Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Thursday, November 29, 2007

கலைஞரே, உம்ம வேலையைப் பார்த்துக்கிட்டு போம்!

நார்மலா, நம்ம பதிவுலகில் சில டாபிக்குகள் எல்லாம் உடனே பல பேர் பதிவு போடற மேட்டராத் தெரியும். அது போலவே அந்தந்த சீசனில் நிறையா பேரு அந்த தலைப்பில், அந்த விஷயத்தைப் பத்தி பதிவு போடுவாங்க. இந்த தலைப்பா இருந்தா அதுக்குப் பதிவு போட ஒரு குழு, அந்தத் தலைப்பா இருந்தா அதுக்கு வேற ஒரு கும்பல் என எழுதப்படாத விதிகளும் உண்டு. இதில் ஆதரவுப் பதிவுகள், எதிர்ப்புப் பதிவுகள் எல்லாம் வரும்.

இன்னைக்கு அந்த மாதிரி ஒரு பரபரப்பான நாளா இருக்கும் அப்படின்னு எதிர்பார்த்தேன். அப்படி எதுவும் இல்லாததால நானே இந்தப் பதிவைப் போடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

இப்போ ஒரு முறை தலைப்பைப் படிச்சுக்குங்க. உடனே பிளட் பிரஷர் எல்லாம் ஏறி என் மூதாதையர் பத்தியும் என் பனியனுக்குள் நெளிவது பத்தியும் பேசத் தயாராகும் முன்னரே சொல்லிடறேன். இது நான் சொன்னது இல்லை. இதைச் சொன்னது மலேசியாவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான நஸ்ரி அசீஸ் என்பவர்.

மலேசியாவில் சில கோரிக்கைகளை முன் வைத்து ஹிந்திராப் என்ற அமைப்பின் மூலம் ஒரு போராட்டம் நடைபெற்றது. இந்த கோரிக்கைகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இந்த பதிவும் அது பத்தி இல்லை. ஆனால் போலீஸர் கண்ணீர் புகை குண்டுகள் வீசிக் இக்கூட்டத்தினரைக் கலைத்தது பற்றியும், கிட்டத்தட்ட 250 பேரை கைது செய்தததையும் தமிழக முதல்வர், இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த இந்தக் கூட்டதினரை நடத்திய விதம் குறித்த தம் வருத்தத்தைத் தெரிவித்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த மலேசிய அமைச்சர் அசீஸ் 'Tamil Nadu Chief Minister M Karunanidhi should "lay off" ' எனச் சொல்லி இருக்கிறார். கிட்டத்தட்ட உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க எனப் பொருள்படும்படி பேசி இருப்பது மிகவும் மரியாதை குறைவாகவே கருத வேண்டியிருக்கிறது. இது மலேசியா. அவரது இடம் தமிழகம். அங்கே இருக்கும் பிரச்சனைகளை அவர் கவனித்தால் போதும் எனப் பொருள்படும் படியாகப் பேசி இருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

தமிழர்களைப் பற்றி கவலைப்பட தமிழகத்தின் முதல்வருக்குத் தகுதி கிடையாதா? ஒரு மூத்த அரசியல்வாதியை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை இப்படித் தரகுறைவாக விமர்சித்திருப்பதற்கு நாம் அனைவரும் நம் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து மலேசியாவில் இருக்கும் பதிவர்களோ, தமிழகத்தில் இருக்கும் பதிவர்களோ பதிவிட்டிருப்பதாகத் தெரியவில்லை. மற்ற விஷயங்களுக்கு கொந்தளித்து எழுபவர்கள் இதற்குச் சும்மா இருப்பதன் பின்புலம் புரியவில்லை. மீண்டும் சொல்கிறேன் மலேசிய அமைச்சரின் பேச்சு கண்டிக்கப் பட வேண்டியது. இதற்காக இந்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போராட்டம் குறித்து அமெரிக்கா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் எந்த நாட்டு குடிமக்களும் தம் அமைதியான முறையில் தம் கருத்துக்களை வெளியிடும் உரிமை இருப்பதாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு ஒரு முறை வெளிநாட்டு வாழ் இந்தியர்களைப் பற்றி நான் எழுதிய பொழுது, வேறு ஒரு நாட்டின் குடிமக்களாக மாறிவிட்ட பின் அவர்கள் இந்தியர்கள் இல்லை என கருத்துத் தெரிவித்தவர்கள், இன்று மலேயா வாழ் தமிழர்களுக்காக கலைஞர் குரல் கொடுத்ததைத் தவறென்று சொல்வார்களா எனத் தெரியவில்லை.