள அருமை அப்பாவுடன் சினிமா என்ற ஏக்கம் என் நெஞ்சை விட்டு அகலாத பெருஞ்சோகம்.

சின்ன வயதில் நான் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன்.எல்லாம் வைராவி அண்ணா திரையரங்கில். திரையரங்கு என்ற பெயருக்குச் சற்றும் சம்மந்தமில்லாமல் சுவரே இல்லாத திறந்த கொட்டகை, மாலை ஆன உடன் வீசத் தொடங்கும் மெல்லிய குளிர் கொண்ட காற்று, அதே போல குளிரத் தொடங்கி இருக்கும் மணல், ஆண்கள் பெண்கள் பகுதிகளுக்கிடையே ஆன மரத்தடுப்பு, பின்புறம் பெஞ்ச் மற்றும் சேர்கள், துப்பிய புகையிலையும் பிடித்த பீடியும் கலந்த ஒரு வாசம், முறுக்கு விற்கும் சிறுவர்கள், தீ என்று எழுதப்பட்ட துருப்பிடித்த சிவப்பு வாளிகளில் மண், அதைத் தாண்டி மூத்திர வாடை அடிக்கும் வேலியோரம் என்று டூரிங் கொட்டகைகளுக்கேயான அடையாளங்கள் அனைத்தும் அதற்கு உண்டு. மீன்கொடி நாட்டிய தேவா பாடல் கேட்டதும் உடல் சிலிர்க்கும்- படத்துக்குப் போயே ஆகவேண்டும் என்று நாடி நரம்பெல்லாம் புடைக்கும். அப்பாவிடம் நேராகப் பேச பயந்துகொண்டு மூர்த்தி மாமாவிடம் சொல்வேன்.

மூர்த்தி மாமா அப்பாவிடம் பேசும்போது ”அதானே பார்த்தேன்.சாயங்காலம் ஆறுமணியாச்சே. சனிக்கிழமை வேற.இன்னும் அலாரம் அடிக்கலையேன்னு..”என்ற நக்கலான பதில் கேட்கும். தொடர்ச்சியாக “நீங்களும் வாங்களேன் அத்திம்பேர்” என்பார் மாமா.

“உனக்குதான் எல்லாம் தெரியுமே.. நான் என்னிக்கு படம் பார்க்க வந்திருக்கேன்”

சினிமா போகும் அவசரத்தில் அப்பா ஏன் சினிமா வருவதில்லை என்ற கேள்வி எழவே எழாது. நம் சுயநலங்கள் மட்டுமே பூதாகாரமாக நின்ற தருணங்கள். என்னைப்பற்றி நானே வெட்கித்து நிற்கும் தருணங்கள் அவை.

இந்த சஸ்பென்ஸுக்கும் ஒருநாள் முடிவு வந்தது. கிளிக்கு இறக்கை முளைத்துவிட்டு, கட்டடித்து சினிமா போக ஆரம்பித்துவிட்ட நேரம் அது. ஒரு நாள் சினிமாவெல்லாம் பார்த்துவிட்டு வரும்போது இரவு 10மணி. வரும்வழியில்தான் நினைவுக்கு வந்தது, மூர்த்திமாமாவிடம் கூடச் சொல்லாமல் சென்றிருந்தது. அப்பா அம்மா மாமா எல்லாரும் வாசலிலேயே காத்திருந்தனர்.

“ஏண்டா.. எங்கேடா போயிட்டே சொல்லாம கொள்ளாம?” அம்மாவை அவ்வளவு கோபமாக நான் பார்த்ததே இல்லை.

“சினிமாவுக்கு” என் குரல் எனக்கே கேட்கவில்லை.

“சொல்லியிருந்தா நானே கூட்டிப்போயிருப்பேனேடா” என்றார் மூர்த்தி மாமா.

அப்பா கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை. “ போய் சாப்பிடு. யாரும் திட்டாதீங்க. சினிமாக்குதானே போயிருக்கான்” என்றார் பொறுமையாக.

சூறாவளியை எதிர்பார்த்துக் காத்திருந்த எனக்கு அதிர்ச்சி. இவரோ ஒரு சினிமாவுக்கும் போனதில்லை - சினிமாவே பிடிக்காத ஆசாமி. சொல்லாமல் போனதற்கும் கோபமில்லை என்றால் ஆச்சரியமாக இருக்காதா? இத்தனைக்கும் கோபமே வராதவர் எல்லாம் இல்லை. ஒருமுறை காலாண்டுத் தேர்வு மார்க்குக்காக ரெண்டு தெரு துரத்தித் துரத்தி அடித்தவர்.

சாப்பிட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அவரிடம்.. “அப்பா..ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?” என்றேன்.

“என்னடா? ஏன் இவனுக்குக் கோபமே வரலைன்னுதானே கேக்கப்போறே?” என்றார்.

கொஞ்சம் அமைதியாக இருந்தவர், “எனக்கும் சினிமா எல்லாம் பிடிக்காம இல்லைடா.. நிறையப்படம் பார்த்திருக்கேன். ஒரு படம் கூட விடாமப் பார்த்துக்கிட்டிருந்தவன்தான்”

“ஒரு நாள் படம் பார்க்கக் காசில்லை. அப்பாவோட வெத்தல செல்லத்தில் இருந்த பழைய நாலணாக் காசை எடுத்துக்கிட்டு ஓடிட்டேன்.”

”திரும்பி வந்தா பெல்டால அடிச்சுப் பின்னிட்டாரு.. அவரைச்சொல்லியும் குத்தமில்லை. அந்தக்காசு அவரோட அப்பா போனப்போ நெத்தியில் வெச்சு எடுத்த காசாம். ஞாபகமா வெச்சிருந்தாராம். அதுவும் கூட எனக்கு ரொம்பநாள் கழிச்சுதான் தெரிஞ்சுது.”

“அன்னிக்குப் போட்ட சண்டைல மும்முரத்துல, உன்னையும் ஒரு சினிமாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்.. அதுவும் என் காசுல.. அன்னிவரைக்கும் நானும் சினிமா பார்க்க மாட்டேன். இனிமேல் என் மேலே கைய வச்சே..”ன்னு கத்திட்டேன்”

அப்புறம் ஒரு நாலஞ்சு வருஷம் படிச்சு, வேலைக்குப்போய்..சம்பளம் கிடைச்சவுடனே முதல் வேலையா சினிமா தியேட்டருக்குத்தாண்டா போய் நின்னேன். நீளமான க்யூ. புதுப்படம் வேற. இந்தாளுக்குமா சேர்த்து ரெண்டு டிக்கட் வாங்கிட்டு - பழிக்குப்பழி வாங்கணுமில்ல - வீட்டுக்கு வந்தா..

“காலையில இருந்து ஒரே ஆட்டம்.. என் புள்ள சம்பாதிக்கறான், இன்னிவரைக்கும் நானே வாங்காத சம்பளம் முதல் முறையே வாங்கறான்னு ஊரெல்லாம் தண்டோரா போட்டுகிட்டிருந்தாராம். வீட்டுக்கு வந்தவர் நெஞ்சைப் பிடிச்சுகிட்டு கீழே விழுந்தவர்தான்.. எழுந்துக்கவே இல்லையாம்.”

அந்த தியேட்டருக்குப் போய் க்யூல ஒரு மணி நேரம் நிக்காம இருந்திருந்தா.. ஒருவேளை ஹாஸ்பிடலுக்குப் போய் காப்பாத்தி இருக்கலாம். ஏன்.. ஒரு வார்த்தையாச்சும் பேசியிருக்கலாம்.. ஆனா எதுவும் நடக்கலை.

அன்னிக்கு விட்டவந்தாண்டா இந்த சினிமா எழவை.” அப்பாவின் குரல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது.

அதற்குப்பிறகு நானும் பல சினிமா தியேட்டர்களைப்பார்த்துவிட்டேன் - ஆனாலும் அப்பாவின் நினைவு வராமல் ஒரு சினிமாகூடப் பார்க்க முடிந்ததில்லை.அவர் குஷனைப்பார்த்ததில்லை. ஏசியைப் பார்த்ததில்லை. நான் எதையும் அவர் நினைவில்லாமல் பார்த்ததில்லை.

மகனைப் பார்த்தேன். “உனக்கு அப்பாவோட பார்க்கிறது வசதியா இல்ல. எனக்கு அப்பா இல்லாமப் பார்க்கறது வசதியே இல்லை” என்றேன், கண்களை அனிச்சையாகத் துடைத்துக்கொண்டே.

Tuesday, October 08, 2013

வாஆஆஆன் மேகம் பூப்பூவாய் மாறும்.....!!

முதல் முறை விமானத்தில் பயணம் செய்யும் அனைவரையும் பிரமிக்கச் செய்வது பஞ்சுப் பொதிகள் போன்ற மேகங்களுக்கூடாகவும் அவற்றின் மேலும் பறப்பதுதான். அடிக்கடி விமானப்பயணம் மேற்கொள்ளும் எனக்கு இந்தக் காட்சி மீண்டும் மீண்டும் பார்த்துப் பழகி, அலுத்து, ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்ப்பதில் ஆர்வமே இல்லாது ஆகிவிட்டது. முக்கால்வாசி நேரங்களில் வேறு ஒன்றும் தெரியாமல் வெறும் வெள்ளைப் பஞ்சால் நெய்த துணியின் மேல் இருப்பது போல இடைவெளி இல்லாத மேகங்களுக்கு மேலே பறந்து செல்லும் பொழுது எதைத்தான் பார்ப்பது? அதனால் பெரும்பாலும் நடைபாதையை ஒட்டி இருக்கும் இருக்கைகளில் ஒன்றினையே தெரிவு செய்து பயணிப்பது வழக்கம்.

ஆனால் நியூயார்க்கில் இருந்து டொராண்டோ செல்லும் பொழுது ஜன்னல் சீட்டையே தேர்ந்தெடுப்பேன். காரணம் - நயாக்ரா அருவியை மேலிருந்து பார்க்க முடியும். எனக்கு எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத தரிசனம் அது. இன்றும் வழக்கம் போல இடப்பக்க ஜன்னல் அருகே இருக்கும் இருக்கை ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன்.  

புகைபிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கு!
வெளியே பார்த்துக் கொண்டு வரும் பொழுது இது வரை பார்க்காத காட்சி ஒன்றைக் கண்டேன். கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன். இந்தப் பகுதி அதிகம் மேடு பள்ளங்கள் கொண்ட மலைப்பகுதி. பெரும்பாலும் மேகங்களால் மூடியே இருக்கும். பெரிதாகப் பார்க்க ஒன்றும் இருக்காது. ஆனால் இன்று மேகங்கள் கம்பளம் போல முழுவதும் மூடி இருக்கவில்லை. மலைமேடுகள் இடையே இருக்கும் பள்ளங்களில் மட்டும் ஒரு நதி ஓடுவதைப் போல மூடி இருந்தது. பச்சைப்பசேலென்ற மலைமுகடுகள், அவரின் உயரத்திற்குக் கீழே மேகமூட்டம் என்று வித்தியாசமான ஒரு காட்சி.

நதியே நதியே வெள்ளை நதியே நீயும் முகில்தானே...

வெண்மேகம் ஒரு நதியானதே...
ஒரு இடத்தில் மட்டுமல்லாது தொடர்ந்து இப்படியே இருந்தது ஆச்சரியமாகவே இருந்தது. இது எப்பொழுதுமே இப்படி இருந்து நான் தான் பார்க்காமல் இருந்தேனா அல்லது இன்றைய சீதேஷண நிலையால் இப்படித் தாழ்வான பகுதிகளில் மட்டும் மேகங்கள் சூழ்ந்திருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. மனிதர்களின் காலடித்தடமே பதிந்திராத உறைபனியாற்றைப் போலப் பரந்து விரிந்து கிடந்த மேகங்களைப் பார்க்கும் பொழுது எதோ ஒரு இனம்புரியாத உணர்ச்சி மேலிட்டது.

அப்பகுதியைத் தாண்டிய பின் தெளிவான கொஞ்சமும் மேகங்கள் இல்லாத வானிலை. அங்கு மேலிருந்து பார்க்கும் பொழுது ஓடுவதே தெரியாமல் தேங்கி நிற்பது போல் இருக்கும் பிரம்மாண்டமான நதி. ஒரு பள்ளத்தாக்கில் வானைத் தொடும்படி புகை போல உயரே எழும் நீர்த்திவலைகள் தெறிக்க விழும் அருவி - நயாக்ரா. எத்தனை முறை பார்த்தாலும், வானில் இருந்து, கரையில் இருந்து, படகில் அருகே சென்று என எப்படிப் பார்த்தாலும் எனக்கு நயாக்ரா அலுப்பதே இல்லை. இன்றும் அருமையான தரிசனம்.

விரையும் நதி, வீழும் அருவி, வானவில் பாலம்
ஆற்றைத் தாண்டினால் அடுத்த நாடு
மேகக்கூட்டங்களையும் அருவியையும் படம் பிடிக்கும் பொழுது முன்பு எங்கோ படித்த வேறு ஒரு விஷயத்தையும் செய்து பார்த்துவிடத் தோன்றியது. இன்று நான் பயணம் செய்த டர்போப்ராப் ரக விமானங்களில் இருக்கும் விசிறியை விடியோ படமெடுத்தால் அவை கழண்டு விழுவது போலவும் மீண்டும் மந்திரம் போட்டாற்போல் வந்து ஒட்டிக் கொள்வது போலவும் தெரியும் எனப் படித்திருக்கிறேன். அதையும் செய்து பார்த்தேன். எப்படித் தெரிகிறது என நீங்களும் பாருங்களேன்.


நியூயார்க்கிற்குப் பின் நான் அடிக்கடி வந்து போகும் பெருநகரம் டொராண்டோ. வேலை முடிந்த பின் பல வகைகளில் பொழுதுபோக்க ஏராளமான இடங்கள் உள்ள நகரம். பொதுவாக ஓரிரவேனும் தங்குவேன். இன்று காலை வந்து வேலையை முடித்துவிட்டு மாலையே திரும்ப வேண்டியக் கட்டாயம். ஆனாலும் வேலை முடித்த பின் கிடைத்த ஒரு சிறிய இடைவெளியில் நண்பர்கள் @rasanai @donion இருவரையும் சந்திக்க முடிந்தது இன்றைய மகிழ்ச்சி. ஆனால் பேச்சு சூடு பிடிக்கும் பொழுது விமானத்தைப் பிடிக்க விடை பெற வேண்டியதானது வருத்தமே.

சிஎன் டவர், டொராண்டோ
நீண்ட இடைவெளிக்குப் பின் பயணத்தின் போதே பதிவினைத் தட்டச்சினேன். ஐபேடில் பாரா சொன்ன Plaintext என்ற செயலியைப் பயன்படுத்தினேன். நன்றாகவே இருக்கிறது. இது போன்ற அவசரடிகளுக்கு நன்றாகவே கைகொடுக்கும்.

மீண்டும் வருவேன்.

Tuesday, October 01, 2013

வெண்பா வழியாக வேங்கடவன் வந்தானே!

இன்று(ம்) சொக்கன் ஒரு வெண்பா எழுதினார்.

காளிங்கன் மீது களிநடனம் செய்ததுவும்
கேளிரைக் காக்கக் கிரியொன்றை ஏந்தியதும்
வாளியொன்றால் சீரிலங்கை வல்லவனை வென்றதுவும்
கேளிக்கை தானவனுக் கே

சும்மா அவரை வம்புக்கு இழுக்க

கண்ணனாய்ச் செய்த களிகள் இரண்டோடு
மன்னனாய்ச் செய்த மரணத்தை ஒன்றாக்கி
அண்ணாவே நீரும் அவியலாய்ச் செய்தீரே
பண்ணாதே இப்படி பார்த்து!

என்று நான் எழுதினேன்.  அவர் ரெண்டுமே திருமால் அவதாரம்தானேன்னு பதில் வெண்பா எழுதினார்.

இருவேடம் போட்டால் எனக்கென்ன ஆங்கே 
திருமாலும் ஒன்றே, தெளி

வெண்பா எழுதும் பொழுதெல்லாம் க்ரேசி மோகன் ஞாபகம் வந்துவிடுகிறதே. அதனால் சொக்கனுக்குப் பதில் எழுதும் பொழுது க்ரேசியின் படைப்பையே உதாரணமாகத் தந்து ஒரு வெண்பா எழுதினேன்.

அப்புசெய்த வேலைக்கு அப்பாவி ராஜாவும்
தப்பாக மாட்டியே தான்தவித்தான் - செப்புவேன்
வேடங்கள் தானவை வேறான பின்னாலே
பாடலில் பார்த்துப் பகு

சொக்கனும் இந்தப் பேச்சு நியாயம்தான்னு ராமனுக்கு ஒன்று, கண்ணனுக்கு ஒன்று என்று

வாளியொன்றால் சீரிலங்கை வல்லவனை வென்றவன்,
தூளியொன்றால் பெண்ணின் துயர்துடைத்து நின்றவன்,
ஆளியெனச் சோதரரை ஆக்கிமகிழ் வல்லவன்
தோளிரண்டை எண்ணித் தொழு

[வாளி = அம்பு, தூளி = தூசு (ராமன் பாததூளி அகலிகையை மீண்டும் பெண்ணாக்கியது), ஆளி = ஆள்பவன் (முறையே அயோத்திக்குப் பரதன், கிஷ்கிந்தைக்குச் சுக்ரீவன், இலங்கைக்கு விபீஷணன்)]

காளிங்கன் மீது களிநடனம் செய்ததுவும்
கேளிரைக் காக்கக் கிரியொன்றை ஏந்தியதும்
வாளின்றி போர்க்களத்தில் வாகைமலர் சூடியதும்
கேளிக்கை தானவனுக் கே

என்று ரெண்டு வெண்பா எழுதினார்.

இப்படி வெண்பாவில் விளையாடிக் கொண்டு இருந்த பொழுது இவர் ஒரு வெண்பாவில் ரெண்டு அவதாரம்தானே தொட்டார். நாம ஏன் பத்து அவதாரத்தையும் கொண்டு வரக்கூடாதுன்னு ஒரு எண்ணம் தோன்ற எழுதிப் பார்த்தேன்.




முதலில் பத்து அவதாரங்களையும் சொல்ல ஐந்து அடிகள் எடுத்துக் கொண்டேன்.  அது

கயலும் கமடம் கனலியும் ஆனான்
பயமற்ற சீயம் பலியும்தான் ஆனான்
முயன்றவன் ராமர்கள் மூவராய் ஆனான்
கயவனாம் கண்ணனே கல்கியும் ஆவான் 
அயனவன் தோற்றம் அறி!

[கயல் - மீன், கமடம் - ஆமை, கனலி - பன்றி, சீயம் - சிங்கம், பலி - மகாபலி (வாமனன்), ராமர் மூவர் - பரசுராமன், ஜானகிராமன், பலராமன்]

பின்பு அதை கொஞ்சம் செதுக்கி நாலு வரிக்குள்ள கொண்டு வந்துட்டேன். அந்த வெர்ஷன் இது.

கயலும் கமடம் கனலியும் சிங்கம்
பயலாம் பலியொடு பார்மூன்று ராமர்
கயவனாம் கண்ணனே கல்கியும் ஆவான்
அயனவன் தோற்றம் அறி

ரொம்பப் பெருமையா சொக்கனிடம் போய்ச் சொன்னால் நாலு வரி எதுக்கு? அன்னிக்கே காளமேகம் ரெண்டு வரியில் எழுதிட்டாரேன்னு ஒரு குட்டு வெச்சார்.

மெச்சு புகழ் வேங்கடவா வெண்பாவில் பாதியில்என்
இச்சையில்உன் சென்மம் எடுக்கவா, மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோபா லாமாவா வாய்

இதுக்கு விளக்கம் வேணுமானா சொக்கன் எழுதின இந்தப் பதிவில் பார்த்துக்குங்க. காளமேகம், டெக்னிக்கலா ரெண்டு அடிக்குள்ள எழுதலை என்று சொல்லி கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கிட்டேன். ஹிஹி.

இப்படியாக இன்னிக்குத் திருமால் பெருமையை வெண்பாவா எழுதிப் பொழுது போச்சு. ஆரம்பிச்சு வெச்சதும் இல்லாம தொடர்ந்து எசப்பாட்டும் எதிர்பாட்டுமாய் அள்ளி விட்ட சொக்கருக்கு நன்றி!

(பதிவில் இருக்கும் படம் இணையத்தில் திருடப்பட்டது)

அபூர்வ சகோதரர்கள், அழகிய பெருமாள்ன்னு கலந்து கட்டி எழுதி இருக்கோமேன்னு க்ரேசி மோகனுக்கு பதிவின் சுட்டியை அனுப்பினேன். உடனே வந்த பதில் இது - தசாவதாரத் திருப்புகழ்!

"மீனமென வந்துமறை காத்தமுகம் ஒன்று
        மேருமலை தாங்கவரும் ஆமைமுகம் ஒன்று
 ஏனமென பூமிதனை ஏந்துமுகம் ஒன்று
         தூணதிர சீயமென தோன்றுமுகம் ஒன்று
தானமுற மாபலிமுன் ஓங்குமுகம் ஒன்று
         மூணுவித ராமனென மூண்டமுகம் ஒன்று
கானமுர ளீதரமு ராரிமுகம் ஒன்று
         ஞாலபரி பாலதச மானபெரு மாளே"

சந்தக் கவிதை என்றால் என்ன என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தப் பாட்டு! இதுக்காக நான் எழுதின வெண்பா 

மந்தை வெளிராயர் மன்னுபுகழ் க்ரேசியவர்
தந்த கவியிதனைத் தான்படிப்பீர் மேன்மக்காள்
சந்த விளையாட்டுச் சாகரம் தானிவரே
அந்த கிரியார்க்(கு) அடுத்து!

Sunday, September 08, 2013

நடபைரவியும் நட்டாற்று அனுபவமும்!

ஒரு சுற்றுலா செல்கிறோம். பெரும் நதி ஒன்று இருக்கிறது. அதில் பயணம் செய்து பொழுதைக் கழிப்பதாகத் திட்டம். எந்த மாதிரி எல்லாம் அந்த நதியில் செல்ல முடியும்? 

மலையில் இருந்து ஆக்ரோஷமாக கீழே இறங்கி வரும் நதியில் ஹெல்மெட், லைப் ஜாக்கெட் சகிதம் ஒரு படகில் ஏறி Whitewater Rafting செய்யலாம். தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் பெரும் பாறைகள், மரங்கள் இவற்றினூடே ஓடும் தண்ணீரில் இருக்கும் சுழல்கள், சமயத்தில் எழும் பெரும் அலைகள் என்று பல கண்டங்கள் இருக்கும் நதியில் நம்மை அழைத்துக் கொண்டு போய் கரை சேர்ப்பார் படகோட்டி. சமயங்களில் நாம் நீரில் விழ வேண்டியது இருக்கும். நம் கையைப் பிடித்து தூக்கி படகில் மீண்டும் அமரச் செய்யும் வேலை வேறு உண்டு அவருக்கு. இது நாம் நீரில் செல்வதில் ஒரு வகை. இதில் நமக்குக் கிடைப்பது Thrill, Exhilaration, A rush of Adrenalin.

இல்லை, ஹொகேனகல்லில் இருப்பது போல பரிசலில் செல்லலாம். நிதானமாக ஓடுவதே தெரியாமல் ஓடும் அகண்ட நதி. அதில் பரிசலைச் செலுத்திக் கொண்டு நமக்கு சுற்றுப்புறத்தில் இருக்கும் காடு மலை அனைத்தையும் காட்டிக் கொண்டு செல்வார் படகோட்டி. நடுவே நமக்குக் கொஞ்சம் கலவரம் உண்டாகும் படி ஒரு சுழலில் சென்று கொஞ்சம் பரிசலில் சுற்றி விடுவார். கொஞ்சம் பயமாக இருக்கும். அங்கிருந்து மெல்ல ஓர் அருவியின் அருகே செலுத்தி அதிலிருந்து நீர்திவலைகள் நம் மீது பட்டு நாம் பரவசமடையும்படிச் செய்வார். பொதுவாகவே பெரும்பாலும் நிதானம் நடுநடுவே கொஞ்சம் வேகம் என இந்தப் பயணம் நடக்கும். இது வேறு ஒரு வகை. இதில் நமக்குக் கிடைப்பது Relaxation.

ஒன்றை விட மற்றொன்று உயர்ந்தது எனச் சொல்ல முடியுமா? முதல் படகோட்டியின் திறன் இரண்டாவது படகோட்டியை விட மேல் என்று சொல்ல முடியுமா? ஒவ்வொன்றும் ஒரு வகை. அவரவருக்கான திறன் அவர்களிடம் உண்டு. ஆனால் பயணிகளான நாம் இளமையில் இருக்கும் துணிச்சல், ஒரு முறையேனும் செய்து பார்த்துவிட வேண்டும் வேண்டிய ஆவல் ஆகிய காரணங்களினால் Rafting சென்றாலும் பெரும்பாலும் இரண்டாம் வகையிலேயே செல்ல விரும்புவோம். வெகு சிலரே தொடர்ந்து Rafting செய்வதில் விருப்பம் கொண்டு அதற்கான பயிற்சியை மேற்கொண்டு, அதற்குண்டான நுட்பங்கள், நுணுக்கங்களை அறிந்து கொண்டு அதில் நிபுணத்துவம் அடைய நினைப்பர். அவர்கள் தொடர்ந்து பல நதிகளில் Rafting செய்து கொண்டே இருப்பார்கள்.

இசையும் அப்படித்தான். அந்த நதியைப் போல, இசையிலும் பல வகைகளில் பயணம் செய்ய முடியும். இன்று நான் கேட்ட அபிஷேக் ரகுராமின் கச்சேரி முதல் வகை. ஆபோகி வர்ணமான எவ்வரி போதனவில் தொடங்கி எல்லா பாடல்களிலும் வேகம் வேகம் வேகம். கச்சேரியை விமர்சனம் செய்யும் அளவிற்கு எனக்கு சங்கீதம் தெரியாது. ஆனால் இன்றைய கச்சேரியைக் கேட்ட பின்னால் இதைச் சொல்ல வேண்டும் எனத் தோன்றியதால் எழுதுகிறேன். 





இளம் வயதிலேயே மிகவும் புகழ் பெற்றவர் அபிஷேக். பாரம்பரிய சங்கீதக் குடும்பம், இயல்பான திறமை, அபாரமான ஞானம், சொன்னால் கேட்கும் குரல் என்று எல்லாம் பெற்று குறைவில்லாத சங்கீதம் தரும் ஆற்றல் கொண்டவர். இன்று பாடிய சங்கராபரணம் அதற்குச் சான்று. ராகம் பாடியாதாகட்டும், கல்பனாஸ்வரங்கள் ஆகட்டும், கீர்த்தனையைப் பாடிய அழகாகட்டும் மிகப் பிரமாதம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது. ஸ்வரங்கள் பாடும் பொழுது ரிகபம என்ற ஸ்வரங்களை வைத்துக் கொண்டு இவர் பாடியது பட்டாசு. அடுத்த வந்த தோடி ஸ்வரஜதியும் மிக அபாரம். ஆஹிரி, சிந்துபைரவி எனத் தொடர்ந்த எல்லாப் பாடல்களுமே குறைவில்லாத சங்கீதம்தான். ஆனால் தண்ணீரில் விழுந்து மூழ்கிவிடுவோமோ, ஒழுங்காக கரை சேர்வோமோ என்று படகின் ஓரங்களைப் பிடித்துக் கொண்டே பயணம் செய்தது போலத்தான் இருந்தது இன்றைய அனுபவம். நன்றாகப் பொழுது போனாலும் இசையுடன் ஐக்கியமாகி நம்மை மறந்து நெகிழ்ந்து போகும் தருணங்கள் இல்லாமலே போனது கொஞ்சம் வருத்தம்தான்.

ஸ்ரீ வல்லி தேவசேனாபதே என நடபைரவியில் பாடும் பொழுது பாடகர் மயிலாக மாறி முருகனை தன்மேல் ஏற்றிக் கொண்டு ஆடாமல் அசங்காமல் அழகு கலையாமல் நம் முன் கொண்டு வர வேண்டாமோ? அப்படி ஒரு எதிர்பார்ப்பில் நாம் இருக்கும் பொழுது பார்முலா ஒன் ரேஸ் காரில் முருகனை அழைத்து வந்தால் மிரண்டு போய் விட மாட்டோமா? இன்று அப்படித்தான் முருகன் வந்தார். கச்சேரி முழுக்க இதே வேகம்தான். கச்சேரியில் பக்கவாத்தியமாக வயலின் பி யூ கணேஷ் பிரசாத், மிருதங்கம் நெய்வேலி நாராயணன். இருவரும் அத்தனை வேகத்திற்கும் ஈடுகட்டி அருமையாக உடன் வாசித்தார்கள். அவர்கள் துணையில்லாமல் கச்சேரி இப்படி சோபித்து இருக்காது. 




மீண்டும் சொல்கிறேன். குறை ஒன்றும் சொல்ல முடியாத இசை. மூன்று மணி நேரம் ஒரு இடத்தில் என்னைக் கட்டிப் போட்ட மாதிரி இருந்து கச்சேரியை ரசித்தேன். என்றோ ஒரு நாள் கேட்பதால், மேலேறிக் கீழிறங்கி, மூச்சுவாங்கி, Rafting சென்ற பரவசம் இன்றைக்கு இருந்தாலும் அடிக்கடி விரும்பிக் கேட்கவும், கேட்கும் பொழுது மனம் லேசாகி நாம் நெகிழ்ந்து போவதிற்குமான இசை இது அல்ல என்றே கச்சேரி முடிந்த பின் என் எண்ணமாக இருந்தது. இவ்வளவு திறமை இருக்கும் அபிஷேக்கால் எல்லாப் பாடல்களிலும் வேகம் காட்டாது கொஞ்சம் நிதானமான, சௌக்கியமான இசையை தர முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. தர வேண்டும் என்பதே என் ஆசை.

Wednesday, August 28, 2013

கண்ணன் அவனின் கதை!

முன்னாடி ஒரு நாள் சும்மா இருக்காம இராமாயணத்தை அறுசீர் விருத்தத்தில் எழுதறேன்னு ஒரு கிறுக்குத்தனம் பிடிச்சு எழுதினேன். கிரேசி மோகன் உட்பட பல பெரியவர்கள் அதைப் படிச்சு நல்லா இருக்குன்னு வேற சொல்லிட்டாங்க. அதுக்கு அப்புறம் எதாவது எழுதவே பயமா இருக்கு.

இன்னிக்குக் கோகுலாஷ்டமி. என்னமோ தெரியலை கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக்கவிதைகள் பிறந்ததம்மான்னு ஆரம்பிக்கும் இந்த எம்ஜியார் பாட்டு மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது.



அதுவும் புதுக்கவிதைகள் பிறந்ததம்மான்னு சொன்ன உடனே இந்த கண்ணன் கதையை எழுதினா என்னான்னு தோணுச்சு. அதுக்காக கட்டுரை ஒண்ணு எழுதி அதை உடைத்துப்போட்டு ஓ மனிதா, ஆச்சரியக்குறின்னு எல்லாம் சேர்த்து புதுக்கவிதை என்ற பெயரில் தர முடியுமா? வெண்பாவா விருத்தமா என்றெல்லாம் யோசிக்காமல் எழுதத் தொடங்கிய பொழுது வந்தது கலிவெண்பா, அதுவும் இன்னிசைக் கலிவெண்பா என்ற இந்த பாவகை!

கண்ணனின் கதைன்னு ஆரம்பிச்சா சொல்லிக்கிட்டே இருக்கலாம். அப்புறம் எழுத ஆரம்பிச்சது மகாபாரதம் ரேஞ்சுக்கு ஆயிடும். அதனால  முக்கிய நிகழ்வுகள்ன்னு நினைக்கிறது எல்லாம் மட்டும் சொல்லலாம்ன்னு நினைச்சேன். அப்படி எழுதின வெண்பாதான் இது.

அன்னை விடுத்தவன் ஆற்றினைத் தாண்டிபல
கன்றும் பசுக்களும் காட்டினில் மேய்த்துதான்
உண்ட முலையில் உயிரைப் பறித்துபின்
பெண்டிர் மனத்திலே பேருவகை தான்தந்து
பண்ணைக் குழலிலே பாங்காய் இசைத்தவன்
வெண்ணெய் திருடிபல வேடிக்கை தான்செய்து
மண்ணையே உண்டு மரங்கள் பெயர்த்தங்கு
விண்ணில் இருந்து விழுந்த மழைதடுத்து
கொன்றானே பாம்பினைக் கோகுலத்தில் தன்தாயின் 
அண்ணனாம் கம்சனை அவ்வுலகம் சேர்த்ததும்
கண்மணி ருக்மிணியைக் கல்யாணம் செய்ததொடு
எண்ணிக்கை இல்லாது ஏராள மாய்மணந்து
பெண்ணொருவள் மானம் பெருமையும் காத்துபஞ்ச
பாண்டவர் பக்கம் படைதனில் சேர்ந்ததும்
சின்னவன் பாலன் சிரம்நீக்கி ஆட்கொண்டு
சொன்னானே பார்த்தனது சோத்திரத்தில்* கீதையிது
மன்னவன் மாயன் மயக்கிடும் மாலனாம்
கண்ணன் அவனின் கதை!
* சோத்திரம் = காது 


படிச்சுட்டு உங்க கருத்தைச் சொன்னா சந்தோஷப்படுவேன். அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள்! நன்றி!

இன்று தன் பிறந்த நாளைக் கொண்டாடும் இரா முருகன் அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக இந்த வெண்பாவை தங்களுக்கு அளிக்கிறேன். வாழ்த்துகள் இராமு அண்ணா!

Wednesday, August 14, 2013

Night at the Museum!

A newly recruited night security guard at the Museum of Natural History discovers that an ancient curse causes the animals and exhibits on display to come to life and wreak havoc. 

That is the one line story of the movie Night at the Museum released a few years ago. It involved spending the night in the American Museum of Natural History, lights out, dinosaurs, live animals, running around the museum in the night and it also had Ben Stiller. 

What would you do if you had a chance to spend a night at that very museum? We had it and we grabbed it. We have been members of the museum for some time but due to various reasons have never really had a chance to utilize the membership benefits. This time there was a mail announcing a members only sleepover night and I was piqued. 

The marketing information on the program had a list of interesting things to do - Guided tours of a couple of halls, exclusive access to the museum, Dinosaurs, Whales, live animal presentations, IMAX movies and importantly no Ben Stiller! 

We registered for the program and I will tell you it was an experience well worth the cost. The program started at 4:00 PM on a Saturday and lasted till the next afternoon. It could have lasted longer but for the fact the special parking discount was valid only till 1:00 PM after which we would have been required to pay a humongous parking fee. 

Coming back to the program itself, we were allowed in around 4 in the evening before the museum closed for the day. During the registration the kids got a souvenir backpack with some snacks, toys and a nice DVD on stars, produced by NASA. (The DVD has Hindi as one of the language options.) We were then let to roam around the museum till it closed. 

After the museum was closed we were taken to the Milstein Hall of Ocean Life where we were to sleep. Cots were already in place and we were to sleep under a 94 feet long blue whale. 




The roof of the hall was lit to make believe we were under water. The walls were studded with dioramas depicting various animals from the ocean kingdom. Our kids chose to lie down next to a pair of harbor seals. We dropped our sleeping bags and after a short orientation, we were ready for the activities. And there was no dearth of those. 



The evening was a blur of things to do and most of them happening in parallel. We were spoilt for choices. We decided to go first for an hands on class in Origami as my son is very interested in that. He chose to go with a very difficult crane and surprised the person teaching with his grasp of the technique. They even taught my younger one how to make a butterfly. 

We then attended a presentation of live nocturnal creatures, where an expert displayed and talked about boas, tree frogs, chincilla and porcupine . There were a couple of interesting events such as a meet a scientist, 3D Printing, African Writing, etc. that we had to miss as they were held in parallel. The food court remained open late for us to have dinner and there were some snacks provided later in the evening as well. 

We then moved on to the dinosaur hall. We were provided with a booklet of questions that we had to answer. The questions were about the exhibits in the hall. The twist was that the lights were all switched off and we had to explore the hall with flash lights. The kids had great fun in the darkness. The little one went off to attend a sing along session where they were taught some songs to sing. 

We then watched an interesting movie on penguins in the IMAX theater. I would rank the theater in Liberty Science Center to be much better than the one here. But the movie was very well received. It was almost 11PM by the time the movie got over. But we still had one more thing to do -  a bed time story! After some time to unwind, the lights were out by midnight with a promise that we would be woken up early in the morning. 

True to their word, we were all up and ready for breakfast by 7AM. After breakfast and the mandatory visit to the museum store, we had a guided tour on the life of Theodore Roosevelt, his contribution to conservation, and the dioramas on North American Mammals. Andrew, our guide, was funny and kept the kids  (and the adults) engaged. 

We had a very leisure walk through the other halls, including the Dinosaurs, African Mammals and Hall of Pacific People, where we had a head from Easter Island all for ourselves. In a museum that is normally very crowded, we could not have imagined such unhindered view otherwise. 




The museum then opened its doors for the public and we were allowed to continue for as long as we wished. We were also provided complimentary passes to two of the exhibitions which otherwise required additional tickets. The first one was one on whales with some very impressive exhibits of whale skeletons and art from whale bones. There were some very interactive exhibits on the life of whales and their current plight. A model of the heart of a whale was as big as a small car and my younger one was able to climb and slide to the arteries. 

The second was an exhibition called Global Kitchen that discussed food, change in food habits, change in the way we cultivate crops and generally the good and bad of what we consume. It had sample diets from various cultures, one of which was what Gandhi would have eaten. This exhibition also had a kitchen where a chef was cooking and we were able to sample what he made. Incidentally, that day was the last day for this exhibition and we were happy we had a chance to see it. 



There was a lot more to explore but by this time, it was midday and we had to leave due to some other commitments and to ensure we took the car out of the garage before the stipulated time. The kids made us promise that we would return to the museum soon before they agreed to leave.

Even though none of the exhibits came to life during the night and started to fight, we did have a fun evening and a great morning. My wife and I really had no idea what to expect and resigned ourselves for some dreary times inside the museum. But we had as much fun as the kids had and our only complaint was the lack of time to do all the activities that were on offer. 

The staff were very courteous and helpful. The minimum age was 6 and my daughter is five. I had written to them and they were prompt in responding and allowing my daughter to join. We saw kids much younger were allowed too when we went there. The maximum age is 12 and I am sure there can be exceptions there too. I was particularly impressed in the way the large group was handled without any trouble. 

Except when it is exclusive for members, sleepover programs are available for non members too. The website of the museum gives the particulars of the program including the calendar. I would recommend this for anyone with kids in that age group. Despite the relatively high cost, it is well worth it. Viewing the movie before going would make it more interesting!

Some more pictures can be viewed here

Thursday, August 08, 2013

படம் பிடித்துப் பாவெழுது!

வழக்கமாக பேஸ்புக்கில் உருப்படியா எதுவுமே வராது. எப்பொழுதாவது அத்தி பூத்த மாதிரி ஒரு நல்ல விஷயம் கண்ணில் படும். நேத்து அப்படி ஒரு படம் கண்ணில் பட்டது.  ரொம்பவே அருமையான படம். முதலில் பதிந்தவர் யாரோ அறியேன். ஆனால் பலராலும் பகிரப்பட்டு @jsrigovind மூலம் என் பார்வைக்கு வந்தது இந்தப் படம்.


அந்த சிறுவனின் முகத்தில் இருக்கும் உணர்ச்சியும் அச்சிலையின் அழகும் என்னை மிகவும் வசீகரித்துவிட்டன. பார்த்த உடனே வெண்பா எழுத வேண்டும் எனக் கை பரபரத்தது. ஒன்று எழுதினேன், இரண்டு எழுதினேன், படத்தின் அழகாலே என்னமோ வெண்பா வந்துக்கிட்டே இருந்தது.

பொதுவா ரெண்டு மூணு பேரு ஜமா சேர்ந்து மாறி மாறி போடும் பொழுதுதான் இப்படி தொடர்ந்து போடத் தோணும். ஆனா நேத்து திரும்பத் திரும்ப இந்தப் படத்தை பார்த்து பார்த்து நான் மட்டுமே எழுதிக்கிட்டு இருந்தேன். எழுதினதை இங்க போட்டு வைக்கலாமேன்னுதான் இந்தப் பதிவு.

அன்று மலையை அவனுமே தூக்கினான்
இன்று அதுபயன் ஈன்றதோ? - நன்றே
சிறுவனும் செய்ததைச் சிந்தனையில் வைப்போம்
கருமத்தின் பேறினையே காண்

சிலையிதுவே ஆனாலும் சின்னவன் கண்ணில்
அலைமகளின் அன்பனவன் தானோ - தலைமேலே
தண்ணீர் விழாது தடுத்திடவே நிற்கின்றான்
கண்ணன்மேல் காதலால் காண்

கல்தான் எனினும் கரைவாயோ என்றஞ்சி 
பொல்லா மழையுமே போகப் பிடித்தேனே
சல்லாத் துணிதனைச் சார்த்திய இக்குடையை
மல்லா மனதிலிதை வை!

இடுப்பிலே கைவைத்து இங்கிதமே யின்றி
கடுப்பினைக் காட்டாதே கண்ணா - தடுப்பேன்
தலைமேல் பொழிந்திடும் தாரையை உன்போல் 
மலைக்குக் குடையிங்கே மாற்று 

பூவாலே உன்னைத்தான் பூசையும் செய்திடுவார்
நாவாலே உன்னருளை நல்லபடிப் பாடிடுவார்
பாவாலே சொல்வேன் பரம்பொருளே நின்கருணை
காவாவா கண்ணா கனிந்து

தங்க நகையும் தரமாகச் செய்திட்டார்
அங்கத்தில் பட்டால் அலங்காரம் செய்திட்டார்
புங்கவனைப் பூவினால் பூசையும் செய்திட்டார்
தொங்கினைத் தந்தேன் தொழுது!

(புங்கவன் - கடவுள்
தொங்கு - வெண்கொற்றக்குடை)

மலைதூக்கி வந்தாய் மனைகாக்க உந்தன்
சிலைகாத்த சீரும் சிறப்பு!

உபிச பெனாத்தல் ஊரில் இல்லை, அதனால அவன் பங்கு வெண்பா வந்து சேரலை. இந்தப் பதிவைப் பார்த்தா போடாம இருக்க மாட்டான். காத்திருப்போம்.

காத்திருந்ததிற்குக் குறைவு இல்லை. எல்லாரும் ஆன்மிக வெண்பாவா எழுதினதுனால அண்ணன் நாத்திக வெண்பா எழுதினாராம்.

வண்ணக் குடையேந்தி வாமனனைக் காத்திடவே 
சின்னக் குழந்தையின் சிந்தனை - தன்னையே 
காக்காதான் என்னையா காப்பானென உள்ளமுணர 
டேக்காதான் கொடுப்பான் பார்

சொக்கன் அவர் பங்குக்குப் போட்டது

மழைவண்ணன் தன்னை மழைதாக்கக் கண்டு
அழையாமல் வந்த அழகே, பிழையில்லை
ஆஞ்சனேயன் தூக்கிவந்த அம்மலையை வாங்கிநீ
வாஞ்சைக் குடையாய் வழங்கு

வாத்தி ஜீவ்ஸ் எழுதினது

கத்தும் கடலோசை காதில்தான் கேட்குமோ?
சித்தம் சிலிர்த்திட ஸ்ரீதேவி -மொத்தமாய்
அள்ளி அணைத்திடுவாள் அம்மகவை அன்போடு
கள்ளம் மனதிலானைக் கண்டு

சொக்கன் பதிவில் இன்னும் சில நண்பர்கள் வெண்பா எழுதி இருந்தார்கள் அவை எல்லாவற்றையும் இங்கு பதிந்து வைத்துக் கொள்கிறேன்.

நிரஞ்சன் பாரதி

அஞ்சன வண்ணனுக் காங்கே குடையில்லை,
மஞ்சனம் செய்யும் மழையெலாம் - நெஞ்சில்
நினைத்தாலே வட்டமிடும் நேயோனைக் கையால்
நனையாமல் காத்தேனே நான்

கண்ணன் ராஜகோபாலன்

பழகக் குடைபிடித்துப் பக்குவமாய்க் கண்ணில்
அழகாகப் பேசும் அழகே – வழக்கமாய்
கண்ணன் தருவான் கலகலப்பாய் நூறாக
வண்ணமாய் வாழ்க்கை வரம்.

துடுக்குடன் நின்றாலும் தூறலதை நானும்
தடுப்பேனே கண்ணனுக்குத் தான்

கணைபோல்ப் பாய்ந்துதான் கண்ணனுடன் நின்றே
நனையாமல் காக்கும் நண்பனே நானும்
புருவம் விரித்ததைப் பகர்ந்திடுவாய் என்றே
உருகிக் குமுறும் குடை

ஹரன் பிரசன்னா

கற்சிலை என்றார் கருமேனி கைத்தொழும்
பொற்சிலை என்றார் புனல்நனையும் கண்ணன்
கலையென்று கண்டே குடையொடு வந்தான்
சிலையங்கே பெற்ற(து) உயிர்

முற்பகல் செய்யவே பிற்பகல் நேருமாம்
நற்புகழ் பெற்றவனே நீலமணி வண்ணனே
அன்றுநீ அந்நாளில் அம்மழை காத்ததுபோல்
இன்றுனைக் காக்க இவன்.

கண்ணனே கைவிடு கோபம் மழைவிட்டு
வெண்ணெய் அருந்தவீடு வா

பேஸ் புக்கில் இரா.முருகன் பக்கத்தில் இதைப் பகிர்ந்த பொழுது அவர் எழுதிய வெண்பா

அப்பின வர்ணம் அலேக்குன் நகைநட்டும்
தப்புமோ கிச்சாமி தண்ணியில் பப்பிஷேம்
ஒய்லாக நின்னாக்கப் போதுமா நைனா’தோ
நைலான் குடையிருக்கு வா

இவர் இந்தப் பதிவை க்ரேசி மோகன் கண்பார்வைக்கு அனுப்ப, அவரும் எதிர்பாராத விதமா ஒரு வெண்பாவை அனுப்பினார். ரொம்பவே சந்தோஷமா இருந்தது!

ஆப்பிளா ஊட்டிக்கே! அல்வாவா நெல்லைக்கே!
தீர்ப்புக்கே தண்டனையா! தேவேந்த்ர -ராப்பகல் 
கொட்டலில் காத்தவன், கோவர்த் தனதாரி 
விட்டலுக்கே UMBRELLA வா!

படம் பிடித்துப் பகிர்ந்து கொண்ட அன்பருக்கு நன்றி.
படம் பிடித்துக் கவி எழுதிய நண்பர்களுக்கும் நன்றி.  

Sunday, July 28, 2013

நீ கேட்ட கேள்விக்கொரு நன்றி, நமைச் சேர்த்த குவிஸ்ஸுக்கொரு நன்றி!

இன்னிக்கு ஒரு பெரிய ப்ராஜெக்ட் முடிவுக்கு வருது. மாஸ்டர் ரெக்ஸ் அருள் இசைத் துண்டுகளைக் கொடுத்து இளையராஜா பாடல்களைக் கண்டுபிடிக்கும் க்விஸ் நிகழ்ச்சி. இணையத்தில் இது பத்தித் தெரியாதவங்க கம்மிதான். பார்த்ததில்லைன்னா இங்க போய் பாருங்க - 365rajaquiz 

ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை, விடாம தொடர்ந்து ஒரு வருஷமா நடத்திக்கிட்டு இருக்காரு. இந்த ஒரு வருஷத்துல நீ எத்தனை நாள் சரியான பதிலைச் சொல்லி இருக்கன்னு கேட்டா, சரி தப்பு விடுங்க, ஒரு நாள் கூட விடையைச் சொன்னது இல்லை. அப்புறம் என்ன டேஷுக்குடா பதிவுன்னு யாரும் கேட்டுடாதீங்க. நான் சொல்லப் போறது எல்லாம் நடத்திய ஆளைப் பத்திதானே தவிர அவர் தந்த பாட்டுகளைப் பத்தி இல்லை.


பல முறை இணையத்தில் க்விஸ் நிகழ்ச்சிகள் நடத்தியவன் என்ற முறையில் சொல்லறேன். இந்த மாதிரி க்விஸ் நடத்தறது சாதாரண விஷயம் இல்லை. பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அதில் எந்தப் பகுதியை துணுக்காகத் தர வேண்டும் என முடிவு பண்ணி, அதைப் பதிவாப் போட்டு, அதுல ஒரு விமர்சனம் எழுதி, ஒரு க்ளூ குடுத்து, வர விடைகளைச் சரி தப்புன்னு சொல்லி, அதுல கேள்விகளுக்குப் பதில் சொல்லி..... இப்ப படிக்கும் போதே மூச்சு முட்டுதே இதை அவரு தொடர்ந்து ஒரு வருஷம் செஞ்சு இருக்காரு. இதுக்காக எவ்வளவு நேரம் செலவழியும். மத்த விஷயங்கள் எவ்வளவு இதுக்காக இழக்கணும் என்பது எல்லாம் எனக்குத் தெரியும். இதுக்கு ஒரு முதல் வணக்கம்.

என்னால முடியுது பண்ணறேன்னு போன பேராவில் எழுதின அத்தனையும் ஒருத்தர் செஞ்சுடலாம். ஆனா அதை நூத்துக்கணக்கான பேர் ரசிக்கும்படி செய்யறது சுலபமான விஷயமா என்ன? நானும் தமிழ்ப்பேப்பரில் இலக்கணத்தொடர் எழுதினேன். முதல் ரெண்டு மூணு வாரம் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் ஆனா போகப் போக படிச்சுட்டுப் போற ஆள் எண்ணிக்கை ஓரளவு இருந்தாலும் அதைப் பத்தி அங்க பேசறவங்க எண்ணிக்கை குறைஞ்சுதான் போச்சு. இங்க பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட 130,000 பார்வையிடல்கள், 15,000 பின்னூட்டங்கள். சாதாரண விஷயமாய்யா இது?

அது மட்டுமில்லை, இந்த க்விஸ் தங்களை எப்படி எல்லாம் பாதிச்சுது அப்படின்னு பலரும் எழுதினதை எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கும். இதை எல்லாம் பார்க்கும் பொழுது நாம இதில் கலந்துக்காம விட்டது பெரிய தப்போன்னு தோணும். சரி, இந்தக் கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனைன்னு வழக்கம் போல வேடிக்கை பார்த்துக்கிட்டே இருந்திடுவேன். இப்படித் தொடர்ந்து ஒரு கூட்டத்தையே தன் பின்னாடி வர வெச்ச திறமைக்கு என் இரண்டாவது வணக்கம்.

கேள்வியை நானே கேட்கிறேன், கேள்வி கேட்கறது ஈசி என்பது எல்லாம் நகைச்சுவை வசனங்களாக நல்லா இருந்தாலும் எந்த விஷயமாகட்டும் அதில் இவ்வளவு கேள்விகள் கேட்கணுமுன்னா அதுக்கு அவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கணும். திரையிசைப் பாடல்கள், அதிலும் ஒரே ஒரு இசையமைப்பாளரின் பாடல்களில் இந்த அளவு ஆராய்ச்சி செஞ்சு மாஸ்டர் பட்டம் வாங்கி இருக்க எவ்வளவு முனைப்பு இருந்திருக்கணும். அப்படி முனைவதற்கு எவ்வளவு ஆர்வம் இருந்திருக்கணும். எந்த விஷயமானாலும் நுனிப்புல் மட்டுமே மேயும் என் போன்றவர்களுக்கு இந்த முனைப்பும் ஆர்வமும் கூட ரொம்பப் பெரிய விஷயம். அதுக்கும் என் வணக்கம்.

இது அத்தனையும் விடுங்க. நேர்ல ஒரு முறை இவரைச் சந்திச்சேன். நமக்கு இந்த மேட்டர் எல்லாம் தெரியாது என்பது அவருக்கு முன்னமே தெரியுமோ என்னமோ சந்தித்த அந்த மாலை நேரம் முழுவதும் ராஜா இசை பற்றி ஒரு வார்த்தை கூட வரலை. இந்த நிகழ்ச்சியை நடத்தறது இந்த ஆள்தானான்னே எனக்குச் சந்தேகம் வரும் அளவு ஆயிருச்சு, அது நீங்கதானே நானே கேட்டு உறுதி படுத்திக்கிட்டேன். தான் இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் செஞ்சுக்கிட்டு இருக்கும் போது அடுத்தவன் கிட்ட பெருமை அடிச்சுக்காம இருக்கும் அடக்கத்துக்கும் என் வணக்கம்.

அதுக்காக மனுசன் சும்மா இருந்தாருன்னா நினைக்கறீங்க? வாயை மூடலை!! அவருக்குத்தான் எவ்வளவு விஷயங்களில் ஆர்வம் இருக்குங்கறீங்க? தமிழக அரசியலாகட்டும், இந்த ஊரில் அவர் செய்யும் தன்னார்வ வேலைகள் ஆகட்டும். அந்த ஒரு மாலையில் மட்டும் நான் அவர் கிட்ட கத்துக்கிட்ட விஷயங்கள் அநேகம். நாம எல்லாம் சும்மா நேரத்தை வீணடிக்கிறோமோ என நினைக்கும் அளவிற்கு வேலை செய்யறார். அத்தனை வேலைகளும் செய்து கொண்டு அதுக்கு நடுவே இதையும் முடிச்சதுக்கும் என் வணக்கங்கள்.

அத்தனை வணக்கங்களுக்கு அப்புறமா இந்த ப்ராஜெக்டை எடுத்து நடத்தி முடிச்சதுக்கு என் வாழ்த்துகள். கடைசியா ஒரு கோரிக்கை. இதோட நிறுத்திடாம, ஒரு இடைவெளி விட்டு ஆசுவாசப்படுத்திக்கிட்டு அடுத்த ப்ராஜெக்டோட களமிறங்கணும். இந்த முறையாவது நானும் கலந்துக்கிற மாதிரி ஒரு தலைப்பா இருக்கணும். செய்வீங்களா மாஸ்டர்?!