Monday, November 03, 2025

கந்தல் கதை!

 

தொடக்கப்பள்ளியில் தரையில்தான் உட்கார்ந்து கொள்ள வேண்டும். அந்த சிமெண்டுத் தரையில் உட்காருவதாலும் தேய்த்துக் கொண்டே நகர்வதாலும் போட்டுக் கொண்டிருக்கும் அரை டிராயர்களின் (பூவைப்…) உட்காரும் பகுதி பிரிப்பிரியாக கிழியும். வருட ஆரம்பத்தில் புதுத்துணி எடுத்துத் தந்தாலும் பாதி வருடம் முடிவதற்கு முன் அது பழைய டவுசர் (பூவென்றும்… ) கிழிந்த இடத்திலேயே கிழிந்துவிடும். “உட்காரும் இடத்தில் கத்தியாடா இருக்கு?” என்று வசை அனேகமாக எல்லார் வீட்டிலும் கேட்டிருக்கும். 


யாருக்கேனும் நன்றாகக் கிழிந்துவிட்டால் அன்று பூராவும் அவனைத் தபாலாபீஸ் என்றுதான் அழைப்போம். கையில் கிடைக்கும் பேப்பர், சாக்பீஸ் துண்டு, சிறு கூழாங்கற்கள் என எல்லாவற்றையும் அந்த ஓட்டை வழியாகப் போட்டுவிட்டு சார் போஸ்ட் என்று கூவுவது ஒரு விளையாட்டு. இதிலிருந்து அவன் தப்பிக்கப் பார்ப்பதும், அவனைச் சுற்றி மற்றவர்கள் ஓடுவதுமாகப் பொழுது போகும். இதுதான் சாக்கு என்று அவன் கொஞ்சம் பெரிதாகக் கிழித்துக் கொள்வான், அப்பொழுதுதான் ஒட்டுப் போட்டு விடாமல் புது டௌசர் ( புய்ப்பம் என்றும்…) கிடைக்கும் என்பது அவன் எதிர்பார்ப்பு. ஆனால் பெரிய ஒட்டுப் போட்டுக் கொண்டு அந்த அரைக்கால்சட்டை (நீங்க சொல்ற மாதிரியும்..) மீண்டும் சுழற்சிக்கு வரும். 


இத்தனைக்கும் இன்றிருப்பது போல் நைஸான துணிகள் எல்லாம் கிடையாது. அது ஒரு முரட்டுத் துணி, காக்கிக் கலரில் இருக்கும். அதையும் கூடக் கிழிக்க முடிவது என்பது ஒரு தனித்திறமைதான். இதில் என் பாடு கொஞ்சம் பரவாயில்லை. என் அண்ணன்மார் வயதில் பெரியவர்கள் என்பதால் அவர்கள் போட்டுக் கொண்டது மறுசுழற்சி முறையில் எனக்கு வராது. ஆனால் சில வருடங்களே மூத்தவர்கள் வீட்டில் இருந்தார்களேயானால் அவர்கள் போட்டுக் கொண்ட துணிதான் வழி வழியாக வரும். கொஞ்சம் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் ‘Ship of Theseus’ என்று சொல்லப்படும் கதையில் வருவது போல எது அசல் துணி எது ஒட்டு என்று தெரியாத வகையில் ஒரு கதம்பமாகப் போட்டுக் கொண்டு வருவார்கள். 


தொடக்கப் பள்ளி விட்டு உயர்நிலைப்பள்ளிக்குப் போன பொழுது சீருடை எல்லாம் நல்லபடியாகப் போட்டுக் கொண்டு வரவேண்டும் என்ற விதிகள் எல்லாம் இருந்ததால் இந்த தபாலாபீஸ் மொத்தமாக இழுத்து மூடப்பட்டுவிட்டது. அதன்பின் கிழிந்த உடைகளை எல்லாம் போட்டுக் கொள்ள சந்தர்ப்பம் வராதது நல்லூழ்தான்.  


அமெரிக்காவில் அரசுப்பள்ளிகளில் சீருடைகள் எல்லாம் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. என் பையன் கையில் கிடைத்த சட்டையையும் கால்சட்டையையும் மாட்டிக் கொண்டு கிளம்பிவிடுவான். ஆனால் மகள் அப்படி எல்லாம் செய்ய மாட்டாள். நேர்த்தியான உடைகள், அதிலும் அந்த வண்ணத்திற்கு இந்த வண்ணம் சேரும் சேராது என்று போடும் உடையைத் தேர்ந்தெடுப்பதையே ஓர் அறிவியல் செயல்திட்டமாகச் செய்வாள். அந்த வயதினருக்கே உரிய எதிர்பார்ப்புகள் அவளுக்கு உண்டு. பிரபல நிறுவனங்களின் துணிமணிகளை வாங்கிக் கொள்ள விருப்பபடுவாள். சமயத்தில் விலை அதிகமாக இருந்தால் அவ்வளவு விலைக்குத் தேவையா என்று கேட்பேன். என் நண்பர்கள் எல்லாம் கேட்பதில் கால்வாசி கூட நான் கேட்பதில்லை என்பாள். 


அவளுடைய நெருங்கிய தோழி ஒருவள் அப்படி விலை உயர்ந்த துணிகளை அணிவாள். அவள் போடும் உடைகளில் விலையைப் பற்றி என் மகள் சொல்லும் பொழுது எனக்கு பகீரென்று இருக்கும். அன்றொரு நாள் அந்தப் பெண் வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் போட்டு இருந்த கால்சட்டைதான் என் கவனத்தை ஈர்த்தது. அதில் துணியை விட கிழிந்த பகுதிதான் அதிகமாக இருந்தது. அதுதான் இன்றைய போக்காம், அந்த கிழிந்த துணிக்கு விலை வேறு அதிகமாம். நமக்கென்ன தெரியும். 






அவள் வீட்டுக்குள் நுழைந்த உடனே கையில் இருக்கும் பேப்பரை கிழிந்த இடத்தில் நுழைத்துவிட்டு ‘சார் போஸ்ட்’ என்று கத்த மனம் பரபரத்தது. கந்தல் கதை இருக்கட்டும், நம் கதை கந்தலாகிவிடும் என்பதால் நினைத்ததோடு நிறுத்திவிட்டேன். 

Saturday, November 01, 2025

தயிர்த் தாய் வாழ்த்து!

 

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் என் மகளுக்கு இந்திய உணவு வேண்டும் அதிலும் தென்னக, தமிழக உணவுகள் இருக்க வேண்டும். எங்கேனும் பயணம் செய்யும் பொழுது கூட மூன்று நான்கு நாட்கள் நம் உணவு கிடைக்கவில்லை என்றால் தோசைக்கடை ஒண்ணைப் பாரப்பா என்பாள். தயிர் சாதத்திற்குத் தொட்டுக்க என்ன பிடிக்கும் என்ற குறிப்புக்குக் கட்டுரை எழுத வேண்டும் என அவளிடம் சொன்னேன்.  அதற்குப் பதிலாக, “தயிர்சாதத்திற்கு எதுக்குப்பா தொட்டுக்க ஏதேனும்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டாள். 


நான் செய்யும் தயிர்சாதம் அவளுக்குப் பிடிக்கும். அப்படியே சாப்பிடலாம் என்ற விளம்பரம் போல, அதை அப்படியே சாப்பிடுவாள். அந்தத் தயிர்சாதம் பற்றித் தெரிந்து கொள்ள கல்லிடைக்குறிச்சிக்குத்தான் செல்ல வேண்டும். 


மார்கழி மாதம். பனிக்கொட்டும் அதிகாலை நேரம். பஜனைக்கு நேரமாச்சு என்று எழுப்பிவிட்டுவிடுவார்கள். நாங்கள் வசித்த தெரு முனையில் மூன்று கோயில்கள். வாய்க்காலை ஒட்டிப் பிள்ளையார் கோயில். அதற்கு இந்தப் பக்கம் ஒரே சுற்றுச் சுவருக்குள் சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும். இந்த பெருமாள் கோயிலில் ஒரு பஜனை மடம் உண்டு. அங்கிருந்து கிளம்பி கோயில்களைச் சுற்றி இருக்கும் நான்கு தெருக்களில் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே செல்லவேண்டும். சில பெரியவர்கள் முன்னே பாடிக் கொண்டு செல்ல, சிறுவர்கள் அவர்கள் பின்னே அவர்கள் பாடியதைத் திரும்பப் பாடிக் கொண்டே செல்ல வேண்டும். தம் வீடுகளின் வழியே செல்லும் பொழுது பிரதான பாடகர் வைத்திருக்கும் துணிப்பையில் அரிசி போடுவார்கள். 


இப்படி நான்கு தெருக்களையும் சுற்றி வந்த பின்னும் பஜனை மடத்தில் உட்கார்ந்து பாடல்கள் தொடரும். சிறுவர்கள் எல்லாரும் எப்படா முடிப்பார்கள் எப்படா பிரசாதம் கிடைக்கும் என்ற நினைப்பிலேயே அமர்ந்திருப்போம். புளியோதரை, எலுமிச்சை சாதம், எள்ளு சாதம் என கலந்த சாதம் ஏதாவது கிடைக்கும். கூடவே தயிர் சாதம். தொன்னை (இலைகளால் செய்த கிண்ணம்) வழிய இரண்டையும் தருவார்கள். அது தனித்தனியாக எல்லாம் இருக்காமல், ஒன்றோடொன்று கலந்து ஒரு புதப் பதார்த்தமாக உருவெடுக்கும்.  சில நாட்களில் வெறும் தயிர்சாதம்தான் இருக்கும். கையில் பிடிக்க முடியாத சூட்டில் இருந்தாலும் அந்த அதிகாலை குளிருக்கு அருமையாக இருக்கும். 


குழைய வடித்த சாதம். சாதம் வடித்த கஞ்சியால் கொஞ்சம் சொதசொத என்றே இருக்கும். அதை நன்றாகப் பிசைந்து, அதில் போடப்பட்ட கல் உப்பு, கொஞ்சம் பால், கொஞ்சம் தயிர். அவ்வளவுதான். ஆனால் அதன் மேல் தாராளமாக பச்சை மிளகாய், இஞ்சி, உளுத்தம் பருப்பு, கடுகு தாளித்து கொட்டி மேலே கொத்தமல்லித் தழையைத் தூவி  இருப்பார்கள். அந்த வாசம் பாத்திரத்தைத் திறக்கும் பொழுதே மூக்கைத் துளைக்கும். வாயில் உமிழ் நீர் ஊறும். வயிற்றில் கடா முடா எனச் சத்தம் வரும். இதை எழுதும் பொழுது கூட பஜனை மடத்தின் பழைய வாசனை, பூ வாசனை, ஊதுப்பத்தி வாசனை, எண்ணெய் விளக்குகளின் வாசனை, அந்த எண்ணெய் பிசுக்கோடு  இருக்கும் அழுக்குத்துணி வாசனையோடு இந்தத் தயிர்சாத வாசனையையும் என்னால் முகர முடிகிறது. 


அப்படித் தயிர்சாதத்தை வீட்டில் செய்தால் எவ்வளவு செய்தாலும் பாத்திரம் காலி ஆகிவிடும். சட்டென வாயில் அகப்படும் கல் உப்பு, தூக்கலாக இருக்கும் இஞ்சிக் காரம், கொத்தமல்லி வாசம், கடித்துச் சாப்பிட வேண்டிய கஷ்டமெல்லாம் இல்லாத தயிர்சாதத்தை உண்ணத் தொட்டுக் கொள்ள எல்லாம் ஒன்றுமே வேண்டாம். தேவாமிர்தம் தேவாமிர்தம் என்பார்களே, அது கூட இதுக்கு அடுத்த படிதான். “அது என்னவோ நீ செய்வதைப் போல அம்மா செய்வது ருசிப்பதில்லை” என்ற பாராட்டு கொஞ்சம் கூடுதல் ருசியை வேறு தரும். 


நானே சமைச்சதுன்னா நம்பணும்!

இந்த திராட்சைப்பழம், மாதுளம் பழம், முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை எல்லாம் போட்ட ஹோட்டல் தயிர்சாதம் எல்லாம் கணக்கிலேயே சேர்த்துக் கொள்ளக்கூடாது. சிலர் நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவுவார்கள். அது சாம்பர்வடைக்குப் பொருத்தமே தவிர தயிர்சாதத்திற்குச் சேராது. உள்ளி என நாங்கள் சொல்லும் சின்ன வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறு உப்பில் பிரட்டித் தொட்டுக் கொள்ளலாமே தவிர அதைச் சாதத்தில் எல்லாம் போடக்கூடாது. இந்த சேமியா பகளாபாத் என்ற கொடுமையை எல்லாம் தயிர்சாத வகைகள் வரிசையில் சேர்க்கவே கூடாது. 


கலந்த சாதம் செய்தால் அந்தப் புளியோதரைக்கோ எலுமிச்சை சாதத்திற்கோ தயிர்சாதத்தைத் தொட்டுக் கொள்வது உண்டு. ஒரே தொன்னையில் கலந்து கட்டிய நினைவினைக் கிளறுவதாலோ என்னவோ இந்தக் கலப்புப் பிடிக்கும். மத்தபடி ஒரு கரண்டி ரசம், வத்தக் குழம்பு, வடு மாங்காய், ஆவாக்காய் தொக்கு என மாங்காய் ஊறுகாய்,  பூண்டு, நெல்லிக்காய், உப்பு எலுமிச்சை, கார எலுமிச்சை, ஈர நார்த்தங்காய், காய்ந்த நார்த்தங்காய் போன்ற ஊறுகாய் வகைகள், வேப்பிலைக்கட்டி என வழங்கப்படும் கறிவேப்பிலைக்கட்டி மோர் மிளகாய், கார வேர்க்கடலை, மசாலா வேர்க்கடலை, மிக்ஸர் என்பதை எல்லாம் மற்றவர்கள் சொல்வதுதான். 


மாங்காயைத் தோலைச் சீவி விட்டு பல் போன்ற அளவில் வெட்டி அதில் உப்புக் காரம் போடும் மிளகாய் மாங்காயை ஏனோ யாரும் சொல்வதில்லை. அது போல காலையில் வைத்து மீதமான குழம்பையும் கீரையையும் ஒன்றாகச் சேர்த்து கட்டியான பதம் வரும் வரை கொதிக்க விடும் குழம்புங்கீரையையும் அதிகம் தெரிவதில்லை.


சின்ன வயதில் விடுமுறைக்கு வந்திருக்கும் சொந்தக்காரப்பிள்ளைகள் எல்லாரும் முற்றத்தில் அரைவட்டமாக உட்கார்ந்து கொள்ள ஒரு சட்டியில் தயிர்சாதத்தைப் பிசைந்து, ஒரு கவளம் எடுத்து அதில் தன் கட்டைவிரலால் அழுத்திப் பள்ளமொன்றைச் செய்து, அந்தப் பள்ளத்தில் குழம்புங்கீரையையோ வத்தக்குழம்பையோ நிரப்பி அம்மா ஒவ்வொருவர் கையிலும் தருவாள். அதை வாயில் போட்டு முழுங்குவதற்குள் மற்றவர்களுக்கு ஒரு முறை கொடுத்து மீண்டும் நம் முறை வந்துவிடும். எதேதோ கதைகள் சொல்லி அவள் இப்படித் தரும் பொழுது எவ்வளவு சாப்பிட்டோம் என்றே தெரியாமல் வயிறுமுட்டத் தின்போம். தின்று முடிக்கும் பொழுது தூக்கம் கண்களைச் சுற்றிக் கொண்டு வந்துவிடும். 



தயிர்த்தாய் வாழ்த்து எனச் சொன்ன பின் ஒரு வெண்பாவேனும் எழுத வேண்டாமா. 

முன்னொரு நாளெங்கள் முற்றத்தில் வைத்தெனக்கு

அன்னையும் தந்தாள் அமிர்தமதை - அந்தோ

உயிரினும் மேலாம் உறவைத் தொலைத்தேன்

தயிர்சாதம் தந்த தவிப்பு! 

அம்மா, முற்றம், அவள் கதைகள், சுற்றி அமர்ந்து உண்ணும் பழக்கம் என எல்லாவற்றையும் தொலைத்தாகிவிட்டது. தயிர்சாதம் ஒன்றுதான் எஞ்சி இருக்கிறது.  

Friday, October 17, 2025

எத்தனைப் பண்டங்கள்! எத்துணைச் சுவை!

 

“ஐயா ராஜேஷ் அவர்களே, தீபாவளி நெருங்குகிறதே, தங்கள் இல்லத்தில் எத்துணைத் தித்திப்புப் பண்டங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள்?” என்று சங்கத்தமிழில் பேசிக்கொண்டே வீட்டுக்குள்ளே நுழைந்தான் சுரேஷ். 


“என்னடா? தமிழ் எல்லாம் ரொம்ப பலமா இருக்கு? என்ன விஷயம்?” 


“நீ வேற கதை, கட்டுரை, புத்தகம்ன்னு எழுத ஆரம்பிச்சுட்டியா? அதான் நானும் நல்ல தமிழில் பேசலாம்ன்னு பார்த்தேன்”. 


“நினைச்சது சரிதான். ஆனா நீ பேசின தமிழில் ஒரு குழப்பம் இருக்கே” 


“அப்படி என்னடா தப்பாப் பேசிட்டேன்?” 


“எத்துணைத் தித்திப்புப் பண்டங்கள்ன்னு ஏன் கேட்ட? எத்தனைத் தித்திப்புப் பண்டங்கள்ன்னு ஏன் கேட்கலை?” 


“இது என்னடா பிரச்சனையாப் போச்சு? எத்தனைன்னா பேச்சுத் தமிழ். எத்துணைன்னா இலக்கியத் தமிழ். அவ்வளவுதானே. இதுக்குப் போய் ஏன் இவ்வளவு அலட்டிக்கற?” 


“அங்கதாண்டா விஷயமே இருக்கு. எத்தனை வேற, எத்துணை வேற. ஒரு கேள்வி கேட்கறோம். அதுக்கு விடை எண்ணாக இருந்தால் அப்போ கேள்வியில் எத்தனைன்னு இருக்கணும். ஆனா விடை அளவாக இருந்தால் அங்க எத்துணை வரணும்”. 


“என்னடா குழப்பற? எனக்குப் புரியற மாதிரி எடுத்துக்காட்டோட சொல்லு”. 


“பரோட்டாக் கடைக்குள்ள வந்து சூரி பரோட்டா தின்னுக்கிட்டு இருக்கும் போது அங்க கேட்க வேண்டிய கேள்வி, பரோட்டா சூரி எத்தனைப் பரோட்டா தின்னாருன்னுதான். இங்க எத்துணைப் பரோட்டா தின்னாருன்னு கேட்கக்கூடாது. ஏன்னா இருபத்து மூன்று பரோட்டாக்களை தின்றார், அதுக்கு அப்புறம் கோட்டை அழிச்சுட்டு திரும்பி முதலில் இருந்து ஆரம்பிச்சார்ன்னு சொல்லும் போது உன் கேள்விக்கு விடை இருபத்து மூன்றுன்னு எண்ணிக்கையா வருது பார்த்தியா. அப்போ அங்க கேள்வி எத்தனைன்னுதான் இருக்கணும்”. 


“ஓஹோ, இது சரியான மேட்டரா இருக்கே. சரி, நம்பரா பதில் வரும்ன்னா கேள்வி எத்தனைன்னு இருக்கணும். இதே மாதிரி எத்துணைக்கு ஒண்ணு சொல்லு பார்ப்போம்”. 


“அவ்வளவுதானே. லவ் டுடேன்னு ஒரு படம். அதுல எஸ்பிபி பாடற பாட்டு ஒண்ணு வரும். என்ன அழகு, எத்தனை அழகு, கோடி மலர் கொட்டிய அழகுன்னு கேட்க ரொம்ப நல்லா இருக்கிற பாட்டு. ஆனா நாம என்ன சொன்னோம். எத்தனைன்னு வந்தா பதில் எண்ணிக்கையில் இருக்கணும்ன்னு சொன்னோம். அப்போ எத்தனை அழகுன்னு கேட்டா அஞ்சு புள்ளி நாலு ஏழுன்னா சொல்லுவோம்? அங்க எத்தனை அழகுன்னு கேட்கக் கூடாது. எத்துணை அழகுன்னுதான் கேட்கணும். பாடல் எழுதின வைரமுத்துவுக்குத் தமிழ் தெரியாதா? அவர் மெட்டுக்கு அமையணும்ன்னு எத்தனை அழகுன்னு போட்டுட்டார். ஆனா ரொம்ப அழகு, மிகவும் பெரியது, ரொம்ப நேரம் ஆச்சுன்னு எண்ணிக்கையில் இல்லாம அளவாக பதில் வரும் இடத்தில்தான் எத்துணைதான் போடணும்”. 


“புரியுது, அப்போ இந்த எவ்வளவு அப்படின்னு சொல்லறோமே அது?” 


“அது நாம் பார்த்த ரெண்டுக்குமே பொதுவானது. உன் கையில் எவ்வளவு விரல்கள்ன்னு கேட்கலாம்? அதுக்கு ஐந்துன்னு எண்ணிக்கையில் பதில் வரும். எவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்கன்னு கேட்கலாம்? ரொம்ப நேரமா அல்லது கொஞ்ச நேரமாகத்தான்னு பதில் வரும். இதே மாதிரிதான் இத்தனை இத்துணை இவ்வளவு, அத்தனை அத்துணை அவ்வளவு எல்லாமே”. 


“நன்றாகப் புரிகிறது ஐயா. எனக்கு இது இனிப் பிரச்சனையல்ல என்று நம்புகிறேன்”. 


“ம்ஹூம். பிரச்சனை இருக்கு”. 


“ஐயையோ, திரும்ப முதலேர்ந்தா? இப்போ என்ன செஞ்சேன்”. 


“இது நீ மட்டும் இல்லைடா, பொதுவாகவே நிறையா பேரு செய்யற தப்புதான். பாக்கெட்ல காசு இருக்கான்னு கேட்டா, இருக்கு அல்லது இல்லை. அவ்வளவுதான். அந்த மாதிரி வேற ஆப்ஷன் இல்லாத இடத்தில்தான் இல்லைன்னு சொல்லணும். கேஸ் தீர்ந்து போச்சா? இருக்கு அல்லது இல்லை. அதோட ஓவர். 


ஆனா, நீ கமல் ரசிகனான்னு அந்த காலத்து ஆட்களைக் கேட்டா அவங்க ரஜினி ரசிகனா இருக்கும் பட்சத்துல நான் கமல் ரசிகனல்லன், ரஜினி ரசிகன்னு சொல்லணும். அங்க நான் கமல் ரசிகனில்லைன்னு சொன்னாச் சரி வராது. அதனாலதான் கவிஞர் எப்படிப் பாட்டு எழுதினார் நான் கவிஞனுமில்லை, நல்ல ரசிகனுமில்லை. அங்க இல்லை, அவ்வளவுதான் அதுக்கு மேல ஒண்ணும் கிடையாது. 


ஆனா அவரே வேற ஒரு பாட்டு எழுதும் பொழுது வான் நிலா நிலா அல்ல அப்படின்னு எழுதினாரு. ஏன்னா அதுக்கு மாற்றா அடுத்த வரியில் உன் வாலிபம் நிலான்னு எழுதினாரு பாரு. அப்போ வானத்துல இருக்கிற நிலாவுக்கு மாற்றா வாலிபத்தைச் சொல்லும் பொழுது அங்க வான் நிலா நிலா இல்லைன்னு  எழுதலை நிலா அல்லன்னு எழுதினாரு. இதெல்லாம் அவரு பாட்டா எழுதி அதுக்கு மெட்டுப் போட்டாங்களா அல்லது மெட்டுக்கு இவர் பாட்டு எழுதினாரான்னு தெரியாது. ஆனா இலக்கணத்தை மீறாம பாட்டு எழுதினதுனாலதான் அவர் கவிஞர். அவருக்கு ஈடு வேற யாரும் ‘இல்லை’. அவ்வளவுதான் மேட்டர்”. 


“இரு இரு. நாம பேச ஆரம்பிச்சது அல்ல, ஆனா நீ சொன்ன உதாரணத்தில் ஏன் ரசிகன் அல்லன்னு இருக்கு?” 


“வெரி குட். நல்லாத்தான் கவனிக்கற. அல்ல என்பதை எல்லாத்துக்கும் சொல்லக் கூடாது. பேசப்படறது அஃறிணைப் பொருளா, உயர்திணையா, ஒருமையா, பன்மையான்னு எல்லாம் பார்த்து அதுக்கு எது சரியான சொல்லோ அதைத்தான் பயன்படுத்தணும். 


அஃறிணை ஒருமைன்னா அன்று - நான் பார்த்த ஆடு அதுவன்று”.


“டேய், இலக்கணம் சொல்லச் சொன்னா ஆடுன்னு அரசியலை எல்லாம் இழுக்கற?” 


“அடப்பாவி. அக்கிரமம் பண்ணாதீங்கடா. சொல்ல வந்ததைச் சொல்ல விடு. 


ஆடு - அன்று. சரியா? அதையே ஆடுகள்ன்னு பன்மையில் சொன்னோம்ன்னா அதுக்குத்தான் அல்ல. நான் பார்த்த ஆடுகள் அவையல்ல அப்படின்னு சொல்லற மாதிரி. 


இதையே உயர்திணையை எடுத்துக்கிட்டா மூணு விதம் இருக்கு. ஒருமை ஆண், ஒருமை பெண், பன்மை. இந்த மூணும் வரும் போது அதே வரிசைல அல்லன், அல்லள், அல்லர் அப்படின்னு வரணும். உதாரணத்துக்கு

நான் பார்த்த பெண் இவள் அல்லள்

நான் பார்த்த ஆண் இவன் அல்லன்

நான் பார்த்த காவலர்கள் இவர்கள் அல்லர். 


இப்படி மொத்தம் அஞ்சு விதம் இருக்கு”. 


“அல்லன், அல்லள், அல்லரா? எனக்கு இந்த அல்லலே வேண்டாம். தலை சுத்துது. இவ்வளவு குழப்பம் இல்லாத வேற எதையாவது சொல்லுடா”. 


“உலகத்துல ஆர்வமா இலக்கணம் கத்துக்கறதுன்னா நீ ஒருத்தனாத்தான் இருப்ப போல”. 


“இந்த மாதிரி சினிமா உதாரணமெல்லாம் வெச்சுச் சொல்லித் தந்திருந்தா பள்ளிக்கூடத்தில் தமிழ் வாத்தியாருக்குச் சில்லரய சிதற விட்டு இருக்கலாமேடா”


“மூணாவதா இதையே எடுத்துப்போம். சில்லறையா சில்லரையான்னு பலபேருக்குக் குழப்பம் வரும். பெரிய நோட்டுக்குச் சில்லறை, சின்ன நோட்டுக்குச் சில்லரைன்னு கம்பர் காலத்திலேர்ந்து கடி ஜோக் வேற சொல்லுவாங்க. ஆனா இந்த வார்த்தைக்கு அர்த்தம் புரிஞ்சா இந்தக் குழப்பமே வராது”. 


“சரி, சொல்லு. அதையும் தெரிஞ்சுக்கறேன்”. 


“முழுசா இருக்கிற ஒண்ணை, சிறிய பகுதிகளா மாத்திக்கறதுக்குப் பேருதானே சில்லறை. ஒரு நூறு ரூபாய் நோட்டுக்குச் சில்லறை குடுங்கன்னு கேட்டா, பத்து பத்து ரூபாய் காயின் வரலாம், அஞ்சு இருபது ரூபாய் நோட்டு வரலாம். அம்பது ரூவா நோட்டு ஒண்ணு, அஞ்சு ரூவா காயின் பத்து கூட கிடைக்கலாம். இல்லையா? இப்படி முழுசா இருக்கிற ஒண்ணைப் பல பகுதிகளாக்கறதுக்குப் பேருதான் சில்லறை. 


பகுதிக்கு அறைன்னு ஒரு சொல் இருக்கு. அதனாலதான் முழுசா இருக்கிற வீட்டின் ஒரு பகுதியை சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறைன்னு பிரிக்கறோம். சில அறைகள் என்பதைச் சேர்த்தா சில்லறைன்னு வருது பாரு. அதுதான் சரியான சொல். 


அரைன்னா என்ன? பாதி. மேல சொன்ன மாதிரி நூறு ரூபாய்க்குச் சில்லறை கேட்டா எப்பவுமே சரி பாதியா ரெண்டு அம்பது மட்டும்தான் தருவாங்களா என்ன? அதனால சில்லரைன்னு சொன்னாத் தப்புதான்”. 


“சூப்பர்டா. அம்மா ஸ்வீட் ரெடி ஆயிருச்சு வந்து டேஸ்ட் பாருன்னு கூப்பிடுவாங்கன்னுதான் உன் வாயைப்புடுங்கிக்கிட்டு இருந்தேன். வாசனை வருது. ரெடி ஆயிருச்சுன்னு நினைக்கறேன். நான் அங்க போய் என்ன நடக்குதுன்னு பார்க்கறேன். ஓக்கே பை!” 


அரை அம்மண ஆண்டி!

 

1931ஆம் ஆண்டு. இந்திய அரசியல் சட்டத் திருத்தங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம். அதன் பகுதியாக இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய தேசிய காங்கிரஸின் ஒரே பிரதிநிதியாக லண்டன் சென்றிருந்தார் காந்தி. தங்களின் ஆட்சியாளர்களோடு இந்தியர்கள் சரிசமமாக அமர்ந்து பேசுவது ஆங்கிலேயர்கள் பலருக்கு உறுத்தலாக இருந்தது. பின்னாட்களில் இங்கிலாந்தின் பிரதமராகப் பொறுப்பேற்ற வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு படி மேலே சென்று, “இங்கு வக்கீலுக்குப் படித்துவிட்டு, கிழக்கு நாடுகளில் காணப்படும் அரை அம்மண ஆண்டிகளின் தோற்றத்தில், பிரிவினைவாதம் பேசித் திரிபவர், நம் மாளிகைப் படியேறி, நம் அரச பிரதிநிதிகளுக்குச் சமமாக அமர்ந்து பேசப் போகிறார்” என்று அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையால் காந்திக்கு அரை அம்மண ஆண்டி (Half Naked Fakir) என்ற அடைமொழி கிடைத்ததுதான் மிச்சம். 

இன்று நமக்கு காந்தி என்றவுடன் நினைவுக்கு வருவது கையில் ஒரு கம்புடன் முட்டிக்கு மேல் தூக்கிக் கட்டப்பட்ட வேட்டியும், மேலுடலை மறைக்கப் போர்த்தப்பட்ட துண்டும் கொண்ட உருவம்தான். ஆனால் ஆரம்பத்தில் காந்தி அணிந்து கொண்ட உடைகள் இவை இல்லை. அவர் இந்த உடைகளுக்கு மாறியதற்குப் பின் ஒரு கதை இருக்கிறது, அரசியல் இருக்கிறது, சமுதாயத்தின் மீதான அக்கறை இருக்கிறது. 

https://www.cartoonistsatish.com/gandhi/

காந்தியின் தந்தையின் மரணத்திற்குப் பின் அவரின் குடும்பம் ஒரு சராசரிக் குடும்பமாகத்தான் இருந்தது. அவர் மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்ல முடிவான பின்பு அதற்கான செலவுகளுக்குப் பணம் திரட்டுவது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால் இங்கிலாந்தில் அணிவதற்கு ஏற்ற உடைகளைக் காந்தி வாங்கிக் கொண்டதாகத் தன் சுயசரிதையில் எழுதி இருக்கிறார். அப்பொழுது வாங்கிய கோட்டுகளும் கழுத்துப்பட்டைகளும் ஆரம்ப காலத்தில் தனக்குப் பிடிக்கவில்லை என்றும் பின்னாட்களில் கோட்டுகளையும் கழுத்துப்பட்டைகளையும் விரும்பி அணியத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற உடைகள் அங்கிருந்த கலாச்சாரத்திற்கு ஏற்றவையாக இல்லை என்று உணர்ந்து லண்டனில் புதிய உடைகளை காந்தி வாங்கிக் கொண்டார். கோட்டு சூட்டும், கழுத்துப்பட்டையும், தங்க கைக்கடிகாரமும், தொப்பியுமாக அவர் ஐரோப்பிய உடைகளுக்கு முழுதும் மாறினார். ஆனால் ஒரு கட்டத்தில் படிக்க வந்திருக்கும் மாணவனுக்கு இத்தனை படாடோபம் தேவை இல்லை என்று செலவுகளைக் குறைத்தும் கொண்டார். 

அங்கிருக்கையில் அவர் தமக்குப் பின் இங்கிலாந்து வரும் இந்தியர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு, உதவியாக இருக்கும் வரையில் லண்டன் கையேடு (Guide to London) என்ற தலைப்பில் ஒரு சிறு புத்தகத்தை எழுதினார். அதிலும் கூட ஐரோப்பிய பாணி உடைகளான overcoat, morning coat, waistcoat, jacket suit, pairs of trousers, drawers (woollen, cotton or merino), woollen vests போன்றவற்றைக் கொண்டு வர வேண்டும் எனப் பட்டியலிட்டுள்ளார். இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பி வந்து பாரிஸ்டராகப் பணிபுரிய முனைந்த பொழுதும் அவரின் உடைகளில் மாற்றங்கள் ஏதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், தன்னுடைய அண்ணன் வீட்டில் தங்கி இருந்த பொழுது அண்ணனின் குழந்தைகளையும் தன் பையனையும் கூட ஐரோப்பிய பாணி உடை அணியச் செய்ததாக காந்தியே எழுதி இருக்கிறார். 

இந்தச் சூழலில்தான் அவரது தென்னாப்பிரிக்கப் பயணம் அமைந்தது. அங்கு முதலில் அவர் அணிந்த கோட்டும் தலைப்பாகையும் அவரை அந்நியப்படுத்திக் காட்டினாலும் அவர் அதையே அணிந்தார். அங்கு சென்ற சில நாட்களிலேயே காந்திக்கு மாவட்ட நீதிமன்றம் ஒன்றிற்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவர் அமர்ந்திருந்த பொழுது அவரின் தலைப்பாகையை நீக்கச் சொல்லி வலியுறுத்தப்பட்டார். ஆனால் காந்தியோ அதற்கு ஒத்துக்கொள்ளாமல் அந்த நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார். பின் வெகு நாட்களுக்கு அவர் அங்கு தலைப்பாகை அணியும் பழக்கத்தைக் கைவிடவில்லை. இது குறித்து அவர் நாளிதழ்களில் எழுத, அவரின் பெயர் பலருக்கும் தெரிய வந்தது. காந்தி தான் அணியும் உடையை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது இங்கேயே தொடங்கிவிட்டது. 

காந்தி இந்த தலைப்பாகை அணியும் உரிமையை தனக்கு மட்டும் வேண்டுமெனப் போராடவில்லை. பாலசுந்தரம் என்ற தமிழர் அங்கு ஒப்பந்தக் கூலிக்காரராக வேலை பார்த்து வந்தார். அவருடைய முதலாளி கோபத்தில் கண்டபடி அவரை அடித்துக் காயப்படுத்திவிட அவர் காந்தியின் உதவி நாடி அவரைப் பார்க்க வந்தார். அப்பொழுது சமூகத்தில் தம்மை விட மேலான நிலையை இருந்தவர்களைப் பார்க்கும் பொழுது தலைப்பாகையைக் கழட்டி வைத்துக் கொள்வது வழக்கம். அதன்படி பாலசுந்தரமும் காந்தியைப் பார்க்கும் முன் தன் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை அவிழ்த்துக் கையில் வைத்துக் கொண்டு காந்தியை வணங்கினார். சக மனிதன் இப்படி வணங்க நேர்ந்ததைக் கண்டு திகைப்படைந்த காந்தி அவரை மீண்டும் தலைப்பாகையை அணிய நிர்பந்தித்தார். மிகுந்த தயக்கத்தோடு பாலசுந்தரம் தலைப்பாகையை அணிந்தாலும் அவர் முகத்தில் தென்பட்ட பெருமிதம் தனக்கு மகிழ்ச்சியை அளித்தது என்று காந்தி குறிப்பிட்டு இருக்கிறார். 

ஆனால் தேவைப்பட்ட நேரத்தில் காந்தி உடை விஷயத்தில் சமரசம் செய்யவும் தயங்கவில்லை. ஒரு முறை, அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் காந்தி வழக்காட நேர்ந்த பொழுது அங்கிருந்த தலைமை நீதிபதி வக்கீல்களுக்கான உடை குறித்த விதிகளை குறிப்பிட்டு காந்தி தலைப்பாகையை அணியக் கூடாது என்று சொன்ன பொழுது அவ்வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி காந்தி அந்த கோரிக்கைக்கு உடன்பட்டு தலைப்பாகையை அவிழ்த்துவிட்டு வாதாடினார். அவரின் நண்பர்களுக்கு அந்தச் செய்கையில் ஒப்புதல் இல்லை என்பதை அறிந்து, அவர்களிடையே தான் ஏன் அப்படிச் செய்ய நேர்ந்தது என்பதை விளக்கினார். சில நேரங்களில் பெரிய இலக்கினை அடைய இது போன்ற சிறிய சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டும் என்ற தன் நம்பிக்கையை எடுத்துச் சொன்னார். அவரின் சத்யாகிரகப் போராட்ட வழியில் இந்தச் சமரசங்கள் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்தன. 

காந்தி தென்னாப்பிரிக்க அரசியலில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியா வந்திருந்தார். அந்நேரம் அவர் கர்சன் பிரபு, இந்தியா கிளப் என்ற இடத்தில் அளித்த விருந்தில் கலந்து கொண்டார். பொதுவாக இந்தியா கிளப்பிற்கு இந்திய உடைகளில் வருபவர்கள் அன்று கோட்டும் பூட்ஸும் அணிந்து வந்திருந்ததைக் கண்டு வியந்த அவர், அப்படி உடையணிந்த நண்பர் ஒருவரிடம் ஏன் இப்படி உணவகத்தில் பரிமாறும் சிப்பந்திகளைப் போல உடையணிந்து வந்திருக்கிறீர்கள் என வினவினார். அதற்கு அந்த நண்பர், நாங்கள் கர்சன் பிரபுவிற்கு வேலையாட்கள்தானே. அதனால் இந்த வேஷத்தை அணிய வேண்டியிருக்கிறது என மனம் நொந்து பதில் சொன்னார். இந்நிகழ்வு, மற்றவர்களுக்காக நம் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டுமா என்ற கேள்வியை காந்தியின் மனத்தில் எழுப்பியது. 

தென்னாப்பிரிக்காவிற்குத் திரும்பிய காந்தி, தான் அணியும் உடைகளில் அடுத்த மாற்றத்தைக் கொண்டு வந்தார். ஐரோப்பிய பாணி உடைகளை விடுத்து இந்திய பாரம்பரிய உடைகளை உடுத்தத் தொடங்கினார். இந்த மாற்றம் ஒரே நாளில் நடந்த ஒன்றல்ல. காந்தி படிப்படியாக இந்த மாற்றத்திற்குத் தன்னை உட்படுத்திக் கொண்டார். தான் போராடும் மக்களோடு தன்னை இணைத்துக் கொள்ள இது ஒரு வழியாக அவருக்குப் பட்டது. 

தென்னாப்பிரிக்காவில் தன் பணி முடிந்து லண்டன் வழியாக இந்தியாவிற்கு 1915ஆம் ஆண்டு நிரந்தரமாக திரும்பினார் காந்தி. லண்டனில் இருந்து இந்தியா வரும் பொழுதே இந்திய பாரம்பரிய ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டார். அதன்படி அவர் ஒரு வேட்டியும் மேற்சட்டையும், வட இந்திய பாணி தலைப்பாகையுமாகத்தான் கப்பலில் பயணம் செய்தார். கஸ்தூர்பாவும் ஒரு சாதாரணமானச் சேலையையே உடுத்தி இருந்தார். இந்த எளிமையான கோலத்தில் இவ்விருவரையும் பார்த்த மக்கள் திகைத்து நின்றார்கள். அவரின் இந்த உடை சராசரி மக்களோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. காந்தி இந்தியாவிற்கு திரும்பி வந்த நிகழ்வின் நூறாவது ஆண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக இந்திய தபால்துறை கஸ்தூர்பா, காந்தி இருவரின் எளிமையான தோற்றத்தின் படங்களைக் கொண்ட தபால்தலைகளை வெளியிட்டது. 


PC - Hariharan Sankaran


பணக்காரர்களும் தலைவர்களும் ஐரோப்பிய நாகரிகத்தை பின்பற்றி வந்த நேரத்தில், இப்படி எளிமையான உடைகளில் மேடை ஏறிய காந்தியை வியந்து பார்த்தனர் இந்திய மக்கள். காந்தி தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள இப்படி உடை அணியவில்லை, தான் எது சரி என்று நம்பினாரோ அதைத்தான் செய்தார். தனது நம்பிக்கைகள் மாறும் பொழுது அதற்கேற்ற மாதிரி தன் நடவடிக்கைகளில் மாற்றங்களைச் செய்து கொள்வதில் அவர் தயங்கியதே இல்லை. 

இந்தியா திரும்பிய காந்தி, தனது அரசியல் குருவான கோகலே அவர்களின் அறிவுரைப்படி, ஒரு வருட காலம் இந்தியாவைச் சுற்றிப் பார்த்து, இம்மக்களோடு பழகி, அவர்களது தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொண்டு, அதற்காக தீர்வுகளை யோசித்துவிட்டு, தீவிர அரசியலில் இறங்கலாம் என முடிவு செய்தார். சாதாரண மக்களோடு பழக மூன்றாம் வகுப்பிலேயே பெரும்பாலும் பயணம் செய்தார். எளிமையான உடைகளை அணிந்து மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் பயணம் செய்த தலைவர்களை பார்த்தே இராத மக்களுக்கு காந்தியின் நடவடிக்கைகள் ஆச்சரியத்தை அளித்தன. இந்த எளிமை எதிர்பார்க்கப்பட்டதில்லை என்பதால் காந்திக்கு சில இடங்களில் அவரை அடையாளம் தெரியாமல் ஒரு தலைவருக்கு உண்டான மரியாதை கிடைக்காமல் சிரமங்கள் ஏற்பட்டதும் உண்டு. அவற்றை எல்லாம் அவர் தன் போக்கில் எதிர்கொண்டாரே தவிர தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. 

உதாரணமாக 1915ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னைக்கு வந்த பொழுது காந்தியை வரவேற்க ரயில்நிலையத்தில் குழுமி இருந்த தலைவர்கள் அவரைத் தேடி முதல் வகுப்புப் பெட்டிகளை நோக்கிச் செல்ல, மூன்றாம் வகுப்புப் பெட்டியில் இருந்து இறங்கிய காந்தியை யாருமே கண்டு கொள்ளவில்லை. அவரே தம்மை வரவேற்க வந்தவர்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலைமை உண்டாயிற்று. 

பொதுவாக தலைவர்களும் சமூகத்தில் பெரும் அந்தஸ்து கொண்டவர்களும் வெளிநாட்டுத் துணிகளை அணிவது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல, இந்தியர்கள் இந்தியாவில் தயார் செய்யப்படும் உடைகளையே அணிய வேண்டும் என்ற கருத்தினை முன்வைக்கத் தொடங்கினார் காந்தி. காதி எனப்படும் கைத்தறி ஆடைகளை மாற்றாக அடையாளம் காட்டினார். இந்திய கைத்தறியை மீண்டும் மக்களுக்கானதாகச் செய்யவும் முயற்சிகளை முன்னெடுத்தார். அந்த முயற்சியைத் தனது ஆசிரமத்தில் இருந்தே தொடங்கினார். 

இந்தியாவில் தனது முதல் ஆசிரமத்தை அகமதாபாத்தில் அமைக்க காந்தி முடிவு செய்ததில் ஆச்சரியம் இல்லை. அவர் ஒரு குஜராத்தி, எனவே அங்கே இருந்து தன் சேவையைத் தொடங்க அவர் முடிவு செய்தது நியாயமே. ஆனால் அம்முடிவுக்கு பின் வேறு ஒரு காரணமும் இருந்தது. அகமதாபாத் கைத்தறிக்குப் பெயர் போன நகரம். ஆனால் அச்சமயத்தில் அந்தத் தொழில் அங்கே நசிந்து போயிருந்தது. அதனை மீட்கும் வகையில் தனது ஆசிரமத்தை அங்கே அமைக்கப் போவதாக காந்தி முடிவெடுத்தார். தனது ஆசிரமத்தில் கைராட்டை மூலம் நூல் நூற்பதற்கும், அந்த நூலை துணியாக நெய்யத் தேவையான ஏற்பாட்டையும் செய்தார். 

1916ஆம் ஆண்டு பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவினை ஒட்டி ஹார்டிங் பிரபுவை பாராட்டி அளிக்கப்பட்ட விருந்தில் காந்தி கலந்து கொண்டார். இந்த விருந்தில் கலந்து கொண்ட அரசர்கள் பட்டாடைகளும், நகைகளும், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட தலைப்பாகைகளும், தங்க உறைகளில் தொங்கிய கத்திகளுமாக இருந்தது காந்தியின் கண்களை உறுத்தியது. அவர்களில் சிலரும் கூட தாங்கள் வேண்டாவெறுப்பாகவே இப்படி வர வேண்டி இருக்கிறது எனச் சொன்னது காந்திக்கு புகழுக்கும் பதவிக்கும் இவர்கள் இப்படி எல்லாம் செய்ய வேண்டியிருப்பதை நினைத்து வெறுப்பாக இருந்தது. அனைவரும் இந்திய துணிகளை அணிய வேண்டும் என்ற முழக்கத்திற்கு இது சரியான தூண்டுகோலாக இருந்தது. 

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு என்ற போராட்டத்தை காந்தி அறிவித்தார். ஜூலை 31, 1921, அன்று மும்பையில் அந்நிய துணிகள் கொளுத்தப்பட்டன. ஆங்கிலேய உடைகள் நம் அடிமைத்தனத்தின் அடையாளம் என முழங்கினார் காந்தி. இப்போராட்டம் இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது. கதர் அணிவது தேசபக்தியின் அடையாளம் என்றானது. 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு நிகழ்வு அந்த வருடம் காந்தி தமிழகம் வந்த பொழுது நிகழ்ந்தது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த காந்தி மதுரைக்குச் செல்லும் வழியில் திண்டுக்கல்லுக்கு வருகை தந்தார். அங்கே அவரை வரவேற்ற விவசாயிகள் மேலாடை அணியாமல் இருந்ததைக் கண்ட காந்தி, அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டார். தாங்கள் வறுமையில் இருப்பதால் காதி உடைகள் வாங்கும் வசதி இல்லை, அதனால் வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு மேலாடை இல்லாமல் இருக்கிறோம் என அவர்கள் சொன்னது காந்தியின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. 

மதுரை வந்து சேர்ந்த காந்தி, செப்டம்பர் 22ஆம் தேதி தான் இனி ஒரு நான்கு முழ வேட்டியும் மேலே ஒரு துண்டும் மட்டுமே அணிவது என்ற முடிவினை எடுத்தார். அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு முன், தனது வேட்டியை இரண்டாகக் கிழித்து அதையே தன் உடையாக அணிந்து கொண்டு வந்தார். வறுமையில் இருக்கும் மக்களின் உணர்வினைப் பிரதிபலிக்கும் வகையிலேயே தான் இந்த ஆடைக்குறைப்பு என்ற முடிவுக்கு வந்ததாக காந்தி எழுதி இருக்கிறார். அன்றிலிருந்து அதுவே அவர் நிதமும் அணியும் உடையாக நிலைத்தது. அந்த உடையிலேயே லண்டனில் பேச்சுவார்த்தை நடத்தவும் போக ‘அரை அம்மண ஆண்டி’ என்ற பட்டமும் கிடைத்தது. 

இன்றும் காந்தி என்றாலே அவரது எளிமையான உடையும், கைராட்டையும்தான் நம் மனத்தில் முதலில் தோன்றும். அந்த அளவிற்கு அவரது உடையின் தாக்கம் இன்றளவிற்கு நீடித்து இருக்கிறது. ஆரம்ப காலத்தில் காந்தி தன்னைத் தனியாகத் தெரியச் செய்யும் உத்தியாகவோ அல்லது ஒரு புரட்சியாகவோ இதனைச் செய்யவில்லை. ஆனால் உடையையும் ஓரு போராட்டக் கருவியாகப் பயன்படுத்த முடியும் என உணர்ந்த பின் அதனை அவ்வகையில் கையில் எடுக்க அவர் தயங்கவில்லை. இந்திய கைத்தறியை அரசியல் அடையாளமாக முன்வைத்து, அதனை தேசியவாதிகளின் சீருடையாக அவர் செய்தததால் இன்றும் கூட தலைவர்கள் கதர் அணிவது என்பது ஒரு பழக்கமாகவே இருக்கிறது. அதுவே காந்தியின் உடை அரசியலின் வெற்றி. 

(யாவரும் மின்னிதழின் காந்தி சிறப்பிதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை - https://www.yaavarum.com/arai-ammana-aandi/)