Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, March 26, 2008

நட்சத்திர வாத்தியாருக்கு ஒரு கேள்வி!

அன்பு வாத்தியாருக்கு வணக்கங்கள். தங்களின் நட்சத்திர வாரப் பதிவுகளை ஆவலுடன் படித்துக் கொண்டு வருகிறேன். என்னைப் போன்றவர்களுக்கு போன தலைமுறை தலைவர்களைப் பற்றி நீங்கள் தரும் அறிமுகங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் இந்தப் பதிவைப் படித்த உடன் என் மனதில் எழும் உணர்ச்சிகள் குறித்து எழுதாமல் இருக்க முடியவில்லை. நிற்க.

நான் அண்ணாவின் காலத்தில் பிறக்கவே இல்லை. அதனால் என் கருத்துக்களில் தவறேதும் இருந்தால் தயவு செய்து திருத்தவும். ஆனால் பிறந்தது முதலாக இந்தக் கழகங்கள் அடிக்கும் கூத்துக்களுடனே வளர்ந்தவன் என்கின்ற முறையில் எனக்கு இந்தப் பதிவைப் படிக்கும் பொழுது எழுந்த உணர்வுகள் இவைதான்.

அவரின் பேச்சுத் திறனைப் பற்றி நீங்கள் பெருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். அது பற்றிப் பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவரின் பேச்சுக்களை அதிகமாய்க் கேட்டதோ படித்ததோ கிடையாது. அப்படி இருக்கையில் நீங்கள் இங்கு காட்டாகத் தந்திருக்கும் சிறு பகுதியைப் படித்த பொழுது எனக்கு இதுவா இவரின் பேச்சுத் திறன் என்றே தோன்றுகிறது. சினிமா வசனம் போல் எதுகை மோனைகளும் அடுக்குத் தொடர்களும் இருந்தால் நல்ல பேச்சு என்றே நாம் வளர்ந்து விட்டோமா? அந்த பேச்சின் சாரம் என்ன என்பது பற்றிப் பார்க்கவே வேண்டாமா? நீங்கள் கலக்கல் என்று குறிப்பிட்டு இத்தனை வருட காலம் உங்கள் நினைவில் இருக்கும் இந்தப் பேச்சில் என்ன சொல்ல வருகிறார்? புராண காலங்களில் ரயில் ஓடியதா? டெலிபோன் இருந்ததா? ரேடியோ இருந்ததா? வெயர்லெஸ் இருந்ததா? என்றெல்லாம் கேட்கிறார். இதில் என்ன சொல்ல வருகிறார்? என்ன கருத்து இருக்கிறது? இன்றைக்கு நாம் பார்க்கும் ஹிந்து மத துவேஷம் அன்றே இருந்தது என்பது மட்டும்தான் தெரிகிறது. அன்றைக்கு அவர் ஆரம்பித்து வைத்த அடுக்கு மொழி தமிழில் பேசினால் போதும் ஆனால் அர்த்தம் தொனிக்கப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்கின்ற சூத்திரம்தான் இன்றைக்கும் நம்மிடையே இருக்கிறது என்று தெரிகிறது. இன்று கூட வேறொரு வலைப்பதிவில் படித்தேன். முதல்வர் கேட்டு இருக்கும் கேள்வி ஒன்று என்ன தெரியுமா? "சீதையை ராவணன் அபகரிச்சுகிட்டுப் போனபோது எந்த போலீஸ்காரர் தடுக்க முயற்சிசெஞ்சார்னு முதல்வர் கருணாநிதி லேட்டஸ்டா கேட்டிருக்காரு." ரெண்டு பேர் பேச்சுக்கும் ரொம்பவும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. அண்ணாவின் வழி நடப்பவன் என்று கலைஞர் சொல்லும் பொழுது உண்மையைத்தான் சொல்கிறார். இந்த அளவிலாவது.

நாமும் இன்று பேசலாம் அண்ணாவின் ஆட்சியில் இண்டர்நெட் இருந்ததா, அண்ணா காலத்தில் டாட்டா நேனோ உண்டா, இல்லை ஐபாட்தான் உண்டா? இப்படிப் பேசினால் என்ன பயன்? இல்லை உருப்படியாக எதாவதுதான் சொல்ல வருகிறோமா? இப்படி அர்த்தமற்ற அடுக்கு மொழி பேசியே நாட்டு மக்களை மயக்கி வாக்குகளை அள்ளிச் செல்வதை விடுத்து இதுவரை செய்தது என்ன, இனி செய்யப் போவது என்ன என்று சொல்லி வாக்கு கேட்கும் நிலை என்றாவது வருமா? இப்படிப்பட்ட பேச்சு ஒன்றைக் கலக்கல் பேச்சு என நீங்கள் சொல்வதால் இதில் அப்படி என்ன கலக்கலை கண்டு கொண்டீர்கள் எனப் புரியாமல் விழிக்கிறேன். கதைகளில் எழுதப்பட்ட வர்ணனைகள் என்றால் சரி அல்லது ஒரு இலக்கிய கூட்டமென்றால் கூட சரி. அரசியல் மேடையில் இது போன்ற பேச்சுக்கு என்ன அவசியம் என்றுதான் புரியவில்லை.

உண்மைத்தமிழன் சொல்லி இருக்கிறார் "பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்கின்ற தலைப்பிலேயே ஒரு மனிதர் 2 மணி நேரம் பேச முடிகிறதெனில் அவருடைய அறிவுத் திறனை பற்றி யாரால் மதிப்பிட முடியும்.." உண்மைதான். இப்படி எந்தவிதமான தலைப்பில் அழகாகப் பேச தனித்திறமைதான் வேண்டும். ஆனால் அந்தத் திறமையை இலக்கிய மேடைகளோடு நிறுத்திக் கொள்வதுதானே நியாயம். அரசியல் மேடையிலும் இந்த மாதிரி அழகான தமிழில் பேசினால் போதுமே தவிர அர்த்தம் என்ற ஒன்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதா சரி? வாத்தியார் என அழைக்கப்படும் நீங்களே இதனை இவ்வளவு பாராட்டிப் பேசுகிறீர்களே. இதுதான் என்னைக் குழப்புகிறது. இன்றைக்கு தமிழ்வலைப்பதிவுகளில் இது போல் கேட்கவேண்டுமானால் புதசெவி என்று சொல்ல வேண்டுமாமே. நானும் சொல்கிறேன். புதசெவி!

உங்கள் அளவுக்கு, நீங்கள் சிலாகித்த பேச்சில் எந்த ஒரு ஆழமான பொருளும் இல்லை என்று நினைப்பதால், நேரடியாகவே கேட்டுவிடலாமே என்றே இந்தக்கேள்வி. அண்ணாவைப் பற்றி சரியாகவோ, தவறாகவோ பேசும் அளவுக்கு எனக்கு ஒன்றும் தெரியாது. அண்ணாவின் பிம்பமும் கேள்விகள் கேட்கக்கூடாத அளவுக்குக் கட்டமைக்கப்பட்டுவிட்டதா, கேள்வி கேட்டால் தமிழினத் துரோகி என்று பட்டம் கட்டப்படுவேனா - அதுவும்தான் தெரியாது. அப்படியே சொன்னாலும் -- புதுசா என்ன?

Thursday, November 29, 2007

கலைஞரே, உம்ம வேலையைப் பார்த்துக்கிட்டு போம்!

நார்மலா, நம்ம பதிவுலகில் சில டாபிக்குகள் எல்லாம் உடனே பல பேர் பதிவு போடற மேட்டராத் தெரியும். அது போலவே அந்தந்த சீசனில் நிறையா பேரு அந்த தலைப்பில், அந்த விஷயத்தைப் பத்தி பதிவு போடுவாங்க. இந்த தலைப்பா இருந்தா அதுக்குப் பதிவு போட ஒரு குழு, அந்தத் தலைப்பா இருந்தா அதுக்கு வேற ஒரு கும்பல் என எழுதப்படாத விதிகளும் உண்டு. இதில் ஆதரவுப் பதிவுகள், எதிர்ப்புப் பதிவுகள் எல்லாம் வரும்.

இன்னைக்கு அந்த மாதிரி ஒரு பரபரப்பான நாளா இருக்கும் அப்படின்னு எதிர்பார்த்தேன். அப்படி எதுவும் இல்லாததால நானே இந்தப் பதிவைப் போடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

இப்போ ஒரு முறை தலைப்பைப் படிச்சுக்குங்க. உடனே பிளட் பிரஷர் எல்லாம் ஏறி என் மூதாதையர் பத்தியும் என் பனியனுக்குள் நெளிவது பத்தியும் பேசத் தயாராகும் முன்னரே சொல்லிடறேன். இது நான் சொன்னது இல்லை. இதைச் சொன்னது மலேசியாவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான நஸ்ரி அசீஸ் என்பவர்.

மலேசியாவில் சில கோரிக்கைகளை முன் வைத்து ஹிந்திராப் என்ற அமைப்பின் மூலம் ஒரு போராட்டம் நடைபெற்றது. இந்த கோரிக்கைகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இந்த பதிவும் அது பத்தி இல்லை. ஆனால் போலீஸர் கண்ணீர் புகை குண்டுகள் வீசிக் இக்கூட்டத்தினரைக் கலைத்தது பற்றியும், கிட்டத்தட்ட 250 பேரை கைது செய்தததையும் தமிழக முதல்வர், இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த இந்தக் கூட்டதினரை நடத்திய விதம் குறித்த தம் வருத்தத்தைத் தெரிவித்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த மலேசிய அமைச்சர் அசீஸ் 'Tamil Nadu Chief Minister M Karunanidhi should "lay off" ' எனச் சொல்லி இருக்கிறார். கிட்டத்தட்ட உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க எனப் பொருள்படும்படி பேசி இருப்பது மிகவும் மரியாதை குறைவாகவே கருத வேண்டியிருக்கிறது. இது மலேசியா. அவரது இடம் தமிழகம். அங்கே இருக்கும் பிரச்சனைகளை அவர் கவனித்தால் போதும் எனப் பொருள்படும் படியாகப் பேசி இருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

தமிழர்களைப் பற்றி கவலைப்பட தமிழகத்தின் முதல்வருக்குத் தகுதி கிடையாதா? ஒரு மூத்த அரசியல்வாதியை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை இப்படித் தரகுறைவாக விமர்சித்திருப்பதற்கு நாம் அனைவரும் நம் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து மலேசியாவில் இருக்கும் பதிவர்களோ, தமிழகத்தில் இருக்கும் பதிவர்களோ பதிவிட்டிருப்பதாகத் தெரியவில்லை. மற்ற விஷயங்களுக்கு கொந்தளித்து எழுபவர்கள் இதற்குச் சும்மா இருப்பதன் பின்புலம் புரியவில்லை. மீண்டும் சொல்கிறேன் மலேசிய அமைச்சரின் பேச்சு கண்டிக்கப் பட வேண்டியது. இதற்காக இந்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போராட்டம் குறித்து அமெரிக்கா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் எந்த நாட்டு குடிமக்களும் தம் அமைதியான முறையில் தம் கருத்துக்களை வெளியிடும் உரிமை இருப்பதாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு ஒரு முறை வெளிநாட்டு வாழ் இந்தியர்களைப் பற்றி நான் எழுதிய பொழுது, வேறு ஒரு நாட்டின் குடிமக்களாக மாறிவிட்ட பின் அவர்கள் இந்தியர்கள் இல்லை என கருத்துத் தெரிவித்தவர்கள், இன்று மலேயா வாழ் தமிழர்களுக்காக கலைஞர் குரல் கொடுத்ததைத் தவறென்று சொல்வார்களா எனத் தெரியவில்லை.