Tuesday, November 08, 2022

இங்கிவளை யான் பெறவே...

தோழர் நசீமாவின் இந்தப் பதிவைப் பார்த்த உடன், ஒரு சிறுகதைக்கான களனாக இருக்கிறதே, இதை இப்படி ஒரு சாதாரணப் பதிவாக போட்டுவிட்டார்களே என்று தோன்றியது. பொதுவாகப் புனைவே எழுதாத நாம் இதனை ஒரு சிறுகதையாக எழுதிப் பார்த்தால் என்ன என்றும் ஓர் எண்ணம். பாராவின் எழுதுகலைப் பயிலரங்கத்தில் ஓர் உண்மைச் சம்பவத்தை எடுத்துக் கொண்டு அதில் இல்லாத ஆனா அனைவரும் உணரக் கூடிய உணர்ச்சிகளை சேர்த்தால் அது பொதுவாக ரசிக்கப்படக்கூடிய கதை ஆகிவிடும் எனச் சொன்னதும் ஞாபகத்தில் இருந்தது. சரி எழுதித்தான் பார்ப்போமே என எழுதிய கதை இது.  


இங்கிவளை யான் பெறவே... 

இருப்பே கொள்ளவில்லை. காலையில் அப்படிக் கத்தி இருக்கக்கூடாதுதான். 

பாவம் குழந்தை. ஊர் மாறி வந்ததில் இருந்தே ஒரு மாதிரிதான் இருக்கிறாள். பழைய நண்பர்கள் யாரும் இல்லை. புது பள்ளி. பதின்ம வயதின் ஆரம்பம். அதோடு வரும் உடல் மன உபாதைகள் என ஏகப்பட்ட மாற்றங்கள். புதிதாக நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு இப்பொழுதுதான் ஒரு நிலைக்கு  வருகிறாள். அவர்களோடு போகப் போகும் முதல் சுற்றுலா என்பதால் கொஞ்சம் அதிகமாகவே ஆர்வக்கோளாறு. கொண்டு போக வேண்டிய சாமான்களை எடுத்து வைத்துக் கொள்வதும், போட்டு கொள்ள வேண்டிய உடையைத் தேர்ந்தெடுத்து, அதனை மாற்றி வேறொன்றை எடுத்துக் கொள்வதுமாக ஏக கலாட்டா. 

எனக்கும்தான் புதிய இடம். அவர் அலுவலகம் தந்திருக்கும் இந்த வாடகை வீடு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. வெளிச்சமே வராத சின்ன அடுப்பறை.  திரும்பக்கூட இடம் இல்லாத அளவுதான். அதில் நுழையும் பொழுதே எரிச்சலும் ஆத்திரமும்தான் வருகிறது, பேசக்கூட யாரும் இல்லை. போதாகுறைக்கு மொழிப்பிரச்னை வேற. தனியாக வெளியில் கூடப் போக முடியாத ஊர். இருந்தாலும் அந்தக் கோபத்தை எல்லாம் குழந்தையிடம் காட்டி இருக்க வேண்டாம்தான். 

என்ன செய்ய. எழுந்ததில் இருந்து தலைவலி. அவருக்கு நேரத்தில் சாப்பாடு  தயாராக இருக்க வேண்டும். இரண்டு நிமிடம் தாமதமானாலும் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். அதைச் செய்துவிட்டு இவள் பள்ளிக்குப் போவதற்காக சாப்பாடு கட்ட வேண்டும். நிம்மதியாக ஒரு காப்பி குடிக்கக் கூட நேரமில்லை. காப்பிப் பொடி டப்பாவை எடுக்கும் பொழுதே கை வழுக்கி கீழே போட்டாகிவிட்டது. சிந்திய பொடியை துடைத்து கையெல்லாம் ஒரே காப்பிப்பொடி வாசனை. வீட்டில் இருக்கும் இரண்டு பேரால் ஒரு பிரயோஜனமில்லை. ஒற்றை ஆளாய் எல்லாவற்றையும் செய்யும் பொழுது முகம் துடைக்கக் கூட நேரமில்லை.

சுற்றுலாவுக்காகத் தேர்ந்தெடுத்த ஆடையைப் போட்டுக் கொண்டு வந்தவளைப் பார்த்தால் தேவதை வந்த மாதிரி இருந்தது, குழந்தை முகத்தில்தான் அப்படி ஒரு சிரிப்பைப் பார்த்து எத்தனை நாளாகிவிட்டது. சாப்பிடப் போனவளை அப்படியே கட்டிப் பிடித்து ஒரு முத்தம் தர வேண்டும் போல இருந்தது, தந்தேன். 

"அம்மா" என்று ஒரு அலறல். அவள் ஆசையாய் தேடி எடுத்துப் போட்டுக் கொண்ட சட்டை மேல் ஒரு நீளக் கோடாகக் காப்பிப் பொடிக் கறை. முழங்கையில் சிந்தி இருந்ததைப் பார்க்கவில்லை.  ஒரு அலசு அலசிக் காயப் போட்டால் அவள் கிளம்புவதற்குள் காய்ந்திருக்கும். அந்தச் சட்டையையே போட்டுக் கொண்டு போயிருக்கலாம். ஆனால் "நீ எப்பவுமே இப்படித்தான். நான் என்ன செஞ்சாலும் அதைக் கெடுக்கறதே உன் வேலை." அழுகையும் ஆத்திரமும் பீறிட்டுச் சத்தம் போடத் தொடங்கினாள். நானாவது விட்டுத் தந்திருக்கலாம். தரவில்லை. அவளும் பேச நானும் பேச வீடு போர்க்களமானது. 

கையில் கிடைத்த சட்டையைப் போட்டுக்கொண்டு, மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டுதான் போனாள். கட்டிய சாப்பாட்டைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. நல்ல வேளை, செலவழிக்க என அப்பாவிடம் நேற்றே இருபது திர்ஹாம் வாங்கி வைத்துக் கொண்டிருந்தாள். பாவம் குழந்தை. சாப்பிட்டாளோ இல்லையோ. அதையே நினைத்து எனக்குச் சாப்பாட்டில் கை வைக்ககூட முடியவில்லை. நண்பர்களைப் பார்த்த உடனே கோபம் எல்லாம் போய் சுற்றுலாவை  நல்லபடியாக அனுபவித்து இருக்க வேண்டுமே என்றுதான் நாள் முழுவதும் என் நினைப்பு. 

மாலை நாலு மணி. வாசல் மணி அடித்தது. 'அம்மா' என உற்சாகமாகக் கத்திக் கொண்டே நுழைந்தவளைப் பார்க்கும் பொழுதே ஒரு நிம்மதி. நல்ல வேளை சுற்றுலா நன்றாகத்தான் இருந்தது போல. "சாப்பிட்டயாடி?" என்றேன். "ஒரு ஷவர்மா கடைக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. நல்லா இருந்ததும்மா. அதுக்கு அப்புறம் நாங்க ஒரு ஒட்டகப் பண்ணை போனோம்மா. அதில் ஒட்டகப் பாலில் டீ போட்டுக் குடுத்தாங்க. அதையும் வாங்கிக் குடிச்சேன். அப்போ அங்க ஒண்ணு பார்த்தேன்மா." 

காலையில் வீசிய புயலின் சுவடே இல்லாமல் அடைமழை பெய்வது போல நடந்ததை எல்லாம் சொல்ல தொடங்கினாள். 

"கண்ணை மூடு. உனக்கு ஒண்ணு வாங்கிக்கிட்டு வந்திருக்கேன்." 

கண்ணை மூடினேன். முகத்திற்குப் பக்கத்தில் எதையோ கொண்டு வந்தாள். வெனிலாவும் பாலும் கலந்த ஒரு ஐஸ்க்ரீம் வாசனை. "கண்ணைத் திறந்து பாரும்மா" என்ற அவள் உத்தரவு கிடைத்தது. திறந்தேன், பார்த்தேன். 

"ஒட்டகப் பாலில் பண்ணின சோப்பும்மா. அதை அழகா இப்படி ஒரு கயிற்றில் கட்டி இருங்காங்க பாரு. இதை அப்படியே பாத்திரம் கழுவுற இடத்துக்கு மேல கட்டினால் கை கழுவ வசதியா இருக்கும். இடத்தையும் அடைச்சுக்காது. எப்போ பாரு எதையாவது கொட்டிக்கிட்டே இருக்கியே உனக்கு சரியா இருக்கும்ன்னு வாங்கிக்கிட்டு வந்தேன்." 

அழுக்காகுமோ எனக் கவலை எல்லாம் நான் படவில்லை. அவள் பட்டாலும் பரவாயில்லை என்று வாரி அணைத்துக் கொண்டேன். 

3 comments:

said...

Beautiful story

said...

கோபமும. தாபமும் கதைபிரமாதம்

said...

Warm💚