Saturday, January 26, 2013

விஸ்வரூபம் - தானே உலகாகி தனக்குள்ளே தானடங்கி


நுணலும் தன் வாயால் கெடும்ன்னு சொல்லுவாங்க. ஆனா ட்விட்டரில் எதையாவது உளறி வைக்க அது சுவாரசியமான கருத்துப் பரிமாற்றமா மாறுது. அதான் ட்விட்டரில் எனக்குப் பிடிச்சது.
இப்படித்தான் பாருங்க, ரெண்டு நாள் முன்னாடி இந்த விஸ்வரூபம் படம் பத்திப் பேச்சு. அப்போ ஒரு நண்பர் விளையாட்டா மகாபாரதத்தில்தானே ஒரிஜினல் விஸ்வரூபம் அதைத் தடை செய்யச் சொல்லி யாரும் போராடலையான்னு சொன்னாங்க. நான் பாரதத்தில் மட்டும்தானா விஸ்வரூபம்? ராமாயணத்தில் கூட இருக்கேன்னு சொல்லி வெச்சேன். எங்கேயோ வாமன ரூபம். இராகவ ரூபம், யாதவ ரூபம்ன்னு மூணு விஸ்வரூபங்கள் பத்திப் படிச்ச ஞாபகம்.
@kekkepikkuni @padmaa @ragavang @nchokkan என நண்பர்கள் அனைவரும் களத்தில் குதிக்க அன்றைய பொழுது (வேறொரு) விஸ்வரூபம் பற்றிப் பேசிக் கழிந்தது. அனுமனும் கூட விஸ்வரூபம் எடுத்ததுண்டு ஆனால் விஷ்ணுவின் விஸ்வரூபமே விசேஷமாகப் பேசப்படுகிறது. ராமருக்கு தான் அவதாரம் என்பது தெரியாதே. பின் எப்படி அவரால் விஸ்வரூபம் எடுக்க முடியும்? விஸ்வரூபம் என்றால் என்ன தெளிவான விளக்கம் வேண்டும் என்றெல்லாம் மிகச் சுவாரசியமாக சென்ற கலந்துரையாடல் அது. அப்பொழுது ராகவன், கண்ணதாசன் விஸ்வரூபம் பற்றிய எழுதியதாகத் தந்த வரிகள்தான் தலைப்பு - தானே உலகாகி தனக்குள்ளே தானடங்கி! எவ்வளவு எளிமையாகச் சொல்லிட்டார் பார்த்தீங்களா?
சரி, விஷயத்திற்கு திரும்ப வருவோம். சமீபத்தில்தானே படிச்சோம் அந்த மூன்று ரூபங்கள் பத்தின்னு தேடிக்கிட்டே இருந்தேன். அப்போதான் நான் செஞ்ச தப்பு தெரிஞ்சது. நான் படிச்சது மூன்று விஸ்வரூபங்கள் இல்லை. மூன்று சிம்மரூபங்கள் பற்றி.
நம்ம எல்லாருக்கும் பிரகலாதன் கதையில் வரும் நரசிம்மர் பத்தி நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆனா ராமாயணத்தில் யுத்தம் நடக்கும் பொழுது அனுமன் மேல அம்புகளை மழை மாதிரி பொழியும் பொழுது தன் பக்தனுக்குப் பிரச்சினையா என சிம்மமா மாறினாராம் ராமர். அதுக்கு இராகவசிம்மம் அப்படின்னு பேராம். கம்பன் இதைச் சொல்லி இருக்காரான்னு பார்க்கணும்.
மூணாவதா பாரதத்திலும் பீஷ்மர் அர்ஜுனனைக் கடுமையாத் தாக்கும் பொழுது கோபம் வந்த கிருஷ்ணர் சிம்ம அவதாரம் எடுத்து பீஷ்மரைக் கொல்லப் போயிட்டாராம். கிருஷ்ணர்தான் நான் ஆயுதம் ஏந்த மாட்டேன் சண்டை போட மாட்டேன்னு சொன்னாரே. ஆனா இப்படிச் செஞ்சாரா? இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. படிச்சுப் பார்க்கணும்.
இப்படி தன்னோட பக்தனுக்கு எல்லாம் பிரச்சினை வரும் பொழுது சிம்ம அவதாரம் எடுத்ததா நண்பர் ஆர்விஎஸ் எழுதின இந்தப் பதிவுல படிச்சேன். அதைத்தான் விஸ்வரூபம்ன்னு குழப்பிக்கிட்டேன். என் குழப்பத்தினால் நல்லாப் பொழுது போச்சு.
சரி, சிம்மத்தை விட்டுட்டு இன்னமும் விஸ்வரூபத்தையே புடிச்சுக்கிட்டுப் போகலாம். இந்த முறை திரைப்படம். திரைப்படம்தானே, இதுக்கு எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்? என அதில் அதிக ஆர்வம் இல்லாத எனக்கும் கூட ஆர்வம் வர வைச்சதுதான் இந்த போராட்டம் பண்ணினவங்க செஞ்ச காரியம். உபிச @dynobuoy முதல் நாள் முதல் காட்சிக்கே போகலாம் வான்னு கூப்பிட, கடைசியா முநாமுகா போன படம் எதுன்னு கூட தெரியாத நானும் படம் பார்க்கக் கிளம்பிட்டேன். படம் நல்லாத்தான் இருந்தது. முடிஞ்சதும் இதுக்காடா இம்புட்டு ஆர்ப்பாட்டம்ன்னு ஒரு பக்கம். இரண்டாம் பாகம் வேற இருக்கே அதுக்கு என்னென்ன செய்யப் போறாங்களோன்னு கடுப்பு இன்னொரு பக்கமா திரையரங்கை விட்டு வெளிய வந்தேன்.
படத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுதித் தந்தே ஆகணும்ன்னு @njganesh கத்தியைக் காட்டி மிரட்டி வாங்கிட்டுப் போயிட்டாரு. தமிழோவியத்தில் வந்திருக்கும் விமர்சனத்தை ஒரு நடை போய் படிச்சுப் பார்த்துக்குங்க -
விஸ்வரூபம் விமர்சனம்
இந்த விமர்சனம் இருக்கே, இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விமர்சனம். உபிச @penathal பார்க்கறதுக்கு முன்னாடி, விமர்சனம் எழுதறதுக்கு முன்னாடி, என்னைப் பாருடான்னு சொல்லி என்னைப் பார்க்க வைக்கறதுக்கு முன்னாடி, பார்த்துட்டு இதெல்லாம் படமாடான்னு நான் திட்டறதுக்கு முன்னாடி, திரை உலக வரலாற்றில் நான் அவனுக்கு முன்னாடி பார்த்த முதல் படம், அதற்கான விமர்சனம் என்பதை வரலாற்றில் பதிவு செய்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.
விமர்சனத்தைப் பார்த்துட்டு @eramurukan விமர்சனம் எல்லாம் சரி, படத்தைப் பத்தின வெண்பா எங்கன்னு கேட்டாரு. விமர்சனமா எழுதினா கொஞ்சம் பேராவது படிப்பாங்க வெண்பாவா எழுதினா நீங்களும் நானும்தான் படிக்கணும்ன்னு ஒரு பாட்டம் அலுத்துக்கிட்டு கையோட ஒரு வெண்பாவும் எழுதினேன்.
கள்ளமும் இல்லை கபடமும் இல்லையே
நல்ல படமிது நாடிடு – தொல்லையும்
கூடாது தோற்கவும் கூடாது ஆனால்
பாடாப் படுவதவன் பாடு
இதோட (இப்போதைக்குன்னும் சொல்லலாம்) விஸ்வரூபப் படலம் ஓவர். நல்லா இருங்க மக்கா.

Friday, January 04, 2013

நிறுத்தணும்! எல்லாத்தையும் நிறுத்தணும் - 1!


வழக்கம் போல இந்தப் பதிவுக்கும் காரணம் அண்ணன் @nchokkanதான். எங்கேயோ வெளியாகியிருந்த ஒரு ஆங்கிலக் கட்டுரையை அனுப்பி இது மாதிரி தமிழிலும் செஞ்சா என்னன்னு கேட்டு இருந்தாரு. இது மாதிரி அவர் நிறைய கேப்பார். ஆனாலும் நமக்கு வசதி எதுவோ அதைத்தான் எடுத்துக்கறது. அடிக்கடி கண்ணில் படும் இலக்கண / எழுத்துப்பிழைகள் என்பதே அந்தக் கட்டுரையின் சாராம்சம். 
தமிழில் நம்ம கண்ணில் படறது ஒண்ணா ரெண்டாய்யா இப்படி எல்லாம் தொகுத்துப் பட்டியல் போட என்று தட்டிக் கழித்தாலும் இது மாதிரி செஞ்சா என்ன அப்படின்னு உறுத்திக்கிட்டே இருந்தது. இது போல மேட்டரை அடிக்கடி ட்விட்டர்லே செய்யறதாலேயே நிறையபேர் என்னை அன்ஃபாலோ பண்ணிட்டாங்க. அன்பாலே சொன்னதற்கு அன்பாலோ நியாயமா? இருந்தாலும் என் பணி கடன் செய்து கிடப்பதே!
நினைத்த மாத்திரத்தில் அடிக்கடி பார்த்ததாய் தோன்றும் பத்து தவறுகளின் பட்டியல் இது. பொதுவாக, நம்ம மக்கள் ஃபேஸ்புக் ட்விட்டர்லே எழுதற வார்த்தைகளை மட்டும்தான் எடுத்துகிட்டிருக்கேன். ஆசையோடதான் எல்லாரும் தமிழ் எழுதறாங்க, சரி, அதுக்காக படிக்கறவங்க கண்ணை ஏன் குத்தணும்? அதைக் கொஞ்சம் சரியா எழுதப் பார்க்கலாமே.  

கண்ணில் படுவது: அதற்க்கு / முயற்ச்சி
எழுத வேண்டியது: அதற்கு / முயற்சி

ரொம்ப சிம்பிளான மேட்டர்ப்பா. ற் வந்தா அதுக்குப் பின்னாடி வேற புள்ளி வெச்ச எழுத்து வரக்கூடாது. அதற்கு, இதற்கு, முயற்சின்னு எழுதணும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முயற்சி முயற்ச்சி ஆகாது. இது க்,ச்,ட்,த்,ப் - எல்லா வல்லின மெய்களுக்குமே பொருந்தும்.  

கண்ணில் படுவது: பின்ணணி / பிண்ணணி 
எழுத வேண்டியது: பின்னணி

இணையத்தில் நம்ம ஆட்கள் அதிகம் பேசுவது சினிமாவும் சினிமா இசையும்தான். அதிலும் புதுசா படம் வந்தாலோ, தம் ஆதர்ச இசையமைப்பாளர் பத்தியோ பேச ஆரம்பிச்சா முதலில் வருவது இந்தப் பின்னணி இசைதான். ஆனா அதை பிண்ணணி, பின்ணணின்னு எழுதி நாராசமாக்கிடறாங்க. அணின்னா அலங்காரம். முன்னாடி நடிகர்கள் காட்சிகள் இருந்தாலும் பின்னாடியே இருந்து அழகு செய்யும் இசை என்பதால் அது பின்+அணி = பின்னணி இசை. அதை சின்ணாப்பிண்ணமா, ச்சே சின்னாப்பின்னமா ஆக்கிடாதீங்கப்பா. 

கண்ணில் படுவது: விமர்சணம்
எழுத வேண்டியது: விமர்சனம் 

நம்ம ஊரில் ஒரு கலாச்சாரம் உண்டு. சுவரில் ஒட்டி இருக்கும் போஸ்டர் பிடிக்கலைன்னா அது மேல சாணி அடிப்பாங்க. பெரும்பாலான விமர்சனங்கள் குறைகளையே சொல்லி வருதா, ஒரு வேளை அதனாலதான் அதை விமர்சாணம், ச்சே, விமர்சணம்ன்னு எழுதிடறாங்களோன்னு ஒரு சந்தேகம். விமர்சனத்தின் கனம் எவ்வளவு கூடினால்கூட விமர்சணம் ஆகாது! நோ விமர்சணம். 

கண்ணில் படுவது: சுவற்றில் / கிணறில் 
எழுத வேண்டியது: சுவரில் / கிணற்றில் 

போஸ்டர்ன்னு சொன்ன உடனேதான் ஞாபகத்திற்கு வருது. சுவரில்ன்னு எழுத வேண்டிய இடங்களில் சுவற்றில்ன்னு எழுதினா இலக்கியத்தரமா இருக்குன்னு சில பேர் செய்யறாங்க. அதுல ஒரு தரமும் இல்லை தப்புதான் இருக்கு. கிணறு உ-ன்னு முடியுது. அதனால கிணறு+இல் என்பது கிணற்றில்ன்னு ஆகுது. ஆனா சுவரு இல்லை. அது சுவர்தான். சுவர்+இல் என்பது சுவரில்ன்னுதான் வரணுமே தவிர சுவற்றில்ன்னு வரக்கூடாது. 

கண்ணில் படுவது: பொருப்பு
எழுத வேண்டியது: பொறுப்பு

ரகர றகர கன்ப்யூஷந்தான். பொறுப்போட எழுதணும், பொறுப்பில்லாம இருக்காதேன்னு சொல்லணும். புரியற மாதிரி சொல்லணும்ன்னா சின்ன பொறுப்பு, பெரிய பொறுப்புன்னு வித்தியாசம் எல்லாம் கிடையாது. பொறுப்புன்னு வந்துட்டாலே அது பெரிய விஷயம்தான். அதனால றகரம்தான் போடணும். பொருப்புன்னா மலை.

”செருப்புக்குத் தோல் வாங்கி வந்தாயே, என் பொருப்புக்கு என்ன வாங்கிவந்தாய்” - இது யாரோ தமிழ்லே விளையாடின காதலி, வீரன் கிட்ட கேட்ட கேள்வியாம். மீனிங்: செரு - போர். போருக்குப்போய் தோல் (யானையைக்) கொன்றாயே, என் கழுத்துக்கு (இடக்கரடக்கல்பா) என்ன வாங்கி வந்தாய்ன்னு அர்த்தம். எந்நேரமும் பொருப்பைப் பத்திப் பேசறது பொறுப்பில்லை :-)

கண்ணில் படுவது: சில்லரை
எழுத வேண்டியது: சில்லறை

வாங்கறதைப் பத்திப் பேசினா உடனே அடுத்து நம்ம ஞாபகத்துக்கு சில்லறைதான் வருது. ஒரு முழு நோட்டை மாத்தினா வருவது சில்லறை. அறைன்னா துண்டுன்னு ஒரு அர்த்தம் உண்டு. சில அறைகள் என்பதையே சில்லறைன்னு சொல்லறோம். அரைன்னா பாதி. நோட்டைக் கிழிச்சா ரெண்டு பாதிதான் கிடைக்கும். சில என்பது ரெண்டுக்கும் மேல இல்லையா, அதனால சில்லரைன்னு சொன்னா சில அரைகள், அதாவது, எதோ ஆயிரம் குடு பத்தாயிரம் தரேன் ரேஞ்சு மோசடியா ஆயிரும். அது நமக்கு வேண்டாம். சில்லறைன்னே சொல்லுவோம். சில பிரபல எழுத்தாளர்கள் கூட சில்லரைன்னு எழுதறாங்க. அதான் சோகம். 

கண்ணில் படுவது: அருகாமையில் 
எழுத வேண்டியது: அருகில் 

பிரபல எழுத்தாளர்கள்ன்னு சொன்ன உடனே அடுத்த கடுப்பு இந்த அருகாமையில்தான். அருகில்ன்னு எழுதினா சாதாரணமா இருக்குன்னு நினைச்சு அருகாமைன்னு எழுதிடறாங்க. ஆனா அர்த்தம் அநர்த்தம் ஆயிடுது. அறியாமைன்னா தெரியாம இருக்கறது. போதாமைன்னா போறாம இருக்கிறது. அப்போ அருகாமைன்னா அருகாம இருக்கிறதுதானே. அருகுன்னா சமீபம். அப்போ அருகாமைன்னா அருகில் இல்லாமல் தள்ளி இருக்கிறது, அதை அருகில் என்ற பொருளில் சொல்லலாமோ? சொல்லறாங்க. நாம சொல்லாம இருப்போம். 

கண்ணில் படுவது: கோர்த்து
எழுத வேண்டியது: கோத்து

அதே இலக்கிய வாசம் மேட்டர்தான் இதுவும். கோ - இந்த ஒத்த எழுத்துக்கு தமிழில் ஏகப்பட்ட அர்த்தம் இருக்கு,.பசு, அரசன், ஆண்டவன், இந்திரன், சுவர்க்கம், ஆகாயம், பூமி, தரி, தவிர்ன்னு சொல்லிக்கிட்டே போகலாம். ஏன் இப்படி ஒரு முக்கியம் இந்த எழுத்துக்குன்னு தெரியலை. ஆனா தொடுக்கிறது என்ற பொருளும் உண்டு. கோவை என்றால் தொடுத்தல் என்று பொருள். அதனால கோக்கவோன்னுதான் கேட்கணும். கோர்க்கவோன்னு சொல்லறது சரி இல்லை. துரியோதனனே சொன்னாலும் தப்பு தப்புத்தான் - http://www.youtube.com/watch?v=n4MyXUWNxv0#t=56m20s

கண்ணில் படுவது: முயற்சிக்கிறேன்
எழுத வேண்டியது: முயல்கிறேன் 

ஆகக் கடுப்பேத்தும் விஷயம் இது. முயல், முயலல், முயற்சி. இதைச் செய்யும் போது முயன்றேன், முயல்கிறேன், முயல்வேன்னு சொல்லணும். இல்லை முயற்சி செய்தேன் / செய்கிறேன் / செய்வேன். முயற்சிக்கிறேன்னு எல்லாம் சொல்லக் கூடாது. முயல் ஒண்ணு வந்து நானே சிக்கிக்கிறேன்னு சொன்னா வேணா முயற்சிக்கிறேன்னு சொல்லிட்டுப் போகட்டும். மனுசங்க நாம சரியாச் சொல்லுவோம். 

கண்ணில் படுவது: ஒரு அழகி
எழுத வேண்டியது: ஓர் அழகி

ஆங்கிலத்தில் யாராவது A, An தப்புப் பண்ணினா சிரிக்கும் மக்கள் தமிழில் ஓர் ஒரு தப்பு பண்ணும் போது கண்டுக்கறதே இல்லை. ஆங்கிலம் தமிழ் ரெண்டுலேயும் அதே லாஜிக்தான். உயிரெழுத்து வந்தா அதுக்கு முன்னாடி ஓர் வரணும். உயிர்மெய் எழுத்து வந்தா ஒரு போடணும். ஓர் அழகி, ஒரு முத்தம், ஒரு வாழ்க்கை, ஓர் ஆப்பு! இங்கிலீஷ்லே கேஜி முடிக்கும்போதே கரெக்டா சொல்ற மேட்டர். இங்க டன் கணக்குல படிச்சவங்களும் தப்பு பண்றோம்!

அப்பாடா அவ்வளவுதானான்னு ரொம்பவே ரிலாக்ஸ் ஆகாதீங்க. அப்பப்போ இந்த மாதிரி ஒரு லிஸ்ட் போடுவேன். இந்த எச்சரிக்கையோட இப்போ நிறுத்திக்கறேன். 

Thursday, December 27, 2012

தத்தும் தத்துவம் தத்தித்தித்தோம்....


தத்தோம் தளாங்கு தத்தோம் எனத் தொடங்கும் பாடல் பற்றிய விவாதம் ஒன்று இன்று ட்விட்டரில் நடைபெற்றது. தொடங்கி வைத்தவர் வழக்கம் போல நண்பர் @nchokkan அவர்கள்தான். இந்தப் பாடலைப் பற்றி அவர் பேசப் போக @kavi_rt இவ்வரிக்கு பொருள் தெரியுமா என்றார்.
சொக்கன் கில்மாச் சத்தமா என்று கேட்க, மனதொடிந்த கவிராஜன் ஒரு படத்தினைப் ( https://twitter.com/kavi_rt/status/284343589809569793/photo/1 ) போட்டு இதற்கு ’Magic of the tinkling anklet' என்ற ஒரு அரிய பொருளைக் கொடுத்து சிரித்து வைத்தார். ஆனால் பாடலை எழுதியவர் வாலி. அவர் இப்படி வெற்று வார்த்தைகளைப் போட்டு எழுதி இருப்பாரா என்று இருவரும் சிறிதும் எண்ணியும் பார்க்கவே இல்லை.
வைணவ வாலி என்றுமே சைவத்தின் பால் பெரும் பற்று கொண்டவர். ஒரு மான் மழுவும் சிறுகூன் பிறையும் என்றஅருமையான வரிகளைத் தந்தவர். அவர் வெற்று வார்த்தைகளைப் போட்டு எழுதி இருப்பாரா? இல்லவே இல்லை, இந்த வரியில் ஒரு பெரும் தத்துவத்தை அல்லவா அடக்கி இருக்கிறார். அப்படி என்ன பொருள்? பார்க்கலாம்.
தத்தோம் தளாங்கு தத்தோம் - தோம் என்றால் குற்றம். தத்தோம் என்றால் தம் குற்றங்களை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். தளாங்கு என்பது மெட்டுக்காக சற்றே திரித்து எழுதப்பட்ட வார்த்தை. தாளங்கு என்பதைத்தான் தளாங்கு என்று எழுதி இருக்கிறார். தாள் என்றால் பாதம் என்பது நாம் அறிந்ததே. அது இங்கு இறைவனின் மலரடிகளைக் குறிப்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. கடைசியாக வரும் தத்தோம் என்பதை தத்து + ஓம் எனப் பிரிக்க வேண்டும். தத்து கொடுப்பது என்பது முற்றாகத் தந்துவிடுவது. அதாவது தம் குற்றங்களை இறைவனின் அடிகளிலே சமர்ப்பிக்க வழி ஓம் என்ற பிரணவ மந்திரம்.
இந்த பெரும் தத்துவத்தினையே தத்தோம் தளாங்கு தத்தோம் என்று தந்திருக்கிறார் காப்பியக் கவிஞர் வாலி. இந்தப் பாடலில் தொடர்ந்து பட்டும் படாமல் பட்டோம், இமயத்தின் முடி மட்டும் என்றெல்லாம் சொல்வது இக்கருத்தினை மேலும் பலப்படுத்துவதாகவே அமைகிறது.
இரவில் உன்னோடு நர்த்தனம்தான் இடையில் உண்டாகும் சத்தம் என்ற வரியை எடுத்துக் கொண்டால் இரவில் - பிச்சையில், நர்த்தனம் - ஊழித்தாண்டவம் என்று பதம் பிரிக்கத் தொடங்கினால் கட்டுரை இன்னும் நீளமாகப் போகும் அபாயம் இருப்பதால் இந்தப் பாடல் வெறும் கில்மா பாடல் அல்ல, சைவ சமய சித்தாந்தத்தைப் பிழிந்து தரும் ஒரு தத்துவ பாடல் என்று மீண்டும் வலியுறுத்தி முடித்துக் கொள்கிறேன்.
நன்றி.

Thursday, November 29, 2012

அச்சுதம் கேசவம் க்ருஷ்ண தாமோதரம்....

இந்த வாரம் அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பது ஒரு ஹிந்தி பஜன். என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், வேண்டாம், கொஞ்சம் அறிந்தவர்கள் கூட, நீயா ஹிந்தியா? பஜனையா? ஆன்மிகமா? என்று வியந்து கேட்கும் வாய்ப்புகள் அதிகம். எனக்கும் கூட அதே ஆச்சரியம்தான். 

ஆனால் சென்ற வாரம் தங்கமணி கேட்டுக் கொண்டிருந்த இந்த ஹிந்தி பஜன், காதில் விழுந்ததில் இருந்து, ராகமா அல்லது எளிமையான பாடல்வரிகளா அல்லது அதில் சொல்லப்பட்ட கருத்தா எது காரணம் என்று விளங்காமலேயே எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. நண்பர்களிடம் இது பற்றிப் பேசும் பொழுது இது பரவலாக அறியப்பட்ட பஜன் என்று அறிந்தேன். 

நீங்களும் அந்த பஜன் கேட்க  பிடியுங்க இந்த யூட்யூப் சுட்டி

 

 

முதல் முறை கேட்டதில் இருந்தே தமிழில் இதனை மொழிமாற்றம் செய்தால் என்ன என்று தோன்றியது. இதே மெட்டுக்கு பொருந்தும்படியும் இல்லாமல், நேரடி மொழிபெயர்ப்பு என்றும் சொல்ல முடியாமல் இந்த கருத்துகளை எடுத்துக் கொண்டு தமிழில் நானும் எழுதிப் பார்த்தேன். 

 

கண்ணனைக் காணோமெனக் கண்டனமேன் - மீராவாய்

எண்ணத்தில் கொள்ளவனை எப்பொழுதும் 

 

மன்னவன் உண்பதை மறப்பானோ - சபரியாய்

பண்ணும் அனைத்தையும்நீ படைத்திடவே

 

மஞ்சத்தில் கண்துயில மறுப்பேது - யசோதை

கொஞ்சமாய் உன்வடிவில் கெஞ்சிடவே

 

உன்னோடு அவன்வந்து உறவாட - கோபியர்

பெண்போல நீயாகப் பேரின்பமே!

 

கிட்டத்தட்ட கீதையின் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே ரேஞ்சுக்கு அழகாக சொல்லப்பட்ட கவிதை இந்த பஜனை என்றே எனக்குத் தோன்றுகிறது. 

மொழிமாற்றம் பற்றிய உங்கள் கருத்துகளை அறிய ஆவல். 

 

Posted via email from elavasam's posterous

Sunday, October 07, 2012

Maths Vaths - Not ANOTHER movie review!

The other day my son was learning to work with negative integers. The concept of negative numbers is a little tricky to grasp for a kid. 

So to explain the concept of a negative number, I took the example of temperature. The benefit of living in a place with 'real' four seasons helped. We started talking about rain and snow. I explained about when water freezes and how it is denoted as 0 degrees and how  the temperature is measured when it goes below 0.

Started plotting some numbers on a number line. That kind of made him understand the concept of negative numbers. (On a different note, bloody Fahrenheit system in use here made my life a bit difficult during this time. I cannot understand why this country cannot adopt metric system.)

Once the concept of negative numbers was established addition and deletion of these numbers became easy. Just a question of pouring warm water over ice or dropping ice into warm water. Easy enough. 

Then came multiplication and division. I gave him the easy solution. Just do the operation with the absolute values. Then just change the sign to negative, if either one of the numbers were negative in the first place. The answer remains positive, if neither is negative or if both are negative. 

That solution worked but since the logic behind that was not understood, this became another formula that he had to remember. Explaining this was not as simple as dropping ice into water. In theory, it is the same but to explain it was not simple. So I changed tactics.

I went to his favorite subject - English. I took four words - Is, Isn't, Good, Bad.

I told him Is and Good are positive and Isn't and Bad are negative. Then I told him to write all possible combinations using these four words. He wrote

  • Is Good
  • Isn't Good
  • Is Bad
  • Isn't Bad

I asked him to choose which statements were positive and which statements were negative. He identified, rightly, Is Good and Isn't Bad to be the positive statements. 

Now, it was easy for me to just point out that if there were two positives or two negatives the result is positive, whereas, if just one of the inputs is negative the result is always negative. 

QED! 

I was quite happy that I was able to make him understand Math by using Science and English! And it is funny to watch him murmur to himself this is good, this isnt good when he does his math work! 

Posted via email from elavasam's posterous

Monday, October 01, 2012

ட்விட்டரில் இன்றைய கட்டளை - கலித்துறை

தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் பார்த்து வேதாளம் கேட்பது போல @nchokkan இன்று ட்விட்டரில் ஆரம்பித்து வைத்த விளையாட்டு கட்டளைக் கலித்துறை. 

சும்மா இருக்காம மனுசர் ஒரு போஸ்ட்டே போட்டுட்டார் - https://nchokkan.wordpress.com/2012/10/01/twtr/ . பதினாறு, பதினேழு என எண்ணி எழுத வேண்டிய மேட்டர், தனக்கு ஒன்றரை வரிகூட தாண்ட முடியவில்லைன்னு எல்லாம் வேற எழுதிட்டார்.

எண்ணி எழுதிட இங்குமே தேவை இருப்பதில்லை
தண்ணியும் பட்டது போல்தான் இதுவும் உனக்கினியே
கண்ணி தொடர்ந்திடும் கண்ணியாய்ச் சொற்களைக் கொண்டுநீயும்
கண்ணா எழுதிக் குவிப்பாய் கலித்துறை கட்டளையே!

அப்படி எல்லாம் கஷ்டப்படாமல் எழுத வேண்டிய மேட்டராச்சே. இதுக்குப் போயி அலட்டிக்கலாமா? என்னய்யா இதுன்னு ரெண்டு கேள்வி கேட்கவும்

கலித்துறைப் பாஅது கஷ்டமே இல்லை எளிதெனவே
சலிப்பது இன்றிச் சகலமும் சொல்லி விளக்குகிறீர்
மலிவறு பாக்கள் மழையெனப் பெய்து இணையமெங்கும்
ஜொலித்திடச் செய்கிறேன், ஜோராய் விஷயம் புரிந்ததுவே!

அப்படின்னு சடார்ன்னு ஒரு பாட்டை எடுத்து விட்டாரு. அப்போதான் அப்பாடான்னு கொஞ்சம் நிம்மதி ஆச்சு. 

சரி, அது என்ன கட்டளைக் கலித்துறை கொஞ்சம் வெவரமாத்தான் சொல்லேன்னு கேட்கறவங்களுக்காக இந்தப் பதிவு. இது பத்திப் படிக்கிறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்க வேண்டிய மேட்டர் கொஞ்சம் இருக்கு. இந்த மாதிரி மரபுக் கவிதை எதுவானாலும் இது எல்லாம் கொஞ்சம் அடிப்படை மேட்டர். 

அதுல முதலாவது தளை. ஒரு சொல் எந்த மாதிரியான சொல், அதை எப்படிப் பிரிக்க முடியும். எந்த சொல்லுக்குப் பின்னாடி எந்த சொல் வரலாம் அப்படின்னு கொஞ்சம் பொதுப்படையான விதிகள். அதே மாதிரி இந்த மரபுக் கவிதைகள் எல்லாத்துக்குமே ஒரு நல்ல சந்தம் இருக்கும், அதாவது சத்தம் போட்டுப் படிச்சா அது ஒரு தாளத்தில் வர மாதிரி. இது சரியா வரணும்ன்னா எதுகை மோனை பத்திக் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டா நல்லது. 

தளை பத்தி நான் முன்னாடியே ரெண்டு பதிவு எழுதி இருக்கேன். அதை ஒரு பார்வை பார்த்துக்குங்க -

http://wikipasanga.blogspot.com/2007/01/1.html 

http://wikipasanga.blogspot.com/2007/01/2.html

இதையும் விட இன்னும் புரிய மாதிரி விவரமா வேணுமானா நீங்கள் போக வேண்டிய இடம் - https://www.nhm.in/shop/978-81-8493-484-7.html ஹிஹி! 

சரி விளம்பர இடைவேளைக்குப் பின்னாடி திரும்ப இன்னிக்குள்ள கட்டளைக்கு வரலாம். தளை, எதுகை, மோனை எல்லாம் ஒரு அளவுக்குத் தெரிஞ்சாச்சு. எனக்கு இப்போ கட்டளைக் கலித்துறை டைப் பா ஒண்ணு எழுதணும்பா. அதுக்கு என்ன ரூல்ஸ்? 

  1. மொத்தம் நாலு அடிகள், அதாங்க வரிகள் எழுதணும் 
  2. ஒவ்வொரு வரியிலும் அஞ்சு வார்த்தை, சரியாச் சொல்லணும்ன்னா சீர்கள், இருக்கணும்
  3. முதல் நாலு வார்த்தை இரண்டு அசைகள் கொண்டதாய் இருக்கணும் 
  4. அஞ்சாவது வார்த்தை விளங்காய் அப்படிங்கிற பார்முலாப் படி இருக்கணும்
  5. கடைசி அடியோட கடைசி வார்த்தை தலைவரே, தோழரே ரேஞ்சில் ஏகாரத்தில் முடியணும்
  6. ஒரு வரிக்குள்ள தளை தட்டாம இருக்கணும் 
  7. நாலு அடிகளிலும் முதல் வார்த்தை எதுகையா வரணும்
  8. ஓவ்வொரு வரிக்குள்ளவும் 1,5 அல்லது 1,3,5 வார்த்தைகள் மோனையோட வந்தா நல்லது

அம்புட்டுதான். அதிகமான ரூல் எல்லாம் கிடையாது. ஈசியாப் புரியணுமேன்னு நான் சும்மாப் பிரிச்சுப் பிரிச்சுப் போட்டு இருக்கேன். உதாரணத்துக்கு நம்ம சொக்கன் எழுதினதையே எடுத்துக்கலாம். 

  1. மொத்தம் நாலு அடி, ஒவ்வொரு அடியிலும் அஞ்சு சீர் எல்லாம் ஓக்கேவா இருக்கு
  2. முதல் நாலு சீர் ஈரசைச் சீர்களாவே இருக்கு, கடைசி சீர்கள் நாலுமே கருவிளங்காய்ன்னு சரியா வந்திருக்கு
  3. கலித்துறை, சலிப்பது, மலிவறு, ஜொலித்திட - நாலு முதல் வார்த்தையும் எதுகையோட வந்திருக்கு
  4. புரிந்ததுவே - கடைசி சீர் ஏகாரத்தில் முடியுது
  5. தளை தட்டல் எதுவுமில்லை

அம்புட்டுதானே. கட்டளைக் கலித்துறை வடிவ பா ரெடி. 

அவ்வளவுதானா? அது என்னமோ 16 வருதான்னு எண்ணிப் பாரு, 17 வருதான்னு எண்ணிப் பாருன்னு எல்லாம் சொன்னாங்களே. அது எல்லாம் வேண்டாமான்னு கேட்டா, வேண்டாம்தான். 

முதல் சீர் நேரசையா இருந்து தளை எல்லாம் தட்டாம எழுதினா தானா வரிக்குப் பதினாறு எழுத்து வரும். அதே நிரை அசையில் தொடங்கினாப் பதினேழு எழுத்து வரும். சொக்கன் எழுதினது நிரை அசையில் தொடங்குது. முதல் வரி - கலித்துறைப் பாஅது கஷ்டமே இல்லை எளிதெனவே - இதுல பதினேழு எழுத்து இருக்கான்னு பார்க்கலாமா? க லி து றை பா அ து க ட மே இ லை எ ளி தெ ன வே - 17 இருக்கா? அதான் மேட்டர். ஆமாம். இது எண்ணும் போது மெய்யெழுத்துகளைக் கணக்கில் சேர்த்துக்கக் கூடாது. 

ட்விட்டரில் இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருந்த பொழுதே அண்ணன் @dagalti அருமையான ஒரு ஐட்டத்தோட களத்தில் இறங்கினார். 

வெண்பா விரைவினில் நன்றாய் எழுதிட நன்குருவாய்
என்போல் இளையரும் அன்றே விளங்கிட நூல்படைத்தார்
எண்ணித் துணிகிற செய்யுள் வகையிதை நான்படைக்க
அண்ணன் இலவச கொத்தன் அருளதை வேண்டுவனே

இங்க பாருங்க எல்லா ரூலும் சரியா வந்திருக்கு. இங்க வெண்பா அப்படின்னு நேரசையில் தொடங்கி வரதுனால ஒவ்வொரு அடியிலும் 16 எழுத்துகள்தான் இருக்கும். 

ஏண்டா எப்பவும் சீரியசாவேதான் பேசிக்கிட்டு இருப்பீங்களா? கொஞ்சம் நிகழ்காலத்துக்கு வாங்கடான்னு பெரியண்ணன் @penthal அவர் பாணியில்

பாக்கை மடக்கிப் பகட்டை உணர்ந்திடும் இந்தியாவே
யாக்கை நிலையிலை யார்க்கர் நிலையாய் இருப்பதனால்
சாக்கீர் போட்டால் சரியாய், கவனமாய் ஆளமைத்து
போக்கைத் திருப்பிப் புதுக்களம் கண்டிடு வென்றிடவே

அப்படின்னு கிரிக்கெட் கட்டளைக் கலித்துறை கவிதை ஒண்ணு போட்டார். அது கூடவே என்னமோ பகார்டி ம்யூசிக் சிடியாமே அதுக்கும் ஒண்ணு போட்டார்.

இசைக்காய் விளம்பரம் எத்தனை எத்தனை காட்டுகிறார்
பசையாய் அழகாய் அளவாய் உடுத்திப் படுத்துகின்றார்  
வசையாய் வருகுது வாயில் வெறுப்பொடு வெஞ்சினமாய்
அசையா மதியோ எமக்கு அறிவோம் சரக்கெனவே!

அண்ணன் எவ்வழியோ தம்பி அவ்வழியே என நானும் கவிதைன்னு வந்தாச்சு காதல் இல்லாம எப்படின்னு ஒரு காதல் கவிதை எழுதினேன். 

சிந்திடும் வெண்மணி சிப்பியில் ஆகுமே முத்துகளாய்
அந்தியில் சந்திரன் அற்புதம் செய்யுமே நித்திலமாய்
சந்தினில் வந்து சடுதியில் சென்றிடும் உன்முகமோ
எந்தன் மனத்தினை எப்படி வாட்டுது கண்மணியே

வெண்பாவை ஒரு வழி பண்ணியே தீருவேன் என ஒத்தைக் காலில் நிற்கும் அன்பர் @psankar அவர் பங்குக்கு 

வானுறை தேவரை வெட்கிடச் செய்திடும் வில்லவனே தேனுறை வீணையில் துள்ளிசை பாடிடும் வல்லவனே மானிழைக் கண்ணியை மாசறு பொன்னென காப்பவனே  ஊணினை வாட்டிடும் உன்னதக் காதலன் ராவணனே

அப்படின்னு எழுதி ராவணனை எல்லாம் சபைக்குக் கூப்பிட்டு அமர்க்களம் செய்தார். ஆன்மிகச் செம்மல் @graghavan அவர் பாணியில் 

தாளென் பதும்அமை தோளென் பதுங்கையில் போர்பழகு
வாளென் பதும்வர வாலென் அயர்வினைப் போக்கிடுது
சூர்மா தடிசூலச் சீரின் குளிரொடு பார்விழியின்
தார்மா லைபுணையுந் தேருறை அருள்நிறை பார்கவியே!

இதுல பார்த்தா ‘லைபுணையுந்’ என்ற மூவசை சீர் நடுவில் வந்திருக்கு. இது பெரும்பாலும் தவிர்க்க வேண்டிய ஒன்று. அப்படியே வந்தாலும் தேமாங்காய் அல்லது புளிமாங்காய் பார்முலாவுக்குள்ள இருக்கணும். அப்புறம் இந்த மாதிரி வார்த்தகளை வெட்டாமல் இருப்பதும் நல்லது. கட்டளைக் கலித்துறை மேட்டர் இவ்வளவுதான். கொஞ்சம் முயற்சி செஞ்சா ஈசியாவே எழுதிடலாம்.

ஆனா ஒண்ணு சொல்லிடறேன். வெண்பா எழுதும் போது வர ஒரு spontaneity ஆகடும், அதோட சந்த அழகும் ஆகட்டும் வேற எந்த பாவகையிலும் இல்லை.

என்ன இருந்தும் எழுதிநான் தந்திடுவேன்

வெண்பா அழகே அழகு  

 

Posted via email from elavasam's posterous

Wednesday, September 19, 2012

ஹேப்பி பர்த்டே பிள்ளையாரே!

விநாயக சதுர்த்தி!

அப்பமும் கொழுக்கட்டையுமாக அமோகமாக கொண்டாட வேண்டிய நாள். சின்னக் குழந்தைகளுக்கு எல்லார் வீடுகளிலும் கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி என சொல்லித் தந்து அதைப் பாடச்சொல்லி படுத்தும் நாள். அதையே வாரியார் பாடக் கேட்டால் அந்தக் குழந்தைக்கும் பாட ஆசை வந்துவிடும். ஆனால் எனக்கு அதைவிட பாலும் தெளிதேனும்தான் பிடிக்கும். காரணம் அது வெண்பா வடிவத்தில் அமைந்தது என்பதைச் சொல்லவும் வேணுமா? (அப்பாடா, சொல்லியாச்சு. எப்படி எல்லாம் செய்ய வேண்டியதா இருக்கு!)

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.

இந்தியாவில் விடுமுறை, விடிந்தது முதல் ட்விட்டர் டைம்லைனில் பிள்ளையாருக்குப் பிறந்த நாள் வாழ்த்து விழுந்து கொண்டே இருக்கிறது. சும்மா இருக்க முடியுமா சோதியில் ஐக்கியம் ஆக வேண்டியதுதான் என நினைத்து ஒரு வெண்பா எழுதினேன். 

அந்தப் பழமோ அவனுக்கே போகட்டும்

வந்த பொரியைநீ வாங்கியே போட்டுக்கோ

மந்தமென் புத்திதான் மன்னித்து நீயருள்

தொந்தி கணபதியே கா!

நல்ல நாளும் அதுவுமா அண்ணன் தம்பி சண்டையைத் தீர்த்து வைக்கலாமே என்ற நல்லெண்ணத்தில் கொஞ்சம் சமரசம் பேசிப் பார்த்தேன். ரெண்டு பேரும் ராசியானா அப்பா அம்மா அண்ணன் தம்பின்னு எல்லாரும் சேர்ந்து ஆசீர்வாதம் பண்ணுவாங்களே!

எழுதினதைப் படிச்சவங்க யாரும் ஏண்டா கணபதியோட கா விடறன்னு கேட்டுடக் கூடாதேன்னு கொஞ்சம் டென்ஷன்தான். இன்னிக்குத்தான் கான்னு சொன்னா சண்டை போட்டுட்டு பேச மாட்டேன்னு போறதுதான் அர்த்தம்ன்னு ஆகிப்போச்சு. தமிழில் கான்னு சொன்னா காப்பாற்று, காவல் செய்ன்னுதான் அர்த்தம். கொஞ்சம் அப்படி இப்படிப் பார்த்தோம்னா எதிர்பார்த்து இருன்னு கூடச் சொல்லலாம்.

நான் மந்தம்ன்னு சொல்லிட்டதுனால என்னைக் காப்பாற்றுன்னு கேட்கறதாவும் வெச்சுக்கலாம். இல்லை, நான் மந்தம்ப்பா, மெதுவாத்தான் வருவேன். என்னை எதிர்ப்பார்த்து கொஞ்சம் வெயிட் பண்ணு. போயிடாதேன்னும் சொல்லலாம். ’வெயிட்’ பண்ண பிள்ளையாரை விட்டா யாரு இருக்கா! 

சச்சின், மடோனாவுக்கு எல்லாம் பத்து வெண்பா எழுதினேன். பெருவுருவம் பிள்ளையார். அவருக்கு ஒரே ஒரு வெண்பா தந்தால் போதுமா? அது ’யானை’ப் பசிக்கு சோளப்பொரி மாதிரி ஆயிடுமேன்னு நினைச்சு, போட்ட வெண்பாவுக்குத் துணையா இன்னும் பத்து வெண்பா எழுதினேன். 

 

 

சிநேகக் கடவுள்தான் சிம்பிளான ஆளு

கணேசன் புகழினைக் காண்

 

அநேகர் மனதில் அவனே வாசம்

கணேசன் புகழினைக் காண்

 

கார்மண் பிடித்துக் கரிமுகம் பெற்றவன்

பார்வதி பிள்ளையைப் பார்

 

தேர்வுகள் எல்லாம் திருத்தமாய்ச் செய்யவே

பார்வதி பிள்ளையைப் பார்

 

பனிபோலக் கஷ்டம் பறந்துமே போக

இனிநீயும் இங்கே இரு

 

துணிந்திங்கே நான்பல தூரங்கள் தாண்ட

இனிநீயும் இங்கே இரு

 

நொடித்துமே யாருமிங்கு நோகா திருக்கப்

பிடித்துவைத்த பிள்ளையைப் பார்

 

இடித்துவைத்த மாவினால் இன்றிங்கு நானும்

பிடித்துவைத்த பிள்ளையைப் பார்

 

சிலையாக உன்னை சிறைவைத்தேன் நானும்

பிழைபொறு பிள்ளை யாரே

 

மழையாக எண்ணம் மறந்தேன் பலதை

பிழைபொறு பிள்ளை யாரே

 

கடைசி ரெண்டு வெண்பாவிலும் கடைசி அசை வெண்பா இலக்கணத்தை மீறி இருக்கு. ஆனா அந்த சந்த சுகம் வேற என்ன போட்டாலும் வரலை. அதனால நம்ம பிள்ளையார்தானேன்னு அப்படியே போட்டுட்டேன். பிழை பொறுப்பான் பிள்ளையாரவன். 

 

ஹேப்பி பர்த்டே பிள்ளையாரே!

 

Posted via email from elavasam's posterous

Sunday, August 26, 2012

Blessed!

Today, I wanted to hear a few songs in the Ragam Nattaikurinji, especially to make my kids get an idea of the ragam. So started off with the varnam Chalamela. The second was Jagadeesa by MDR, a song I do not hear being performed a lot these days. Then I moved on to a couple of popular songs like Ekkalathilum Unnai Maravene, Pahi Janani.  I also heard a Lalgudi composition that goes Kandan Seyal for the first time and finally ended up with my favorite composer, Dikshithar's composition, Budhamasrayami. 

Heard a few versions of this song, sung by different artists, including the inimitable Madurai Mani Iyer. I, then, discovered a version by Kallidaikuruchi V. Ramalinga Bhagavathar, a disciple of Sangeeta Kalanidhi Kallidaikuruchi Vedanta Bhagavathar. Knowing that his lineage has a direct connection to Dikshithar himself and that Vedanta Bhagavathar was from the street where I grew up, although I never cared for that when I was there, made me listen to this rendering with a special feeling. 

After the Nattaikurinji, I heard the Abhogi raga song Sri Lakshmi Varaham which was composed praising Lakshmi Varaha Swamy of Kallidaikurichi. The one other recording that was available of Ramalinga Bhagavathar, was one more Navagraha Krithi - the Surutti composition Angarakam.

After listening to these songs a couple of times, I had to go out. But somewhere in my subconscious mind, I was thinking that it has been a while since I had listened to Suryamurte or Divakaratanujam, songs from the Navagraha Krithi list. I was also thinking that I do not have an album of the Navagraha Krithis and I should try and obtain one sung by one of my favorite artists. 

After I came home and switched on the radio and an artiste,alas I dont know her name, was just finishing singing Saurashtram ragam and started Suryamurte. The album that was broadcast contained all the nine songs that form the Navagraha Krithis set composed by Dikshithar. And I had a rather nice time listening to these gems and the experience could have been better only if the rendering had been by someone outstanding such as TMK  or Vijay Siva or Sanjay. 

I know it was just a coincidence, but to have the subconscious desire fulfilled so quickly and to have heard someone from the lineage of the great man sing a couple of songs made me feel really blessed today. I only wish more of my desires get answered so soon. (Now, that is the first one that needs to be fulfilled!) 

Link for Ramalinga Bhagavathar's songs - http://www.youtube.com/user/opslists/videos

Posted via email from elavasam's posterous

Friday, July 06, 2012

Tablet - மாத்திரை குளிகை என்னும் மாயை தவிர்ப்போம்

#எல்லாமேதமிழ்தான் சீரிஸ்

இன்றைய சொல் Tablet. இதனைத் தமிழ்ப்படுத்தக் கிளம்பி இருக்கிறார்கள். இந்த ஆங்கிலச் சொல்லிற்குப் பலவிதமான பொருள் உண்டு என்பதை மறந்து மாத்திரை என்ற பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு டேப்லட் என்றால் மாத்திரை என்கிறார்கள். சிலர் இதனை இன்னும் சிறப்பாக மொழிபெயர்ப்பதாக எண்ணி குளிகை என்றும் புழங்கத் தொடங்கி இருக்கிறார்கள். இது Waterfall என்பதை நீர்வீழ்ச்சி என மொழிபெயர்க்கும் கொடுமைக்கு ஒப்பானதாகவே கருத வேண்டும்.

இது ஒரு விபரீதமான வழக்கம். இதை தொடர விடாமல் தவிர்க்க வேண்டியது தமிழ்பால் அன்பு கொண்ட பண்டிதர் இல்லாதவர்களின் கடமை. ஒரு சொல்லின் வேர் வரை சென்று பார்த்தால் ஒழிய அதை சரியாக மொழிபெயர்க்க முடியாது. அனைத்து மொழிகளுமே தமிழில் இருந்துதான் வந்தது என்பதை மறக்காமல் இருந்தால் இது குறித்து எந்த குழப்பமும் இன்றி இருக்க முடியும்.

Tablet என்ற சொல்லின் மூலமே தமிழ்தான் என்பதை நாம் அறிந்து கொண்டோமானால் அச்சொல்லை அப்படியே தமிழில் கையாள்வதில் நமக்கு எந்தவிதமான தயக்கமும் ஏற்படப் போவதில்லை.

டேப்லட் என்ற சொல்லின் மூலம் இரண்டு தமிழ்ச் சொற்களில் இருக்கிறது. முதலில் இந்த டேப்லெட்டுகளில் தொடுதிரைகள் உள்ளன. கைவிரல் கொண்டு நம்மால் இந்த திரைகளில் உள்ளிட முடியும். அப்படிச் செய்யும் பொழுது பல நேரங்களில் விரல் கொண்டு தேய்க்கின்றோம். எனவே தேய்ப்பது / தேய்த்தல் என்பது முதல் வேர்.

நம் மனதிற்குப் பிடித்தமானவையை இனிப்பாக கருதுவது பண்டை தமிழர் இயல்பு. இதன் நீட்டலாகவே இன்றும் லட்டு அல்வா என்ற சொற்களை இனிப்பு மட்டுமல்லாத பொருளில் பயன்படுத்துகிறோம். குழந்தைகளைக் கொஞ்சும் பொழுது கூட லட்டு என்று நாம் இனிப்பின் பெயரைக் கொண்டு கொஞ்சுவதை கருத்தில் கொள்ள வேண்டும். மாணவர்கள் எளிதான கேள்விகளை லட்டு என்று சொல்லிக் கேட்டும் இருக்கிறோம்.

கண்ணா, இன்னும் ஒரு லட்டு தின்ன ஆசையா என்ற விளம்பரம் பெரும் பிரபலம் அடைந்ததற்கு இதுவே காரணம். லட்டு என்பது கூட இலட்டுகம் என்ற சொல்லில் இருந்து வந்தது. இந்த இலட்டுகம் என்பது நமக்கு தேவையான இரண்டாவது சொல்.

டேப்லட் என்பது எப்பொழுதும் நம்முடனே இருப்பது. வாங்கும் பொழுதும் சரி பாவிக்கும் பொழுதும் சரி. நமக்கு இன்பத்தினை அளிப்பது டேப்லட். இவை தொடுதிரை கொண்டு இருப்பது நாம் அறிந்ததே. அத்திரைகளில் நாம் விரல் கொண்டு தேய்ப்பதும் எப்பொழுதும் செய்வதே.

தேய்ப்பு + இலட்டுகம் என்ற இந்த இரு சொற்களும் சேரும் பொழுது தேய்ப்பிலட்டுகம் என்று புணரும். இது காலப்போக்கில் தேய்ப்பிலட்டு, டேப்பிலட்டு என்றாகி இன்று டேப்லட் என வழங்கப்படுகிறது. அதாவது தேய்ப்பு + இலட்டுகம் = தேய்ப்பிலட்டுகம் -> தேய்ப்பிலட்டு -> டேப்பிலட்டு -> டேப்லட். 

தொடுதிரை கொண்ட பலகைக்கணினிகளை நாம் டேப்லட் என்று அழைப்பது தமிழினை வேர்ச்சொல்லாகக் கொண்ட ஒரு சொல்தான். எனவே இதனை மாத்திரை என்றும் குளிகை என்றும் தவறாக மொழிபெயர்க்காது டேப்லட் என்றே வழங்குவோம்.

எல்லாமே தமிழ்தான் என்ற நம் கூற்றுக்கு இது மற்றுமொரு சான்றே.

வாழ்க தமிழ். வளர்க தமிழர்.

 

Posted via email from elavasam's posterous

Tuesday, June 05, 2012

குன்றுக்களின் சிறப்புக்கள் - கவுண்டர் டெவில் ஷோ

”டேய் தேங்கா மண்டையா, என்னடா என்னமோ கார்டைக் கையில் வெச்சுக்கிட்டு உத்து உத்து பார்த்துக்கிட்டு இருக்க, என்ன மேட்டரு?” 

“அண்ணே, நேத்து பள்ளியூடத்தில குடுத்தாங்கண்ணே. இதைப் படிச்சா க்கு போட கத்துக்கலாமாம்.” 

“டேய் நீயே ஒரு மக்குப் பய, உனக்கு க்கு போட கத்துக் குடுக்கறாங்களாக்கும். கொண்டு வாடா அத இங்க. எதுக்குடா இந்தக் கார்டு?” 

“அண்ணே, இந்த ரூல்ஸ்படி எழுதினா ஒண்ணுக்கு மேல வந்தா க்கு போட்டு எழுதணுமா வேண்டாமான்னு முடிவு பண்ணிடலாமாம்.” 

“ Single Letter - மிகும். பூக்கள் மாக்கள். ஏண்டா இதுவாடா ரூலு?” 

“ஆமாண்ணே, எடுத்துக்காட்டு பாருங்க ஒண்ணா இருந்தா பூ. அதுக்கு மேல போனா பூக்கள்” 

“ஏண்டா உனக்கு வாயுல பூவே ஒழுங்கா வராது புய்ப்பம்ன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சவந்தானே நீயி. இதுல எதுக்குடா இம்புட்டு வெளக்கம். சரி பூவுக்கு பூக்கள் சரி, அப்போ கைக்கு என்னடா? கைக்களா? அதுவும் ஒத்த எழுத்துதானேடா? கைக்கள், பைக்கள் இதுவாடா தமிளு? ” 

”அண்ணே, இதுக்குத்தாண்ணே உங்களை பள்ளியூடம் பக்கத்துல கூடப் பார்க்கக் கூடாதுன்னு பஞ்சாயத்து தீர்ப்பு போட்டிருச்சு. இப்படிக் கேள்வி கேட்டே வாத்தியாருங்களை எல்லாம் வம்புக்கு இழுத்தா எப்படி?” 

“சரிடா, போட்டும். ஒர் எழுத்து ஆச்சு, அடுத்தது ரெண்டு எழுத்துக்கு என்னடா ரூலு?” 

“2 letter குறில் வந்தா மிகும். நெடில் வந்தா மிகாதுண்ணே” 

“2 letterஆ? நல்ல வேளை இங்க்லீசுக்கு ரூல் எழுதினவன் கண்ணுல படலை. நாண்டுக்கிட்டுப் போயிருப்பான். அது என்னடா குறிலு, நெடிலு?” 

“ பசுக்கள் இங்க க்கு வரும்ணே. மாடுகள் இங்க வராதுண்ணே. அதைத்தான் சொல்லிக் குடுத்தாங்க.” 

“பசுக்கு வரும் மாட்டுக்கு வராதுன்னா அது என்ன பாலாடா? சரிடா. தேனீ கூட்டமா வந்தா அது தேனீக்களா? தேனீகளாடா? தேஏஏஏஏஏனீ - இது நெடில் இல்லையாக்கும்? அப்போ ஏண்டா தேனீக்கள்?”

“அண்ணே, வெறும் கார்டை பார்த்தாப் போதுமா? நாலு மணி நேரம் க்ளாஸில் உட்கார வேண்டாமா? ரெண்டு எழுத்துக்கு மேல இருக்கிற ரூல் எல்லாம் உ-ன்னு முடியறதுக்கு மட்டும்தாண்ணே” 

“கார்டைப் படிச்சாப் போதும்ன்ன, இப்போ என்னாமோ பாடம் நடத்துனா கூட இருந்து கேட்கணும்ன்னு ரூல் போடற. ஒண்ணு சொன்னா உனக்கு ஒழுங்காச் சொல்லத் தெரியாதாடா மாங்கா மண்டையா. சரி அதை விடு. அடுத்தது என்னடா?”

“நல்ல வேளைண்ணே மூணு, அதுக்கு மேல போனா எல்லாம் ஒரே ரூல்தாண்ணே. புள்ளி வெச்சா க்கு வரலாமாம். இல்லைன்னா கூடாதாம்.” 

“ எச்சூஸ் மி, அது என்ன இவ்வளவு நேரம் வரணும். கூடாதுன்னு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாப் பேசிட்டு. இப்போ மட்டும் வரலாமாஆஆஆஆம்ன்னு இழுப்பு? அப்போ அவன் அவன் எனக்கு வரலாம் உனக்கு வரக்கூடாதுன்னு எப்புடி வேணா எழுதலாமா ஆபீசர்? அதான் மொழி வளர்ப்பா ஆபீசர்?”

“அண்ணே, என்ன அண்ணே இது, என்னைப் போயி ஆபிசர்ன்னுக்கிட்டு. ஹிஹி வெட்கமா இருக்கு.” 

“ டேய் மொன்னத் தலையா நீ கெட்ட கேட்டுக்கு உக்காத்தி வெச்சுப் பேசறதே பெரிய விஷயம். நாம எல்லாம் மருதமலை பக்கத்துல மாடு மேய்க்கறோம். இங்க வரவனுங்க எல்லாம் குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்ன்னு சொல்லிட்டுப் போறானுங்க. அங்க ஆரம்பிக்கலாம். ஒண்ணா இருந்தாக் குன்று, அதுவே ரெண்டா இருந்தா உன்னோட ரூல்படி குன்றுக்களா?” 

“அதான் போடலாமுன்னு சொல்லிட்டாங்களே. இனிமே நீங்க போடறதுதாண்ணே.” 

“அட்டென்சன் ஆல் ஆபிசர்ஸ் இனிமே குன்றுக்கள், அம்புக்கள், வம்புக்கள். தும்புக்கள் சொம்புக்கள் இப்படித்தான் எல்லாரும் எழுதணும். எவனாவது வந்து தப்பு சொல்லிட்டா உடனே கார்டைக் காட்டி அவன் சீட்டைக் கிழிச்சு அனுப்பணும். திஸ் இஸ் கவர்னமெண்ட்டு அனௌன்ஸ்மெண்ட்.” 

“ அண்ணே, ஒரு ரூல் போட்டு ஒரே நாள்ல தமிளுக்கு இவ்வளவு புது வார்த்தை வாங்கி தந்து இருக்கீங்கண்ணே. உங்களுக்கு க்-தமிழ் அறிஞ்சருன்னு பட்டம் குடுத்தே ஆவணும்ண்ணே! ஆனாலும் அறிவுண்ணே உங்களுக்கு” 

“ஏண்டா இப்போதான் வேலையையே ஆரம்பிச்சு இருக்கேன். அதுக்குள்ள பட்டம் குடுத்து படுக்க வைக்கப் பார்க்கறியா? இந்த கேம் எல்லாம் என் கிட்ட வேண்டாம். எனக்கு மட்டும்ன்னா அறிவு. உன்னையும் சேர்த்தா அறிவுக்கள்ன்னுவியாடா? பேசாம உட்காந்து கேளு.

மூணு எழுத்து ஆச்சா நாலு எழுத்துக்கு வா. ஏண்டா காப்பிக்கொட்டை தலயா, நான் என்னமோ பேசிக்கிட்டு இருக்கேன், கரும்புத் தோட்டத்துக்குள்ள என்னடா வேல. அடேய் கரும்பையே எடுத்துக்கோ. ஒண்ணா இருந்தாக் கரும்பு. மேல போனா கரும்புக்கள். அதானேடா ரூலு? வெச்சுக்கோ கரும்புக்கள் அரும்புக்கள் இரும்புக்கள் - இப்படி எளுதினாத்தாண்டா தமிளு!”

“ சூப்பர்ண்ணே.” 

“டேய். வரப்பு மேல குத்த வெச்சுக்கிட்டு இருந்தோமா, போனோமான்னு இரு. அங்க போயும் சூப்பர், இங்க வந்து சூப்பர்ன்னு இருந்த மண்டைய ஒடச்சு ரத்தம் பார்க்காம விட மாட்டேன். வரப்பா? ஓக்கே அடுத்த லிஸ்ட்டு எளுதிக்கோ - வரப்புக்கள் தரப்புக்கள் பிறப்புக்கள் இறப்புக்கள். சிறப்புக்கள்” 

“அண்ணே சிறப்புக்கள்ன்னா என்ன அண்ணே? டாஸ்மாக்ல காந்தி பொறந்த நாளுக்கு ஸ்பெசலாப் போடப் போறாங்களா?” 

”டேய் நீயா நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு சிறப்பு க் கள்ன்னு இழுத்துட்டு எந்தக் கடை சரக்குக்குன்னு கேட்டா மவனே உனக்கு சங்குதான். உடனே சங்குக்கள்ன்னு திரும்ப மூணு எழுத்துக்குப் போவாதே. போடா வெண்ரு” 

“நான் மட்டும்ன்னா வெண்ரூ நீங்களும் சேர்ந்தா வெண்ரூக்களாண்ணே?” 

“டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” 

 

டிஸ்கி 1: வெட்டிப்பயலின் கவுண்டர் டெவில் ஷோ பார்த்து இந்தப் பூனை போட்டுக் கொண்ட சூடு. அவர் மன்னிப்பாராக.

டிஸ்கி 2: வாடா போடாக்களும் (க் வரும்தானே?) நாயே பேயேக்களும் கவுண்டர் மொழியினால் வந்தவை. யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கு இல்லை.

டிஸ்கி 3: இப்படித்தான் மொழி வளர்க்கணுமா? முடியலைடா சாமீ!

Posted via email from elavasam's posterous