Monday, December 23, 2013

புக் வித்த காசு....

சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டரில் நண்பர்கள் சிலர் தங்களின் புத்தகங்களை வாங்கிச் சேர்க்கும் அனுபவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். சொக்கன் தான் வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் தன்னிடமே இருக்கிறது, அவற்றை அன்பளிப்பாகவோ விற்பனை மூலமோ தருவது கிடையாது. புத்தகங்கள் விஷயத்தில் தான் ரொம்பப் பொசசிவ் என்றார். சிலர் குறிப்பிட்ட புத்தகங்களைத் தவிர மற்றவற்றைத் தருவதில் பிரச்னை இல்லை என்றார்கள். இரவல் தந்து காணாமல் போனப் புத்தகங்கள் பற்றிய சோக கீதங்களும் இசைக்கப் பெற்றன. 

எங்கள் வீட்டிலும் இப்படிப் புத்தகங்கள் குமிந்து கிடக்கும். இவற்றில் பலவற்றை இனி சீந்தப் போவதுமில்லை என்பது தெரியும். சும்மாக் கொடுத்தால் அது அரசாங்கம் தரும் (http://chennai.olx.in/q/sale-government-laptop/c-835) மடிக்கணினி மாதிரி மதிப்பில்லாது போய்விடும் என்பது தெரியும். என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாத ஒரே காரணத்தினால் வீட்டில் வைத்துக் கொண்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகம். என் வீட்டை விட என் அண்ணன் வீட்டில் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். 

குடும்பத்தில் அனைவரும் புத்தகக்காதலர்கள் என்பதால் அண்ணன் வீடு எங்கு காணினும் புத்தகங்களடா என்பது போலத்தான் இருக்கும். எல்லா அறைகளிலும், கட்டில்களின் கீழ், மாடிப்படிகளின் கீழ் என புத்தகங்கள் இல்லாத இடங்களே கிடையாது. அங்கு போகும் பொழுது, எதையாவது தேடப் போய் எதிர்பார்க்காத பொக்கிஷங்கள் கையில் மாட்டும் அனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. ஒரு சமயத்தில் இவற்றைக் கட்டி மேய்ப்பது முடியாத காரியம், எதேனும் செய்தாக வேண்டும் என்ற நிலை வந்த பொழுது அண்ணன் எடுத்த முடிவு அலாதியானது. 

அவர் பழைய புத்தகங்கள் கிடைக்கும் இடங்களில் போய் மேலும் புத்தகங்கள் வாங்கினார். ஆமாம், இருக்கும் புத்தகங்களை என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாத நிலையில் மேலும் புத்தகங்கள் வாங்கினார். ஆனால் சேகரித்து வைக்க அல்ல. விற்க.  புனைவு, மேலாண்மை, சமயம், வரலாறு, பொருளாதாரம், விஞ்ஞானம், கணினிவியல் என எல்லா விதமான தலைப்புகளிலும் புத்தகங்கள் விற்பனைக்குத் தயராக இருந்தன. 

சாதாரண புத்தக விற்பனையாக இருக்க வேண்டாம். இதில் தனக்கேதும் லாபம் வேண்டாம். வரும் தொகையை நன்கொடையாகத் தந்துவிடலாம் என்பது முதல் முடிவு. 

எங்கே சென்று இதைச் செய்வது? வீட்டில் இருந்தே செய்ய முடியுமா? என யோசிக்கும் பொழுது, தான் வேலை பார்த்த நிறுவனத்தில் இதைச் செய்தால் என்ன என எண்ணி அந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். அங்கு மனிதவள மேம்பாட்டுத்துறையில் இருந்த நண்பர் ஒருவர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்தார். இதற்கான நாளும் குறிக்கப் பெற்றது. சம்பளம் கைக்கு வந்த வாரத்தில் இந்நிகழ்ச்சி அமையப் பெற்றது யதேச்சையான விஷயம் என அண்ணன் சொன்னதை நாமும் அப்படியே நம்பி வைப்போம். 

கிட்டத்தட்ட 500 புத்தகங்கள் சேர்த்தாயிற்று. என்ன விலைக்கு வைக்கலாம்? அமெரிக்க நூலகங்களில் இது போல பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் பொழுது Hardcover புத்தகங்கள் ஒரு டாலர், Paperback புத்தகங்கள் 50 செண்ட் என விலையைக் குறிப்பிடுவார்கள். அப்படிச் செய்யலாமா என எண்ணும் பொழுது வேறு ஒரு யோசனை தோன்றியது. 

ஒரு உண்டியலை வைத்து விடலாம். இந்த விற்பனை மூலம் வரும் பணம் அனைத்தும் நன்கொடையாகத் தரப்படும் என்பதை விளம்பரப்படுத்திவிடலாம். வாங்குபவர்கள் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்ளட்டும். அவர்கள் அப்புத்தகங்களுக்கு எவ்வளவு தர வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து அதை அந்த உண்டியலில் போட்டுவிடலாம். யார் எவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்பது அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்த யோசனை அந்நிறுவனத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

அதன்படி அனைத்து ஊழியர்களுக்கும் இது குறித்த மின்னஞ்சலும் அனுப்பப்பட்டது. எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், அதற்கு தான் நினைக்கும் தொகையைத் தந்தால் போதும் என்ற விதமே அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்தது. 

இந்த விற்பனை மூலம் ரூபாய் 15,000 வரை சேரும் என்பது அண்ணனின் எதிர்பார்ப்பு. கொண்டு சென்ற புத்தகங்கள் பெரும் பகுதி குறித்த நேரத்திற்கு முன் எடுத்துச் செல்லப்பட்டன. சேர்க்கப்பட்ட தொகையோ கிட்டத்தட்ட ரூபாய் 39,000. 

தன் கையில் இருந்து கொஞ்சம் சேர்த்து ரூபாய் 40,000த்தை அந்நிறுவனம் மூலமாகவே Sambhav Foundation (https://www.facebook.com/pages/Sambhav-Foundation/166563906715082) என்ற சேவை இல்லத்திற்கு அனுப்பி வைத்தது மனதை நெகிழ வைத்ததாக இருந்தது என்றார் அண்ணன். 

இந்நிகழ்ச்சி நடந்த சில நாட்களுக்குப் பின் புத்தகங்களை வாங்கிய ஒருவர் அண்ணனை தொலைப்பேசியில் அழைத்து தான் உண்டியலில் இட்ட பணம் போதாது, இன்னும் கொஞ்சம் தந்திருக்க வேண்டும், எப்படித் தரலாம் எனக் கேட்டதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றி. Talk about reverse of Buyer's remorse.

அண்ணன் அவ்வழி என்றால் தம்பி நானும் என் வழியில் இதைப் போல ஒன்றைச் செய்தேன். 

நான் "ஜாலியா தமிழ் இலக்கணம்" (https://www.nhm.in/shop/978-81-8493-744-2.html) என்ற புத்தகத்தை எழுதியது பலருக்கும் தெரியும். இங்குள்ள நண்பர்கள் அதனை இந்தியாவில் இருந்து தனித்தனியாக வரவழைப்பதற்குப் பதிலாக என்னையே மொத்தமாக வரவழைத்துத் தர முடியுமா எனக் கேட்டார்கள். 

நானும் அப்படியே செய்து தந்தேன். நண்பர்களிடையே தரும் பொழுது விலைக்கு என வேண்டாம் நீங்கள் என்ன தந்தாலும் அதற்கு சமமான தொகையைச் சேர்த்து நன்கொடையாகத் தரப் போகிறேன் என்று சொல்லி இருந்தேன். ஆர்வமுடன் அவர்கள் தந்ததோடு என் பங்கையும் சேர்த்து ரூபாய் 18,000த்தை சென்னையில் டாக்டர் சுந்தர் நடத்தி வரும் Freedom Trustக்கு (http://www.freedomtrustchennai.org) அளித்தேன். 

இந்த வருடம் உருப்படியாக எதோ ஒன்று செய்த ஒரு திருப்தி. 

9 comments:

said...

God thoughts breed good results! I am very happy that you chose to share the happening with us all!

said...

God thoughts breed good results! I am very happy that you chose to share the happening with us all!

said...

நல்ல யோஜனை.

said...

நல்ல இடத்தில் புத்தகங்கள் சேர்ப்பதற்கு அருமையான யோசனை..பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.!

said...

welldone.really moved .will tell to my children also

said...

welldone,thank you for sharing,will tell my children.

said...

பிரமாதம். உருப்படியாய் செய்கிறீர்கள், வாழ்த்துகள்.

சிவா கிருஷ்ணமூர்த்தி

said...

Elavasam, Indeed it’s a good thought. I also agree when you give freebies people won't realize and chances of misusing it. Here again the money eventually goes to someone in need as free or for a good cause. I don't know why there is a need for a transition into money and reach to people. Rather it can goes as books to the needed. More satisfaction as we offered help for reading aspirants.
This comment is based on the experience we did for Ramakrishna Asharam in Trichy. We are surprised the way the school setup their library and making use of the books we donated.
“பாத்திறம் அறிந்து பிச்சையிடு!”
--Gopi..

said...

Elavasam, Indeed it’s a good thought. I also agree when you give freebies people won't realize and chances of misusing it. Here again the money eventually goes to someone in need as free or for a good cause. I don't know why there is a need for a transition into money and reach to people. Rather it can goes as books to the needed. More satisfaction as we offered help for reading aspirants.
This comment is based on the experience we did for Ramakrishna Asharam in Trichy. We are surprised the way the school setup their library and making use of the books we donated.
“பாத்திறம் அறிந்து பிச்சையிடு!”
--Gopi..