Showing posts with label comedy. Show all posts
Showing posts with label comedy. Show all posts

Thursday, January 10, 2008

இசலிகளின் இடாப்பும் இன்ன பிற டிஸ்கிகளும்!!

Everybody! Wish you all a happy new year!!



என்னடா இவன் புது வருஷம் பொறந்து இம்புட்டு நாளாச்சு, இப்ப போயி வாழ்த்து சொல்லறானே, அதுவும் 1982ஆம் வருஷ பாட்டு வேற போடறானேன்னு பார்க்கறீங்களா? சும்மா தேமேன்னு இருந்த என்னை இந்த மாதிரி புத்தாண்டு பதிவு போட வெச்சது நம்ம கீதாம்மாதான். அதனால குடுக்க வேண்டிய தண்டனை எல்லாம் நேரா அங்க பார்ஸேஏஏஏல். புத்தாண்டு பத்திப் பதிவு அப்படின்னா இந்த பாட்டு போட்டு ஆரம்பிக்கறாதுதானே நம்ம தமிழ்க்கலாச்சாரம். அதான் இப்படி. ஆனா புத்தாண்டு வாழ்த்து சொல்லி பதிவு போட்டா போறாதாம். அப்போ எடுத்துக்கிற சபதம் பத்தி எழுதணுமாம். இதைப் படிச்ச உடனே எப்படி தெரியுமா இருந்தது.

சின்ன வயசுல ஸ்கூல் படிக்கும் பொழுது இந்த டீச்சருங்க எல்லாம் புது வருஷம் பொறக்குதோ இல்லையோ, அதுக்காகவே காத்துக்கிட்டு இருந்தா மாதிரி உங்க புது வருஷ தீர்மானங்களைப் பத்தி கட்டுரை எழுதுன்னு சொல்லுவாங்க. அது வந்து இந்த "If you were the prime minister..", "If a wish of yours can come true.." ரேஞ்சில் நடக்காத விஷயம்தானேன்னு தெரிஞ்சதுனால என்ன வேணாலும் எழுதலாம். பொதுவா இனிமே சரியா ஹோம்வொர்க் பண்ணுவேன், கிளாசில் தூங்கினால் குறட்டை விடாமல் இருப்பேன், வாத்தியார் வேட்டியில் இங்க் அடிக்க மாட்டேன் அப்படின்னுலாம்தான் எழுதி வெச்சு இருப்போம். படிக்கிறவங்களுக்கு இது கட்டுரையா இல்லை இம்போசிஷனான்னே சந்தேகம் வரும்.

அப்புறம் கொஞ்சம் வளர்ந்தா ஒரு டைரி எழுதும் மோகம் பத்திக்கும். என்னமோ வருஷம் பூராவும் எழுதிக் கிழிக்கிற மாதிரி ஒரு நாளைக்கு ஒரு பக்கம் இருக்கிற டைரிதான் வேணும் அப்படின்னு தேடுவோம். தேடுவோமுன்னா காசு குடுத்து கடையில் வாங்கறது எல்லாம் இல்லை. ஓசியில் எங்க கிடைக்குதுன்னு பார்க்கத்தான். கடைசியில் எதாவது டாக்டர் வீட்டில் அனாதையாய் கிடக்கும் மருந்து கம்பெனி டைரி ஒண்ணு மாட்டும். அதில் ஜம்பமா பேரு அட்ரஸ் எல்லாம் எழுதிட்டு ஆரம்பிப்போம். முதல் நாள் பொதுவா இந்த வருஷம் பூராவும் டைரி எழுதுவேன் அப்படின்னு ஆரம்பிக்கறதுதான் சம்பிரதாயம். நிறையா வருஷங்களில் அது ஒண்ணு மட்டும்தான் எழுதி இருப்போம். அப்புறம் அம்மா சலவை கணக்கு எழுத புத்தகம் தேடும் பொழுது பெருந்தன்மையோட இதைத் தானம் பண்ணிடுவோம். அதுக்கு முன்னாடி பெர்சனல் விஷயங்களை எல்லாம் அடுத்தவங்க படிக்கக் கூடாதுன்னு அதை ஸ்டைலா கிழிச்சுட்டு குடுக்கறதில ஒரு பெருமை.

அப்புறம் கொஞ்ச வயசாச்சுன்னா ஒரு கவுஜ எழுதும் கிறுக்குப் பிடிக்கும். கவுஜ எழுதற கிறுக்குன்னு தனியா இருக்கா, கவுஜ எழுதினாலே அப்படித்தானேன்னு எல்லாம் கேட்கப்பிடாது. அப்போ பள்ளிக்கூடத்தில் நேர் நேர் தேமான்னு சொல்லிக் குடுத்தா அதை காதிலேயே போட்டுக்காம வெண்பா, விருத்தமுன்னு வீணா பேசிக்கிட்டு இருக்காரேன்னு வருத்தப்படறவன் இங்க வந்து
நான்
படித்தேன்
பா -
அவளோ
சொன்னாள்
போ!!!
அப்படின்னு ஆச்சரியக்குறி போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதான். அந்த டைரி முழுசும் இப்படி உடைச்சுப் போட்ட உரைநடை வரிகளால் ரத்தக்களறி ஆகி இருக்கும். இதுக்கு நடுவில் காதல் கிறுக்கு வேற பிடிச்சுது அம்புட்டுதான். ஒரு மாசத்தில் ஒரு வருஷ டைரி காலி ஆகி இருக்கும். ஆனா இந்த பித்து எல்லாம் நிறையா பேருக்கு கொஞ்ச நாள்தான். சரியாகிடும். அப்படி சரியாகாம போனாத்தான் பாவம் கவிஞரா ஆகிடறாங்க. என்ன செய்ய எல்லாம் விதி.

அப்புறம் ஒரு வழியா படிச்சு முடிச்சு, வேலை தேடி, கல்யாணம் பண்ணிக்கிட்டு, குண்டாகி, (ஆத்தாடி எம்புட்டு ஜிம்பிளா சொல்லிப்புட்டோம்!) மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் பார்த்து டென்ஷனாகும் பொழுது இந்த வருஷம் பூரா நொறுக்குத் தீனி திங்கக் கூடாது, ஒழுங்கா உடற்பயிற்சி எல்லாம் செய்யணும், சும்மா ஒரு மாசத்தில் அர்னால்ட் ஷ்வாஷ்னெக்கர் மாதிரி ஆகணும் அப்படின்னு ஒரே ஒரு நாள் எதையாவது செஞ்சு கண்ணாடி முன்னாடி போய் பைசெப்ஸ் எல்லாம் முறுக்கி பார்க்கறது. அடுத்த நாள் காலையில் உடம்பில் இதுவரை இருந்ததே தெரியாத இடங்கள் எல்லாம் வலிக்க ஆரம்பிக்க வழக்கம் போல் ரீவி முன்னால் உக்காந்துக்கிட்டு பாப்கார்ன் சாப்பிட்டுக்கிட்டே என்னடா ஆடறாங்க இந்தப் பசங்க? ஒரு ஓவர்பிட்ச் பாலை ட்ரைவ் பண்ணத் தெரியலை அப்படின்னு விமர்சனம் பண்ணிக்கிட்டு கிரிக்கெட் பார்க்க வேண்டியதுதான்.

சரிடா, விஷயத்துக்கு வா. இந்த வருஷத்து சபதம் என்ன அதைச் சொல்லுன்னு ரென்ஷன் ஆகறீங்களா? புது வருட காலையில் அவசர அவசரமா குளிச்சுட்டு கோயிலுக்கு போய் பல மணி நேரம் வரிசையில் நின்னு, அரையே அரை நொடி சாமியைப் பார்த்து ஏடு கொண்டலவாடா, வேங்கடரமணா, கோவிந்தா கோஓவிந்தா அப்படின்னு சொல்லிட்டு உண்டியலில் கொஞ்சம் பச்சை நோட்டை நுழைச்சுட்டு, கீழ கேண்டீன் வந்து மீண்டும் சில மணி நேரம் வரிசையில் நின்னு ஒரு புளியோதரை, தயிர்சாதம் சாப்பிட்டுவிட்டு அப்படியே வீட்டுக்கு வந்து அப்பாடான்னு உக்கார்ந்தா எவ்வளவு டயர்டா இருக்கு. இதுல சபதம் போட எங்க நேரம் இருக்கு சொல்லுங்க!!

டிஸ்கி 1 : ஏற்கனவே லேட்டு, இதுல இன்னும் நாலு பேரைக் கூப்பிட்டு புதுவருஷ சபதம் எல்லாம் பத்தி எழுதச் சொன்னா காறி துப்புவாங்க. அதனால நான் அந்த பார்ட்டை மட்டும் சாய்ஸில் விடறேன். அப்படி யாரும் பதிவு போட வேற மேட்டரே இல்லாம இதை எழுத துடிச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா நான் கூப்பிட்டதா நினைச்சுக்கிட்டு பதிவு போடுங்க. போட்டுட்டு இங்க வந்து இலவசமா போஸ்டர் ஒட்டிக்குங்க.

டிஸ்கி 2: இது எல்லாம் போறாதுன்னு மொக்கைப் பதிவு தொடர் ஒண்ணு ஓடுதாமே. அதுக்கு யாரும் கூப்பிடறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன். அதுக்கும் சேர்த்துதான் இந்தப் பதிவு.

டிஸ்கி 3: இந்தப் பதிவுக்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு யோசிக்கறீங்களா? அதுவும் தமிழ்தாங்க. இசலி அப்படின்னா சபதம், இடாப்பு அப்படின்னா அட்டவணை. சபதங்களின் அட்டவணை அப்படின்னு தலைப்பு வெச்சா வருவீங்க? ஆனா இசலிகளின் இடாப்புன்னு கரெக்ட்டா வந்து ஆஜராவீங்க இல்ல. அதான்! வர்ட்டா!!

Sunday, September 09, 2007

சர்வைவல் ஆப் பிட்நெஸ்!

டார்வின் அப்படின்னு ஒரு ஆள் இருந்தாரு. உலகில் உயிரினங்கள் இப்படி விருத்தியாகக் காரணம் இயற்கையின் தேர்ந்தெடுப்பு (Natural Selection) அப்படின்னு சொன்னாரு. அவரோட எழுத்துக்களைப் படிச்ச ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் என்பவர் வலிமையே வாழும் ( Survival of the Fittest) எனச் சொல்லப் போக, டார்வினே அத்தொடரை எடுத்தாளத் தொடங்கினார். எந்தக் கேனையன் என்ன சொன்னா என்ன, நம்ம வலையுலகின் கோட் வேர்ட் இன்னைக்கு சர்வைவல் ஆப் பிட்நெஸ்தான். நம்ம மனசுக்கு ரொம்ப பக்கத்தில் இருக்கும் தலைப்பாச்சே. நாமளும் மொக்கை போட்டு நாளாச்சே. அதான் இப்படி. மேல படியுங்க.

கொஞ்ச நாள் முன்னாடி தங்கமணி நச்சரிப்பு தாங்காம நானும் நம்ம குடும்ப கொசு கிட்ட போனேன். அதாங்க நம்மளை கண்டாலே உறிஞ்சி ரத்தம் எடுக்குற எம்.பி.பி.எஸ் படிச்ச கொசு ஒண்ணு இருக்கே, அதைத்தான் சொல்லறேன். அதுவும் வழக்கம் போல லிட்டர் கணக்குல உறிஞ்சுக்கிட்டு நாளைன்னைக்கு வா அப்படின்னு அனுப்பி வெச்சுது. (ஆமாம், இப்படி கொசுவைப் பத்தியே கொசுவர்த்தி சுத்தலாமோ?) ரெண்டு நாள் கழிச்சு தம்பதி சமேதரா போய் நின்னா கை நிறைய பேப்பரை வெச்சுக்கிட்டு உனக்கு கொழுப்பு ஜாஸ்தி அப்படின்னு ஒரு நான் வெஜ் சமையல் குறிப்பு மாதிரி ஆரம்பிச்சாரு. இதைச் சொல்லவா டாக்டருக்குப் படிச்சீரு, அதெல்லாம் படிக்காமலேயே தங்கமணி நேத்தே இதைச் சொல்லிட்டாங்களேன்னு நான் நேரம் காலம் தெரியாம சவுண்ட் விட, அதுக்குக் கிடைச்ச பரிசு தொடையில் நறுக்குன்னு ஒரு கிள்ளு. (யப்பா நகத்தை வெட்டுன்னு சொன்னா கேட்கிறாளா, ரத்தமே வந்திருச்சு).

இதையெல்லாம் காதிலேயே போட்டுக்காம நம்மாளு நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு அப்படின்னு கெமிஸ்ட்ரீ கிளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தது. நானும் வகுப்பில் இருப்பது போல் ரொம்ப கவனமா கண்ணைத் திறந்து வெச்சுக்கிட்டு தூங்கிக்கிட்டு இருந்தேன். நடுவில் சாப்பாடு என பேச்சு வர சடாரென முழிச்சுக்கிட்டேன். ஆனா அதுக்குள்ள அந்தாளு செய்ய வேண்டிய டேமேஜ் எல்லாமே செஞ்சுட்டாரு. எண்ணை கூடாதாம், சர்க்கரை கூடாதாம், பொரிக்கக்கூடாதாம், வறுக்கக்கூடாதாம். சொல்லிக்கிட்டே போறாரு. ஏற்கனவே அடிக்கடி உனக்கு என்ன ரெண்டு கொம்பான்னு கேட்கறா இதுல இலை தழை எல்லாம் சாப்பிட்டா என்ன ஆகுறது டாக்டர் என்று ஜோக் அடிக்கலாம் என நினைத்தேன். ஆனா தொடை இன்னும் வலிக்கவே பேசாமல் இருந்துவிட்டேன். அந்த மௌனத்தின் காரணம் தெரியாமல் நான் எதோ உடன்படுவதாக நினைத்து அடுத்த குண்டை தூக்கிப் போட்டார் நம்ம டாக்டன். (வாழ்க்கையில் இப்படி விளையாடறான் இனிமே என்ன மரியாதை. டாக்டர் எல்லாம் கிடையாது. டாக்டந்தான்!) என்னடான்னா உடற்பயிற்சி செய்யணுமாம். அந்த டாபிக்கில் வேற அரை மணி நேரம் லெக்சர். பலியாடு மாதிரி தலையை ஆட்டிக்கிட்டு வெளிய வந்தாச்சு. அப்ப ஆரம்பிச்சதுய்யா தொல்லை.


அடுத்த படத்தில் அசினை ரெகமெண்ட் செய்யலாமா இல்லை பாவமா இருக்கே இந்த பாவனா, அதைத்தான் சேர்த்துக்கலாமா என கனவு காணும் காலை நேரத்திற்கு விழுந்தது கத்தரி, எழுந்து வாக்கிங் போங்க என்ற குரலுடன். டெய்லி வாக்கிங் போக நான் என்ன பக்கத்து வீட்டு ஜிம்மியா? என்று கேட்க நினைக்கும் போதே கன்றிப் போன தொடை ஞாபகத்திற்கு வர அதைத் தடவிக் கொண்டே எழுந்திருக்க வேண்டியதாயிற்று. ரெண்டு நாள் இப்படிப் போக நம்ம மூளையில் ஒரு ஐடியா உதித்தது. இப்பத்தானே இப்படித் தொரத்தற, இதோ பனிக்காலம் வந்தாச்சே, இப்ப என்ன செய்வீக, இப்ப என்ன செய்வீக என கோஷம் போட ஆரம்பித்தது வினை. வந்து இறங்கியது ஒரு ட்ரெட்மில்.

அதுக்காக இடம் செய்யப் போய் டீவி முன் இருந்த நல்லா படுத்துக் கொண்டு டீவி பார்க்கக் கூடிய சோபா காணாமல் போனது. ஆனந்தம் பார்க்கும் போது அரைமணி நேரம் பண்ணுங்க. சீரியல் பார்த்து எனக்கு கதை சொன்னா மாதிரியும் ஆச்சு. உடற்பயிற்சி பண்ணினா மாதிரி ஆச்சு என ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் அடித்தாள் என் தர்மப்பத்தினி. அட, அந்த சுகன்யா புருஷன் ட்ரெயினில் வரேன்னு சொன்னா மாதிரி வரலை. இதைச் சொல்ல 7 நிமிஷம். இதுக்கு நடுவில 20 நிமிஷம் விளம்பரம், 3 நிமிஷத்துக்குப் பாட்டு வேற. இப்போ இதைப் பார்த்து கதை சொல்ல ஒரு அடியாள். என்ன கொடுமை சரவணன் இது? அந்த ட்ரெட்மில் சத்தத்தில் வசனம் எதுவுமே கேட்கலை. அது வேற விஷயம்.


இப்படியா 'நடந்துக்கிட்டு' இருந்த என் வாழ்க்கையில் விழுந்தது அடுத்த 'அடி'! சும்மா நடந்தா போதுமா , கை அப்போ சும்மா இருக்கே. உடம்பின் எல்லா பாகங்களுக்கும் சமமா பயிற்சி தரணும் அப்படின்னு அவங்க நண்பிகளில் எவளோ ஒருத்தி பத்த வைக்க வந்து இறங்கியது ஸ்டெப்பர். காலுக்கு படியேறுவது மாதிரியும், கைக்கு படகுகில் துடுப்பு போடுவது மாதிரியும் செய்யலாமாம். ஆனந்தத்திற்கு முன்னாடி கஸ்தூரி வருதே, அந்த நேரத்தில்தான் பையன் சாப்பிடறான், என்னால பார்க்கவே முடியறது இல்லை. அந்த நேரத்தில் நீங்க இந்த ஸ்டெப்பரைப் பண்ணிக்கிட்டே பார்த்து அந்த கதையையும் சொல்லிடுங்களேன் என ஆசையாய் வந்து கொஞ்சுகிறாள் என் தர்ம பத்தினி. கொஞ்சலா அது? கட்டளை இல்லையா, அதுவும் பார்க்க ஆரம்பிச்சாச்சு.


அவளுக்கு என்ன ஒரே ஒரு நண்பிதானா என்ன? ஆளாளுக்கு ஒண்ணு ஒண்ணு போட்டுக் குடுக்க, வீட்டில் சைக்கிள், எலிப்டிகல், அது, இது என காலில் இருந்து தொடை, வயிறு, கை, கழுத்து வழியாகத் தலை வரை செல்லும் என்று ரயில்வே ஸ்டேஷன் அறிவிப்பு மாதிரி பாகங்களுக்கு ஒன்றாக விதவிதமாக சாமான்கள் வந்திறங்கத் தொடங்கியது. நானும் கஸ்தூரியில் ஆரம்பித்து ஆனந்தம், மேகலா, அஞ்சலி, கோலங்கள், அரசி, லக்ஷ்மி என எல்லா சீரியல்களையும் பார்க்க வேண்டியதாகி விட்டது. ஆபீஸ் போவதனால் மத்தியான சீரியல்கள் எல்லாம் மிஸ் செய்கிறேன். நடுவில் நியூஸ் போடுகிறார்களோ சாப்பிட எதாவது கிடைக்கிறது. (அடேய் சன் டீவிக்காரனுங்களா, அதையும் எடுத்து எதாவது சீரியல் போட்டு என் அடிமடியில் கை வெச்சுடாதீங்கப்பா.)


சனி, ஞாயிறு சும்மா இருக்காம யோகா கிளாசுக்குப் போங்க என ஒரு கொடுமை. முதல் நாள் அங்க சவாசனம் செய்யும் போது பெரிசா குறட்டை விட்டுட்டேனாம். அதனால இனிமே வரவேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க. (நல்ல சனிக்கிழமை எண்ணை எல்லாம் தேச்சு குளிச்சிட்டு அங்க போனா தூக்கம் வருது. அதுக்கு நான் என்ன பண்ண? நம்ம சத்தத்தில் மத்தவங்க எல்லாம் டிஸ்டர்ப் ஆகி முழிச்சுக்கிட்டாங்க போல!) நல்லதாப் போச்சுன்னு அதை நிறுத்தியாச்சு. அடுத்தது Tai Chi கிளாஸ் போறீங்களான்னு பேச்சு வந்தது. அந்தப் பேச்சு ஆரம்பிக்கும் போதே டாய் ச்சீ என நாம உரும, போனா போகுது என அதுவும் வேண்டாமுன்னு வெச்சாச்சு.


இதெல்லாம் ஒரு பக்கம் போயிக்கிட்டு இருக்க, நான் இளைக்கிறேனோ இல்லையோ (தங்கமணி - ஆபீஸில் கண்ட நேரத்தில் என்னதைத் திங்கறீங்களோ, உடம்பைப் பார்த்துக்கணும் அப்படின்னு அக்கறை இருந்தால்தானே.) நம்ம பர்ஸும், பேங்க் பேலன்ஸும் நல்லா இளைக்க ஆரம்பித்தது. ஒரு நாள் நம்ம வீட்டு பக்கத்தில் இருக்கும் உடற்பயிற்சி சாதனங்கள் விற்கும் கடை ஓனரை எதேச்சையாய் ரோட்டில் பார்த்தேன். சாதாரணமா இருந்தவன், உதயகீதம் படத்தில் வர கவுண்டமணி மாதிரி, பென்ஸ் காரில் போய்க்கிட்டு இருந்தான். என்னடா, சாரி சாரி, என்ன சார், எப்படி இது அப்படின்னு விசாரிச்சா, சர்வைவல் ஆப் பிட்நெஸ் அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சுக்கிட்டே போறான்!! (அப்பாடி, தலைப்பில் கொண்டு வந்து முடிச்சாச்சு, நடுவில ரெண்டு பஞ்ச் டயலாக் மட்டும் வெச்சிருந்தா, தமிழ் சினிமாக்கு கதை எழுதப் போய் இருக்கலாம்.)


டிஸ்கி:
இப்பதிவில் வரும் பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே. யாரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை. (பின்ன, தங்கமணி பதிவெல்லாம் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க இல்ல!)

Wednesday, April 18, 2007

கோச்சிங் செண்டர் நோட்டீஸ்!

இடம் : வ.வா.சங்கம்

கைப்பு வழக்கம் போல் பேண்டேஜ் பாண்டியனாக உள்ளே நொண்டியபடி வருகிறார். சங்கத்தில் தேவ், தம்பி, விவசாயி, புலி எல்லாரும் ஒரு பக்கமாக உக்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். அருகே உட்கார்ந்து கொண்டு சங்கத்துக் கணக்கு வழக்கை எழுதிக் கொண்டு இருக்கிறார் வெட்டி. இதிலெல்லாம் சேராமல் புத்தகமும் கையுமாய் ஒரு ஓரத்தில் ராயல். இன்னொரு சைடில் பேனாவை முகவாயில் தட்டியபடி ஒரு கவுஜ எழுதும் மூடில் இருக்கிறார் சிபி. தல தலையைக் கண்டவுடன்....

தேவு: தல என்ன ஆச்சு? இன்னைக்கு யாரு முறைவாசல் வெச்சாங்க? அந்த பாழாப் போன கட்டதொரையா? இல்ல அந்த படுபாவி பார்த்திபனா? யாரு அடிச்சாங்க தல? இது யாரு வேல?

குறுக்கில் புகுந்த விவ்ஸ் : யாரு அடிச்சா என்னடா? தல, எங்கெங்க அடிச்சாங்க? எப்படி எப்படி அடிச்சாங்க அதச் சொல்லுங்க தல.

கைப்பு:
ஏண்டா நாதாறிப் பசங்களா, இங்க ஒருத்தன் கண்டபடி அடி வாங்கிட்டு வந்திருக்கேன், இப்படி நிக்க வெச்சு கதையாட கேட்கறீங்க? சினிமாவாடா பாத்துட்டு வரேன் உங்களுக்கு கதை சொல்ல? வாங்குனது பூரா அடிடா அடி. நான் அப்படி எல்லாம் அடி வாங்குறது உங்களுக்கு எல்லாம் மொறவாசல் வெச்சு செய்யுற வேல மாரியாடா தெரியுது?

சிபி: தல, எனக்கு ஒரு டவுட்டு, அடிக்கிற கைதான் அணைக்கும் அப்படின்னு சொல்லுவாங்களே. அடிச்ச பின்னாடி உங்களை அணைச்சாங்களா தல?

கைப்பு: ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா,கிளம்பிட்டாங்க. என்னடா கேள்வி கேக்குற. அவனுங்க எல்லாம் பாத்தா அணைக்கிற ஆளுங்க மாதிரியாடா தெரிஞ்சுது, அவனுங்க அணைச்சது எல்லாம் அவனுங்க குடிச்சுட்டுப் போட்ட சிகரெட்டைதாண்டா.

வெட்டி: தல, உங்களை அடிச்ச கூட்டத்துல ரெட்டி, ராவ் ஆளுங்க யாராவது இருந்தாங்களா? அப்படி எதனா இருந்தா சொல்லுங்க. நான் அப்படி சைலண்டா போயி உக்காந்துக்குறேன்.

புலி: வெட்டி, இப்படி தெலுங்கு வாசனை வீசுனாலே ஆஃப் ஆனா எப்படி? நடந்தது நடந்து போச்சு, நாட்டுல வேற ஊராடா இல்லை? சிக்கிம், கேரளா, கர்நாடகா, ஒரிஸ்ஸா அப்படின்னு லாட்டிரி விக்கிற ஊருங்க இன்னும் எத்தினி இருக்கு, அதுல எதாவது பிடிச்சிக்க வேண்டியதுதானே. இல்லைன்னா சூடான் பக்கம் வா, சூடா எதுனா புடிச்சித் தரேன்.

இப்படி ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருக்கும் போது அங்கு ஒரு கண்ணாடியை ஸ்டைலாக சுத்திக் கொண்டு வரும் ஜொள்ளுப்பாண்டி, "ஹாய் பாய்ஸ். தல, வாட் ஹேப்பண்ட்? வொய் பேண்டேஜ்?" என்கிறார். அதுவரை அடங்கிப் போய் இருந்த கைப்பு ஆவேசமாக அழத் துவங்குகிறார்.

கைப்பு: எல பாண்டி, நாங்க பாட்டுக்குச் செவனேன்னுதானே இருந்தோம். சும்மா இருந்த பயலுவளை நீதானடா கோச்சிங் செண்டர் ஆரம்பிக்கறேன், கேச்சிங் செண்டர் ஆரம்பிக்கிறேன்னு உசுப்பி விட்ட. அது எங்க போயி முடிஞ்சிருச்சி பாருடா. பப்ளிக் எல்லாம் சேந்து என்னிய இப்படி சாத்திப்புட்டாங்க பாருடா.

சத்தம் தாங்க முடியாமல் புத்தகத்தில் இருந்து தலையை தூக்கிப் பார்த்து ராயல் " தல விசயத்தைச் சொல்லுங்க. இப்போ என்ன ஆச்சு? ஏன் இப்படி நம்ம பாண்டிய வையறீங்க? அவன மாரி உண்டா, அவன் ஸ்டைல் என்ன, அவன் நடை என்ன?" எனத் ஆரம்பிக்க.

கைப்பு: டேய் இருடா. இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா? இந்த பாழாப் போன பாண்டி கோச்சிங் செண்டர் ஆரம்பிச்சானா, அதுக்கு நோட்டிஸ் அடிச்சு என் கிட்ட குடுத்தான். இத்தன அப்பரசண்டிங்க இருக்கீங்களேன்னு பார்க்காம நானும் போயி கடைவீதியில் நின்னுக்கிட்டு போறவன் வரவனுக்கெல்லாம் அந்த நோட்டீஸைக் குடுத்துக்கிட்டு இருந்தேன். அப்ப அங்க வந்தாண்டா அந்த பார்த்தி பய.

கைப்ஸ் மூஞ்சியில் கொசுவர்த்தி சுழல்கிறது.

தனக்கே உரிய நீல பட்டு சட்டை வேட்டியில் கைப்பு கடைத்தெருவில் நின்று கொண்டு நோட்டீஸ் குடுத்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு பின்னாடி நின்று கொண்டு அவரைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார் பார்த்தி.


கைப்பு தெருவில் செல்லும் ஒருவரிடம்: டேய் இங்க வாடா, நோட்டீஸ் குடுத்துக்கிட்டு இருக்கோமில்ல. வாங்கிட்டுப் போகணமுன்னு தெரியாதா? நீயெல்லாம் எதுக்குடா ரோட்டுல நடந்து வர? நாங்க யாருன்னு தெரியுமில்ல. ரௌடிடா ரௌடி.

பின்னால் இருக்கும் பார்த்தி முன்னால் வருகிறார். அவரைப் பார்த்தவுடன் மனதிற்குள் 'எங்க போனாலும் பின்னாடியே வரானே, இன்னைக்கு இவன் கிட்ட வாய குடுத்து மாட்டக் கூடாது' அப்படின்னு நினைச்சுக்கிட்டு பார்த்தியைப் பார்த்து சிரிக்கிறாரு கைப்பு.

கைப்பு:
வணக்கமுண்ணே.


பார்த்தி:
டேய், நான் என்ன உனக்கு அண்ணனா?


கைப்பு (மனதிற்குள்):
ஆஹா. வணக்கம் சொன்னாக்கூட வம்புக்கு இழுக்கறானே. இன்னிக்கி என்னென்ன செய்யப் போறானோ


பார்த்தி:
என்னடா மொனகுற? அது என்ன கையில?

கைப்பு:
அது ஒண்ணுமில்லை. வெறும் பேப்பரு.


பார்த்தி:
எதுக்குடா வெறும் பேப்பரை போறவன் வரவன் கையில எல்லாம் குடுக்குற? எதனா வேண்டுதலா? எனக்கும் குடுடா பார்ப்போம்.


கைப்பு:
இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? விடுங்க. (மனதிற்குள் - இத வெச்சுக்கிட்டு என்ன செய்வானோ, சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணணும். ஆண்டவா, நீதாண்டா என்ன காப்பாத்தணும்)

பார்த்தி: ஆண்டவன் கிட்ட அப்பீல் பண்ணுனா விட்றுவோமா? குடுன்னு ஒழுங்க கேட்டா குடுக்க மாட்ட இல்ல, உன்னிய...

கைப்பு:
ஐய்யோ, உங்களுக்கு இல்லாத பேப்பரா, ஒண்ணு என்ன எல்லாத்தையும் எடுத்துக்குங்க. நான் வரேன்.

பார்த்தி: டேய் நில்றா. நில்றான்னு சொல்லறேன் இல்ல. அப்படி என்னதான் போட்டு இருக்கு நீ ஊருக்கு எல்லாம் குடுக்குற பேப்பருல?

எந்த நேரத்தில் என்ன நடக்கப் போகுதோன்னு பயத்தில், சாதுவாய் கைப்பு பக்கத்தில் நிற்க, பார்த்தி பேப்பரை படிப்பதும், கைப்புவைப் பார்ப்பதுமாக இருக்கிறார். பேப்பரை பல தடவை படிக்கிறார்.


பார்த்தி:
டேய் இதுல என்ன போட்டு இருக்குன்னு தெரியுமா உனக்கு?


கைப்பு:
நம்மளை என்ன எழுதப் படிக்க தெரியாத ஆளுன்னு நினச்சியா? அதெல்லாம் தெரியாமத்தேன் குடுப்போமா? எல்லாம் நான் சொல்லித்தேன் நம்ம பசங்க பிரிண்ட் அடிக்கவே குடுத்தாங்க. இப்ப அதுக்கென்ன?


பார்த்தி:
அப்போ இதுல போட்டு இருக்கறது எல்லாம் நீங்க செய்யறீங்க.


கைப்பு:
செய்யறோம்.
செய்யறோம். அதுக்குத்தானே நோட்டீஸ் அடிச்சுக் குடுக்கறோம். சும்மாவா பின்ன. எல்லாம் நம்ம மக்களுக்காக சேவை. தெரியுமில்ல.

பார்த்தி பக்கத்தில் போகும் சனங்களைப் பார்த்து : ஐயா, கொஞ்சம் இங்க வாங்க. அம்மா நீங்களும் வாங்க. இந்த நோட்டீஸைப் பாருங்க. இதுல போட்டு இருக்கறதை எல்லாம் இவனுங்க செய்வாங்களாம். அதுல தெனாவட்டா வேற பேசறான். ஏண்டான்னு கேட்டா என்னையே முறைக்கிறான். இவனை எல்லாம் என்ன செய்யலாம் சொல்லுங்க.

நோட்டீஸைப் படித்த சனங்கள் எல்லாம் வெறி ஏறி கைப்புவைப் போட்டு மொத்தி நார் நாராய் கிழிக்கிறது. எல்லாம் அடித்து விட்டு ஓயும் பொழுது பக்கத்தில் இருக்கும் பார்த்தியிடம்.

கைப்பு:
நீ வரும் போதே தெரியும் என் நிலம இப்படித்தான் ஆவப் போவுதுன்னு. இம்புட்டு அடிச்சாங்களே அப்படி என்னத்தய்யா சொன்ன அவங்க கிட்ட?


பார்த்தி:
நீ ஒரு நோட்டீஸ் குடுத்தியே, அதுல கடைசி வரிய படிச்சுப் பாருடா.


கொசுவர்த்தி ரிவர்ஸில் சுற்றி முடிக்கிறது.

கைப்பு: இதாண்டா நடந்தது. நமக்காக ஒரே ஒரு நோட்டீஸ் எடுத்துக்கிட்டு வந்தேன். அப்படி என்னடா போட்டு இருக்கு நம்மள இந்த அடி அடிக்க, கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கடா.

நோட்டீஸை வாங்கிப் படித்த அப்பரசண்டிகள் கிரேசி மோகன் டிராமாவில் காணாமல் போகும் நடிகர்கள் போல அப்பீட் ஆகிறார்கள். காற்றில் பறந்து கீழே விழுந்த நோட்டீஸ் இங்கே.