Friday, March 21, 2008

பிரம்ம ரசம் பொங்க சூப்பர் மூளைப் பயிற்சி!!

நம்ம வவாசங்கத்தினர் அவங்களோட ரெண்டாவது வயதைக் கொண்டாட பிரம்ம ரசத்தை ஓடவிடும் போட்டி ஒண்ணை அறிவிச்சு இருக்காங்க. கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டியில் ஜெயிக்க உங்களுக்கு உதவலாமே என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்தப் பதிவு. இந்தப் பதிவில் நான் சொல்லித் தரப் போவது ஒரு எளிமையான உடற்பயிற்சி. இதை தொடர்ந்து செய்து வந்தீங்கன்னா உங்க மூளைக்கு அதிக அளவில் சக்தி கிடைத்து சூப்பர் மூளையாகிடுமாம். அது என்ன அப்படின்னு பார்க்கறதுக்கு முன்னாடி எதுக்காக உடற்பயிற்சி அப்படின்னு பார்க்கலாம்.

உடற்பயிற்சி என்பது வெறும் உடலுக்கு மட்டும் இல்லாது மூளைக்கும் பயன் தரக்கூடியது என சமீப காலத்தில் கண்டுபிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். மறதியைக் குறைத்து நினைவாற்றலைப் பெருக்குமாம். அப்படியே மனதை ஒருமுகப்படுத்துவது, அல்சைமெர்ஸ் போன்ற வியாதிகள் வருவதைத் தாமதப்படுத்துவதுன்னு ஏகப்பட்ட பயன்கள் உள்ளனவாம். எப்படின்னா உடற்பயிற்சியின் மூலம் மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. அதனால் மூளையில் அதிக சக்தி வர ஏதுவாகி அவை நல்ல முறையில் இயங்க உடற்பயிற்சி உதவி புரிகிறதாம். முன்பெல்லாம் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்தால் அவைகளுக்கு மாற்றாக புதிய அணுக்கள் வருவதில்லை என நினைத்திருந்தார்கள். ஆனால் உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல் மற்றும் படிப்புக்கு ஏதுவாக இருக்கும் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதியில் புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன எனக் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

இப்போ நாம அந்த சூப்பர் மூளைப் பயிற்சி என்னன்னு பார்க்கலாம். யோகாசனங்களில் ஒன்றாகக் கருதப்படும் இது அக்யூபஞ்சரின் நலன்களையும் தருதாம். யேல் பல்கலைக்கழகத்தின் யூஜீனியஸ் ஆங் என்பவர் கண்டறிந்து இருக்கும் தகவல் இது. மிக எளிமையான இந்த யோகாசனத்தைச் செய்வது எப்படி என்று பார்க்கலாமா?

1) இடது கையால் வலது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.

2) வலது கையால் இடது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.

3) இப்படிப் பிடிக்கும் பொழுது நம் இடது கை உட்புறமாக உடலின் அருகேயும், வலது கை வெளியிலும் இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் சக்தி மேல் நோக்கிப் பாய்ந்து நம் மூளைக்குப் பயன் தரும்.

4) அப்படி இரு கைகளாலும் காது மடல்களைப் பிடித்துக் கொண்டே, முதுகை நேராக வைத்துக் கொண்டு, முட்டியை மடக்கி குந்த வைத்து எழுந்திருக்கவும். இப்படி உட்காருகையில் மூக்கின் வழியாக சுவாசத்தினை உள்ளே இழுக்கவும். எழுந்திருக்கையில் வாய் வழியாக மூச்சுக் காற்றை வெளியே விட வேண்டும். இப்படி 10 -12 முறையாவது செய்ய வேண்டும்.

சரியாக புரிந்து கொள்ள இந்தப் படத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்!

ஆமாங்க ஆமாம். அதேதான். நம்ம ஊர் தோப்புக்கரணம் போடறதைத்தான் இந்த சூப்பர் மூளைக்கான பயிற்சியா சொல்லறாங்க! இந்த செய்தியின் மூலத்தைப் பார்க்க இங்க போங்க. அதுல மாஸ்டர் சோவா கோக் சூய் என்பவரின் சூப்பர் ப்ரெயின் யோகா என்ற தளத்திற்கு சுட்டி குடுத்து இருக்காங்க. அங்க இதை இன்னும் விளக்கமாச் சொல்லி இருக்காங்க.

எங்க உறவினர் ஒருவர் அனுப்பின இந்த சுட்டியைப் பார்த்துட்டு எங்க அண்ணன் அடிச்ச கமெண்டு - "யோகா எல்லாம் செய்ய வேண்டியதுதாண்டா, ஆனா இந்த யோகாவைச் செய்யும் பொழுது எதிரில் தங்கமணி இல்லாமப் பார்த்துக்குங்க. ஏற்கனவே உங்க பேருஒரு மாதிரியாத்தான் இருக்கு!!" அண்ணன் சொன்னதை அப்படியே சங்கத்து சிங்கங்களுக்கு ஒரு ரிப்பீட்டேய் எனச் சொல்லி, அனைவரும் இந்த யோகாசனத்தை செய்து சூப்பர் மூளை பெற்று நம்ம சங்கத்துப் போட்டியில் வெல்ல வேண்டும் என வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்!

Thursday, March 13, 2008

விண்ணோடும் முகிலோடும்....

லாரா கண்டுபிடித்து இருக்கும் விண்கலத்தில் முதல் முதலாகப் பயணம் செய்ய நான் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி இப்பொழுதுதான் என்னை எட்டியது. இறுதிகட்டத்தில் என்னையும் சேர்த்து மூன்று பேர் இருந்தார்கள். பல்வேறு சோதனைகளுக்குப் பின் நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். வரலாற்றில் என் பெயர் இடம் பெறப் போகிறது. சந்தோஷமாக மட்டுமே இருக்க வேண்டிய இந்த வேளையில் ஏனோ என் மனம் வெறுமையாக உணர்கிறது. இதற்குத்தான் எத்தனை சோதனைகள் எத்தனை வேதனைகள். இந்தப் பயணத்தை மேற்கொள்ளத்தான் வேண்டுமா, இனி என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சம் மேலிட, அதனை மறக்க சற்றே பழைய காலத்தை அசைப் போடத் தொடங்குகிறேன்.

விஞ்ஞானிகள் பலர் இருந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என் தாய். எந்த வித சூதுவாதும் அறியாத, எளிமையான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரின் கருப்பையை நிறைத்துவிட்டுக் காணாமல் போன என் தந்தை. இதுதான் என் கதையின் ஆரம்பம். தந்தை யாரென்று அறியாமலே பிறந்தோம். ஆமாம் நான் தனியாகப் பிறக்கவில்லை. என்னுடன் பிறந்தவர் என் இரு சகோதரர்கள். எந்த விதமான கவலையும் இல்லாதபடி நல்லபடியாகத்தான் என் தாயார் எங்களை வளர்த்து வந்தார்கள். ஆனால் மூன்று குழந்தைகளையும் தனியாக வளர்ப்பது என்றால் சாதாரணமா? மூவரையும் சமாளிக்க முடியாமல் அம்மா கஷ்டப்பட, எங்களை தத்துக் கொடுக்க முடிவு செய்தனர் என் குடும்பத்தினர். மற்றவர்களை விட்டாலும் என்னைப் பிரிவதை சற்றும் தாங்க முடியாமல் மிகுந்த வருத்தத்தில் இருந்த இக்குடும்பத்தின் மூத்த பெண் லாராவின் பிடிவாதத்தினால் நான் மட்டுமே தத்துப் போகாமல் தப்பித்தேன். "உன் கண்ணின் அழகில் மயங்கித்தான் பெண்ணே, உன்னைத் தத்துக் கொடுப்பதைத் தடுத்தேன்" என்று இன்னும் என்னைக் கொஞ்சும் பொழுதுதெல்லாம் சொல்லி மகிழ்வாள் லாரா. இந்த கதை எல்லாமும் அவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும், இல்லை என்றால் சிறு வயதில் நிகழ்ந்தது எல்லாம் எனக்கு எப்படித் தெரியும்.

சகோதரர்களை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்து கொண்டிருந்த என் வாழ்வில் அடுத்து வீசிய புயல் என் தாயின் சுகவீனம். நன்றாக இருந்த அவரின் சிறுநீரகங்கள் திடீரென்று பாதிக்கப்பட்டு, எந்த வித சிகிச்சையும் பயனளிக்காமல் சில நாட்களிலேயே போய் சேர்ந்துவிட்டாள். யாருமே இல்லாமல் நின்ற எனக்கு அன்று தாயாய் இருந்து பார்த்துக் கொண்டது லாராதான். அவள் மட்டும் இல்லாமல் இருந்தால் நான் இன்று இந்த நிலமைக்கு வந்திருப்பேனா என்பது சந்தேகம்தான். குடும்பத்தில் பலரைப் போல விஞ்ஞானத்தில் திறமையுடையவளான லாரா தேர்ந்தெடுத்த துறை விண்வெளி ஆராய்ச்சி. பூமியைத் தாண்டிச் சென்றால் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அவற்றின் ஒரு பகுதியையாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும். நம் அண்டத்தின் எல்லைகளுக்குச் செல்ல வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பாள். அதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு ஆராய்ச்சிக்கூடமே கதி என்று கிடப்பாள். எனக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் சுத்தமாய் புரியாது என்றாலும் அவளுக்குத் துணையாக நானும் அங்கேயே இருப்பேன். அவளின் ஆராய்ச்சி பற்றி எல்லாம் என்னிடம் பேசிக்கொண்டே இருப்பாள் லாரா. எனக்குப் புரிகிறதோ இல்லையோ நானும் கேட்டுக் கொண்டே இருப்பேன். உன்னிடம் வாய்விட்டுப் பேசும் பொழுது நான் செய்யும் தவறுகள் எனக்குத் தெரிகின்றன. நான் இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்றேன் என்றால் அதில் உனக்கு ஒரு பங்கு இருக்கிறது என்பாள். அவளே உலகம் என வளர்ந்து வந்த எனக்கும் அவள் அப்படிச் சொல்வது பெருமையாகவே இருக்கும்.

ஒவ்வொரு முறை அவள் ஆராய்ச்சி தோல்வி அடையும் பொழுதும் துவண்டுவிடுவாள் லாரா. ஆராய்ச்சிக் கூடத்தின் பக்கமே செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடப்பாள். அவளை சமாதானப் படுத்தி மீண்டும் அங்கு செல்ல வைக்க வேண்டிய வேலை என்னுடையது. வேலையைத் தொடங்கிய பின் எனக்கு நன்றி சொல்லி அணைத்துக் கொள்வாள். ஆராய்ச்சி வெற்றியை நோக்கிச் செல்லும் பொழுதெல்லாம் ஆனந்தமாய் என்னைக் கட்டிக் கொள்வாள். இப்படி அவளுடனே இருப்பது எனக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. பல தோல்விகளுக்குப் பின் அவள் நினைத்ததை சாதித்து விட்டாள். விண்வெளிப் பயணத்திற்கான கலம் ஒன்றை தயார் செய்து விட்டாள். அதுவரை விண்ணில் ஏவப்பட்ட கலங்களை விட நேர்த்தியான கலம் ஒன்றை வடிவமைத்து விட்டாள். இதே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் பலராலும் சோதனை செய்யப்பட்டு லாராவின் கண்டுபிடிப்பு வெற்றி என்றே அறிவிக்கப்பட்டது. அதன் சோதனை ஓட்டத்திற்கு நாளும் குறிக்கப்பட்டு விட்டது. அப்பொழுதுதான் அந்த குண்டை வீசினாள் லாரா. அவளே அப்பயணத்தை மேற்கொள்ள ஆசைப்பட்டதாகவும் அதற்கு அரசாங்கம் அனுமதி தர மறுத்துவிட்டதாகவும் சொன்னாள்.

அந்த கலத்தில் முதன் முறையாகச் செல்லும் பெருமை அவளுக்குக் கிடைக்கவில்லை என்றாலும் அது நம் குடும்பத்தில் ஒருவருக்காவது கிடைக்க வேண்டும். அதனால் நீதான் போக வேண்டும் என்றும் சொல்லிவிட்டாள். இந்த ஆராய்ச்சியில் என்னை தொடர்ந்து ஈடுபட வைத்து என்னளவு ஆராய்ச்சிக் கூடத்தில் நேரம் செலவிட்டது நீதான். நான் போக முடியாத கட்டத்தில் நீதான் போயாக வேண்டும் என்று அவள் கூறும் பொழுது எனக்குப் பெருமையாகவே இருந்தாலும் இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமா என்று கவலையாகவே இருந்தது. ஆனால் நான் போயாக வேண்டும் என்பதில் லாரா உறுதியாகவே நின்றாள். அப்பொழுதுதான் அவள் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக வந்தான் அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் தலைவன்.

இந்தப் பயணத்திற்குத் தகுந்தவர் என என்னை விட அறிவு கூர்மையானவர், திறமையானவர் என ஒருவரைச் சொல்லி அவரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வாதிடத் தொடங்கினான். அவனுக்கு ஆதரவாய் ஆராய்ச்சிக் கூடத்தில் பலரும் பேசத் தொடங்கினர். பிரச்சனை பெரிதாகத் தொடங்க அரசாங்கமும் இதில் பங்கு கொள்ளத் தொடங்கியது. இத்துறையின் அமைச்சர் தன் சார்பில் ஒருவரைக் கொண்டு வந்து அவர்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என மேலும் குட்டையைக் குழப்பினார். இப்படி ஆளாளுக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என குரல் கொடுக்கத் தொடங்க பிரச்சனை பெரிதாகத் தொடங்கியது. எனக்கு இந்த பயணத்தில் ஆசையே இல்லை. லாராவுடனே இருக்கத்தான் எனக்குப் பிடித்திருந்தது. அதே சமயம் அவள் வேண்டுமென்றதை மறுக்கவும் மனதில்லை. என்ன செய்ய என்று நான் குழம்பிக் கிடந்த அந்த வேளையில் நாடே இந்த விஷயத்தால் குழம்பி இருந்தது. இறுதியில் யாரைத் தேர்ந்தெடுப்பது என முடிவு செய்ய ஒரு நிபுணர் குழு ஒன்றை அமைத்து அவர்களிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேரின் பெயர்கள் கொடுக்கப்பட்டன. லாராவின் சிபாரிசினால் அதில் ஒன்றாக என் பெயரும் இருந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு கடுமையான பயணத்தை மேற்கொள்ள முடியுமா என அறிவதற்காக வித விதமான சோதனைகள் நடத்தப்பட்டன. ஒரு இருக்கையில் கட்டி வைத்து மிகுந்த வேகத்தில் சுற்றுவது, தலைகீழாக நெடு நேரம் இருப்பது, எடையில்லாத சூழலில் இருப்பது என எத்தனையோ சோதனைகள் நடத்தப்பட்டன. இரத்தம் தலைக்குப் பாயும் போதும், தலைசுற்றி வாந்தியும் மயக்கமும் வரும் போதும், என்னை விட்டு விடுங்கள் எனச் சொல்லிவிட்டு விலக நினைத்தாலும் லாராவின் ஆசை நிறைவேற வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்டு இருந்தேன். அவ்வளவு சோதனைகளையும் முடித்த பின் தேர்வுக்குழு தன் பரிந்துரையை இன்று அளித்துள்ளது. கடைசி வரை பரிசீலிக்கப்பட்ட மூவரில் என் பெயரைச் சொல்லி இருக்கிறார்கள். என்னைத் தேர்ந்தெடுத்ததை விட லாராவின் எண்ணம் ஈடேறியதனால் எனக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் அவளை விட்டு பிரிந்து செல்லப் போகிறோம் என்ற எண்ணமும் உடன் வருவதால்தான் மனதில் அத்தனை வெறுமை.

அப்பொழுது குதூகுலமாக வந்து "லாய்கா, என் கனவு பலித்து விட்டது! என் கலத்தில் முதன் முதலில் செல்லப் போவது நீதான்!" எனச் சொல்லி என்னை ஆரத் தழுவும் லாராவிற்குத் தெரியாமல் என் கண்ணீரை அடக்கிக் கொண்டு நானும் வாலாட்டி, அவள் முகத்தை நக்கி என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.

நவம்பர் 1957

Wednesday, March 12, 2008

தமிழ் வளர்ப்பு - அறிஞர் பேட்டியும் கொத்தனாரின் குழப்பமும்!

"தனி ஒரு மனிதனுக்கு பதிவிட நேரமில்லையெனில்......" இதுதாங்க நம்ம தன்னிலைச் செய்தி! அப்படி ஒரு செய்தி போடற அளவுக்கு நமக்கு ஆணி! அந்த தன்னிலைச் செய்தியைத் தொடர்ந்து அடுத்ததா ".... பதிவை குழுமப் பதிவாய் ஆக்கிடுவோம்!" அப்படின்னு சொல்லி இலவசத்தில் எழுத வாருங்கள் அப்படின்னு விளம்பரம் பண்ணக்கூட தயார் ஆகிட்டேன். ஆனாப் பாருங்க, ஒரு வேலையாய் மேற்கு கடற்கரை வரை சென்று வர வேண்டியதாக ஆயிற்று. ஆறு மணி நேர விமானப் பயணம். கையில் மடிக்கணினியையும் கூடவே கடந்த இரு மாதங்களாக படிக்காமல் வைத்திருந்த தென்றல் இதழ்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பியாகி விட்டது. (இணையத்தில் படிக்கக் கிடைக்கும் தென்றல் இதழைப் படித்துப் பாருங்கள். நல்ல மாத இதழ். அதிலும் என்னைக் கவர்ந்தது நண்பர் வாஞ்சி தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்.)

இந்த மாத இதழில் கல்வியாளர் முனைவர் வா செ குழந்தைசாமி அவர்களுடனான நேர்காணல் இடம் பெற்று இருந்தது, மிகச் சுவையாக பல விஷயங்களைப் பற்றிப் பேசி இருந்தார். அதில் பதிவு போட விஷயம் கிடைத்ததுதான் விசேஷமே!!

அந்த நேர்காணலில் இருந்து இரு கேள்வி பதில்கள்!

கேள்வி: தற்போது தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் பட்டப்படிப்பு முடித்துவிடலாம் என்ற நிலை நிலவுகிறது. இது சரியானதுதானா?

பதில்: நான் மிகுந்த தமிழ்ப் பற்று உள்ளவன் என்பதை ஒப்புக் கொள்வீர்கள். இருந்த போதிலும் தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடிக்க முடியும் என்பதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை.

பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059. எந்த ஆண்டும் சதவிகித அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்த சிலர் தமிழ்ப் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டுவிடும்? இதுவே சற்று அதிகம் என்றால் நாம் அதைக் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்தான். பெரும்பாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இதர மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சில குழந்தைகள் பள்ளிகளில் தமது தாய்மொழியைப் பயில்கிறார்கள். உருது கற்கும் இஸ்லாமியர் தவிர எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த சிலரே தத்தம் தாய்மொழிகளைப் பயில்கிறார்கள். படித்துவிட்டுப் போகட்டும். உண்மையான ஆபத்து வேறுபல இடங்களில், வேறு பல வடிவங்களில் வந்து கொண்டு இருக்கிறது. அதைக் குறித்து ஏனோ யாரும் சிந்திப்பதில்லை.

கேள்வி: தென்றல் வாசகர்களுக்கும், உலகளாவிய தமிழர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பதில்: பொதுவாக, இந்தியாவிலுள்ள பள்ளிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் உள்ளவர்கள் நிதி திரட்டி கணிப்பொறிகள் இதர தளவாடங்களை வாங்கி அனுப்பிவது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இது நல்ல பணிதான். இருந்தாலும் ஒன்று சொல்வேன். இந்தியா ஒரு மாபெரும் நாடு. இதன் பிரச்சனைகளை உங்களால் தீர்த்து வைக்க முடியாது. அதற்குப் பதிலாக வசதிமிக்க நாடுகளில் வாழும் தமிழர்கள், மொரிஷியஸ், பிஜி, ரீயூனியன், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தம் அடையாளத்தை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றைப் பற்றி எண்ணி ஏற்றது செய்ய உதவுவதே சாலச் சிறந்தது. (எனத் தொடங்கி ஒரு நீண்ட பதிலை தந்துள்ளார்)

இந்த இரண்டு கருத்துக்களை எடுத்துக் கொண்டோமானால் ஒன்றில் உடன்படுகிறேன், மற்றொன்றில் வேறுபடுகிறேன். முதலாவது கருத்தின் சாரத்தை நான் அப்படியே ஒப்புக் கொள்கிறேன். சொல்லி இருக்கும் காரணங்களிலும் முறையிலும் சற்றே வேறுபடுகிறேன். என்னளவில் எதையுமே இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டளை இடுவது என்பது தவறான ஒரு அணுகுமுறை. ஒரு மாணவன் தனக்கு எதன்பால் ஈர்ப்பு இருக்கிறதோ அதனைத்தான் படிக்கச் சொல்லவேண்டுமே தவிர்த்து இதைத்தான் படித்தாக வேண்டும் என்ற கட்டாயப்படுத்துதல் தவறு. நம்மிடையே கூட படிக்கும் காலத்தில் வேப்பங்காயாகத் தமிழ் கசந்தது எத்தனை பேருக்கு என நம்மை நாமே கேட்டுக் கொண்டு பாருங்களேன். எனக்கு இப்பொழுது தமிழின் மேல் இருக்கும் ஆர்வத்தில் ஒரு பங்கு கூட படிக்கும் பொழுது கிடையாது. அவ்வகை கற்பித்தலை மாற்றி நல்ல ஆர்வம் வரக்கூடிய முறையில் கற்பிக்கும் முறையைக் கொண்டு வருதல் அவசியம். அப்படி ஆகுமே ஆனால் தமிழை விரும்பி படிப்பவர் எண்ணிக்கை தன்னால் ஏறும். இன்று பல இடங்களில் நாம் காணும் கட்டாயத் தமிழ் பாடம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்படி ஒரு தமிழார்வலரின் எண்ணமும் அது போல் இருப்பது ஆச்சரியமே!

அடுத்த பதிலைப் பார்த்தோமானால் அதில் எனக்குத் துளியும் உடன்பாடு இல்லை. நாம் இன்று தமிழகத்தில் இந்தியாவில் இருக்கும் பள்ளிகளுக்கு உதவி செய்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நாம் பிறந்த மண்ணில் நம்மால் ஆன உதவி செய்ய வேண்டும், நமக்குக் கிடைத்த / கிடைக்காத சந்தர்ப்பங்கள் இன்றைய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதானே குறிக்கோளாக இருக்கும். இதில் எனது மண் செழிக்க வேண்டும் என்ற சுயநலம் இழையோடுவதை மறுக்க முடியுமா? அது என் பள்ளி, என் ஊர், என் மாவட்டம், எனது மாநிலம் என எல்லைகள் விரியும். அவ்வளவுதான். ஆனால் இதை விடுத்து மொரிஷியசில் தமிழ் வளர்ச்சி என்றெல்லாம் என்னால் யோசிக்க முடியவில்லை. நான் என் சுயநலம் கலந்த உதவிகளைச் செய்யப் பார்க்கின்றேன். தமிழை வளர்க்க என்னை விடப் பெரியவர்கள், அவர்கள் நடத்தும் அரசாங்கம் பாடுபடட்டும் .

என்ன சொல்லறீங்க?

டிஸ்கி: முனைவர் குழந்தைசாமி அவர்கள் என் பதிவைப்படிக்கமாட்டார், எனவே "ஐயோ! என்னை மட்டும் குறிவச்சு எழுதறாண்டா!" என்ற அவச்சொல் இந்தப்பதிவுக்கு வராது! அவரை மட்டும் குறிவைத்துக் கேள்வி கேட்கப்படவில்லை என்பதால் நீங்களும் உங்கள் கருத்தை எடுத்து வையுங்கள்.

Friday, February 22, 2008

IP, பதிவு, அறிவு, திருட்டு - ஒரே கொயப்பமாக் கீதே!

எல்லா விவாதங்களிலும் பங்கேற்று பல கருத்துக்களை தரும் வவ்வால்அவர்களின் இரு பின்னூட்டங்களைப் பார்த்ததினால் வந்த எண்ணங்கள் இவை. இரு விஷயங்களுமே அறிவுசார் காப்புரிமை (Intellectual Property Rights, இதுக்கு வேற தமிழ்ச் சொல் இருக்கா?) பற்றியவை என்பதால் இது பற்றி கொஞ்சம் பேசலாமே என்றுதான் இந்தப் பதிவு. எந்த விதமான தலைப்பென்றாலும் சளைக்காமல் தகவல்களை அள்ளி வீசும் வவ்வால் அவர்களுடைய கருத்தே தவறோ என்ற எண்ணம் வரும் பொழுது மற்ற சாமான்யர்களுக்கும் (சாமான்யன் சிவா, உங்களை மட்டும் இல்லை) இது பற்றிய புரிதல் எந்த அளவு இருக்கும் என்ற சந்தேகமும் உடன் எழுகிறது. அந்த இரு விஷயங்கள் எவை, அதில் எனக்கு புரியாத விஷயங்கள் எது என்று பார்த்துவிடுங்கள். கடைசியாக இரண்டே இரண்டு கேள்விகள் கேட்கிறேன். அதற்கு உங்கள் பதிலைக் கட்டாயமாகச் சொல்லுங்கள்.

பின்னூட்டம் 1: என்றென்றும் அன்புடன் பாலா ஒரு பதிவு போட்டு இருக்காரு. பதிவு வழக்கம் போல மென்பொருள் துறையை போட்டுத் தாக்கும் பதிவுதான். வழக்கம் போல நம்ம பதிவர்களும் இரண்டு பக்கமும் நின்னுக்கிட்டு தெரிந்தது, தெரியாதது, அறிந்தது, அறியாதது அப்படின்னு பல விஷயங்களைச் சொல்லி பட்டையைக் கிளப்பிக்கிட்டு இருக்காங்க. நானும் வழக்கம் போல வேடிக்கை பார்க்கும் கும்பலில் ஒருவனா நின்னுக்கிட்டு இருந்தேன். அங்க வவ்வால்போட்ட பின்னூட்டத்தில் ஒரு பகுதி இது.

//
அப்புறம் ஏற்கனவே சொல்லிட்டேன் ,சிட்டி பேங்க் ஆகட்டும் என்னவாகட்டும் அதுக்குலாம் பேரு மென்பொருள் சேவைனு, அதை எல்லாம் மென்பொருள் என்று சொல்லிக்காதிங்க, நான் சொன்னது , போட்டோ ஷாப், கோரல் டிரா, ஆட்டோ கேட், மாயா, விண்டோவ்ஸ், இதை எல்லாம் தான் மென்பொருள்னு, நீங்க சொல்றத எல்லாம் மென்பொருள்னு எந்த கடைல நுகர்வோர்க்கு விக்குறாங்க சொல்லுங்க? (உங்களுக்கு மென்பொருள் சேவைனா என்னா, மென்பொருள் பொது மக்களுக்காக என்னனு தனியா சொல்லனும் போல, ஆனால் இங்கே சிவா என்பவர் அது சரியா புரிஞ்சுக்கிட்டாரே எப்படி?)//

அதாவது பொதுமக்கள் கடையில் சென்று வாங்கினாதான் மென்பொருள் மற்றவை எல்லாம் மென்பொருள் சார்ந்த சேவைகள் அப்படின்னு பொருள் வருவது மாதிரி சொல்லி இருக்காரு. அதுக்கு எடுத்துக்காட்டா அவர் சொல்லி இருக்கும் மென்பொருட்கள் எல்லாமே பொதுவாக பலரும் பயன்படுத்துவையாகவே இருக்கின்றன. அவர் குறிப்பிட்டிருக்கும் சிட்டி பேங்க் பற்றிய குறிப்பு என்னவென்றால் வேறொருவர் சிட்டி பேங்க் பயன்படுத்தும் ஒரு மென்பொருளைப் பற்றிச் சொல்லி இருந்ததற்குப் பதில். இதில் வவ்வால் அவர்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லாமல் போனதால் நானும் ஒரு பின்னூட்டம் போட வேண்டியதாகப் போயிற்று. அது இதுதான்.

ஒரே நம்பரா இருக்கு, அதுல எது நம்பறாப்புல இருக்குன்னே தெரியலை! போகட்டும். ஆனா இந்த ஒரு விஷயம் டக்குன்னு கண்ணில் பட்டுச்சு. கொஞ்சம் அதைப் பத்தி மட்டும் பேசலாமேன்னுதான் வந்தேன். மத்தபடி மென்பொருள் துறை என்ற கைப்புளையை காப்பாத்தி கூட்டிக்கிட்டுப் போற அளவுக்கு நமக்கு நேர வசதியோ அல்லது எண்களைக் கரைத்துக் குடிக்கும் பொறுமையோ இல்லை. அதனால சொல்ல வந்ததை மட்டும் சொல்லிட்டு அப்படியே சைடில் குந்திக்கறேம்பா.

எது மென்பொருள், எது மென்பொருள் சேவை அப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம். ஒரு பொருளின் காப்புரிமை அதனை தயாரித்தவரிடம் இருக்க, அதனை பயன்படுத்தும் உரிமையை மட்டும் நுகர்வோருக்குத் தருவது என்பது மென்பொருள் என்பதின் விளக்கமாகக் கொள்ளலாம். அதுவே காப்புரிமை வேறொருவரிடம் இருக்க, அதனை நிறுவவோ அல்லது பேணவோ தனது சேவைகளைத் தருவது மென்பொருள் சேவை எனக் கொள்ளலாம். பொது மக்களுக்காகத் தயாரிக்கப்படும் மென்பொருட்கள் தவிர்த்த மற்ற அனைத்தும் சேவை என்பது சரியான வாதமே அல்ல.

இன்று இந்தியாவில் i-flex solutions (தமிழ்ப்'படுத்தாம' ஆங்கிலத்திலேயே எழுதறேன்.) உருவாக்கி இருக்கும் வங்கிகளுக்கான மென்பொருள் கடந்த 5 வருடங்களாக உலகத்திலேயே அதிகம் விற்பனை செய்யப்பட்ட வங்கிகளுக்கான மென்பொருள். இவர்களுக்குப் போட்டியாக TCS மற்றும் Infosys நிறுவனத்தாரும் மென்பொருட்கள் தயாரித்துள்ளனர். இவைகளை பொது மக்கள் பயன்படுத்தவில்லை என்பதால் இவைகள் சேவையாக மாறிவிடுமா? முன்பு சொல்லப்பட்ட ATM மென்பொருளும் இது போலத்தான். (எந்த நிறுவனம் எனத் தெரியாது.) இது மட்டுமின்றி மிகச் சிலரே பயன்படுத்தும் பல பொருட்கள் இங்கு செய்யப்படுகின்றன. இதனை ஓகை அவர்களும் குறிப்பிட்டு இருக்கின்றார். ஆக நுகர்வோராக பொதுமக்கள் இல்லாமல் போனாலும் கூட இவை எல்லாம் மென்பொருட்களே.

ஆனால் வவ்வால் அவர்களின் அளவுகோல் வேறாக இருக்கும் போலிருக்கிறதே. என்னைப் போல் இரண்டாம் வகுப்பு முடிக்காதவர்களும் வந்து போகும் இடமாக இருப்பதால் தனியாச் சொல்லணுமா எனக் கேட்காமல் தனியாகச் சொல்லிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பின்னூட்டம் 2: இது வந்து வவ்வால் எழுதின பழைய பதிவு ஒண்ணு. இது சமீபத்தில் பின்னூட்டமிடப்பட்டதால் மீண்டும் தமிழ்மண முகப்பில் வந்து நம்ம கண்ணில் பட்டது. அதில் ஜிரா சொல்லியிருந்த ஒரு தகவலுக்கு வவ்வால்சொல்லி இருக்கும் பதில் இது .

//
மூனு சுரத்துல ஒரு ராகம் மகதி. அதுல ராஜா ஒரு தெலுங்குப் பாட்டு போட்டாராம். அதை மேடையில சொல்லி....விளக்கி...டீவியில வருது. ஆனா பாருங்க. அந்த ராகத்த மொதமொதலாப் போட்டது எம்.எஸ்.வி. அதை எடுத்து இந்தப் பதிவுல சொல்லீருக்கேன்.//

ஆஹா இளையராஜா அந்த வேலை எல்லாம் செய்து இருக்காரா , நான் கேள்விபடாத தகவல் ,ஏற்கனவே சிம்பொனி போடாமலே போட்டதாக வெற்று பெருமை அடித்துகொண்டு இருக்கார் ராஜா இதில் அறிவு திருட்டு வேறா?

இதுல எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. அதைப் பத்தி யாராவது சொல்லி இருக்காங்களான்னு பார்க்க வவ்வால் பதிவு, அங்க இருந்து ஜிரா பதிவு, அங்க இருந்து இசை இன்பம் அப்படின்னு போய் பார்க்கும் போது சந்தேகம் அதிகமாச்சே தவிர பதில் கிடைக்கலை. சரி இதில் என்னென்ன கேள்வின்னு பார்க்கலாமா? முதலில் அந்த மூணு ஸ்வரங்களில் பாட்டு போட்டது நான் மட்டுமேன்னு இளையராஜா சொல்லலை. அது மகதி ராகம் என்றும் சொல்லலை. அந்த இசைஇன்பம் பதிவில் கே.ஆர்.எஸ் சொன்னா மாதிரி மகதி நாலு ஸ்வரம் அப்படின்னுதான் இந்தத் தளமும் சொல்லுது. ஆனா திரச அவர்கள் வந்து மகதிக்கும் மூணு ஸ்வரங்கள் எனச் சொல்ல இளையராஜா போட்ட மூணு ஸ்வரப் பாட்டும் மகதி ராகம் அப்படின்னு முடிவுக்கு வந்துட்டாங்க போல!!

அது எல்லாத்தையுமே விட்டுடலாம். எம்.எஸ்.வி. ஒரு பாடலில் பயன்படுத்திய ராகத்தில் இளையராஜா வேறு ஒரு பாட்டு போட்டா அது அறிவுத் திருட்டா? அப்படிப் பார்த்தால் எந்த ஒரு ராகத்திலும் முதலில் பாடல் புனைந்தவருக்கு அந்த ராகத்துக்கான அறிவுசார் காப்புரிமை தரணுமா? கர்நாடக சங்கீதத்தில் (ராகங்கள் என வந்ததால்தான் இதைப் பத்தி சொல்லறேன். இதுக்காக தனியா முத்திரை எல்லாம் குத்தாதீங்கப்பா!) தோடி, கல்யாணின்னு போனா நூத்துக்கணக்குல பாட்டு இருக்கே. அந்த ராகத்தில் எல்லாம் யாரு முதலில் பாடினாங்க அப்படின்னு பார்த்து மத்தவங்க மேல எல்லாம் அறிவுத் திருட்டு அப்படின்னு வழக்கு போடணுமா?

இப்போ சொல்லுங்க

1)
மென்பொருள் என்றால் என்ன, மென்பொருள் சார்ந்த சேவை என்றால் என்ன என எப்படி வரையறுப்பது?
2) எது அறிவுத் திருட்டு (குறிப்பாக இசையில்) என எப்படி வரையறுப்பது?

Wednesday, January 30, 2008

பெஸ்ட்டு கண்ணா பெஸ்ட்டு!! (பாகம் 2)

எல்லாரும் பிறந்த நாள் கொண்டாடினா அடுத்தவங்கதான் பரிசு குடுப்பாங்க. ஆனா நம்ம நண்பர் ஒருத்தருக்கு இன்னிக்கு பிறந்தநாள். ஆனா அவரு என்ன தெரியுமா செஞ்சு இருக்காரு. நமக்கு ஒரு பரிசு குடுத்து இருக்காரு. அதுதான் இந்தப் பதிவு. நான் கேட்டுக்கிட்டதுக்கு இணங்க நம்மளை ஆப்புரேசல் பண்ணி இருக்காரு பாலராஜன் கீதா. Happy Birthday Bala!!

இனி பாலா.

உங்களின் 2007 வருட இடுகைகளின் ஆப்புரேசலை எழுத என்னையும் அழைத்ததற்கு நன்றி.


டிஸ்கி:
இதற்கே இன்னும் எல்லா பின்னூட்டங்களையும் படிக்க நேரமில்லை. படித்திருந்தால் வாசகர்களின் பின்னூட்டம் குறித்தும் ஏதேனும் எழுதியிருக்கலாம். ஆகவே இந்த ஆப்புரேசல் உங்கள் இடுகைகளைக் குறித்து மட்டுமே என்று டிஸ்கிக்கிறேன்.


ஆனாலும் கொத்ஸின் ஆப்புரேசலில் பின்னூட்டம் பற்றி பேசாமல் எப்படி என அது பற்றி ஒரு சிறு குறிப்பு. இன்று வரை வந்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை 5503. ஆக சராசரியாக ஒரு இடுகைக்கு 85 பின்னூட்டங்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? ஆனால் புதிர்களின் இடுகைகளில் வந்துள்ள பின்னூட்டங்கள் 481, 393, 396, 230, 121 ; ஜிராவின் ஆப்புரேசலுக்கு வந்த பின்னூட்டங்கள் 382. இவற்றை நீக்கிவிட்டுக் கணக்கிட்டால் சராசரியாக 59 பின்னூட்டங்கள் என்று வைத்துக்கொள்ளலாம். எனவே கண்னை மூடிக்கொண்டு உங்களுக்குப் பின்னூட்ட நாயகன் என்ற பட்டத்தை அளித்துவிடலாம்
.

அடுத்தது சென்ற வருட இடுகைகளில் எனக்குப் பிடித்தது எனச் சொல்ல வேண்டுமானால் தமிழ், ஆங்கிலம், கணக்கு, வரலாறு, அறிவியல், புவியியல், வணிகம், கணினியியல், விளையாட்டு என்ற தலைப்புகளில் வந்த புதிர்களும் பிறகு நன்றிக்கு உரியவர்களையும் புதிர்களாக கேட்டிருந்த இடுகைகள். சில கேள்விகள் பலரையும் முதலில் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடும். அந்த வாரத்தில் பல வாசகர்களை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைத்திருந்தீர்கள் என்றுதான் கூறவேண்டும். கூகிளாண்டவரும் நன்றாக உதவினார். என்னால் முழு மதிப்பெண்கள் பெறமுடியவில்லையே என்று சற்றே வருத்தம் இருந்தது.

அடுத்ததாகப் பிடித்தது கைப்புள்ளயின் கோச்சிங் செண்டர் நோட்டீஸ். இந்த இடுகையைப் படிக்கும்போது நடிகர்கள் வடிவேலுவும் பார்த்திபனும் அப்படியே நடிப்பது போல நினைவிற்கு வரும். இந்த பிட் ஏன் இன்னும் ஏதேனும் திரைப்படத்தில் வரவில்லை என்று சந்தேகமாகவே உள்ளது.

எல்லா இடுகைகளையும் படித்துவிட்டேன் என நிரூபணம் செய்யும் வகையில் சென்ற வருடம் வந்த எல்லாப் பதிவுகள் பற்றியும் ஒரு சிறு குறிப்பு!




ரெண்டு பேர் ஆப்புரேசியாச்சே, இதோட முடிஞ்சுதான்னு பெருமூச்சு விடற ஜனங்களே, நல்லாப் படிச்சுப் பாருங்க. நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லை!!

Tuesday, January 22, 2008

பெஸ்ட்டு கண்ணா பெஸ்ட்டு!! (பாகம் 1)

2008ஆம் ஆண்டு என அழைப்பதை விட தொடர் விளையாட்டு ஆண்டு அப்படின்னே சொல்லிடலாம் போல இருக்கு. அம்புட்டு விளையாட்டு விளையாட வைக்கிறாங்க. புடிச்ச படம் என்ன, போடற மொக்கை என்ன அப்படின்னு எல்லா விளையாட்டும் விளையாடியாச்சு. அடுத்து வரிசையில் நிற்பது பிடிச்ச பதிவாம். போன வருஷம் போட்ட பதிவிலேயே பிடிச்ச பதிவு எதுன்னு சுட்டி குடுக்கணுமாம். சர்வேசன் ஆரம்பிச்சு வெச்ச இந்த விளையாட்டுக்கு நம்மளைக் கூப்பிட்டது ஒருத்தர் இல்லை, மூணு பேரு. அவங்க நம்ம நாச்சியார் வல்லிம்மா, வெட்டி பாலாஜி, வாத்தியார் இளவஞ்சி.

இந்த விளையாட்டை சுயதம்பட்டம் அப்படின்னு சிலர் சொல்லிக்கிறாங்க, எந்தக் கண்ணு நல்ல கண்ணு அப்படின்னு கேட்கறாங்க இன்னும் சிலர். இதையெல்லாம் பார்த்தா எழுதணுமா வேண்டாமான்னு ஒரே ரென்சனா இருக்கு. அப்புறம்தான் போன வருசம் போட்ட ஆப்புரேசல் ஞாபகத்துக்கு வந்தது. (அது ஞாபகத்துக்கு வந்தது அது வாங்கின 382 பின்னூட்டங்களுக்காக அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.) போன தடவை மாட்டுனது ஜிரா. இந்த முறை மாட்டப் போவது வேற ரெண்டு பேரு. ரெண்டு பேருமே பதிவெல்லாம் எழுதாத நல்லவங்க. ஆனா நிறையாப் படிக்கிறவங்க. அவங்களையே போன வருஷம் எழுதின பதிவுகளில் எது நல்லா இருக்குன்னு சொல்லிட்டு அப்படியே ஒரு ஆப்புரேசலும் பண்ணச் சொல்லிடலாமுன்னு ஐடியா.

இந்த நினைப்பு வந்ததும் முதலில் மாட்டினவர் நம்ம ஸ்ரீதர் வெங்கட் அவர்கள்தான். இவரோட பின்னூட்டங்களின் மூலமாவே அனேகமா எல்லாருக்கும் இவரைத் தெரிஞ்சு இருக்கும். தவறாம நம்ம பதிவுக்கு வந்து உள்ளேன் ஐயா (அதுக்கு மேலேயும்) சொல்லும் இவரைத்தான் முதலில் ஆப்புரேசலுக்கு அழைக்கிறேன். இனி ஸ்ரீதர்.

2007-ல் எழுதப்பட்ட பதிவுகளில் பிடித்தது எது என்று சொல்ல சொன்னால் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. பல சமயம் பதிவுகளில் செலவழித்த நேரத்தை விட பின்னூட்ட விளையாட்டில்தானே அதிக நேரம் செலவிட்டிருப்போம். இதற்காக உக்காந்து (இனிமேதான் :-)) படிக்கணுமான்னு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனாலும் சுவாரசியமான வேலைதான் :-)

2007 புத்தாண்டு தினத்தன்று ஒரு புதிய செய்தியோடு வந்து நம்மை (மருதக்காரய்ங்களை) 'காலர தூக்கி விட்டுக்குங்க' என்று மகிழ்வித்ததினாலோ என்னவோ, தமிழ்மண நட்சத்திரமாகவும் ஜொலித்தார். அந்த பதிவிற்கும் பின்னர் வேறோரு சமயத்தில் எழுதப்பட்ட இந்த பதிவுக்கும் எதுவும் தொடர்பிருக்கா என்பதை உங்கள் புரிதலுக்கே விட்டுவிடுகின்றேன்.

இவருடைய எல்லா பதிவுகளிலும் அநேகமாக ஒரு பின்னூட்டமாவது போட்டிருப்பேன் ஒரே ஒரு பதிவை தவிர. இதைப் போல இன்னொரு இ.கொ. பதிவிருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

சரி நம்மை கவர்ந்த பதிவுகள் சில -

லிவிங் ஸ்மைல் வித்யாவின் பதிவிற்கான எதிரிவினை. பலதரப்பட்ட கருத்துகளுடன் நடத்தப்பட்ட விவாதம். இந்த பதிவில் பேசப்பட்ட அந்த தொலைக்காட்சி தொடரில் பிறகு சில வரவேற்கத்தக்க மாறுதல்களும் நடந்தேறின. "lets agree to disagree" என்ற முறையில் விவாதம் முடிந்து போனது.

முரண்பட்ட செய்திகளை சேர்த்து எழுதிய விலங்குகள் உரிமை ஒரு 'கண் திறப்பான்' (eye opener) என்று சொல்லலாம். ஒரே நோக்கதிற்கு வெவ்வேறு செயல்வடிவங்கள் காணக் கிடைக்கின்றன.

நான் எப்பேர்ப்பட்ட கிறுக்கு அப்படின்னு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் (அ) சுயதம்பட்டம். இதில் நானும் ஒரு துணை வாக்குமூலம் கொடுத்திருந்தேன்.

இந்த பதிவை படித்தவுடன் நான் சொன்னது - "Beauty is in the Beholder's eyes அப்படின்னு சொல்லுவாங்க. உங்க பார்வையும் அழகாவே இருக்கு."

ஜொள்ளுபாண்டியோட நோட்டீஸ் வச்சு ஒரு கைப்பு கலக்கல். அருமையான அங்கதம். வடிவேல் ஏதாவது படத்தில் காமெடி டிராக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல் சர்வைவல் ஆப் பிட்நெஸ் பதிவும். உடல் இளைக்க இந்த பதிவை சில முறை படிக்கலாம். விழுந்து விழுந்து சிரித்தால் கொஞ்சம் கொழுப்பு குறையலாம்.

நட்சத்திர வாரத்தில் குயி.. குயி.. குயிஜு என்று கூவிக்கொண்டு 9 தலைப்புகளில் நடத்திய போட்டி நிறைய பேரை கவர்ந்தது. பங்கேற்பாளர்கள் எல்லோருடைய விடையையும் தொகுத்து அதற்கு பதிலளித்து, மேலும் சில க்ளூக்கள் தந்து என்று நிறைய நேரத்தையும், தேடலையும் கொண்ட முயற்சி. மிகப் பெரும் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். நிறைய பதிவர்கள் கலந்து கொண்டார்கள்.

சக பதிவர்களை கொண்டு புதுமையான பட்டிமன்றம் நடத்தியது மிகவும் அருமையாக இருந்தது. தலைப்பும், தீர்ப்பும் பட்டிமன்றத்து இலக்கணப்படி இருந்தாலும், விவாதங்களும் பின்னூட்டங்களும் நகைச்சுவைக்கு கியாரண்டி.

இதைத் தவிர அவருடைய வெண்பா பதிவுகள், வ.வா.சங்க ஆப்புரேசல் போன்ற பல பதிவுகளும் பெருவாரியான வாசகர்களை கவர்ந்தவையே.சமையல் குறிப்பு, பயண்க் கட்டுரை, செய்தித் தொகுப்புகள், தமிழ்மணத்திற்கு ஆலோசனை(?!), எடிஸனில் வரலாறு காணாத வலைப்பதிவர் மாநாடு, 'நச்'னு ஒரு கதை என்று இன்னும் பல பதிவுகள் மிகவும் பாப்புலர்தான்.

எல்லாவற்றையும் விட பெரிதும் கவர்ந்தது அவருடைய ரீபஸ் புதிர் போட்டிதான். பலரையும் கிறுக்கு பிடிக்க வைத்த போட்டி. கிட்டதட்ட 250 விதவிதமான பதில்களை தொகுத்து பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தி ப்ரபொஷனலாக நடத்தப் பட்ட போட்டி. அந்த போட்டியில் சில புதிர்கள் யாராலுமே பதிலளிக்க முடியாமல் போனது, (பாலராஜன் கீதாவை தவிர).

ஆக மொத்தம் போன வருடப் பதிவுகளிலேயே எனக்கு பிடித்தது - விடுகதையா இந்த வாழ்க்கை என்ற பதிவுதான்!

இப்போ இ.கொ.விற்கு சில கேள்விகள் -
  1. அப்புறம் கே.ஆர்.எஸ் உங்களை பலூனில கூட்டிகிட்டு போனாரா?
  2. அவுஸ்திரேலியா போறதுக்கு டீச்சர்கிட்ட டிக்கட் எடுத்திட்டாங்களா?
  3. ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஜொள்ளு மட்டும்தான் விட்டுட்டிருந்தீங்களா?
  4. அடுத்த புதிர் போட்டி எப்போ?
  5. புதிர்கள் போடுவதற்காக தனி வலைப்பக்கம் தொடங்கலாமே? வேணும்னா சொல்லுங்க ஒரு prototype பண்ணிடுவோம்.
  6. போட்டோ போட்டாச்சு, கதை எழுதியாச்சு. அடுத்து கவிதைதானே?
  7. டிஸ்கி போடாம உங்களால பதிவு எழுத முடியுமா?

என்னங்க, படிச்சீங்களா? ஒரு அப்ரேய்சல் செய்யச் சொன்னா எம்புட்டு கேள்வி கேட்கறாரு பாருங்க. இவர் இப்படின்னா அடுத்து நான் கேட்டவரு இன்னும் சுவாரசியம். அவர் யாரு, அவர் என்ன சொன்னாருன்னு அடுத்த பதிவில் பார்ப்போமா? (சும்மாவா பாகம் 1 அப்படின்னு தலைப்பு வெச்சிருக்கு. இனிமே யாரும் தொடர் விளையாட்டுக்குக் கூப்பிடக்கூடாதுன்னு செஞ்சிட மாட்டோம்!)

Sunday, January 20, 2008

வெங்க்சார்க்கரும் இன்னும் சில முட்டாள்களும்!

அவுஸ்திரேலியாவில் இந்த டெஸ்ட் போட்டித் தொடர் முடிந்த உடன் நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியினரின் இடாப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் சில பெருந்தலைகளுக்கு இடமில்லை. அதனால நம்ம ஆட்கள் வழக்கம் போல உணர்ச்சிவசப்பட்டு கொந்தளித்து அடுத்தவனை முட்டாள் மூடன் என்றெல்லாம் திட்டி பதிவுகள் போடத் தொடங்கியாயிற்று. நம்ம பாலா போட்டு இருக்கும் இந்தப் பதிவு கண்ணில் பட்டது. ஆனா இந்த உணர்ச்சிகளை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த விஷயத்தை என்ன ஏதென்று பார்க்கலாமா?

கங்குலி, திராவிட், லக்ஷ்மண் அணியில் இல்லை. இதுதானே இவ்வளவு கொந்தளிப்புக்குக் காரணம்? நம் வழக்கமான முறைப்படி அதெப்படி இவர்கள் எல்லாம் இல்லாமல் ஒரு அணி, அதுவும் அவுஸ்திரேலியாவிற்கு எதிராகவா என்றெல்லாம் சொல்லி தேர்வாளர்களுக்கு எளிதாக முட்டாள் பட்டம் கட்டி விடலாம். ஆம், தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த அணியின் மட்டையாளர்களுக்கு அவ்வளவு அனுபவம் இல்லைதான். சேவாக்கும் டெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய பின் வருபவர்கள் அனைவருமே இளைஞர்கள். நடுவே யுவராஜ், தோணி என கொஞ்சம் அனுபவம் இருக்கத்தான் இருக்கிறது என்றாலும் மற்றவர்களின் அனுபவம் பெரும்பாலும் 20-20 ஆட்டங்களில்தான். ஆனால் கம்பீர், கார்த்திக், உத்தப்பா, ரெய்னா என நல்ல தகுதியுடையவர்கள்தானே அணியில் இருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பொழுதெல்லாம், 20-20 உலகக்கோப்பை உட்பட, சாதித்துக் காட்டியவர்கள்தானே இவர்கள்.

இவர்களை மெதுவாக ஒவ்வொருவராக அணிக்குள் கொண்டு வரலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட போட்டியில் மொத்தமாக களமிறக்கி அவர்களை பழக்கப்படுத்தலாம். நம் தேர்வாளர்கள் இரண்டாம் முடிவினைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். டெஸ்ட் போட்டிக்கு இருப்பது போலில்லாமல் ஒரு நாள் ஆட்டத்திற்கு பீல்டிங் செய்வது மிகத் தேவையான ஒன்று. அதற்கான இளமைத் துடிப்பு இந்த அணியினரிடையே இருக்கிறது. அதே போல் ரன்கள் ஓடுவதிலும் கூட. திராவிட்டும் லக்ஷ்மணும் டெஸ்ட் போட்டிகளில் எத்தனை முறை மூன்று ஓட்டங்கள் எடுக்க இடங்களில் இரு ஓட்டங்களும், இரு ஓட்டங்கள் எடுக்க வேண்டிய இடத்தில் ஒரே ஒரு ஓட்டத்துடனும் நின்றிருக்கிறார்கள்? இது மட்டுமே ஒரு 30 - 40 ஓட்டங்களாக மாறினால் அது வெற்றியை நிர்ணயிக்கும் அல்லவா?

அதே சமயம் நமது அடுத்த முக்கியமான இலக்கு 2011 உலகக் கோப்பை. அதற்கான அணியினை தயார் செய்வதில் நாம் முனைப்பாக இருக்க வேண்டும். இந்த இளைஞர்கள்தான் அந்த அணியின் முதுகெலும்பாக இருக்கப் போகிறவர்கள். அவர்களுக்கு அந்த போட்டிக்கு முன் எவ்வளவு அனுபவம் கிடைக்கிறதோ அவ்வளவு நல்லது. முதலில் அனுபவமின்மையால் தோற்றுத்தான் போவார்கள். ஆனால் அதனை சகித்துக் கொண்டு அவர்களைக் கொண்டே தொடர்ந்து விளையாடினால் நல்ல அனுபவம் பெற்று உலகக் கோப்பையைத் தட்டிவரத் தயாராவார்கள் என்பது நிச்சயம். இந்த அணியினருக்கு அணித்தலைவர் தோணியின் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரால் நமக்கு உலகக்கோப்பை வர வேண்டுமானால் அவருக்கு உகந்த அணியினைத் தர வேண்டியது அவசியம். அதைத்தான் இந்த தேர்வாளர்கள் செய்திருக்கிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் இது போன்று ஒரே நேரத்தில் பெரும் மாற்றங்கள் கொண்டு வருவது அவ்வளவு சரி இல்லை. ஆனால் ஒரு நாள் அணியில் செய்வது தவறில்லை என்றே நினைக்கிறேன்.

சேவாக்கும் பார்மில் இல்லாமல் இருந்து இப்பொழுதுதான் மீண்டும் சரியாக விளையாடத் தொடங்கி இருக்கிறார், யுவராஜோ சொதப்பிக் கொண்டு இருக்கிறார். இந்நிலமையில் நன்றாக ஆடி வரும் இம்மூவரையும் ஒரேடியாக தூக்கி இருக்காமல் திராவிட் அல்லது கங்குலி இவர்கள் இருவரில் ஒருவர் அணியில் இருந்திருக்கலாம். ஆனால் இதுதான் நாம் செல்ல வேண்டிய பாதை என முடிவு செய்த பின் அதன் வழியே செல்வது அவசியம். முதலில் சில தோல்விகள் வந்தாலும் இந்த அணியில் பெரும் மாற்றங்கள் இல்லாமல் ஆதரித்து இவர்களை உலகக்கோப்பையினை வெல்லும் அணியாக மாற்ற வேண்டியதுதான் சரி.

இந்த அணியினரே நன்றாக விளையாடினால் அப்பொழுது யார் யாரை முட்டாள் எனச் சொல்வது. அடுத்தவரை முட்டாள்கள் எனச் சொல்வது ரொம்ப சுலபம். ஆனால் அதுவே நம்மை நோக்கி வர அதிக நேரமாகாது. சில மாதங்கள் முன்பு நம் நண்பர்களால் கிழவர்கள் என வர்ணிக்கப்பட்ட வீரர்கள்தான் பாகிஸ்தானோடும் சரி அவுஸ்திரேலியாவுடனும் சரி பட்டையைக் கிளப்பினார்கள். அது பற்றிய சத்தத்தையே காணும். அதுபோல் இந்த அணியினரும் நன்றாக விளையாடி நம் எதிர்ப்பார்ப்பை விட அதிகமாக செய்து காட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

Let us not look for instant gratification. Let us give this team some time and groom them. They are going to be the back bone of our 2011 World Cup Team. They need our support and belief.

Go India Go! Go with an eye on 2011 World Cup!!

Sunday, January 13, 2008

படப் பெட்டியில் பல சரக்கு

மாசம் ஒரு முறை பதிவு போட நல்ல வாய்ப்பு தராங்க நம்ம PIT வலைக்குழுவினர். என்னமோ ரெண்டு படம் எடுத்தோமா பதிவைப் போட்டோமான்னு அப்படின்னு ஒரே ஜாலியா இருக்குங்க. ஆனாப் பாருங்க, இந்த முறை அவங்க குடுத்து இருக்கும் தலைப்பு அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களாம். எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு ஒரே குழப்பம்தான். எடுத்ததில் தேறிய இந்த ஐந்து படங்களைப் போட்டு இருக்கிறேன். முதலிரண்டு படங்களை போட்டிக்கு அனுப்ப உத்தேசம். (பிற்சேர்க்கை : முதல் படம் தலைப்பிற்கேற்றதா என்ற குழப்பம் இருப்பதால் இரண்டாவது மற்றும் நான்காவது படங்களைப் போட்டிக்கு அனுப்புகிறேன்.)

இது வந்து அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களில் சேர்த்தியான்னு தெரியலை. ஆனா அன்றாடம் பயன் படுத்தும் இடங்களில் ஒன்று. வாயில் கதவைத் திறந்து வீட்டினுள் வரும் வழி. இதைப் பயன்படுத்தாம இருக்க முடியுமா? இதை சேர்த்துக்கலாமுன்னா இதுதாங்க நம்ம சாய்ஸ்!



இப்பருவத்தில் பொதுவாக அரிதான சூரிய வெளிச்சம் இந்த முறை சக்கை போடு போடுகிறது. அது ஜன்னல் வழியே வரும் காட்சியை படம் பிடிச்சது. கொஞ்சம் வடக்கே போனாக்கூட பனி கொட்டுது. ஆனா எங்களுக்குத்தான் ஒண்ணுமே இல்லை! :-(



என்னங்க தொழில் அப்படின்னு கேட்டா விற்பனை துறை அப்படின்னு சொல்லாம கையில் பை, கழுத்தில் டை, வாயில் பொய் அப்படின்னு சொல்லுவாங்க. இங்க நம்ம டை கழுத்தில் இல்லாம கீழ கிடக்கு. இந்த டைகள் எல்லாம் இப்படி சுத்தி வெச்சது நம்ம ஜூனியர்.



உலகத்தில் எல்லா அசைவிலும் இசை இருக்குன்னு சொல்லுவாங்க. இந்த சிடி அசைந்தால் இசை வருவதில் என்ன ஆச்சரியம் இருக்கு? நான் அசைந்தால் இசையும் அகிலமெல்லாமே!



போன் கண்டார் போனே கண்டார்...



அடுத்த மாசமாவது இம்புட்டு யோசிக்காம படம் எடுக்கற மாதிரி தலைப்பு குடுங்கப்பா. அப்புறம் எல்லாருக்கும் என்னோட பொங்கல் நல்வாழ்த்துகள்! உலகில் இன்று முக்கியமான தேவை அமைதிதான். அதனால இந்த அமைதி நாயகன் படத்தையும் போடறேன். நீங்களும் வேண்டிக்குங்க.



பி.கு. - இது போன வருடம் பொங்கலுக்குப் போட்ட பதிவு!

Thursday, January 10, 2008

இசலிகளின் இடாப்பும் இன்ன பிற டிஸ்கிகளும்!!

Everybody! Wish you all a happy new year!!



என்னடா இவன் புது வருஷம் பொறந்து இம்புட்டு நாளாச்சு, இப்ப போயி வாழ்த்து சொல்லறானே, அதுவும் 1982ஆம் வருஷ பாட்டு வேற போடறானேன்னு பார்க்கறீங்களா? சும்மா தேமேன்னு இருந்த என்னை இந்த மாதிரி புத்தாண்டு பதிவு போட வெச்சது நம்ம கீதாம்மாதான். அதனால குடுக்க வேண்டிய தண்டனை எல்லாம் நேரா அங்க பார்ஸேஏஏஏல். புத்தாண்டு பத்திப் பதிவு அப்படின்னா இந்த பாட்டு போட்டு ஆரம்பிக்கறாதுதானே நம்ம தமிழ்க்கலாச்சாரம். அதான் இப்படி. ஆனா புத்தாண்டு வாழ்த்து சொல்லி பதிவு போட்டா போறாதாம். அப்போ எடுத்துக்கிற சபதம் பத்தி எழுதணுமாம். இதைப் படிச்ச உடனே எப்படி தெரியுமா இருந்தது.

சின்ன வயசுல ஸ்கூல் படிக்கும் பொழுது இந்த டீச்சருங்க எல்லாம் புது வருஷம் பொறக்குதோ இல்லையோ, அதுக்காகவே காத்துக்கிட்டு இருந்தா மாதிரி உங்க புது வருஷ தீர்மானங்களைப் பத்தி கட்டுரை எழுதுன்னு சொல்லுவாங்க. அது வந்து இந்த "If you were the prime minister..", "If a wish of yours can come true.." ரேஞ்சில் நடக்காத விஷயம்தானேன்னு தெரிஞ்சதுனால என்ன வேணாலும் எழுதலாம். பொதுவா இனிமே சரியா ஹோம்வொர்க் பண்ணுவேன், கிளாசில் தூங்கினால் குறட்டை விடாமல் இருப்பேன், வாத்தியார் வேட்டியில் இங்க் அடிக்க மாட்டேன் அப்படின்னுலாம்தான் எழுதி வெச்சு இருப்போம். படிக்கிறவங்களுக்கு இது கட்டுரையா இல்லை இம்போசிஷனான்னே சந்தேகம் வரும்.

அப்புறம் கொஞ்சம் வளர்ந்தா ஒரு டைரி எழுதும் மோகம் பத்திக்கும். என்னமோ வருஷம் பூராவும் எழுதிக் கிழிக்கிற மாதிரி ஒரு நாளைக்கு ஒரு பக்கம் இருக்கிற டைரிதான் வேணும் அப்படின்னு தேடுவோம். தேடுவோமுன்னா காசு குடுத்து கடையில் வாங்கறது எல்லாம் இல்லை. ஓசியில் எங்க கிடைக்குதுன்னு பார்க்கத்தான். கடைசியில் எதாவது டாக்டர் வீட்டில் அனாதையாய் கிடக்கும் மருந்து கம்பெனி டைரி ஒண்ணு மாட்டும். அதில் ஜம்பமா பேரு அட்ரஸ் எல்லாம் எழுதிட்டு ஆரம்பிப்போம். முதல் நாள் பொதுவா இந்த வருஷம் பூராவும் டைரி எழுதுவேன் அப்படின்னு ஆரம்பிக்கறதுதான் சம்பிரதாயம். நிறையா வருஷங்களில் அது ஒண்ணு மட்டும்தான் எழுதி இருப்போம். அப்புறம் அம்மா சலவை கணக்கு எழுத புத்தகம் தேடும் பொழுது பெருந்தன்மையோட இதைத் தானம் பண்ணிடுவோம். அதுக்கு முன்னாடி பெர்சனல் விஷயங்களை எல்லாம் அடுத்தவங்க படிக்கக் கூடாதுன்னு அதை ஸ்டைலா கிழிச்சுட்டு குடுக்கறதில ஒரு பெருமை.

அப்புறம் கொஞ்ச வயசாச்சுன்னா ஒரு கவுஜ எழுதும் கிறுக்குப் பிடிக்கும். கவுஜ எழுதற கிறுக்குன்னு தனியா இருக்கா, கவுஜ எழுதினாலே அப்படித்தானேன்னு எல்லாம் கேட்கப்பிடாது. அப்போ பள்ளிக்கூடத்தில் நேர் நேர் தேமான்னு சொல்லிக் குடுத்தா அதை காதிலேயே போட்டுக்காம வெண்பா, விருத்தமுன்னு வீணா பேசிக்கிட்டு இருக்காரேன்னு வருத்தப்படறவன் இங்க வந்து
நான்
படித்தேன்
பா -
அவளோ
சொன்னாள்
போ!!!
அப்படின்னு ஆச்சரியக்குறி போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதான். அந்த டைரி முழுசும் இப்படி உடைச்சுப் போட்ட உரைநடை வரிகளால் ரத்தக்களறி ஆகி இருக்கும். இதுக்கு நடுவில் காதல் கிறுக்கு வேற பிடிச்சுது அம்புட்டுதான். ஒரு மாசத்தில் ஒரு வருஷ டைரி காலி ஆகி இருக்கும். ஆனா இந்த பித்து எல்லாம் நிறையா பேருக்கு கொஞ்ச நாள்தான். சரியாகிடும். அப்படி சரியாகாம போனாத்தான் பாவம் கவிஞரா ஆகிடறாங்க. என்ன செய்ய எல்லாம் விதி.

அப்புறம் ஒரு வழியா படிச்சு முடிச்சு, வேலை தேடி, கல்யாணம் பண்ணிக்கிட்டு, குண்டாகி, (ஆத்தாடி எம்புட்டு ஜிம்பிளா சொல்லிப்புட்டோம்!) மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் பார்த்து டென்ஷனாகும் பொழுது இந்த வருஷம் பூரா நொறுக்குத் தீனி திங்கக் கூடாது, ஒழுங்கா உடற்பயிற்சி எல்லாம் செய்யணும், சும்மா ஒரு மாசத்தில் அர்னால்ட் ஷ்வாஷ்னெக்கர் மாதிரி ஆகணும் அப்படின்னு ஒரே ஒரு நாள் எதையாவது செஞ்சு கண்ணாடி முன்னாடி போய் பைசெப்ஸ் எல்லாம் முறுக்கி பார்க்கறது. அடுத்த நாள் காலையில் உடம்பில் இதுவரை இருந்ததே தெரியாத இடங்கள் எல்லாம் வலிக்க ஆரம்பிக்க வழக்கம் போல் ரீவி முன்னால் உக்காந்துக்கிட்டு பாப்கார்ன் சாப்பிட்டுக்கிட்டே என்னடா ஆடறாங்க இந்தப் பசங்க? ஒரு ஓவர்பிட்ச் பாலை ட்ரைவ் பண்ணத் தெரியலை அப்படின்னு விமர்சனம் பண்ணிக்கிட்டு கிரிக்கெட் பார்க்க வேண்டியதுதான்.

சரிடா, விஷயத்துக்கு வா. இந்த வருஷத்து சபதம் என்ன அதைச் சொல்லுன்னு ரென்ஷன் ஆகறீங்களா? புது வருட காலையில் அவசர அவசரமா குளிச்சுட்டு கோயிலுக்கு போய் பல மணி நேரம் வரிசையில் நின்னு, அரையே அரை நொடி சாமியைப் பார்த்து ஏடு கொண்டலவாடா, வேங்கடரமணா, கோவிந்தா கோஓவிந்தா அப்படின்னு சொல்லிட்டு உண்டியலில் கொஞ்சம் பச்சை நோட்டை நுழைச்சுட்டு, கீழ கேண்டீன் வந்து மீண்டும் சில மணி நேரம் வரிசையில் நின்னு ஒரு புளியோதரை, தயிர்சாதம் சாப்பிட்டுவிட்டு அப்படியே வீட்டுக்கு வந்து அப்பாடான்னு உக்கார்ந்தா எவ்வளவு டயர்டா இருக்கு. இதுல சபதம் போட எங்க நேரம் இருக்கு சொல்லுங்க!!

டிஸ்கி 1 : ஏற்கனவே லேட்டு, இதுல இன்னும் நாலு பேரைக் கூப்பிட்டு புதுவருஷ சபதம் எல்லாம் பத்தி எழுதச் சொன்னா காறி துப்புவாங்க. அதனால நான் அந்த பார்ட்டை மட்டும் சாய்ஸில் விடறேன். அப்படி யாரும் பதிவு போட வேற மேட்டரே இல்லாம இதை எழுத துடிச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா நான் கூப்பிட்டதா நினைச்சுக்கிட்டு பதிவு போடுங்க. போட்டுட்டு இங்க வந்து இலவசமா போஸ்டர் ஒட்டிக்குங்க.

டிஸ்கி 2: இது எல்லாம் போறாதுன்னு மொக்கைப் பதிவு தொடர் ஒண்ணு ஓடுதாமே. அதுக்கு யாரும் கூப்பிடறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன். அதுக்கும் சேர்த்துதான் இந்தப் பதிவு.

டிஸ்கி 3: இந்தப் பதிவுக்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு யோசிக்கறீங்களா? அதுவும் தமிழ்தாங்க. இசலி அப்படின்னா சபதம், இடாப்பு அப்படின்னா அட்டவணை. சபதங்களின் அட்டவணை அப்படின்னு தலைப்பு வெச்சா வருவீங்க? ஆனா இசலிகளின் இடாப்புன்னு கரெக்ட்டா வந்து ஆஜராவீங்க இல்ல. அதான்! வர்ட்டா!!

Sunday, January 06, 2008

பனியாய் பரவும் புகைப்படத் தொடர்

இந்த வருஷ ஆரம்பமே தொடர் விளையாட்டுக்களா இருக்கு. முதலில் நம்ம பாபா வந்து போன வருஷம் எடுத்த படங்களில் உங்களுக்குப் பிடிச்ச படம் எது அப்படின்னு சொல்லுங்க அப்படின்னு கூப்பிட்டாரு. அவரு கிட்ட டிமிக்கி குடுத்துடலாம் அப்படின்னு பார்த்தா பின்னாடியே நம்ம வெங்கட்டும் வந்து படத்தைப் போடய்யான்னு மிரட்டிட்டுப் போயிட்டாரு. வெங்கட் எடுத்த படத்தைப் பார்த்தால் நமக்கு அவ்வளவு பிரமிப்பா இருக்கு. இப்படி எல்லாம் படம் எடுக்கிற பார்ட்டி வந்து நம்மளைக் கூப்பிடறாரே அப்படின்னு ஒரு யோசனை. அப்புறம் கமல் ரஜினி படத்துக்கே வடிவேலு தேவையா இருக்கே. அந்த மாதிரி இவங்க எல்லாம் விளையாடுற இடத்தில் நம்மளை ஊறுகாயா தொட்டுக்கறாங்க போல அப்படின்னு மனசைத் தேத்திக்கிட்டு துணிஞ்சு பதிவைப் போடலாமுன்னு முடிவு பண்ணிட்டேன்.

அப்புறமா நம்ம கிட்ட இருக்கும் படங்களை எல்லாம் பார்த்தா இப்படி பொதுவில் போடற மாதிரி எதுவும் பெருசா இல்லை. முதலில் நம்ம எடுக்கும் முக்கால்வாசி படங்களில் நம்ம குடும்பத்தார் பல்லைக் காமிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க இருக்கும் படத்தைப் போடும் அளவு நம்ம தமிழ் வலைப்பதிவுலகம் மேல நம்பிக்கை வரலை. அதனால அவை அனைத்தும் காலி. மீதி இருக்கும் கொஞ்சமே கொஞ்சம் படங்களில் சிலவற்றை ஏற்கனவே பல பதிவுகளில் போட்டாச்சு. அதனால போடாத படங்கள் அப்படின்னு பார்த்தா ரொம்பவே கொஞ்சம்தான் தேறுது. அதில் எனக்குப் பிடிச்சது இந்த படம்தான்.



இந்தப் படத்தை எடுத்தது நியூயார்க் நகரில் உள்ள ப்ராக்ன்ஸ் மிருகக்காட்சி சாலையில் எடுத்தது. நாங்கள் சென்ற வேனிற்கால விடுமுறை நேரத்தில் வண்ணத்துப் பூச்சிகளின் சிறப்புக் கண்காட்சி ஒண்ணு வெச்சு இருந்தாங்க. ஒரு பெரிய கூடாரத்தின் உள்ளே விதவிதமான வண்ணத்துப் பூச்சிகள். நம் தோள் மேலே வந்து உட்காருது, காது அருகே படபடவென சிறகடிச்சுக்கிட்டுப் போகுது, சிறிதும் பெரிதுமாய், வண்ண வண்ணமாய் ஒரே பட்டாம்பூச்சிக் கொண்டாட்டம்தான். என் மகனைப் போலவே ஒரு இடத்தில் நிலைகொள்ளாத இந்த வண்ணத்துப்பூச்சிகளை படமெடுப்பது ஒரு சவாலாகவே இருந்தது. அங்கு சுட்டுத் தள்ளியவற்றில் எனக்குப் பிடித்தது இந்தப் படம்தான். இதில் பிற்தயாரிப்பு எதுவும் செய்யவில்லை.

அப்புறம் ஒத்த போட்டோ போட்டா வாஸ்து படி பதிவுக்கு ஆகாதாமே. அதுனால போன வருஷம் எடுத்த படங்களில் பிடித்தது இவை கூட. இது பத்தி முன்னமே இந்தப் பதிவில் சொல்லியாச்சு. படங்களில் விசேஷம் என்னன்னா சுமார் 300 அடி உயரத்தில் அந்தரத்தில் ஊஞ்சலாடிக்கிட்டு இருக்கும் போது எடுத்த படங்கள். இவ்வளவு நல்லா வரும் அப்படின்னு எதிர்பார்க்கவே இல்லை.



அப்புறம் கடைசியா இந்த விளையாட்டு விளையாட இன்னும் பலரைக் கூப்பிடணுமாம். அதுல பாபா நாலு பேரை கூப்பிட்டு இருக்காரு. ஆனா அப்புறமா வந்த வெங்கட்டாகட்டும், அவர் கூப்பிட்டு வந்த சீவிஆர் ஆகட்டும் தலைக்கு மூணு பேரைத்தான் கூப்பிட்டு இருக்காங்க. அதிலேயும் இந்த சீவீஆர் நான் நினைச்ச ரெண்டு பேரை கூப்பிட்டுட்டாரு. அதனால நானும் மூணு பேரோட நிறுத்திக்கறேன். இவங்க எல்லாருமே படம் போட்டு பட்டையைக் கிளப்பறவங்கதான். அதுனால நல்ல பதிவா வரும் அப்படின்னு நம்பறேன். வந்து படத்தைப் போடுங்க அப்படின்னு நான் கூப்பிடும் மூவர்
  1. வைத்தியர் இராமநாதன்
  2. தல கைப்புள்ள
  3. மாதாமகி துளசி ரீச்சர் (அப்பாடா, நானும் 33% ஒதுக்கீடு குடுத்துட்டேன்!)
டிஸ்கி: அடுத்த பதிவும் ஒரு தொடர் பதிவுதாங்க. அதுக்கு வெயிட்டீஸ்!