Friday, October 21, 2011

எழுத்து / இலக்கணப்பிழைகள் இவ்விடம் மொத்தமாகக் கிடைக்கும்

பாரா, சொக்கன், பெனத்தால் இவர்களுடன் என் பதிவுகள், ட்விட்டர் என பல இடங்களிலும் தமிழில் இலக்கணப் பிழைகள், எழுத்துப்பிழைகள் பற்றி பேசி வருகிறோம். ஒரே இடத்தில் இருந்தால் புதிதாக வருபவர்களுக்கும், தேடவும் எளிதாக இருக்கும் என்பதால் ஒரு புதிய பதிவு ஒன்றினைத் தொடங்கி இருக்கிறோம். 

http://tamildoubt.blogspot.com 

இன்று புறம்::புரம் - இவற்றிடையே உள்ள வேறுபாடு பற்றி எழுதி இருக்கிறேன். அதன் சுட்டி - http://ow.ly/7595r

புதிய பதிவுக்கு வந்து உங்கள் கருத்துகளைச் சொல்லவும். 

Posted via email from elavasam's posterous

Tuesday, October 18, 2011

வாழ்த்துகளா? வாழ்த்துக்களா?

இதுவும் திரும்பத் திரும்ப வர ஒரு கேள்வி. வாழ்த்துகள் என்பதுதான் சரி. வாழ்த்துக்கள் என்பது சரி இல்லை. அதே மாதிரிதான் எழுத்துகள், சொத்துகள், முத்துகள் என்று சொல்லறதுதான் சரி. இதுக்கு என்ன ரூல் இருக்குன்னு சிலர் கேட்கலாம். இன்னும் சிலர் வந்து நீ எழுதின கொத்தனார் நோட்ஸ் படிச்சேன். அதுல கூட வன்தொடர்க் குற்றியலுகரம் வந்தா வலி மிகும்ன்னு இருக்கே. பாட்டுப் பாடு, தேக்குப் பலகைன்னு சொல்லிக் குடுத்துட்டு இப்போ வாழ்த்துக்கள்ன்னு மாத்திச் சொல்லலாமான்னு கேட்கறாங்க.

ராசாக்களா, நீங்க அம்புட்டு தூரம் நோட்ஸ் படிச்சு இருக்கீங்கன்னு சந்தோஷமா இருக்கு. ஆனா அதே நோட்ஸ்ல நான் இந்த வாழ்த்து மேட்டரும் சொல்லி இருக்கேனே. சரியாச் சொல்லணும்ன்னா அந்த வன்தொடர்க் குற்றியலுகரம் ரூல்தான் இங்கவும் மேட்டர். புணர்ச்சி விதிகள்ன்னு எடுத்துக்கிட்டோம்ன்னா ரெண்டு தனித் தனி வார்த்தைகள் புணரும் பொழுதுதான் அந்த விதிகள் சரியா வரும்.

அப்போ எழுத்து + கள், இதை எடுத்துக்கிட்டோம்ன்னா எழுத்துக்கள் அப்படின்னு வரும். இதுக்கு அர்த்தம் என்ன? கள் போன்ற எழுத்துன்னு அர்த்தம். இல்லையா? ஆனா ஒன்றுக்கு மேற்பட்டன்னு சொல்ல வரும் பொழுது பன்மை விகுதியா கள் அப்படின்னு சேர்க்கறோம். இது விகுதி. இது தனியான சொல் இல்லை. இதைச் சேர்க்கும் பொழுது நம்ம புணர்ச்சி விதிகள் வேலைக்காகாது. பன்மை விகுதியா கள் சேரும் பொழுது வலி மிகுமா மிகாதான்னு விதிமுறைகள் எதுவும் எனக்குத் தெரிஞ்சு கிடையாது. ஆனா அர்த்தம் ஆகுது அனர்த்தம் ஆகுதான்னு பார்த்து போடச் சொல்லி இருக்காங்க.

கல்கியின் எழுத்துகள் எனக்குப் பிடிக்கும்.

கல்கியின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும்.

நாம முன்னாடி பார்த்தா மாதிரி, கள் போன்ற எழுத்து என்பதைக் குறிக்கும் எழுத்து+கள் என எழுதினால் அது எழுத்துக்கள் அப்படின்னு புணரும். அதனால ரெண்டாவது வரியோட பொருள் என்ன ஆகுதுன்னா கல்கியின் எழுத்து கள் போன்றது. அது எனக்குப் பிடிக்கும்ன்னு ஆகுது. நீங்க அதைத்தான் சொல்ல வந்தா எழுத்துக்கள்ன்னு போடுங்க. இல்லையா எழுத்துகள்தான் சரி.

இனிப்புகள் எல்லாருக்கும் தரலாம் ஆனா இனிப்புக்கள் எல்லாருக்கும் தரலாமா? த்ரக்கூடாதுன்னு சட்டமே இருக்குய்யா!

அதே மாதிரி ஒருத்தருக்கு பிறந்த நாள் விருந்துன்னு அம்சமா சியர்ஸ் சொன்னா அது வாழ்த்துக்கள். மனம் நிறைய வாழ்த்தினா அது வாழ்த்துகள்தான்.

முத்து, சொத்து, வித்து - இதை எல்லாம் என்ன சொல்லணும்? இருக்கிறதை எல்லாம் வித்து’க்’கள் வாங்கினா என் சொத்து’க்’கள், அதுவும் முத்து’க்’கள்ன்னு வேணா சொல்லலாம். பன்மையைக் குறிக்க சொல்லணும்னா முத்துகள் சொத்துகள் வித்துகள்தான். முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் அப்படின்னு கவிஞர் ஒருத்தர் எழுதி இருக்காரேன்னு கேட்டா அது சந்தத்துக்கு எழுதறது. இன்னும் சிலர் கூட இந்த மாதிரி பன்மை விகுதி சேர்க்கும் பொழுது வலி மிகுந்து எழுதி இருப்பாங்க.

இதுக்கு தனியா விதிமுறைகள் ஒண்ணும் இல்லை. அதனால நான் இப்படித்தான் எழுதுவேன்னு சொன்னா ஒண்ணும் சொல்லறதுக்கில்லை. ஆனா எழுதினா அனர்த்தம் வரக் கூடாதுன்னு பார்த்துக்கணும். அவ்வளவுதான்.

Posted via email from elavasam's posterous

Sunday, October 02, 2011

கோவிலா? கோயிலா?

பலருக்கும் அடிக்கடி வரும் சந்தேகங்கள் லிஸ்டில் கட்டாயம் இதுவும் இருக்கும். இன்னிக்கு ரெண்டு விதமாகவும் பயன்படுத்தறோம். ஆனா கோவிலா கோயிலா எது சரி? 

இந்தக் குழப்பம் இன்னிக்கு நேத்திக்கு வந்தது இல்லை. ரொம்ப காலமாகவே இருக்கும் குழப்பம்தான். இது சம்பந்தமாப் படிக்கும் பொழுது பிழை இல்லாமல் எழுதுவோம் என்ற ஒரு புத்தகத்தில் அந்த காலத்திலேயே இளம்பூரணர் என்பவர் கோயில் என்றும் நச்சினார்கினியர் கோவில்ன்னு எழுதி இருக்கிறதாப் போட்டு இருக்காங்க. 

கோ என்ற சொல்லுக்கே நிறையா அர்த்தங்கள் இருக்கு. பசு, அரசன் என்றெல்லாம் பொதுவாகவே நமக்குத் தெரியும். இறைவன் என்பதும் ஒரு அர்த்தம். அதனால கோ+ இல் (இல்லம் என்பதன் மூலம்) அப்படின்னா கடவுள் உறையும் இடம் அப்படின்னு சொல்லலாம். 

இப்போ இலக்கண விதிகளை எடுத்துக்கிட்டா ரெண்டு வார்த்தைகள் சேரும் போது முதல் வார்த்தையோட கடைசியில் இ, ஈ, ஐ தவிர வேற எந்த உயிர் எழுத்து வந்து முடிஞ்சு, ரெண்டாவது வார்த்தை உயிர் எழுத்தில் ஆரம்பிச்சா, நடுவில் வகரம் வரும். பூ+அழகு இதனாலதான் பூவழகு அப்படின்னு ஆகுது. 

இப்படிப் பார்த்தா கோ+இல் கோவில்ன்னுதான் வரணும். 

ஆனா சிலப்பதிகாரம் போன்ற பழைய நூல்களில் கோயில் அப்படின்னே சொல்லி இருக்கு. கோஇல் அப்படின்னு எழுதி அதை கோயில் எனச் சொல்லி வந்திருப்பாங்களோ என்னவோ. 

பின்னாடி யாராவது கோயில்ன்னு எழுதினா இலக்கண விதிகள் படி சரியா இல்லையேன்னு நினைச்சு கோவில் அப்படின்னு எழுத ஆரம்பிச்சு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். எதனால் இந்த எக்ஸெப்ஷன்னு கேட்டு தெரிஞ்சா இங்க வந்து அதையும் எழுதறேன். 

முற்காலத்துல கோவில்ன்னு சொல்லாம கோயில்ன்னு சொல்லி இருக்கிறதுனால நாமும் அதை புணர்ச்சி விதிகளில் இருந்து ஒரு எக்ஸெப்ஷனா எடுத்துக்கிட்டு கோயில்ன்னே சொல்லலாம். 

 

Posted via email from elavasam's posterous

Saturday, September 03, 2011

கங்குமில்ல கரையுமில்ல!

மீண்டும் ஒரு சொலவாடை. அதற்கான பொருள் என்ன என்ற வினா! இந்த முறை ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தது @rsgiri. ”கங்குமில்லே கரையுமில்லே” அப்டின்னு ஒரு சொல்வழக்கு இருக்கா? இல்லைன்னா சரியான வழக்கு + அர்த்தம் சொல்ல முடியுமா என்று ஆட்டத்தை ஆரம்பித்தார். 

@sanchemist என்ன சார் இப்பிடி கேட்டுட்டீங்க? வள்ளலார் பாடல்ல வருமே “ கங்கு கரை காணாத கடலே “ என வள்ளலாரை கூட்டிக் கொண்டு வந்து கங்கு கரை என்ற சொலவாடை பயன்படுத்தியதற்கு சான்று ஒன்று தந்தார். ஆனால் கங்கு கரை என்பதற்கு பொருள் வரவில்லை என்று விடாக் கண்டனானார் கிரி. 

@kryes கங்கு என்றால் அளவு. கரை என்றால் ஆற்றின் கரை, கடற்கரை என்பதில் வருவது போல எல்லை என்ற பொருள் கொண்டதாகும். கங்கு கரை காணாத கடலே என்றால் அளவில்லாத, எந்த விதமான எல்லையும் இல்லாத கடலே என விளக்கினார். கங்குமில்ல கரையுமில்ல என்றால் அளவில்லாத எல்லையில்லாத என்ற பொருள் கொண்டதாகும் என்றார். 

கிரி என்ன நினைத்தாரோ தெரியாது. வேறு விளக்கங்கள் வேண்டும் என்று நின்றார். 

அவருக்காக ஒரு ஜாலி விளக்கம். 

கங்கு என்பதற்கு பனையோலை மரத்தில் சேரும் இடம் என்ற பொருளும் உண்டு. கரை என்பதைக் கரைதல் என்ற பொருளிலும் பயன்படுத்தலாம். கங்குமில்ல என்றால் பனையோலை மரத்தைப் பற்றும் இடமில்லை என்றுதானே அர்த்தம். இப்போ பனையோலைன்னு சொன்னா, அதை அப்படியே எடுத்துக்காம அதை ஒரு உவமையாக எடுத்துக்கணும். பற்றுதல் இல்லாமல் இருந்தால்ன்னு பொதுப்படுத்தலாம். கரையுமில்ல என்பதை கரை இல்லைன்னு சொல்ல வராம, செய்வோமுல்ல என்று மதுரை தமிழில் சொல்வது போல, கரையுமில்லன்னு எடுத்துக்கலாம். 

அப்போ பற்றற்று இருந்தா நம்ம ஜீவன், கடவுளோட சேர்ந்து ஒண்ணாகி நமக்கு முக்தி கிடைக்கும். இதைத்தான் கங்குமில்ல, கரையுமில்லன்னு எளிமையாச் சொல்லறாங்க! 

இன்னும் ஒரு விதமாச் சொல்லலாமா? 

இப்போ கங்குன்னா தீக்கங்கு.கரைன்னா அழைக்கிறது.கரைத்தனன் அப்படின்னு இலக்கியத்தில் வரும். அப்படின்னா அழைத்தான்னு அர்த்தம். இப்போ ஒருத்தர் பசியோட இருக்காரு. அவரு வீட்டுல சாப்பாட்டுக்கு வழி இல்லை. அடுப்படியில் பூனை தூங்குதுன்னு சொல்லற மாதிரி அவங்க வீட்டில் அடுப்பைப் பத்த வெச்சே நாளாச்சு. சரி நம்ம வீட்டில்தான் சாப்பிட வழியில்லை, நம்ம நிலமை தெரிஞ்ச எவனாவது கூப்பிட்டு ஒரு வேளை சாப்பாடு போடுவானான்னு பார்த்தா எவனும் கூப்பிடலை. திண்ணையில் உட்கார்ந்துக்கிட்டு இருந்தவரைப் பார்த்து தெருவில் போகும் ஒருத்தர், இன்னிக்கு என்ன செய்யறதா உத்தேசம்ன்னு கேட்கறாரு. அதுக்கு இவரு பதில் சொல்லறாரு - “கங்குமில்ல,கரையுமில்ல”! 

வேற எப்படியாவது சொல்ல முடியுமா? 

 

Posted via email from elavasam's posterous

Friday, September 02, 2011

அடி மேல அடி வெச்சா....

என் அண்ணன் அவர் பேஸ்புக்கில் இந்த துணுக்கைப் போட்டு இருந்தார். 

 

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் - அந்தக் காலம்

மீட்டர் மேல் மீட்டர் வைத்தால் க்ரைண்டரும் நகரும் - இந்தக் காலம் ;)”

 

இதற்கு என் பதில் 

 

அடி என்பது ஆசையாக மனைவியைக் கூப்பிடுவது.

அடி மேல் அடி என்பது, தகப்பனார் அடி எனக் கூப்பிடும் அம்மாவின் மீது தான் அடி என அழைக்கும் மனைவியை வைப்பது!

அதாவது அது வரை அம்மா இருந்த இடத்தில் மனைவியை இருத்த, அம்மிக் குழவி ஆயுதமாகப் பறக்கும் என்பது இந்த சித்தாந்தம். 

இதை நவீனப்படுத்துவதன் மூலம் உன் ஆணாதிக்க மனப்பான்மையே வெளியே தெரிகிறது!

Posted via email from elavasam's posterous

Thursday, January 06, 2011

பிழை தீர் - பிழைத்தீர்

தெரிந்ததைச் சொல்லலாம் என ஆரம்பித்தக் கொத்தனார் நோட்ஸ் பகுதி பதினைந்து பாகங்கள் வந்துவிட்டது. ஆனால் இது சரி இது தவறு என்று சொல்லுவது எனக்கே கொஞ்சம் போர் அடித்துவிட்டது. அதனால் அதனை இப்பொழுது முடித்துவிடலாம் என்ற முடிவெடுத்து, நிறுத்திவிட்டேன். இறுதி பாகத்தைப் படிக்க இங்கு செல்லுங்கள்.

ஆனால் பிழைகள் பல கண்ணில் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அதிகம் பேர் பிழை செய்யும் சொற்களை எடுத்துக் கொண்டு தொடராக இல்லாமல் எப்பொழுதாவது சில பதிவுகள் போடலாம் என எண்ணம். அதே போன்று எழுதியவற்றிலோ அல்லது எழுதாமல் விட்டவைகளிலோ எதேனும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம். பதிவிடும் பொழுது அவற்றையும் எடுத்துக் கொள்கிறேன்.

இந்தத் தொடருக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. விரைவில் வேறு ஒரு தலைப்பில் அடுத்த தொடர் ஆரம்பிக்கிறேன்.

Friday, December 31, 2010

ஜே ஜே இல்லாத குறிப்புகள்!

படிக்கும் நல்ல நெஞ்சங்களுக்கு என் உள்ளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். எல்லா செல்வங்களும் சந்தோஷங்களும் உங்களைச் சேரட்டும்.

இந்த வாரம் தமிழ் பேப்பரில் சில எழுத்துப்பிழைகள், சில வார்த்தைகளின் மூலம் என வழக்கம் போல் எழுதி இருந்தாலும் ரஜினி பட பாடல் ஒன்றைப் பற்றிச் சொல்லப் போக அதற்கு அவர்கள் போட்ட படம் பற்றித்தான் பேச்சு அதிகமாக இருக்கிறது. படிக்க கீழே இருக்கும் உரலைச் சுட்டிப் பார்க்கவும்.


மன் மதன் அம்பு படம் பார்த்தோம். எல்லாரும் படம் சகிக்கவில்லை என்று சொல்லிவிட்டதால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றதினாலோ என்னவோ படம் அந்த அளவு மோசமாகத் தெரியவில்லை.

கமலின் மிகச்சிறந்த ஆக்கமா என்றால் இல்லைதான். க்ரேஸி மோகன் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமா என்றால் இருந்திருக்கும்தான். திரைக்கதையில் அபத்தமான ஓட்டைகள் இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஈழத்து டாக்ஸி ட்ரைவர், மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் என்று கமல் தனக்குத் தெரிந்ததைக் காட்ட வகையாக நுழைத்தப்பட்ட கேரக்டர்கள் இருக்கிறதே என்றால் இருக்கிறதேதான். அதே கமலின் அஜெண்டா திணிப்புகளாக காதலியுடன் இருக்கும் பொழுது பகுத்தறிவு பிரச்சாரமும் அரசியல் வசனங்களும் இருக்கிறதே என்றால் இருக்கிறதேதான். ஊர்வசியும் ரமேஷ் அரவிந்தும் வேஸ்ட் செய்யப்பட்டு இருக்கிறார்களே என்றால் இருக்கிறார்களேதான்.

ஆனால் சமீபகால நேட்டிவிட்டி என்ற பெயரில் தரப்படும் திராபை இல்லாமல், குத்துப் பாட்டு ஆபாச நடனங்கள் இல்லாமல், அடிதடி சண்டைகள் இல்லாமல், ரத்தக் களறி இல்லாமல், காமெடி என்ற பெயரில் நடத்தப்படும் அபத்தக் கூத்துகள் இல்லாமல், மூளையை ஆப் செய்துவிட்டு குடும்பத்துடன் உட்கார்ந்து சிரித்துவிட்டு வர முடிகிறது. பஞ்சதந்திரம், பம்மல் கே ரேஞ்சில் இல்லாவிட்டாலும் ஒரு முறை பார்க்கக்கூடிய தரத்தில்தான் இருக்கிறது.

கமல் தொப்பையும் தொந்தியுமாக ஆகிவிட்டார். இனிமேல் வயதுக்கேற்ற கேரக்டர்கள் செய்வது நலம். மனைவியை இழந்தவராக வருவது, மனைவி மகள் என்று யாரேனும் இறக்கும் பொழுது ஒரு ட்ரேட்மார்க் அழுகையுடன் அழுவது போன்றவற்றில் இருந்து சீக்கிரம் வெளிவருதல் நலம். கே எஸ் ரவிக்குமாரை படத்தில் காணவே இல்லை. எல்லாருக்கும் அவரவர் இடத்தைக் கமல் தர வேண்டும். இசை பற்றிப் பேசாமல் இருப்பதே எல்லாருடைய ரத்த அழுத்தமும் ஏறாமல் இருக்க ஏதானது. இளையராஜாவுடன் சேர்வதினால் ஆய பயன் யாதெனின் என்று கமல் யோசிக்க வேண்டும்.

பெரும்பாலும் இணையத்தில் நன்றாக இருக்கும் படங்கள் எனக்குப் பிடிக்காமல் போவதும் (அஞ்சாதே, பசங்க, இன்னும் பல), மட்டம் என்று விமர்சிக்கப் படும் படங்கள் (மும்பை எக்ஸ்ப்ரெஸ்) பல எனக்குப் பிடிப்பதும் எப்பொழுதும் நடப்பதுதான். புவிவெப்பமயமாதலினால் இதில் மாற்றமெதுவும் இல்லை. நல்லது.

Comfort Fabric Softner, V Guard Stabilizer போன்ற எழுத்துப்பிழைகளுடான விளம்பரங்களும், ஷாரூக் கானின் குரலில் தமிழும் வராத விளம்பரங்களும் வரும் வருடமாக 2011 இருக்கப் பிரார்த்திப்போம்.

பிகு: இன்று படம் பார்க்க எங்கள் குடும்பத்துடன் வேறு மூன்று குடும்பங்கள் மட்டுமே அரங்கில் இருந்தனர். எனவே ஜே ஜே எனக் கூட்டம் இல்லாத என்று தலைப்பைப் படித்துக் கொள்ளவும்.

Wednesday, December 22, 2010

இடக்கரடக்கல் என்றால் என்னான்னு தெரியுமா?

இடக்கரடக்கல் மட்டும் இல்லை, குழூஉக்குறி, மங்கலம் இப்படி சில விஷயங்களைப் பத்தி சொல்லி இருக்கேன்.

Wednesday, December 15, 2010

கண்றாவி!!

மார்கழி மாச ஆரம்பமும் அதுவுமா கண்ணில் இந்தக் கண்றாவிதான் பட்டது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கோட்பாட்டின்படி நீங்களும் ஒரு தபா பார்த்திடுங்கோ!

கண்றாவி
(கீதாம்மா, மேல இருக்கிற வார்த்தையைக் க்ளிக்குங்கோ)

Sunday, December 05, 2010

அக்கு வேற ஆணி வேற!

அக்கு வேறு ஆணி வேறு என்று சொல்கிறோமே. அதில் ஆணி என்றால் நாம் அன்றாடம் பயன்படுத்துவது. ஆனால் அக்கு என்றால் என்ன? ஆணி என்று வருவதால் அக்கு என்றால் ஆணியை அடிக்கும் முன் சுவர் பாழாகாமல் இருக்க சுவற்றில் முதலில் அடிக்கும் மரத்தக்கை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அகராதியைப் புரட்டினால் அக்கு என்பதற்கு அப்படி ஒரு அர்த்தம் தரப்பட்டு இருக்கவில்லை. இணையத்தில் மேய்கையில் அக்கு அக்காகப் பிரிப்பது என்பதால் அக்கு என்றால் பாகம் என்று சிலர் விளக்கம் தந்திருந்தனர். ஆனால் அகராதியில் அது போன்ற பொருளும் தந்திருக்கப்படவில்லை.

அக்கு [ akku ] , s. little shells, cowries, பலகறை; 2. beads of conch shells, சங்குமணி; 3. beads of seeds of the elœocarpus worn by religious mendicants, உருத்திராக்ஷம்; 4. eye, கண்; 5. bone, எலும்பு.

இவைதான் அக்கு என்பதற்கு அகராதி தரும் விளக்கங்கள். இதில் அக்கு என்றால் எலும்பு என்பது ஒரு பொருள் உண்டாகும் அடிப்படை கட்டமைப்பு என்பதாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஒரு பொருளின் பாகங்கள் என்பதை விட, ஒரு பொருளின் கட்டமைப்புக்கான (structure / frame) பாகங்களாக இருப்பதை அக்கு என்று சொல்வோமானால் அது எலும்புக்கு ஈடாக வருகிறது. ஆகையால் இந்த இடத்தில் அக்கு என்பதற்கு எலும்புதான் சரியான பொருளாக வருகிறது. ஆனால் அப்படி எடுத்துக் கொண்டோமானால் ஆணி என்ற சொல் வருவதற்கான காரணம் சரியாகப் புரியவில்லை. எல்லாப் பொருட்களுமே ஆணி வைத்துதான் கோர்க்கப்பட்டு இருக்கும் என்பது ஒரு தவறான முன்முடிவாகவே எனக்குத் தோன்றியது. எனவே ஆணி என்ற சொல்லுக்கு வேறு என்ன விளக்கங்கள் இருக்கின்றன எனப் பார்க்க அகராதியை நாடினேன்.

ஆணி [ āṇi ] {*}, s. a nail; 2. piece of gold used as a standard for testing other gold. 3. a style எழுத்தாணி; 4. core of an ulcer; 5. excellence, மேன்மை; 6. support, foundation, ஆதாரம்; 7. wish, desire, விருப்பம்.

இதுதான் ஆணிக்கு அகராதியில் இருக்கும் விளக்கங்கள். அக்கு என்பதற்கு ருத்திராட்சம் எனப் பார்த்து இருந்ததால் ஒரு வேளை அது கோர்க்கப்பட்டு இருக்கும் தங்கத்தை சோதிக்க ஆணி என்ற சொல் வந்திருக்குமோ என்றும் கூட நினைத்தேன். ஆனால் அதுவும் சரியான பொருளைத் தராத எண்ணமே வந்ததால் மேலும் கொஞ்சம் தேடினேன்.

இதற்கான விடை நாலாயிரத்திவ்யப்பிரபந்தத்தில் கிடைத்தது. குறிப்பாக இந்தப் பாடலைப் பாருங்கள்.

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன்புலச் சேவை யதக்கி

கயிற்றும்அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி

எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்

பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே.

இந்தப் பாடலின் இரண்டாம் வரியில் கயிற்றும் அக்காணி கழித்து அப்படின்னு பாடி இருக்காரு. இதற்கான உரையில் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார், கயிறு- நரம்பு; அக்கு- எலும்பு, ஆணி- சரீரத்துக்குப் பெயர். ஆணி கழித்தல்- சரீரத்தில் தசையை ஒழித்தல். எலும்பில் இருந்து மொத்தமாக தசைகளை நீக்கும் ஆற்றல் பெற்றவனாய் ஆண்டவனைச் சொல்கிறார். அதாவது ஆதாரம் என்ற பொருட்படும் விதமாக ஆணி என்றால் தசை, எலும்புகளை ஒரு அமைப்பில் நிறுத்தச் செய்யவும் அவற்றை இயக்கவும் தேவைப்படும் தசைகள் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் இதை நேரடியாக அணுகாமல் மறைபொருளாகப் பார்த்தோமானால், இங்கு ஆணி என்பது விருப்பத்தைக் குறிக்கும் என்று உணரலாம். அதாவது ஒருவனிடம் இருந்து நரம்பு, எலும்பு மட்டுமில்லாமல் அவன் ஆசையையும் நீக்கி எனப் பாடலின் பொருளாகச் சொல்லலாம். கயிறு என்றால் நரம்பு. எக்கு என்றால் எலும்பு என்றும் ஆணி என்றால் விருப்பம் என்றும் பொருள் இருப்பதை முன்னமே பார்த்தோம். எப்படி ஒருவனை பகுதி பகுதியாய் பிரித்து எடுப்பது என்று முடிவானால் கையை வெட்டலாம், காலை வெட்டலாம். ஆனால் அவனுள் இருக்கும் ஆசையை எடுப்பது என்பது கிட்டத்தட்ட முடியாத ஒன்று. பற்றற்ற நிலையை அடைவது என்பது எல்லாருக்கும் வாய்ப்பது இல்லை. எனவே ஒரு மனிதனை பரிபூரணமாய் பிரிப்பது என்றால் அவனுள் இருக்கும் ஆசையை வரை தனியாகப் பிரித்து எடுப்பது என்று பொருளாகிறது.

எனவே அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிப்பது என்றால் பரிபூரணமாகப் பிரித்துப் பார்ப்பது என்பது தெளிவாகிறது. இந்தப் பழமொழியில் அக்கு என்றால் எலும்பு என்பதையும் ஆணி என்றால் நேரடியாக தசை என்றும் மறைபொருளாக விருப்பம் என்றிருப்பதையும் இனி நாம் நினைவில் கொள்வோம்.

(தமிழ் பேப்பரில் 04-12-2010 அன்று வெளி வந்தது)

தமிழ் பேப்பரில் வரும் இலக்கணத் தொடரைப் படிக்கிறீர்களா?