Monday, September 24, 2007

இந்த சமயத்திலும் சமயமா?

இந்த பதிவை எழுதத்தான் வேண்டுமா என்று பல முறை யோசித்த பின் தான் எழுதுகிறேன். இதனால் என்னென்ன பட்டம் என்னை வந்து சேரப் போகிறதோ தெரியவில்லை. நடப்பது நடக்கட்டும்.

ரொம்ப சிறப்பாக தொடர் முழுவதும் விளையாடிய இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. மிகவும் அருமையான ஆட்டம். இரு அணிகளும் வெற்றி பெறக் கூட சாத்தியக்கூறு இருந்த ஆட்டம். கடைசியாக இந்தியா வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கும், அவர்களோடு கடைசி வரை போராடியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வளவு அருமையாக நடந்த ஆட்டத்தின் முடிவில் நெருடலாய் ஒரு விஷயம். அதுதான் கொஞ்சம் வருத்தத்தைத் தந்தது. காரணம் பாகிஸ்தான் அணியின் தலைவர் மாலிக். போட்டி முடிந்த பின் அவரிடம் கேட்கப் பட்ட ஒரு கேள்விக்கு அவர் தந்த பதில் இது - " First of all I want to say something over here. I want to thank you back home Pakistan and where the Muslim lives all over the world."

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்? உலகெங்கும் இருக்கும் முஸ்லீம்கள் பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என பிரார்த்தனை செய்தார்களா? அல்லது பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்களும் கிருத்துவர்களும் அவர்கள் தோற்க வேண்டும் என நினைத்தார்களா? இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் இந்தியாவை ஆதரிக்காமல் இவர்களை ஆதரிக்க வேண்டும் என்பது இவர்கள் எண்ணமா?

இந்த ஆட்டத்திலேயே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப் பட்டது மற்றொரு முஸ்லிமாகிய இர்பான் பதான் இல்லையா? அவரோடு உடன் ஆடியது அவருடைய சகோதரர் யூசுப் பதான் இல்லையா? அவர்கள் என்ன பாகிஸ்தானுக்காகவா விளையாடினர்? இப்படி ஒரு மதத்தினை ஒட்டிய ஒரு பேச்சு தேவையா?

தங்கள் வெற்றிக்குப் பின் தாங்கள் நம்பும் கடவுள் இருப்பதாகச் சொல்வது அவரவர் நம்பிக்கை - அப்ரிதி அல்லாவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது போல. ஆனால் தாங்கள் பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டின் கிரிக்கெட் அணி என்பதில்லாமல் சர்வதேச முஸ்லிம்களின் அணியாக உருவகப் படுத்திக் கொள்வது சரியா? பொறுப்பற்று கண்டபடி பேசும் நம் பதிவுலக நண்பர்கள் போன்று ஒரு பொறுப்பான அணித் தலைவர் இப்படி பேசலாமா? விளையாட்டினுள் மதத்தைக் கொண்டு வரும் இது போன்ற பேச்சுக்கள் தேவையா?

பி.கு. - இது பற்றி எழுதலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்த பொழுது இதே கருத்துடன் கிரிக்கின்போவில் கண்ட ஒரு கட்டுரை.

Sunday, September 09, 2007

சர்வைவல் ஆப் பிட்நெஸ்!

டார்வின் அப்படின்னு ஒரு ஆள் இருந்தாரு. உலகில் உயிரினங்கள் இப்படி விருத்தியாகக் காரணம் இயற்கையின் தேர்ந்தெடுப்பு (Natural Selection) அப்படின்னு சொன்னாரு. அவரோட எழுத்துக்களைப் படிச்ச ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் என்பவர் வலிமையே வாழும் ( Survival of the Fittest) எனச் சொல்லப் போக, டார்வினே அத்தொடரை எடுத்தாளத் தொடங்கினார். எந்தக் கேனையன் என்ன சொன்னா என்ன, நம்ம வலையுலகின் கோட் வேர்ட் இன்னைக்கு சர்வைவல் ஆப் பிட்நெஸ்தான். நம்ம மனசுக்கு ரொம்ப பக்கத்தில் இருக்கும் தலைப்பாச்சே. நாமளும் மொக்கை போட்டு நாளாச்சே. அதான் இப்படி. மேல படியுங்க.

கொஞ்ச நாள் முன்னாடி தங்கமணி நச்சரிப்பு தாங்காம நானும் நம்ம குடும்ப கொசு கிட்ட போனேன். அதாங்க நம்மளை கண்டாலே உறிஞ்சி ரத்தம் எடுக்குற எம்.பி.பி.எஸ் படிச்ச கொசு ஒண்ணு இருக்கே, அதைத்தான் சொல்லறேன். அதுவும் வழக்கம் போல லிட்டர் கணக்குல உறிஞ்சுக்கிட்டு நாளைன்னைக்கு வா அப்படின்னு அனுப்பி வெச்சுது. (ஆமாம், இப்படி கொசுவைப் பத்தியே கொசுவர்த்தி சுத்தலாமோ?) ரெண்டு நாள் கழிச்சு தம்பதி சமேதரா போய் நின்னா கை நிறைய பேப்பரை வெச்சுக்கிட்டு உனக்கு கொழுப்பு ஜாஸ்தி அப்படின்னு ஒரு நான் வெஜ் சமையல் குறிப்பு மாதிரி ஆரம்பிச்சாரு. இதைச் சொல்லவா டாக்டருக்குப் படிச்சீரு, அதெல்லாம் படிக்காமலேயே தங்கமணி நேத்தே இதைச் சொல்லிட்டாங்களேன்னு நான் நேரம் காலம் தெரியாம சவுண்ட் விட, அதுக்குக் கிடைச்ச பரிசு தொடையில் நறுக்குன்னு ஒரு கிள்ளு. (யப்பா நகத்தை வெட்டுன்னு சொன்னா கேட்கிறாளா, ரத்தமே வந்திருச்சு).

இதையெல்லாம் காதிலேயே போட்டுக்காம நம்மாளு நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு அப்படின்னு கெமிஸ்ட்ரீ கிளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தது. நானும் வகுப்பில் இருப்பது போல் ரொம்ப கவனமா கண்ணைத் திறந்து வெச்சுக்கிட்டு தூங்கிக்கிட்டு இருந்தேன். நடுவில் சாப்பாடு என பேச்சு வர சடாரென முழிச்சுக்கிட்டேன். ஆனா அதுக்குள்ள அந்தாளு செய்ய வேண்டிய டேமேஜ் எல்லாமே செஞ்சுட்டாரு. எண்ணை கூடாதாம், சர்க்கரை கூடாதாம், பொரிக்கக்கூடாதாம், வறுக்கக்கூடாதாம். சொல்லிக்கிட்டே போறாரு. ஏற்கனவே அடிக்கடி உனக்கு என்ன ரெண்டு கொம்பான்னு கேட்கறா இதுல இலை தழை எல்லாம் சாப்பிட்டா என்ன ஆகுறது டாக்டர் என்று ஜோக் அடிக்கலாம் என நினைத்தேன். ஆனா தொடை இன்னும் வலிக்கவே பேசாமல் இருந்துவிட்டேன். அந்த மௌனத்தின் காரணம் தெரியாமல் நான் எதோ உடன்படுவதாக நினைத்து அடுத்த குண்டை தூக்கிப் போட்டார் நம்ம டாக்டன். (வாழ்க்கையில் இப்படி விளையாடறான் இனிமே என்ன மரியாதை. டாக்டர் எல்லாம் கிடையாது. டாக்டந்தான்!) என்னடான்னா உடற்பயிற்சி செய்யணுமாம். அந்த டாபிக்கில் வேற அரை மணி நேரம் லெக்சர். பலியாடு மாதிரி தலையை ஆட்டிக்கிட்டு வெளிய வந்தாச்சு. அப்ப ஆரம்பிச்சதுய்யா தொல்லை.


அடுத்த படத்தில் அசினை ரெகமெண்ட் செய்யலாமா இல்லை பாவமா இருக்கே இந்த பாவனா, அதைத்தான் சேர்த்துக்கலாமா என கனவு காணும் காலை நேரத்திற்கு விழுந்தது கத்தரி, எழுந்து வாக்கிங் போங்க என்ற குரலுடன். டெய்லி வாக்கிங் போக நான் என்ன பக்கத்து வீட்டு ஜிம்மியா? என்று கேட்க நினைக்கும் போதே கன்றிப் போன தொடை ஞாபகத்திற்கு வர அதைத் தடவிக் கொண்டே எழுந்திருக்க வேண்டியதாயிற்று. ரெண்டு நாள் இப்படிப் போக நம்ம மூளையில் ஒரு ஐடியா உதித்தது. இப்பத்தானே இப்படித் தொரத்தற, இதோ பனிக்காலம் வந்தாச்சே, இப்ப என்ன செய்வீக, இப்ப என்ன செய்வீக என கோஷம் போட ஆரம்பித்தது வினை. வந்து இறங்கியது ஒரு ட்ரெட்மில்.

அதுக்காக இடம் செய்யப் போய் டீவி முன் இருந்த நல்லா படுத்துக் கொண்டு டீவி பார்க்கக் கூடிய சோபா காணாமல் போனது. ஆனந்தம் பார்க்கும் போது அரைமணி நேரம் பண்ணுங்க. சீரியல் பார்த்து எனக்கு கதை சொன்னா மாதிரியும் ஆச்சு. உடற்பயிற்சி பண்ணினா மாதிரி ஆச்சு என ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் அடித்தாள் என் தர்மப்பத்தினி. அட, அந்த சுகன்யா புருஷன் ட்ரெயினில் வரேன்னு சொன்னா மாதிரி வரலை. இதைச் சொல்ல 7 நிமிஷம். இதுக்கு நடுவில 20 நிமிஷம் விளம்பரம், 3 நிமிஷத்துக்குப் பாட்டு வேற. இப்போ இதைப் பார்த்து கதை சொல்ல ஒரு அடியாள். என்ன கொடுமை சரவணன் இது? அந்த ட்ரெட்மில் சத்தத்தில் வசனம் எதுவுமே கேட்கலை. அது வேற விஷயம்.


இப்படியா 'நடந்துக்கிட்டு' இருந்த என் வாழ்க்கையில் விழுந்தது அடுத்த 'அடி'! சும்மா நடந்தா போதுமா , கை அப்போ சும்மா இருக்கே. உடம்பின் எல்லா பாகங்களுக்கும் சமமா பயிற்சி தரணும் அப்படின்னு அவங்க நண்பிகளில் எவளோ ஒருத்தி பத்த வைக்க வந்து இறங்கியது ஸ்டெப்பர். காலுக்கு படியேறுவது மாதிரியும், கைக்கு படகுகில் துடுப்பு போடுவது மாதிரியும் செய்யலாமாம். ஆனந்தத்திற்கு முன்னாடி கஸ்தூரி வருதே, அந்த நேரத்தில்தான் பையன் சாப்பிடறான், என்னால பார்க்கவே முடியறது இல்லை. அந்த நேரத்தில் நீங்க இந்த ஸ்டெப்பரைப் பண்ணிக்கிட்டே பார்த்து அந்த கதையையும் சொல்லிடுங்களேன் என ஆசையாய் வந்து கொஞ்சுகிறாள் என் தர்ம பத்தினி. கொஞ்சலா அது? கட்டளை இல்லையா, அதுவும் பார்க்க ஆரம்பிச்சாச்சு.


அவளுக்கு என்ன ஒரே ஒரு நண்பிதானா என்ன? ஆளாளுக்கு ஒண்ணு ஒண்ணு போட்டுக் குடுக்க, வீட்டில் சைக்கிள், எலிப்டிகல், அது, இது என காலில் இருந்து தொடை, வயிறு, கை, கழுத்து வழியாகத் தலை வரை செல்லும் என்று ரயில்வே ஸ்டேஷன் அறிவிப்பு மாதிரி பாகங்களுக்கு ஒன்றாக விதவிதமாக சாமான்கள் வந்திறங்கத் தொடங்கியது. நானும் கஸ்தூரியில் ஆரம்பித்து ஆனந்தம், மேகலா, அஞ்சலி, கோலங்கள், அரசி, லக்ஷ்மி என எல்லா சீரியல்களையும் பார்க்க வேண்டியதாகி விட்டது. ஆபீஸ் போவதனால் மத்தியான சீரியல்கள் எல்லாம் மிஸ் செய்கிறேன். நடுவில் நியூஸ் போடுகிறார்களோ சாப்பிட எதாவது கிடைக்கிறது. (அடேய் சன் டீவிக்காரனுங்களா, அதையும் எடுத்து எதாவது சீரியல் போட்டு என் அடிமடியில் கை வெச்சுடாதீங்கப்பா.)


சனி, ஞாயிறு சும்மா இருக்காம யோகா கிளாசுக்குப் போங்க என ஒரு கொடுமை. முதல் நாள் அங்க சவாசனம் செய்யும் போது பெரிசா குறட்டை விட்டுட்டேனாம். அதனால இனிமே வரவேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க. (நல்ல சனிக்கிழமை எண்ணை எல்லாம் தேச்சு குளிச்சிட்டு அங்க போனா தூக்கம் வருது. அதுக்கு நான் என்ன பண்ண? நம்ம சத்தத்தில் மத்தவங்க எல்லாம் டிஸ்டர்ப் ஆகி முழிச்சுக்கிட்டாங்க போல!) நல்லதாப் போச்சுன்னு அதை நிறுத்தியாச்சு. அடுத்தது Tai Chi கிளாஸ் போறீங்களான்னு பேச்சு வந்தது. அந்தப் பேச்சு ஆரம்பிக்கும் போதே டாய் ச்சீ என நாம உரும, போனா போகுது என அதுவும் வேண்டாமுன்னு வெச்சாச்சு.


இதெல்லாம் ஒரு பக்கம் போயிக்கிட்டு இருக்க, நான் இளைக்கிறேனோ இல்லையோ (தங்கமணி - ஆபீஸில் கண்ட நேரத்தில் என்னதைத் திங்கறீங்களோ, உடம்பைப் பார்த்துக்கணும் அப்படின்னு அக்கறை இருந்தால்தானே.) நம்ம பர்ஸும், பேங்க் பேலன்ஸும் நல்லா இளைக்க ஆரம்பித்தது. ஒரு நாள் நம்ம வீட்டு பக்கத்தில் இருக்கும் உடற்பயிற்சி சாதனங்கள் விற்கும் கடை ஓனரை எதேச்சையாய் ரோட்டில் பார்த்தேன். சாதாரணமா இருந்தவன், உதயகீதம் படத்தில் வர கவுண்டமணி மாதிரி, பென்ஸ் காரில் போய்க்கிட்டு இருந்தான். என்னடா, சாரி சாரி, என்ன சார், எப்படி இது அப்படின்னு விசாரிச்சா, சர்வைவல் ஆப் பிட்நெஸ் அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சுக்கிட்டே போறான்!! (அப்பாடி, தலைப்பில் கொண்டு வந்து முடிச்சாச்சு, நடுவில ரெண்டு பஞ்ச் டயலாக் மட்டும் வெச்சிருந்தா, தமிழ் சினிமாக்கு கதை எழுதப் போய் இருக்கலாம்.)


டிஸ்கி:
இப்பதிவில் வரும் பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே. யாரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை. (பின்ன, தங்கமணி பதிவெல்லாம் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க இல்ல!)

Tuesday, August 21, 2007

Mid Week ஜொள்ளு

இந்த தம்பி மட்டும்தான் இந்த மாதிரி பதிவு போடுவாரா? நாங்களும் போடுவோமில்ல!!






கடைசியாக நம்ம ஆதர்ச நாயகர்களில் ஒருவரின் ஜொள்ளு!


ஒண்ணுமில்லைங்க. பதிவு போட்டு ஒரு மாசம் ஆகப் போகுது. கையெல்லாம் நடுங்குது. ஆனா யோசிச்சு பதிவு போடற நிலமையில் இல்லை. (அடப்பாவி, இம்புட்டு நாள் யோசிச்சாடா பதிவு போட்டேன்னு எல்லாம் கேக்கப்பிடாது.) அதனாலதான் இப்படி ஒரு உப்புமா பதிவு. பதிவுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்த தம்பிக்கு நம்ம நன்றி.

Friday, June 29, 2007

இதுதாண்டா திறந்த மனசு!!

ஆசிப் அண்ணாச்சி திறந்த மனசப் பத்திப் பதிவு போட்டாக. பொன்ஸக்காவும், உஷாக்காவும் வந்து அழுவாச்சி ஸ்மைலி போட்டாங்க. சரின்னு நம்ம சிபி அண்ணாச்சி வந்து ஒரு படம் போட்டாக. நம்ம தம்பி வந்து இதுவும் முழுசாத் திறக்கலைன்னு சண்டை போடறாரு.

சரி அம்மணிங்க மனசும் நோவாம, தம்பிண்ணா ஆசையை நிறைவேத்த நம்மளை விட்டா யாரு இருக்கான்னு களத்தில் இறங்கியாச்சி. இதுதாண்டா திறந்த மனசு!!



என்னங்க எல்லாருக்கும் சந்தோஷம்தானே!! கண்ணை மூடி, கன்னத்தில் போட்டுக்கிட்டு வேலையைப் பாருங்கடே!!

Sunday, June 24, 2007

சிவாஜி - (நம்) வாயிலே ஜிலேபி!!!

நானும் சிவாஜி பார்த்தாச்சு!!!


பி.கு. : பக்கத்தில் இருந்த நண்பன் சொன்னது - " எனக்கு விவேக் காமெடியை விட ரஜினி காமெடிதான் பிடிச்சு இருக்கு."

பி.பி.கு: அப்பொழுது ரஜினி சீரியஸாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

பி.பி.பி.கு: தலையெழுத்து. இதுக்கெல்லாம் 16 டாலர் குடுத்து பார்த்தது.

பி.பி.பி.பி.கு: அதையும் நாம குடுக்காம ஓசியில் பார்த்ததுக்கே இவ்வளவு வயத்தெரிச்சல்.

பி.பி.பி.பி.பி.கு: நடிக்க முயற்சிக்காத வரையில் பார்க்க ஷ்ரேயா நல்லா இருக்கு. நயன் ஏன் இப்படி இளைச்சுப் போயிட்டாங்க?



பி.பி.பி.பி.பி.பி.கு: மொட்டை ரஜினி சூப்பர்!!



வர்ட்டா!!

Thursday, June 21, 2007

சுட்ட புதிர் வேணுமா? சுடாத புதிர் வேணுமா?

ஹைப்பர் ஆக்ட்டிவிட்டி டிஸ்-ஆர்டரால் பாதிக்கப்பட்டிருந்த முருகன் ஒரு இடத்தில் நிலை கொள்ளாமல் மரத்தின் மேல் ஏறி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, அவன் எங்கேயாவது கீழே விழுந்து அடி பட்டுக் கொள்ளப் போகிறானே என்ற பயத்தில் அவன் பாட்டி ஔவை அவனிருக்கும் மரத்தின் கீழே நின்று கொண்டு அவனை கீழே வாவென அழைக்கிறாள்.

ஒன்று, இரண்டு என்று வரிசைப் படுத்தி பாட்டெல்லாம் பாடினாலும் கீழே வர மறுத்த முருகன் கீழே வந்தால் தனக்கு போர் அடிப்பதாக சொல்ல, அவனை ஒரு இடத்தில் அமர வைக்க புதிர் போடுவதுதான் வழி என நினைத்துக் கொண்டு மரத்தின் மீது இருக்கும் முருகனைப் பார்த்து புதிர் ஒன்று தருகிறேன், கீழே இறங்கி வா எனக் கூப்பிட்டாள். சரி என்ற முருகனைப் பார்த்து "சுட்ட புதிர் வேண்டுமா, சுடாத புதிர் வேண்டுமா?" எனக் கேட்கிறாள். "சுடாத புதிர் என்றால் திரும்பத் திரும்ப கருப்புச் சட்டைக் காரன், காவலுக்குக் கெட்டிக்காரன். அவன் யார் என்ற ரேஞ்சில் கழுத்தை அறுப்பாய். அதனால் சுட்ட புதிரையே குடு" என்றபடி மரத்தில் இருந்து குதித்து வந்தான் முருகன்.

அவனை வீட்டினுள் அழைத்துச் சென்று கணினியில் அமர்த்தி இந்தப் புதிரை விடுவிக்கச் சொன்னாள் ஔவை. புதிரில் மூழ்கிப் போன முருகன், பாட்டி சமையலை முடிக்கும் வரை ஒரு இடத்தில் அமர்ந்திருக்க, நிம்மதியாக வேலைகளை முடித்து வந்த பாட்டி போடும் ஆட்டத்தைப் பாருங்கள்.

நீங்களும் புதிரின் ஒவ்வொரு அடுக்காக சென்று கடைசி அடுக்கினை அடைந்தீர்களானால் பாட்டியின் ஆட்டத்தைக் காணலாம். கூகிளாண்டவர் உதவியை முடிந்த வரை நாடாமல் முயலுங்கள். கொஞ்சம் முயன்றால் விடைகளே கிடைப்பதால் சுவாரசியம் குறைந்து விடும் வாய்ப்பு இருக்கிறது.

கடைசி பக்கம் வரைச் செல்ல எவ்வளவு நேரம் ஆகியது என மறக்காமல் இங்கு பின்னூட்டமிடுங்கள்!!

Tuesday, June 19, 2007

எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ...

வெங்கட் ஐயா எழுதி இருக்காக, மாப்பிள்ளை இகாரஸ் எழுதி இருக்காக மற்றும் நம் வலைப்பதிவர் எல்லாம் எழுத இருக்காக வாம்மா மின்னல் அப்படின்னு நம்ம பாபா கூப்பிட்டுட்டாரு. அவர் பேச்சை மீற முடியுமா. நாலு, ஐந்து, ஆறு எல்லாம் முடிஞ்சு இப்போ எட்டு விளையாட்டு ஒரு எட்டு எடுத்து வெச்சு இருக்கு. நம்மளைப் பத்தி நாமே எட்டு விஷயம் சொல்லணுமாம். என்னத்த சொல்ல. பாபா மாதிரி இருந்தா ஒண்ணு வாங்குனா ஒண்ணு ப்ரீ அப்படின்னு 16 விஷயம் சொல்லலாம். (அவரை பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க அப்படின்னு சொன்னவங்க எல்லாம் இப்போ காலரைத் தூக்கி விட்டுக்கலாம்.) நமக்கு எட்டு விஷயமே தேடணும். ஹூம்.

1. சின்ன வயதில் ஹிந்தி ட்யூஷன் கிளாஸ் போகும் போது நம்ம படிப்பைக் கோட்டை விட்டுட்டு அவங்க பெரிய பசங்களுக்குச் சொல்லித் தரும் அக்கவுண்டன்ஸி பாடத்தைக் கற்றுக் கொண்டு, இது ஈஸியா இருக்கே என நினைத்து, அதைத்தான் படிக்கவேண்டும் என முடிவு செய்து கொண்டு, அதன் படியே அவ்வழி சென்று சி.ஏவிலும் ஐ.சி.டபிள்யூ.ஏவிலும் தேசிய அளவில் ரேங்க் வாங்கிப் பாசானது. அதற்குத் துளி கூட சம்பந்தமில்லாமல் ஆணி புடுங்குவது காலத்தின் கட்டாயம்.

2. சாதாரணமாக நாம் பயணம் செய்திருக்கும் பல வித வண்டிகளுடன் அறுவர் மட்டும் செல்லக் கூடிய சிறு விமானம் உட்பட பல விமானங்கள், ஹெலிகாப்டர், பாராசெய்லிங் பாராசூட், நீர்மூழ்கிக் கப்பல் என நிலத்தில், வானத்தில், தண்ணீரின் மேல், தண்ணீரின் கீழ் என பல விதமாக பயணம் செய்தாகிவிட்டது. அடுத்த மாதம் கே.ஆர்.எஸ். நம்மளை பலூனில் கூட்டிப் போவதாகச் சொல்லி இருக்கிறார். கான்கார்ட் விமானங்களில் செல்ல முடியாது போனது ஒரு வருத்தம்தான்.

3. ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா என பட இடங்களுக்குச் சென்று இன்று மக்கள் வாழும் கண்டங்களில் அவுஸ்திரேலியா மட்டும்தான் செல்லவில்லை. டீச்சர், டிக்கெட் வாங்கி அனுப்பியவுடன் அங்கும் சென்று கண்டம் வென்றோன் என்ற பட்டம் போட்டுக்க வேண்டியதுதான்.

4. நானும் என் நண்பனும் இன்றும் பேசிக் கொள்ளும் ஒரு நிகழ்ச்சி. இதையும் போட்டுக்க வேண்டியதுதான். ரொம்ம்ம்ப வருஷம் முன்னாடி நாங்க ரெண்டு பேரும் கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருந்தோம். அவன் பவுல் பண்ணும் ஓவர்களில் ஐந்து பால்கள் தடவு தடவு எனத் தடவிவிட்டு ஆறாவது பால் மட்டும் எப்படியோ அடித்து நான்கு ரன்கள் எடுத்துக்கிட்டு இருந்தேன். இப்படி பல ஓவர்கள் அவுட் ஆகாம இருந்து அவனைக் கடுப்படிச்சதையும், ஆறாவது பந்து மட்டும் ஓவர் பிட்ச்சாகப் போட்ட அவன் திறமையையும் பத்தி இப்போ கூட பேசுவோம். :))

5. தமிழ் சினிமா பாடல்கள், ஆங்கில பாடல்கள் என பல புறம் மேய்ந்து விட்டு இப்பொழுது கர்நாடக சங்கீதம் கேட்டுப் பரவசப்படும் ஒரு காலம். உண்மையில் நுண்கலை என்பது என்ன எனத் தெரிந்து கொண்டேன். ஓரளவு ஆர்வமும், சரியாக திசை காட்ட ஒருவரும் அமைந்தால், கர்நாடக சங்கீதத்தைப் புரிந்து கொள்ள, அதன் இனிமையை உணர இதைவிட சிறந்த வழி இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். இதில் இருக்கும் அற்புதங்களைக் கேட்கும் பொழுது இவ்வளவு நாட்கள் இதனைக் கற்றுக் கொள்ளாமல் போய் விட்டோமே என்ற வருத்தமும், இப்பொழுதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வமும் மேலிடுகிறது. எச்சரிக்கை : விரைவில் பாடல் பதிவு வரலாம்!!

6. எனக்கு பிடித்தமான சப்ஜெக்ட் பற்றி மட்டும் தான் படிப்பது என்றில்லாமல், வகை தொகை இல்லாமல் கண்டதையும் படித்து வைப்பது என் பழக்கம். இதனால் பல நேரங்களில் ஒரு புதிய கூட்டத்தில் இருக்கும் பொழுது அவர்கள் பேசும் விஷயத்தில் பங்கெடுத்துக் கொள்வது எளிதாகிறது. தனிமைப்படாமல் அக்கூட்டத்தில் கலந்து கொள்வதும் முடிகிறது. அதுக்காக ஹிந்தியில் எல்லாம் பேசப்பிடாது. அங்க எல்லாம் நிக்காம அப்படியே ஜூட் விட்டுடுவோமில்ல!

7. எங்கு தண்ணீரைக் கண்டாலும் குதித்துக் குளிக்கப் பிடிக்கும். ஆறு, குளம், அருவி என தண்ணீரில் ஆட்டம் போடுவது சிறுவயதில் இருந்து இன்று வரை நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும் பழக்கம். நயாகராவில் Cave of the winds என்னும் இடத்தில் சொட்டச் சொட்ட நனைந்ததும், முஸோரியில் ஒரு அருவி அருகில் வேடிக்கை பார்க்கச் சென்ற இடத்தில் குளிர்காலம் என்பதையும் மீறி போட்டிருக்கும் ஸ்வெட்டரைக் கூட கழட்டத் தோன்றாமல் தண்ணீரில் குதித்து ஆடியதும் மறக்க முடியாத ஆட்டங்கள்.

8. இப்படி எட்டு விஷயங்கள் எழுதறதே ஒரு பெரிய விஷயம்தான் அப்படின்னு சொல்லிட்டு ஆட்டத்தைக் க்ளோஸ் பண்ண மனசு வரலை. ஆனா இப்படி நாமும் எதையாவது எழுதுவோம் அதைப் படிக்கவும் ஆட்கள் இருக்காங்க என்பது நான் கொஞ்சமும் நினைத்திராத ஒரு விஷயம்தாங்க. அதனால வலைப்பதிதல் என்ற இந்த மேட்டரையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கிறேன்.

நான் அழைக்கும் எட்டு பேர்
  1. தம்பி தேவ்
  2. வி.எஸ்.கே
  3. கண்மணி
  4. ஜிரா
  5. உஷாக்கா
  6. டுபுக்கு
  7. கீதாம்மா
  8. செல்வன்
(நம்மளைப் பத்தின எட்டு குறிப்புகளைக்கூட எழுதிடலாம் எட்டு பேரை கூப்பிட ரொம்பவே கஷ்டமா இருக்கு சாமி!)


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

அழைத்தவர் பதிவில் சென்று அழைப்புக்கு நன்றி, பதிவு போடுகிறேன் என ஒரு பின்னூட்டம், போட்டாச்சு என ஒரு பின்னூட்டம் என குறைந்த பட்சம் இரண்டு பின்னூட்டங்களாவது போட வேண்டும் என்று ஒரு புதிய விதியையும் சேர்த்துக்கலாமா! ;-)

Monday, June 11, 2007

இது ஒரு விளம்பரப் பதிவு!!!

ரொம்ப நாள் ஆச்சு. பதிவு போட டயமே இல்லை. தமிழ்மணம் பக்கம் கூட ரொம்ப தலை காட்டலைன்னா பார்த்துக்குங்களேன். இருந்தாலும் கை பரபரங்குதே. என்ன செய்யலாமுன்னு யோசிச்ச போதுதான் ரொம்ப நாளா போட வெச்சிருந்த இந்த விளம்பரப் பதிவு மேட்டர் ஞாபகத்துக்கு வந்தது. மக்கள்ஸ், இது வேற யாருக்கும் தர விளம்பரம் இல்லைங்க. விளம்பரங்கள் பற்றிய பதிவு.

கண்ணில் பட்ட, மெயிலில் வந்த நல்ல விளம்பரங்களைச் சேகரிக்கும் வழக்கம் இருந்தது. அதில் இருந்து சில உங்கள் பார்வைக்கு. இந்த விளம்பரங்களைப் பலர் பார்த்திருக்கக் கூடும். ஆனால் பார்த்திராத சிலருக்காக இந்தப் பதிவு சமர்ப்பணம். (என்னது, நட்சத்திர வாரம் முடிஞ்சாச்சு, இனிமே சமர்ப்பணம் எல்லாம் வேண்டாமா? சரி சரி!). வழக்கம் போல படங்களைச் சொடுக்கினா பெரிய அளவில் பார்க்கலாம்.

நியூயார்க் நகரின் தரையடி ரயில் பாதைகளில் உண்டாகும் சூடு, இப்படி புகையாய் அதற்கென வைத்திருக்கும் 'ஜன்னல்கள்' வழியாக வெளிவரும். குறிப்பாக குளிர்காலங்களில். அதனை அழகாக பயன்படுத்து 'பால்ஜர்ஸ்' காபி நிறுவனம் செய்திருக்கும் விளம்பரம் இது. மிக அருமையான சிந்தனை. அந்த புகை வெளிவரும் இடங்களில் அழகாக ஒரு காப்பிக் கோப்பையின் ஸ்டிக்கரை ஒட்டிச் செய்த இந்த விளம்பரத்தில் இருக்கும் வாசகம் - "'Hey, City That Never Sleeps. Wake up."

அடுத்தது நம்ம ஊர் மேட்டர். ஒரு பேரங்காடியின் நுழைவு வாயிலில் ஒரு டியோடரண்ட் நிறுவனம் செய்த விளம்பரம் இது. மனிதர்களின் நிஜ உருவங்களைப் போன்ற ஸ்டிக்கர்களை தானியங்கிக் கதவுகளின் மீது ஒட்டிவிட்டனர். ஒருவர் கடைக்குள் வரும் பொழுது கதவுகள் விலகுவது அம்மாந்தர்கள் விலகுவது போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். 'People move away when you have body odour' என்ற விளம்பரத்தை நுழைந்தவுடன் கண்ணில் படுமாறு வேறு வைத்துவிட்டனர்.

மலேசியாவில் எடுத்த படம் இது. மின்சார பெட்டி ஒன்றில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டி அதிலிருக்கும் அபாயம் என்ற வாசகத்தை அழகாக எடுத்தாண்டு இருக்கிறார்கள். டியூராசெல் பேட்டரிகள் கொண்டு இம்மின்சாதனம் இயங்குவது போலவும். அப்பேட்டரிகளின் சக்தியால் கவனம் தேவை என்பது போலவும் செய்த அருமையான விளம்பரம்.

இது மீண்டும் நம்ம் ஊரில் எடுத்தது. Eatalica என்ற நிறுவனத்தினர், தாங்கள் அறிமுகப் படுத்தும் பர்கரைப் பற்றிய விளம்பர பலகைக்களுக்குக் கீழாக ஈரத் தரை ஜாக்கிரதை என்ற பலகையை வைத்து விட்டு அதன் கீழ் 'Oogling at the burger may involuntarily cause drooling which may in turn lead to a wet floor. Issued for your safety by the management of Eatalica restaurant' என எழுதி இருக்கிறார்கள்.

மீண்டும் மலேசியா. M-Tech Plasma HID Lights என்ற பல்புகளுக்கான விளம்பரம் இது. சாதாரண பல்புகளை விட 300% அதிக வெளிச்சம் கொண்டவைகளாம் இந்த பல்புகள். கார் நிறுத்துமிடங்களிலும் கார் ரிப்பேர் செய்யும் இடங்களிலும் இந்த பல்புகளால் ஏற்பட்ட கருகிய தோற்றங்கள் போன்ற ஸ்டிக்கர்கள் மூலம் தம் பல்புகளின் திறனை அழகாகச் சொல்லி இருக்கின்றனர்.



கனடா நாட்டில் புகை எதிர்ப்பு தினத்தன்று நிறுவப்பட்ட விளம்பரம் இது. புகை பிடிக்காதீர்கள் என்பதனை வலுவாகச் சொல்லும் இந்த விளம்பரத்தில் இருக்கும் வாசகம் - 'Death from car accidents: 370, Death from smoking-related causes: 6,027, Quit now before it kills you.'





நியூயார்க் நகரில் ஒரு உடற்பயிற்சி நிலையத்தார் செய்த குறும்பான விளம்பரம் இது. தரையடி ரயிலில் நிற்பவர்கள் அனைவரும் வெயிட்டுகள் தூக்கி உடற்பயிற்சி செய்வது போல் அமைத்து விட்டார்கள்.







அடுத்ததும் உடற்பயிற்சிதான். ஹாங்காங் நகரில் ஒரு யோகா பயிற்சிப் பள்ளியின் விளம்பரம் இது. பானங்கள் அருந்தப் பயன்படும் ஸ்ட்ராக்களின் வளையக்கூடிய பாகத்தில் ஒரு பெண் வளைந்து யோகா செய்வது போல் அழகாகச் செய்துவிட்டார்கள். இந்த விளம்பரத்துக்குப் பின் அவ்விடத்தில் சேர்ந்தவர்கள் பலராம்.





சுவிட்ஸர்லாந்தில் ஒரு தரையடி ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் வைத்த அழகான விளம்பரம் இது. அந்நிலையத்தின் உள் செல்பவர்களும், வெளி வருபவர்களும் இக்காரின் உள்ளே செல்வது போலவும் வெளியே வருவது போன்றதுமான அமைப்பு, அக்கார் அதிகம் பேர் அமர்ந்து கொள்ளும் வசதியுடையது எனச் சொல்வது போல் அமைத்து இருக்கிறார்கள்.

கடைசியாக ஜப்பான் நாட்டில் ஒரு பேரங்கடியில் தங்கள் உடையில் வாடிக்கையாளர்கள் எப்படி இருப்பார்கள் எனக் காட்டும் படியாக பெரிய கண்ணாடிகளைக் கொண்டு இப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்து இருக்கிறார்கள். தங்களுக்கு அந்த உடைகள் நன்றாகப் பொருந்துவதைப் பார்த்த வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கினராம்.





டிஸ்கி: இன்று துளசி டீச்சர், பல படங்கள் கொண்ட இந்தப் பதிவைப் போட்டதுக்கும், பல படங்கள் கொண்ட இந்தப் பதிவை நான் போட்டதுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இது ஒரு விளம்பரப் பதிவு மட்டுமே!!

Sunday, June 03, 2007

அந்தரிகி வந்தனமு!!

எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகிவந்தனமு! இந்நாட்டின் உயரிய மாந்தர்களுக்கு என் வணக்கங்கள்! (வேணுமுன்னா இந்த வலையுலகின் அப்படின்னு வெச்சுக்கலாமா?)

அப்பாடா!! ஒரு வாரம் ஆயிடுச்சுங்க. எனக்கே இப்படி இருந்தா உங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நமக்கெல்லாம் இந்த ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் போடறது எல்லாம் ஒத்து வரலைங்க. எழுத ஆரம்பிச்சு இவ்வளவு நாள் ஆச்சு. இன்னும் 100 போஸ்ட் கூட போடலை. இந்த சற்றுமுன் பார்ட்டிங்க எல்லாம் என்னடான்னு 83 நாட்களில் சகத்திரம் போஸ்டுங்களாம். நமக்கெல்லாம் அந்த ஸ்ட்ரைக் ரேட் ஒத்து வராது. இனிமே இந்த மாதிரி ஒரு நாளுக்கு ஒண்ணுன்னு எல்லாம் சொன்னா ஒரு தடவைக்குப் பத்து தடவை யோசிக்கணும்.

அதுவும் பின்னூட்டங்களை வெளியிடறதும், அதற்குப் பதில் சொல்லறதும், அடுத்த பதிவு எழுதறதும், வழக்கம் போல மத்தவங்க பதிவுகளுக்குச் சென்று உள்ளேன் ஐயா என்பதுமாக மூச்சு முட்டி விட்டது. இனி ஒரு நாள் கூட தாங்கியிருக்காது என்றே நினைக்கிறேன். நல்லபடியாக ஒரு வாரம் ஓட்ட முடிந்ததே பெரிய விஷயம்.

மீள் பதிவு பண்ணியாச்சு, பயணக் கட்டுரை எழுதியாச்சு, சமையல் குறிப்பு போட்டாச்சு, புதிர் போட்டி, வெண்பா விளையாட்டு எல்லாம் விளையாடியாச்சு. நேயர் விருப்பத்தில் மீதி இருப்பது ஒரு இசைப் பதிவுதான். கச்சேரியில் மங்களம் பாடுவது மாதிரி நம்ம நட்சத்திர வாரத்தின் இறுதி பதிவாக ஒரு இசைப் பதிவு போடலாம் என்று எண்ணிய போது வந்தது மங்களம் பாடுவதைப் போட்டே நிறைவு செய்து விடலாமே என்ற இந்த ஐடியா.

பொதுவாக நாம் 'நீ நாம ரூபமுலகு' எனத் தொடங்கும் மங்களத்தைத்தான் பாடிக் கேட்டு இருப்போம். சில கலைஞர்கள் வேறு மங்கள பாடல்கள் பாடிக் கேட்டதே இல்லை. ஆகவே நாமும் அந்த பாடலையே முதலில் கேட்போம். சௌராஷ்ட்டிர ராகம், ஆதி தாளத்தில் அமைந்த இந்த பாடல் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியகராஜரால் இயற்றப் பெற்றது.
Get this widget | Share | Track details


ஆனால் இது தவிர வேறு பல பாடல்கள் கூட ஒரு கச்சேரியின் இறுதியில் பாடப்பட்டு இருக்கின்றன. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் இது போன்று பல பாடல்களைப் பாடுவார் என நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். தற்பொழுது இளைஞர்களில் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் இப்படி வித்தியாசமான பாடல்களை தொடர்ந்து மங்களமாக பாடி வருகிறார்.



அவர் பாடியவைகளில் இருந்து எனக்குப் பிடித்த இரண்டு மங்களப் பாடல்களைக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலாவது பாடல் 'ராமசந்த்ராய ஜனக' எனத் தொடங்கும் குறிஞ்சி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த பத்ராசலம் இராமதாஸ் இயற்றிய பாடல். ஒரு கச்சேரியின் முடிவில் ஆரவாரமாக வரும் இந்த பாடலை கேட்கும் போதே ஒரு குஷி வரும் பாருங்கள்.

Get this widget | Share | Track details


அடுத்தது 'புஜகசாயினோ' எனத் தொடங்கும் யதுகுலகாம்போதி ராகம் ரூபக தாள பாடல். இப்பாடலை இயற்றியவர் சுவாதித் திருநாள் அவர்கள். ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போன்ற உணர்வினைத் தரும் இப்பாடலைக் கேட்டுப் பாருங்களேன்.


Get this widget | Share | Track details


அப்புறம் தமிழ்ப் பாடல்கள் இல்லையா என்று கேள்விகள் எல்லாம் வேண்டாமே என மத்யமாவதி ராகத்தில் அமைந்த நம் பாரதியார் பாடல் ஒன்று. வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு. வந்தே மாதரம். வந்தே மாதரம். வந்தே மாதரம்.

Get this widget | Share | Track details


இந்த மங்கள பாடல்களோடு நான் எனது நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன். இந்த வாய்ப்பைத் தந்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கும், வாழ்த்தி ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும், உப்புமா பதிவுக்கு உறுதுணையாக இருந்த பெனாத்தலாருக்கும் எனது நன்றிகள். அப்புறம் ரொம்ப முக்கியமாக இந்த வாரம் பூராவும் நம்மளை ஃப்ரீயாக (சிலேடை!!) விட்ட தங்கமணிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

இது போன்று இந்த நான்கு பாடல்களைப் போடப் போகிறேன் எனச் சொல்லி அனுமதி கேட்ட உடன் சிறிதும் யோசிக்காமல் தன் சம்மதத்தைத் தந்த கிருஷ்ணா அவர்களுக்கு என் நன்றிகள்.

பட உதவி : திரு. ஹரிஹரன் அவர்கள்.

Saturday, June 02, 2007

விடை தருவேன் நானே!!

விடுகதையா இந்த வாழ்க்கை என்ற கேள்வியோடு ஆரம்பித்த புதிர் விளையாட்டுக்கு இன்று விடை தருவேன் நானே என முடிவுரை! ரொம்ப நாள் கழித்து நான் போட்ட புதிர். வழக்கமாக வருபவர்கள் வருவார்களா? புதிதாக யாரேனும் வருவார்களா? புதிர் பதிவுகளுக்கு ஆதரவு இருக்குமா? என என்னை நானே பல கேள்விகள் கேட்டுக்கொண்டுதான் பதிவையே போட்டேன். எந்த விதமான மசாலாவு சேர்க்காமல் வீட்டுச் சமையல் போல் இருந்தால் அதற்கு உணவகங்களில் மதிப்பிருக்குமா என்ற பயம்தான்.

ஆனால் பாருங்கள் என்ன ஒரு ரெஸ்பான்ஸ். (இதற்கு எதிர்வினை என்பதைத் தவிர்த்து வேறு சொல்லே இல்லையா? அது ஒரு நெகடிவ் பீலிங்கை தருதே.) நான் உண்மையைச் சொல்லறேன். எதிர் பார்க்கவே இல்லை. அதிலும் நான் கஷ்டம் என நினைத்த கேள்விகளை சடாரென்று சிலர் கண்டுபிடித்தது, நான் உண்மையில் எல்லோரும் கஷ்டப்படுவார்கள் எனக் கணித்த குறிப்பில் அனேகமாக எல்லாரும் மாட்டியதிலும் ஆச்சரியம்தான்.

சரி முதலில் விடைகளைப் பார்த்துவிடலாம்.

அமடல்வா - ஆசையில் ஓர் கடிதம்
முதல் குறிப்பு. மிகவும் எளிதானது. அவா என்றால் ஆசை. மடல் என்றால் கடிதம். அவாவிற்குள் ஒரு மடல் இருப்பதால் ஆசையில் ஓர் கடிதம். (இலக்கணப்படி ஆசையில் ஒரு கடிதம்தானே வரவேண்டும்? அந்த படம் பேரு அதுதான். அதனால நானும் அதை அப்படியே கேட்டேன்.)

சகத்வன்திரம் - ஆயிரத்தில் ஒருவன்
சகத்திரம் என்றால் ஆயிரம். வடமொழியில் சகஸ்ரம் என்றால் ஆயிரம்தானே? இங்கிருந்து அங்க போச்சா அங்க இருந்து இங்க வந்ததான்னு தெரியாது. ஆனா ஆக மொத்தம் சகத்திரம் என்றால் ஆயிரம். ஆயிரத்திற்குள் ஒரு வன் இருப்பதால் ஆயிரத்தில் ஒருவன். மற்ற எல்லாவற்றையும் போட்ட பாலா இதற்கு கடைசி வரை கஷ்டப்பட்டதுதான் ஆச்சரியம்.

நெஞ்கல்யாணிசு - நெஞ்சில் ஓர் ராகம்
இது முதல் குறிப்பைப் போன்றதுதான். கல்யாணி என்று ஒரு ராகம் இருக்கிறதல்லவா? கல்யாணி என்றவுடம் பியர் ஞாபகத்துக்கு வந்து ஜில் ஜில் என எழுதியவர்கள் அனைவரும் என் பேரைச் சொல்லி நல்ல பியரா வாங்கிச் சாப்பிடுங்கள்.

விவரி - பச்சை விளக்கு
விவரித்தல் என்றால் விளக்குதல் என்றுதானே பெயர்? அந்த சிலேடையை வைத்துப் போட்ட குறிப்பு இது. பச்சைக் கலரில் எழுதப்பட்ட விளக்கு - பச்சை விளக்கு.

ஓவியலூசு - படகோட்டி
இது நெல்லை மாவட்டக்காரங்களுக்கு ரொம்ப எளிதாக இருந்து இருக்கும். (இல்லையா டுபுக்கு!) ஏனென்றால் இதில் முக்கியமான குறிப்பு அந்த வட்டார வழக்கில் இருக்கிறது. ஆனால் ரொம்பவே புழக்கத்தில் உள்ள சொல்தானே! ஓவியம் என்றால் படம். ஓவிய என்றால் பட. கோட்டி என்றால் பயித்தியம், லூசுதானே. ஆகவே பட கோட்டி.

சிரிப்ஏழைபு - ஏழையின் சிரிப்பில்
இது ரொம்ப நேரான விடைங்க. ஏழை in சிரிப்பில். சரிதானே ஜிரா.

தி ( போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்) - திருவிளையாடல் ஆரம்பம்
திருவிளையாடல் 'தி'யில்தானே ஆரம்பிக்கிறது!! இது கொஞ்சம் கடினமான குறிப்புதான். ஆனா போட்டவங்களைக் கேட்டுப் பாருங்க. அப்படி ஒண்ணும் புரியவே இல்லாத மாதிரி குறிப்பு எல்லாம் இல்லை. தனுஷ் படம் என்றால் நேராக பதில் வந்திருக்கும். அவ்வளவு எளிதான குறிப்பாகத் தர வேண்டாமே என்றுதான் இன்னும் பல படங்களில் நடித்து இருக்கும் பிரகாஷ்ராஜ் பெயரைப் போட்டது.

என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!) - உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்
இருப்பதிலேயே இதுதாங்க கடினமான குறிப்பு. அதே மாதிரி பாலாவைத் தவிர வேறு யாருமே இதனைப் போடவில்லை. பாலா, Hats of to you!! கமல் படம் இல்லைன்னு சொல்லியாச்சு. ஆனாலும் கமல் படம்தான் அதிகம் விடையாக வந்தது. கமல் படம் பேரு என்னங்க? உன்னால் முடியும் தம்பி. இங்க என்ன சொல்லி இருக்கேன்? என்னால் முடியும் தம்பி. ஆக மொத்தம் 'உன்' இடத்தில் நான் 'என்'னைத் தந்திருக்கிறேன். எனவே உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். சரியா? :)) இதில் தம்பி என்ற வார்த்தையைக் கொண்டு பரதன், இலக்குவன், ஸ்டாலின் எனப் பல தம்பிகள் வந்தார்கள்.

ஆ - உயிரெழுத்து
நேரான குறிப்புதான். அது ஏன் ஆ? ஏன் அ, இ, ஈ என எதையும் குறிப்பிடவில்லை? பெரிதாய் காரணம் ஒன்றும் கிடையாது. ஆவும் ஒரு உயிர்தானே? :)) இந்த சிலேடையும் அ.ஆவை வைத்து குழப்பலாம் என்ற ஒரு எண்ணமும்தான். அப்படிக் குழம்பியவர்களும் உண்டுதானே!

ஆலஜானிவாக்கர்யம் - குடியிருந்த கோயில்
நம்ம பசங்க எல்லாம் சரியாக விடை தந்த குறிப்பு இது! எளிதான குறிப்புதான். ஆலயம் என்றால் கோயில். இங்கு அதில் என்ன இருக்கிறது? ஜானிவாக்கர் என்ற குடி. ஆகவே குடியிருந்த கோயில்.

வேல் வினை - வேலுண்டு வினையில்லை
இருப்பதிலேயே எளிதான குறிப்பு இதுதான். வேல் இருக்கு வினை இல்லை. முதலில் நான் வெறும் வேல் என குறிப்பு தரலாம் என இருந்தேன். அப்படிச் செய்து இருந்தால் எத்தனை பேர் சரியாகப் போட்டு இருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் எல்லா குறிப்பையும் அதி கடினமாக ஆக்க வேண்டாமே என்றுதான் அந்த வினையையும் சேர்த்தது.

மீண்டும் மீண்டும் - மறுபடியும்
இதுவும் நேரான குறிப்பு. மீண்டும் என்றாலே மறுபடியும்தானே, எதற்கு இரு முறை தந்தது? மீண்டும் மீண்டும் என்ற சொல் வந்தால் அதுவே மறுபடியும் வருகிறது அல்லவா? :))

அட்சி இரதன் - கண்ணும் கண்ணும்
பழைய தமிழ் சொற்கள் இரண்டினைத் தந்து இருக்கிறேன். இரு சொற்களுமே கண் என்ற பொருள் கொண்டவை. மீன் போன்ற அட்சியைக் கொண்டவள் மீனாட்சி அல்லவா? இதைப் பத்தி டீச்சர் பதிவில் கொஞ்சம் வேறு மாதிரி பிரதீப் சொன்னதை ஞாபகமாக குறிப்பிட்டு இருந்தார் கதிரவன். இரதன் என்றாலும் கண்தான். ஆகவே கண்ணும் கண்ணும். இதுதான் விடை. அட்சியும் இரதனும் எனச் சொல்லி இருக்கலாம் எனச் சொல்லி இருந்தார் ஒருவர். ஆமாம், செய்து இருக்கலாம் தான்.

உயர்ளம்ந்த - உயர்ந்த உள்ளம்.
உயர்ந்த என்ற சொல்லின் உள் ளம் இருக்கிறது. ஆகவே உயர்ந்த உள்ளம். இதில் இல்லாத குழப்பங்களை எல்லாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு கஷ்டப்பட்டனர் சிலர்.

என்விதிகை - சட்டம் என் கையில்
போன குறிப்பு மாதிரிதான். விதி என்றால் சட்டம், அது என் கையில் உள்ளது. ஆகவே சட்டம் என் கையில்.

சஹானா ஆதி ரூபகம் - ராக தாளங்கள்
சஹானா ஒரு ராகம். ஆதி தாளம், ரூபக தாளம். இவை எல்லாத்தையும் ஒண்ணா எடுத்துப் போட்டா ராக தாளங்கள். அதாவது ஒரு இராகம் ப்ளஸ் அட்லீஸ்ட் இரண்டு தாளங்கள். வந்திருச்சா?

அஜீத் அடானா - ஒருதலை ராகம்
இது நம்மாளுங்க எல்லாரும் போடுவாங்கன்னு எதிர் பார்த்தேன். சிலவங்க மிஸ் பண்ணினது ஆச்சரியம்தான். 'தல' அஜீத். ஒரு தல. ஒருவரே தல! அடானா என்பது ஒரு ராகம். ஆக இது ஒரு தல ராகம் = ஒரு தலை ராகம்.

காததோழன்லி - நண்பனின் காதலி
நண்பன் in காதலி!! இதுக்கு மேல என்னத்தைச் சொல்ல?

இந்தியா - நம் நாடு
என்னங்க இதை போய் சிலவங்க மிஸ் பண்ணி இருக்கீங்க!! இந்திய நாடு நம் நாடு!!

இள இள இள (வேர்ட் ஆர்ட் - சர்க்கிள்) - இளவட்டம்
'இள' என்ற சொல்லால் ஆன வட்டம் ஆகவே இளவட்டம். இளமை ஊஞ்சல் ஆடுகிறது என சிலர் சொல்லி இருந்தார்கள். ஆனால் நான் எதிர்பார்த்த பதில் இளவட்டம்தான்.







வெற்றி பெற்றவர்கள்

இந்த போட்டியில் 20 குறிப்புகளையும் சரியாகச் சொன்ன ஒரே ஆள் நம்ம பாலராஜன் கீதா அவர்கள்தான். அவரை வெற்றியாளராக அறிவிப்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் பாலா. உங்களுக்கு இந்த போட்டியில் வெற்றி பெற்றதிற்காக ஒரு புதிர் புத்தகம் பரிசாகத் தரலாம் என இருக்கிறேன். நல்ல ரீபஸ் புத்தகமே தேடுகிறேன். அது கிடைக்கவில்லை என்றால் வேறு புதிர்கள் கொண்ட புத்தம் ஒன்றை அனுப்பி வைக்கிறேன்.

பல முறை நான் தொடர்ந்து தவறான விடை என்றாலும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் (அதாவது, மறுபடியும்!) வந்து தொடர்ந்து முயன்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மிக முக்கியமாக கோகிலவாணி கார்த்திகேயன் அவர்கள்.

கலந்து கொண்ட அனைவரின் மதிப்பெண்களை அறிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள்.

அனைவரும் இப்புதிர்களை ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.