சிவா வீட்டுக்குப் போயாச்சு. போன தடவை அவர் வீட்டைப் பற்றி எழுதும் போது ஒரு முக்கியமான ஆளைப் பத்தி எழுத மறந்துபோச்சு. அது அவரு வீட்டில் வளரும் கிளி. அவர்தான் தன்னைப் பற்றிய குறிப்பில் முன்பு தானொரு பறவை ரசிகர் எனக் கூறியிருந்தாரே. அதன் பெயர் நீமோவாம். அழகாய் சுப்பிரமணி, கல்யாணி எனத் தமிழ்ப் பெயர் வைக்காமல் ஏன் இப்படி எனச் செல்லமாய் கடிந்து கொண்டேன். நல்லா பேசுமாம். ஆனால் எங்கள் கொட்டத்தைக் கண்டு அன்று சற்றே அடங்கியேயிருந்தது. என் மகனைக் கண்டவுடன் மட்டும் குஷியாய்க் கத்தத் தொடங்கியது. தன்னைப் போல் ஒரு சிறிய உருவமாய் இருந்ததால் நட்பா அல்லது போட்டிக்கு வந்த மாதிரியான எண்ணமாவெனத் தெரியவில்லை.
அதற்கான அறை, விளையாட்டுச் சாமான், போர்வை என நன்றாக செட்டில் ஆகியிருந்தது. இவ்வகை கிளிகள் 25 வருடங்கள் வரை வாழுமாம். இதோ அவரின் புகைப்படம்.

நீமோவுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு பின் சிவாவின் வீட்டு முகப்பில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தோம். மலையேறிவிட்டு வந்தது களைப்பாக இருந்ததாலும், வெய்யிலின் கொடுமையால் நாக்கு வரண்டு போனதாலும் சிவாண்ணா தங்கள் ஊரின் லோக்கல் சரக்கான கோக்கனி (Kokanee) என்ற பியரை கொடுத்து உபசரித்தார். பின் தங்கக்கழுகு, அரசமீனவன் போல் அதன் பெயரையும் தமிழ்ப் படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார். கோக்கனி என்ற பெயரே தமிழ்தானே என்றவுடன் ஒரு மாதிரி என்னைப் பார்த்தவரிடம் கோக்கனி என்பதன் விளக்கம் பசும்பழம்தானே என்றேன். அவர் ரொம்ப ஓவாராகிவிட்டது என்று அதற்கு மேல் பசும்பழம் வேண்டாமெனக் கூறிவிட்டார். :-)
அடுத்தது சாப்பாடு. பாவம் அவங்க வீட்டம்மா. இவரு வேலைக்கெல்லாம் போக வேண்டாம் வரவங்களப் பார்த்தா நல்லா நாலு விதமா சாப்பிட்டு வளர்ந்தவங்க மாதிரி தெரியுது. அதனால நீ லீவைப் போட்டு நல்லா சமைன்னு சொல்லி இருப்பாரு போல. அவங்களும் வித விதமா சமைச்சு வெச்சிருந்தாங்க. நாங்க ஊரைச் சுற்றி வந்த பசியில் போட்டோ எல்லாம் எடுக்காம புகுந்து விளையாடிட்டோம். சாரி துளசியக்கா, அதையெல்லாம் உங்க கண்ணில் காமிக்க முடியாம ஆகிப்போச்சு. ஆனாலும் மெனு சொல்லறேன் நோட் பண்ணிக்குங்க - காஞ்சீவரம் இட்லி, சட்னி, வெஜிடெபிள் புலவ், ரெய்தா, அப்புறம் நமக்காக அவரு அடி வாங்கி குறிப்பு போட்ட சால்னா (வெஜிடேரியன் வெர்ஷன்). நாங்க எல்லாம் சைவம் என்பதாலும் அன்று அவங்களுக்கு சைவ வெள்ளியாய் ஆனதாலும் கோழி / முட்டை எதுவும் இல்லை. சாப்பாட்டை பற்றி ஒரு வரி. ஒரு வரிதான். நன்றாக வெட்டினோம். திருமதி சிவா அவர்களே, மீண்டும் ஒரு முறை நன்றி.
சாப்பிட்ட களைப்பு தீர இளைப்பாறிவிட்டு, (யோவ், எதுக்குத்தான் ரெஸ்ட் என ஒரு நியாயம் இல்லையா எனத் திட்டுவோர்க்கு. அதுக்கெல்லாம் கால்கரி போய் ஒரு கட்டு கட்டினால்தான்யா தெரியும்!) பிறகு அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஜிகர்தண்டா. அவ்வளவு நேரம் உப்புக்குச் சப்பாணியாய் ஆடிக்கொண்டிருந்த சிவாண்ணா வீறு கொண்டு எழுந்தார். சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் டேபிள் மீது தனக்கு தேவையான சாமான்களைப் பரப்பினார். எனக்கென்னவோ அவருக்கு இதற்கு முன் ஒரு வண்டியில் அடுக்கி வைத்த பிராக்டீஸ் இருந்த மாதிரி ஒரு பீலிங்!
முன்றைய தினம் ஊற வைத்த கடற்பாசியை கிளாஸில் விட்டு அதற்குமேல் நன்னாரி சர்பத்தையும் பாலையும் விட்டு கலக்கி ஜிகர்தண்டா செய்தார். அவரின் குறிப்பில் 'இன்னும் கொஞ்சம் சுவை வேண்டுமென்றால் இதற்கு மேல் வெண்ணிலா ஐஸ்கீரிம் அல்லது 33% விப்பிங் கீரிம் சேர்க்கலாம்' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்குத் தேவையில்லாமல் இப்படி செய்தது நன்றாகவே இருந்தது. என் மனைவியார் ஜிகர்தண்டா குடித்தது அதுவே முதல்முறை. அதனால் அவர் கடற்பாசி வெஜிடேரியந்தானே என கேட்டு உறுதி செய்து கொண்டார். நன்றாகவே இருந்தது என நான் கூறியவுடன், சிவாண்ணா ஒரு முறை காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார். அந்த வட்டக் கழுத்து டீ ஷர்ட்டில் அவர் அதை எப்படி செய்தாரோ தெரியவில்லை.
ஆனால் அவர் மனைவி 'இதெல்லாம் என்ன ஜிகர்தண்டா. பால்கோவா போடாத ஜிகர்தண்டாவெல்லாம் ஒரு ஜிகர்தண்டாவா?' என சவுண்ட் விட்டார். அட, இதைப் பற்றி அண்ணன் பதிவில் ஒன்றும் சொல்லவில்லையே எனக் காதைத் தீட்டிக்கொண்டேன். இவரும் விடாமல் அதெல்லாம் மேட்டுக்குடிகளின் பழக்கம், ஏழைத் தொழிலாளிகள் குடிப்பது இதைப் போன்ற ஜிகர்தண்டாதான் என வாதாட. நிலமை தமிழ்மணம் போல் மாறத் துவங்கியதால் நான் இது நன்றாக இருக்கிறது. அதுவும் நன்றாக இருக்கும் போலவே தோன்றுகிறது என ஒரு சாலமன் பாப்பையாத்தனமான தீர்ப்பைக் கொடுத்து தப்பித்துக் கொண்டேன். மதுரைக்காரய்ங்களா வந்து தீர்ப்பு சொல்லுங்க. இப்படி ஒரு சாப்பாடும் ஜிகர்தண்டாவும் குடித்த பின் நாங்கள் இருந்த நிலையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்ல வேளை அதற்கு முன் அவரின் தோட்டத்தில் எடுத்த ஒரு படம் இருந்ததால் தப்பித்தேன். இதோ எங்கள் நிலை.

அதன்பின் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்களிடம் விடை பெற்றோம். சிவாண்ணா, ஒரு அருமையான மாலைப் பொழுதுக்கு ( சரி, சரி - அதற்கும் மூன்று பதிவெழுத மசாலா கொடுத்ததுக்கும்) நன்றி உங்களுக்கும் உங்கள் இல்லத்தாருக்கும். திரும்பி வரும் போது விமானப்பயணம் ஒரே கூத்து. அதை சொல்லணும்னா தனிப் பதிவுதான் போடணும். ஆனா அப்படி போட்டா உங்களில் நிறையா பேர் உதைக்க வருவீங்க என்பது தெரியும் என்பதால் ஒரே ஒரு வரி. பத்திரமாய் வந்து சேர்ந்தாச்சு. அவ்வளவுதான்.