Showing posts with label thendral. Show all posts
Showing posts with label thendral. Show all posts

Wednesday, March 12, 2008

தமிழ் வளர்ப்பு - அறிஞர் பேட்டியும் கொத்தனாரின் குழப்பமும்!

"தனி ஒரு மனிதனுக்கு பதிவிட நேரமில்லையெனில்......" இதுதாங்க நம்ம தன்னிலைச் செய்தி! அப்படி ஒரு செய்தி போடற அளவுக்கு நமக்கு ஆணி! அந்த தன்னிலைச் செய்தியைத் தொடர்ந்து அடுத்ததா ".... பதிவை குழுமப் பதிவாய் ஆக்கிடுவோம்!" அப்படின்னு சொல்லி இலவசத்தில் எழுத வாருங்கள் அப்படின்னு விளம்பரம் பண்ணக்கூட தயார் ஆகிட்டேன். ஆனாப் பாருங்க, ஒரு வேலையாய் மேற்கு கடற்கரை வரை சென்று வர வேண்டியதாக ஆயிற்று. ஆறு மணி நேர விமானப் பயணம். கையில் மடிக்கணினியையும் கூடவே கடந்த இரு மாதங்களாக படிக்காமல் வைத்திருந்த தென்றல் இதழ்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பியாகி விட்டது. (இணையத்தில் படிக்கக் கிடைக்கும் தென்றல் இதழைப் படித்துப் பாருங்கள். நல்ல மாத இதழ். அதிலும் என்னைக் கவர்ந்தது நண்பர் வாஞ்சி தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்.)

இந்த மாத இதழில் கல்வியாளர் முனைவர் வா செ குழந்தைசாமி அவர்களுடனான நேர்காணல் இடம் பெற்று இருந்தது, மிகச் சுவையாக பல விஷயங்களைப் பற்றிப் பேசி இருந்தார். அதில் பதிவு போட விஷயம் கிடைத்ததுதான் விசேஷமே!!

அந்த நேர்காணலில் இருந்து இரு கேள்வி பதில்கள்!

கேள்வி: தற்போது தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் பட்டப்படிப்பு முடித்துவிடலாம் என்ற நிலை நிலவுகிறது. இது சரியானதுதானா?

பதில்: நான் மிகுந்த தமிழ்ப் பற்று உள்ளவன் என்பதை ஒப்புக் கொள்வீர்கள். இருந்த போதிலும் தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடிக்க முடியும் என்பதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை.

பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059. எந்த ஆண்டும் சதவிகித அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்த சிலர் தமிழ்ப் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டுவிடும்? இதுவே சற்று அதிகம் என்றால் நாம் அதைக் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்தான். பெரும்பாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இதர மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சில குழந்தைகள் பள்ளிகளில் தமது தாய்மொழியைப் பயில்கிறார்கள். உருது கற்கும் இஸ்லாமியர் தவிர எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த சிலரே தத்தம் தாய்மொழிகளைப் பயில்கிறார்கள். படித்துவிட்டுப் போகட்டும். உண்மையான ஆபத்து வேறுபல இடங்களில், வேறு பல வடிவங்களில் வந்து கொண்டு இருக்கிறது. அதைக் குறித்து ஏனோ யாரும் சிந்திப்பதில்லை.

கேள்வி: தென்றல் வாசகர்களுக்கும், உலகளாவிய தமிழர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பதில்: பொதுவாக, இந்தியாவிலுள்ள பள்ளிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் உள்ளவர்கள் நிதி திரட்டி கணிப்பொறிகள் இதர தளவாடங்களை வாங்கி அனுப்பிவது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இது நல்ல பணிதான். இருந்தாலும் ஒன்று சொல்வேன். இந்தியா ஒரு மாபெரும் நாடு. இதன் பிரச்சனைகளை உங்களால் தீர்த்து வைக்க முடியாது. அதற்குப் பதிலாக வசதிமிக்க நாடுகளில் வாழும் தமிழர்கள், மொரிஷியஸ், பிஜி, ரீயூனியன், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தம் அடையாளத்தை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றைப் பற்றி எண்ணி ஏற்றது செய்ய உதவுவதே சாலச் சிறந்தது. (எனத் தொடங்கி ஒரு நீண்ட பதிலை தந்துள்ளார்)

இந்த இரண்டு கருத்துக்களை எடுத்துக் கொண்டோமானால் ஒன்றில் உடன்படுகிறேன், மற்றொன்றில் வேறுபடுகிறேன். முதலாவது கருத்தின் சாரத்தை நான் அப்படியே ஒப்புக் கொள்கிறேன். சொல்லி இருக்கும் காரணங்களிலும் முறையிலும் சற்றே வேறுபடுகிறேன். என்னளவில் எதையுமே இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டளை இடுவது என்பது தவறான ஒரு அணுகுமுறை. ஒரு மாணவன் தனக்கு எதன்பால் ஈர்ப்பு இருக்கிறதோ அதனைத்தான் படிக்கச் சொல்லவேண்டுமே தவிர்த்து இதைத்தான் படித்தாக வேண்டும் என்ற கட்டாயப்படுத்துதல் தவறு. நம்மிடையே கூட படிக்கும் காலத்தில் வேப்பங்காயாகத் தமிழ் கசந்தது எத்தனை பேருக்கு என நம்மை நாமே கேட்டுக் கொண்டு பாருங்களேன். எனக்கு இப்பொழுது தமிழின் மேல் இருக்கும் ஆர்வத்தில் ஒரு பங்கு கூட படிக்கும் பொழுது கிடையாது. அவ்வகை கற்பித்தலை மாற்றி நல்ல ஆர்வம் வரக்கூடிய முறையில் கற்பிக்கும் முறையைக் கொண்டு வருதல் அவசியம். அப்படி ஆகுமே ஆனால் தமிழை விரும்பி படிப்பவர் எண்ணிக்கை தன்னால் ஏறும். இன்று பல இடங்களில் நாம் காணும் கட்டாயத் தமிழ் பாடம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்படி ஒரு தமிழார்வலரின் எண்ணமும் அது போல் இருப்பது ஆச்சரியமே!

அடுத்த பதிலைப் பார்த்தோமானால் அதில் எனக்குத் துளியும் உடன்பாடு இல்லை. நாம் இன்று தமிழகத்தில் இந்தியாவில் இருக்கும் பள்ளிகளுக்கு உதவி செய்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நாம் பிறந்த மண்ணில் நம்மால் ஆன உதவி செய்ய வேண்டும், நமக்குக் கிடைத்த / கிடைக்காத சந்தர்ப்பங்கள் இன்றைய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதானே குறிக்கோளாக இருக்கும். இதில் எனது மண் செழிக்க வேண்டும் என்ற சுயநலம் இழையோடுவதை மறுக்க முடியுமா? அது என் பள்ளி, என் ஊர், என் மாவட்டம், எனது மாநிலம் என எல்லைகள் விரியும். அவ்வளவுதான். ஆனால் இதை விடுத்து மொரிஷியசில் தமிழ் வளர்ச்சி என்றெல்லாம் என்னால் யோசிக்க முடியவில்லை. நான் என் சுயநலம் கலந்த உதவிகளைச் செய்யப் பார்க்கின்றேன். தமிழை வளர்க்க என்னை விடப் பெரியவர்கள், அவர்கள் நடத்தும் அரசாங்கம் பாடுபடட்டும் .

என்ன சொல்லறீங்க?

டிஸ்கி: முனைவர் குழந்தைசாமி அவர்கள் என் பதிவைப்படிக்கமாட்டார், எனவே "ஐயோ! என்னை மட்டும் குறிவச்சு எழுதறாண்டா!" என்ற அவச்சொல் இந்தப்பதிவுக்கு வராது! அவரை மட்டும் குறிவைத்துக் கேள்வி கேட்கப்படவில்லை என்பதால் நீங்களும் உங்கள் கருத்தை எடுத்து வையுங்கள்.