Monday, September 02, 2019

சுந்தர காண்டத்து சூட்சுமம் தெரியுமா?

வழக்கம் போல் ட்விட்டரில் வளர்த்த வம்புதான். 

அன்பர் @mosqueraider இன்று எதற்காகவோ நட்புக்காக என்ற திரைப்படத்தில் வரும் சின்னச் சின்ன முந்திரியா என்ற பாடலை கேட்டாராம். ரொம்பவே உன்னித்து கேட்டார் போல. அதனால் பாடல் வரிகளில் அவருக்கு ஒரு சந்தேகம். பாடலில் சுத்துது சுத்துது செவ்வரி வண்டு, சுந்தர காண்டத்துச் சூட்சுமம் கண்டு என்ற ஒரு வரி வருகிறது. அதற்கு என்ன பொருள் என அவர் ட்விட்டரில் கேட்க, அதை சில பலர் நண்பர் @ragavanG அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டனர்.  ஜிரா இது மெட்டுக்கு உட்கார வைக்கப்பட்ட சொற்களாகத்தான் தெரிகின்றன என்றார். 

நம்ம கை சும்மா இருக்காமல் நான் வேணா இதற்கு விளக்கம் சொல்லட்டுமா என்று கேட்கப் போக, விளைவு இந்தப் பதிவு.

சுந்தர காண்டத்தில் என்ன நடந்தது என்றால் உடனே ராமன் சொல்லி அனுமன் இலங்கைக்குச் சென்றான், சீதா தேவியைக் கண்டான், ராவணன் சபையில் வம்பிழுத்து வாலில் தீயை வைக்கும் படிச் செய்தான், இலங்கையை எரித்தான், மீண்டும் ராமனிடம் வந்து கண்டேன் சீதையை என்றான். இப்படிப் பாட்டுப் புத்தகத்தில் வரும் கதைச் சுருக்கம் மாதிரி சொல்லுவாங்க. அதிலும் இந்தக் கண்டேன் சீதையை என்பதை எல்லாரும் சொல்லிச் சொல்லி ஆயிரம் முறையாவது கேட்டு இருப்போம். கம்பன் கண்டேன் சீதையை என்று சொல்லவே இல்லை. 

அவன் சொன்னது

கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண்திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக! இனி துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

இந்தப் பாட்டைப் பத்தி எழுதிக்கிட்டே இருக்கலாம். இங்க இருந்து இலங்கைக்குப் பறந்து போனேனா, போன வழியில் என்ன ஆச்சு தெரியுமான்னு வளவளன்னு கதை சொல்லலை. ராமனுக்கு கவலையா இருக்குமே அதனால விஷயத்தை எவ்வளவு எளிமையா, எவ்வளவு சீக்கிரம் சொல்லிட முடியுமோ அப்படிச் சொல்லிடலாம்ன்னு மொதல் வார்த்தையா பார்த்துட்டேன்னு சொல்லறான். போன காரியம் முடிஞ்சுது. பார்த்துட்டேன், கற்புக்கே அணியாக இருக்கும் அன்னையை, அதுவும் என் இரு கண்களால் என்று ஆரம்பித்தானாம். சீதை என்று ஆரம்பித்தால் கூட அவளுக்கு என்ன ஆச்சோன்னு ராமன் மனசு சங்கடப்படுமே என்பதால் இப்படி ஒரு வரிசையில் சென்று வந்ததைச் சொல்கிறானாம். எப்படி எல்லாம் தோணுது பார்த்தீங்களா நம்ம கம்பனுக்கு. 

ஆனா இன்னிக்கு நமக்கு இந்தப் பாட்டு வேண்டாம். ரெண்டு பாட்டு பின்னாடி போகலாம். 

ராமனுக்குக் கவலை. சீதைக்கு என்ன ஆச்சோ, அவள் உயிரோடுதான் இருக்கிறாளோ? இல்லையோ என வருந்திக் கொண்டு இருக்கிறான். இலங்கையில் இருந்து திரும்பிய அனுமன் அங்கு வருகிறான். வந்த உடனே ஒரு வேலை செய்கிறான், அதைப் பார்த்து ராமனுக்குப் போன உயிர் திரும்ப வந்துவிட்டது. என்ன செஞ்சான்னா, எப்போதும் போல ராமனின் காலடியில் விழுந்து வணங்காமல், சீதை இருக்கும் தென்திசையை நோக்கி விழுந்து வணங்கினானாம். கம்பன் வார்த்தைகளில்

எய்தினன் அனுமனும். எய்தி, ஏந்தல் தன்
மொய்கழல் தொழுதிலன். முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வைகினன் 

அனுமன் திரும்பி வந்தான். வந்து, பெருமையில் சிறந்த ராமனின், வீரக்கழல்களை அணிந்த கால்களைத் தொழாமல், தாமரை மலரில் இருந்து அவதரித்த சீதை இருக்கும் இடத்தை நோக்கிய தலையும், தலை மேல் கூப்பிய கைகளை உடையவனுமாய் பூமியில் விழுந்து வணங்கினான். இதான் பொருள். இதைப் பார்த்த ராமன், அனுமன் வாயைத் திறக்கும் முன்பே சீதை நலமாக இருப்பது அறிந்து மகிழ்ந்தான். 

ஏந்தல் - உயர்ச்சி, முளரி - தாமரை, வையகம் தழீ - நிலத்தில் விழுந்து இப்படிச் சில சொற்களுக்கு மட்டும் பொருள் புரிந்தால் நேரடியாக கம்பன் எழுதினதையே வாசித்து விடலாம். கம்ப ராமாயணப் பாடல்கள் அவ்வளவு எளிது. 

இதில் மொய்கழல் என்பதற்கு இன்னும் ஒரு விளக்கம் தருவார்கள். ராமனின் கால்கள் பார்ப்பதற்குத் தாமரை மலர் போல் இருப்பதால் அவற்றை வண்டுகள் மொய்க்குமாம். அப்படி வண்டுகளால் மொய்க்கப்பட்ட திருவடிகள் என்றும் கொள்ளலாம் என்பார்கள். 

இதைத்தான் நம்ம பாடலாசிரியர் காளிதாசன் எடுத்துக்கிட்டாரோ என்னவோ. எப்படி ராமனின் பாதங்களை தாமரை என்று நினைத்து வண்டுகள் மொய்த்தனவோ அப்படி நம்ம திரைப்பட நாயகியைக் கண்டு அவள் அன்றலர்ந்த மலரோ என நினைத்து ஏமாந்து அவளைச் சுற்றிச் சுற்றி வந்து மொய்த்தனவாம் இந்தச் செவ்வரி வண்டுகள். சூட்சுமம் என்ற சொல்லுக்கு நுட்பம், திறமை என்ற பொருள் உண்டு. நம்ம வண்டுகளுக்கு இப்படி ஏமாந்து போய் மொய்க்கும் திறமை எங்க இருந்து வந்ததுன்னு யோசிக்காதீங்க. அவங்களுக்கு கம்பராமாயணத்தில் இப்படி ஏமாந்து மொய்த்த வண்டுகளிடமிருந்து இந்தத் திறன் வந்திருக்கின்றது என்கிறார் பாடலாசிரியர்! 

ஜிரா இப்படி எல்லாமா யோசிச்சுப் பாட்டு எழுதி இருப்பாருன்னு நினைக்கறீங்கன்னு கேட்டுட்டார். எனக்கும் அப்படி எல்லாம் இருந்திருக்காது என்றாலும் நாயகியை பூவாய் நினைத்து மொய்த்த வண்டு என்றதும், கூடவே சுந்தர காண்டம் என்றும் சொன்னதால் உடனடியாக நினைவுக்கு வந்தது மொய்கழல் தொழுதிலன் என்பதுதான். அவர் என்ன நினைச்சு எழுதினாரோ ஆனா அதனால  திரும்பவும் இந்த இரண்டு பாடல்களைப் படித்துப் பரவசம் அடைய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுது. அதுக்கு அவருக்கும், கேள்வி கேட்ட அன்பருக்கும், அதை நம்ம பார்வைக்குக் கொண்டு வந்த நண்பர்களுக்கு நன்றியும் சொல்லியே ஆகணும். 

எனக்கு அந்தப் பாட்டைப் பார்த்தே, கேட்டே ஆகணும் என்று அடம் பிடிப்பீர்களானால் உங்களைக் காப்பாற்ற அந்த ராமனாலும் முடியாது - https://youtu.be/wXc1oZ3lziM

3 comments:

said...

தேனீக்கள், சின்னச் சின்ன வண்டுகள் நான் உட்கார்ந்திருக்கையில் சுத்திச் சுத்தி வருதே என்னவாயிருக்கும்னு நினைச்சேன். இப்போத் தான் புரியுது! எல்லாமே சுந்தரகாண்டத்தைப் படிச்சிருக்கும் போல!

said...

கீதாம்மா, இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலை?! :)))

said...

//கீதாம்மா, இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலை?! :)))//

ம்ஹூம் இல்லை, இல்லவே இல்லை!