Thursday, June 19, 2008

பதிமூன்றாம் ஆழ்வாருக்குப் பரபரப்புக் கேள்விகள்!!

இந்த மாதிரி தொடர் விளையாட்டுகள் தமிழ்மணத்தில் நிறைய பார்த்திருக்கிறேன். 'ஏம் வே! உமக்கென்ன கோட்டியா புடிச்சிருக்கு?' என்று கேட்டா சிலருக்கு கோபம் வரலாம். ஆனால் 'ஐயா, weird தொடர்விளையாட்டில் உங்களையும் இணைத்திருக்கிறேன்' அப்படின்னு பதிவு போட்டா உடனே பதிவு போட நிறைய பேர் தயாரா இருக்காங்க. இந்த தொடர் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பது ஒரு நல்ல அனுபவம்.

இந்தியர்கள் கடைக்கு போய் கத்திரிக்காய் வாங்குவதால்தான் கத்திரிக்காய் விலையேறுகிறது என்று கண்டுபிடித்திருக்கும் கொத்தனார் -

இவர் ஒரு மூத்த பதிவர். நாலு விசயமும் தெரிஞ்ச நல்ல மனசுக்காரர். "நாலு பேர் பாக்குற மாதிரி நல்லா இரு"ன்னு சொல்லாம இப்படி நாலு பேரு பாக்குற மாதிரி கேள்வி கேக்குராரேன்னு யோசனையாத்தான் இருக்கு. இதில சோடி போட்டுகிட்டு வேற திரியறாங்கங்க. ஒருத்தர் கேள்வி கேப்பாராம். இன்னொருத்தர் பஞ்ச் கொடுப்பாராம்.

இதுகெல்லாம் அசந்துருவோமா. கைப்புள்ள! எடுறா உலாவியை! விடுறா மெயில்லை!

1. பதிவுலகில் தொடர்ந்து இயங்கும் நீங்க, பல பதிவர்களை விட பின்னூட்டங்களில் பட்டையைக் கிளப்பும் நீங்க ஏன் இதுவரை பதிவு தொடங்கலை?

பதிவு எழுத தேவை கொஞ்சம் எழுத்து திறமை, வாசகர் வட்டம் பற்றிய தெளிவு, கொஞ்சம் 'தடித்த தோல்' மற்றும் நிறைய்ய்ய்ய நேரம். நம்ம வேலை நேரம் பத்தி சொல்லவே முடியாது. அதான் இப்படியே இருந்திட்டு இருக்கேன். சோம்பேறியா :-)

2. பதிவுகள் எழுதும் நாங்களெல்லாம் வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்வது போல நீங்கள் படித்துப் பின்னூட்டமிடுவதற்காகவே வாங்கிக் கட்டிக் கொள்வது உண்டா?

இது வரைக்கும் நான் எதுவும் வாங்கிக் கட்டிக்கலை. பொதுவா அவங்கதான் 'வாங்கிக் கட்டிப்பாங்க'. நாம வெறும் டவுசர் பார்ட்டிதானே.

3. அடிப்படையில் ரஜினி ரசிகராக அறியப்படும் நீங்கள் தசாவதாரத்திற்கு கமலே நினைக்காத கோணங்களில் பின்னூட்டங்கள் போட்டு ஆதரவு திரட்டுவதின் பின் இருக்கும் நுண்ணரசியல் என்ன? (நான் ரஜினி ரசிகன் என்று யார் சொன்னது போன்ற மொக்கை பதில்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது)

புதிய செய்தி அறியத் தந்தமைக்கு நன்றி :-). ரஜினி ராம்கி சண்டைக்கு வந்திடப் போறார் அப்புறம்.

பொதுவாக நாம் ஒரு படைப்பை அணுகும்போது பல முன்முடிவுகளோடே அணுகுகிறோம். முதல் பார்வையில் மோனாலிசா ஒரு இத்தாலிய சீமாட்டியின் போர்டிரெய்ட் படம். இது மிகச் சுலபமான புரிதல். "இதில் என்ன பெருமை இருக்கிறது? ரவி வர்மா இதைவிட பிரமாதமா வரைவார்" என்றோ, "போர்டிரய்ட் எல்லாம் எலிமெண்டரி ஆர்ட்" என்றோ சொல்லிவிட்டு வந்து விடலாம். ஒரு மாட்ர்ன் ஆர்ட் தலைகீழா மாட்டினாலும் யாரும் கண்டுபிடிக்கமாட்டாங்க அப்படின்னு சுலபமா ஜோக் அடிக்கலாம்.

Dan Brown மோனாலிசா பத்தி நிறைய எழுதறார். பல புதிய கோணங்கள் கிடைக்கின்றன.

கமல்ஹாசன் பல திரைக்கதைகள் எழுதியிருந்தாலும், அதில் பின் வரும் மூன்றும் ஒரு சில புள்ளிகளில் ஒன்று சேர்கின்றன. ஹேராம், அன்பே சிவம் இப்பொழுது தசாவதாரம். பாத்திரங்களின் பெயர்களுக்கு அவர் தரும் முக்கியத்துவம், மனிதனின் அகப்பயணம், சித்தாந்தங்கள் மற்றும் மொழியின் ஊடே நடக்கும் வெளிப்பயணங்கள், மனிதனின் இருப்பு சார்ந்த அலசல்கள், இறை நம்பிக்கை பற்றிய கேள்விகள் போன்ற பல விசயங்களை ஒரு திரையில் தீட்டுகிறார். அந்த பெரிய திரை நிறைய பேர் கண்ணுக்கு தெரிவதில்லை.

அட நமக்கு முதலில் புரியவில்லை. ஆனால் புரிந்து கொள்ள முயற்சிக்கலாமே என்றுதான் நினைத்தேன். எழுதினேன் :-)

4. காலப் பயணம் செய்ய முடிந்து உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு சம்பவத்தை மாற்ற முடியும் என்ற சக்தி கிடைத்தால் எதனை மாற்றுவீர்கள்? எவ்வாறு மாற்றுவீர்கள்?

இதுவரை அப்படி ஒரு சம்பவமும் நினைத்ததில்லை. ஆனால் வாழ்க்கையை ரிவர்ஸில் எப்படி இருக்கும் என்று எங்கோ படித்த ஞாபகம்.

தொண்டு கிழமாக இருந்துவிட்டு, மீண்டும் உடலில் வலு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து, 'தொல்லை கொடுக்கும் பெருசு'ல் இருந்து பிள்ளைகளுக்கு சூப்பர் மேனான அப்பாவாக மாறி, சப்பென்று இருக்கும் இல்லற வாழ்வில் மீண்டும் காதலை சந்தித்து, மீண்டும் கல்லூரி வாழ்க்கை வாழ்ந்து, பள்ளிப் பாடங்களை இப்பொழுதாவது புரிந்து படித்து, துன்பம் இல்லாத மழலைப் பருவத்தில் தவழ்ந்து, அந்த ஒரு நொடி சம்போகத்தில் ஒரு உயிரணுவாக மாறிப் பார்க்கலாம்.

நாம யாரை கேள்வி கேட்கிறது? அப்படியே கேட்டாலும் நம்மளை மதிச்சு யாரும் பதில் போடுவாங்களான்னு தெரியாது. 'ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்' அப்படின்னு வடிவேலுக்கு அப்புறம் இணையத்தில் இவரைத்தான் எல்லாரும் சொல்கிறார்கள்.

எங்கள் அருமை அண்ணன், சிலம்புச் செல்வன், கண்ணகியின் கோவலன், மாதவிப் பந்தலான், பதின்மூன்றாம் ஆழ்வார், இணைய தளபதி இப்படியெல்லாம் பில்டப் கொடுக்காமலே அவரைப் பத்தி நிறைய பேருக்கு தெரியும். இப்ப கேள்விகள் (இது வேறயா):

1. நான் வறட்டு ஆன்மீக பற்றாளன் இல்லை. ஆனால் உங்கள் எழுத்தில் இருக்கும் ஆன்மீகம் பல புதிய புரிதல்களை தருகின்றன. நீங்கள் இறை மறுப்பாளராக இருந்து பின்னர் மாற்றம் கண்டதாக அறிகின்றேன். மாற்றங்கள் வாழ்வில் இன்றியமையாதது. ஆனால் ஆன்மீகத் தேடலைத் தாண்டி நீங்கள் ஆன்மீகம் வளர்க்க நிறைய சிரத்தை எடுக்கிறீர்கள். எதனால் இந்த மாற்றம்?

2. இத்தனைப் பதிவுகள், பின்னூட்ட மட்டுறுத்தல், தொடர்ந்து விவாதம் என்று எப்படி நேரப் பங்கீடு செய்கிறீர்கள்?

3. இந்த மாதிரி ஒரு தொடர் விளையாட்டில் உங்களை மூன்று பேர் ஒரே சமயத்தில் அழைக்கிறார்கள். ஒரு சங்கிலியில் தான் நீங்கள் பங்கு பெற முடியும் என்று விதி இருந்தால் (அட இருக்குன்னு சொல்றேன்!) யாருடைய சங்கிலியை தொடர வைப்பீர்கள்? ஏன்?

உங்களை தொடரச் சொல்லும் அந்த மூன்று பதிவர்கள்

அ) கோ. இராகவன்

ஆ) கோவி கண்ணன்

இ) வெட்டிப் பையல் பாலாஜி

4. உங்கள் நினைவில் ஆழப் பதிந்து போன சிறுவயது கதை? யார் அந்த கதையை உங்களுக்கு சொன்னார்கள்?

டிஸ்கி: பதிவுக் கயமைத்தனம் செய்வதற்காகவே நான் பதிவெழுதா ஸ்ரீதரைக் கேள்வி கேட்டதாகப் பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டு ஸ்ரீதரின் பதில்களையும் கேள்விகளையும் இங்கு பதிவாய் அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

Tuesday, June 17, 2008

வித விதமாய் நுண்ணரசியல் (பெனாத்தலுக்கு நன்றி!)

பதிவு போட விஷயமே இல்லைன்னு சொல்லறவங்களைக் கட்டி வெச்சு உதைக்கணும். நேரம் இல்லை, ஆணி அதிகம் அப்படின்னு சொன்னா விஷயம் வேற. ஆனா இந்த பதிவுலகத்தில் எத்தனையோ எழுதலாமே. அன்பே சிவம், சிவாஜி, தசாவதாரம் என அப்பப்போ எதாவது திரைப்பட சீசன் வருது. அப்புறமா கேள்வி பதில் என்ற பெயரில் நமக்கு நாமே விளையாடிக்கலாம். அதுவும் இல்லையா, தொடர் விளையாட்டுக்கள் எத்தனையோ வருது - சிவாஜி வாயில் ஜிலேபி, அதைத் தொடர்ந்து இந்த கேள்விக்கென்ன பதில் விளையாட்டு. அப்புறம் என்ன விஷயப் பஞ்சம் அதான் எனக்குப் புரியவே இல்லை. நிற்க.

மேலே சொன்ன கேள்விக்கென்ன பதில் விளையாட்டில் நம்மளை பாத்து நாலு கேள்வி கேட்டுப்புட்டாரு நம்ம பெனாத்தல். அதுல கருப்பு வெள்ளையில் எழுது, கலரில் எழுதுன்னு ஆயிரம் நுண்ணரசியல். இருந்தாலும் அவர் ஆசைப்படி என் பதில்களோட பஞ்ச் அண்ணாவின் கருத்துக்களையும் வாங்கிப் போட்டாச்சு.

1. எழுத்தில் மட்டும் சந்திக்கும் பதிவர்களை நேரிலும் சந்திக்க ஆசைப்படுவீர்களா? யார் யார் உங்கள் லிஸ்டில்?

பதிவினால் பெற்ற பயன் யாதெனின் அப்படின்னு முன்னமே சொல்லி இருக்கேன் - "எந்த ஊர் போனாலும் பார்ப்பதற்கு நண்பர்கள். அதில் சிலர் பதிவுகளையும் தாண்டி நல்ல நண்பர்களாய் இருப்பது." அப்படிச் சொல்லி இருக்கும் போது பார்க்காம இருப்பேனா? லிஸ்ட் எல்லாம் இல்லை. எந்த ஊர் போனாலும் அங்க யார் இருக்காங்கன்னு பார்த்து முடிஞ்சா ஒரு சந்திப்பு போட்டுடறதுதான். முக்கியமா அதை வெச்சு நாலு பதிவு போட முடியுமே. அதுக்காகவாவது பார்க்க வேண்டாமா?

ஒரே ஒரு பிரச்சனை. அவங்க நம்மளைப் பார்க்க பிடிக்காம ஊரை விட்டே போயிடறாங்க நம்ம குமரன் மாதிரி . இல்லை நம்ம ஸ்ரீதர் வெங்கட் மாதிரி கடைக்குப் போனேன். கத்திரிக்காய் வாங்கினேன். அப்படின்னு தொலைபேசிக்கிட்டே அடுத்த முறை பார்க்கலாம் அப்படின்னு சொல்லிடறாங்க.

என்ன, நம்மை யாரு என்னான்னு தெரியாம, எதிர்வினைகளை முன்வைப்பதால் நம்மைப் பற்றிய முன்முடிவுகளுடன் காரசாரமாய் பதிவு / பின்னூட்டம் போட்டு காய்ச்சி எடுக்கிற பதிவர்கள் நேரில் பார்த்தா என்ன சொல்லுவாங்க. ஒரு முறை நேரில் பார்த்துப் பழகிய (பாப்பையா சொல்லும் பழகல் எல்லாம் இல்லை) பின் அந்த முன்முடிவுகளில் மாற்றம் இருக்குமான்னு தெரிஞ்சுக்க ஆசை.

பஞ்ச் அண்ணா: பெனாத்தலா கேள்வி கேட்டாரு? அந்த ஆளுக்கு கேள்வி கேக்கத் தெரியலையா இல்ல உம்மகிட்ட பயமான்னு தெரியல! இப்படி இருந்திருக்கணும் கேள்வி: எழுத்தில் மட்டும் சந்திக்கும் பதிவர்கள் உங்களை நேரில் பயமில்லாமல் சந்திப்பார்களா? இல்லை சாக்கு போக்கு சொல்லி ஓடிவிடுவார்களா?

2. திருநெல்வேலிலே ஆரம்பிச்சு அமேரிக்கா வரைக்கும் பல ஊர் பாத்திருக்கீங்க.. நேர்மையாச் சொல்லுங்க.. எந்த ஊர்லே சைட்டடிக்கும்போது தங்கமணிகிட்டே மாட்டினீங்க? அதன் பின் விளைவுகள் என்ன?


வைப்பாலஜியில் முனைவரான நீங்க என் கிட்ட இப்படி ஒரு கேள்வி கேட்டது சிரிப்பாத்தான் இருக்கு. முதலில் மாட்டாமல் இருக்க முடியாது என்ற உண்மையை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய மனப்பக்குவம் வர வேண்டும். சரி. பார்த்தாச்சு, மாட்டியாச்சு. அடுத்தது என்ன செய்ய. முதலில் யாரைப் பார்த்தோமோ அவங்களை மட்டம் தட்டி விட வேண்டும். என்ன இது நீல சுரிதாருக்குப் பச்சை துப்பட்டா? அல்லது காதில் என்ன அது தோடா இல்லை கத்திச் சண்டைக்கு பயன்படும் கேடயமா? இப்படி எதாவது. இல்லையா, அந்த சேலையைப் பாரு. நீ வேண்டாம் என்று வீட்டில் வேலை செய்பவருக்குத் தந்தது மாதிரியே இருக்கே. இந்த மாதிரி வேற வியாபாரம் நடக்குதா? நீ அன்னிக்குப் போட்ட டிசைன் இன்னிக்கு இவங்க போட்டு இருக்காங்களே அப்படின்னு சொல்லணும். (நான் வந்து இன்னிக்கு இருக்கும் பேஷன் படி உடுத்தறது இல்லையா? என்ற கேள்வி வரலாம்).

எதுவும் வொர்க் அவுட் ஆகலைன்னா உனக்கு மனக்கஷ்டமா இருந்தா இனிமே பார்க்கலைன்னு சொல்லணும். அடுத்த முறை சினிமா போகும் போது படம் பூராவும் கண்ணை மூடிக்கிட்டு இருக்கணும். அதை அவங்களுக்குத் தெரியற மாதிரி செய்யணும். என்னன்னு கேள்வி வரும். கொத்ஸ் (இங்க உங்க பேரைச் சொல்லணும்) வாக்குக் குடுத்தா தவற மாட்டான். திரையில் வரும் பெண்களை எக்காரணம் கொண்டும் பார்க்க மாட்டேன் அப்படின்னு வசனம் பேசணும். நல்ல படமான சிரிச்சுக்கிட்டே பார்த்துத் தொலை அப்படின்னு வரும் இல்லை படம் குருவி ரேஞ்சுக்கு இருந்தா அந்தக் கடுப்பெல்லாம் சேர்ந்து ஒரு மிதி விட்டு இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. குடுத்த காசை வீணாக்காம நான் பெற்ற துன்பம் பெருக நீயும் என ஒரு பதில் வரும். ஆக மட்டும் பார்க்கலாம்.

தங்கமணியையும் பையனையும் கூட்டிக்கிட்டுக் கடைக்குப் போகும் போது எல்லாம் அவன் எதையாவது எடுக்க முனைந்தா 'Son, there are some rules in life. When you are in a public place, there are things you can see, but you can't touch!" அப்படின்னு சொல்லிக் குடுத்துடறது!

பஞ்ச் அண்ணா: நல்லாத்தான்யா ப்ளான் எல்லாம் பண்றீங்க.. ஆனா பேக்பயர் ஆச்சுன்னா வாழ்நாள் ஆப்பு ப்ரீ! இதே சிச்சுவேஷன்லே "அட.. ரொம்ப நல்லவன் தான்யா நீ.. எனக்காகத்தான் எல்லாத்தையும் சைட் அடிச்சே சரி.. அப்படித்தான் போற வற பொம்பளைங்க என்ன தோடு போட்டிருக்காங்க, எது லேடஸ்ட் டிசைன், துப்பட்டா போட்டிருக்காங்களா இல்லியான்னு டீட்டெயிலா நோட் பண்ணுவியா? என்னோட பேட்டைக்கு வா" ன்னு சொன்னா கொத்தனார் கொத்துக்கறியனார்!

3. நுண்ணரசியல்: சாதா பிராண்ட், பி ந பிராண்ட், இன்னும் வேற எதாச்சும் இருந்தா அதைப்பத்தியும் படம் வரைந்து பாகங்களைக் குறியுங்கள் பார்க்கலாம்?

அரசியல் என்றால் என்ன என்பது நமக்கெல்லாம் நல்லாவே தெரியும். திமுக, அதிமுக என பெரிய அளவில் செய்யும் அரசியல் நமக்கெல்லாம் ஓரளவு தெரியும். அலுவலகத்தில் ஒருத்தனுக்குப் பதவி உயர்வு கிடைத்தால் அதற்கு நாம் கற்பிக்கும் காரணமோ அல்லது வீட்டில் நம் மைத்துனர் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு நாம் கற்பிக்கும் காரணமோ நாம் நம்மளவில் செய்யும் அரசியல். இதெல்லாம் வெளிப்படையா நடப்பது.

இவ்வளவு வெளிப்படையா இல்லாம கொஞ்சம் நுணுக்கமா கொஞ்சம் யோசிச்சால் மட்டுமே புரிபடற மாதிரி செய்யும் அரசியல் நுண்ணரசியல். இன்றைக்குப் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரும் பாடு படுவது திமுக அரசு அப்படின்னு ஒரு அறிக்கை வெளிவந்தா, அதை விமர்சனம் பண்ணி ஒரு பதிவு போடும் பொழுது, "அதுக்கு தமிழகத்தில் இன்று மதுரைதான் ஆட்சி!!" அப்படின்னு தலைப்பு வெச்சீங்கன்னா அது பல அடுக்குகளில் வேறு வேறு விதமான பொருள் தரும். பெண்கள்தான் சக்திவாய்ந்தவர்கள் என்ற நேரடி விளக்கம், அதற்கு ஒரு படி கீழே போனால் இன்று அமைச்சகத்தில் நடப்பதை விட கலைஞரின் வீடுகளில்தான் பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று ஒரு கோணம். அதையும் தாண்டி அழகிரி கை ஓங்கி இருப்பதை சொல்லும் வேறு ஒரு கோணம். இப்படி பல விதமான கோணங்கள் பல விதமான முடிவுகளைத் தருவது என்பது நுண்ணரசியல். ஆனா இது எல்லாம் சாதா நுண்ணரசியல்.

அடுத்து வருவது கலர்கண்ணாடி நுண்ணரசியல். இதில் பல வலையுலக ஜாம்பவான்கள் எல்லாம் இருக்காங்க. ஒரு விளையாட்டு இருக்கும். ஒரு அட்டையின் ஒரு பகுதியில் கேள்வி இருக்கும். அதன் விடை அந்த அட்டையின் பின்புறத்தில் இருக்கும். ஆனா அது தெளிவாகத் தெரியாது. அந்த விளையாட்டோட ஒரு சிகப்புக் கண்ணாடி தருவாங்க. அதைப் போட்டுக்கிட்டுப் பார்த்தா விடை பளிச் எனத் தெரியும்.

அந்த மாதிரி இந்த க.க.நுண்ணரசியலில், முதலில் நீங்க முன்முடிவுகள் பலவற்றோட இருக்கணும். எந்த பதிவையும், எந்த நிகழ்வையும் இந்த முன் முடிவோடதான் அணுகணும். அப்படிச் செய்யும் போது, இந்த கலர் கண்ணாடியைப் போடாதவங்களுக்குத், அதாங்க அந்த முன்முடிவுகள் இல்லாதவங்களுத், தெரியாத பல விஷயங்கள் இவங்களுக்குத் தெரியும்.

உண்மையாச் சொல்லப்போனா இதுக்கும் வேண்டாத மருமக கைபட்டா குத்தம் -கால்பட்டா குத்தத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. பிடிச்ச ஆளு காளை மாட்டுக்கு நாலு கொம்பு ன்னு சொன்னாக் கூட "100% உடன்படுகிறேன்" என்பதும், பிடிக்காத ஆளு ஜூலை மாசத்துக்கு 31 நாள்னாக்கூட சண்டை பிடிக்கறதும் நடக்கிறதைத்தான் பார்க்கறீங்களே.

மூணாவது பி.ந.நுண்ணரசியல். இது ஒரு பெரிய வாசாப்பு. இந்த நுண்ணரசியல் எழுதறவனுக்கும் ஒண்ணும் புரியாது. படிக்கிறவனுக்கும் ஒண்ணும் புரியாது. ஆனா எழுதறவன் தான் என்னமோ சாக்ரடீஸ் மாதிரி நினைப்பில் எழுதுவான். படிக்கிறவன் புரிஞ்சா மாதிரி பட்டையைக் கிளப்பிட்டீங்க வாத்தியாரே அப்படின்னு பின்னூட்டம் போடுவான். அதுவும் சில சமயங்களில் அவனுக்கும் அறிவு ஜீவி வியாதி தொத்திக்கும். அப்போ அவ்வளவுதான் ரெண்டு பேரும் மாறி மாறி எழுதிக்கிறதைப் படிச்சா நமக்கு மண்டையில் முடி எல்லாம் கொட்டிப் போயி உடம்பு சூடேறி கண்ணைக் கட்டிக்கிட்டு மயக்கமா வரும். இது உதாரணமா எதையாவது சொல்லப் போக உங்களுக்கு எதாவது ஆயிடிச்சுன்னா என்ற கவலையில் அதை எல்லாம் செய்யலை.

கடைசியா, (நுண்ணரசியல் பத்திப் பேசும் போது கடைசியான்னு சொல்லறதே தப்பு. ஏன்னா இதையும் தாண்டிப் புனிதமானது ஒண்ணு வரலாம்!) நாம பண்ணற நுண்ணரசியல். இதுல என்ன விசேஷமுன்னா செய்யறவங்களுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது. ஆனா நம்ம கண்ணுக்கு இதெல்லாம் பளிச்சுன்னு படும். அதைச் சொன்னா அப்போதான் அதைச் செஞ்சவருக்கு நாமா இதெல்லாம் செஞ்சோம் அப்படின்னு தோணும். உதாரணத்திற்குப் போன பதிவில் நாம சொன்ன மாதிரி ஆஸ்கார் பிலிம்ஸ் என தசாவதாரத்தில் வரும் பொழுது அந்தப் பையன் சட்டையில் 'கேப்டன்' அப்படின்னு எழுதி இருக்கும். அது எதேச்சையா நடந்திருப்பது. அதன் மூலம் கமலை விட விஜயகாந்த் எவ்வளவோ மேல் அப்படின்னு ரவிசந்திரன் சொல்ல வராரு அப்படின்னு ஒரு பதிவு போட்டா அது இந்த மாதிரி நுண்ணரசியல்.

இதுல முக்கியமானது இதை வெளிப்படுத்தும் பொழுது உம் நுண்ணரசியல் என்னை பிரமிக்க வைக்கிறது, உமது நுண்ணரசியல் கண்டு பிரமித்து நிற்கிறேன் எனச் சொல்வது அவசியம். ஆனா ஒண்ணு, இதுதாங்க இருக்கிறதுலேயே ஆபத்தில்லாதது. படிச்சுட்டு சிரிச்சுட்டு, பின்னூட்டமா ஒரு சிரிப்பானாவது போட்டுட்டு போனா முடிஞ்சுது வேலை.

பஞ்ச் அண்ணா: யானையக் குருடனுங்க தொட்டு என்னவோ சொன்ன மாதிரி எங்கயோ ஒரு மேட்டரைப்பாத்துட்டு என்னவோ வாய்க்கு வந்தபடியோ மனசுக்கு வந்தபடியோ பேசறதுதான் நுண்ணரசியல் - அப்படின்னு ஒரு வரிலே முடிக்கவேண்டிய பதிலை வச்சுகிட்டு ஜிலேபி சுத்தியிருக்கீரே .. உம்மை!

4. பின்னூட்டப் பிதாமகரே, நீங்களும் பார்த்து வெறுத்து ஒதுக்கும் பதிவுகள் என்னவோ, ஏனோ?

முதல் இரண்டு வார்த்தைகள் என்னை ரீச்சருக்கு எதிரா கொம்பு சீவற மாதிரி இருக்கு. ஏன்யா இப்படி (நுண் இல்லாத)அரசியல் பண்ணறீரு. அது மட்டுமில்லாம வெறுத்து ஒதுக்கும் அப்படின்னு பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லறீங்களே!! அதிகம் படிக்காத பதிவுகள் அப்படின்னு வேணா சொல்லிக்கலாமா? அப்படிப்பட்ட பதிவுகளில் சில வகைகள் இருக்கு.

முதலாவது ஒருத்தர் எதாவது சொல்ல வந்த அவரு என்ன சொல்லறாரு என்பதை விட அவர் யாரு என்பதற்கு அதிக கவனத்தைக் குடுத்து நமக்குப் பிடிக்காதவரா இருந்தா அவரை விமர்சனம் செய்வதையே பதிலாகத் தருவது. இந்த மாதிரி தனிமனித தாக்குதல்களால் சொல்ல வந்த கருத்து காணாமப் போகுது. இது மாதிரி தொடர்ந்து நடக்கும் பதிவுகள் சிலவற்றின் பக்கம் போறது இல்லை. அனானியா வந்து ஒருத்தர் கேள்வி கேட்டா, பெயர் போடக்கூட பயப்படும் உனக்கெல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும் என்ற மேட்டிமைத்தனமும் இதில் அடங்கும்.

இரண்டாவது போன பதிவில் செல்லமா உவ்வேக் என அறியப்பட்ட வகை எழுத்துக்கள் இருக்கும் பதிவு. அதுக்கும் நமக்கும் ஏழாம் பொருத்தம். அதனால அந்தப் பக்கம் எல்லாம் போறது இல்லை.

மூணாவது இந்த ரொம்ப இலக்கியங்கள் மற்றும் ஆத்திகம் பற்றிய பதிவுகள். இதெல்லாம் நமக்கு ஏணி வெச்சாலும் எட்டாது. ரொம்பவே தீவிரமா விவாதங்கள் நடக்குற இடத்தில் நம்ம என்ன கும்மி ஆட்டையா போட முடியும். அதனால பொதுவா ஒண்ணு ரெண்டு பதிவு படிச்சாலும் அப்படியே சத்தம் காட்டாம நகர்ந்து போயிடறது.

கடைசியா இப்போ வர நிறையா பதிவுகளில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள். நிலக்கடலை சாப்பிடும் போது நடுவில் கெட்டுப் போன பருப்பு மாட்டினா மாதிரி படிக்கும் பொழுது என்னவோ செய்யுது. அதுவும் எதோ ஒண்ணு ரெண்டு இருந்தாலும் பரவாயில்லை. தட்டச்சுப் பிழைகள் அப்படின்னு ஒதுக்கிடலாம். ஆனா வரிக்கு வரிக்கு இதே மாதிரி தப்பு இருந்தா படிக்கவே பிடிக்க மாட்டேங்குது. "ற்" என்ற எழுத்துக்குப் பின் வரும் மெய்யெழுத்துக்கள், "ண,ந,ன' தவறுகள், "ற,ர" தவறுகள் எல்லாம் படிச்சா ரொம்பவே கடுப்பா இருக்கு. எவ்வளவுதான் சொல்லறது. அதனால இந்த மாதிரி எழுத்துப் பிழைகள் இருக்கும் பதிவுகளை இப்போ எல்லாம் புறக்கணிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப தெரிஞ்ச நண்பர்களா இருந்தால் மட்டும் சுட்டிக் காட்டறது.

பஞ்ச் அண்ணா:
அதாவது உங்களுக்கு பின்னூட்டம் போடாத பதிவர்கள் பக்கம் போறதில்லைன்னு சிம்பிளா முடிவெடுத்துட்டு, அதுக்கு காரணமா சந்திப்பிழை, மரியாதை இல்லை ன்னு தேடித்தேடி சொல்றா மாதிரி இல்ல இருக்கு!


கடைசியா நானும் யாரையாவது கேள்வி கேட்கணுமாமே. பதிவர்களில் பாதி பேர் கேள்வி பதில் எழுதும் பொழுது நாம யாரைன்னு போய் கேட்கன்னு யோசிச்சேன். பதிவு எழுதறவங்களை விட்டுட்டு பதிவே இல்லாதவரைக் கேட்டா என்னான்னு நினைக்கும் போது முதலில் நம்ம நினைவுக்கு வந்தது ஸ்ரீதர் வெங்கட்தான். ஸ்ரீதரே, நம்ம கேள்விக்கு பதிலை எல்லாம் எழுதி மின்னஞ்சல் பண்ணுங்க. நானே பதிவாப் போடறேன். இல்லை இதையே சாக்கா வெச்சு நீங்க பதிவு போடத் தொடங்கினாலும் சரிதான். உங்களுக்கான கேள்விகள்

  1. பதிவுலகில் தொடர்ந்து இயங்கும் நீங்க, பல பதிவர்களை விட பின்னூட்டங்களில் பட்டையைக் கிளப்பும் நீங்க ஏன் இதுவரை பதிவு தொடங்கலை?
  2. பதிவுகள் எழுதும் நாங்களெல்லாம் வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்வது போல நீங்கள் படித்துப் பின்னூட்டமிடுவதற்காகவே வாங்கிக் கட்டிக் கொள்வது உண்டா?
  3. அடிப்படையில் ரஜினி ரசிகராக அறியப்படும் நீங்கள் தசாவதாரத்திற்கு கமலே நினைக்காத கோணங்களில் பின்னூட்டங்கள் போட்டு ஆதரவு திரட்டுவதின் பின் இருக்கும் நுண்ணரசியல் என்ன? (நான் ரஜினி ரசிகன் என்று யார் சொன்னது போன்ற மொக்கை பதில்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது)
  4. காலப் பயணம் செய்ய முடிந்து உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு சம்பவத்தை மாற்ற முடியும் என்ற சக்தி கிடைத்தால் எதனை மாற்றுவீர்கள்? எவ்வாறு மாற்றுவீர்கள்?

Friday, June 13, 2008

Kamal, I spent $34.50 (plus extras) on you!

முன்னுரை
நாங்க தசாவதாரம் பார்த்தாச்சு. வீட்டில் இருந்து ஒரு 5 நிமிஷம் தள்ளி இருக்கும் திரையரங்கில்தான் போட்டு இருக்காங்க. வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்க தாத்தா பாட்டி இருந்ததால் நானும் தங்கமணியும் முநாமுகா (அதாங்க முதல்நாள் முதல்காட்சி) பார்க்க போயிட்டோம். உள்ளூர் விலையைக் கொஞ்சம் ஏத்திட்டாங்க. அதுவும் இணையத்தில் வாங்கியதற்காக $2.50 வேற தனியா வாங்கிக்கிட்டாங்க. அலுவலகத்தில் இருந்து நேராப் படம் பார்க்கப் போன இந்த யானையின் பசிக்கு வாங்கின சோளப்பொரி எல்லாம் சாய்ஸில் விட்டுடலாம். ஆனாலும் வடை என்ற பெயரில் தந்த வஸ்துவிற்கும் சமோசாவிற்கும் விலை ரொம்பவே அதிகம் என்பதை மட்டும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

நிறைகள்
எல்லாரும் எழுதிட்டாங்க. படம் நல்லா இருக்கு. ஒளிப்பதிவு உலகத்தரம். வரைகலை நல்லா இருக்கு. முக்கியமா முதலிலும் முடிவிலும். ஒவ்வொரு காட்சியிலும் கமல் மற்றும் மற்ற கலைஞர்களின் உழைப்பு தெரியுது. முக்கியமா மேக்கப்பில் எடுத்து இருக்கும் கவனம். அந்தப் பாட்டியின் கைகளில் என் பாட்டியின் கைகளில் இருப்பது போல சுருங்கிய தோலும் அதில் கரும்புள்ளிகளும் இருப்பதைப் பார்த்தீர்களா? இன்று நகைச்சுவை என்ற பெயரில் வழங்கப்படும் கடுப்பேற்றும் விஷயம் கிடையாது. இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாது. விரலைச் சுத்திக்கிட்டுச் சின்ன பசங்க எல்லாம் பேசும் பஞ்ச் வசனம் கிடையாது. குத்தாட்டம் கிடையாது. கனவில் ரீச்சர் வீட்டுக்குப் பின்னாடி போய் ஆடுவது எல்லாம் கிடையாது. வசனங்களில் இழைந்தோடும் நுட்பமான நகைச்சுவை.

எனக்குப் பிடிச்ச கமல் நம்ம பல்ராம் நாயுடுதான். மனுசன் பட்டையைக் கலக்கறாரு. எல்லாரும் இதைப் பத்தி எழுதறாங்க. அதனால இது போதும்.

குறைகள்
இது பத்தியும் நிறையா பேர் எழுதியாச்சு. ஆனா நான் நிறைகளை எழுதிட்டுக் குறைகளை எழுதலைனா என் நடுநிலமைவியாதி சரியாப் போச்சு அப்படின்னு மத்தவங்க நினைப்பாங்களே. அதுக்காக நானும் சொல்லறேன்.

மைக்கேல் மதன காமராஜனாகட்டும், அவ்வை ஷண்முகியாகட்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களில் கமல் நடிக்க ஒரு காரணம் இருந்தது. அப்படி ஒரு காரணம் இல்லாது போனது ஒரு பெருங்குறையே. அதனால் எதற்காக இத்தனை பாத்திரங்களை இவர் செய்ய வேண்டும் என்பது புரியவே இல்லை.

அதிலும் அந்த வெள்ளைக்கார வில்லன் (கொஞ்சம் ஷேன் வார்ன் மாதிரி இல்ல?), புஷ், கலங்கரைவிளக்க முஸ்லீம், ஜப்பானில் கல்யாணராமன் எல்லாம் முகமூடி போட்டுக்கிட்டு அசிங்கமாவே இருக்காங்க. (பூவராகவனை இந்த லிஸ்டில் சேர்க்கலைப்பா!)

இப்படி இவரே இவ்வளவு வேஷம் கட்டினதுனாலதான் கேப்டன் மாதிரி துப்பாக்கியால கேன்சர் ஆப்பரேஷன் பண்ண வேண்டிய துரதிருஷ்டங்கள் எல்லாம். என்னவெல்லாமோ குறை எல்லாம் கண்டுபிடிச்சவங்க கண்ணில் இது படாம போச்சா இல்லை மத்த படங்களில் பார்த்துப் பார்த்துப் பழகிப் போச்சா? வேற யாருமே எழுதலையே.

மொத்தத்தில் 10 கமலில் ஐந்து ஆறு பாத்திரங்களாவது அனாவசிய திணிப்பு. அதுவும் அந்த பூவராகவன் / அவதார் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாமே திணிப்புதான்.

நுண்ணரசியல்கள்

  • AASCAR நிறுவனம் பற்றிய தலைப்பு வரும் பொழுது அதில் வரும் சிறுவனின் சட்டையில் Captain என்று எழுதி இருப்பது.
  • அவனவன் பத்தி பத்தியாய், பக்கம் பக்கமாய் பதிவு எழுதி சிதம்பரம் சர்ச்சையில் தன் சார்பு நிலையை விளக்க முயல்கையில் "Chee Tam Brahm" எனச் சொல்லி தன் கருத்தைப் பதிவு செய்தது
  • தன் தாலி வீசி முட்டிச் செத்த அதே சிங்கத்தலையில் இக்கால அசினை முட்டிக்கொள்ள வைத்து அதன் மூலம் பெண்களுக்கு முட்டிக் கொள்வதுதான் வழி என ஈயம் பித்தளை இளிக்க வைத்தது.
  • இன்னும் இருந்தாலும் நிறுத்திக்கறேம்பா.
சபாஷ்
ஒரு கமல் இருந்தாலே திரையில் மத்தவங்களுக்கு இடம் இருக்காது. இங்க தசாவதாரம். அதுவும் போக நாகேஷ் முதற்கொண்டு பல ஜாம்பவான்கள். இத்தனை பேருக்கும் நடுவே தனக்கென இடம் பிடித்திருக்கும் எம். எஸ். பாஸ்கருக்கு.

முடிவுரை
சமகால படங்களோடு சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது பல கட்டங்களில் தமிழ்த்திரைப்படங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்றிருக்கிறது இப்படம் என்பதில் சிலரைத் தவிர மற்றவர்களுக்குச் சந்தேகம் இல்லை என்கின்ற பொழுதில்... எப்படித்தான் இப்படி எல்லாம் எழுதறாங்களோ!! படம் நல்லாத்தான் இருக்கு. சில குறைகளை பெரிதாக எண்ணாமல், படத்தை சமுதாய அவலங்களுக்கு விடை தரும் சாதனமாக எல்லாம் எண்ணாமல் பொழுதுபோக்கா பாருங்க. நல்லாவே இருக்கு.

என்னளவில் கமல் இப்படி எல்லாம் ஒரு படம் பண்ணினால் அதனை அடுத்து ஒரு நகைச்சுவை படம் குடுப்பாரு. அதனை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன்.

பஞ்ச் அண்ணா
பதிவை எழுதிட்டுப் பஞ்ச் அண்ணா கிட்ட அனுப்பினேன். அவர் சொன்னது

இந்தப்படத்தில் நுண்ணரசியல் மொழியின் மௌனங்களை க் கட்டமைக்கும் காட்சிகள் மெல்லியல் பார்வையற்று இருந்தாலும் வல்லியல் பார்வையோடு அழகியலும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன. "சவுஞ்சாலயமும் ஒரு ஆலயம்தானே என்னும் நாயகன், அறிவாலயத்தையும் சேர்த்தே சாடல் பார்வை வீசுகிறான் என்பது நுண்ணிய நோக்கர்களின் பார்வைக்குத் தப்பாது. இப்படிப்பட்ட காட்சிவன்முறைகளின் ஊடே, ஆதங்க்வாதி என்று தேவபாடை பேசுபவர்களின் தீவிரவாதத்தையும் தோலுரித்துக்காட்டத் தவறவில்லை. மோடி வகையறாக்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? கடலில் பள்ளிகொண்ட கோவிந்தராஜப்பெருமாள் கரையொதுங்கக் கொண்டு வந்த சுனாமி சர்ப் எக்ஸல் கரை போல நல்லது எனக்காட்ட கிருமிகளையும் அதையொழிக்க சோடியம் குளோரைடையும் சேர்த்தே கொண்டு வருவதன் பின்னால் உள்ள நோய்க்குறிகளையும் புறந்தள்ளிவிடலாகாது.

டிஸ்கி (நீ போடாம விட்டதால) : இதையெல்லாம் எழுதின பிறகு படிச்சுப்பாத்தா எனக்கே பைத்தியக்காரத்தனமாத்தான் தெரியுது.. இருந்தாலும் இந்த நுண்ணரசியல் எல்லாம் நாம பீராயாட்டி வேற யாரு செய்வாங்க?

Saturday, June 07, 2008

மீண்டும் சிவாஜி வாயிலே ஜிலேபி!

நம்ம வெண்பா வாத்தி ஜீவா இருக்காரே. எதையாவது ஆரம்பிச்சு வைக்கிறதுல வல்லவருப்பா. வெண்பாப் பதிவு ஆரம்பிச்சாரு. அப்புறம் என்னமோ ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமானம் அப்படின்னு படம் பிடிக்கப் போயிட்டாரு. இப்போ அதையெல்லாம் தாண்டி கதை எழுதச் சொல்லி அழைப்பு விட்டு இருக்காரு.

"சிவாஜி வாயிலே ஜிலேபி" - இதுதாங்க தலைப்பு. இந்தத் தலைப்பில் அவர் எழுதி இருக்கும் ஒரு கதையைப் போட்டு இதே மாதிரி நீயும் எழுதுடா ராஜான்னு நம்மளைக் கூப்பிட்டு இருக்காரு. அவர் ஒரு மீள் பதிவு போட்டு அதே மாதிரி எழுதச் சொன்ன காரணத்தினாலும், ஏற்கனவே இந்தத் தலைப்பில் ஒரு பதிவு ஒண்ணு போட்டு இருக்கும் காரணத்தினாலும், இப்போ இருக்கும் ஆணி புடுங்கல்ஸில் இதுதான் முடியும் என்ற காரணத்தினாலும் நானும் ஒரு மீள்பதிவு செஞ்சுக்கறேன்.

நிறையா படங்கள் இருக்கும் பதிவானதுனால அதை எல்லாம் எடுத்து இங்க போடுவதுக்குப் பதிலா அந்தப் பதிவின் சுட்டியைத் தரேன். சங்கடப்படாமல் ஒரு சொடுக்கு சொடுக்கி அங்க போய் ஒரு பார்வை பார்த்திட்டு வந்திடுங்கப்பா.



இன்னிக்கு நம்ம வலையுலகில் பேசப்படும் ஒரு விஷயம் டிப்ஸ் (இதுக்குத் தமிழில் என்ன?) டிப்ஸ் தருவது தப்புன்னு ஒரு பக்கமும் குடுக்காமல் போனால்தான் தப்பு என்று பேசாமல் அப்போ அவனுக்குக் குடுத்தா சரியா என்று மறு பக்கமும் பேசப்படுவதை எல்லாரும் படித்து இருப்பீர்கள். டிப்ஸ் குடுக்க மாட்டேன் எனச் சொன்னால் முத்திரை குத்தப்படும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் மேலே சொன்ன பதிவோடு இதோ என் டிப்ஸ்!

என்ன இதுவும் மீள்பதிவுதான். நம்ம பாபா வந்து ஒரு சமயம் ஆறு வார்த்தைகளில் கதை எழுதுவது பத்தி ஒரு பதிவு போட்டு இருந்தாரு. அந்த சமயத்தில்தான் நடிகர் திலகம் சிவாஜிக்கு சிலை வைப்பது பத்தி எல்லாம் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதையொட்டி நான் எழுதியது

முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்!

கடைசியா இந்த மாதிரி தொடர் விளையாட்டுக்களின் பாரம்பரியத்தின் படி நாமும் மூணு பேரைக் கூப்பிட்டு யான் பெற்ற இன்பம் பெறுவீரே நீர் மூவரும் அப்படின்னு சொல்லணுமாம். அந்த முறையில் நான் அழைக்கும் மூவர்
  1. பெனாத்தல் சுரேஷ் (எழுத மேட்டர் கிடைக்காமல் சங்கடப்படுவது போல் தெரிவதால்)
  2. சென்னைக் கச்சேரி தேவ் (செயல் படாத தலைவர் என்ற அவப்பெயரைத் துடைத்தெறிய ஒரு வாய்ப்பு)
  3. வல்லிம்மா (அப்பாடா 33.33 சதவிகிதம் குடுத்தாச்சு!)

ஐயாமார்களே, அம்மாமார்களே! நீங்களும் சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற தலைப்பில் கதை / உவ்வேக் / கட்டுரை என்று எதாவது எழுதித் தொலைத்து மேலும் மூவரையும் அழைத்து அவர்களிடம் திட்டு வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

டிஸ்கி 1 (இது போடாம எப்படி?): மேல சிவப்பில் இருக்கும் உவ்வேக்கிற்கு பொருள் தெரியாமல் நீங்களா எதாவது எடுபட்டவை, விடுபட்டவைன்னு எதையாவது எழுத ஆரம்பிக்காம என்கிட்ட கேளுங்க. விஷயம் என்னான்னு சொல்லறேன்.

டிஸ்கி 2: தசாவதாரம் வெளிவரும் இந்த சமயத்தில் சிவாஜியை மறு வெளியீடு செய்யும் வெண்பா வாத்தியின் நுண்ணரசியலைக் கண்டு நான் பிரமித்து நிற்கிறேன். ஆனால் நட்பின் அடிப்படையில் அவருடைய சதி வேலைக்கு உடன்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால்தான் இந்தப் பதிவு. இதனால் வரும் எல்லா வினைகளும் அவருக்கே!

Saturday, May 31, 2008

புதசெவி - 5/31/2008

செய்தி 1

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் அப்படின்னு சொன்னதை ரொம்பவே அக்கறையா எடுத்துக்கிட்டாங்க பிரிட்டனில் எஸ்ஸெக்ஸ் என்ற ஊரில் வாழும் காரியா தம்பதியினர். இவங்க இந்தியாவில் இருந்து இந்த ஊருக்கு வந்த பொழுது அருகில் கோவில் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். அதனால தன் வீட்டில் இருக்கும் அறை ஒன்றையே கோவிலா மாத்திட்டாங்களாம். மாத்தினது மட்டுமில்லாம, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படின்னு யாரு வேணா இந்தக் கோயிலுக்கு வரலாம் அப்படின்னு சொல்லிட்டாங்களாம். இது வரை அப்படி வந்தவங்க எண்ணிக்கை எவ்வளவு பேர் தெரியுமா? அதிகமில்லை 50,000 பேர்தானாம்!! இதில் வந்தவங்களுக்கு இவங்க குடிக்க தேநீர் போட்டுக் குடுக்கறாங்களாம். இவங்க உடல்நிலை கொஞ்சம் சரியில்லாமல் போகும் வரை வந்தவங்களுக்கு சாப்பாடே உண்டாம். பல நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபடும் இந்தக் கோவிலுக்கு வயசு 29 வருடங்கள்! மேலதிக தகவல்கள் இங்கே!

29 வருஷமா வாழ்ந்தும் 50000 தான் ஹிட் ரேட்டாமே! இந்தக்கோயிலுக்கு வந்தவங்க, ஏறினவங்க, வழிபட்டவங்க மார்க்கெட்டிங் சரியாகப் பண்ணல போல!


செய்தி 2

இந்தச் செய்தி டோக்கியோ நகரத்தில் இருந்து. இங்கு வசிக்கும் ஒருவர் தன் வீட்டில் உணவுப் பொருட்கள் காணாமல் போவது குறித்துக் கவலை கொண்டாராம். அதற்காக ஒரு புகைப்படக் கருவி ஒன்றினை அமைத்து அதன் படங்கள் தனது செல்பேசியில் வருமாறு அமைத்தாராம். அதில் எதோ நடமாட்டம் தெரியவே காவலர்களைக் கூட்டிக் கொண்டு தன் வீட்டிற்கு விரைந்திருக்கிறார். எல்லாக் கதவுகளும் மூடப் பட்டிருந்த வீட்டில் எங்கு தேடியும் யாரையும் காணவில்லை. கடைசியாக சாமான்கள் வைக்கும் அறையில் (எங்கள் ஊரில் குச்சில், பாவுள் என இரண்டு அறைகள் உண்டு!) ஒரு மேல்தட்டில் மூதாட்டி ஒருவர் பதுங்கி இருந்ததைக் கண்டுபிடித்தனராம். அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு நாள் வீட்டைப் பூட்டாமல் சென்ற பொழுது உள்ளே நுழைந்தவர் அங்கு சாப்பிட்டு, தூங்கி எழுந்து, குளித்து, வசித்து வந்திருக்கிறார். இப்படி அவர் அங்கு இருந்தது ஒரு வருடத்திற்கும் மேலாகவாம். மேலதிகத் தகவல்கள் இங்கே!

இப்படிதான் ஒரு கதை சொல்லுவாங்க, டெல்லி சவுத் ப்ளாக்குல ஒரு புலி உள்ளே நுழைஞ்சு பல வருஷமா குமாஸ்தாங்களை அடிச்சு சாப்பிட்டுக் கிட்டிருந்ததாம், யாரும் கண்டே பிடிக்கலையாம்.. ஒரு நாள் டீ கொடுக்கற ஆளை அடிச்சு சாப்பிட்டுச்சாம், உடனே மாட்டிக்கிச்சாம்!

செய்தி 3

நான் நினைத்த நேரத்தில் நினைத்தது நடக்க வேண்டும் என்று பல வருடங்கள் தவம் இருந்த ஒரு அசுரன் வரம் கேட்பதை நாம் அம்புலிமாமா கதைகளில் கேட்டு இருக்கிறோம். இது உண்மையில் சாத்தியம் என்றால் எனக்குக் கீழ்பாக்கத்திற்கு பயணச்சீட்டு வாங்கி அனுப்புவதில் முனைப்பாக இருப்பீர்கள். ஆனால் இது இன்று சாத்தியமாகிவிட்டது என்பதுதான் உண்மை. புதரகத்தில் (வேற எங்க!) நடத்தப்பட்ட ஒரு பரிசோதனை ஒன்றில் குரங்குகளின் மூளையில் ஒரு கருவியைப் பொருத்தி அவை தமது சிந்தனையின் மூலமாக ஒரு செயற்கைக் கையை நகரச் செய்து உணவினைப் பெற்றுக் கொள்கின்றனவாம். உடல் செயலிழந்த நிலையில் இருப்பவர்களுக்கு தமது எண்ணங்களின் மூலமாக தமக்குத் தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்ளச் செய்வதற்கு இது முதல் படியாம். இந்தச் செய்தியைப் படியுங்கள் அங்கு இருக்கும் நகர்படத்தைக் கட்டாயம் பாருங்கள்.

அதாவது, டெல்லியில இருக்கற செயற்கைக் கைய வச்சு சென்னைலே இருக்கற ஆளைக் கண்ட்ரோல் பண்ணி கர்நாடகா எலெக்சன்லே ஜெயிக்க முயற்சிக்கறது போல! அது சரி குரங்குக்காவது இது வொர்க் அவுட் ஆகுதே!

செய்தி 4

நம்ம பசங்க நிறையா பேரு கண்ணுல தண்ணி வர வைக்கப் போகும் செய்தி இது. எகிப்து நாட்டில் கெய்ரோ நகரின் மிகப் பிரபலமான விடுதி கிராண்ட் ஹையாட் என அழைக்கப்படும் இவ்விடுதி. இவ்விடுதியின் சொந்தக்காரரான அப்துல் அசீஸ் அல் ப்ராஹீம் என்பவர் மது அருந்துவது இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால் இனி இவ்விடுதியில் மது பரிமாறப்படமாட்டாது என உத்தரவு போட்டு உள்ளார். அது மட்டுமில்லாது அங்கு இருந்து அனைத்து மதுபுட்டிகளையும் கழிவறையில் கொட்டச் சொல்லி விட்டார். அதனைச் செய்து முடிக்க ஒரு நாளுக்கும் மேல் ஆனதாம்!

எகிப்து இஸ்லாமிய நாடு என்பதால் இது சரி என்று ஒரு சாரரும் சர்வதேச விடுதிகள் நடத்தும் பொழுது அதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் இருப்பது தவறு, ஒரு விமானத்தில் செல்லும் பொழுது எப்படி ஒரு இஸ்லாமியருக்கு ஹலால் உணவு வழங்கப்படுகிறதோ அது போல் மேலை நாட்டவருக்கு அவருக்குத் தேவையானதைத் தருவது தவறில்லையே என மற்றொரு சாரரும் வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த முடிவை எடுத்தவர் சௌதி மன்னரின் உறவினர் என்பதால் சௌதி அரசு எப்படி அவர்களது முடிவுகளை எகிப்து நாட்டில் திணிக்கப் பார்க்கின்றனர் என்று வேறு ஒரு கோணம். எது எப்படி இருந்தாலும் கீழே கொட்டாமல் நம்ம பசங்களுக்கு அனுப்பி இருக்கலாம். இது பற்றிய பிபிசி செய்திக்குறிப்பு இது.

இந்தத் தண்ணியால அங்க பிரச்சனை, அந்தத் தண்ணியால இங்க பிரச்சனை. அரசியலில் இதெல்லாம் தண்ணி பட்ட பாடுப்பா!

செய்தி 5

இரவின் மௌனத்தைக் கலைக்கும் துப்பாக்கிகளின் சத்தங்கள், அதனைத் தொடரும் அபாய சங்கின் ஒலி, இவைகளினூடே பெருத்த மூச்சுடன் ஓடும் மனிதர்களின் காலடி ஓசை. அந்த அமாவாசை இருளை அடித்து விரட்டி வி்டும்படியான தேடொளி. அதில் மாட்டிக் கொண்டவர்களின் கைகளில் விலங்கு மாட்டி அழைத்துச் செல்கிறது புதரக எல்லை ரோந்துப் படை. ஆனால் இது நடக்கும் இடத்தில் இருந்து புதரக எல்லை 400 மைல்கள் தொலைவு!

ஆம். வேலை வாய்ப்பும் நல்ல வாழ்க்கையையும் தேடி புதரகத்தினுள் உயிரைப் பணயம் வைத்து அத்துமீறி நுழைபவர்களில் மெக்ஸிகோ நாட்டினர்தான் அதிகம். அப்படி செய்வதற்கு முடியாதவர்கள் அதனை அனுபவிக்கவென்றே ஒரு பொழுதுபோக்குப் பூங்காவினைக் கட்டியுள்ளனராம். அங்கு நடக்கும் கூத்துதான் இது. மேலும் படிக்க இதோ சுட்டி.

இதெல்லாம் பூங்காவுல நடக்குற விளையாட்டா? இங்க எல்லாம் பூங்கா நடத்துறதையே விளையாட்டாச் செய்யறாங்க. பாவம் பிபி ஸ்ரீநிவாஸ்.

செய்தி 6

சுவிஸ் கைக்கடிகாரத் தயாரிப்பாளர்களான ரோமெய்ன் ஜெரோம் என்ற நிறுவனத்தார் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் கைக்கடிகாரத்தின் பெயர் "Day & Night". மூன்று லட்சம் டாலர்கள் ($300,000) விலை பெறும் இந்த கடிகாரத்தின் சுவாரசியமே இதில் நேரம் பார்க்க முடியாது என்பதுதான்! பூமியின் புவியீர்ப்பினைக் கொண்டு பகலா இரவா என்று மட்டுமே தெரிவிக்குமாம். இந்நிறுவனத்தாரின் மற்றுமொரு தயாரிப்பு, மூழ்கிப் போன டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப் பட்ட எஃகில் செய்யப்பட்ட கடிகாரங்கள். நல்லா ஊரை ஏமாத்தறாங்கப்பா. எதுக்கும் இதை ஒரு முறை படிச்சுக்குங்க.

ஆமாமாம், நம்ம ஊர்லே கூட ஒரு சோப்பு வித்தாங்க, சுத்தமான கங்கை நீர்லே தயாரிக்கப்பட்டதுன்னு.. மார்க்கெட்டிங் உலகத்துல இதெல்லாம் சாதாரணமப்பா!

டிஸ்கி 1: புதசெவி என்றால் புன்னகை தரும் செய்திகளும் விவகாரங்களும் என்பது என் புரிதல். அதான் அங்க இங்க தேடிப் பிடிச்ச சில விஷயங்களை உங்களோட பகிர்ந்துக் கிட்டேன்.

புதசெவி - புதரகம் தயவு செய்து விலகவும் னு கம்யூனிஸ்டுகளும் போட்டுக்கொள்ளலாம், புண்ணாக்கு, தயவு செய்து விட்டுறுன்னு கொத்தனாரை நிறுத்தச் சொல்லலாம் - இதெல்லாம் விட்டுட்டு இந்த அவியலுக்குப் போயி டிஸ்கி!

டிஸ்கி 2: நம்ம பெனாத்தலாரின் பூர்வீக கிராமம் விண்ணமங்கலத்தைச் சேர்ந்த ஜெயகணேஷ் என்பவர் குடிமுறை அரசுப் பணிக்கான தேர்வெழுதி (அதாங்க தமிழ்ல சிவில் சர்வீஸ் எக்ஸாம் என்று நாம் சொல்வது) அதன் தரவரிசையில் 156ஆக வந்து சாதனை படைத்துள்ளார். பல முறை தோல்வியுற்றாலும் விடா முயற்சியால் இந்த வெற்றியை பெற்ற அவருக்கு நம் வாழ்த்துகள். பொறியியல் படித்து பல வேலைகள் செய்துள்ள இவர் ஒரு சமயத்தில் ஒரு திரையரங்கின் கணினித் துறையில் வேலை செய்யும் பொழுது அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவும் பரிமாறியுள்ளாராம். ஆனால் இவரைப் பற்றிய செய்திக்குறிப்பிற்கு ரீடிப் தளம் தந்துள்ள தலைப்பு - " The waiter who will be an IAS officer". எதற்காக இப்படி ஒரு பரபரப்புத் தலைப்பு? புதசெவி.

பரபரப்புத் தலைப்பு வைப்பது என்ன தமிழ் வலைப்பூக்களின் தனி உரிமையா? எல்லாம் ஹிட் ரேட் ஏத்தத்தாம்பா -the Engineer who made an IAS Officer னு போட்டிருந்தா கொத்தனாராச்சும் போயி பாத்திருப்பாரா? வலையுலகில் இதெல்லாம் சகஜமப்பா.

Monday, May 12, 2008

அமீரக இந்தியர்கள், உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, சோயா எண்ணை மற்றும் ரப்பர்!!

போன பதிவைப் படிச்சுட்டு, மொக்கை போடறதே வழக்கமா வெச்சு இருக்கியே என்னிக்காவது கொஞ்சம் உருப்படியா எதாவது எழுதக் கூடாதான்னு நம்ம நண்பர் ஒருத்தர் தனிமடல் ஒண்ணு அனுப்பி ஆசீர்வாதம் பண்ணி இருந்தாரு. இவரை சந்தோஷப்படுத்தற மாதிரி பதிவு போட முடியுமான்னு பார்க்கத்தான் இந்தப் பதிவு.

எதை எழுதுவது என யோசிக்கையில் வழக்கம் போல் நம்ம மக்கள் கனகாரியமாக எழுப்பி இருக்கும் ஒரு கோரிக்கையைப் படிக்கப் போய் விஷயம் சிக்கியது. ஆனால் அதைப் பற்றி பேசும் முன் சில விளக்கங்கள்.

ஒரு பொருளை தற்போது வாங்காமல் சிறிது காலத்திற்குப் பின் குறிப்பிட்ட தொகைக்கு வாங்கவோ விற்கவோ செய்யப்படும் ஒப்பந்தங்கள் எதிர்(காலப்) பேரங்கள் (Futures Contracts) என அறியப் பெறுகின்றன. இவ்வகையில் வர்த்தகம் செய்யப்படும் பொருட்கள் அரிசி, கோதுமை, மாமிசம், எண்ணை என எது வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது அந்நிய செலாவணியாகக் கூட இருக்கலாம். இவ்வகைப் பேரங்கள் எதிர்(காலப்) பேரங்கள் (Futures Contracts), விருப்பப் பேரங்கள் (Option Contracts) என இரு வகைப்படுகின்றன.

அதாவது ஜூலை இறுதியில் ஒரு கிலோ அரிசியை ரூபாய் 40க்கு வாங்கிக் கொள்கிறேன் என நான் மளிகைக் கடை அண்ணாச்சியுடன் ஒரு பேரம் செய்து கொண்டேன் என்றால் அது ஒரு விதமான எதிர் பேரம். அந்த தேதியில் அரிசி என்ன விலைக்கு விற்றாலும் நான் அண்ணாச்சியிடம் 40 ரூபாய்க்கு ஒரு கிலோ என வாங்கியே ஆக வேண்டும். அவரும் அந்த விலைக்கு விற்றாக வேண்டும். அன்றைய விலை 35 ரூபாயாக இருந்தாலும் சரி 60 ரூபாயாக இருந்தாலும் சரி. இதுவே சற்று வேறு விதமாக ஜூலை இறுதியில் ஒரு கிலோ அரிசியை 40 ரூபாய்க்கு நான் கேட்டால் தரவேண்டும் என மாற்றி ஒப்பந்தம் செய்து கொண்டால் அது விருப்பப் பேரமாகிவிடும். இதில் வர்த்தகம் செய்யப்படுவது ஜூலை இறுதியில் 40 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியைக் கேட்கக்கூடிய உரிமை மட்டுமே. அன்று அரிசியின் விலை நிலவரத்தில் கணக்கில் கொண்டு நான் 40 ரூபாய்க்கு வாங்கவோ அல்லது வாங்காமல் இருக்கவோ எனக்கு உரிமை உண்டு. இவ்வித பேரங்களில் இவ்வுரிமையை வாங்குபவர், அந்த உரிமையை விற்பவருக்கு ஒரு தொகை தந்தாக வேண்டும்.

பொதுவாக இது போன்ற வர்த்தகத்தில் இரு விதமானவர்கள் ஈடுபடுவார்கள் - அந்தத் தேதியில் அந்த பொருள் தமக்குத் தேவை என நினைப்பவர்கள் (Hedgers) அல்லது ஊக வியாபாரம் செய்பவர்கள் (Speculators) . ஒருவர் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து புதரகம் செல்ல திட்டமிட்டு இருந்தாரென்றால் இன்றே புறப்படும் பொழுது ஆயிரம் புதரக டாலர்களை, ஒரு டாலர் 35 ரூபாய் என பேரம் பேசி ஒப்பந்தம் ஒன்று செய்தாரானால் அது முதல் வகை. டாலரே தேவை இல்லாத ஒருவர் பிற்தேதியில் டாலரின் மதிப்பு அதிகமாகலாம் என நினைத்து தனக்குத் தனியாக தேவை இல்லை என்றாலும் கூட இன்றே குறைந்த விலைக்கு அதனை வாங்க ஒரு எதிர் பேரம் செய்தாரானால் அது இரண்டாம் வகை.

இந்த இரண்டாம் வகைப் பேரங்களினால் கூட ஒரு பொருளின் விலை அதிகமாகக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இது போன்று செயற்கையான விலையேற்றங்களைக் குறைப்பதற்காக அரசாங்கம் இது போன்ற எதிர் பேர ஒப்பந்தங்கள் மீது பல வித கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. சமீப கால விலையேற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக பல பொருட்களில் எதிர் பேரங்களே கூடாது என்றும் கூட கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துவிட்டது இந்திய அரசாங்கம். இதன் பகுதியாக சென்ற வாரம் சோயா எண்ணை, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை மற்றும் ரப்பர் ஆகியவற்றில் எதிர் பேரங்கள் கூடாது என அரசாங்கம் ஆணை பிறப்பித்து இருக்கின்றது.

தலைப்பில் கடைசி நான்கு வார்த்தைகளுக்கு பதிவில் விளக்கம் தந்தாயிற்று. அடுத்து அமீரக இந்தியர்கள் என்ன ஆனார்கள் என்று பார்க்கலாமா? அவர்கள் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை வைத்து இருக்கின்றார்கள். சமீப காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து விட்டதால் அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் அந்நிய செலாவணியின் மதிப்பு குறைந்து விட்டதாம். இதனால் இந்திய அரசாங்கம் இதற்குப் பொறுப்பேற்று அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டுமாம். உதாரணத்திற்கு ஒரு டாலருக்கு 50 ரூபாய்கள் கிடைத்தது போய் இன்று 40 ரூபாய்கள்தான் கிடைக்கிறதாம். இந்த பத்து ரூபாய் நட்டத்தை அரசாங்கம் ஈடு கட்ட வேண்டுமாம். என்ன வாசாப்பு ஐயா இது?

இந்த ஈடு கட்டலுக்கு நீங்கள் என்ன இந்திய அரசாங்கத்துடன் ஒரு எதிர் பேரமா செய்து கொண்டு இருக்கிறீர்கள் இந்த நட்டத்தை அவர்கள் தர? இதையே சாக்காக எடுத்துக் கொண்டு 2100 வரைச் சென்ற இன்போசிஸ் பங்குகள் இன்று 1800 ரூபாய்க்குத்தான் விலை போகின்றது. இவ்வீழ்ச்சிக்கு அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையே காரணம். எங்கள் நட்டத்திற்கு ஈடு வேண்டும் என்று ஒரு சாரார் கிளம்பலாம். இன்னும் இது போன்று எத்தனையோ காரணங்களுக்கு மற்றவர்களும் கிளம்பலாம். இதெல்லாம் ரொம்பவே அதிகமாத் தோணலை? இதுவே ரூபாயின் மதிப்புக் குறைந்து டாலருக்கு 60 ரூபாய் ஆனால் இவர்கள் என்ன ஒரு பத்து ரூபாயை வேண்டாம் என்று அரசாங்கத்திற்கா தரப் போகிறார்கள்? என்ன ஒரு பொறுப்பில்லாத பேச்சோ தெரியலை.

செய்தியைப் படிக்கும் பொழுதே சிரிக்கவா அழவான்னு தெரியலை. அந்தத் தெரிவை நீங்களே செஞ்சுக்குங்க.

Wednesday, May 07, 2008

மை டியர் பெனாத்தலாரே (08-05-2008)

பெனாத்தலாருக்கு இலவசம் எழுதும் கடிதம். எல்லாரும் சாமிக்கு கடிதம் எழுதும் போது நம்ம ரேஞ்சுக்கு நம்ம ஒரு ஆசாமிக்காவது கடிதம் எழுத வேண்டாமான்னுதான் இந்தக் கடிதமே.

உங்கள் சமீபத்திய பதிவினை படித்தேன். படிக்கப் படிக்க உம்ம மேல் இருக்கும் மதிப்பும் மரியாதை கலந்த பயமும் ஜாஸ்தியாகிக்கிட்டே போகுது.அதைப் பத்தி உங்க கிட்ட சொல்லி தெண்டனிட்டுக்கவும்தான் இந்தப் பதிவு.

முதலில் அந்த ஐபில் மேட்டர். (ஆமாம் இதை யாரும் இன்னும் படுத்தலையா?, சாரி தமிழ்ப் படுத்தலையா?)அது எப்படிங்க நீங்களும் நல்லா விளையாடிக்கிட்டு இருக்கிற அணியாப் பார்த்து உம்ம ஆதரவுக் கரத்தை நீட்டறீங்க. முதலில் தொடர்ந்து நான்கு வெற்றிகள் பெற்ற நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ். உங்க கரத்தை நீட்டினீங்களோ இல்லையே ஒண்ணு இல்லை, ரெண்டு இல்லை, தொடர்ந்து மூணு போட்டியில் அவங்க காலி. அந்த நேரம் பார்த்து அவங்களை விட்டுட்டு ராஜஸ்தானுக்கே என் ஓட்டுன்னு போயிட்டீங்க. இப்படிப் போனதுக்கே உங்களை வெச்சு பல பதிவுகள் வந்திருக்கணும். பாவம் அவங்களுக்கெல்லாம் என்ன வேலையோ, வரக் காணும். ஆனா உங்க ஆதரவைப் பெற்ற நேரம் இன்னிக்கு ராஜஸ்தானும் காலி. அது எப்படிய்யா இதெல்லாம். சில சமயம் இதெல்லாம் நினைக்கும் போது அம்மா ஆதரவு பெற்ற வாஜ்பேயி ஞாபகம்தான் வருது!

************************
தமிழகத்தில் பிறந்து பெண்களூரில் வேலை செய்து தற்போது புதரகத்தில் இருப்பதாலும் அதை விட முக்கியமா சாப்பாட்டைப் பற்றி பேசி இருப்பதாலும் நீங்கள் இரண்டாவதாகத் தொட்டுச் சென்று இருக்கும் தலைப்பை தெரிவில் விட்டுட்டு அப்படியே உலக நாயகன் மேட்டருக்குப் போறேன்.


//ஆனால் கமல் ஆச்சர்யங்களை உள்ளே வைத்திருப்பவர். //

என்னதான் வேசம் கட்டினாலும் கமல் ஒரு(க்) கால் மறைத்த ஆச்சார்யங்கள் உள்ளே வைத்திருப்பவர் என்ற உண்மை தெரிந்ததால்தான் சிவாசிக்குச் செய்த பிளாச் போல (தமிழ் தெரியாத ஆரிய கூத்தாடிகளுக்காக - சிவாஜிக்கு செய்த ஃபிளாஷ் எனப் படிக்கவும்), போக்கிரிக்குச் செய்த விமர்சனம் போல இவருக்குப் போட மாட்டேன் என்ற நிலைப்பாடா என மற்றவர்கள் கேட்கும் முன் ஆச்சரியத்தைச் சரியா வெளிப்படுத்துங்க. அம்புட்டுதான்.

****************************

இன்னமுமா மக்கள் இந்த மாதிரி ஏமாற்று திட்டங்களுக்கு ஏமாந்து போய் காசை விட்டுக்கிட்டு இருக்காங்க? பேசாம இந்த பெட்டி தட்டற வேலையை எல்லாம் விட்டுட்டு நாமளும் இதுல இறங்க வேண்டியதுதான் போல. தமிழ்ன்னு சொல்லி ஏமாத்தறவன், பாலம் சாமின்னு சொல்றவங்க, பால சாமி தவிர மத்த சாமி எல்லாம் ஓக்கேன்னு சொல்றவங்க், இவன் தமிழன், இவன் ஆரியன்னு உறுதிப்படுத்தறவங்க, எந்தெந்த சாதி பேர் வெளிப்படையா சொல்லலாம்னு நிர்ணயம் செய்றவங்க, எல்லாம் நல்லாத்தானே இருக்கான். இவனுங்க மாதிரி நாமளும் தெரிஞ்சே ஏமாத்தினாக் கூட, நல்லாத்தான் இருப்போம். என்ன முதல் போட கொஞ்சம் பணம் வேணும். அடுத்து நைஜீரியாவில் இருந்து பல மில்லியன் டாலர் பணம் அனுப்புறவன் கிட்ட இருந்து சில மில்லியன்கள் மட்டுமாவது வாங்கிக்க வேண்டியதுதான். என்ன சொல்லறீங்க? சேர்ந்தே செய்யலாமா?

****************************

தமிழ்மணம் நல்லாத்தான் இருக்கு. என்ன முன்ன எல்லாம் ஸ்க்ரோல் (தமிழ்?) செய்யாமலேயே நிறையா பதிவுகள் பார்க்க முடிஞ்சுது. ஆனா இப்போ எழுத்து சின்னதா ஆகிக் கூட அதிகமா ஸ்க்ரோல் பண்ண வேண்டியதா இருக்கு! போகப் போக பழகிடும்ன்னு நினைக்கிறேன். கூகிள் ரீடரில் பின்னூட்டங்கள் படிக்க முடியாதது ஒரு குறை. அதை சரி செய்ய இளா சொல்லித் தரேன்னு சொல்லி இருக்காரு.

அப்புறம் இந்த உத்தப்புரத்தைப் பத்தி ஆளாளுக்கு எழுதறீங்க. எனக்கு ஒரே ஒரு கேள்வி. சுவரைக் கட்டி இருக்காங்க சரி. அது தப்புன்னு தெரியும் பொழுது அதை இடிச்சு தள்ளாம அது என்ன அதில் நிலைவாசல் வைக்கிறேன், நிலையில்லாத வாசல் வைக்கிறேன்னு வழவழா கொழகொழான்னு ஒரு முடிவு. அதுக்கு சபாஷ் சரியான தீர்ப்புன்னு சொல்ல நாலு பேரு. ஒண்ணும் சரியாப் படலையே?

**************************

நிறையா சினிமா பார்க்கறீரு. நீர் படும் பாட்டை நான் பார்த்து ரசிச்சுக்கறேன். அதே போதும் எனக்கு.

கடைசியா நம்ம பக்கத்தில் இருந்து ஒண்ணு. மன அழுத்தம் இருக்கிறவங்களுக்கு மருந்தா வலைபதியறது இருக்குன்னு சொல்லி இருக்காங்க. ஒரு பொண்ணு தற்கொலை வரைக்கும் போயிருச்சாம். அதுக்கு முன்னாடி பதிவு போட்டதால அதுக்கு மன அழுத்தம் குறைஞ்சு நல்லபடியா ஆயிருச்சாம். இங்க என்னடான்னா பதிவு போட்டு பின்னூட்டமே வரலைன்னுதான் மன அழுத்தமே வருதாமே. அது பத்தி நீங்க எதனா கேள்விப்பட்டீங்களா? (நீங்க கேள்விப்படாட்டி வேற யாரு கேள்விப்படுவாங்க?) எனக்குத் தெரிஞ்சு எழுத்துப் பிழை இல்லாம எழுதும் பொழுதுதான் இந்த அழுத்தம் அதிகம் வருதுன்னு நினைக்கிறேன். "வளைப்பதிவுப் போட்டு மண அலுத்தம் குரைப்பதற்க்கான அர்புதமாண நேறம் இது.. " அப்படின்னு எழுதறவங்க பதிவைப் பாருங்க, மறக்காம வந்து சூப்பர் தலைவா, பின்னிட்டீங்கன்னு எல்லாம் பின்னூட்டும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். அதனால அப்படி ஒரு பதிவு வேணா போட்டுப் பாருங்களேன்!

இப்படிக்கு அன்புடன்
கொத்ஸ்

டிஸ்கி 1: கடிதமெழுதும் இட்லிவடை காணாமல் போய்விட்டார். படிக்க கடிதம் கிடைக்காமல் கை கால் உதறல் எடுப்பதால் நானே எழுதிவிட்டேன்.

டிஸ்கி 2: அசந்து தூங்கினால் ஆள் காலி எனச் சொல்லும் வலை உலகில், உள்ளேன் ஐயா பதிவு பெனாத்தலார் போட்ட பதிவின் தாக்கதால் நானும் போட்ட உள்ளேன் ஐயா பதிவு இது. மேட்டர் இல்லாத காரணத்தால் அவருடைய பதிவையே எடுத்து மொக்கை போட வேண்டியதாய் ஆயிற்று

டிஸ்கி 3: மேலே உள்ள அத்தனை கதாபாத்திரங்களும் கற்பனையே (இது சும்மா பாதுகாப்புக்காக. இதை எல்லாம் போடலைன்னா நம்ம கே ஆர் எஸ் சரித்திர சான்று எல்லாம் கேட்டு கொத்தனாரின் அம்மணக்குண்டி பொய்கள் அப்படின்னு பதிவு போட்டாலும் போடுவாரு. அதான்.)

Wednesday, April 30, 2008

டேக் கேர் கோவி!!

என்னதான் எதிர் அணியில் இருந்தாலும் சக மனிதர் ஒருவருக்கு இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்தா அது நமக்கு கஷ்டமாத்தானே இருக்கு. ரொம்ப சாதாரணமா இப்படி எல்லாம் ஆடினா இப்படித்தான் என்றோ எல்லாம் தலைவிதி என்றோ சொல்லிவிட்டுப் போக முடியும் என்றாலும் அதையும் மீறிய பரிதாபத்தினால் ஐயோ பாவம் எனச் சொல்லி அவருக்காக ஒரு நிமிடம் பிரார்த்திப்பதில்தானே நம் மனிதத்தன்மை இன்னும் முழுதாக மறைந்துவிடவில்லை எனத் தெரிகிறது.

என்ன செய்ய. சில சமயங்களில் நாம செய்யும் வேலை நம்ம கட்டுப்பாட்டில் இல்லாம ஆயிடுது. இதனால நமக்கும் கஷ்டம் நம்ம சுத்தி இருக்கிறவங்களுக்கும் கஷ்டம். இது நாம பண்ணற தப்புனால இருக்கலாம் அல்லது நம்மளையும் மீறின சக்தியினாலும் இருக்கலாம். அந்த மாதிரி ஒரு விஷயம்தான் இப்போ நடந்து போச்சு!! இது கோவியையும் மீறின ஒரு செயலாத்தான் இருக்கு. ஆனா பாவம் அதனால அவருக்கு எவ்வளவு வேதனை! எவ்வளவு சங்கடம்!!

டேக் கேர் கோவி!!



இன்னும் விஷயம் தெளிவாத் தெரியணுமுன்னா இதையும் பாருங்க.



டிஸ்கி 1 : ஃபெராரி அணியின் ரசிகனான எனக்கு மெக்லேரன் அணியின் கோவி என்ற கோவலைனன் எதிர் அணியில் இருப்பவராக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட இந்த விபத்து கொடுமையானது. கடவுளின் கிருபையால் அவருக்கு பெரிதாக அடிபடவில்லை. மீண்டும் அடுத்த போட்டியில் நல்ல படியாக கலந்து கொள்ள என் வாழ்த்துக்கள்.

டிஸ்கி 2: சங்க சிங்கங்களின் கையில் சிக்கி சின்னாப்பின்னமாகப் போகும் அண்ணன் கோவி கண்ணனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். டேக் கேர் கோவி!!

Monday, March 31, 2008

கொத்தனாரின் டைரிக் குறிப்பு!



சனிக்கிழமை, மார்ச் 29, 2008

இன்று மதியம் நம்ம ஆன்மீகச் செம்மல் கேஆர்எஸ் சொன்ன அவரைக்காய் பொரிச்ச கூட்டுதான் மெனு. நல்லாவே இருந்தது. முக்கியமா அவரு சொன்னா மாதிரி காயை வெட்டினது வித்தியாசமா இருந்தது.

நம்ம ஜூனியர் நேத்து ஒரு விஷயம் சொன்னாரு. நம்ம ரீச்சர் பதிவிலும் அதைப் பத்தி பின்னர் படிச்சேன். அதாவது நேத்து பூமிக்காக ஒரு மணி நேரம் அப்படின்னு பூமி பற்றிய விழிப்புணர்வுக்காக ஒரு மணி நேரம் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு இருக்க வேண்டுமாம். எவ்வளவோ செஞ்சுட்டோம், இதைச் செய்ய மாட்டோமா அப்படின்னு நாங்களும் அந்த திட்டத்திற்கு சரி என்று சொல்லியாகிவிட்டது. வீட்டில் பொதுவாக மெழுகுவர்த்தி எல்லாம் வைத்துக் கொள்வது இல்லை என்பதால் இந்த நிகழ்ச்சிக்காக போய் சிலவற்றை வாங்கிக் கொண்டு வந்தோம். சீக்கிரமே சாப்பாட்டை எல்லாம் முடித்துக் கொண்டு விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு மெழுகுவர்த்திகளை ஏற்றிவிட்டு குடும்பமே அதனைச் சுற்றி அமர்ந்து கொண்டு பேசத் தொடங்கினோம். நம்ம தங்கமணியின் தந்தை அவர் சிறுவயது நிகழ்வுகளை எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தார். ரொம்ப சுவாரசியமா இருந்ததால ஒரு மணி நேரம் போனதே தெரியலை. இந்த ஒரு மணி நேரமும் குடும்பத்தில் எல்லாரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்ததே ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. உலகத்தைக் காக்கறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் இப்படிப் பேசவாவது மாசம் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டியதுதான். என்ன சொல்லறீங்க?



ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30, 2008

Horton hears a Who அப்படின்னு ஒரு திரைப்படம் போனோம். Dr.Seuss
என்பவர் குழந்தைகளுக்கான கதைகள் பலவற்றை எழுதி உள்ளார். எதுகை மோனையுடம் பாட்டுப் போல எழுதப்பட்டிருக்கும் இவரது கதைகள் குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல தீனி. இவருடைய கதைதான் இந்த திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காட்டில் ஒரு யானை. அதன் பெயர் ஹார்டன். அந்த யானையின் அருகே பறந்து செல்லும் ஒரு தூசில் இருந்து அபயக் குரல் ஒன்று கேட்டதாக நினைத்து அத்தூசின் பின் சென்று உதவ நினைக்கிறது ஹார்டன். தூசில் இருந்து குரல் கேட்பதாவது எனச் சொல்லி யானைக்குப் பயித்தியக்கார பட்டம் கட்ட நினைக்கின்றன சில மிருகங்கள். தூசினுள் ஒரு உலகம், அதில் ஹூ என்ற ஒரு வித உயிரினம், அவர்களின் வாழ்க்கை, அவர்களுக்கு உண்டான சோதனை எனப் படம் விரிகிறது. ஹார்டனால் ஹூக்களுக்கு உதவி செய்ய முடிகிறதா, பயித்திக்காரப் பட்டம் கிடைத்ததா என்பதுதான் படம்.








"I meant what I said, and I said what I meant" என்று பஞ்ச் டயலாக் பேசும் யானை அழகு! என் பையன் மட்டுமின்றி நானும் எங்களுடன் வந்திருந்த தங்கமணியின் தாயாரும் கூட ரசித்துப் பார்க்கும் வண்ணம் படத்தை எடுத்திருக்கும் குழுவினருக்கு ஒரு சபாஷ்!

இன்று இரவு ரீச்சரின் பள்ளிக்கூடத்தில் கற்றுத் தந்த பீர்க்கங்காய் வாட்டெவர் இட் இஸ் செய்தேன். நன்றாக இருந்தது. சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள நன்றாகவே இருக்கிறது.

டிஸ்கி: என்னிடம் கேள்வி கேட்டுப் பதிவு போட்ட பொழுது ஆபாசப் பின்னூட்டங்கள் அதிகம் வருவதாக நண்பர் டிபிசிடி சொன்ன பொழுது மிக வருத்தமாய் இருந்தது. நான் இது வரை எழுதியது எதுவுமே கண்ணியம் குறைந்து இல்லை. என் நண்பர்கள் யாரும் அது போல செய்பவர்கள் இல்லை. இது வரை இந்த மாதிரி குற்றச்சாட்டு வந்ததும் இல்லை. அது பற்றிய விபரங்கள் (பெயர், ஐபி முகவரி போன்றவை) இருந்தால் அவைகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது எனக்கு அவற்றைப் பின்னூட்டமாக தந்தால் நான் வெளியிடுகிறேன். இப்படி ஒரு டிஸ்கி போட வேண்டிய நிலையில் தமிழ்வலையுலகம் இருப்பதற்காக வருந்துகிறேன்.

Wednesday, March 26, 2008

நட்சத்திர வாத்தியாருக்கு ஒரு கேள்வி!

அன்பு வாத்தியாருக்கு வணக்கங்கள். தங்களின் நட்சத்திர வாரப் பதிவுகளை ஆவலுடன் படித்துக் கொண்டு வருகிறேன். என்னைப் போன்றவர்களுக்கு போன தலைமுறை தலைவர்களைப் பற்றி நீங்கள் தரும் அறிமுகங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் இந்தப் பதிவைப் படித்த உடன் என் மனதில் எழும் உணர்ச்சிகள் குறித்து எழுதாமல் இருக்க முடியவில்லை. நிற்க.

நான் அண்ணாவின் காலத்தில் பிறக்கவே இல்லை. அதனால் என் கருத்துக்களில் தவறேதும் இருந்தால் தயவு செய்து திருத்தவும். ஆனால் பிறந்தது முதலாக இந்தக் கழகங்கள் அடிக்கும் கூத்துக்களுடனே வளர்ந்தவன் என்கின்ற முறையில் எனக்கு இந்தப் பதிவைப் படிக்கும் பொழுது எழுந்த உணர்வுகள் இவைதான்.

அவரின் பேச்சுத் திறனைப் பற்றி நீங்கள் பெருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். அது பற்றிப் பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவரின் பேச்சுக்களை அதிகமாய்க் கேட்டதோ படித்ததோ கிடையாது. அப்படி இருக்கையில் நீங்கள் இங்கு காட்டாகத் தந்திருக்கும் சிறு பகுதியைப் படித்த பொழுது எனக்கு இதுவா இவரின் பேச்சுத் திறன் என்றே தோன்றுகிறது. சினிமா வசனம் போல் எதுகை மோனைகளும் அடுக்குத் தொடர்களும் இருந்தால் நல்ல பேச்சு என்றே நாம் வளர்ந்து விட்டோமா? அந்த பேச்சின் சாரம் என்ன என்பது பற்றிப் பார்க்கவே வேண்டாமா? நீங்கள் கலக்கல் என்று குறிப்பிட்டு இத்தனை வருட காலம் உங்கள் நினைவில் இருக்கும் இந்தப் பேச்சில் என்ன சொல்ல வருகிறார்? புராண காலங்களில் ரயில் ஓடியதா? டெலிபோன் இருந்ததா? ரேடியோ இருந்ததா? வெயர்லெஸ் இருந்ததா? என்றெல்லாம் கேட்கிறார். இதில் என்ன சொல்ல வருகிறார்? என்ன கருத்து இருக்கிறது? இன்றைக்கு நாம் பார்க்கும் ஹிந்து மத துவேஷம் அன்றே இருந்தது என்பது மட்டும்தான் தெரிகிறது. அன்றைக்கு அவர் ஆரம்பித்து வைத்த அடுக்கு மொழி தமிழில் பேசினால் போதும் ஆனால் அர்த்தம் தொனிக்கப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்கின்ற சூத்திரம்தான் இன்றைக்கும் நம்மிடையே இருக்கிறது என்று தெரிகிறது. இன்று கூட வேறொரு வலைப்பதிவில் படித்தேன். முதல்வர் கேட்டு இருக்கும் கேள்வி ஒன்று என்ன தெரியுமா? "சீதையை ராவணன் அபகரிச்சுகிட்டுப் போனபோது எந்த போலீஸ்காரர் தடுக்க முயற்சிசெஞ்சார்னு முதல்வர் கருணாநிதி லேட்டஸ்டா கேட்டிருக்காரு." ரெண்டு பேர் பேச்சுக்கும் ரொம்பவும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. அண்ணாவின் வழி நடப்பவன் என்று கலைஞர் சொல்லும் பொழுது உண்மையைத்தான் சொல்கிறார். இந்த அளவிலாவது.

நாமும் இன்று பேசலாம் அண்ணாவின் ஆட்சியில் இண்டர்நெட் இருந்ததா, அண்ணா காலத்தில் டாட்டா நேனோ உண்டா, இல்லை ஐபாட்தான் உண்டா? இப்படிப் பேசினால் என்ன பயன்? இல்லை உருப்படியாக எதாவதுதான் சொல்ல வருகிறோமா? இப்படி அர்த்தமற்ற அடுக்கு மொழி பேசியே நாட்டு மக்களை மயக்கி வாக்குகளை அள்ளிச் செல்வதை விடுத்து இதுவரை செய்தது என்ன, இனி செய்யப் போவது என்ன என்று சொல்லி வாக்கு கேட்கும் நிலை என்றாவது வருமா? இப்படிப்பட்ட பேச்சு ஒன்றைக் கலக்கல் பேச்சு என நீங்கள் சொல்வதால் இதில் அப்படி என்ன கலக்கலை கண்டு கொண்டீர்கள் எனப் புரியாமல் விழிக்கிறேன். கதைகளில் எழுதப்பட்ட வர்ணனைகள் என்றால் சரி அல்லது ஒரு இலக்கிய கூட்டமென்றால் கூட சரி. அரசியல் மேடையில் இது போன்ற பேச்சுக்கு என்ன அவசியம் என்றுதான் புரியவில்லை.

உண்மைத்தமிழன் சொல்லி இருக்கிறார் "பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்கின்ற தலைப்பிலேயே ஒரு மனிதர் 2 மணி நேரம் பேச முடிகிறதெனில் அவருடைய அறிவுத் திறனை பற்றி யாரால் மதிப்பிட முடியும்.." உண்மைதான். இப்படி எந்தவிதமான தலைப்பில் அழகாகப் பேச தனித்திறமைதான் வேண்டும். ஆனால் அந்தத் திறமையை இலக்கிய மேடைகளோடு நிறுத்திக் கொள்வதுதானே நியாயம். அரசியல் மேடையிலும் இந்த மாதிரி அழகான தமிழில் பேசினால் போதுமே தவிர அர்த்தம் என்ற ஒன்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதா சரி? வாத்தியார் என அழைக்கப்படும் நீங்களே இதனை இவ்வளவு பாராட்டிப் பேசுகிறீர்களே. இதுதான் என்னைக் குழப்புகிறது. இன்றைக்கு தமிழ்வலைப்பதிவுகளில் இது போல் கேட்கவேண்டுமானால் புதசெவி என்று சொல்ல வேண்டுமாமே. நானும் சொல்கிறேன். புதசெவி!

உங்கள் அளவுக்கு, நீங்கள் சிலாகித்த பேச்சில் எந்த ஒரு ஆழமான பொருளும் இல்லை என்று நினைப்பதால், நேரடியாகவே கேட்டுவிடலாமே என்றே இந்தக்கேள்வி. அண்ணாவைப் பற்றி சரியாகவோ, தவறாகவோ பேசும் அளவுக்கு எனக்கு ஒன்றும் தெரியாது. அண்ணாவின் பிம்பமும் கேள்விகள் கேட்கக்கூடாத அளவுக்குக் கட்டமைக்கப்பட்டுவிட்டதா, கேள்வி கேட்டால் தமிழினத் துரோகி என்று பட்டம் கட்டப்படுவேனா - அதுவும்தான் தெரியாது. அப்படியே சொன்னாலும் -- புதுசா என்ன?