Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Sunday, October 14, 2018

இருட்டுக்கும் குரல் உண்டு....




சமீபத்தில் நியூஜெர்ஸியில் நடந்த கச்சேரியில் பாடகர் டிஎம் கிருஷ்ணா அவர்கள், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய பாடல் ஒன்றை ரீதிகௌளை ராகத்தில் பாடினார். சுவாரசியம் அப்பாடலின் பாடுபொருள். 


பொதுவாக கர்நாடக இசையில் பெரும்பாலும் பக்தி சார்ந்த பாடல்களே பாடப்பெறும். மிகக் குறைவான அளவில் ஜாவளி போன்ற வடிவங்களில் காதற் பாட்டுகள் இடம் பெறும். அல்லது கச்சேரியின் இறுதிப் பகுதியில் பாரதியார் பாடல்கள் போன்ற நாட்டுப்பற்று பாடல்கள் இடம் பெறும். இவ்வகையில் இல்லாத பாடல்கள் மிகவும் அரிதே. 

இந்தக் கச்சேரியில் பாடிய பாடல் ஒரு பறவையைப் பற்றிய பாடல். அதுவும் பொதுவாக அதிகம் பேசப்படாத ஆந்தையைப் பற்றிய பாடல். ஆந்தையும் கண்கள் பற்றியும் அதன் அலறல் பற்றியும் அழகாக எழுதப்பட்ட இந்தப்பாடலை பாடிக் கேட்கும் பொழுது அத்தனை அற்புதமாக இருக்கிறது.  உடன் வாசிக்கும் கலைஞர்கள் ஶ்ரீராம்குமாரும், அருண்பிரகாஷும் இப்பாடலின் தன்மையை உணர்ந்து வெகு அழகாக வாசித்தனர். குறிப்பாக இருளின் தன்மையைக் கொண்டு வர மிருதங்கத்தில் ஒரு பக்கம் மட்டும் கொண்டு அருண்பிரகாஷ் வாசித்த இடங்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். இந்தப் பாடலுக்கு மெட்டமைத்தவர் டிஎம் கிருஷ்ணா. 

ஆந்தை மட்டுமல்லாது மேலும் சில பறவைகள் மேல் பாடல் புனைந்திருப்பதாக பெருமாள் முருகனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சொன்னார். அவையும் விரைவில் மேடை ஏறும் என எதிர்பார்க்கிறேன். தற்பொழுது பாடப்படும் பாடு பொருளினால் கர்நாடக இசையினுள் வரத் தயக்கம் கொண்டோரை உள்ளே இழுக்க இது அற்புதமான வழி. தொடர்ந்து பல கலைஞர்களும் இது போன்ற பாடல்களைப் பாட முன் வர வேண்டும். 

இப்பாடலின் தனித்தன்மையை உணர்ந்து இதனை எல்லாரும் கேட்க வகை செய்த CMANA இயக்கத்தினருக்கு என் நன்றி. 



ஆந்தைப் பாட்டு

பல்லவி
இருட்டுக்கும் குரலுண்டு
ஆந்தையின் அலறலது
பொருட்டாக்கிக் கேட்டால் பல
பொருளுணர்த்தும் மொழியாகும் (இருட்டுக்கும்)

அனுபல்லவி
இருளின் கனத்தை உடைத்து
பெருத்த அமைதி கலைத்துத்
தரும்பயம் போக்கிப் பேசும் (இருட்டுக்கும்)

சரணம்
உருட்டி விழிக்கும் கண்கள்
உருளும் பந்தாய் மிளிரும்
விருட்டென்று வாய்திறந்து
மருட்டி அலறி ஒலிக்கும்
விரித்து மனதைத் திறந்தால்
சிரிக்கும் குழந்தைக் குரல்போல்
இருளை உருக்கி நெஞ்சில்
முருகு பெருக்கி வளர்க்கும் (இருட்டுக்கும்)


Sunday, October 07, 2018

ஏ ரிக்‌ஷா!!

ரிக்‌ஷா ஒன்றினை ஒரு இளம்பெண் ஓட்டுவது போலவும் அதில் அந்த ரிக்‌ஷாவினை பொதுவாக ஓட்டும் தொழிலாளி அமர்ந்திருப்பது போலவும் ஒரு புகைப்படைத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்தப் பெண் இந்த ரிக்‌ஷாக்காரரின் பெண் என்றும் இஆப பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தோஷத்தை தன் தந்தையை அமர வைத்து இப்பெண் இழுத்துச் சென்று கொண்டாடியதாகவும் வாட்ஸப்பில் ஒரு கதை சுற்றி வந்தது. அது வழக்கம் போலப் பொய் என்றும் இது ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் எனச் சொல்லி நல்ல கதையை இல்லாமல் செய்த நல்ல உள்ளங்களுக்கு என் கண்டனங்கள்.



இன்றைக்கு ட்விட்டரில் இது தொடர்பாக ஒரு நண்பர் கேட்ட கேள்வி - ரிக்‌ஷா என்றால் என்ன? ட்விட்டரிலேயே சிறுபதில் தந்துவிட்டாலும் இதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.

முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். சக மனிதனைக் கால்நடைபோல் கருதி ஒரு மனிதனை மனிதன் வண்டியில் இழுத்துச் செல்வது என்பது தமிழர் பண்பாடு கிடையாது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. வேண்டாத பல பழக்கங்கள் வெளியில் இருந்து வந்து நம் பண்பாட்டைக் குலைத்ததுபோல் இந்தப் பழக்கமும் நடுவிலே சில காலம் நம்மிடையே இருந்தது ஒரு துன்பியல் சம்பவமே. நல்லவேளை நம்மை நாமே மீட்டுக் கொண்டோம். போகட்டும்.

ஷா என்றால் மன்னர்கள், அரசர்கள், பேரரசர்கள். இன்றைய ஈரான், அன்றைய பெர்ஷியாவில் பயன்பட்ட சொல் என்றாலும் இதற்கு மூலம் வடமொழியில் இருக்கும் க்ஷத்ர என்ற சொல்தான். அதே வேர்ச்சொல்லில் இருந்து வந்த க்ஷத்திரிய என்ற சொல் வீரர்களைக் குறிக்கப் பயன்படுவதாக விக்கிப்பீடியா சொல்கிறது.(1) ஆக ஷா என்ற வடமொழிச்சொல் வட இந்தியாவில் மன்னர்களைக் குறிக்கப் பயன்பட்ட சொல் என்பது நிரூபணமாகிறது.

வேதங்களில் பழமையானது ரிக் வேதம் (2). பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பத்து மண்டலங்களாகக் கொண்ட ரிக் வேதத்திற்கு நான்கு வேதங்களில் என்றுமே முதன்மையான இடம்  உண்டு. இந்த ரிக் வேதத்தைக் கற்றுணர்ந்து அதனைப் பின்பற்றுபவர்களுக்கு ரிக்வேதிகள் என்று பெயர். இவர்களில் முதன்மையானவர், ரிக்வேதிகள் அனைவருக்கும் தலைவராகக் கருதப்படுபவரை ரிக்வேதிகளின் மன்னர், ரிக் வேதத்தில் மன்னர் என்ற பொருள் வரும்படி  ரிக்‌ஷா என்று அழைப்பார்கள். மிகவும் ஞானம் உள்ளவராகக் கருதப்படும் இவரை அக்காலச் சமூகம் போற்றிக் கொண்டாடும். அவர் வெளியே செல்லும் பொழுது அவரின் வண்டியை இழுத்துச் செல்வது பெரும்பாக்கியமாகக் கருதப்பட்டு அதில் மாடுகளோ குதிரைகளோ பொருத்தப்படாமல் அவரின் சீடர்களே அவ்வண்டியை இழுத்துச் செல்வது வழக்கம்.

ரிக்‌ஷா வரும் நேரம் என்ன? ரிக்‌ஷா வந்தாகிவிட்டதா? என்றெல்லாம் மக்கள் பேசியதால் காலப்போக்கில் ரிக்‌ஷா என்பது ரிக்வேதிகளின் தலைவரைக் குறிப்பது போய்,  மனிதரால் இழுக்கப்படும் அவ்வண்டிக்கான பொதுப்பெயராகிவிட்டது. ரிக்வேதிகளின் தலைவருக்கு மட்டும் இப்படிப்பட்ட மரியாதையா என எண்ணிய மற்ற வேதங்கள் ஓதுபவர்களின் தலைவர்கள் தமக்கு இது போல வண்டி வேண்டும் என மரியாதையைக் கேட்டு வாங்க ஆரம்பித்தார்கள். நாள்போக்கில் யாரிடமெல்லாம் அந்தஸ்தும் பணமும் அதிகாரமும் இருக்கிறதோ அவர்கள் எல்லாருமே இவ்வண்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் வண்டியின் பெயர் மட்டும் அதன் மூல காரணமாக இருந்த ரிக்வேதிகளின் தலைவரின் நினைவாக ரிக்‌ஷா என்றே நிலைத்துவிட்டது.

தானே ஒரு ரிக்‌ஷா ஓட்டுநராய் நடித்த பொழுது, இந்த ரிக்‌ஷா ஓட்டுநர்களின் சிரமம் அறிந்த புரட்சித் தலைவர் அவர்களுக்கு மழைக்கவசம் தந்து மகிழ்வித்தது நம் நாட்டின் வரலாறு. கொடுத்து சிவந்த கரங்கள் கொண்ட தெய்வம் அவர் என்பதற்குச் சான்றல்லவா இது.  இயந்திரம் பொருத்திய வண்டி பின் தானி என மாறி இன்று நம் மாநிலத்தில் இப்படி கால்நடை போல மனிதன் நடத்தப்படும் அவலம் இல்லாமல் போய்விட்டது.  நம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இவ்வண்டி கிடையாது. ஆனால் தொழிலாளிகளின் நலனுக்காகப் போராடும் இடதுசாரிகளின் கோட்டையான மேற்குவங்கத்தில் மட்டுமே இவர்கள் இன்னும் இருப்பது ஒரு நகைமுரணே.


(1) https://en.wikipedia.org/wiki/Shah
(2) https://en.wikipedia.org/wiki/Vedas

Wednesday, February 01, 2012

புதைபுதிர் விடைகள் - பண்புடன் சிறப்பிதழுக்காக செய்தது

வெகு நாட்கள் கழித்துப் போடப்பட்ட புதிர் என்பதாலோ என்னவோ பல பழைய நண்பர்களைக் காணோம். ஆனால் புதியவர்கள் நிறைய பேர் முயற்சி செய்தது மகிழ்ச்சியாக இருந்தது.

ஒவ்வொருவரும் எவ்வளவு விடைகள் போட்டார்கள் என கணக்கு வைக்கவில்லை. எல்லா விடைகளையும் சொல்லி இருந்தவர் பலர். அனைவருக்கும் வாழ்த்துகள்.

விடைகள் நிரப்பப்பட்ட கட்டம் இதுதான்.



இனி குறிப்புகளோடு விடைகளை இணைத்துப் பார்க்கலாம்.

குறுக்காக:

5.கணவர்களே இணையத்தில் எழுதுவதால் இப்பெயரோ (6)

பதிவுலகம் - பதி என்றால் கணவர். பதிகளின் உலகம் பதிவுலகம் எனச் சொல்லலாம். இணையத்தில் எழுதப்படுவது பெரும்பாலும் பதிவுகள் என்பதால் Blogdom என்ற சொல்லைப் பதிவுலகம் என மொழிபெயர்த்திருக்கின்றனர். பலரும் இதில் சிரமப்பட்டது எனக்கு ஆச்சரியமே.

6.தையலா பெரும்பாலும் இப்பெட்டியை வைத்திருப்பது (2)

தைலா - தையலா என்ற சொல்லின் பெரும்பான்மையாக எழுத்துகளை எடுத்துக் கொண்டால் தைலா என்ற விடை வரும். தைலா என்றால் மரப்பெட்டி எனப் பொருள். தைலாப்பெட்டி என்று கொச்சையாகச் சொல்லுவார்கள். தெரியாத சொல் என்பதால் சிலரே போடுவார்கள் என நினைத்தேன். ஆனால் அகராதியின் துணை கொண்டு பலரும் சரியாகச் சொன்னது வியப்பே!

7.அழுத்தி வசம்பினைத் தடவிய பாட்டியை இன்று நினை (4)

திவசம் - முன்னோர்களை நினைவில் கொள்ளும் தினம். அழுத்தி வசம்பினை என்ற இரு சொற்களுக்களின் உள்ளே திவசம் என்ற சொல் ஒளிந்து கொண்டிருக்கிறது.

9.கரங்களில் மீதியின் பாதியை எடுக்க 15க்கு சென்றவர் (4)

கைதிகள் - 15நெ என்ற குறிப்பின் விடை சிறை. அங்கு சென்றவர் கைதிகள். கரங்கள் என்றால் கைகள் அதை நடுவே மீதியின் பாதி அதாவது தி சேர கை’தி’கள் என்ற விடை வரும். சென்றவர் என்பது பன்மை. கரங்கள் என்பதும் பன்மை. எனவே விடை பன்மையாகத்தானே இருக்க வேண்டும். ஆனால் சிலர் இதற்குக் குழம்பினர். சென்றவர்கள் எனச் சொல்லி இருந்தால் இன்னும் எளிமையாக இருந்திருக்கும். ஆனால் வேண்டுமென்றே சென்றவர் என்பதோடு நிறுத்தினேன்.

10.ரமாவும் கோபுவும் சேர்ந்து வல்லிப்புத்தூர் போய் பார்த்தது இதையா (4)

கோபுரமா - கோபு,ரமா என்ற இரு பெயர்களின் எழுத்துகளைச் சேர்த்தால் கோபுரமா என்ற விடை வரும். வல்லிப்புதூரின் சிறப்புகளில் ஒன்று கோபுரம். இதையா என குறிப்பை முடித்ததால் விடை கோபுரமா என வர வேண்டும்.

12.முன் பாதி பயிறு முழுவதும் படித்துப் பார் (4)

பயின்று - முன் என்ற சொல்லின் பாதி ன். பயிறு என்ற சொல்லோடு இணைத்தால் பயின்று என விடை வரும். படித்துப் பார் என்ற பொருள்.

13.போதும் என்றபின் வேறென்ன வேலை, இடைவெட்டிச் சென்றிடுவீர் (2)

போம் - செல்லும், சென்றிடுவீர் என்பதற்கு இணையான சொல். போதும் என்ற சொல்லின் இடையை வெட்ட போம் வரும்.

14.சகோதரி தலை முடிந்து மைதாஸின் பெண் ஆனாள் (6)

தங்கச்சிலை - சகோதரி என்ற சொல்லிற்கு இணையாக தங்கச்சி என்ற சொல். தலை முடிந்து என்பதால் லை என்ற எழுத்து சேர தங்கச்சிலை என்றாகும். மைதாஸ் தான் எதைத் தொட்டாலும் தங்கமாக வேண்டும் என்ற வரம் வாங்கிய பின் தன் பெண்ணைத் தொட அவள் தங்கச்சிலை ஆனது கதை.

நெடுக்காக:

1.அறிவுக்கு மரியாதை கொடு (2)

மதி - அறிவு, மரியாதை என்ற இரு வித அர்த்தங்களும் கொண்ட சொல் மதி.

2.படகினுள்ளே கந்தன் தலையெடுத்து வீசியதால் வந்த குழப்பம் (4)

கலகம் - படகு என்ற பொருள் வரும் மற்றொரு சொல் கலம். கந்தன் என்ற சொல்லின் முதல் எழுத்து, அதாவது தலை க. கலத்தின் உள்ளே க என்ற எழுத்தை வீசினால் குழப்பம் என்ற பொருள் தரும் கலகம் வரும்.

3.ஐயராத்துப் பையன் கரத்தில் அம்மனைப் பார் (4)

அம்பிகை - பிராமணக் குடும்பங்களில் பொதுவாக பையனை அம்பி என அழைப்பார்கள். கை என்பதை குறிக்க கரம் குறிப்பில் வந்ததுள்ளது. அம்பிகை என சேர்த்தால் அம்மன் என்ற சொல்லைப் பார்க்கலாம்.

4.பீமனின் ஆயுதம் விளையும் இடமா புனைவு நடந்த இடம்(6)

கதைக்களன் - பீமனின் ஆயுதம் கதை. விளையும் இடம் களன். கதைக்களன் என்பது ஒரு புனைவின் தளத்தினைக் குறிக்கும். விளையும் இடம் என்பதற்குப் பலரும் களம் என்று சொல்லி இருந்தனர். அதனால் 12கு போட கஷ்டப்பட்டனர். களன் என்பது களம் என்பதைக் குறிக்கும் மற்றொரு சொல் ஆகும்.

8.வந்து முதற்கடையில் அம்புகள் தலைஇழந்து சலசலப்பு (3,3)

வம்பு தும்பு - வந்து என்ற சொல்லின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் வ மற்றும் து. அம்புகள் தலை இழந்தால் ம்பு எனக் கிடைக்கும். வ-ம்பு, து -ம்பு என இரு முறை ம்பு என்ற எழுத்துகள் இணைப்பட வேண்டி இருந்ததால் அம்புகள் என பன்மையில் குறிப்பிட்டேன். வம்பு தும்பு என்ற சொல்லுக்கு நேர் குறிப்பாக வருவது சலசலப்பு.

11.ஏமாந்தவர் அனேகமாய், ஏன் மொத்தமே, இவர்தாம் (4)

மாந்தர் - ஏமாந்தவர் என்ற சொல்லில் பெரும்பாலான எழுத்துகளைக் கொண்டே மாந்தர் என்ற விடை வருகிறது. அதனால் அனேகமாய் என்று குறிப்பில் சொன்னேன். ஏமாறுபவர் அனைவரும் மனிதர்தானே.

12.பொன் தலை மாறக் கேடு (4)

பங்கம் - தங்கம் என்பது பொன்னைச் சொல்ல மற்றுமொரு சொல். இதை தலை எழுத்து மாறி, கேடு எனப் பொருள் கொண்ட பங்கம் என்ற சொல் வரும்.

15.சில்லறைத் திருட்டை ஆதியோடந்தமாய்ப் பிடித்ததால் போக வேண்டிய இடம் (2)

சிறை - சில்லறை என்ற சொல்லின் முதல் மற்றும் கடைசி எழுத்துகளை எடுத்துக் கொண்டால் சிறை என்ற விடை கிடைக்கும். திருடியவர்கள் மாட்டிக் கொண்டால் போக வேண்டிய இடம் தானே!

Tuesday, January 17, 2012

நாகாநீ நல்லா இரு!

இன்று நண்பர் @nchokkan அவர்களின் பிறந்த நாள். எங்கேயோ தொலைவில் இருந்து என்ன பரிசு தருவது?! வருடத்தின் 365 நாட்களுக்கும் தினம் ஒரு பா விளக்கம் தருபவருக்கு வெண்பாவை விட பொருத்தமான பரிசு உண்டா! .

நாக சொக்கநாதன் என்பதவர் முழுப்பெயர் என்பதலால் அவரை செல்லமாக நாகா என விளித்து ’நாகாநீ நல்லா இரு!’ என்ற ஈற்றடியில் ஒரு பத்து வெண்பா எழுதி அனுப்பிவிட்டேன்.

அருமை சொக்கரே, நீர் இன்னும் பல நூற்றாண்டிரும்!

சொக்கன் அதிகாரம்!

(அதி காரமாய் எழுத மாட்டார், அதிகாரமும் செய்ய மாட்டார். அதனால் சொக்கன் அதிகாரம் என்பது பொருத்தமான ஒன்றே இல்லை. ஆனால் வள்ளுவர் பத்து குறள் எழுதினை ஒரு அதிகாரம் எனப் போட்டதனால் நாமும் அப்படித்தானே செய்ய வேண்டியதாய் இருக்கிறது!)

ஆகாத வேலை அதிகம் இருக்குதப்பா

நாகாநீ நல்லா இரு! (1)

போடா வெயிட்டுடன் போகா மயிருமாய்

நாகாநீ நல்லா இரு! (2)

கூடாத நட்புடன் குத்தும் உறவுமின்றி

நாகாநீ நல்லா இரு! (3)

ஆகாது போகுமோ ஆயிரம் புக்குகள்

நாகாநீ நல்லா இரு! (4)

ஓடாய் உழைக்கிறாய் ஓய்வின்றி ஓடுகிறாய்

நாகாநீ நல்லா இரு! (5)

தேனாகப் பேசுவாய் தீந்தமிழ் எழுதுவாய்

நாகாநீ நல்லா இரு! (6)

ஆகா எனும்படி ஆயிரம் புக்கெழுத

நாகாநீ நல்லா இரு! (7)

சீதாவைப் போலச் சிரமத்தில் சிக்காதே

நாகாநீ நல்லா இரு (8)

சாகரமாம் உன்னறிவு சாகசங்கள் செய்வாயே

நாகாநீ நல்லா இரு! (9)

போகங்கள் மூன்றுமே போதாதே நீயெழுத

நாகாநீ நல்லா இரு! (10)

ஆகா / ஆயிரம் காம்பினேஷனில் ரெண்டு குறள் வந்துட்டுது. அதனலா ஒரு போனஸ் வெண்பாவும் போட்டுடறேன்.

மோதா வழியினை மோகிப்பாய் என்றுமே

நாகாநீ நல்லா இரு! (11)

இவற்றை ட்விட்டரில் போட்ட உடன் வெண்பா(ம்)களை அள்ளித் தெளித்தனர் நண்பர்கள் @writerpara @dynobuoy @erode14 @abc_02 @penathal ! இவர்கள் எழுதிய வெண்பாம்கள் இவை

@writerpara

அமர்க்களமாக பாம்போட்டு மகிழ்ந்திடுவோம்/கமர்ஷியல் பர்த்டே இது.

சாகா வரம்பெற்ற சரக்குபல தந்தவனே / நாகாநீ நல்லா இரு.

ராகாடாட்காமில் ராஜாவின் இசைபோல / நாகாநீ நல்லா இரு

வாகா யுனைவாழ்த்த வருடம் ஒருநாள் தந்தாய் / நாகாநீ நல்லா இரு

@dynobuoy

ஆகாவென உலகம் உனை வாழ்திட/ நாகாநீ நல்லா இரு!

சாகாவரம் பெரும் புத்தகங்கள் படைத்திட/ நாகாநீ நல்லா இரு

ஏகா உன் கைவிரல் சோம்பா/ நாகாநீ நல்லா இரு!

பாகா, எழுத்தாம் யானையைப் ஆளும்/ நாகாநீ நல்லா இரு!

சோகா சோம்பா வதன முடைய/ நாகாநீ நல்லா இரு

பாகாய் பதமாய் இனிக்கும் நண்பா/ நாகாநீ நல்லா இரு!

@erode14

வாகா எழுதுவாய் வாசிப்பிலும் கலக்குவாய் / நாகாநீ நல்லா இரு

ஏகாம்பரன் அருளால் ஏற்றங்கள் பெற்றிடுவாய் / நாகாநீ நல்லா இரு

ஆகாத ஒன்றூமே அணுகாதே என்றுமே / நாகாநீ நல்லா இரு

ராகாஸில் லயித்தே ராஜாவினிசை போலே / நாகாநீ நல்லா இரு

நோகாத உடலோடு நீங்காத வளமோடு / நாகாநீ நல்லா இரு

ஸாகாவை உண்டாக்க சாரங்கள் எழுப்பியே / நாகாநீ நல்லா இரு

ஈகாவைப் போலவே இன்பமாய் திரையாய் / நாகாநீ நல்லா இரு

பாகாய் இனித்து பதினாறும் பெற்றே / நாகாநீ நல்லா இரு

வேகாமல் போகாது வெந்திடுமே உன்பருப்பு / நாகாநீ நல்லா இரு

யோகாவில் சேர்ந்தாற்போல் ஓகோவென்றாகிடுவாய் / நாகாநீ நல்லா இரு

பாகாவென்றானைக்கு பரிவான காவலனாய் / நாகாநீ நல்லா இரு

நாகாஸ்திரம் கொண்டு நாற்திசையும் வென்றிடுவாய் / நாகாநீ நல்லா இரு

மோகாஸ்திரம் போட்டாற்போல் வாசகனை வசங்கொண்டே / நாகாநீ நல்லா இரு

மேகாலயாவிலே பொழிகின்ற மழை போல / நாகாநீ நல்லா இரு

.காமில் பாவெழுத நாட்காட்டி பார்க்காத /நாகாநீ நல்லா இரு

சோகாப்பு இன்றியே சுகவாசம் செய்தபடி / நாகாநீ நல்லா இரு

மாகாளி அருளாலே மகளோடும் புகழோடும் / நாகாநீ நல்லா இரு

மாகாளிக் கிழங்கெனவே மகிழ்ச்சியில் ஊறியே / நாகாநீ நல்லா இரு

நீகாமனாய் நின்று நிம்மதியாய்க் நிலங்கண்டே / நாகாநீ நல்லா இரு

ஆகாரக் குறைவின்றி வியாபாரம் நடக்கட்டும் / நாகாநீ நல்லா இரு

ப்ராகாரம் வலம்வந்த ப்ரார்த்தனைகள் பலிக்கட்டும் / நாகாநீ நல்லா இரு

@abc_02

வேகா வெயிலில் வெட்டியா நடக்காம/நாகாநீ நல்லா இரு.

வேகாத இப்பயலோட வெட்டியாப் பேசாம/நாகாநீ நல்லா இரு

@penathal

பாகாய் இனிக்கட்டும் பல்லாண்டு பல்லாண்டு - நாகாநீ நல்லா இரு

போகாத தூரம் பொடிநடையாய் ஆகட்டும் - நாகாநீ நல்லா இரு!

சோகங்கள் எல்லாமே சொல்லிக்காம போகட்டும் - நாகாநீ நல்லா இரு!

தாகம் தணித்திடும் தண்புனலாய் வாழ்ந்திரு - நாகாநீ நல்லா இரு!

வேகமாய் ஆயிரம்நூல் வேண்டியே வந்திடுமே - நாகாநீ நல்லா இரு!

மோகம் அறுக்க முயற்சிகள் செய்யாமல் - நாகாநீ நல்லா இரு!

வாகாக வாழ்க்கை வளைந்திட வாழ்த்துகிறேன் - நாகாநீ நல்லா இரு!

ராகம் இசைத்திட்டே ரத்தபூமி தன்னிலும் - நாகாநீ நல்லா இரு!

மேகம் பொழிந்திடும் மேன்மை அடைந்திடு - நாகாநீ நல்லா இரு!

பாகமாய் வாழ்ந்திடும் பத்தினி புத்திரியோடு - நாகாநீ நல்லா இரு!

Posted via email from elavasam's posterous

Monday, January 09, 2012

புதைபுதிர் - பண்புடன் சிறப்பிதழுக்காக செய்தது

ரொம்ப நாள் ஆச்சு புதிர் போட்டு. நம்ம ஒருபக்கம் ஸ்ரீதர் நாராயணன், பண்புடன் இதழின் சிறப்பாசிரியராகி இருக்கேன். ஒரு புதிர் வேணும்ன்னு கேட்டார். சரி அப்படியாவது விட்டுப் போன புதிர் போடும் பழக்கம் திரும்ப வருதா பார்க்கலாம்ன்னு ஒரு புதிர் போட்டு இருக்கேன்.

நல்லா இருக்கா சொல்லுங்க. வழக்கம் போல விடைகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க. வெறும் விடையைச் சொல்லாம அது எப்படி குறிப்போட ஒத்துப் போகுதுன்னு சொல்லப் பாருங்க. சரியா தவறான்னு சொல்லறது மட்டும் என் வேலை.
புதிருக்கான கட்டங்களும் குறிப்புகளும் கீழே.


1 2 3 4
5 6
78 9
1011 12
13 1415



குறுக்காக:

5.கணவர்களே இணையத்தில் எழுதுவதால் இப்பெயரோ (6)

6.தையலா பெரும்பாலும் இப்பெட்டியை வைத்திருப்பது (2)

7.அழுத்தி வசம்பினைத் தடவிய பாட்டியை இன்று நினை (4)

9.கரங்களில் மீதியின் பாதியை எடுக்க 15க்கு சென்றவர் (4)

10.ரமாவும் கோபுவும் சேர்ந்து வல்லிப்புத்தூர் போய் பார்த்தது இதையா (4)

12.முன் பாதி பயிறு முழுவதும் படித்துப் பார் (4)

13.போதும் என்றபின் வேறென்ன வேலை, இடைவெட்டிச் சென்றிடுவீர் (2)

14.சகோதரி தலை முடிந்து மைதாஸின் பெண் ஆனாள் (6)


நெடுக்காக:

1.அறிவுக்கு மரியாதை கொடு (2)

2.படகினுள்ளே கந்தன் தலையெடுத்து வீசியதால் வந்த குழப்பம் (4)

3.ஐயராத்துப் பையன் கரத்தில் அம்மனைப் பார் (4)

4.பீமனின் ஆயுதம் விளையும் இடமா புனைவு நடந்த இடம்(6)

8.வந்து முதற்கடையில் அம்புகள் தலைஇழந்து சலசலப்பு (3,3)

11.ஏமாந்தவர் அனேகமாய், ஏன் மொத்தமே, இவர்தாம் (4)

12.பொன் தலை மாறக் கேடு (4)

15.சில்லறைத் திருட்டை ஆதியோடந்தமாய்ப் பிடித்ததால் போக வேண்டிய இடம் (2)



  • இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.
  • நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.


ஸ்டார்ட் மியூஜிக்!


Thursday, January 06, 2011

பிழை தீர் - பிழைத்தீர்

தெரிந்ததைச் சொல்லலாம் என ஆரம்பித்தக் கொத்தனார் நோட்ஸ் பகுதி பதினைந்து பாகங்கள் வந்துவிட்டது. ஆனால் இது சரி இது தவறு என்று சொல்லுவது எனக்கே கொஞ்சம் போர் அடித்துவிட்டது. அதனால் அதனை இப்பொழுது முடித்துவிடலாம் என்ற முடிவெடுத்து, நிறுத்திவிட்டேன். இறுதி பாகத்தைப் படிக்க இங்கு செல்லுங்கள்.

ஆனால் பிழைகள் பல கண்ணில் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அதிகம் பேர் பிழை செய்யும் சொற்களை எடுத்துக் கொண்டு தொடராக இல்லாமல் எப்பொழுதாவது சில பதிவுகள் போடலாம் என எண்ணம். அதே போன்று எழுதியவற்றிலோ அல்லது எழுதாமல் விட்டவைகளிலோ எதேனும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம். பதிவிடும் பொழுது அவற்றையும் எடுத்துக் கொள்கிறேன்.

இந்தத் தொடருக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. விரைவில் வேறு ஒரு தலைப்பில் அடுத்த தொடர் ஆரம்பிக்கிறேன்.

Friday, December 31, 2010

ஜே ஜே இல்லாத குறிப்புகள்!

படிக்கும் நல்ல நெஞ்சங்களுக்கு என் உள்ளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். எல்லா செல்வங்களும் சந்தோஷங்களும் உங்களைச் சேரட்டும்.

இந்த வாரம் தமிழ் பேப்பரில் சில எழுத்துப்பிழைகள், சில வார்த்தைகளின் மூலம் என வழக்கம் போல் எழுதி இருந்தாலும் ரஜினி பட பாடல் ஒன்றைப் பற்றிச் சொல்லப் போக அதற்கு அவர்கள் போட்ட படம் பற்றித்தான் பேச்சு அதிகமாக இருக்கிறது. படிக்க கீழே இருக்கும் உரலைச் சுட்டிப் பார்க்கவும்.


மன் மதன் அம்பு படம் பார்த்தோம். எல்லாரும் படம் சகிக்கவில்லை என்று சொல்லிவிட்டதால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றதினாலோ என்னவோ படம் அந்த அளவு மோசமாகத் தெரியவில்லை.

கமலின் மிகச்சிறந்த ஆக்கமா என்றால் இல்லைதான். க்ரேஸி மோகன் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமா என்றால் இருந்திருக்கும்தான். திரைக்கதையில் அபத்தமான ஓட்டைகள் இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஈழத்து டாக்ஸி ட்ரைவர், மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் என்று கமல் தனக்குத் தெரிந்ததைக் காட்ட வகையாக நுழைத்தப்பட்ட கேரக்டர்கள் இருக்கிறதே என்றால் இருக்கிறதேதான். அதே கமலின் அஜெண்டா திணிப்புகளாக காதலியுடன் இருக்கும் பொழுது பகுத்தறிவு பிரச்சாரமும் அரசியல் வசனங்களும் இருக்கிறதே என்றால் இருக்கிறதேதான். ஊர்வசியும் ரமேஷ் அரவிந்தும் வேஸ்ட் செய்யப்பட்டு இருக்கிறார்களே என்றால் இருக்கிறார்களேதான்.

ஆனால் சமீபகால நேட்டிவிட்டி என்ற பெயரில் தரப்படும் திராபை இல்லாமல், குத்துப் பாட்டு ஆபாச நடனங்கள் இல்லாமல், அடிதடி சண்டைகள் இல்லாமல், ரத்தக் களறி இல்லாமல், காமெடி என்ற பெயரில் நடத்தப்படும் அபத்தக் கூத்துகள் இல்லாமல், மூளையை ஆப் செய்துவிட்டு குடும்பத்துடன் உட்கார்ந்து சிரித்துவிட்டு வர முடிகிறது. பஞ்சதந்திரம், பம்மல் கே ரேஞ்சில் இல்லாவிட்டாலும் ஒரு முறை பார்க்கக்கூடிய தரத்தில்தான் இருக்கிறது.

கமல் தொப்பையும் தொந்தியுமாக ஆகிவிட்டார். இனிமேல் வயதுக்கேற்ற கேரக்டர்கள் செய்வது நலம். மனைவியை இழந்தவராக வருவது, மனைவி மகள் என்று யாரேனும் இறக்கும் பொழுது ஒரு ட்ரேட்மார்க் அழுகையுடன் அழுவது போன்றவற்றில் இருந்து சீக்கிரம் வெளிவருதல் நலம். கே எஸ் ரவிக்குமாரை படத்தில் காணவே இல்லை. எல்லாருக்கும் அவரவர் இடத்தைக் கமல் தர வேண்டும். இசை பற்றிப் பேசாமல் இருப்பதே எல்லாருடைய ரத்த அழுத்தமும் ஏறாமல் இருக்க ஏதானது. இளையராஜாவுடன் சேர்வதினால் ஆய பயன் யாதெனின் என்று கமல் யோசிக்க வேண்டும்.

பெரும்பாலும் இணையத்தில் நன்றாக இருக்கும் படங்கள் எனக்குப் பிடிக்காமல் போவதும் (அஞ்சாதே, பசங்க, இன்னும் பல), மட்டம் என்று விமர்சிக்கப் படும் படங்கள் (மும்பை எக்ஸ்ப்ரெஸ்) பல எனக்குப் பிடிப்பதும் எப்பொழுதும் நடப்பதுதான். புவிவெப்பமயமாதலினால் இதில் மாற்றமெதுவும் இல்லை. நல்லது.

Comfort Fabric Softner, V Guard Stabilizer போன்ற எழுத்துப்பிழைகளுடான விளம்பரங்களும், ஷாரூக் கானின் குரலில் தமிழும் வராத விளம்பரங்களும் வரும் வருடமாக 2011 இருக்கப் பிரார்த்திப்போம்.

பிகு: இன்று படம் பார்க்க எங்கள் குடும்பத்துடன் வேறு மூன்று குடும்பங்கள் மட்டுமே அரங்கில் இருந்தனர். எனவே ஜே ஜே எனக் கூட்டம் இல்லாத என்று தலைப்பைப் படித்துக் கொள்ளவும்.

Wednesday, December 22, 2010

இடக்கரடக்கல் என்றால் என்னான்னு தெரியுமா?

இடக்கரடக்கல் மட்டும் இல்லை, குழூஉக்குறி, மங்கலம் இப்படி சில விஷயங்களைப் பத்தி சொல்லி இருக்கேன்.

Wednesday, December 15, 2010

கண்றாவி!!

மார்கழி மாச ஆரம்பமும் அதுவுமா கண்ணில் இந்தக் கண்றாவிதான் பட்டது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கோட்பாட்டின்படி நீங்களும் ஒரு தபா பார்த்திடுங்கோ!

கண்றாவி
(கீதாம்மா, மேல இருக்கிற வார்த்தையைக் க்ளிக்குங்கோ)

Sunday, December 05, 2010

அக்கு வேற ஆணி வேற!

அக்கு வேறு ஆணி வேறு என்று சொல்கிறோமே. அதில் ஆணி என்றால் நாம் அன்றாடம் பயன்படுத்துவது. ஆனால் அக்கு என்றால் என்ன? ஆணி என்று வருவதால் அக்கு என்றால் ஆணியை அடிக்கும் முன் சுவர் பாழாகாமல் இருக்க சுவற்றில் முதலில் அடிக்கும் மரத்தக்கை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அகராதியைப் புரட்டினால் அக்கு என்பதற்கு அப்படி ஒரு அர்த்தம் தரப்பட்டு இருக்கவில்லை. இணையத்தில் மேய்கையில் அக்கு அக்காகப் பிரிப்பது என்பதால் அக்கு என்றால் பாகம் என்று சிலர் விளக்கம் தந்திருந்தனர். ஆனால் அகராதியில் அது போன்ற பொருளும் தந்திருக்கப்படவில்லை.

அக்கு [ akku ] , s. little shells, cowries, பலகறை; 2. beads of conch shells, சங்குமணி; 3. beads of seeds of the elœocarpus worn by religious mendicants, உருத்திராக்ஷம்; 4. eye, கண்; 5. bone, எலும்பு.

இவைதான் அக்கு என்பதற்கு அகராதி தரும் விளக்கங்கள். இதில் அக்கு என்றால் எலும்பு என்பது ஒரு பொருள் உண்டாகும் அடிப்படை கட்டமைப்பு என்பதாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஒரு பொருளின் பாகங்கள் என்பதை விட, ஒரு பொருளின் கட்டமைப்புக்கான (structure / frame) பாகங்களாக இருப்பதை அக்கு என்று சொல்வோமானால் அது எலும்புக்கு ஈடாக வருகிறது. ஆகையால் இந்த இடத்தில் அக்கு என்பதற்கு எலும்புதான் சரியான பொருளாக வருகிறது. ஆனால் அப்படி எடுத்துக் கொண்டோமானால் ஆணி என்ற சொல் வருவதற்கான காரணம் சரியாகப் புரியவில்லை. எல்லாப் பொருட்களுமே ஆணி வைத்துதான் கோர்க்கப்பட்டு இருக்கும் என்பது ஒரு தவறான முன்முடிவாகவே எனக்குத் தோன்றியது. எனவே ஆணி என்ற சொல்லுக்கு வேறு என்ன விளக்கங்கள் இருக்கின்றன எனப் பார்க்க அகராதியை நாடினேன்.

ஆணி [ āṇi ] {*}, s. a nail; 2. piece of gold used as a standard for testing other gold. 3. a style எழுத்தாணி; 4. core of an ulcer; 5. excellence, மேன்மை; 6. support, foundation, ஆதாரம்; 7. wish, desire, விருப்பம்.

இதுதான் ஆணிக்கு அகராதியில் இருக்கும் விளக்கங்கள். அக்கு என்பதற்கு ருத்திராட்சம் எனப் பார்த்து இருந்ததால் ஒரு வேளை அது கோர்க்கப்பட்டு இருக்கும் தங்கத்தை சோதிக்க ஆணி என்ற சொல் வந்திருக்குமோ என்றும் கூட நினைத்தேன். ஆனால் அதுவும் சரியான பொருளைத் தராத எண்ணமே வந்ததால் மேலும் கொஞ்சம் தேடினேன்.

இதற்கான விடை நாலாயிரத்திவ்யப்பிரபந்தத்தில் கிடைத்தது. குறிப்பாக இந்தப் பாடலைப் பாருங்கள்.

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன்புலச் சேவை யதக்கி

கயிற்றும்அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி

எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்

பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே.

இந்தப் பாடலின் இரண்டாம் வரியில் கயிற்றும் அக்காணி கழித்து அப்படின்னு பாடி இருக்காரு. இதற்கான உரையில் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார், கயிறு- நரம்பு; அக்கு- எலும்பு, ஆணி- சரீரத்துக்குப் பெயர். ஆணி கழித்தல்- சரீரத்தில் தசையை ஒழித்தல். எலும்பில் இருந்து மொத்தமாக தசைகளை நீக்கும் ஆற்றல் பெற்றவனாய் ஆண்டவனைச் சொல்கிறார். அதாவது ஆதாரம் என்ற பொருட்படும் விதமாக ஆணி என்றால் தசை, எலும்புகளை ஒரு அமைப்பில் நிறுத்தச் செய்யவும் அவற்றை இயக்கவும் தேவைப்படும் தசைகள் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் இதை நேரடியாக அணுகாமல் மறைபொருளாகப் பார்த்தோமானால், இங்கு ஆணி என்பது விருப்பத்தைக் குறிக்கும் என்று உணரலாம். அதாவது ஒருவனிடம் இருந்து நரம்பு, எலும்பு மட்டுமில்லாமல் அவன் ஆசையையும் நீக்கி எனப் பாடலின் பொருளாகச் சொல்லலாம். கயிறு என்றால் நரம்பு. எக்கு என்றால் எலும்பு என்றும் ஆணி என்றால் விருப்பம் என்றும் பொருள் இருப்பதை முன்னமே பார்த்தோம். எப்படி ஒருவனை பகுதி பகுதியாய் பிரித்து எடுப்பது என்று முடிவானால் கையை வெட்டலாம், காலை வெட்டலாம். ஆனால் அவனுள் இருக்கும் ஆசையை எடுப்பது என்பது கிட்டத்தட்ட முடியாத ஒன்று. பற்றற்ற நிலையை அடைவது என்பது எல்லாருக்கும் வாய்ப்பது இல்லை. எனவே ஒரு மனிதனை பரிபூரணமாய் பிரிப்பது என்றால் அவனுள் இருக்கும் ஆசையை வரை தனியாகப் பிரித்து எடுப்பது என்று பொருளாகிறது.

எனவே அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிப்பது என்றால் பரிபூரணமாகப் பிரித்துப் பார்ப்பது என்பது தெளிவாகிறது. இந்தப் பழமொழியில் அக்கு என்றால் எலும்பு என்பதையும் ஆணி என்றால் நேரடியாக தசை என்றும் மறைபொருளாக விருப்பம் என்றிருப்பதையும் இனி நாம் நினைவில் கொள்வோம்.

(தமிழ் பேப்பரில் 04-12-2010 அன்று வெளி வந்தது)

தமிழ் பேப்பரில் வரும் இலக்கணத் தொடரைப் படிக்கிறீர்களா?



Tuesday, November 09, 2010

கமலோடு நான் - தீபாவளிக் கொண்டாட்டம்!

இந்த தீபாவளிக்கு நாங்க பராகபுரியில் ரொம்ப பிசியா இருந்தோம். அன்னிக்கு லீவு எல்லாம் கிடையாது என்பதால் ஒழுங்கு மரியாதையாக ஆபீசுக்குப் போனோம். வேலையைப் பார்த்தோம். ஆனால் கொண்டாட்டமோ கொண்டாட்டம் என்று அடுத்த வந்த சனி ஞாயிறு ரெண்டு நாளா கொண்டாடித் தள்ளிட்டோமுல்ல. அதை விடுங்க. சொல்ல வந்த விஷயமே வேற.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் ‘Koffee with Anu' என்ற நிகழ்ச்சியில் கமல் கலந்துக்கிட்டாராம். அப்போ கமலைப் பற்றிப் பேசிய முனைவர் கு.ஞானசம்பந்தன் சொன்னாராம் “வெண்பா எழுதுவது ரொம்பக் கஷ்டம். அதனாலதான் கம்பன் கூட ராமாயணத்தை விருத்தத்தில் எழுதினார். ஆனா கமல் நினைச்சா வெண்பா எழுதுவாரு”ன்னு. என்ன அநியாயம் ஐயா. நீங்க கமல் வெண்பா எழுதுவாருன்னு சொல்லுங்க. அதுக்கு ஏன் கம்பனை வம்புக்கு இழுக்கணும். வெண்பா கஷ்டம்ன்னா விருத்தம் மட்டும் சுலபமா என்ன? போகட்டும்.

வெண்பாவை விட்டு ஏன் கம்பர் விருத்தம் எழுதினார் என்பதற்கு பெனாத்தல் ட்விட்டரில் ஒரு காரணம் சொல்லி இருந்தார். பொதுவாக வெண்பா - செப்பல் ஓசை, அதாவது மெசேஜ் டோன். மேட்டரை டப்புன்னு சொல்லிட தோதான டோன். தசரதனுக்கு ராமர் மகனாகப் பிறந்தார்ன்னு சொல்ற மாதிரி.

ஆனா விருத்தம் அகவல் ஓசை, அதாவது அழைக்கிற ஓசை, ரிங் டோன். விதவிதமா அலங்காரம் பண்ணி, வாடா மாப்ளே, ராமர் கதை கேட்டுக்கன்னு சொல்லற மாதிரி. இதுதான் சரியான காரணம் மாதிரி இருக்கு.

கமலுக்கு வெண்பா எழுதச் சொல்லிக் குடுத்த ஈற்றடி “கல்லுஞ்சொல் லாதோ கதை”. எங்க வெண்பா வாத்தி ஜீவ்ஸ் மட்டும் இதைக் கேட்டா அவரு முதுகுலயே ஒரு சாத்து சாத்தி ஏன்யா அனாவசியா மகிழ்ச்சியா குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிற வார்த்தைங்க நடுவில் விவாகரத்து வாங்கித் தர. குடும்பத்தைக் கலைக்காம ஈற்றடி தர முடியாதான்னு கேட்டு இருப்பாரு. நல்லவேளை அவரு பார்க்கலை.

நான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கலை. ஆனால் ட்விட்டரில் பெனாத்தல் இது பத்திப் போட்டு இருந்தார். பார்த்தவுடன் சரி நாம இதுக்கு ஒரு வெண்பா எழுதலாமேன்னு முயற்சி செஞ்சேன்.

சொல்லையே கேட்டதால் சும்மாக் கிடந்தவொரு
தொல்லையும் தீர்ந்துதன் தோற்றமும் பெற்றதை
வில்லொடு வந்தவொரு வீரனின் கால்பட்ட
கல்லுஞ்சொல் லாதோ கதை
அப்போ வீட்டில் இருந்த நண்பர் படித்துவிட்டு “டேய் நீ எழுதும் கவிதை(!!) எனக்குப் புரியுதேடா. அது என்ன சொல்லையும் கேட்டு அதை மட்டும் சொல்லு” அப்படின்னார். என் வெண்பாவுக்கே நோட்ஸ் தேவைப்படுதா? அப்ப கமல் வெண்பாக்கு நோட்ஸ் போட்டா சாதா கோனார், ராஜக்கோனார் ஆயிருவார் போலன்னு நொந்து போய் கௌதம மகரிஷியின் சாபத்தினால் கல்லாய் கிடந்த தொல்லையானது தீர்ந்து எப்படி அகலிகை தன் தோற்றம் திரும்பக் கிடைக்கப் பெற்றாள் என்பதைத்தான் சொல்லி இருக்கிறேன் என்றேன்.

பெனாத்தலும் அவர் பங்குக்கு சமகால அரசியலைப் பற்றிப் பா ஒன்றைப் போட்டார். அரசியலே உன் பெயர்தான் பெனாத்தலோ! :)

ஆள்வோர் கொடுத்த அரசியல் தானங்கள்
நாள்போய் அறிகின்ற சூத்திரம் - ஆள்படை
அல்லும்பகலும் கீறி அயராது வெட்டியதால்
கல்லுஞ் சொல்லாதோ கதை
அடுத்து நம்ம வெண்பா வாத்தி ஜீவ்ஸைப் பிடித்தேன். வேலை இருக்கிறதப்பா என்றவர் வெண்பா என்றவுடன் விட முடியாமல் ஒரு குறட்பாவை கொடுத்தார். இரண்டு அடிகளில் எப்படி பெரிய விஷயங்களைக் கூட அருமையாக சொல்ல முடிகிறது என்பதற்கு நல்ல உதாரணம் இது.

வெல்லுஞ் செயலுடை வேந்தர்கள் மூப்பதைக்
கல்லுஞ்சொல் லாதோ கதை
இது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் வாஞ்சிநாதன் அவர்களும் தனி மடலில் இரண்டு வெண்பாக்களை அனுப்பி வைத்தார்.
அலைகடல் மோதும் அழகுமல்லை மேவுஞ்
சிலையின் நளினஞ் செதுக்கிய நேர்த்தியென்ன
தில்லானா ஆடும் திரைப்படத்தின் மேலாகக்
கல்லுஞ்சொல் லாதோ கதை

சிந்தையில் தேற்றமுடன் செந்தமிழ்நாட் டங்கொண்டோர்
நொந்திடார் யாப்பை நுகத்தடியாய் --- செந்தழலின்
மெல்லிய மேனிசெய சிற்பி முயன்றிடின்
கல்லுஞ்சொல் லாதோ கதை
இப்படி எல்லாம் வெண்பாக்கள் கிடைத்த உடனே இந்தப் பதிவைப் போட நினைத்தேன். ஆனால் கமல் இந்த ஈற்றடிக்கு எழுதிய வெண்பாக்கள் கிடைக்கவே இல்லை. அவை இல்லாது எப்படிப் போட என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று ஜெயஸ்ரீ அக்கா அது பற்றிய பதிவு போட்டு இருக்கிறார்கள்.

அதிலும் வெண்பாக்கள் முழுமையாக இல்லை என்றாலும் அது எப்படி இருக்கும் என்று ஒரு அளவிற்குத் தெரிகிறது. அவரின் பதிவில் இருந்தே

*மக…. கல்பட்டும் தேறினளாம் அவளக்காள்
அகலிகையும் கால்பட்டு மீண்டனளாம் – இகமிதிலே
அல்லலுறும் நவயுகத்து நாயகியர் அகமகிழக்
கல்லும்சொல் லாதோ கதை.

[*முதல் வார்த்தை இன்னதென்று விளங்கவில்லை. என் சிற்றறிவை வைத்துக்கொண்டு அனுமானிக்கவும் முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். தனிச்சொல் 'இகமிதிலே' பேராசிரியரால் பாராட்டப்பட்டது.]

ஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து
மூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்
சொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்
கல்லும்சொல் லாதோ கதை.

["ஆத்தமானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்.." என்ற திருவாசக அடியிலிருந்து தான் எடுத்தாண்டதாக கமல் கூறினார்.]

ம்ம்ம்.. நல்ல முயற்சி. வெண்பா அதிகம் தெரியாமல் ஆனால் ஓசைநயத்திலேயே சரியாக எழுதுபவர் என்று கமலை பேராசிரியர் அறிமுகப்படுத்தினார். அப்படிப்பட்ட கமல் கொஞ்சம் மோனையிலும் கவனம் செலுத்தியிருக்கலாமோ… (இப்ப ரொம்ப முக்கியம்!)

எத்தனை இடங்களில் பிரிக்கமுடியுமோ பிரித்துவிட்டேன்; அத்தனையும் மீறி இத்தனை இடங்களில் தளைதட்டிய ஒன்றை வெண்பா என்று பேராசிரியர் பாராட்டித் தள்ளினார். இவர்கள்தான் கமலின் வளர்ச்சிக்குப் பிரச்சினை.

இதற்கு மேல் நான் தனியாகச் சொல்ல ஒன்றும் இல்லை. வெண்பாவில் நாட்டம் உள்ளவர்கள் இந்த ஈற்றடிக்கு மேலும் சில வெண்பாக்களை எழுதலாமே!

வெண்பா எழுத ஆசை இருக்கிறது ஆனால் எப்படி என்று தெரியவில்லையே என்று சொல்லுபவர்கள் உடனடியாக இங்கு செல்லவும்! :)