Showing posts with label Berlin Zoo. Show all posts
Showing posts with label Berlin Zoo. Show all posts

Saturday, March 24, 2007

விலங்குகள் உரிமை என்றால் என்ன?

சமீபகாலமா நான் ஊடகங்களில் படித்து வரும் ஒரு விஷயம்தான் இந்த விலங்குகள் உரிமை (Animal Rights). இது பற்றி பல கட்டுரைகள், பதிவுகள், அப்பதிவுகளுக்கான எதிர்மறை கருத்துகள் என படித்து வருகிறேன். ஆனால் என்னால் இது பற்றி சரியாக புரிந்து கொள்ளவே முடியவில்லை. படிக்கும் பொழுது எது சரி எது சரியில்லை என்ற முடிவுக்கே வர முடியாத நிலமைதான். சரி, எல்லாக் கருத்தையும் மொத்தமா ஒரே இடத்தில் படிக்கலாமே என்றுதான் இந்த இடுகை. இதை எழுதத் தூண்டியது சமீபத்தில் படித்த இரு விஷயங்கள்.

முதலாவது இந்தத் தெரு நாய்கள் பற்றிய விபரம். பெங்களூர், கொடைக்கானல், கோவை, மணிப்பூர் எனப் பல இடங்களிலும் நாய்கள் கடித்ததால் பலர் இறந்த செய்திகள் வந்திருக்கிறது. இதன் காரணமாக தெரு நாய்களை கொன்றுவிட வேண்டும் எனச் சொல்லும் மக்கள் ஒரு பக்கம். தெரு நாய்களை கொல்வது தவறு. இந்த பிரச்சனைக்கு வேறுவிதங்களில்தான் முடிவு காண வேண்டும் எனச் சொல்லும் அணி மறுபுறம். மனேகா காந்தி, அமலா என பிரபலங்கள் பலர் இருக்கும் பக்கம் இது. நாய்களைக் கொல்வதே நல்லது என்ற கருத்தை முன் வைக்கும் சமீபத்திய பதிவு ஒன்று இங்கே. மற்ற அணியினரின் பதிவு எதுவும் சிக்கவில்லை. யாரேனும் சுட்டி கிடைத்தால் தாங்களேன்.

இது இப்படி இருக்க, சமீபத்தில் படித்த இந்த செய்தியைப் பாருங்கள். ஜெர்மனியில் பெர்லின் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உள்ள பனிக்கரடி ஒன்று கடந்த டிஸம்பரில் இரு குட்டிகளை ஈன்றது. ஆனால் என்ன காரணமோ அந்த தாய்க்கரடி இந்த குட்டிகளைப் பேணாமல் விட்டு விட்டது. அதனால் ஒரு குட்டி இறந்தும் விட்டது. அந்த மிருகக்காட்சி சாலையின் காப்பாளர்கள், மற்றொரு குட்டியை எடுத்து, அதற்கு க்நட் எனப் பெயரிட்டு, பாலூட்டிச் சீராட்டி வளர்க்கத் தொடங்கி இருக்கின்றனர். இது ஒரு பெரிய பிரச்சனையைக் கிளப்பி விட்டு இருக்கிறது.

விலங்குரிமை ஆர்வாளர்கள் இவர்கள் செய்தது தவறு என்றும் ஒரு காட்டு விலங்கை இந்த மாதிரி ஊட்டி வளர்ப்பது தவறென்றும் இந்தக் கரடியைக் கொன்றுவிட வேண்டும் எனவும் குரலெழுப்புகின்றனர். தாய்க்கரடியினால் கைவிடப்பட்ட குட்டி இறந்து போவதுதான் இயற்கை நியதி. அதில் மனிதனின் தலையிடல் கூடாது . அப்படி மனிதரால் வளர்க்கப்படும் குட்டியால் இயற்கையில் தாக்குப் பிடிக்க முடியாது என்று சொல்கிறார்கள். முன்பு இத்தாலியில் இம்மாதிரி வளர்த்து விடப் பட்ட கரடி ஒன்று தென் ஜெர்மனி பக்கம் வந்ததால் பீதியுற்ற மக்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக் காண்பிக்கின்றனர்கள் இவர்கள்.

ஆனால் இதனை மறுக்கின்றனர் இந்த குட்டியை வளர்ப்பவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும். "இந்த மாற்றுக் கருத்துக்களைக் கேட்டால் எனக்கு கோபம்தான் வருகிறது. அவர்கள் சொல்லுவதற்கு எந்த விதமான முக்கியவத்துமும் குடுக்க முடியாது" என்று சொல்கிறார் அந்த மிருகக் காட்சி சாலையின் வைத்தியர். பனிக்கரடிகள் இயற்கையிலேயே தனியாக வாழும் மிருகங்கள்தான் அதனால் இங்கு இது தனியாக வளர்வதில் எந்தத் தவறும் இல்லை. பனிக்கரடிகள் அருகி வரும் இந்த நேரத்தில் இந்த கரடியைக் கொண்டு மற்ற கரடிகளை கருத்தரிக்க வைக்கலாம் என்பது இவர்கள் வாதம்.

எனக்கு ஒண்ணும் புரியலைங்க. அவ்வளவு பிரச்சனைகளும் உயிர்ச்சேதமும் நடக்கக் காரணமாக இருக்கும் நாய்களைக் கொல்லக் கூடாதென்பதும் மிருகவள ஆதரவாளர்கள். நன்றாக இருக்கும் இந்த குட்டியைக் கொல்வதுதான் சரி என வாதாடுபவர்களும் இவர்கள்தான். நான் சொன்னா மாதிரி தனித்தனியாப் பார்த்தா எல்லாருமே சரின்னுதான் தோணுது. ஆனா எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு தெரியலையே. மக்கள்ஸ் நீங்க வந்து உங்க கருத்தைச் சொல்லுங்கப்பா.

க்நட் செய்திக்கும் படங்களுக்கும் நன்றி - msnbc.com

நாய்க்கடி பட உதவி அபிஅப்பா