Showing posts with label நட்சத்திரம். Show all posts
Showing posts with label நட்சத்திரம். Show all posts

Sunday, June 03, 2007

அந்தரிகி வந்தனமு!!

எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகிவந்தனமு! இந்நாட்டின் உயரிய மாந்தர்களுக்கு என் வணக்கங்கள்! (வேணுமுன்னா இந்த வலையுலகின் அப்படின்னு வெச்சுக்கலாமா?)

அப்பாடா!! ஒரு வாரம் ஆயிடுச்சுங்க. எனக்கே இப்படி இருந்தா உங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நமக்கெல்லாம் இந்த ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் போடறது எல்லாம் ஒத்து வரலைங்க. எழுத ஆரம்பிச்சு இவ்வளவு நாள் ஆச்சு. இன்னும் 100 போஸ்ட் கூட போடலை. இந்த சற்றுமுன் பார்ட்டிங்க எல்லாம் என்னடான்னு 83 நாட்களில் சகத்திரம் போஸ்டுங்களாம். நமக்கெல்லாம் அந்த ஸ்ட்ரைக் ரேட் ஒத்து வராது. இனிமே இந்த மாதிரி ஒரு நாளுக்கு ஒண்ணுன்னு எல்லாம் சொன்னா ஒரு தடவைக்குப் பத்து தடவை யோசிக்கணும்.

அதுவும் பின்னூட்டங்களை வெளியிடறதும், அதற்குப் பதில் சொல்லறதும், அடுத்த பதிவு எழுதறதும், வழக்கம் போல மத்தவங்க பதிவுகளுக்குச் சென்று உள்ளேன் ஐயா என்பதுமாக மூச்சு முட்டி விட்டது. இனி ஒரு நாள் கூட தாங்கியிருக்காது என்றே நினைக்கிறேன். நல்லபடியாக ஒரு வாரம் ஓட்ட முடிந்ததே பெரிய விஷயம்.

மீள் பதிவு பண்ணியாச்சு, பயணக் கட்டுரை எழுதியாச்சு, சமையல் குறிப்பு போட்டாச்சு, புதிர் போட்டி, வெண்பா விளையாட்டு எல்லாம் விளையாடியாச்சு. நேயர் விருப்பத்தில் மீதி இருப்பது ஒரு இசைப் பதிவுதான். கச்சேரியில் மங்களம் பாடுவது மாதிரி நம்ம நட்சத்திர வாரத்தின் இறுதி பதிவாக ஒரு இசைப் பதிவு போடலாம் என்று எண்ணிய போது வந்தது மங்களம் பாடுவதைப் போட்டே நிறைவு செய்து விடலாமே என்ற இந்த ஐடியா.

பொதுவாக நாம் 'நீ நாம ரூபமுலகு' எனத் தொடங்கும் மங்களத்தைத்தான் பாடிக் கேட்டு இருப்போம். சில கலைஞர்கள் வேறு மங்கள பாடல்கள் பாடிக் கேட்டதே இல்லை. ஆகவே நாமும் அந்த பாடலையே முதலில் கேட்போம். சௌராஷ்ட்டிர ராகம், ஆதி தாளத்தில் அமைந்த இந்த பாடல் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியகராஜரால் இயற்றப் பெற்றது.
Get this widget | Share | Track details


ஆனால் இது தவிர வேறு பல பாடல்கள் கூட ஒரு கச்சேரியின் இறுதியில் பாடப்பட்டு இருக்கின்றன. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் இது போன்று பல பாடல்களைப் பாடுவார் என நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். தற்பொழுது இளைஞர்களில் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் இப்படி வித்தியாசமான பாடல்களை தொடர்ந்து மங்களமாக பாடி வருகிறார்.



அவர் பாடியவைகளில் இருந்து எனக்குப் பிடித்த இரண்டு மங்களப் பாடல்களைக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலாவது பாடல் 'ராமசந்த்ராய ஜனக' எனத் தொடங்கும் குறிஞ்சி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த பத்ராசலம் இராமதாஸ் இயற்றிய பாடல். ஒரு கச்சேரியின் முடிவில் ஆரவாரமாக வரும் இந்த பாடலை கேட்கும் போதே ஒரு குஷி வரும் பாருங்கள்.

Get this widget | Share | Track details


அடுத்தது 'புஜகசாயினோ' எனத் தொடங்கும் யதுகுலகாம்போதி ராகம் ரூபக தாள பாடல். இப்பாடலை இயற்றியவர் சுவாதித் திருநாள் அவர்கள். ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போன்ற உணர்வினைத் தரும் இப்பாடலைக் கேட்டுப் பாருங்களேன்.


Get this widget | Share | Track details


அப்புறம் தமிழ்ப் பாடல்கள் இல்லையா என்று கேள்விகள் எல்லாம் வேண்டாமே என மத்யமாவதி ராகத்தில் அமைந்த நம் பாரதியார் பாடல் ஒன்று. வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு. வந்தே மாதரம். வந்தே மாதரம். வந்தே மாதரம்.

Get this widget | Share | Track details


இந்த மங்கள பாடல்களோடு நான் எனது நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன். இந்த வாய்ப்பைத் தந்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கும், வாழ்த்தி ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும், உப்புமா பதிவுக்கு உறுதுணையாக இருந்த பெனாத்தலாருக்கும் எனது நன்றிகள். அப்புறம் ரொம்ப முக்கியமாக இந்த வாரம் பூராவும் நம்மளை ஃப்ரீயாக (சிலேடை!!) விட்ட தங்கமணிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

இது போன்று இந்த நான்கு பாடல்களைப் போடப் போகிறேன் எனச் சொல்லி அனுமதி கேட்ட உடன் சிறிதும் யோசிக்காமல் தன் சம்மதத்தைத் தந்த கிருஷ்ணா அவர்களுக்கு என் நன்றிகள்.

பட உதவி : திரு. ஹரிஹரன் அவர்கள்.

Saturday, June 02, 2007

விடை தருவேன் நானே!!

விடுகதையா இந்த வாழ்க்கை என்ற கேள்வியோடு ஆரம்பித்த புதிர் விளையாட்டுக்கு இன்று விடை தருவேன் நானே என முடிவுரை! ரொம்ப நாள் கழித்து நான் போட்ட புதிர். வழக்கமாக வருபவர்கள் வருவார்களா? புதிதாக யாரேனும் வருவார்களா? புதிர் பதிவுகளுக்கு ஆதரவு இருக்குமா? என என்னை நானே பல கேள்விகள் கேட்டுக்கொண்டுதான் பதிவையே போட்டேன். எந்த விதமான மசாலாவு சேர்க்காமல் வீட்டுச் சமையல் போல் இருந்தால் அதற்கு உணவகங்களில் மதிப்பிருக்குமா என்ற பயம்தான்.

ஆனால் பாருங்கள் என்ன ஒரு ரெஸ்பான்ஸ். (இதற்கு எதிர்வினை என்பதைத் தவிர்த்து வேறு சொல்லே இல்லையா? அது ஒரு நெகடிவ் பீலிங்கை தருதே.) நான் உண்மையைச் சொல்லறேன். எதிர் பார்க்கவே இல்லை. அதிலும் நான் கஷ்டம் என நினைத்த கேள்விகளை சடாரென்று சிலர் கண்டுபிடித்தது, நான் உண்மையில் எல்லோரும் கஷ்டப்படுவார்கள் எனக் கணித்த குறிப்பில் அனேகமாக எல்லாரும் மாட்டியதிலும் ஆச்சரியம்தான்.

சரி முதலில் விடைகளைப் பார்த்துவிடலாம்.

அமடல்வா - ஆசையில் ஓர் கடிதம்
முதல் குறிப்பு. மிகவும் எளிதானது. அவா என்றால் ஆசை. மடல் என்றால் கடிதம். அவாவிற்குள் ஒரு மடல் இருப்பதால் ஆசையில் ஓர் கடிதம். (இலக்கணப்படி ஆசையில் ஒரு கடிதம்தானே வரவேண்டும்? அந்த படம் பேரு அதுதான். அதனால நானும் அதை அப்படியே கேட்டேன்.)

சகத்வன்திரம் - ஆயிரத்தில் ஒருவன்
சகத்திரம் என்றால் ஆயிரம். வடமொழியில் சகஸ்ரம் என்றால் ஆயிரம்தானே? இங்கிருந்து அங்க போச்சா அங்க இருந்து இங்க வந்ததான்னு தெரியாது. ஆனா ஆக மொத்தம் சகத்திரம் என்றால் ஆயிரம். ஆயிரத்திற்குள் ஒரு வன் இருப்பதால் ஆயிரத்தில் ஒருவன். மற்ற எல்லாவற்றையும் போட்ட பாலா இதற்கு கடைசி வரை கஷ்டப்பட்டதுதான் ஆச்சரியம்.

நெஞ்கல்யாணிசு - நெஞ்சில் ஓர் ராகம்
இது முதல் குறிப்பைப் போன்றதுதான். கல்யாணி என்று ஒரு ராகம் இருக்கிறதல்லவா? கல்யாணி என்றவுடம் பியர் ஞாபகத்துக்கு வந்து ஜில் ஜில் என எழுதியவர்கள் அனைவரும் என் பேரைச் சொல்லி நல்ல பியரா வாங்கிச் சாப்பிடுங்கள்.

விவரி - பச்சை விளக்கு
விவரித்தல் என்றால் விளக்குதல் என்றுதானே பெயர்? அந்த சிலேடையை வைத்துப் போட்ட குறிப்பு இது. பச்சைக் கலரில் எழுதப்பட்ட விளக்கு - பச்சை விளக்கு.

ஓவியலூசு - படகோட்டி
இது நெல்லை மாவட்டக்காரங்களுக்கு ரொம்ப எளிதாக இருந்து இருக்கும். (இல்லையா டுபுக்கு!) ஏனென்றால் இதில் முக்கியமான குறிப்பு அந்த வட்டார வழக்கில் இருக்கிறது. ஆனால் ரொம்பவே புழக்கத்தில் உள்ள சொல்தானே! ஓவியம் என்றால் படம். ஓவிய என்றால் பட. கோட்டி என்றால் பயித்தியம், லூசுதானே. ஆகவே பட கோட்டி.

சிரிப்ஏழைபு - ஏழையின் சிரிப்பில்
இது ரொம்ப நேரான விடைங்க. ஏழை in சிரிப்பில். சரிதானே ஜிரா.

தி ( போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்) - திருவிளையாடல் ஆரம்பம்
திருவிளையாடல் 'தி'யில்தானே ஆரம்பிக்கிறது!! இது கொஞ்சம் கடினமான குறிப்புதான். ஆனா போட்டவங்களைக் கேட்டுப் பாருங்க. அப்படி ஒண்ணும் புரியவே இல்லாத மாதிரி குறிப்பு எல்லாம் இல்லை. தனுஷ் படம் என்றால் நேராக பதில் வந்திருக்கும். அவ்வளவு எளிதான குறிப்பாகத் தர வேண்டாமே என்றுதான் இன்னும் பல படங்களில் நடித்து இருக்கும் பிரகாஷ்ராஜ் பெயரைப் போட்டது.

என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!) - உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்
இருப்பதிலேயே இதுதாங்க கடினமான குறிப்பு. அதே மாதிரி பாலாவைத் தவிர வேறு யாருமே இதனைப் போடவில்லை. பாலா, Hats of to you!! கமல் படம் இல்லைன்னு சொல்லியாச்சு. ஆனாலும் கமல் படம்தான் அதிகம் விடையாக வந்தது. கமல் படம் பேரு என்னங்க? உன்னால் முடியும் தம்பி. இங்க என்ன சொல்லி இருக்கேன்? என்னால் முடியும் தம்பி. ஆக மொத்தம் 'உன்' இடத்தில் நான் 'என்'னைத் தந்திருக்கிறேன். எனவே உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். சரியா? :)) இதில் தம்பி என்ற வார்த்தையைக் கொண்டு பரதன், இலக்குவன், ஸ்டாலின் எனப் பல தம்பிகள் வந்தார்கள்.

ஆ - உயிரெழுத்து
நேரான குறிப்புதான். அது ஏன் ஆ? ஏன் அ, இ, ஈ என எதையும் குறிப்பிடவில்லை? பெரிதாய் காரணம் ஒன்றும் கிடையாது. ஆவும் ஒரு உயிர்தானே? :)) இந்த சிலேடையும் அ.ஆவை வைத்து குழப்பலாம் என்ற ஒரு எண்ணமும்தான். அப்படிக் குழம்பியவர்களும் உண்டுதானே!

ஆலஜானிவாக்கர்யம் - குடியிருந்த கோயில்
நம்ம பசங்க எல்லாம் சரியாக விடை தந்த குறிப்பு இது! எளிதான குறிப்புதான். ஆலயம் என்றால் கோயில். இங்கு அதில் என்ன இருக்கிறது? ஜானிவாக்கர் என்ற குடி. ஆகவே குடியிருந்த கோயில்.

வேல் வினை - வேலுண்டு வினையில்லை
இருப்பதிலேயே எளிதான குறிப்பு இதுதான். வேல் இருக்கு வினை இல்லை. முதலில் நான் வெறும் வேல் என குறிப்பு தரலாம் என இருந்தேன். அப்படிச் செய்து இருந்தால் எத்தனை பேர் சரியாகப் போட்டு இருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் எல்லா குறிப்பையும் அதி கடினமாக ஆக்க வேண்டாமே என்றுதான் அந்த வினையையும் சேர்த்தது.

மீண்டும் மீண்டும் - மறுபடியும்
இதுவும் நேரான குறிப்பு. மீண்டும் என்றாலே மறுபடியும்தானே, எதற்கு இரு முறை தந்தது? மீண்டும் மீண்டும் என்ற சொல் வந்தால் அதுவே மறுபடியும் வருகிறது அல்லவா? :))

அட்சி இரதன் - கண்ணும் கண்ணும்
பழைய தமிழ் சொற்கள் இரண்டினைத் தந்து இருக்கிறேன். இரு சொற்களுமே கண் என்ற பொருள் கொண்டவை. மீன் போன்ற அட்சியைக் கொண்டவள் மீனாட்சி அல்லவா? இதைப் பத்தி டீச்சர் பதிவில் கொஞ்சம் வேறு மாதிரி பிரதீப் சொன்னதை ஞாபகமாக குறிப்பிட்டு இருந்தார் கதிரவன். இரதன் என்றாலும் கண்தான். ஆகவே கண்ணும் கண்ணும். இதுதான் விடை. அட்சியும் இரதனும் எனச் சொல்லி இருக்கலாம் எனச் சொல்லி இருந்தார் ஒருவர். ஆமாம், செய்து இருக்கலாம் தான்.

உயர்ளம்ந்த - உயர்ந்த உள்ளம்.
உயர்ந்த என்ற சொல்லின் உள் ளம் இருக்கிறது. ஆகவே உயர்ந்த உள்ளம். இதில் இல்லாத குழப்பங்களை எல்லாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு கஷ்டப்பட்டனர் சிலர்.

என்விதிகை - சட்டம் என் கையில்
போன குறிப்பு மாதிரிதான். விதி என்றால் சட்டம், அது என் கையில் உள்ளது. ஆகவே சட்டம் என் கையில்.

சஹானா ஆதி ரூபகம் - ராக தாளங்கள்
சஹானா ஒரு ராகம். ஆதி தாளம், ரூபக தாளம். இவை எல்லாத்தையும் ஒண்ணா எடுத்துப் போட்டா ராக தாளங்கள். அதாவது ஒரு இராகம் ப்ளஸ் அட்லீஸ்ட் இரண்டு தாளங்கள். வந்திருச்சா?

அஜீத் அடானா - ஒருதலை ராகம்
இது நம்மாளுங்க எல்லாரும் போடுவாங்கன்னு எதிர் பார்த்தேன். சிலவங்க மிஸ் பண்ணினது ஆச்சரியம்தான். 'தல' அஜீத். ஒரு தல. ஒருவரே தல! அடானா என்பது ஒரு ராகம். ஆக இது ஒரு தல ராகம் = ஒரு தலை ராகம்.

காததோழன்லி - நண்பனின் காதலி
நண்பன் in காதலி!! இதுக்கு மேல என்னத்தைச் சொல்ல?

இந்தியா - நம் நாடு
என்னங்க இதை போய் சிலவங்க மிஸ் பண்ணி இருக்கீங்க!! இந்திய நாடு நம் நாடு!!

இள இள இள (வேர்ட் ஆர்ட் - சர்க்கிள்) - இளவட்டம்
'இள' என்ற சொல்லால் ஆன வட்டம் ஆகவே இளவட்டம். இளமை ஊஞ்சல் ஆடுகிறது என சிலர் சொல்லி இருந்தார்கள். ஆனால் நான் எதிர்பார்த்த பதில் இளவட்டம்தான்.







வெற்றி பெற்றவர்கள்

இந்த போட்டியில் 20 குறிப்புகளையும் சரியாகச் சொன்ன ஒரே ஆள் நம்ம பாலராஜன் கீதா அவர்கள்தான். அவரை வெற்றியாளராக அறிவிப்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் பாலா. உங்களுக்கு இந்த போட்டியில் வெற்றி பெற்றதிற்காக ஒரு புதிர் புத்தகம் பரிசாகத் தரலாம் என இருக்கிறேன். நல்ல ரீபஸ் புத்தகமே தேடுகிறேன். அது கிடைக்கவில்லை என்றால் வேறு புதிர்கள் கொண்ட புத்தம் ஒன்றை அனுப்பி வைக்கிறேன்.

பல முறை நான் தொடர்ந்து தவறான விடை என்றாலும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் (அதாவது, மறுபடியும்!) வந்து தொடர்ந்து முயன்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மிக முக்கியமாக கோகிலவாணி கார்த்திகேயன் அவர்கள்.

கலந்து கொண்ட அனைவரின் மதிப்பெண்களை அறிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள்.

அனைவரும் இப்புதிர்களை ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Friday, June 01, 2007

சிறுவர் சிரிப்பே சிறப்பு! - (வெ.வ.வா)

உண்மையில் இந்த வெண்பா பதிவு மே 31ஆம் தேதியே வந்திருக்கணும். அன்றுதான் உலக புகையிலை மறுப்பு தினம். இது பற்றி நம்ம சாத்தாங்குளத்தாரும், நாமக்கல்லாரும் போட்டு இருக்கும் பதிவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். நான் கூட அதை முன் வைத்து ஒரு வெண்பா பதிவு போடலாமே என நினைத்தேன். ஆனால் சில பல காரணங்களினால் அது போட முடியாமல் போனது. அதற்கு பதிலாக எப்பொழுது போடலாம் என யோசித்த பொழுது குழந்தைகள் தினமான இன்றே போடலாமே எனத் தோன்றியதால் இந்தப் பதிவு.

இன்று ஜூன் 1, இன்றைக்குப் போய் குழந்தைகள் தினமென சொல்கிறானே இந்த கிறுக்கன் அது நவம்பர் 14ஆம் தேதி நேரு பிறந்தநாள் அன்றல்லவா வரும் என என்னை விநோதமாகப் பார்த்தீர்களானால் நீங்கள் மேற்கொண்டு கட்டாயம் படிக்க வேண்டும். ஏனென்றால் வேறு சில நாட்களைப் போல் இல்லாமல் குழந்தைகள் தினம் உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது. ஐநாவால் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படும் சர்வதேச குழந்தைகள் தினம், உலகின் பல்வேறு நாடுகளில் ஏப்ரல் தொடங்கி டிசம்பர் வரை வெவ்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது.

அதில் குறிப்பிடம் படியாக சைனா, செக் குடியரசு, வட கொரியா, ரஷ்யா, ஆர்மேனியா, அசர்பெய்ஜான், கசக்கிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், லட்வியா, லித்துவேனியா என பல மாஜி சோவியத் நாடுகள் உட்பட பெரும்பாலான கம்யூனிஸ்ட் நாடுகளில் ஜூன் ஒன்றாம் தேதியே குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இன்றும் ஜெர்மெனியின் சில இடங்களில் கம்யூனிச ஆட்சிக்காலத்தின் மிச்சங்களில் ஒன்றாக ஜூன் 1 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகிறது. போர்சுகலும் அதன் காலனியாக இருந்த நாடுகளிலும் கூட இன்றுதான் குழந்தைகள் தினம். கம்யூனிச நாடுகள் மட்டும்தான் என இல்லாமல் அதற்கு நேரெதிராக விளங்கும் அமெரிக்காவின் சில பகுதிகளில் கூட இன்று குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. ஆகவே இன்றும் குழந்தைகள் தினம்தான் நண்பர்களே!



குழந்தைகள் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அவர்களின் குமிழ் சிரிப்புதான். அது மட்டுமில்லை குழந்தைகள் கடவுளை ஒத்தவர்கள் எனவும் சொல்லக் கேட்டு இருக்கிறோம். குழந்தைக் கடவுள்கள் எனப் பார்த்தால் உடனடியாக நமக்கு ஞாபகத்திற்கு வருவது கண்ணனும் முருகனும்தான். அவர்களையும் ஆட்டத்திற்கு இழுத்து "சிறுவர் சிரிப்பே சிறப்பு! " என்ற ஈற்றடியைக் கொண்டு வெண்பா வடிக்கலாம் வா தொடரின் அடுத்த பகுதியாய் இந்த பதிவைப் போட்டு இருக்கிறேன்.

நட்சத்திர வாரமாய் இருப்பதால் இந்த ஒரு முறை மட்டும் வெண்பா இல்லாமல் புதுக் கவிதையாய் எழுதினாலும் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் ஈற்றடி கொடுத்த அடியாகவே இருத்தல் அவசியம். முதலில் நான் வெண்பாவாகவே எழுத முயல்கிறேன்.


திருமால் மருகன் தினந்தோள் முருகன்
குருவாய் அமர்ந்த குமரன் அருளால்

கருவறை தாண்டிக் கடவுளாய் வந்த

சிறுவர் சிரிப்பே சிறப்பு!


பட உதவி: ஆனந்த்

சில விவாகரத்துக் குறிப்புகளும் ஜீவனாம்ச கேள்விகளும்...

இப்படித் தமிழ்மணத்தில் ஊறிப் போய் கிடந்தால் வேற என்ன நடக்கும், இதெல்லாம் உனக்குத் தேவைதான் என முனகிக் கொண்டு வரும் நண்பர்களே. என் திருமண வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது. கவலை வேண்டாம்!! இது என்னைப் பற்றிய பதிவு இல்லை. பொதுவானதொரு பதிவுதான்!! சமீபத்தில் படித்த சில செய்திகளால் தூண்டப்பட்டே இந்த பதிவு.

மூன்று பாகங்கள் கொண்ட பதிவு இது. பாகம் ஒன்று சற்றே சுவையான செய்தித் தொகுப்பினை பகிர்ந்து கொள்வது. பாகம் இரண்டும் மூன்றும் விவாதக் களம். உங்க கருத்தை கட்டாயம் வந்து சொல்லுங்க.

விவாகரத்துக் காரணங்கள் - ஒரு சுவையான தொகுப்பு

Marriage is an institution அப்படின்னு சொல்லறவங்க பல பேரு. Wedding is a word, Marriage is a sentence! அப்படின்னு சொல்லறவங்க கூட்டம் அதிகம். நம்ம சமூகத்தில் திருமண பந்தம் புனிதமானது எனக் கருதப்படுகிறது. அதற்கு நாம் தரும் மரியாதை அலாதிதான். ஆனால் அதனை ஒரு விளையாட்டாக எண்ணுபவர்களும் எத்தனையோ பேர். பிரிட்னி ஸ்பியேர்ஸ் கூட குடிபோதையில் நண்பன் ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு உடனே விவாகரத்து செய்ததைப் படித்து இருப்பீர்களே. அந்த வகையில் விவாகரத்து செய்வதற்கான காரணங்கள் பற்றி சமீபத்தில் படிக்க நேர்ந்தது. முதலில் அதனைப் பாருங்களேன்.

கெண்டக்கி மாநிலம்: "நான் பர்கர் சாப்பிடும் பொழுது அதிலுள்ள வெங்காயத்தை என் மனைவியைக் கேட்காமல் எடுத்துவிட்டு சாப்பிட்டால் அவள் என்னை அடிக்கிறாள். அதனால் எனக்கு விவாகரத்து தேவை."

கனெக்ட்டிகட் மாநிலம்: "என் மனைவி எழுதிய துண்டு சீட்டு இது - ' நான் சீட்டாட நண்பர்கள் வீட்டுக்குச் செல்கிறேன். வர நேரமாகும். உங்கள் இரவு உணவுக்கான குறிப்பு சேனல் இரண்டில் ஏழு மணிக்கு வரும்.' நான் ஏன் விவாகரத்து கோரக் கூடாது!!"

தென் கரோலினா: காது கேளாத ஒருவர் தன் விவாகரத்து காரணமாகச் சொல்வது -" என் மனைவி என்னை மிகவும் தொண தொண எனப் பேசி நச்சரிக்கிறாள். அவள் அப்படி நச்சரிப்பது சைகை மொழியில்!"

காலராடோ: ஒரு பெண் சொல்வது " அவருடைய பழைய காதலியின் வீட்டைத் தாண்டிச் செல்லும் பொழுது எல்லாம் காரில் என் தலையை அழுத்திக் கீழே தள்ளி, அவருடன் யாரும் இல்லாதது போல ஒரு தோற்றத்தை உண்டு பண்ணுகிறார். "

ஜியார்ஜியா: இங்கு ஒரு பெண் தன் கணவரை விவாகரத்து செய்த காரணம். அவர் அதிக நேரம் வீட்டில் செலவழிப்பதும், அவளிடம் அளவுக்கு மீறி அன்பு மழை பொழிவதும்தான் காரணமாம். He was much too affectionate!!!

நியூஜெர்ஸி: "என் கணவர் எப்பொழுது மடிக்கணினியோடே இருக்கிறார். கண்ட கண்ட நேரத்தில் எழுந்து மின்னரட்டை அடிக்கிறார். கணினி முன் அமர்ந்திருக்கும் பொழுது திடீர் திடீரென சிரிக்கிறார் அல்லது கோபப்படுகிறார். அவரின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றால் எங்கே பின்னூட்டம் என உளறுகிறார். மருத்துவர்கள் இவர் தீவிர தமிழ்மணமாட்டிஸ் வியாதிக்கு ஆளாகி இருப்பதாகச் சொல்கிறார்கள்." - இது மட்டும் உண்மை இல்லைங்க. வெறும் கற்பனைதான். ஹிஹி...

ஜீவனாம்சம் - சில கேள்விகள்

இப்படி எல்லாம் கண்ட கண்ட காரணத்துக்கு எல்லாம் இங்க விவாகரத்து நடக்குது. Alimony எனப்படும் ஜீவனாம்ச தொகை பலருக்கு வாடகைக்கு அடுத்து இருக்கும் பெரிய செலவாகவே இருக்கிறது. இதனைத் தருபவர்களுக்கு வரிச்சுமையில் சிறுது குறைவதும், பெறுபவர்கள் இதற்கும் சேர்த்து வரி கட்ட வேண்டும் என இது ஒரு பெரிய டாபிக்காகவே ஆகிவிட்டது. பெரும்பாலான சமயங்களில் (99%?) ஆண்கள் பெண்களுக்குத் தருவதாகவே இந்த ஜீவனாம்சத் தொகை இருக்கிறது. Child Support எனப்படும் குழந்தைகளைப் பராமரிக்கப் பட வேண்டிய தொகை யாரிடம் குழந்தை இருக்கிறதோ அவர்களுக்கு மற்றவர் தரும் தொகையாக இருக்கிறது என்ற அளவில் புரிகிறது.

ஆனால் இன்று மற்ற எல்லா வகைகளிலும் சமத்துவம் பேசும் பெண்கள் இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார்கள்? தனது சொந்தக் காலில் நிற்கக்கூடிய ஒரு பெண்ணிற்கு அவளது மாஜிக் கணவன் ஜீவனாம்சம் தரத்தான் வேண்டுமா? ஒரு பெண் தனியாகத் தன் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு என்ன அளவுகோல்? இதனை யார் முடிவு செய்வார்கள்? இதலாம் பற்றி பேசலாம் வாருங்கள்.

ஜீவனாம்சம் - ஒரு புதிய பிரச்சனை

இவ்வளவு எல்லாம் போதாதென்று இப்பொழுது ஒரு புதிய குழப்பம் நீதிமன்றப் படியேறி இருக்கிறது. விவாகரத்தான ஒரு கணவன் தன் மாஜி மனைவிக்கு ஜீவனாம்சம் தந்து கொண்டிருக்கிறார். இந்தப் பெண் ஒரு நாள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாறி விடுகிறார். அப்பொழுது அந்த கணவன் தான் இனி ஜீவனாம்சம் தரத் தேவையில்லை என நிறுத்தி விடுகிறார். ஜீவனாம்சம் பெறுபவர் தன் மாஜி கணவர் தொடர்ந்து ஜீவனாம்சம் தர வேண்டும் என நீதிமன்ற படி ஏறுகிறார்.

தன் மாஜி மனைவி தற்பொழுது ஒரு பெண்ணாக இல்லை. அவர் ஒரு ஆணாக மாறி விட்டதால், தான் ஜீவனாம்சம் தர வேண்டியது இல்லை. அவர் வேறு பால், வேறு பெயர் கொண்ட வேறு ஒரு நபராகி விட்டார். இவருக்கும் எனக்கும் எந்த விதமான உறவும் இருந்ததில்லை. ஆகையால் தான் இனி ஜீவனாம்சம் தரத் தேவையில்லை என்பது மாஜி கணவரின் வாதம். தான் இறந்தாலோ அல்லது மறுமணம் புரிந்தாலோதான் ஜீவனாம்சம் தருவதை நிறுத்த வேண்டும். இவை இரண்டும் நடக்கவில்லை. ஜீவனாம்சம் தருவது பழைய உறவுக்காக. தனது பாலின மாற்ற சிகிச்சையால் அந்த உறவு இல்லை என ஆகப் போவதில்லை. ஆகையால் ஜீவனாம்சம் தொடர்ந்து தர வேண்டும் என்பது எதிர் வாதம். நீதிமன்றங்கள் இது வரை தீர்ப்பு வழங்கியதாகத் தெரியவில்லை.

இப்படிப் பார்த்தால் இது சரியா இருக்கு. அப்படிப் பார்த்தால் அது சரியா இருக்கு. நீங்க என்ன சொல்லறீங்க?

Wednesday, May 30, 2007

விடுகதையா இந்த வாழ்க்கை?!!

போன பதிவில் கமலைப் பத்தி சொல்லிட்டு அப்படியே விட்டுட்டா ரஜினி ரசிகர்கள் சும்மா விட்டுடுவாங்களா? அதான் ரஜினி பட பாட்டு ஒண்ணைத் தலைப்பா வெச்சாச்சு. விடுகதை அப்படின்னு சொன்ன உடனே சிவாஜி ரிலீஸ் டேட் பத்திதான் பதிவுன்னு தப்புக் கணக்குப் போடக் கூடாது. அதெல்லாம் பத்திப் பேச நான் என்ன கடவுளா என்ன? சரி போகட்டும்.

இந்தப் பதிவு வந்து ரீபஸ் என்ற புதிர் பற்றி. நான் வலையுலகில் வந்த புதுசுல எழுத மேட்டர் இல்லாம போட ஆரம்பிச்ச விஷயம் இது. நட்சத்திர வாரத்தில் கட்டாயம் போடணும் அப்படின்னு ஏகப்பட்ட பிரஷர். அதனால நம்ம ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி மீண்டும் ரீபஸ் பதிவு. அப்போ எல்லாம் நம்ம பக்கம் வராதவங்களுக்காக ரீபஸ் பற்றி ஒரு சிறு விளக்கம்.

ஒரு வார்த்தையையோ அல்லது ஒரு சொற்றொடரையோ பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் வேறொரு வார்த்தையாலோ அல்லது ஒரு படத்தாலோ குறிப்பிடுவதே ரீபஸ் புதிராகும். ரீபஸ் என்றால் லத்தீனில் பொருட்களின் மூலம் என்று அர்த்தமாம். பொருளாலும் (meaning) பொருட்களாலும் (things) ஒரு சொல்லையோ சொற்றொடரையோ குறிப்பிடுவதுதான் ரீபஸ். இதற்கு மேலும் ரீபஸ் பற்றி படிக்கவும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கவும் இங்க போயிட்டு வாங்க.

ரீபஸ் அப்படின்னா என்னான்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா? இப்போ இந்த வாரத்து புதிர்கள். வழக்கம் போல விடைகள் எல்லாம் தமிழ்த் திரைப்படப் பெயர்கள்தான். அதுவும் இங்க இருந்து எடுக்கப்பட்ட பெயர்கள்தான். விடைகளை நீங்க பின்னூட்டமா போடுங்க. பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படாது. விடைகள் சரியா தவறா என்பது மட்டும் சொல்லப் படும்.

போன தடவை எல்லாம் ரொம்ப எளிதாக இருப்பதாக கலந்து கொண்டவர்கள் சொன்னதால் இந்த முறை புதிர்கள் கொஞ்சம் கடினமானவைதான். புதிதாகத் தெரிந்து கொள்ளலாம் என, சில புழக்கத்தில் இல்லாத சொற்களையும் இங்கு தந்துள்ளேன். சொல் ஒரு சொல் நண்பர்கள் மன்னிப்பார்களாக. ஆட்டத்தை ஆரம்பிப்போமா?

இனி புதிர்கள்
  1. அமடல்வா
  2. சகத்வன்திரம்
  3. நெஞ்கல்யாணிசு
  4. விவரி
  5. ஓவியலூசு
  6. சிரிப்ஏழைபு
  7. தி ( போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்)
  8. என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!)
  9. ஆலஜானிவாக்கர்யம்
  10. வேல் வினை
  11. மீண்டும் மீண்டும்
  12. அட்சி இரதன்
  13. உயர்ளம்ந்த
  14. என்விதிகை
  15. சஹானா ஆதி ரூபகம்
  16. அஜீத் அடானா
  17. காததோழன்லி
  18. இந்தியா

பழைய புதிர்ப் பதிவுகளைப் பார்க்க விரும்புவோர்க்காக அந்த சுட்டிகள்.

  1. புதிர்ப் பதிவு 1
  2. புதிர்ப் பதிவு 2
  3. புதிர்ப் பதிவு 3
  4. புதிர்ப் பதிவு 4

கமலின் வலி எனக்குப் புரிகிறது!

இன்னிக்கு தமிழ்படங்கள் எடுத்துக்கிட்டா பெரும்பாலான படங்கள் வந்து இந்த பார்முலா படங்கள் எனச் சொல்லக்கூடிய ஒரு சூத்திரத்திற்குள் அடங்கிவிடுகிறது. அதாவது ஒரு ஹீரோ+ அம்மா அல்லது தங்கை செண்டிமெண்ட்+ ஒரு பணக்கார ஹீரோயின்+ அவளோட கெட்ட அப்பா+ 5 பாட்டு + 4 சண்டை + ஒரு பஞ்ச் டயலாக் இதுதானே அந்த சூத்திரம். அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை இதையே அரைச்சு அரைச்சு தியேட்டர் பக்கம் போனாலே புளிச்ச வாடை அடிக்குது.

இதுலேர்ந்து கொஞ்சம் வித்தியாசமா படங்கள் தர முயற்சி பண்ணற, விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரில் முக்கியமான ஒருவர் நம்ம கமல். ஆனாப் பாருங்க அந்த மாதிரி முயற்சிகள் பெரும்பாலும் முழுதும் உள் வாங்கப் படறது இல்லை. பெரும்பாலான படங்கள் தோல்வியைத் தழுவுது, சில வெற்றிப் படங்கள் ஆனாலும் அதில் அவர் கவனம் எடுத்து செதுக்கி இருக்கும் காட்சிகள் கண்ணில் படாமலேயே போகுது. உதாரணத்துக்குப் பார்த்தீங்கன்னா, அன்பே சிவம் படம் ஓரளவு வெற்றி பெற்ற படம்தான். ஆனா அதில் அவர் சிரமம் எடுத்து செதுக்கி இருக்கும் சில காட்சிகள் எல்லாம் நம்ம கண்ணில் படவே இல்லை. அவர் வந்து அந்த ஒரிசா ஹோட்டலில் தரையில் படுத்து இருப்பார். அப்போ பார்த்தீங்கன்னா அவரோட ஒரு கால் வந்து மற்றொரு காலை விட குட்டையாகத் தெரியும். இதை நாம எத்தனை பேர் பார்த்து இருப்போம். ஆனா அவ்வளவு உழைப்பு இருக்கு அதற்குப் பின்னாடி.


ஒருத்தரே ஒருத்தர் பார்த்துப் பாராட்டினாலும் போதும். அதுதான் எனக்கு சந்தோஷம் என அவர் சொன்னதாகப் படித்து இருக்கேன். தான் சரியானதைத்தான் செய்கிறோம் என்பது தெரிந்தும், அதற்காக கடினமாக உழைத்தும், அது போய்ச் சேர வேண்டிய அளவிற்குப் போய் சேராதது எவ்வளவு வலியைத் தரும். அதுவும் ஒரு முறை இல்லை. மீண்டும் மீண்டும். இப்படி தொடர்ந்து செய்வதற்கு எவ்வளவு மனத்துணிவு இருக்க வேண்டும். உண்மையில் இவர் நமக்குக் கிடைத்த பொக்கிஷம். இவருடைய முயற்சிக்கு ஆதரவு தந்து இவரை மீண்டும் பார்முலா படங்கள் பக்கம் போகாமல் இருக்கச் செய்வது நம் கடமை.

என்னடா இது ஓவட்டோஸ் புலம்பலா இருக்குன்னு பார்க்கறீங்களா? பின்ன என்னங்க, ரொம்பவே மண்டையை உடைச்சுக்கிட்டு ஒரு பதிவு போட்டா, அந்த ஐடியா சரியாகப் போய் சேராமல் இருந்தால் அவரு படம் ப்ளாப்பாகுறதுதான் ஞாபகத்துக்கு வருது.

உப்புமா பதிவு ஒண்ணு போட்டேன். அதில் வெளிப்படையா தெரியறது ஒரு லேயர், அப்புறம் உள்குத்து ஒரு லேயர் என பல லேயரில் வைத்து ஒரு பதிவு போட்டா முதல் லேயரை மட்டும் பாத்துட்டு இதெல்லாம் ஒரு உப்புமாவான்னு கேட்டுட்டு போயிடறீங்க. அதுவும் கேப், பார்மேட்டிங், வெள்ளெழுத்து, ஹைலைட் அப்படின்னு எவ்வளவுதான் ஹிண்ட் தரது. இப்போ சொல்லறேன் கேட்டுக்குங்க.

மக்களே, அந்த பதிவில் பார்மேட்டிங் பிரச்சனைகள் இல்லை. வெள்ளைக் கலரில் சில பத்திகள் எழுதப் பட்டுள்ளன. முழு பதிவையும் ஹைலைட் செய்தீர்களானால் அந்த எழுத்துகள் தெரியும். பெனாத்தலாரின் குறிப்புகள் அவை. படித்து மகிழுங்கள்.


அப்பாடா. முடியலைடா சாமி!!

டிஸ்கி: வலையுலக வரலாற்றில் முதன் முறையாக என் பதிவுக்கு பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்திருக்கிறேன். இது 1005க்கு பயந்து என வரும் வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் பின்னூட்டங்கள் போடப்பட வேண்டிய இடம் இது.

Tuesday, May 29, 2007

நட்சத்திர உப்புமா (அ) பெனாத்தலாருக்கு சமர்ப்பணம்

எல்லாரும் வித்தியாசமான பல விஷயங்கள் தரும் இந்த வாரத்தில் நமக்கென்று இருக்கற ஸ்டைலை விட்டு விடலாமா? அதனால மக்களே இந்த வாரம் நட்சத்திர உப்புமா! உப்புமா பதிவு என்பதால் நம்ம உப்புமா குரு, மின்னொளி மன்னன் பெனாத்தலாரிடம் அனுப்பி சரி பார்க்கச் சொன்னேன். அவர் தந்த உப்புமா குறிப்புகள் இங்க இருக்கு. தேடிப் பார்த்தீங்கன்னா கிடைக்கும். அப்படி கிடைக்கலைன்னா கேளுங்க சொல்லறேன். இனி பதிவு.

இன்னிக்கு ஆணி புடிங்கறவங்க மத்தியில வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமா இருக்கு. அல்சர், எரிச்சல், வாயுத் தொல்லை எனப் பல விதமான பிரச்சனை இவர்களைத் தாக்குது. அளவுக்கதிகமான காபி, எழுந்து நடமாடாமல் இருக்கும் இடத்திலேயே வேலை என்றெல்லாம் காரணிகள் இருந்தாலும் மருத்துவர்கள் பெரும்பாலும் இந்த பிரச்சனைகளுக்குக் காரணமாகச் சொல்வது காலை உணவு உட்கொள்ளாததுதான். அதுனால இவங்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் சமையற்குறிப்பு. அதிகமான பொருட்கள் வேண்டாம், சுலபமாகச் செய்திடலாம், அதிக நேரம் ஆகாது, சுவையாகவும் இருக்கும். இதுக்கு மேல் என்ன வேணும். சந்தோஷமா செய்து சாப்பிடுங்க மக்கா!

இன்னிக்கு பதிவெழுதறவங்க மத்தியிலே பலவிதமான பிரச்சனைகள் இருக்கு. ஜாதி மதம் போற்றும் / தூற்றும் பதிவுகள், வெள்ளீயம், காரீயம், இருத்தலீயம், பெரியாரீயம் னு பல ஈயம் தாங்கி வரும் பதிவுகள்னு நெறய வருது. இந்த ஹெவி பதிவெல்லாம் படிச்சு மனம் கனமாகிப்போயிடக் கூடாதுன்றதுக்காகத்தான் உப்புமா பதிவுகள் போட ஒரு ஸ்பெஷல் குறிப்பு. அதிகமா படிக்க வேண்டாம், சுலபமா செய்திடலாம், ஹிட்டும் வரும். இதுக்கு மேலே என்ன வேணும்? சந்தோஷமா உப்புமா கிண்ட ஆரம்பிங்க மக்கா!





தேவையான பொருட்கள்
அவல்இரண்டு கப் கணினி 1
உருளைக்கிழங்கு 1 மானிட்டர் 1
வெங்காயம்1 கீ போர்ட் 1
பச்சை மிளகாய்4 ஈ கலப்பை 1
எலுமிச்சம் பழம்1 லதா எழுத்துரு 1
மஞ்சள் பொடி1/2 தேக்கரண்டி இணைய இணைப்பு குறைந்தது 256Kbps
மிளகாய்ப் பொடி1 தேக்கரண்டி பிரவுஸர் 1
கொத்துமல்லிசிறிதளவு கிண்டல் தேவையான அளவு
கறிவேப்பிலைசிறிதளவு நையாண்டி தேவையான அளவு
உப்புதேவையான அளவு அறிவு பூர்வமான அணுகல் 0.00000%
தாளிக்க
வேர்க்கடலை2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு1 தேக்கரண்டி
எண்ணைசிறிதளவு


செய்முறை

1) வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், மாற்று போன்றவற்றை திறந்துவைத்துக்கொள்ளவும்.

2) அவலை நன்றாகக் தண்ணீரில் நனைத்து, களைந்து பின் நீரை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
அவற்றில் சூடான / அதிகம் பேர் பார்த்த / அதிக பின்னூட்டம் பெற்ற பதிவுகளை வடிகட்டி திறந்துவைத்துக்கொள்ளவும்.

3) களைந்தெடுத்த அவலில் உப்பும், மஞ்சள் பொடியையும் போட்டு நன்றாகப் பிரட்டி வைத்துக் கொள்ளவும்.

திறந்து வைத்த இடுகைகளில் இருந்து இன்றைய சூடான கருத்துக்களம் எது என தெரிந்து கொள்ளவும்.

4) வாணலியில் எண்ணெய்யை விட்டு அதில் தாளிக்க வைத்திருக்கும் சாமான்களையும் கறிவேப்பிலையையும் போட்டு நன்றாக வெடிக்க விடவும்.

இ கலப்பையைத் திறந்து, சூடான கருத்துக்களத்தைப் பற்றி ஆறிப்போன சில வரிகளில் தொடங்கவும்.

5) அதன் பின் வெட்டி வைத்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு நன்றாகக் கிளறவும்.

பிறகு உங்களுடைய சொந்தமான சில சொதப்பல் வரிகளையும் சேர்க்கவும்.

6) சில நிமிடங்களுக்குப் பிறகு உருளைக்கிழங்கினை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு ஒரு முறை முதல் 255 கேரக்டர்களைப் படித்துப் பார்க்கவும். பார்வையாளர்களை இழுக்கும் வன்மை இருக்கிறதா எனப் பார்க்கவும்.

7) காய்கறி நன்றாக வதங்கிய பின் அவலைப் போட்டு நன்றாக கிளறவும்.

பிறகு அற்புதமான ஒரு தலைப்பை பதிவுக்கு வைக்கவும். மிக முக்கியம், உப்புமா என்பது தலைப்பில் தெரிந்துவிடவே கூடாது.

8) 5 - 6 நிமிடங்கள் கிளறிய பின் அடுப்பை அணைத்திடவும்.
மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு, பப்ளிஷ் பொத்தானை அமுக்கிவிடவும்

9) சற்றே ஆறிய பின் எலுமிச்சை ரசத்தைச் சேர்த்து கிளறவும். மேலே கொத்து மல்லியைத் தூவிவிடவும்.

இடுகையைத் திறந்து, திரட்டிகளுக்குத் தகவல் அனுப்பவும்.

தடித்த அவல், மெல்லிய அவல் என இரு வகைகள் கிடைக்கும். மெல்லிய அவல் எளிதில் குழைந்து விடும். அதனால் தடித்த அவலே நல்லது. சாப்பிட்டு விட்டு நல்லா இருக்கான்னு சொல்லுங்க!

ஹார்ம்லெஸ் உப்புமா, கைப்புள்ள உப்புமா என்று இரு வகைகள் உள்ளன. ஹார்ம்லெஸ் படித்துவிட்டு மனதிற்குள் திட்டிவிட்டு ஓடிப்போய்விடுவார்கள். கைப்புள்ள ஸ்டைலில் படித்தவர்கள் பின்னூட்டம் போட்டு சண்டை போட்டு ஆப்புக்கு உத்திரவாதம் அளிப்பார்கள். ஹார்ம்லெஸ் வகையே நல்லது. போட்டுவிட்டு ஹிட்டு ஏறியிருக்கா என்று சொல்லுங்க!

இதோட இன்றைய உப்புமா பதிவு இனிதே முடிந்தது.

Monday, May 28, 2007

துளசி டீச்சருக்கு சமர்ப்பணம்!

முகவுரை

பதிவெழுத ஆரம்பிச்ச புதுசில் என்ன எழுதணும் அப்படின்னு தெரியாம முழிச்ச நேரங்கள்தான் அதிகம். (ஆமாங்க, கட் பேஸ்ட் விளையாட்டெல்லாம் அப்போ தெரியாது.) அப்போ நம்ம டீச்சர்தான் ஒரு முக்கியமான அறிவுரை தந்தாங்க. கண்ணையும் காதையும் திறந்து வெச்சுக்கோ, உன்னை சுத்தி நடக்கிற விஷயங்களை பாரு. எத்தனை பதிவுகள் எழுத வேண்டுமானாலும் மேட்டர் கிடைக்கும் அப்படின்னு சொன்னாங்க. அதைத்தான் இன்னைக்கு வரை பின்பற்றிக்கிட்டு வரேன். அதனாலதான் நான் நட்சத்திரமா இருக்கும் இந்த வாரத்தில் அவங்களுக்கு முதல் பதிவு சமர்ப்பணம்.

அது மட்டுமில்லை. இன்னிக்கு பயணக்கட்டுரை அப்படின்னு சொன்னா உடனே அவங்க ஞாபகம்தான் நமக்கெல்லாம் வரும். இதுவும் ஒரு பயணக் கட்டுரை என்பதாலும் அவர்களுக்கு சமர்ப்பணம். ஒரு விஷயத்தில் அவங்களை மிஞ்சிட்டோமில்ல. ஏன்னா இது ஆன் லொகேஷன் பதிவு. டீச்சர், இதுக்கு என்ன சொல்லறீங்க.

முகவுரை முற்றிற்று.
____________________________________________________________________

இந்த வாரயிறுதி அமெரிக்காவில் ஒரு நீண்ட வாரயிறுதி. இந்த திங்கள்கிழமை மெமோரியல் தினம் என போரில் உயிர்நீத்தோரைப் பெருமைப் படுத்தும் வகையில் விடுமுறை அறிவிக்கப்பட்டு கொண்டாடப் படுகிறது. நல்ல வெயில் வந்தபின் வரும் முதல் நீண்ட வாரயிறுதி என்பதால், அனைவரும் வெளியூர் சென்று கொண்டாடப்படும் நாட்களாகவே இருக்கிறது. நாங்களும் ஒரு நண்பர் குடும்பத்துடன் நியூயார்க் மாநிலத்தில் லேக் ஜியார்ஜ் என்ற இடத்திற்கு சென்று வந்தோம்.




நியூயார்க் மாநிலத்தின் வடப்பகுதியில் இருக்கும் இந்த ஏரி அடிராண்டேக் என்ற மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்து இருக்க்கிறது. கிட்டத்தட்ட 30,000 ஏக்கர் பரப்பளவும் 300 அடி வரை ஆழமும் கொண்டது இந்த ஏரி. இதன் தென்முனையில் இருக்கும் ஒரு கிராமம்தான் லேக் ஜியார்ஜ் கிராமம். இந்த வாரயிறுதியில் இந்தியர்களால், அதுவும் குறிப்பால் தமிழர்களால் முற்றுகை இடப்பட்டது என்றால் மிகையே இல்லை. அவ்வளவு தமிழர்கள்.

சுற்றுலா வரும் விருந்தினர்களையே நம்பி இருக்கும் கிராமம். ஊர் முழுவதும் ஹோட்டல்கள்தான். எல்லா விதமான உணவகங்கள், ஊரின் மையப்பகுதியில் குழந்தைகளும் பெரியவர்களும் விளையாடி களிக்க கேளிக்கை இடங்கள், பல விதமான வீரவிளையாட்டுகள் என பொழுது போக்குவதற்காகவே இருக்கும் ஊர். வார நாட்களில் இவ்வளவு விருந்தினர்கள் இல்லாமல் எப்படி இருக்கும் என நினைத்தே பார்க்க முடியவில்லை.

இது மட்டுமில்லாமல், ஒரு பழைய கோட்டையும் இருக்கிறது. கோட்டை என்றால் உடனே நம்மூர் கோட்டை மாதிரி எல்லாம் எண்ணிப் பார்க்காதீர்கள். நம்மூர் அரசர்கள் எல்லாம் அவர்கள் குழந்தைகளுக்கு விளையாட கட்டிக் கொடுக்கும் கோட்டைகள் கூட இதை விடப் பெரிதாக இருக்கும். வில்லியம் ஹென்றி கோட்டை எனப் பெயர் கொண்ட இது இப்பொழுது ஒரு மியூசியமாகவும் ஒரு ஹோட்டலாகவும் இருக்கிறது. செவ்விந்தியர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் சண்டைகள் நடந்த இடம் இது. இன்று இதனை ஒரு டிராமா போல் செய்து காண்பிக்கிறார்கள். சிறார்களுக்கு அந்த வீரர்களைப் போன்று உடையணிவித்து, அவர்கள் படையில் சேர்ந்ததுக்காக ஒரு சான்றிதழும் தருகிறார்கள். (எல்லாவற்றிற்கும் தனித்தனி கட்டணம் உண்டு.)



நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் இடமில்லாமல் போய் எங்களை இந்த கோட்டையில் இருக்கும் ஹோட்டலுக்கு மாற்றிவிட்டார்கள். ஏரிக்கரையிலேயே அருமையான ஹோட்டல். அறையில் இருந்து பார்த்தால் ஏரியும் அதனைச் சுற்றியுள்ள சிறுவனமும் தெரிவது போன்ற அமைப்பு. ரொம்பவே சந்தோஷமாக ஆரம்பித்தது.




சுற்றிப் பார்க்கவும், செய்து பார்க்கவும் ஏராளமான வாய்ப்புக்கள் உள்ள இடம். ஏரியில் படகு வாடகைக்கு எடுத்து ஓட்டுவது, பெரிய கப்பலில் பிரயாணம் செய்வது, மீன் பிடிப்பது போன்றவைகள் இருந்தாலும் பேரா செய்லிங் (Para Sailing), ரிவர் ரேப்டிங் (river rafting), ரிவர் ட்யூபிங் (river tubing), பலூன் சவாரி (hot air ballooning) என பலவிதமான சாகச விளையாட்டுக்களும் உண்டு. இதில் நாங்கள் பேரா செய்லிங் மற்றும் ரிவர் ட்யூபிங் மட்டும் செய்தோம். பலூன் சவாரியின் விலை மிக அதிகமாக இருந்ததால் சாய்சில் விட வேண்டியதாகப் போயிற்று.

பேரா செய்லிங் என்றால் ஒரு படகில் ஒரு பேராசூட்டை கட்டி விட்டு அந்த படகு செல்லும் பொழுது மேலெழும் பாராசூட்டில் தொங்கிக்கொண்டு செல்வது. சுமார் 300 அடி உயரம் வரை அழைத்துச் செல்கிறார்கள். ஒரு ஊஞ்சலில் ஆடும் பொழுது வெகு உயரமாகச் செல்வது போல்தான் உணர்கிறோம். 5 - 7 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் இந்த சவாரி ஒரு வித்தியாசமான அனுபவம்தான். ட்யூபிங் என்றால் நம்ம ஊரில் லாரி ட்யூபை ஆற்றில் போட்டு அதில் மிதந்து செல்வதுதான். அதைக் கொஞ்சம் ஆர்கனைஸ்டாகச் செய்கிறார்கள். நியூயார்க் நகர் வரை வரும் ஹட்சன் நதியின் ஆரம்பப் பகுதிகளில் ட்யூபில் பயணம் செய்தது நன்றாகத்தான் இருந்தது. ஒர் இரவில் செய்த படகு பயணமும், அப்பொழுது கண்ட வாண வேடிக்கைகளும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய மற்றொரு விஷயம்.




மிக அதிகமான கூட்டம் இருந்தாலும் சற்றே சரியாக திட்டமிட்டதாலும் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்பதை விட பார்ப்பதை நன்றாக பார்க்க வேண்டும் என முடிவு செய்ததால் ரொம்பவும் அவதி அவதி என ஓடாமல், அழகாகக் கழிந்தது இந்த விடுமுறை. அமெரிக்க கிழக்கு கடற்கரை ஓரம் வசிப்பவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ஒரு இடம் இது. போகுமுன் என்னிடம் சொல்லுங்கள் மேலும் தகவல்கள் தருகிறேன்.

Sunday, May 27, 2007

தமிழ்மணத்துக்கு ஏழு நாள் ஏழரை!!

எத்தனையோ பேர் வந்து நட்சத்திரமா ஜொலிச்சிட்டுப் போன இடத்தில் இந்த வாரம் நம்மளை நட்சத்திரமாகப் போட்டு இருக்காங்க. வேற யாருமே கிடைக்கலை போல. அதான் நம்ம பக்கம் எல்லாம் பார்வை திரும்பிடுச்சுன்னு நினைக்கிறேன். அப்படி இருந்தாக்கூட முன்ன ஒரு முறை செஞ்சா மாதிரி தமிழ்மணமே நட்சத்திரமாக இருந்திருக்கலாம். இப்போ வேலியில் போற ஓணானை மடியில் கட்டிக்கிட்ட மாதிரி நம்மளை இழுத்து விட்டு இருக்காங்க. ஏண்டா செஞ்சோமின்னு அவங்களும், ஏண்டா செஞ்சாங்க அப்படின்னு நீங்களும் கதறும்படியாச் செய்ய வேண்டியதுதான் நம்ம வேலை. செஞ்சிறுவோம்.

முதல் பதிவு நம்மளை பத்தின அறிமுகமா இருக்கணுமாமே. சரி. நாம மரபு மாறாம அதை வெச்சே ஆரம்பிக்கலாம். முதலில் ஒரு தபா இந்த நட்சத்திர அறிமுகம் அப்படின்னு தமிழ்மணத்தில் எழுதித்தரச் சொன்னதை பார்த்திடுங்க.

அடுத்து, நம்ம கிட்ட நிறையா பேரு கேட்கற ஒரு கேள்வி ஏன் உங்க பேரு இலவசக் கொத்தனார். அதுக்கு அப்புறம் உங்களுக்கு ஊர் என்ன ஏது அப்படின்னு. இது எல்லாமே முன்னாடி எழுதியாச்சு. அதனால அதோடு சுட்டிகள் எல்லாம் இங்க குடுத்து ஒரு பதிவா ஒப்பேத்த வேண்டியதுதான். அது மட்டுமில்லா மீள்பதிவு செய்யறது ஒரு மரபுதானே.

முதல் பதிவு
ஏன் இலவசக்கொத்தனார் - 1
ஏன் இலவசக்கொத்தனார் - 2
எனக்குப் பிடித்தவை (நான்கு விளையாட்டு)
மதுமிதாவிற்காக இலவச அறிமுகம்
அப்புறம் கடைசியா அழகுகள் ஆறு

அறிமுகம் ஆயிடிச்சு இல்ல. என்னடா இவன் முதல் பதிவே இப்படி மீள்பதிவா போட்டு சொதப்புறானே என நினைக்காதீங்க மக்களே. ஒரு நாளைக்கு ஒரு பதிவு எல்லாம் நமக்கே ஓவர் டோஸ், படிக்கிற உங்களைப் பார்த்தா பாவமாத்தான் இருக்கு. இருந்தாலும் உப்புமா பதிவு, விவாத மேடை, போட்டி எல்லாம் போடலாம். வெயிட்டீஸ் ப்ளீஸ்.