Showing posts with label chain. Show all posts
Showing posts with label chain. Show all posts

Tuesday, October 14, 2008

சினிமா! சினிமா! - தொடர் விளையாட்டு

மாயண்ணன் வந்தாக, மாப்ள மொக்கைச்சாமி வந்தாக அப்படின்னு அங்க இங்க சுத்திக்கிட்டு இருந்த சினிமா தொடர் விளையாட்டு நம்ம ஸ்ரீதர் அண்ணாச்சி புண்ணியத்தில நம்ம கிட்ட வந்திருக்கு. கிட்டத்தட்ட முழு நீளத் தேர்வு அளவு கேள்விகள். முக்கி முனகி முடிச்சுட்டேன். படிச்சுத் தொலைக்க வேண்டியது உங்க பொறுப்பு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
முதன் முதலில் என்ன படம் பார்த்தேன் என்பது எல்லாம் சத்தியமாக ஞாபகம் இல்லை. ஆனா சின்ன வயசில் அடிக்கடி சினிமா போய் இருக்கிறேன். வைராவி அண்ணா அப்படின்னு ஒரு டூரிங் டாக்கீஸ் இருக்கு (இருந்தது?). அதில் மீன் கொடி நாட்டிய தேவா அப்படி பாட்டு போட்ட உடனே வீட்டில் இருந்து ஓடினா நியூஸ் ரீல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி போயிடலாம். மணல், பெஞ்ச், இரும்பு சேர் என்று மூணு க்ளாஸ் உண்டு. அம்மா பெஞ்சுக்குக் காசு குடுத்தால் கூட தரை டிக்கெட் வாங்கிக்கிட்டு மீதி பைசாவில் முறுக்கு வாங்கி தின்பதுதான் நடக்கும். அங்க மண்ணைக் குவிச்சு உட்கார்ந்துக்கலாம். நாய் எல்லாம் வந்து உரசிக்கிட்டுப் போகும். சாயங்கால நேர காத்து சிலு சிலுன்னு அடிக்கும். எம்ஜியார் படங்கள்தான் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தமிழில் தசாவதாரம்தான் பார்த்தேன்னு நினைக்கிறேன். அது பத்திதான் இங்க ஏற்கனவே பேசியாச்சே!

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சன் டிவியில் போட்ட ஆயிரம் பொய் என்ற படம்தான் கடைசியில் முழுதாக உட்கார்ந்து பார்த்ததுன்னு நினைக்கிறேன். இல்லை அதற்குப் பின் பார்த்த மைக்கேல் மதன காமராஜனா? சரியா ஞாபகம் இல்லையே. சபாபதி, பெண் ரெண்டும் பதிவு செஞ்சு வெச்சு இருக்கேன். பார்க்கணும். நேரமே இல்லை.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்களே. நாம அப்படி எல்லாம் உணர்ச்சிபூர்வமா எல்லாம் படம் பார்க்கறதே இல்லை. தேவர் மகன், குணா ரெண்டும் பார்த்தப்போ கொஞ்சம் பிரமிப்பா இருந்தது. அது தாக்கமான்னு எல்லாம் சொல்லத் தெரியலையே. அதிலும் தேவர் மகன் படத்தில் நவீன கமல் மாறி பெரிய மீசை வெச்சுக்கிட்டு கிராமத்துக் கமலாக மாறி வரும் சீன் பார்த்தப்போ ரொம்ப பிரமிப்பா இருந்தது.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
இது என்ன தாக்கம் தாக்கம் அப்படின்னே கேள்வி கேட்கறீங்க? தமிழ் சினிமா எல்லாம் சும்மா ரெண்டு மணிநேர பொழுது போக்கிற்காக பார்க்கும் ஆசாமிங்க நான். சீரியஸ் படமெல்லாம் பார்க்கக்கூட மாட்டேன். இந்த மாதிரி தாக்கம் எல்லாம் இல்லைன்னுதான் நினைக்கிறேன்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
சினிமா பார்த்துட்டு இவ்வளவு தாக்கம் வருமா? தாக்கிய சினிமா, தாக்கிய அரசியல், தாக்கிய தொழில்நுட்பம் அப்படின்னு தாக்கு தாக்குன்னு தாக்கறீங்களே! இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்டா நான் எல்லாம் என்னத்த சொல்ல? சின்ன வயசில் ஜெகன்மோகினி சினிமா பார்த்துட்டு ஜெயமாலினி அடுப்புக்குள்ள காலை விட்ட காட்சியை பத்தி ரொம்ப நாள் பேசிக்கிட்டது உண்டு. இதைச் சொன்னா இந்த கேள்விக்கு விடையா சேர்த்துப்பீங்களா?

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா
நம்ம வாசிப்பு எல்லாம் லைட்ஸ் ஆன் சுனில் ரேஞ்சுக்குதாங்க. சமீப காலத்தில் சினிமாப் பொன்னையா எழுதறது எல்லாம் கூடப் படிக்கிறது இல்லைன்னாப் பார்த்துக்குங்களேன். :)

7.தமிழ்ச்சினிமா இசை?
இசை கேட்பது என்பது எப்பவுமே உண்டு. முன்னமே சொன்ன மாதிரி
தமிழ் சினிமா பாடல்கள், ஆங்கில பாடல்கள் என பல புறம் மேய்ந்து விட்டு இப்பொழுது கர்நாடக சங்கீதம் கேட்டுப் பரவசப்படும் ஒரு காலம். இப்போ வர சினிமாப் பாடல்களில் வெகு சிலவற்றைத் தவிர மற்றவை எல்லாம் வெறும் இரைச்சலாகவே இருப்பதால் அந்தப் பக்கமே போவதில்லை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தமிழ், ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் படம் பார்த்தது மிகவும் குறைவுதான். அதுவும் பெரும்பாலும் சிரிப்பு வர வைக்கக்கூடிய படங்கள்தான் பார்ப்பது. ஆங்கிலத்தில் வெளி வரும் வரைசித்திரப் படங்களைப் பார்த்து வியந்து போவது என்பது ஒவ்வொரு முறையும் நிகழும் ஒன்று. ஸ்ரீதர் கிட்ட சொன்ன ப்ரெஞ்ச் படமெல்லாம் நான் பார்த்த ரெண்டு மூணு படங்களில் ஒன்று. அதுவும் நம்மைப் பற்றி தெரிந்த நண்பர்கள் கொண்டு வந்து கொடுத்துப் பார் எனச் சொன்னதுதான். விமானப் பயணங்களில் பொழுது போகாமல் சில வேற்று மொழிப் படங்களைக் கண்டது உண்டு.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
கல்லூரி காலத்தில் முத்து திரைப்படம் எடுத்த இடத்தில் ரஜினியோடு படம் எடுத்துக்கொண்டதுதான் சினிமா உலகுடனான நேரடி தொடர்பு. என்ன செஞ்சேனா? ரஜினி பக்கத்தில் நின்னேன். அவரு தோளில் கையைப் போட்டுக்கிட்டாரு. படம் எடுத்துக்கிட்டோம். பிடிச்சுதான்னா என்ன? பிடிச்சுதுதான். :) மீண்டுமா? வாய்ப்பு வந்தா செஞ்சுட்டாப் போச்சு. என்னோட சேர்ந்து ரஜினி படம் எடுத்துக்கிட்டதால தமிழ் சினிமா மேம்படுமான்னு கேட்டா என்ன பதில் சொல்ல? ;-)

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்த மாதிரி பார்முலாப் படங்கள் என்ற வட்டத்தில் இருந்து வெளி வரும் என்றே நினைக்கிறேன். ஆனால் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம். ஒரே படத்தில் காமெடி சண்டை பாட்டு என்றெல்லாம் இல்லாமல் அந்தந்த வகையில் இருக்கும் படங்கள் வரத் தொடங்கினால் நன்றாக இருக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இப்பக்கூட நான் ரொம்ப எல்லாம் படிக்கிறது இல்லை. அதனால ரொம்ப பிரச்சனை இருக்காதுன்னுதான் நினைக்கிறேன். ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இது நடந்தா சினிமா மேல இருக்கும் அப்ஸெஷன் குறையலாம் என நினைக்கிறேன். நடக்குமா?

இன்னும் ஐந்து பேரை சேர்க்கணுமாமே. நமக்கு தெரிஞ்சவங்க எல்லாரையும் சேர்த்தாச்சு போல இருக்கே. இன்னும் யாரைச் சேர்க்க?

1) இந்த வார நட்சத்திரம் இளா
2)என்றென்றும் நட்சத்திரம் வல்லியம்மா
3) ஆன்மீக சூப்பர்ஸ்டார் குமரன்
4) ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணாமல் இருக்கும் சின்னவன்
5) பிட் போட்டிக்கு மட்டுமே பதிவு போடும் எங்கள் கைப்புள்ளை
நீங்க எல்லாம் நான் ஸ்ரீதரைத் திட்டின மாதிரி திட்டாம நல்லவங்களா எழுதி இந்தத் தொடர் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துங்கப்பா!

டிஸ்கி: இந்த மாதத்துக் குறுக்கெழுத்துப் புதிர் இன்னும் இரண்டு நாட்களில் வெளி வரும்!

Thursday, June 19, 2008

பதிமூன்றாம் ஆழ்வாருக்குப் பரபரப்புக் கேள்விகள்!!

இந்த மாதிரி தொடர் விளையாட்டுகள் தமிழ்மணத்தில் நிறைய பார்த்திருக்கிறேன். 'ஏம் வே! உமக்கென்ன கோட்டியா புடிச்சிருக்கு?' என்று கேட்டா சிலருக்கு கோபம் வரலாம். ஆனால் 'ஐயா, weird தொடர்விளையாட்டில் உங்களையும் இணைத்திருக்கிறேன்' அப்படின்னு பதிவு போட்டா உடனே பதிவு போட நிறைய பேர் தயாரா இருக்காங்க. இந்த தொடர் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பது ஒரு நல்ல அனுபவம்.

இந்தியர்கள் கடைக்கு போய் கத்திரிக்காய் வாங்குவதால்தான் கத்திரிக்காய் விலையேறுகிறது என்று கண்டுபிடித்திருக்கும் கொத்தனார் -

இவர் ஒரு மூத்த பதிவர். நாலு விசயமும் தெரிஞ்ச நல்ல மனசுக்காரர். "நாலு பேர் பாக்குற மாதிரி நல்லா இரு"ன்னு சொல்லாம இப்படி நாலு பேரு பாக்குற மாதிரி கேள்வி கேக்குராரேன்னு யோசனையாத்தான் இருக்கு. இதில சோடி போட்டுகிட்டு வேற திரியறாங்கங்க. ஒருத்தர் கேள்வி கேப்பாராம். இன்னொருத்தர் பஞ்ச் கொடுப்பாராம்.

இதுகெல்லாம் அசந்துருவோமா. கைப்புள்ள! எடுறா உலாவியை! விடுறா மெயில்லை!

1. பதிவுலகில் தொடர்ந்து இயங்கும் நீங்க, பல பதிவர்களை விட பின்னூட்டங்களில் பட்டையைக் கிளப்பும் நீங்க ஏன் இதுவரை பதிவு தொடங்கலை?

பதிவு எழுத தேவை கொஞ்சம் எழுத்து திறமை, வாசகர் வட்டம் பற்றிய தெளிவு, கொஞ்சம் 'தடித்த தோல்' மற்றும் நிறைய்ய்ய்ய நேரம். நம்ம வேலை நேரம் பத்தி சொல்லவே முடியாது. அதான் இப்படியே இருந்திட்டு இருக்கேன். சோம்பேறியா :-)

2. பதிவுகள் எழுதும் நாங்களெல்லாம் வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்வது போல நீங்கள் படித்துப் பின்னூட்டமிடுவதற்காகவே வாங்கிக் கட்டிக் கொள்வது உண்டா?

இது வரைக்கும் நான் எதுவும் வாங்கிக் கட்டிக்கலை. பொதுவா அவங்கதான் 'வாங்கிக் கட்டிப்பாங்க'. நாம வெறும் டவுசர் பார்ட்டிதானே.

3. அடிப்படையில் ரஜினி ரசிகராக அறியப்படும் நீங்கள் தசாவதாரத்திற்கு கமலே நினைக்காத கோணங்களில் பின்னூட்டங்கள் போட்டு ஆதரவு திரட்டுவதின் பின் இருக்கும் நுண்ணரசியல் என்ன? (நான் ரஜினி ரசிகன் என்று யார் சொன்னது போன்ற மொக்கை பதில்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது)

புதிய செய்தி அறியத் தந்தமைக்கு நன்றி :-). ரஜினி ராம்கி சண்டைக்கு வந்திடப் போறார் அப்புறம்.

பொதுவாக நாம் ஒரு படைப்பை அணுகும்போது பல முன்முடிவுகளோடே அணுகுகிறோம். முதல் பார்வையில் மோனாலிசா ஒரு இத்தாலிய சீமாட்டியின் போர்டிரெய்ட் படம். இது மிகச் சுலபமான புரிதல். "இதில் என்ன பெருமை இருக்கிறது? ரவி வர்மா இதைவிட பிரமாதமா வரைவார்" என்றோ, "போர்டிரய்ட் எல்லாம் எலிமெண்டரி ஆர்ட்" என்றோ சொல்லிவிட்டு வந்து விடலாம். ஒரு மாட்ர்ன் ஆர்ட் தலைகீழா மாட்டினாலும் யாரும் கண்டுபிடிக்கமாட்டாங்க அப்படின்னு சுலபமா ஜோக் அடிக்கலாம்.

Dan Brown மோனாலிசா பத்தி நிறைய எழுதறார். பல புதிய கோணங்கள் கிடைக்கின்றன.

கமல்ஹாசன் பல திரைக்கதைகள் எழுதியிருந்தாலும், அதில் பின் வரும் மூன்றும் ஒரு சில புள்ளிகளில் ஒன்று சேர்கின்றன. ஹேராம், அன்பே சிவம் இப்பொழுது தசாவதாரம். பாத்திரங்களின் பெயர்களுக்கு அவர் தரும் முக்கியத்துவம், மனிதனின் அகப்பயணம், சித்தாந்தங்கள் மற்றும் மொழியின் ஊடே நடக்கும் வெளிப்பயணங்கள், மனிதனின் இருப்பு சார்ந்த அலசல்கள், இறை நம்பிக்கை பற்றிய கேள்விகள் போன்ற பல விசயங்களை ஒரு திரையில் தீட்டுகிறார். அந்த பெரிய திரை நிறைய பேர் கண்ணுக்கு தெரிவதில்லை.

அட நமக்கு முதலில் புரியவில்லை. ஆனால் புரிந்து கொள்ள முயற்சிக்கலாமே என்றுதான் நினைத்தேன். எழுதினேன் :-)

4. காலப் பயணம் செய்ய முடிந்து உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு சம்பவத்தை மாற்ற முடியும் என்ற சக்தி கிடைத்தால் எதனை மாற்றுவீர்கள்? எவ்வாறு மாற்றுவீர்கள்?

இதுவரை அப்படி ஒரு சம்பவமும் நினைத்ததில்லை. ஆனால் வாழ்க்கையை ரிவர்ஸில் எப்படி இருக்கும் என்று எங்கோ படித்த ஞாபகம்.

தொண்டு கிழமாக இருந்துவிட்டு, மீண்டும் உடலில் வலு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து, 'தொல்லை கொடுக்கும் பெருசு'ல் இருந்து பிள்ளைகளுக்கு சூப்பர் மேனான அப்பாவாக மாறி, சப்பென்று இருக்கும் இல்லற வாழ்வில் மீண்டும் காதலை சந்தித்து, மீண்டும் கல்லூரி வாழ்க்கை வாழ்ந்து, பள்ளிப் பாடங்களை இப்பொழுதாவது புரிந்து படித்து, துன்பம் இல்லாத மழலைப் பருவத்தில் தவழ்ந்து, அந்த ஒரு நொடி சம்போகத்தில் ஒரு உயிரணுவாக மாறிப் பார்க்கலாம்.

நாம யாரை கேள்வி கேட்கிறது? அப்படியே கேட்டாலும் நம்மளை மதிச்சு யாரும் பதில் போடுவாங்களான்னு தெரியாது. 'ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்' அப்படின்னு வடிவேலுக்கு அப்புறம் இணையத்தில் இவரைத்தான் எல்லாரும் சொல்கிறார்கள்.

எங்கள் அருமை அண்ணன், சிலம்புச் செல்வன், கண்ணகியின் கோவலன், மாதவிப் பந்தலான், பதின்மூன்றாம் ஆழ்வார், இணைய தளபதி இப்படியெல்லாம் பில்டப் கொடுக்காமலே அவரைப் பத்தி நிறைய பேருக்கு தெரியும். இப்ப கேள்விகள் (இது வேறயா):

1. நான் வறட்டு ஆன்மீக பற்றாளன் இல்லை. ஆனால் உங்கள் எழுத்தில் இருக்கும் ஆன்மீகம் பல புதிய புரிதல்களை தருகின்றன. நீங்கள் இறை மறுப்பாளராக இருந்து பின்னர் மாற்றம் கண்டதாக அறிகின்றேன். மாற்றங்கள் வாழ்வில் இன்றியமையாதது. ஆனால் ஆன்மீகத் தேடலைத் தாண்டி நீங்கள் ஆன்மீகம் வளர்க்க நிறைய சிரத்தை எடுக்கிறீர்கள். எதனால் இந்த மாற்றம்?

2. இத்தனைப் பதிவுகள், பின்னூட்ட மட்டுறுத்தல், தொடர்ந்து விவாதம் என்று எப்படி நேரப் பங்கீடு செய்கிறீர்கள்?

3. இந்த மாதிரி ஒரு தொடர் விளையாட்டில் உங்களை மூன்று பேர் ஒரே சமயத்தில் அழைக்கிறார்கள். ஒரு சங்கிலியில் தான் நீங்கள் பங்கு பெற முடியும் என்று விதி இருந்தால் (அட இருக்குன்னு சொல்றேன்!) யாருடைய சங்கிலியை தொடர வைப்பீர்கள்? ஏன்?

உங்களை தொடரச் சொல்லும் அந்த மூன்று பதிவர்கள்

அ) கோ. இராகவன்

ஆ) கோவி கண்ணன்

இ) வெட்டிப் பையல் பாலாஜி

4. உங்கள் நினைவில் ஆழப் பதிந்து போன சிறுவயது கதை? யார் அந்த கதையை உங்களுக்கு சொன்னார்கள்?

டிஸ்கி: பதிவுக் கயமைத்தனம் செய்வதற்காகவே நான் பதிவெழுதா ஸ்ரீதரைக் கேள்வி கேட்டதாகப் பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டு ஸ்ரீதரின் பதில்களையும் கேள்விகளையும் இங்கு பதிவாய் அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

Tuesday, June 17, 2008

வித விதமாய் நுண்ணரசியல் (பெனாத்தலுக்கு நன்றி!)

பதிவு போட விஷயமே இல்லைன்னு சொல்லறவங்களைக் கட்டி வெச்சு உதைக்கணும். நேரம் இல்லை, ஆணி அதிகம் அப்படின்னு சொன்னா விஷயம் வேற. ஆனா இந்த பதிவுலகத்தில் எத்தனையோ எழுதலாமே. அன்பே சிவம், சிவாஜி, தசாவதாரம் என அப்பப்போ எதாவது திரைப்பட சீசன் வருது. அப்புறமா கேள்வி பதில் என்ற பெயரில் நமக்கு நாமே விளையாடிக்கலாம். அதுவும் இல்லையா, தொடர் விளையாட்டுக்கள் எத்தனையோ வருது - சிவாஜி வாயில் ஜிலேபி, அதைத் தொடர்ந்து இந்த கேள்விக்கென்ன பதில் விளையாட்டு. அப்புறம் என்ன விஷயப் பஞ்சம் அதான் எனக்குப் புரியவே இல்லை. நிற்க.

மேலே சொன்ன கேள்விக்கென்ன பதில் விளையாட்டில் நம்மளை பாத்து நாலு கேள்வி கேட்டுப்புட்டாரு நம்ம பெனாத்தல். அதுல கருப்பு வெள்ளையில் எழுது, கலரில் எழுதுன்னு ஆயிரம் நுண்ணரசியல். இருந்தாலும் அவர் ஆசைப்படி என் பதில்களோட பஞ்ச் அண்ணாவின் கருத்துக்களையும் வாங்கிப் போட்டாச்சு.

1. எழுத்தில் மட்டும் சந்திக்கும் பதிவர்களை நேரிலும் சந்திக்க ஆசைப்படுவீர்களா? யார் யார் உங்கள் லிஸ்டில்?

பதிவினால் பெற்ற பயன் யாதெனின் அப்படின்னு முன்னமே சொல்லி இருக்கேன் - "எந்த ஊர் போனாலும் பார்ப்பதற்கு நண்பர்கள். அதில் சிலர் பதிவுகளையும் தாண்டி நல்ல நண்பர்களாய் இருப்பது." அப்படிச் சொல்லி இருக்கும் போது பார்க்காம இருப்பேனா? லிஸ்ட் எல்லாம் இல்லை. எந்த ஊர் போனாலும் அங்க யார் இருக்காங்கன்னு பார்த்து முடிஞ்சா ஒரு சந்திப்பு போட்டுடறதுதான். முக்கியமா அதை வெச்சு நாலு பதிவு போட முடியுமே. அதுக்காகவாவது பார்க்க வேண்டாமா?

ஒரே ஒரு பிரச்சனை. அவங்க நம்மளைப் பார்க்க பிடிக்காம ஊரை விட்டே போயிடறாங்க நம்ம குமரன் மாதிரி . இல்லை நம்ம ஸ்ரீதர் வெங்கட் மாதிரி கடைக்குப் போனேன். கத்திரிக்காய் வாங்கினேன். அப்படின்னு தொலைபேசிக்கிட்டே அடுத்த முறை பார்க்கலாம் அப்படின்னு சொல்லிடறாங்க.

என்ன, நம்மை யாரு என்னான்னு தெரியாம, எதிர்வினைகளை முன்வைப்பதால் நம்மைப் பற்றிய முன்முடிவுகளுடன் காரசாரமாய் பதிவு / பின்னூட்டம் போட்டு காய்ச்சி எடுக்கிற பதிவர்கள் நேரில் பார்த்தா என்ன சொல்லுவாங்க. ஒரு முறை நேரில் பார்த்துப் பழகிய (பாப்பையா சொல்லும் பழகல் எல்லாம் இல்லை) பின் அந்த முன்முடிவுகளில் மாற்றம் இருக்குமான்னு தெரிஞ்சுக்க ஆசை.

பஞ்ச் அண்ணா: பெனாத்தலா கேள்வி கேட்டாரு? அந்த ஆளுக்கு கேள்வி கேக்கத் தெரியலையா இல்ல உம்மகிட்ட பயமான்னு தெரியல! இப்படி இருந்திருக்கணும் கேள்வி: எழுத்தில் மட்டும் சந்திக்கும் பதிவர்கள் உங்களை நேரில் பயமில்லாமல் சந்திப்பார்களா? இல்லை சாக்கு போக்கு சொல்லி ஓடிவிடுவார்களா?

2. திருநெல்வேலிலே ஆரம்பிச்சு அமேரிக்கா வரைக்கும் பல ஊர் பாத்திருக்கீங்க.. நேர்மையாச் சொல்லுங்க.. எந்த ஊர்லே சைட்டடிக்கும்போது தங்கமணிகிட்டே மாட்டினீங்க? அதன் பின் விளைவுகள் என்ன?


வைப்பாலஜியில் முனைவரான நீங்க என் கிட்ட இப்படி ஒரு கேள்வி கேட்டது சிரிப்பாத்தான் இருக்கு. முதலில் மாட்டாமல் இருக்க முடியாது என்ற உண்மையை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய மனப்பக்குவம் வர வேண்டும். சரி. பார்த்தாச்சு, மாட்டியாச்சு. அடுத்தது என்ன செய்ய. முதலில் யாரைப் பார்த்தோமோ அவங்களை மட்டம் தட்டி விட வேண்டும். என்ன இது நீல சுரிதாருக்குப் பச்சை துப்பட்டா? அல்லது காதில் என்ன அது தோடா இல்லை கத்திச் சண்டைக்கு பயன்படும் கேடயமா? இப்படி எதாவது. இல்லையா, அந்த சேலையைப் பாரு. நீ வேண்டாம் என்று வீட்டில் வேலை செய்பவருக்குத் தந்தது மாதிரியே இருக்கே. இந்த மாதிரி வேற வியாபாரம் நடக்குதா? நீ அன்னிக்குப் போட்ட டிசைன் இன்னிக்கு இவங்க போட்டு இருக்காங்களே அப்படின்னு சொல்லணும். (நான் வந்து இன்னிக்கு இருக்கும் பேஷன் படி உடுத்தறது இல்லையா? என்ற கேள்வி வரலாம்).

எதுவும் வொர்க் அவுட் ஆகலைன்னா உனக்கு மனக்கஷ்டமா இருந்தா இனிமே பார்க்கலைன்னு சொல்லணும். அடுத்த முறை சினிமா போகும் போது படம் பூராவும் கண்ணை மூடிக்கிட்டு இருக்கணும். அதை அவங்களுக்குத் தெரியற மாதிரி செய்யணும். என்னன்னு கேள்வி வரும். கொத்ஸ் (இங்க உங்க பேரைச் சொல்லணும்) வாக்குக் குடுத்தா தவற மாட்டான். திரையில் வரும் பெண்களை எக்காரணம் கொண்டும் பார்க்க மாட்டேன் அப்படின்னு வசனம் பேசணும். நல்ல படமான சிரிச்சுக்கிட்டே பார்த்துத் தொலை அப்படின்னு வரும் இல்லை படம் குருவி ரேஞ்சுக்கு இருந்தா அந்தக் கடுப்பெல்லாம் சேர்ந்து ஒரு மிதி விட்டு இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. குடுத்த காசை வீணாக்காம நான் பெற்ற துன்பம் பெருக நீயும் என ஒரு பதில் வரும். ஆக மட்டும் பார்க்கலாம்.

தங்கமணியையும் பையனையும் கூட்டிக்கிட்டுக் கடைக்குப் போகும் போது எல்லாம் அவன் எதையாவது எடுக்க முனைந்தா 'Son, there are some rules in life. When you are in a public place, there are things you can see, but you can't touch!" அப்படின்னு சொல்லிக் குடுத்துடறது!

பஞ்ச் அண்ணா: நல்லாத்தான்யா ப்ளான் எல்லாம் பண்றீங்க.. ஆனா பேக்பயர் ஆச்சுன்னா வாழ்நாள் ஆப்பு ப்ரீ! இதே சிச்சுவேஷன்லே "அட.. ரொம்ப நல்லவன் தான்யா நீ.. எனக்காகத்தான் எல்லாத்தையும் சைட் அடிச்சே சரி.. அப்படித்தான் போற வற பொம்பளைங்க என்ன தோடு போட்டிருக்காங்க, எது லேடஸ்ட் டிசைன், துப்பட்டா போட்டிருக்காங்களா இல்லியான்னு டீட்டெயிலா நோட் பண்ணுவியா? என்னோட பேட்டைக்கு வா" ன்னு சொன்னா கொத்தனார் கொத்துக்கறியனார்!

3. நுண்ணரசியல்: சாதா பிராண்ட், பி ந பிராண்ட், இன்னும் வேற எதாச்சும் இருந்தா அதைப்பத்தியும் படம் வரைந்து பாகங்களைக் குறியுங்கள் பார்க்கலாம்?

அரசியல் என்றால் என்ன என்பது நமக்கெல்லாம் நல்லாவே தெரியும். திமுக, அதிமுக என பெரிய அளவில் செய்யும் அரசியல் நமக்கெல்லாம் ஓரளவு தெரியும். அலுவலகத்தில் ஒருத்தனுக்குப் பதவி உயர்வு கிடைத்தால் அதற்கு நாம் கற்பிக்கும் காரணமோ அல்லது வீட்டில் நம் மைத்துனர் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு நாம் கற்பிக்கும் காரணமோ நாம் நம்மளவில் செய்யும் அரசியல். இதெல்லாம் வெளிப்படையா நடப்பது.

இவ்வளவு வெளிப்படையா இல்லாம கொஞ்சம் நுணுக்கமா கொஞ்சம் யோசிச்சால் மட்டுமே புரிபடற மாதிரி செய்யும் அரசியல் நுண்ணரசியல். இன்றைக்குப் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரும் பாடு படுவது திமுக அரசு அப்படின்னு ஒரு அறிக்கை வெளிவந்தா, அதை விமர்சனம் பண்ணி ஒரு பதிவு போடும் பொழுது, "அதுக்கு தமிழகத்தில் இன்று மதுரைதான் ஆட்சி!!" அப்படின்னு தலைப்பு வெச்சீங்கன்னா அது பல அடுக்குகளில் வேறு வேறு விதமான பொருள் தரும். பெண்கள்தான் சக்திவாய்ந்தவர்கள் என்ற நேரடி விளக்கம், அதற்கு ஒரு படி கீழே போனால் இன்று அமைச்சகத்தில் நடப்பதை விட கலைஞரின் வீடுகளில்தான் பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று ஒரு கோணம். அதையும் தாண்டி அழகிரி கை ஓங்கி இருப்பதை சொல்லும் வேறு ஒரு கோணம். இப்படி பல விதமான கோணங்கள் பல விதமான முடிவுகளைத் தருவது என்பது நுண்ணரசியல். ஆனா இது எல்லாம் சாதா நுண்ணரசியல்.

அடுத்து வருவது கலர்கண்ணாடி நுண்ணரசியல். இதில் பல வலையுலக ஜாம்பவான்கள் எல்லாம் இருக்காங்க. ஒரு விளையாட்டு இருக்கும். ஒரு அட்டையின் ஒரு பகுதியில் கேள்வி இருக்கும். அதன் விடை அந்த அட்டையின் பின்புறத்தில் இருக்கும். ஆனா அது தெளிவாகத் தெரியாது. அந்த விளையாட்டோட ஒரு சிகப்புக் கண்ணாடி தருவாங்க. அதைப் போட்டுக்கிட்டுப் பார்த்தா விடை பளிச் எனத் தெரியும்.

அந்த மாதிரி இந்த க.க.நுண்ணரசியலில், முதலில் நீங்க முன்முடிவுகள் பலவற்றோட இருக்கணும். எந்த பதிவையும், எந்த நிகழ்வையும் இந்த முன் முடிவோடதான் அணுகணும். அப்படிச் செய்யும் போது, இந்த கலர் கண்ணாடியைப் போடாதவங்களுக்குத், அதாங்க அந்த முன்முடிவுகள் இல்லாதவங்களுத், தெரியாத பல விஷயங்கள் இவங்களுக்குத் தெரியும்.

உண்மையாச் சொல்லப்போனா இதுக்கும் வேண்டாத மருமக கைபட்டா குத்தம் -கால்பட்டா குத்தத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. பிடிச்ச ஆளு காளை மாட்டுக்கு நாலு கொம்பு ன்னு சொன்னாக் கூட "100% உடன்படுகிறேன்" என்பதும், பிடிக்காத ஆளு ஜூலை மாசத்துக்கு 31 நாள்னாக்கூட சண்டை பிடிக்கறதும் நடக்கிறதைத்தான் பார்க்கறீங்களே.

மூணாவது பி.ந.நுண்ணரசியல். இது ஒரு பெரிய வாசாப்பு. இந்த நுண்ணரசியல் எழுதறவனுக்கும் ஒண்ணும் புரியாது. படிக்கிறவனுக்கும் ஒண்ணும் புரியாது. ஆனா எழுதறவன் தான் என்னமோ சாக்ரடீஸ் மாதிரி நினைப்பில் எழுதுவான். படிக்கிறவன் புரிஞ்சா மாதிரி பட்டையைக் கிளப்பிட்டீங்க வாத்தியாரே அப்படின்னு பின்னூட்டம் போடுவான். அதுவும் சில சமயங்களில் அவனுக்கும் அறிவு ஜீவி வியாதி தொத்திக்கும். அப்போ அவ்வளவுதான் ரெண்டு பேரும் மாறி மாறி எழுதிக்கிறதைப் படிச்சா நமக்கு மண்டையில் முடி எல்லாம் கொட்டிப் போயி உடம்பு சூடேறி கண்ணைக் கட்டிக்கிட்டு மயக்கமா வரும். இது உதாரணமா எதையாவது சொல்லப் போக உங்களுக்கு எதாவது ஆயிடிச்சுன்னா என்ற கவலையில் அதை எல்லாம் செய்யலை.

கடைசியா, (நுண்ணரசியல் பத்திப் பேசும் போது கடைசியான்னு சொல்லறதே தப்பு. ஏன்னா இதையும் தாண்டிப் புனிதமானது ஒண்ணு வரலாம்!) நாம பண்ணற நுண்ணரசியல். இதுல என்ன விசேஷமுன்னா செய்யறவங்களுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது. ஆனா நம்ம கண்ணுக்கு இதெல்லாம் பளிச்சுன்னு படும். அதைச் சொன்னா அப்போதான் அதைச் செஞ்சவருக்கு நாமா இதெல்லாம் செஞ்சோம் அப்படின்னு தோணும். உதாரணத்திற்குப் போன பதிவில் நாம சொன்ன மாதிரி ஆஸ்கார் பிலிம்ஸ் என தசாவதாரத்தில் வரும் பொழுது அந்தப் பையன் சட்டையில் 'கேப்டன்' அப்படின்னு எழுதி இருக்கும். அது எதேச்சையா நடந்திருப்பது. அதன் மூலம் கமலை விட விஜயகாந்த் எவ்வளவோ மேல் அப்படின்னு ரவிசந்திரன் சொல்ல வராரு அப்படின்னு ஒரு பதிவு போட்டா அது இந்த மாதிரி நுண்ணரசியல்.

இதுல முக்கியமானது இதை வெளிப்படுத்தும் பொழுது உம் நுண்ணரசியல் என்னை பிரமிக்க வைக்கிறது, உமது நுண்ணரசியல் கண்டு பிரமித்து நிற்கிறேன் எனச் சொல்வது அவசியம். ஆனா ஒண்ணு, இதுதாங்க இருக்கிறதுலேயே ஆபத்தில்லாதது. படிச்சுட்டு சிரிச்சுட்டு, பின்னூட்டமா ஒரு சிரிப்பானாவது போட்டுட்டு போனா முடிஞ்சுது வேலை.

பஞ்ச் அண்ணா: யானையக் குருடனுங்க தொட்டு என்னவோ சொன்ன மாதிரி எங்கயோ ஒரு மேட்டரைப்பாத்துட்டு என்னவோ வாய்க்கு வந்தபடியோ மனசுக்கு வந்தபடியோ பேசறதுதான் நுண்ணரசியல் - அப்படின்னு ஒரு வரிலே முடிக்கவேண்டிய பதிலை வச்சுகிட்டு ஜிலேபி சுத்தியிருக்கீரே .. உம்மை!

4. பின்னூட்டப் பிதாமகரே, நீங்களும் பார்த்து வெறுத்து ஒதுக்கும் பதிவுகள் என்னவோ, ஏனோ?

முதல் இரண்டு வார்த்தைகள் என்னை ரீச்சருக்கு எதிரா கொம்பு சீவற மாதிரி இருக்கு. ஏன்யா இப்படி (நுண் இல்லாத)அரசியல் பண்ணறீரு. அது மட்டுமில்லாம வெறுத்து ஒதுக்கும் அப்படின்னு பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லறீங்களே!! அதிகம் படிக்காத பதிவுகள் அப்படின்னு வேணா சொல்லிக்கலாமா? அப்படிப்பட்ட பதிவுகளில் சில வகைகள் இருக்கு.

முதலாவது ஒருத்தர் எதாவது சொல்ல வந்த அவரு என்ன சொல்லறாரு என்பதை விட அவர் யாரு என்பதற்கு அதிக கவனத்தைக் குடுத்து நமக்குப் பிடிக்காதவரா இருந்தா அவரை விமர்சனம் செய்வதையே பதிலாகத் தருவது. இந்த மாதிரி தனிமனித தாக்குதல்களால் சொல்ல வந்த கருத்து காணாமப் போகுது. இது மாதிரி தொடர்ந்து நடக்கும் பதிவுகள் சிலவற்றின் பக்கம் போறது இல்லை. அனானியா வந்து ஒருத்தர் கேள்வி கேட்டா, பெயர் போடக்கூட பயப்படும் உனக்கெல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும் என்ற மேட்டிமைத்தனமும் இதில் அடங்கும்.

இரண்டாவது போன பதிவில் செல்லமா உவ்வேக் என அறியப்பட்ட வகை எழுத்துக்கள் இருக்கும் பதிவு. அதுக்கும் நமக்கும் ஏழாம் பொருத்தம். அதனால அந்தப் பக்கம் எல்லாம் போறது இல்லை.

மூணாவது இந்த ரொம்ப இலக்கியங்கள் மற்றும் ஆத்திகம் பற்றிய பதிவுகள். இதெல்லாம் நமக்கு ஏணி வெச்சாலும் எட்டாது. ரொம்பவே தீவிரமா விவாதங்கள் நடக்குற இடத்தில் நம்ம என்ன கும்மி ஆட்டையா போட முடியும். அதனால பொதுவா ஒண்ணு ரெண்டு பதிவு படிச்சாலும் அப்படியே சத்தம் காட்டாம நகர்ந்து போயிடறது.

கடைசியா இப்போ வர நிறையா பதிவுகளில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள். நிலக்கடலை சாப்பிடும் போது நடுவில் கெட்டுப் போன பருப்பு மாட்டினா மாதிரி படிக்கும் பொழுது என்னவோ செய்யுது. அதுவும் எதோ ஒண்ணு ரெண்டு இருந்தாலும் பரவாயில்லை. தட்டச்சுப் பிழைகள் அப்படின்னு ஒதுக்கிடலாம். ஆனா வரிக்கு வரிக்கு இதே மாதிரி தப்பு இருந்தா படிக்கவே பிடிக்க மாட்டேங்குது. "ற்" என்ற எழுத்துக்குப் பின் வரும் மெய்யெழுத்துக்கள், "ண,ந,ன' தவறுகள், "ற,ர" தவறுகள் எல்லாம் படிச்சா ரொம்பவே கடுப்பா இருக்கு. எவ்வளவுதான் சொல்லறது. அதனால இந்த மாதிரி எழுத்துப் பிழைகள் இருக்கும் பதிவுகளை இப்போ எல்லாம் புறக்கணிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப தெரிஞ்ச நண்பர்களா இருந்தால் மட்டும் சுட்டிக் காட்டறது.

பஞ்ச் அண்ணா:
அதாவது உங்களுக்கு பின்னூட்டம் போடாத பதிவர்கள் பக்கம் போறதில்லைன்னு சிம்பிளா முடிவெடுத்துட்டு, அதுக்கு காரணமா சந்திப்பிழை, மரியாதை இல்லை ன்னு தேடித்தேடி சொல்றா மாதிரி இல்ல இருக்கு!


கடைசியா நானும் யாரையாவது கேள்வி கேட்கணுமாமே. பதிவர்களில் பாதி பேர் கேள்வி பதில் எழுதும் பொழுது நாம யாரைன்னு போய் கேட்கன்னு யோசிச்சேன். பதிவு எழுதறவங்களை விட்டுட்டு பதிவே இல்லாதவரைக் கேட்டா என்னான்னு நினைக்கும் போது முதலில் நம்ம நினைவுக்கு வந்தது ஸ்ரீதர் வெங்கட்தான். ஸ்ரீதரே, நம்ம கேள்விக்கு பதிலை எல்லாம் எழுதி மின்னஞ்சல் பண்ணுங்க. நானே பதிவாப் போடறேன். இல்லை இதையே சாக்கா வெச்சு நீங்க பதிவு போடத் தொடங்கினாலும் சரிதான். உங்களுக்கான கேள்விகள்

  1. பதிவுலகில் தொடர்ந்து இயங்கும் நீங்க, பல பதிவர்களை விட பின்னூட்டங்களில் பட்டையைக் கிளப்பும் நீங்க ஏன் இதுவரை பதிவு தொடங்கலை?
  2. பதிவுகள் எழுதும் நாங்களெல்லாம் வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்வது போல நீங்கள் படித்துப் பின்னூட்டமிடுவதற்காகவே வாங்கிக் கட்டிக் கொள்வது உண்டா?
  3. அடிப்படையில் ரஜினி ரசிகராக அறியப்படும் நீங்கள் தசாவதாரத்திற்கு கமலே நினைக்காத கோணங்களில் பின்னூட்டங்கள் போட்டு ஆதரவு திரட்டுவதின் பின் இருக்கும் நுண்ணரசியல் என்ன? (நான் ரஜினி ரசிகன் என்று யார் சொன்னது போன்ற மொக்கை பதில்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது)
  4. காலப் பயணம் செய்ய முடிந்து உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு சம்பவத்தை மாற்ற முடியும் என்ற சக்தி கிடைத்தால் எதனை மாற்றுவீர்கள்? எவ்வாறு மாற்றுவீர்கள்?

Saturday, June 07, 2008

மீண்டும் சிவாஜி வாயிலே ஜிலேபி!

நம்ம வெண்பா வாத்தி ஜீவா இருக்காரே. எதையாவது ஆரம்பிச்சு வைக்கிறதுல வல்லவருப்பா. வெண்பாப் பதிவு ஆரம்பிச்சாரு. அப்புறம் என்னமோ ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமானம் அப்படின்னு படம் பிடிக்கப் போயிட்டாரு. இப்போ அதையெல்லாம் தாண்டி கதை எழுதச் சொல்லி அழைப்பு விட்டு இருக்காரு.

"சிவாஜி வாயிலே ஜிலேபி" - இதுதாங்க தலைப்பு. இந்தத் தலைப்பில் அவர் எழுதி இருக்கும் ஒரு கதையைப் போட்டு இதே மாதிரி நீயும் எழுதுடா ராஜான்னு நம்மளைக் கூப்பிட்டு இருக்காரு. அவர் ஒரு மீள் பதிவு போட்டு அதே மாதிரி எழுதச் சொன்ன காரணத்தினாலும், ஏற்கனவே இந்தத் தலைப்பில் ஒரு பதிவு ஒண்ணு போட்டு இருக்கும் காரணத்தினாலும், இப்போ இருக்கும் ஆணி புடுங்கல்ஸில் இதுதான் முடியும் என்ற காரணத்தினாலும் நானும் ஒரு மீள்பதிவு செஞ்சுக்கறேன்.

நிறையா படங்கள் இருக்கும் பதிவானதுனால அதை எல்லாம் எடுத்து இங்க போடுவதுக்குப் பதிலா அந்தப் பதிவின் சுட்டியைத் தரேன். சங்கடப்படாமல் ஒரு சொடுக்கு சொடுக்கி அங்க போய் ஒரு பார்வை பார்த்திட்டு வந்திடுங்கப்பா.



இன்னிக்கு நம்ம வலையுலகில் பேசப்படும் ஒரு விஷயம் டிப்ஸ் (இதுக்குத் தமிழில் என்ன?) டிப்ஸ் தருவது தப்புன்னு ஒரு பக்கமும் குடுக்காமல் போனால்தான் தப்பு என்று பேசாமல் அப்போ அவனுக்குக் குடுத்தா சரியா என்று மறு பக்கமும் பேசப்படுவதை எல்லாரும் படித்து இருப்பீர்கள். டிப்ஸ் குடுக்க மாட்டேன் எனச் சொன்னால் முத்திரை குத்தப்படும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் மேலே சொன்ன பதிவோடு இதோ என் டிப்ஸ்!

என்ன இதுவும் மீள்பதிவுதான். நம்ம பாபா வந்து ஒரு சமயம் ஆறு வார்த்தைகளில் கதை எழுதுவது பத்தி ஒரு பதிவு போட்டு இருந்தாரு. அந்த சமயத்தில்தான் நடிகர் திலகம் சிவாஜிக்கு சிலை வைப்பது பத்தி எல்லாம் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதையொட்டி நான் எழுதியது

முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்!

கடைசியா இந்த மாதிரி தொடர் விளையாட்டுக்களின் பாரம்பரியத்தின் படி நாமும் மூணு பேரைக் கூப்பிட்டு யான் பெற்ற இன்பம் பெறுவீரே நீர் மூவரும் அப்படின்னு சொல்லணுமாம். அந்த முறையில் நான் அழைக்கும் மூவர்
  1. பெனாத்தல் சுரேஷ் (எழுத மேட்டர் கிடைக்காமல் சங்கடப்படுவது போல் தெரிவதால்)
  2. சென்னைக் கச்சேரி தேவ் (செயல் படாத தலைவர் என்ற அவப்பெயரைத் துடைத்தெறிய ஒரு வாய்ப்பு)
  3. வல்லிம்மா (அப்பாடா 33.33 சதவிகிதம் குடுத்தாச்சு!)

ஐயாமார்களே, அம்மாமார்களே! நீங்களும் சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற தலைப்பில் கதை / உவ்வேக் / கட்டுரை என்று எதாவது எழுதித் தொலைத்து மேலும் மூவரையும் அழைத்து அவர்களிடம் திட்டு வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

டிஸ்கி 1 (இது போடாம எப்படி?): மேல சிவப்பில் இருக்கும் உவ்வேக்கிற்கு பொருள் தெரியாமல் நீங்களா எதாவது எடுபட்டவை, விடுபட்டவைன்னு எதையாவது எழுத ஆரம்பிக்காம என்கிட்ட கேளுங்க. விஷயம் என்னான்னு சொல்லறேன்.

டிஸ்கி 2: தசாவதாரம் வெளிவரும் இந்த சமயத்தில் சிவாஜியை மறு வெளியீடு செய்யும் வெண்பா வாத்தியின் நுண்ணரசியலைக் கண்டு நான் பிரமித்து நிற்கிறேன். ஆனால் நட்பின் அடிப்படையில் அவருடைய சதி வேலைக்கு உடன்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால்தான் இந்தப் பதிவு. இதனால் வரும் எல்லா வினைகளும் அவருக்கே!

Tuesday, June 19, 2007

எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ...

வெங்கட் ஐயா எழுதி இருக்காக, மாப்பிள்ளை இகாரஸ் எழுதி இருக்காக மற்றும் நம் வலைப்பதிவர் எல்லாம் எழுத இருக்காக வாம்மா மின்னல் அப்படின்னு நம்ம பாபா கூப்பிட்டுட்டாரு. அவர் பேச்சை மீற முடியுமா. நாலு, ஐந்து, ஆறு எல்லாம் முடிஞ்சு இப்போ எட்டு விளையாட்டு ஒரு எட்டு எடுத்து வெச்சு இருக்கு. நம்மளைப் பத்தி நாமே எட்டு விஷயம் சொல்லணுமாம். என்னத்த சொல்ல. பாபா மாதிரி இருந்தா ஒண்ணு வாங்குனா ஒண்ணு ப்ரீ அப்படின்னு 16 விஷயம் சொல்லலாம். (அவரை பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க அப்படின்னு சொன்னவங்க எல்லாம் இப்போ காலரைத் தூக்கி விட்டுக்கலாம்.) நமக்கு எட்டு விஷயமே தேடணும். ஹூம்.

1. சின்ன வயதில் ஹிந்தி ட்யூஷன் கிளாஸ் போகும் போது நம்ம படிப்பைக் கோட்டை விட்டுட்டு அவங்க பெரிய பசங்களுக்குச் சொல்லித் தரும் அக்கவுண்டன்ஸி பாடத்தைக் கற்றுக் கொண்டு, இது ஈஸியா இருக்கே என நினைத்து, அதைத்தான் படிக்கவேண்டும் என முடிவு செய்து கொண்டு, அதன் படியே அவ்வழி சென்று சி.ஏவிலும் ஐ.சி.டபிள்யூ.ஏவிலும் தேசிய அளவில் ரேங்க் வாங்கிப் பாசானது. அதற்குத் துளி கூட சம்பந்தமில்லாமல் ஆணி புடுங்குவது காலத்தின் கட்டாயம்.

2. சாதாரணமாக நாம் பயணம் செய்திருக்கும் பல வித வண்டிகளுடன் அறுவர் மட்டும் செல்லக் கூடிய சிறு விமானம் உட்பட பல விமானங்கள், ஹெலிகாப்டர், பாராசெய்லிங் பாராசூட், நீர்மூழ்கிக் கப்பல் என நிலத்தில், வானத்தில், தண்ணீரின் மேல், தண்ணீரின் கீழ் என பல விதமாக பயணம் செய்தாகிவிட்டது. அடுத்த மாதம் கே.ஆர்.எஸ். நம்மளை பலூனில் கூட்டிப் போவதாகச் சொல்லி இருக்கிறார். கான்கார்ட் விமானங்களில் செல்ல முடியாது போனது ஒரு வருத்தம்தான்.

3. ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா என பட இடங்களுக்குச் சென்று இன்று மக்கள் வாழும் கண்டங்களில் அவுஸ்திரேலியா மட்டும்தான் செல்லவில்லை. டீச்சர், டிக்கெட் வாங்கி அனுப்பியவுடன் அங்கும் சென்று கண்டம் வென்றோன் என்ற பட்டம் போட்டுக்க வேண்டியதுதான்.

4. நானும் என் நண்பனும் இன்றும் பேசிக் கொள்ளும் ஒரு நிகழ்ச்சி. இதையும் போட்டுக்க வேண்டியதுதான். ரொம்ம்ம்ப வருஷம் முன்னாடி நாங்க ரெண்டு பேரும் கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருந்தோம். அவன் பவுல் பண்ணும் ஓவர்களில் ஐந்து பால்கள் தடவு தடவு எனத் தடவிவிட்டு ஆறாவது பால் மட்டும் எப்படியோ அடித்து நான்கு ரன்கள் எடுத்துக்கிட்டு இருந்தேன். இப்படி பல ஓவர்கள் அவுட் ஆகாம இருந்து அவனைக் கடுப்படிச்சதையும், ஆறாவது பந்து மட்டும் ஓவர் பிட்ச்சாகப் போட்ட அவன் திறமையையும் பத்தி இப்போ கூட பேசுவோம். :))

5. தமிழ் சினிமா பாடல்கள், ஆங்கில பாடல்கள் என பல புறம் மேய்ந்து விட்டு இப்பொழுது கர்நாடக சங்கீதம் கேட்டுப் பரவசப்படும் ஒரு காலம். உண்மையில் நுண்கலை என்பது என்ன எனத் தெரிந்து கொண்டேன். ஓரளவு ஆர்வமும், சரியாக திசை காட்ட ஒருவரும் அமைந்தால், கர்நாடக சங்கீதத்தைப் புரிந்து கொள்ள, அதன் இனிமையை உணர இதைவிட சிறந்த வழி இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். இதில் இருக்கும் அற்புதங்களைக் கேட்கும் பொழுது இவ்வளவு நாட்கள் இதனைக் கற்றுக் கொள்ளாமல் போய் விட்டோமே என்ற வருத்தமும், இப்பொழுதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வமும் மேலிடுகிறது. எச்சரிக்கை : விரைவில் பாடல் பதிவு வரலாம்!!

6. எனக்கு பிடித்தமான சப்ஜெக்ட் பற்றி மட்டும் தான் படிப்பது என்றில்லாமல், வகை தொகை இல்லாமல் கண்டதையும் படித்து வைப்பது என் பழக்கம். இதனால் பல நேரங்களில் ஒரு புதிய கூட்டத்தில் இருக்கும் பொழுது அவர்கள் பேசும் விஷயத்தில் பங்கெடுத்துக் கொள்வது எளிதாகிறது. தனிமைப்படாமல் அக்கூட்டத்தில் கலந்து கொள்வதும் முடிகிறது. அதுக்காக ஹிந்தியில் எல்லாம் பேசப்பிடாது. அங்க எல்லாம் நிக்காம அப்படியே ஜூட் விட்டுடுவோமில்ல!

7. எங்கு தண்ணீரைக் கண்டாலும் குதித்துக் குளிக்கப் பிடிக்கும். ஆறு, குளம், அருவி என தண்ணீரில் ஆட்டம் போடுவது சிறுவயதில் இருந்து இன்று வரை நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும் பழக்கம். நயாகராவில் Cave of the winds என்னும் இடத்தில் சொட்டச் சொட்ட நனைந்ததும், முஸோரியில் ஒரு அருவி அருகில் வேடிக்கை பார்க்கச் சென்ற இடத்தில் குளிர்காலம் என்பதையும் மீறி போட்டிருக்கும் ஸ்வெட்டரைக் கூட கழட்டத் தோன்றாமல் தண்ணீரில் குதித்து ஆடியதும் மறக்க முடியாத ஆட்டங்கள்.

8. இப்படி எட்டு விஷயங்கள் எழுதறதே ஒரு பெரிய விஷயம்தான் அப்படின்னு சொல்லிட்டு ஆட்டத்தைக் க்ளோஸ் பண்ண மனசு வரலை. ஆனா இப்படி நாமும் எதையாவது எழுதுவோம் அதைப் படிக்கவும் ஆட்கள் இருக்காங்க என்பது நான் கொஞ்சமும் நினைத்திராத ஒரு விஷயம்தாங்க. அதனால வலைப்பதிதல் என்ற இந்த மேட்டரையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கிறேன்.

நான் அழைக்கும் எட்டு பேர்
  1. தம்பி தேவ்
  2. வி.எஸ்.கே
  3. கண்மணி
  4. ஜிரா
  5. உஷாக்கா
  6. டுபுக்கு
  7. கீதாம்மா
  8. செல்வன்
(நம்மளைப் பத்தின எட்டு குறிப்புகளைக்கூட எழுதிடலாம் எட்டு பேரை கூப்பிட ரொம்பவே கஷ்டமா இருக்கு சாமி!)


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

அழைத்தவர் பதிவில் சென்று அழைப்புக்கு நன்றி, பதிவு போடுகிறேன் என ஒரு பின்னூட்டம், போட்டாச்சு என ஒரு பின்னூட்டம் என குறைந்த பட்சம் இரண்டு பின்னூட்டங்களாவது போட வேண்டும் என்று ஒரு புதிய விதியையும் சேர்த்துக்கலாமா! ;-)

Monday, April 02, 2007

அ.ஆ. (அன்பே ஆருயிரே எல்லாம் இல்லைங்க)

சும்மா அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்த பொழுது நம்ம தம்பி வந்து ஒரு சந்தேகம் கேட்டாரு. அவரு கேட்டது "அழகுன்னு எதை சொல்றாங்க?" நானும் நம்மளை மதிச்சு சந்தேகம் கேட்க ஆள் இருக்கேன்னு சந்தோஷத்தோட (அதுவும் நம்ம கிட்ட வந்து அழகைப் பத்தி வேற கேட்கறாரேன்னு டபுள் சந்தோஷம்!) நமக்குத் தோணுனதை சொன்னேன். நான் சொன்னது "எது நம்ம எதிரில் இல்லாத போதும், அதை நினைக்கையில் நம் முகத்தில் ஒரு புன்முறுவல் வருகிறதோ அதே அழகு. அது ஒரு முகமாய் இருக்கலாம். ஒரு படமாய் இருக்கலாம். ஒரு வசனமாய் இருக்கலாம். ஒரு பதிவாய் இருக்கலாம் ஒரு பின்னூட்டமாய் இருக்கலாம் அந்தந்த வகையில் அது அழகு." அதைப் பத்திப் பேசிக்கிட்டு இருந்ததை எல்லாம் எடுத்துப் பதிவா வேற போட்டுட்டாரு அவரு.

இருந்தாலும் அவரு கேட்ட கேள்வி நம்ம மனசுலையே சுத்திக்கிட்டு இருந்தது. அவருகிட்ட அழகுன்னா என்னன்னு சொல்லிட்டோம். அதன் படி அழகுன்னா நாம என்ன நினைக்கிறோம், அடுத்தவங்க என்ன நினைக்கறாங்கன்னு ஒரு நினைப்பு இருந்துக்கிட்டே இருந்தது. தன் பயித்தியக்காரத்தனம் என்னென்னன்னு லிஸ்ட் போட்ட மக்கள், தங்கள் பார்வையில் எது அழகுன்னு சொல்லாமலேயா இருக்கப் போறாங்க அப்படின்னு தோணுனதுனாலதான் இந்தப் பதிவு. இது வெறும் பதிவு மட்டும் இல்லைங்க. இது அடுத்த தொடர் விளையாட்டின் ஆரம்பம். அந்த தொடர்

அழகுகள் ஆறு!

அதாவதுங்க, அழகுன்னா ஐஸ்வர்யா ராய் என்ற அளவோட நிக்காம நம்ம பார்வையில் அழகான முகம், இடம், நிகழ்வு, குறும்பு, பரிசு என நீங்கள் அனுபவித்த அழகு ஐந்தையும் எந்த அழகான விஷயம் உங்களுக்குக் கிடைக்கவில்லை அல்லது விரும்புகிறீர்கள் என்பதையும் சேர்த்து ஆறு விஷயங்களைப் பத்திச் சொல்லலாமே. பதிவு, பின்னூட்டம் எல்லாம் சொல்லி இருக்கலாம், ஆனா ஏற்கனவே நம்ம பேர் ரிப்பேர் ஆகிக் கிடக்கிற இந்த நேரத்தில் அதெல்லாம் கேட்டு சொ.செ.சூ வெச்சுக்க வேண்டாமேன்னு அதை எல்லாம் சாய்ஸில் விட்டாச்சு. சரி, இந்த ஆறு அழகுகள் பற்றி நீங்கள் எழுத வேண்டும். எழுதிய பின் உங்களுக்குப் பிடித்த மூவரை கூப்பிட்டு எழுதச் சொல்ல வேண்டும். இதுதான் அழகுகள் ஆறு விளையாட்டு. விளையாடறவங்க எல்லாரும் "அழகுகள் ஆறு " என்றே தமிழ்மணத்தில் குறிச்சொல் தந்தால் தேடிப் படிக்க எளிதாக இருக்கும்.

சரி. ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா. முதலில் என்னோட ஆறு அழகுகள்.

1. முகம்
அழகான முகம் அப்படின்னு சொல்லும் போது உடனே மனதில் பல முகங்கள் வந்து போகின்றன. சில நேரங்களில் சில முகங்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகு. ஹேர்கட் பண்ணிவிட்டு வீட்டுக்குப் போகும் பொழுது கடை வாயில்களில் இருக்கும் கண்ணடிக் கதவில் நம் முகத்தைப் பார்த்துக் கொள்வது, மேனேஜரிடம் சண்டை போட்டுவிட்டு வந்து நம் இருக்கையில் அமரும் பொழுது மேஜையில் இருக்கும் நம் குடும்பத்தாரின் முகம், சமீபத்தில் வாழ்நாள் விருது வாங்கிய என்றும் இளமையோடு இருக்கும் ரேகாவின் முகம், தேவர் மகன் படத்தின் பாதியில் சிகையலங்காரம் மாற்றி, தாடி எடுத்துப் பெரிய மீசையுடன் வந்து நம்மை ஆவெனப் பார்க்கச் செய்த கமல் முகம் என்று முகங்கள் பல இருந்தாலும், இத்தனை முகங்களுக்கு நடுவே ஒரு முகம் கொஞ்சம் அதிக அழகாக இருக்கும். அது உன்னுடன் முதல் வகுப்பில் அமர்ந்த முதல் நண்பியாக இருக்கலாம், கன்றுக் குட்டிக் காதல் வந்த அந்தப் பெண்ணாக இருக்கலாம் அல்லது உடன்பிறவா சகோதரியான பக்கத்து வீட்டு பத்மா அக்காவாக இருக்கலாம். அது போல் ஒரு முகம் எனக்குள்ளும் இருக்கிறது. அது எனக்கு மட்டுமேவாக இருந்துவிட்டுப் போகட்டுமே!

2. இடம்
இடத்திற்கும் பஞ்சமில்லை. எத்தனையோ இடங்கள். சலசலவென ஓடும் தாமிரபரணி ஆற்றின் நடுவே இருக்கும் பாறை, சிருங்கேரியில் துங்கா நதியில் காலை நனைத்தவாறு அமர்ந்திருக்கும் படித்துறை, நயாகரா நீர்வீழ்ச்சியில் நம் மீது தண்ணீர் விழும்படி நிற்க முடிந்த Cave of the winds, பிராத்தனா ட்ரைவ் இன் தியேட்டர், அமைதியான கோயில் பிரகாரங்கள் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். இவைகளுக்கு எல்லாம் மேல் எனக்கு அழகான ஒரு இடம் நான் வசித்த ஒரு வீட்டில் மா மரத்தின் கீழே இருந்த துணி தோய்க்கும் கல்தான். அதன் கீழ் அமர்ந்து சந்தோஷப் பட்ட, துக்கப்பட்ட, என்னை நானே கேள்விகள் பல கேட்டுக் கொண்ட தருணங்கள் பல. இன்று அந்த வீடும் இல்லை அந்த கல்லும் இல்லை. இருப்பதெல்லாம் வெறும் நினைவுகள்தான்.

3. நிகழ்வு
இதுக்கு ரொம்ப போட்டி இல்லைங்க. என் மகன் பிறந்து சில நிமிடங்களுக்குப் பின்னால் அழகாக ஒரு துணியில் சுற்றப்பட்டு நம்ம கையில் தரப்பட்டான் பாருங்க. உண்மையில் அந்த தருணத்துக்கு ஈடே இல்லைன்னு நினைக்கிறேன். நான் ஒரு தந்தை என்ற உணர்வாகட்டும், குழந்தையின் முகமாகட்டும், அவன் மீது நம் விரல் பட்ட ஸ்பரிசமாகட்டும், அதாங்க அழகு! இன்னும் சிலரைக் கேட்டா முதலில் சொன்ன முகத்தைப் பார்க்கும் ஒவ்வொரு சமயமுமே அவங்களுக்கு அழகுதான்னு சொல்லுவாங்க. இல்லைன்னா சொல்ல முடியும்!

4. குறும்பு
நான் சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு போன் வந்தது. அந்தக் குரல் அமெரிக்காவில் இருக்கும் என் நண்பியின் (உறவும் கூடத்தான் ஆனால் உறவுக்கெல்லாம் மேல் நட்புதான்!) குரலைப் போலவே இருந்தது. உடனே உற்சாகத்தில் நானும் பேச ஆரம்பித்து விட்டேன். கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலும் வந்து கொண்டிருந்தது. ஒரு அரை மணி நேரத்திற்கு பின்னால்தான் ஒரு கேள்விக்கு சொதப்பலாய் பதில் வர நான் பேசுவது வேறு யாருடனோ எனத் தெரிய வந்தது. உண்மையிலேயே அது ராங் நம்பர். அப்புறம் அவர்களோடு அடிக்கடி போனில் பேசுவது உண்டு. சென்னையில் இருந்த வரை நல்ல நண்பர்களாக இருந்த நாங்கள் பார்த்துக் கொண்டதே கிடையாது. சென்னை விட்டு வந்த பின் தொடர்பு விட்டுப் போனது. இன்று இணையத்தில் முகம் பார்த்திராமல் இத்தனை நண்பர்கள் இருந்தாலும் அன்றே அப்படி ஒரு நட்பு கிடைத்ததற்குக் காரணம், ராங் நம்பர் என்று சொல்லி பேச்சை நிறுத்திடாமல் வளர்த்த அவர்களின் குறும்புதானே! (நான் செய்த குறும்பைச் சொல்லி சொ.செ.சூ வைத்துக் கொள்வேன் என்று நினைத்தவர்களுக்கு என் அனுதாபங்கள்!!)

5. பரிசு
இதுவும் எவ்வளவு வேணாலும் எழுதற மேட்டர். பரிசு கிடைக்கிறது சின்னவங்களா இருந்தாலும் சரி, பெரியவங்களா இருந்தாலும் சரி, மனதில் ஒரு சந்தோஷம் வரது ஒரு இயற்கையான விஷயம்தான். இதைப் பத்தி சொல்லணுமுன்னா படிச்சப்போ வாங்கின பரிசுகள், குடும்பத்தார் தந்த பரிசுகள், மணமாகும் முன், மணமான பின் அப்படின்னு ஆரம்பிக்கலாம். தங்கமணியைக் கேட்டா நான் அவங்களுக்குன்னு செஞ்ச பிரத்யேகமான வாழ்த்து அட்டையைச் சொல்லலாம். (ஒரு காலத்தில் விளம்பரத் துறையிலும் இருந்தோமில்ல. நண்பர் ஒருவரின் கம்பெனி மூலம் நம்ம ஐடியா, கோவையில் விளம்பரப் பலகையா ஜொலிச்சு இருக்கு!) இல்லைன்னா எதிர்பாராத நேரத்தில் பையன் தரும் முத்தத்தைச் சொல்லலாம். எல்லாமே பரிசுதான். ஆனா வாழ்க்கையில் சில நட்புகள் அமையறதுதாங்க இருக்கிறதுலயே பெரிய பரிசு. அது அப்பா, அக்கா அப்படின்னு கூட இருக்கலாம். அந்த மாதிரி ஒரு நட்புதாங்க நம்ம வாழ்க்கையில் கிடைச்ச பெரிய பரிசு.

6. இல்லாத அழகு
நம் நாட்டில் எவ்வளவோ அழகு இருக்கு. ஆனா பாருங்க எவ்வளவு அழகு இருந்தாலும் நமக்கு நல்லா வெச்சுக்கத் தெரியலை. நாம தினமும் போய் வர ரோடாகட்டும் இல்ல ஒரு அமைதிக்காகச் செல்லும் ஒரு அருவியாகட்டும் எங்க போனாலும் நாம போயிட்டு வந்த சுவடா குப்பையைப் போட்டுட்டு வரதுல நாமதான் கிங். நம்ம நாட்டை விட்டுட்டு வெளிய வந்தாலே இது அவ்வளவு மோசமா இருக்கறது இல்லை. ஏன் நாம் மட்டும் இப்படி இருக்கோம்? வளர்ந்தவர்களை ஒண்ணும் செய்ய முடியாது. ஆனா பள்ளியில் பசங்களுக்குச் சொல்லித் தந்தால் அவர்களாவது நன்றாக வைத்துக் கொள்வார்களா? கற்றுக் கொடுப்பவர் வெளியில் போய் குப்பையை விட்டெறிவதை மாணவர்கள் பார்த்தார்களானால் அவர்களுக்கு சொல்லித் தந்ததைச் செய்யத் தோணுமா? இதுக்கு என்னதான் வழி?

சரி. நான் ஆடறது ஆடியாச்சு. அடுத்து ஆடறவங்களைக் கூப்பிட வேண்டியதுதான். சரி, ஒரு மூணு பேரைக் கூப்பிடலாம். அவங்க அழகை நாமளும் தெரிஞ்சுக்கலாம். ஒரு சிறு ஓடையாய்த் தொடங்கி இருக்கும் 'அழகுகள் ஆறு' என்ற தொடரைப் பெரிய ஆறா ஓடவிடும் பொறுப்பை இவங்க தலையில் வெச்சுடலாம். நான் அழைக்க விரும்பும் மூவர்

  1. தம்பி (நம்மளை இப்படி ஒரு தினுசா யோசிக்க வெச்சதுனால)
  2. துளசி டீச்சர்
  3. வல்லி சிம்ஹன் அம்மா