Friday, September 02, 2011

அடி மேல அடி வெச்சா....

என் அண்ணன் அவர் பேஸ்புக்கில் இந்த துணுக்கைப் போட்டு இருந்தார். 

 

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் - அந்தக் காலம்

மீட்டர் மேல் மீட்டர் வைத்தால் க்ரைண்டரும் நகரும் - இந்தக் காலம் ;)”

 

இதற்கு என் பதில் 

 

அடி என்பது ஆசையாக மனைவியைக் கூப்பிடுவது.

அடி மேல் அடி என்பது, தகப்பனார் அடி எனக் கூப்பிடும் அம்மாவின் மீது தான் அடி என அழைக்கும் மனைவியை வைப்பது!

அதாவது அது வரை அம்மா இருந்த இடத்தில் மனைவியை இருத்த, அம்மிக் குழவி ஆயுதமாகப் பறக்கும் என்பது இந்த சித்தாந்தம். 

இதை நவீனப்படுத்துவதன் மூலம் உன் ஆணாதிக்க மனப்பான்மையே வெளியே தெரிகிறது!

Posted via email from elavasam's posterous

Thursday, January 06, 2011

பிழை தீர் - பிழைத்தீர்

தெரிந்ததைச் சொல்லலாம் என ஆரம்பித்தக் கொத்தனார் நோட்ஸ் பகுதி பதினைந்து பாகங்கள் வந்துவிட்டது. ஆனால் இது சரி இது தவறு என்று சொல்லுவது எனக்கே கொஞ்சம் போர் அடித்துவிட்டது. அதனால் அதனை இப்பொழுது முடித்துவிடலாம் என்ற முடிவெடுத்து, நிறுத்திவிட்டேன். இறுதி பாகத்தைப் படிக்க இங்கு செல்லுங்கள்.

ஆனால் பிழைகள் பல கண்ணில் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அதிகம் பேர் பிழை செய்யும் சொற்களை எடுத்துக் கொண்டு தொடராக இல்லாமல் எப்பொழுதாவது சில பதிவுகள் போடலாம் என எண்ணம். அதே போன்று எழுதியவற்றிலோ அல்லது எழுதாமல் விட்டவைகளிலோ எதேனும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம். பதிவிடும் பொழுது அவற்றையும் எடுத்துக் கொள்கிறேன்.

இந்தத் தொடருக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. விரைவில் வேறு ஒரு தலைப்பில் அடுத்த தொடர் ஆரம்பிக்கிறேன்.

Friday, December 31, 2010

ஜே ஜே இல்லாத குறிப்புகள்!

படிக்கும் நல்ல நெஞ்சங்களுக்கு என் உள்ளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். எல்லா செல்வங்களும் சந்தோஷங்களும் உங்களைச் சேரட்டும்.

இந்த வாரம் தமிழ் பேப்பரில் சில எழுத்துப்பிழைகள், சில வார்த்தைகளின் மூலம் என வழக்கம் போல் எழுதி இருந்தாலும் ரஜினி பட பாடல் ஒன்றைப் பற்றிச் சொல்லப் போக அதற்கு அவர்கள் போட்ட படம் பற்றித்தான் பேச்சு அதிகமாக இருக்கிறது. படிக்க கீழே இருக்கும் உரலைச் சுட்டிப் பார்க்கவும்.


மன் மதன் அம்பு படம் பார்த்தோம். எல்லாரும் படம் சகிக்கவில்லை என்று சொல்லிவிட்டதால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றதினாலோ என்னவோ படம் அந்த அளவு மோசமாகத் தெரியவில்லை.

கமலின் மிகச்சிறந்த ஆக்கமா என்றால் இல்லைதான். க்ரேஸி மோகன் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமா என்றால் இருந்திருக்கும்தான். திரைக்கதையில் அபத்தமான ஓட்டைகள் இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஈழத்து டாக்ஸி ட்ரைவர், மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் என்று கமல் தனக்குத் தெரிந்ததைக் காட்ட வகையாக நுழைத்தப்பட்ட கேரக்டர்கள் இருக்கிறதே என்றால் இருக்கிறதேதான். அதே கமலின் அஜெண்டா திணிப்புகளாக காதலியுடன் இருக்கும் பொழுது பகுத்தறிவு பிரச்சாரமும் அரசியல் வசனங்களும் இருக்கிறதே என்றால் இருக்கிறதேதான். ஊர்வசியும் ரமேஷ் அரவிந்தும் வேஸ்ட் செய்யப்பட்டு இருக்கிறார்களே என்றால் இருக்கிறார்களேதான்.

ஆனால் சமீபகால நேட்டிவிட்டி என்ற பெயரில் தரப்படும் திராபை இல்லாமல், குத்துப் பாட்டு ஆபாச நடனங்கள் இல்லாமல், அடிதடி சண்டைகள் இல்லாமல், ரத்தக் களறி இல்லாமல், காமெடி என்ற பெயரில் நடத்தப்படும் அபத்தக் கூத்துகள் இல்லாமல், மூளையை ஆப் செய்துவிட்டு குடும்பத்துடன் உட்கார்ந்து சிரித்துவிட்டு வர முடிகிறது. பஞ்சதந்திரம், பம்மல் கே ரேஞ்சில் இல்லாவிட்டாலும் ஒரு முறை பார்க்கக்கூடிய தரத்தில்தான் இருக்கிறது.

கமல் தொப்பையும் தொந்தியுமாக ஆகிவிட்டார். இனிமேல் வயதுக்கேற்ற கேரக்டர்கள் செய்வது நலம். மனைவியை இழந்தவராக வருவது, மனைவி மகள் என்று யாரேனும் இறக்கும் பொழுது ஒரு ட்ரேட்மார்க் அழுகையுடன் அழுவது போன்றவற்றில் இருந்து சீக்கிரம் வெளிவருதல் நலம். கே எஸ் ரவிக்குமாரை படத்தில் காணவே இல்லை. எல்லாருக்கும் அவரவர் இடத்தைக் கமல் தர வேண்டும். இசை பற்றிப் பேசாமல் இருப்பதே எல்லாருடைய ரத்த அழுத்தமும் ஏறாமல் இருக்க ஏதானது. இளையராஜாவுடன் சேர்வதினால் ஆய பயன் யாதெனின் என்று கமல் யோசிக்க வேண்டும்.

பெரும்பாலும் இணையத்தில் நன்றாக இருக்கும் படங்கள் எனக்குப் பிடிக்காமல் போவதும் (அஞ்சாதே, பசங்க, இன்னும் பல), மட்டம் என்று விமர்சிக்கப் படும் படங்கள் (மும்பை எக்ஸ்ப்ரெஸ்) பல எனக்குப் பிடிப்பதும் எப்பொழுதும் நடப்பதுதான். புவிவெப்பமயமாதலினால் இதில் மாற்றமெதுவும் இல்லை. நல்லது.

Comfort Fabric Softner, V Guard Stabilizer போன்ற எழுத்துப்பிழைகளுடான விளம்பரங்களும், ஷாரூக் கானின் குரலில் தமிழும் வராத விளம்பரங்களும் வரும் வருடமாக 2011 இருக்கப் பிரார்த்திப்போம்.

பிகு: இன்று படம் பார்க்க எங்கள் குடும்பத்துடன் வேறு மூன்று குடும்பங்கள் மட்டுமே அரங்கில் இருந்தனர். எனவே ஜே ஜே எனக் கூட்டம் இல்லாத என்று தலைப்பைப் படித்துக் கொள்ளவும்.

Wednesday, December 22, 2010

இடக்கரடக்கல் என்றால் என்னான்னு தெரியுமா?

இடக்கரடக்கல் மட்டும் இல்லை, குழூஉக்குறி, மங்கலம் இப்படி சில விஷயங்களைப் பத்தி சொல்லி இருக்கேன்.

Wednesday, December 15, 2010

கண்றாவி!!

மார்கழி மாச ஆரம்பமும் அதுவுமா கண்ணில் இந்தக் கண்றாவிதான் பட்டது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கோட்பாட்டின்படி நீங்களும் ஒரு தபா பார்த்திடுங்கோ!

கண்றாவி
(கீதாம்மா, மேல இருக்கிற வார்த்தையைக் க்ளிக்குங்கோ)

Sunday, December 05, 2010

அக்கு வேற ஆணி வேற!

அக்கு வேறு ஆணி வேறு என்று சொல்கிறோமே. அதில் ஆணி என்றால் நாம் அன்றாடம் பயன்படுத்துவது. ஆனால் அக்கு என்றால் என்ன? ஆணி என்று வருவதால் அக்கு என்றால் ஆணியை அடிக்கும் முன் சுவர் பாழாகாமல் இருக்க சுவற்றில் முதலில் அடிக்கும் மரத்தக்கை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அகராதியைப் புரட்டினால் அக்கு என்பதற்கு அப்படி ஒரு அர்த்தம் தரப்பட்டு இருக்கவில்லை. இணையத்தில் மேய்கையில் அக்கு அக்காகப் பிரிப்பது என்பதால் அக்கு என்றால் பாகம் என்று சிலர் விளக்கம் தந்திருந்தனர். ஆனால் அகராதியில் அது போன்ற பொருளும் தந்திருக்கப்படவில்லை.

அக்கு [ akku ] , s. little shells, cowries, பலகறை; 2. beads of conch shells, சங்குமணி; 3. beads of seeds of the elœocarpus worn by religious mendicants, உருத்திராக்ஷம்; 4. eye, கண்; 5. bone, எலும்பு.

இவைதான் அக்கு என்பதற்கு அகராதி தரும் விளக்கங்கள். இதில் அக்கு என்றால் எலும்பு என்பது ஒரு பொருள் உண்டாகும் அடிப்படை கட்டமைப்பு என்பதாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஒரு பொருளின் பாகங்கள் என்பதை விட, ஒரு பொருளின் கட்டமைப்புக்கான (structure / frame) பாகங்களாக இருப்பதை அக்கு என்று சொல்வோமானால் அது எலும்புக்கு ஈடாக வருகிறது. ஆகையால் இந்த இடத்தில் அக்கு என்பதற்கு எலும்புதான் சரியான பொருளாக வருகிறது. ஆனால் அப்படி எடுத்துக் கொண்டோமானால் ஆணி என்ற சொல் வருவதற்கான காரணம் சரியாகப் புரியவில்லை. எல்லாப் பொருட்களுமே ஆணி வைத்துதான் கோர்க்கப்பட்டு இருக்கும் என்பது ஒரு தவறான முன்முடிவாகவே எனக்குத் தோன்றியது. எனவே ஆணி என்ற சொல்லுக்கு வேறு என்ன விளக்கங்கள் இருக்கின்றன எனப் பார்க்க அகராதியை நாடினேன்.

ஆணி [ āṇi ] {*}, s. a nail; 2. piece of gold used as a standard for testing other gold. 3. a style எழுத்தாணி; 4. core of an ulcer; 5. excellence, மேன்மை; 6. support, foundation, ஆதாரம்; 7. wish, desire, விருப்பம்.

இதுதான் ஆணிக்கு அகராதியில் இருக்கும் விளக்கங்கள். அக்கு என்பதற்கு ருத்திராட்சம் எனப் பார்த்து இருந்ததால் ஒரு வேளை அது கோர்க்கப்பட்டு இருக்கும் தங்கத்தை சோதிக்க ஆணி என்ற சொல் வந்திருக்குமோ என்றும் கூட நினைத்தேன். ஆனால் அதுவும் சரியான பொருளைத் தராத எண்ணமே வந்ததால் மேலும் கொஞ்சம் தேடினேன்.

இதற்கான விடை நாலாயிரத்திவ்யப்பிரபந்தத்தில் கிடைத்தது. குறிப்பாக இந்தப் பாடலைப் பாருங்கள்.

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன்புலச் சேவை யதக்கி

கயிற்றும்அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி

எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்

பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே.

இந்தப் பாடலின் இரண்டாம் வரியில் கயிற்றும் அக்காணி கழித்து அப்படின்னு பாடி இருக்காரு. இதற்கான உரையில் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார், கயிறு- நரம்பு; அக்கு- எலும்பு, ஆணி- சரீரத்துக்குப் பெயர். ஆணி கழித்தல்- சரீரத்தில் தசையை ஒழித்தல். எலும்பில் இருந்து மொத்தமாக தசைகளை நீக்கும் ஆற்றல் பெற்றவனாய் ஆண்டவனைச் சொல்கிறார். அதாவது ஆதாரம் என்ற பொருட்படும் விதமாக ஆணி என்றால் தசை, எலும்புகளை ஒரு அமைப்பில் நிறுத்தச் செய்யவும் அவற்றை இயக்கவும் தேவைப்படும் தசைகள் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் இதை நேரடியாக அணுகாமல் மறைபொருளாகப் பார்த்தோமானால், இங்கு ஆணி என்பது விருப்பத்தைக் குறிக்கும் என்று உணரலாம். அதாவது ஒருவனிடம் இருந்து நரம்பு, எலும்பு மட்டுமில்லாமல் அவன் ஆசையையும் நீக்கி எனப் பாடலின் பொருளாகச் சொல்லலாம். கயிறு என்றால் நரம்பு. எக்கு என்றால் எலும்பு என்றும் ஆணி என்றால் விருப்பம் என்றும் பொருள் இருப்பதை முன்னமே பார்த்தோம். எப்படி ஒருவனை பகுதி பகுதியாய் பிரித்து எடுப்பது என்று முடிவானால் கையை வெட்டலாம், காலை வெட்டலாம். ஆனால் அவனுள் இருக்கும் ஆசையை எடுப்பது என்பது கிட்டத்தட்ட முடியாத ஒன்று. பற்றற்ற நிலையை அடைவது என்பது எல்லாருக்கும் வாய்ப்பது இல்லை. எனவே ஒரு மனிதனை பரிபூரணமாய் பிரிப்பது என்றால் அவனுள் இருக்கும் ஆசையை வரை தனியாகப் பிரித்து எடுப்பது என்று பொருளாகிறது.

எனவே அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிப்பது என்றால் பரிபூரணமாகப் பிரித்துப் பார்ப்பது என்பது தெளிவாகிறது. இந்தப் பழமொழியில் அக்கு என்றால் எலும்பு என்பதையும் ஆணி என்றால் நேரடியாக தசை என்றும் மறைபொருளாக விருப்பம் என்றிருப்பதையும் இனி நாம் நினைவில் கொள்வோம்.

(தமிழ் பேப்பரில் 04-12-2010 அன்று வெளி வந்தது)

தமிழ் பேப்பரில் வரும் இலக்கணத் தொடரைப் படிக்கிறீர்களா?



Wednesday, November 17, 2010

ஞாயிறு ஒளி மழையில்...


"இன்று 60 டிகிரி போகப் போகிறதாம்" என்ற ஒற்றை வரி அறிவிப்பிலேயே இந்த ஞாயிறு புட்பால் பார்ப்பது நடக்காத காரியம் என்றானது. நவம்பர் மாதத்தில் இப்படி ஒரு நாள் கிடைப்பது அபூர்வம் என்பதால் வெளியே சென்றாக வேண்டும் என்பது முடிவானாலும், எங்கு செல்லலாம் என்று முடிவு செய்ய முடியாத காரணத்தினால் குழந்தைகளை அள்ளிக் காரில் போட்டுக் கொண்டு ஒரு நண்பனின் வீட்டிற்குச் சென்றோம். அங்கும் பேச்சு வார்த்தை தொடர்ந்ததில் அரை நாள் ஓடிவிட்டது. நாளை பள்ளி உண்டு எனவே இரவு அதிகம் தாமதம் ஆக முடியாது, நேரத்திற்கு குழந்தைகளை சாப்பிட வைக்க வேண்டும் என்று மேலும் பல கட்டுப்பாடுகள் வர, ஐம்பது மைல் தொலைவை தாண்டாமல் எதேனும் இடத்திற்குச் செல்லலாம் என முடிவாகியது.

அப்பொழுது...

மேலும் படிக்க தமிழோவியத்துக்கு வாங்க!

Tuesday, November 09, 2010

கமலோடு நான் - தீபாவளிக் கொண்டாட்டம்!

இந்த தீபாவளிக்கு நாங்க பராகபுரியில் ரொம்ப பிசியா இருந்தோம். அன்னிக்கு லீவு எல்லாம் கிடையாது என்பதால் ஒழுங்கு மரியாதையாக ஆபீசுக்குப் போனோம். வேலையைப் பார்த்தோம். ஆனால் கொண்டாட்டமோ கொண்டாட்டம் என்று அடுத்த வந்த சனி ஞாயிறு ரெண்டு நாளா கொண்டாடித் தள்ளிட்டோமுல்ல. அதை விடுங்க. சொல்ல வந்த விஷயமே வேற.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் ‘Koffee with Anu' என்ற நிகழ்ச்சியில் கமல் கலந்துக்கிட்டாராம். அப்போ கமலைப் பற்றிப் பேசிய முனைவர் கு.ஞானசம்பந்தன் சொன்னாராம் “வெண்பா எழுதுவது ரொம்பக் கஷ்டம். அதனாலதான் கம்பன் கூட ராமாயணத்தை விருத்தத்தில் எழுதினார். ஆனா கமல் நினைச்சா வெண்பா எழுதுவாரு”ன்னு. என்ன அநியாயம் ஐயா. நீங்க கமல் வெண்பா எழுதுவாருன்னு சொல்லுங்க. அதுக்கு ஏன் கம்பனை வம்புக்கு இழுக்கணும். வெண்பா கஷ்டம்ன்னா விருத்தம் மட்டும் சுலபமா என்ன? போகட்டும்.

வெண்பாவை விட்டு ஏன் கம்பர் விருத்தம் எழுதினார் என்பதற்கு பெனாத்தல் ட்விட்டரில் ஒரு காரணம் சொல்லி இருந்தார். பொதுவாக வெண்பா - செப்பல் ஓசை, அதாவது மெசேஜ் டோன். மேட்டரை டப்புன்னு சொல்லிட தோதான டோன். தசரதனுக்கு ராமர் மகனாகப் பிறந்தார்ன்னு சொல்ற மாதிரி.

ஆனா விருத்தம் அகவல் ஓசை, அதாவது அழைக்கிற ஓசை, ரிங் டோன். விதவிதமா அலங்காரம் பண்ணி, வாடா மாப்ளே, ராமர் கதை கேட்டுக்கன்னு சொல்லற மாதிரி. இதுதான் சரியான காரணம் மாதிரி இருக்கு.

கமலுக்கு வெண்பா எழுதச் சொல்லிக் குடுத்த ஈற்றடி “கல்லுஞ்சொல் லாதோ கதை”. எங்க வெண்பா வாத்தி ஜீவ்ஸ் மட்டும் இதைக் கேட்டா அவரு முதுகுலயே ஒரு சாத்து சாத்தி ஏன்யா அனாவசியா மகிழ்ச்சியா குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிற வார்த்தைங்க நடுவில் விவாகரத்து வாங்கித் தர. குடும்பத்தைக் கலைக்காம ஈற்றடி தர முடியாதான்னு கேட்டு இருப்பாரு. நல்லவேளை அவரு பார்க்கலை.

நான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கலை. ஆனால் ட்விட்டரில் பெனாத்தல் இது பத்திப் போட்டு இருந்தார். பார்த்தவுடன் சரி நாம இதுக்கு ஒரு வெண்பா எழுதலாமேன்னு முயற்சி செஞ்சேன்.

சொல்லையே கேட்டதால் சும்மாக் கிடந்தவொரு
தொல்லையும் தீர்ந்துதன் தோற்றமும் பெற்றதை
வில்லொடு வந்தவொரு வீரனின் கால்பட்ட
கல்லுஞ்சொல் லாதோ கதை
அப்போ வீட்டில் இருந்த நண்பர் படித்துவிட்டு “டேய் நீ எழுதும் கவிதை(!!) எனக்குப் புரியுதேடா. அது என்ன சொல்லையும் கேட்டு அதை மட்டும் சொல்லு” அப்படின்னார். என் வெண்பாவுக்கே நோட்ஸ் தேவைப்படுதா? அப்ப கமல் வெண்பாக்கு நோட்ஸ் போட்டா சாதா கோனார், ராஜக்கோனார் ஆயிருவார் போலன்னு நொந்து போய் கௌதம மகரிஷியின் சாபத்தினால் கல்லாய் கிடந்த தொல்லையானது தீர்ந்து எப்படி அகலிகை தன் தோற்றம் திரும்பக் கிடைக்கப் பெற்றாள் என்பதைத்தான் சொல்லி இருக்கிறேன் என்றேன்.

பெனாத்தலும் அவர் பங்குக்கு சமகால அரசியலைப் பற்றிப் பா ஒன்றைப் போட்டார். அரசியலே உன் பெயர்தான் பெனாத்தலோ! :)

ஆள்வோர் கொடுத்த அரசியல் தானங்கள்
நாள்போய் அறிகின்ற சூத்திரம் - ஆள்படை
அல்லும்பகலும் கீறி அயராது வெட்டியதால்
கல்லுஞ் சொல்லாதோ கதை
அடுத்து நம்ம வெண்பா வாத்தி ஜீவ்ஸைப் பிடித்தேன். வேலை இருக்கிறதப்பா என்றவர் வெண்பா என்றவுடன் விட முடியாமல் ஒரு குறட்பாவை கொடுத்தார். இரண்டு அடிகளில் எப்படி பெரிய விஷயங்களைக் கூட அருமையாக சொல்ல முடிகிறது என்பதற்கு நல்ல உதாரணம் இது.

வெல்லுஞ் செயலுடை வேந்தர்கள் மூப்பதைக்
கல்லுஞ்சொல் லாதோ கதை
இது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் வாஞ்சிநாதன் அவர்களும் தனி மடலில் இரண்டு வெண்பாக்களை அனுப்பி வைத்தார்.
அலைகடல் மோதும் அழகுமல்லை மேவுஞ்
சிலையின் நளினஞ் செதுக்கிய நேர்த்தியென்ன
தில்லானா ஆடும் திரைப்படத்தின் மேலாகக்
கல்லுஞ்சொல் லாதோ கதை

சிந்தையில் தேற்றமுடன் செந்தமிழ்நாட் டங்கொண்டோர்
நொந்திடார் யாப்பை நுகத்தடியாய் --- செந்தழலின்
மெல்லிய மேனிசெய சிற்பி முயன்றிடின்
கல்லுஞ்சொல் லாதோ கதை
இப்படி எல்லாம் வெண்பாக்கள் கிடைத்த உடனே இந்தப் பதிவைப் போட நினைத்தேன். ஆனால் கமல் இந்த ஈற்றடிக்கு எழுதிய வெண்பாக்கள் கிடைக்கவே இல்லை. அவை இல்லாது எப்படிப் போட என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று ஜெயஸ்ரீ அக்கா அது பற்றிய பதிவு போட்டு இருக்கிறார்கள்.

அதிலும் வெண்பாக்கள் முழுமையாக இல்லை என்றாலும் அது எப்படி இருக்கும் என்று ஒரு அளவிற்குத் தெரிகிறது. அவரின் பதிவில் இருந்தே

*மக…. கல்பட்டும் தேறினளாம் அவளக்காள்
அகலிகையும் கால்பட்டு மீண்டனளாம் – இகமிதிலே
அல்லலுறும் நவயுகத்து நாயகியர் அகமகிழக்
கல்லும்சொல் லாதோ கதை.

[*முதல் வார்த்தை இன்னதென்று விளங்கவில்லை. என் சிற்றறிவை வைத்துக்கொண்டு அனுமானிக்கவும் முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். தனிச்சொல் 'இகமிதிலே' பேராசிரியரால் பாராட்டப்பட்டது.]

ஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து
மூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்
சொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்
கல்லும்சொல் லாதோ கதை.

["ஆத்தமானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்.." என்ற திருவாசக அடியிலிருந்து தான் எடுத்தாண்டதாக கமல் கூறினார்.]

ம்ம்ம்.. நல்ல முயற்சி. வெண்பா அதிகம் தெரியாமல் ஆனால் ஓசைநயத்திலேயே சரியாக எழுதுபவர் என்று கமலை பேராசிரியர் அறிமுகப்படுத்தினார். அப்படிப்பட்ட கமல் கொஞ்சம் மோனையிலும் கவனம் செலுத்தியிருக்கலாமோ… (இப்ப ரொம்ப முக்கியம்!)

எத்தனை இடங்களில் பிரிக்கமுடியுமோ பிரித்துவிட்டேன்; அத்தனையும் மீறி இத்தனை இடங்களில் தளைதட்டிய ஒன்றை வெண்பா என்று பேராசிரியர் பாராட்டித் தள்ளினார். இவர்கள்தான் கமலின் வளர்ச்சிக்குப் பிரச்சினை.

இதற்கு மேல் நான் தனியாகச் சொல்ல ஒன்றும் இல்லை. வெண்பாவில் நாட்டம் உள்ளவர்கள் இந்த ஈற்றடிக்கு மேலும் சில வெண்பாக்களை எழுதலாமே!

வெண்பா எழுத ஆசை இருக்கிறது ஆனால் எப்படி என்று தெரியவில்லையே என்று சொல்லுபவர்கள் உடனடியாக இங்கு செல்லவும்! :)

Monday, October 25, 2010

ஈஸியா எழுதலாம் வெண்பா!

எப்பொழுது வெண்பா மீது என் கவனம் திரும்பியது என்று எனக்கு ஞாபகமே இல்லை. சத்தியமாக பள்ளிப் பருவத்தில் இல்லை. இணையத்தில் நுழைந்து மேயத் தொடங்கிய பொழுது ஆறாம்திணை என்ற தளத்தில் வாஞ்சிநாதன் போட்டு வந்த தமிழ்க் குறுக்கெழுத்து புதிர்களைக் கண்டேன். ஆங்கிலக் குறுக்கெழுத்துப் போட்டிகளில் ஆர்வம் இருந்ததால் இந்த தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்களிலும் ஆர்வம் வந்தது. அந்தத் தளத்தில் வெண்பாப் பற்றிய குறிப்புகளும் இருந்தன. படிக்கும் பொழுது ஒரு சூத்திரத்திற்குட்பட்டு வார்த்தைகளை போடும் விதம் ஒரு வகையில் ஒரு வார்த்தைப் புதிர் போலத்தான் இருந்தது.

பின் 2006-ல் வலைப்பூ ஆரம்பித்து நானும் தமிழ்ப் புதிர்கள் போடத் தொடங்கிய பொழுது நண்பர் ஜீவ்ஸுடன் சேர்ந்து வெண்பா சமைப்பதும் (ஆமாம், அப்படித்தான் சொல்ல வேண்டுமாம்) தொடங்கியது. உபிச பெனாத்தலும் நானும் பல இடங்களிலும் இந்த வெண்பா ஆட்டம் போட்டோம். அப்பொழுது பலரும் வெண்பா விதிகளைப் புரியும் படிச் சொல்லித் தந்தால் நாங்களும் ஆட்டத்திற்கு வருவோமே என்று பலரும் சொல்ல வெண்பா தளத்தில், என் வலைப்பதிவில், நாங்கள் நடத்தி வந்த விக்கி பசங்க வலைப்பதிவில் என பல இடங்களிலும் இது பற்றி எழுதினோம்.


தொடர்ந்து ட்விட்டரில் சேர்ந்த பின் வெண்பாவுடன் வெண்பாம்களும் போடத் தொடங்கினோம். இந்த வெண்பாம் விளையாட்டுக்குக் காரணகர்த்தா பாராதான். இங்கும் பலரும் வெண்பா விதிகள் பற்றிக் கேட்கத் தொடங்கினர். அதே சமயம் வழக்கம் போல நேர் நேர் தேமா என்று வெறும் விதிகளாகச் சொன்னால் எங்களுக்குப் புரியப் போவது இல்லை. எளிமையாக, எங்களால் புரிந்து கொள்ளக் கூடிய எடுத்துக்காட்டுகளுடன் தர வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் ஓர் எதிர்பார்ப்பு என்பது நன்றாகவே புரிந்தது.


இன்று எனக்கு ஒருவர் சொல்லித் தந்தால் எப்படிச் சொல்லித் தரவேண்டும் என நான் எதிர்பார்ப்பேனோ, அதைப் போல வெண்பா விதிகளை சொல்லிப் பார்க்கலாம் என்று முயன்றேன். எழுதியதை பாராவிடம் காண்பிக்க அவர் நன்றாக வந்திருக்கிறது. இதனை புத்தகமாகவே போட்டுவிடலாம் என்றார். மெருகேற்றிய வடிவம் இப்பொழுது வெளியிடப்பட்டு விட்ட்து.




வெண்பா என்றால் என்ன, அதை எழுதுவது எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கான ஒரு அறிமுகப் புத்தகம் இது. இதைப் படித்து ஒரு அளவு புரிதல் வந்த பின் மேலும் அறிந்து கொள்பவர்கள் வழமையான புத்தகங்களைத் தேடிச் செல்லலாம். முழுக்க முழுக்க நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே விதிமுறை விளக்கங்களையும், வெண்பா எடுத்துக்காட்டுகளையும் எழுதியுள்ளேன். மனதில் பதிய வேண்டும் என்பதற்காக சினிமாவையும் தாராளமாக சேர்த்து இருக்கிறேன். படித்து, உங்கள் கருத்தினை தெரிவிக்க வேண்டும்.


இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்: (044-42868126 / 0-9500045640) இணையத்தில் வாங்குவதற்கு இங்கு க்ளிக்கவும் அல்லது படத்தின் மேல் க்ளிக்கவும்.


பிகு: இதே போன்று தமிழ் இலக்கணம் பற்றி தமிழ் பேப்பரில் நான் எழுதும் தொடரையும் படித்துப் பாருங்கள்.

Wednesday, October 20, 2010

வே.உ.ப.உ.தொ.தொ!!

தமிழ் இலக்கண வகுப்பில் சொல்லித் தந்ததில் பலதும் மறந்து போயிட்டாலும் நினைவில் நிற்கும் இரண்டு பெயர்கள் - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களும் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகளும்தான். இப்படி முழ நீளத்துக்கு பெயர் இருக்கிறதுனாலவோ என்னவோ இதுங்க ரெண்டும் மட்டும் நல்லா ஞாபகம் இருக்கு.

பெயர் ஞாபகம் இருக்கிறது எல்லாம் சரிதான். ஆனா அப்படின்னா என்னன்னு கேட்கறீங்க இல்லையா! இந்த வேற்றுமை உருபுகள் பத்தி தமிழ் பேப்பரில் சொல்ல ஆரம்பிச்சு இருக்கேன்.

இங்க பாருங்க.