இன்னிக்கு ஆணி புடிங்கறவங்க மத்தியில வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமா இருக்கு. அல்சர், எரிச்சல், வாயுத் தொல்லை எனப் பல விதமான பிரச்சனை இவர்களைத் தாக்குது. அளவுக்கதிகமான காபி, எழுந்து நடமாடாமல் இருக்கும் இடத்திலேயே வேலை என்றெல்லாம் காரணிகள் இருந்தாலும் மருத்துவர்கள் பெரும்பாலும் இந்த பிரச்சனைகளுக்குக் காரணமாகச் சொல்வது காலை உணவு உட்கொள்ளாததுதான். அதுனால இவங்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் சமையற்குறிப்பு. அதிகமான பொருட்கள் வேண்டாம், சுலபமாகச் செய்திடலாம், அதிக நேரம் ஆகாது, சுவையாகவும் இருக்கும். இதுக்கு மேல் என்ன வேணும். சந்தோஷமா செய்து சாப்பிடுங்க மக்கா!இன்னிக்கு பதிவெழுதறவங்க மத்தியிலே பலவிதமான பிரச்சனைகள் இருக்கு. ஜாதி மதம் போற்றும் / தூற்றும் பதிவுகள், வெள்ளீயம், காரீயம், இருத்தலீயம், பெரியாரீயம் னு பல ஈயம் தாங்கி வரும் பதிவுகள்னு நெறய வருது. இந்த ஹெவி பதிவெல்லாம் படிச்சு மனம் கனமாகிப்போயிடக் கூடாதுன்றதுக்காகத்தான் உப்புமா பதிவுகள் போட ஒரு ஸ்பெஷல் குறிப்பு. அதிகமா படிக்க வேண்டாம், சுலபமா செய்திடலாம், ஹிட்டும் வரும். இதுக்கு மேலே என்ன வேணும்? சந்தோஷமா உப்புமா கிண்ட ஆரம்பிங்க மக்கா!
| தேவையான பொருட்கள் | |||
| அவல் | இரண்டு கப் | கணினி | 1 |
| உருளைக்கிழங்கு | 1 | மானிட்டர் | 1 |
| வெங்காயம் | 1 | கீ போர்ட் | 1 |
| பச்சை மிளகாய் | 4 | ஈ கலப்பை | 1 |
| எலுமிச்சம் பழம் | 1 | லதா எழுத்துரு | 1 |
| மஞ்சள் பொடி | 1/2 தேக்கரண்டி | இணைய இணைப்பு | குறைந்தது 256Kbps |
| மிளகாய்ப் பொடி | 1 தேக்கரண்டி | பிரவுஸர் | 1 |
| கொத்துமல்லி | சிறிதளவு | கிண்டல் | தேவையான அளவு |
| கறிவேப்பிலை | சிறிதளவு | நையாண்டி | தேவையான அளவு |
| உப்பு | தேவையான அளவு | அறிவு பூர்வமான அணுகல் | 0.00000% |
| தாளிக்க | |||
| வேர்க்கடலை | 2 தேக்கரண்டி | ||
| உளுத்தம் பருப்பு | 1 தேக்கரண்டி | ||
| கடலைப் பருப்பு | 1 தேக்கரண்டி | ||
| எண்ணை | சிறிதளவு |
செய்முறை
1) வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், மாற்று போன்றவற்றை திறந்துவைத்துக்கொள்ளவும்.
2) அவலை நன்றாகக் தண்ணீரில் நனைத்து, களைந்து பின் நீரை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
அவற்றில் சூடான / அதிகம் பேர் பார்த்த / அதிக பின்னூட்டம் பெற்ற பதிவுகளை வடிகட்டி திறந்துவைத்துக்கொள்ளவும்.
3) களைந்தெடுத்த அவலில் உப்பும், மஞ்சள் பொடியையும் போட்டு நன்றாகப் பிரட்டி வைத்துக் கொள்ளவும்.
திறந்து வைத்த இடுகைகளில் இருந்து இன்றைய சூடான கருத்துக்களம் எது என தெரிந்து கொள்ளவும்.
4) வாணலியில் எண்ணெய்யை விட்டு அதில் தாளிக்க வைத்திருக்கும் சாமான்களையும் கறிவேப்பிலையையும் போட்டு நன்றாக வெடிக்க விடவும்.
இ கலப்பையைத் திறந்து, சூடான கருத்துக்களத்தைப் பற்றி ஆறிப்போன சில வரிகளில் தொடங்கவும்.
5) அதன் பின் வெட்டி வைத்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு நன்றாகக் கிளறவும்.
பிறகு உங்களுடைய சொந்தமான சில சொதப்பல் வரிகளையும் சேர்க்கவும்.
6) சில நிமிடங்களுக்குப் பிறகு உருளைக்கிழங்கினை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு ஒரு முறை முதல் 255 கேரக்டர்களைப் படித்துப் பார்க்கவும். பார்வையாளர்களை இழுக்கும் வன்மை இருக்கிறதா எனப் பார்க்கவும்.
7) காய்கறி நன்றாக வதங்கிய பின் அவலைப் போட்டு நன்றாக கிளறவும்.
பிறகு அற்புதமான ஒரு தலைப்பை பதிவுக்கு வைக்கவும். மிக முக்கியம், உப்புமா என்பது தலைப்பில் தெரிந்துவிடவே கூடாது.
8) 5 - 6 நிமிடங்கள் கிளறிய பின் அடுப்பை அணைத்திடவும்.
மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு, பப்ளிஷ் பொத்தானை அமுக்கிவிடவும்
9) சற்றே ஆறிய பின் எலுமிச்சை ரசத்தைச் சேர்த்து கிளறவும். மேலே கொத்து மல்லியைத் தூவிவிடவும்.
இடுகையைத் திறந்து, திரட்டிகளுக்குத் தகவல் அனுப்பவும்.
தடித்த அவல், மெல்லிய அவல் என இரு வகைகள் கிடைக்கும். மெல்லிய அவல் எளிதில் குழைந்து விடும். அதனால் தடித்த அவலே நல்லது. சாப்பிட்டு விட்டு நல்லா இருக்கான்னு சொல்லுங்க!ஹார்ம்லெஸ் உப்புமா, கைப்புள்ள உப்புமா என்று இரு வகைகள் உள்ளன. ஹார்ம்லெஸ் படித்துவிட்டு மனதிற்குள் திட்டிவிட்டு ஓடிப்போய்விடுவார்கள். கைப்புள்ள ஸ்டைலில் படித்தவர்கள் பின்னூட்டம் போட்டு சண்டை போட்டு ஆப்புக்கு உத்திரவாதம் அளிப்பார்கள். ஹார்ம்லெஸ் வகையே நல்லது. போட்டுவிட்டு ஹிட்டு ஏறியிருக்கா என்று சொல்லுங்க!
இதோட இன்றைய உப்புமா பதிவு இனிதே முடிந்தது.