Thursday, January 29, 2009

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - ஜனவரி 2009

இந்த மாதம் போட்ட புதிரில் எனக்கு நிறைவே இல்லை. வேலைப் பளு அதிகமாக வேறு இருந்தது. இருந்தாலும் விடாது போட வேண்டும் என்பதால்தான் புதிரினை வெளியிட்டேன். அதற்கேற்ற மாதிரியே இந்த முறை பங்கு பெற்றவர்கள் எண்ணிக்கையும் சரி, முழுவதற்கும் சரியான விடை அளித்தவர்கள் எண்ணிக்கையும் சரி மிகக் குறைவாகவே இருந்தது. எதனால் இந்த முறை அனைவரையும் கவரும்படியாக புதிர் இல்லை என்பதைச் சொன்னால் அடுத்த முறை திருத்திக் கொள்ள முயல்வேன். இந்தப் புதிரின் அனைத்து விடைகளையும் சரியாக அளித்தவர்கள்
  1. ஜி3
  2. ராம்
  3. மஞ்சுளா
  4. ராமையா நாராயணன்
  5. ஏஸ்
  6. திவா
  7. அரசு

அனைவருக்கும் வாழ்த்துகள்! அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இனி விடைகளைப் பார்க்கலாமா?


இடமிருந்து வலம்

5 ஆசாரமாய் இருக்க மடக்கு அல்லது மரணமடை (2)
மடி
- ஆசாரமாய் இருப்பதை மடி எனச் சொல்வார்கள். மடக்கு என்றாலும் மரணமடை என்றாலும் மடி என்ற பொருள் வருகிறது அல்லவா.

6 நடராசர் பார்க்க வருவதில்லை? வந்திடும் இங்கே (3,3)
தில்லை வாரும்
- இதுதான் எனக்கு சரியாக அமையாத குறிப்பு. நடராசர் பார்க்க தில்லை வாரும். இதில் வருவதில்லை என்பதில் இருந்து தில்லை என்பதும் அதைத் தொடர்ந்து வரும் வந்திடும் என்பதற்கு இணையான சொல்லாக வாரும் என்பதையும் போட்டு இருந்தேன். பலரும் சரியாக சொன்னது எனக்கே ஆச்சரியம்தான்.

7 கிழவி தைத்ததைப் பார்த்தால் முளைக்கப் போட்டது கிடைக்கும் (4)
விதைத்த
- கிழவி தைத்த என்ற சொற்களின் உள்ளேயே விதைத்த என்ற விடை இருக்கிறது. முளைக்கப் போட்டது என்பது விதைத்த என்ற பொருளை உணர்த்துகிறது.

8 மகளை நதியின் பெயர் சொல்லிக் கூப்பிடலாமா? (3)
பெண்ணை
- மகளை என்பதற்குப் பெண்ணை எனச் சொல்லலாம். பெண்ணை என்பது நதியின் பெயரும் கூட.

9 கொஞ்சம் காரமாய் அம்மா திரும்பினால் மனைவியா ஆவாள்? (3)
தாரமா
- கொஞ்சம் க்ரிப்டிக்கான குறிப்புதான். அம்மா என்னும் சொல்லுக்கு ஈடாக மாதா என்ற சொல்லை எடுத்துத் திருப்பினால் தாமா என வரும். அதன் நடுவே கொஞ்சமாய் காரம் என்பதால் அதிலிருந்து ஒரு எழுத்து - ர என்ற எழுத்தைப் போட்டால் மனைவியா என்ற பொருள் தரும் தாரமா என்ற சொல் வரும்.

11 நகரம் திரும்பினால் நாட்டை ஆளுமே (3)
கமுதி
- நகரத்தின் பெயர். திருப்பிப் போட்டால் திமுக. தற்பொழுது நாட்டை ஆளும் கட்சி.

13 சங்கடம் இங்கு இல்லா வட்டம் (4)
சகடம்
- சகடம் என்றால் வட்டம். சங்கடம் என்ற சொல்லி ‘ங்’ என்ற எழுத்தை எடுத்தால் சகடம் வந்திடும். ‘ங்’ என்ற எழுத்தை இங்கு என உச்சரிப்பதால் இங்கு இல்லா என்று குறிப்பில் கூறியுள்ளேன்.

16 புத்தியற்ற புரவி இறுதியில் மெதுவாகச் சென்றது (6)
விவேகமற்ற
- புத்தியற்ற என்பது இதற்குப் பொருள். புரவியின் இறுதி = வி. மெதுவாக = வேகமற்ற. இரண்டும் சேர்ந்தால் விவேகமற்ற வருதா!

17 இரவில் தெரியும் சூரியன் (2)
ரவி
- மிக எளிதான குறிப்பு. சூரியன் என்பது பொருள் இரவில் என்ற வார்த்தையினுள்ளேயே விடை இருக்கிறது என்பதை உணர்த்த தெரியும் என்ற குறிச்சொல்லும் இருக்கிறது.

மேலிருந்து கீழ்
1 காயம் பட பாதம் கொண்டு மிதி (2,2)
அடிஉதை
- கொஞ்சம் யோசித்தல் ரொம்ப எளிமையான குறிப்புதான். காயம் பட அடி உதை. பாதம் என்றால் அடி. மிதி என்றால் உதை.

2 அரை முத்தம் கொடு என்றால் தாக்கியதா? (5)
பாதித்ததா
- கொஞ்சம் வேண்டுமென்றே குழப்பிய குறிப்பு. அரை என்றால் பாதி. அரை முத்தம் என்றால் முத்தம் என்ற சொல்லி பாதி = த்த. ஆக அரை என்ற சொல் இங்கு டபுள்ட்யூட்டி செய்கிறது. கொடு என்றால் தா. பாதி+த்த+தா = பாதித்ததா. தாக்கியதா என்பது பொருள்.

3 கலையின் தலையெடுத்து தலைகீழாய் பிச்சை கேட்கும் சிற்பமா? (3)
சிலையா
- கலை என்ற சொல்லின் தலையை எடுத்துவிட்டால் மிஞ்சுவது லை. பிச்சை கேள் என்றால் யாசி. இது தலைகீழாக மாற சியா. இதனுள் லை என்ற எழுத்து நுழைய சிலையா. சிற்பமா என்பது பொருள்.

4 லட்சுமி நிலபுலன் கொண்டு வந்தால் நாமம்தான் (4)
திருமண்
- என்னோட பேவரைட் குறிப்பு இதுதான். திரு என்றால் லட்சுமி. மண் என்றால் நிலபுலன். திருமண் என்பது நாமத்தைக் குறிக்கும்.

10 மாது சற்றே ஓசை குறைத்துக் கொள்ள தூய்மையானது (5)
மாசற்றது
- மாது சற்றே என்ற எழுத்துக்களை எடுத்து அதில் றே என்பதின் ஓசையைக் குறைத்து ற என மாற்றிப் போட்டால் மாசற்றது என்ற சொல் கிடைக்கும். தூய்மையானது என்பது பொருள்.

12 முப்பத்திரண்டையும் பாதுகாத்திட முருகனுக்குத் தேவையானது (4)
முனைவேல்
- இது ரொம்ப எளிதான் குறிப்பு என நினைத்தேன். ஆனால் நிறையா பேர் போடாதது ஆச்சரியம்தான். முப்பத்திருபல் முனைவேல் காக்க என கந்த சஷ்டிக் கவசத்தில் வரும்.

14 உலோக முரசைக் கொட்டியதால் இப்படிச் செவிடாகும் (4)
டமாரம்
- உலோக முரசு மற்றும் டமாரச் செவிடு என இரு வகையான அர்த்தம் கொண்ட சொல்.

15 பாடு படாத ஈடுகோள் மட்டம் (3)
சமன்
- சமன்பாடு என்றால் ஈடுகோள். ஆங்கிலத்தில் Equation. அதில் பாடு போக மீதம் இருப்பது சமன். மட்டம் என்பது பொருள். ஈடுகோள் என கூகிளாண்டவரை வேண்டி இருந்தால் எளிதாக இருந்திருக்கும். சமம் என்ற விடையை சரியானதாகக் கருதவில்லை.


இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

அடுத்த மாத புதிரில் வழக்கம் போல ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறேன். மீண்டும் என் நன்றிகள்.

19 comments:

said...

இந்தப் புதிருக்கான விமர்சனத்தைத் தாருங்கள் ப்ளீஸ்..

said...

ஹெல்லோ....வந்ததுதான் வந்தோமேன்னு...:):)

said...

//முளைக்கப் போட்டது என்பது விதைத்த//

அது எப்படி அண்ணா?

முளைக்கப் போட்டது என்பது விதைத்தது என்று தானே ஆகணும்?

said...

//மிதி என்றால் உதை.//
மிதி என்றால் stamp உதை = kick. ரெண்டும் வேறயாச்சே?

said...

//மாது சற்றே என்ற எழுத்துக்களை எடுத்து//
சற்றே க்காக து வை எடுக்கலியே. you are off colour today ;-))

said...

முனைவேல் - இது ரொம்ப எளிதான் குறிப்பு என நினைத்தேன்

நான் உடனே போட்டது இதுதான்! :-)

said...

இந்த‌ முறை புதிர்க‌ளுக்கு ப‌தில் அளிக்க‌ முடியாத‌து, என‌து நேர‌மின்மை என்ப‌தையும்,
ம‌ற்ற‌ப‌டி இந்த‌ மாத‌மும் புதிர்க‌ள் அருமை என்றும் சொல்லிக்கொள்கிறேன்.

பின்குறிப்பு:
குறிப்புக‌ள் ச‌ற்று சுவார‌சிய‌ம் குறைந்து‌ காண‌ப்ப‌டுகிற‌து.

-------
‍‍ச‌திஸ்

said...

ஆணி அதிகம், அதனால் நேரம் கிடைக்கவில்லை. போதாக்குறைக்கு மெல்பர்னில் மூன்றாவது நாளாய் வெய்யில் வாட்டி எடுக்குது. 43 டிகிரிலயே இருக்கு.

said...

ரொம்பக்குழப்பியது இரண்டு
தில்லை வாரும், மாசற்றது. தில்லை கண்டு பிடிச்சாலும் வாரும் காலை வாரிவிட்டது

said...

என்னைப் பொறுத்தவரை புதிர்கள் வழக்கம்போல் சுவாரசியமாகத்தான் இருந்தன..

திமுக ..திருப்பிப் போட்டு யோசிக்கத் தவறியதால் இரண்டு மதிப்பெண் அம்பேல்..முனைவேல் ..இதுவ்வும் மூளைக்கு எட்டவில்லை...

said...

ம்ஹும், ஒரு முறை கூட முழுசாப் போட முடியலை, இந்தத் தரம் சீக்கிரமா வேறே வெளியிட்டு இருக்கீங்க! என்ன அவசரம்? நான் வேலை எல்லாத்தையும் முடிச்சுட்டு வரவரைக்கும் காத்திருக்கக் கூடாது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போகட்டும், போட்டவரையிலும் தப்பு வந்தது, மகளை நதியின் பெயர் சொல்லிக் கூப்பிடலாமா? இது தான், மத்தது தில்லை என்னை வாரித் தான் விட்டுட்டது. வாரும் வருமா? வரமா? னு எல்லாம் போட்டிருந்தேன். :P

said...

திமுக - க்முதி சத்தியமா இது என் மூளைக்கு எட்டலை.

ஈடுகோள் பத்தி கூகுள் ஆண்டவரிடம் கேட்டதுக்கு எனக்கு சரியா விடை கிடைக்கலை.

மத்தபடி புதிர் எல்லாம் சுவாரசியமாத்தான் இருக்கு. தொடர்ந்து போடுஙக.

said...

கமுதி நகரமா? நடாத்துங்க

said...

அடுத்த புதிர் எப்போ?? நான் பதினைஞ்சு நாட்கள் இருக்கமாட்டேன், அப்போ போட்டுடுங்க! :P:P:P:P

said...

அடுத்த புதிர் சீக்கிரம் போடுங்க.

said...

இந்த மாதப் புதிரும் எனக்குக் கஷ்டமாகவே இருந்தது. நேரம் ரொம்ப இல்லை வேறு (நொண்டிக்குதிரைக்கு சறுக்கினது சாக்கு!)

அடுத்த புதிர் எங்கே/எப்போன்னு கேக்கலாம்னு தான் வந்தேன். பாவம் கீதாம்மா ஊருலேருந்து வந்ததும் போடுங்க!

said...

/அடுத்த புதிர் எங்கே/எப்போன்னு கேக்கலாம்னு தான் வந்தேன்//
அதானே! லேட்டுன்னு நினைச்சு இங்கே வந்தா காணவே காணோம்!
இ.கொ.புலி மேலே ஏறிட்டாரோ?

said...

இந்த மாதம் புதிர் போடலயா?

said...

இ.கொ. இது நல்லாவே இல்லை, இந்த மாசம் ஊருக்குப் போயிட்டேன்னு சொல்லிக்கக் கூட விட மாட்டீங்க போலிருக்கே! நறநறநறநறநறநற