Thursday, December 06, 2007

மக்கள் தீர்ப்பே பாப்பையா தீர்ப்பு! பட்டிமன்றம் பகுதி 5

சாலமன் பாப்பையா

ஆக மொத்தம் பேச வேண்டிய எல்லாரும் பேசி முடிச்சுட்டாங்க. மேடையேறிப் பேசின நாலு பேரா இருக்கட்டும். பின்னூட்டத்துல பொளந்து கட்டின ஜனங்களா இருக்கட்டும். என்னமா பேசுனாங்கய்யா. அதுவும் நம்ம மக்கள் இருக்காங்களே சும்மாவே நல்லாப் பேசுவாங்க. இங்க ஒரு அப்பாவி ஒருத்தன் கிடைச்சு இருக்கான் வந்து மொத்துங்கடான்ன உடனே கிளம்பி வந்துட்டாங்கய்யா.


அத்தனை பேரு பேசினாங்களே, என்னென்ன பேசுனாங்க - பின்னூட்ட வெறின்னு பேசினாங்க, உப்புமா சுவைன்னு பேசினாங்க, அண்ணான்னாங்க, தம்பின்னாங்க, அடிச்சுக்கிட்டாங்க, அணைச்சுக்கிட்டாங்க. ஆஹா, ஆஹா என்ன உணர்ச்சிகள், என்ன காட்சிகள். ஆனா யாராவது ஒருத்தனாவது பதிவு எல்லாமே உப்புமா இல்லை, வெறும் பின்னூட்டத்துக்காக பதிவுகள் எழுதலை அப்படின்னு ஒரு வார்த்தை சொன்னீங்களாய்யா? வல்லியம்மாதான் கொஞ்சம் கிட்ட வந்தாங்க ஆனா அதுலேயும் அர்த்தமுள்ள ஹிந்து மதம் அப்படி இப்படின்னு காமெடி பண்ணிட்டாங்க.


இப்படித்தான் ஒரு முறை ஒரு பட்டிமன்றம் - சீதைக்கு ராமன் சித்தப்பாவா? பெரியப்பாவான்னு தலைப்பு. பங்கெடுத்துக்கிட்டவங்க எல்லாம் ரொம்ப அற்புதமா பேசுனாங்க. அங்க நான் குடுத்த தீர்ப்பு சித்தப்பாதான்! இது எல்லாம் சரித்திரம் பார்த்துத் தர தீர்ப்பு இல்லைங்க. இது என்ன பரீட்சையா சரியான பதிலை யார் எழுதி இருக்கான்னு சொல்ல? இது பட்டிமன்றமய்யா. இங்க அன்னிக்கு டேட்ல யாரு நல்லா பேசி இருக்காங்க அப்படின்னு சீர் தூக்கிப் பார்த்து தீர்ப்பு சொல்லணும்.


அப்படித்தான் இங்க துளசி ஆரம்பிச்ச அழகைச் சொல்லவா, பெனாத்தலார் பெருமையாப் பேசினதைச் சொல்லவா, வேவு பார்த்திட்டு வ்ந்தா மாதிரி பாயிண்டா அடுக்கின தேவைச் சொல்லவா, இல்லை பாட்டு என்ன, கவுஜ என்ன குட்டிக் கதை என்னான்னு கலக்கின மருத்துவரைச் சொல்லவா. என்னா பேச்சு என்னா பேச்சு. இதுல நடுவில சினிமா பாட்டு மெட்டுல இட்டுக்கட்டிப் பாட ஆரம்பிச்சுட்டாரு நம்ம பெனாத்தலார். ஆனா அதுக்கு ஈடு குடுக்கிற மாதிரி தேவ் வந்து பட்டையைக் கிளப்பிட்டாரு.


இப்படி எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவு சொல்லலாமுன்னு நினைக்கும் போதுதான் தெரிஞ்சுது நம்ம கொத்ஸ் நெல்லைச் சீமையாளாமே. அந்த பக்கத்து ஆளுங்களைப் பார்த்தாலே நமக்குக் கொஞ்சம் டென்ஷந்தான்யா. ஒரு தடவை அங்க ஒரு பட்டிமன்றம் அப்படின்னு ஒத்துக்கிட்டு போயிட்டோம். எல்லாரும் பேசி முடிச்சு தீர்ப்பு சொல்லற வேளை வந்தது. அப்போன்னு பார்த்து நல்ல வெள்ளையும் சொள்ளையும் போட்டுக்கிட்டு மூஞ்சி நிறையா மீசையை வெச்சுக்கிட்டு ஒரு ஆள் பின்னாடி கையைக் கட்டிக்கிட்டு நம்ம பக்கத்தில் வந்து நின்னான். என்னடா பார்வை ஒரு மாதிரி இருக்கேன்னு நினைச்சுக்கிட்டே இருக்கும் போது இவனை கலர் ஜெராக்ஸ் எடுத்தா மாதிரி ஒருத்தன் அந்தப் பக்கம் வந்து நின்னு நம்மளைப் பார்த்து ஒரு மாதிரி சிரிச்சான். என்னடா அப்படின்னு பார்த்தா நம்ம கிட்ட ஜாமான் இருக்கு சாமி, நம்மூர் வழக்கப்படி நமக்கு எதிரா தீர்ப்பு வந்தா ஒரே போடா போட்டுருவேன்னான். அப்போ அவன் அப்படின்னு கேட்டா அந்த பக்கத்துக்கு எதிரா தீர்ப்பு வந்தா அவன் போடுவாமில்ல அப்படின்னு அசராமச் சொல்லுதாங்கய்யா.


அன்னைக்குத் தப்பிச்சு வந்தது தம்பிரான் புண்ணியமாப் போச்சு. அது என்னமோ தெரியலை. இன்னிக்கு மேடை ஏறினதுலேர்ந்து அந்த நினைப்பாவே இருக்கு. அதுனால நான் என்ன சொல்லறேன்னா ஜனநாயக முறைப்படி வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக வாக்காளப் பெருமக்களான உங்களை அறிமுகப் படுத்திக்கிட்டு நான் எஸ் ஆகறேன். வாக்காளப் பெருமக்களே தவறாம உங்கள் பொன்னான பட்டிமன்றத்தில் பேசிய அனைவருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும். அப்போ வர்ட்டா!!


Wednesday, December 05, 2007

மருத்துவர் தரும் செகண்ட் ஒப்பீனியன் - பட்டிமன்றம் பாகம் 4

சாலமன் பாப்பையா

நியூசிலாந்த்தில் ஆரம்பிச்சு அப்படியே அமீரகம் வந்து பின்ன என்னமோ மறந்து போனா மாதிரி இந்தியாவுக்குப் போயிட்டு இப்போ நம்ம பட்டிமன்ற வண்டி ரஷ்யாவில் வந்து நிக்குது. இந்தக் குளிருக்கு இதமா தேவ் ஆரம்பிக்கப் போற டீக்குடிப்பு போராட்டத்தில் கலந்துக்கிட்டா நல்லா இருக்குமேன்னு நினைச்சா இப்போ வரப்போறவரு வோட்காதிபதி இராமநாதன். இளஞ்சிங்கம் நீரு, பஞ்ச் டயலாக் எல்லாம் வெச்சு பேசுவீரு. நீர் விரலைச் சுத்தி பேசும் அந்த அழகைப் பார்த்து எல்லாரும் எங்க வீட்டுக்கு வாங்க, வந்து பழகுங்க அப்படின்னு ஆசையாக் கூப்பிடணும். அப்படிக் கலக்க 'வா நீ, வா நீ, வா நீ, நம்ம மேடை ஏறி வா நீ!!'


மருத்துவர் இராமநாதன்

இதுவரைக்கும் பெருந்தலைகளெல்லாம் வந்து பேசிட்டு போயிட்டாங்க. கடசியா ஒரு தறுதலையும் பேசினாத்தான் தீர்ப்பு சொல்வேன்னு பாப்பையா நினச்சிருப்பாரு போல. அதான் என்ன கூப்பிட்டிருக்காரு.

முதல்ல கொத்ஸுக்கு இந்த தறுதலை வாசகனின் வாழ்த்து!

நள் இருளில்(ம்) நட்டம் பயின்று ஆடும் நாதனே!
கல்லிடைஉள் குத்தனே தென்பாண்டி நாட்டானே!
எண்ணுதற்கு எட்டா ஊட்டு பெறுகழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழு மாறு ஒன்று அறியேன்!

கொத்தனாருக்கு ஏதோ வெறி பிடிச்சுருக்குனு எல்லாரும் ஒத்துக்கறாங்க. அந்தவரைக்கும் என் செகண்ட் ஒப்பீனியன்ல டவுட் இல்ல. ஆனா பிடிச்சுருக்கறது என்ன வெறி? அது ஏன் தலைக்கு ஏறியிருக்குனு யோசிச்சு பார்த்தா அது உப்புமா வெறிதான்னு கன்பர்ம் ஆயிடுது. எனக்கு முன்னாடி எங்க அணித்தலைவர் பெனாத்தலார் பல்வேறு பாயிண்ட்ஸ அள்ளிவிட்டாரு. அதோட சேர்த்து கொசுறா நானும் கொஞ்சம் சொல்லிக்கிறேன்.

உப்புமானா என்னவோ சாதாரணம்னு அளந்துவிடறாங்க தேவும் ரீச்சரும். உப்புமாவோட உன்னதத்தை உணர்த்த ஒரு குட்டிக்கதை சொல்றேன். உடனே கண்ணீர் துடைக்க க்ளீனெக்ஸோட உஷாராவற வாலிப வயோதிக அன்பர்களே: இது எந்த குட்டியோட கதையும் இல்ல. நான் சொல்றது குட்டி as in சின்ன. சத்ரபதி சிவாசி சின்ன வயசுல அவுரங்கசீப்ப எதிர்த்து சண்டை போட்டு சில கோட்டைகளை ஜெயிச்சார். ஆனா சில நாட்கள்லேயே அதையெல்லாம் அவுரங்கசீப் படையினர் மீண்டும் கைபற்றிட்டாங்க. ஒருநாள் அவுரங்கசீப்போட படை துரத்துனதுல உசுருக்கு பயந்து ஒரு கிராமத்து வீட்டுக்கு மாறுவேஷத்துல போய் பசின்னு கேக்க, அங்க ஒரு கிழவி சிவாஜிக்கு 'உப்புமா'வ கிண்டிப்போட்டு அத எப்படிச் சாப்பிடறதுன்னு சொல்றாப்போல போர்த்தந்திரத்தை, கோட்டைகளை கூட வசப்படுத்தும் வழியை கத்துக்கொடுத்தாங்களாம். இப்படியாக உப்புமாவ வச்சுதான் சத்ரபதியே சாம்ராஜ்யம் சமைச்சாரு. கதைனு சொன்னா நீதி வேணுமில்லியா? உப்புமாவ குறைச்சு மதிப்பிட்டா பதிவு ஊத்திக்கும்கறது சிவாஜிக்கு தெரியுது. ஆனா விவாஜி எழுதுற மன்றத்துக்கு தெரியலியே!

ஒண்ணுமில்லாத விஷயத்தை ஊதிப்பெருசாக்கி அதையும் நாலு பேரு படிச்சு கருத்து சொல்லுமளவுக்கு எழுதணும். அதுக்கு உப்புமாவெறி இல்லாம முடியுமா? நான் இன்னிக்கு கார்த்தால ட்ரெட்மில்ல ஓடினேன்கற mundane மேட்டரையும் தமிழ்ப்பதிவுலகின் முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளில் ஒன்றாக மாற்ற முடியும்னா அதுக்கு உப்புமாவெறி இல்லாம முடியாது. பின்னூட்டம் போடறது இப்பல்லாம் நிறைய பேரு செய்யறதில்லனு ரீச்சர் வருத்தப்படறாங்க. அத நானும் ஒத்துக்கறேன்.


ஏன்? இன்னிக்கு தமிழ் வலையுலக முகப்பை பாருங்க... எத்தனையோ பேரு ரவுசு பண்றேன் நக்கல் பண்றேனு பதிவு போடறாங்க. அதையும் எத்தனையோ பேரு வந்து படிக்கிறாங்க. ஆனா கமெண்ட் போடறாங்களோ? இல்லையே. கொத்தனாருக்கு மட்டும் போடறாங்கன்னா அது ஏனு நாம யோசிக்கணும். பதிவுல ஒண்ணுமில்ல. ஆனா என்னவோ இருக்கு. அந்த என்னவோ வந்தவங்கள ஒரு பதிலாவது கொடுத்துட்டு போகணும்னு படுத்துது. அது என்னது? அது பின்னுட்ட வெறிங்கறாங்க அவங்க. ஆனா உப்புமா வெறிங்கறேன் நான். ஏன்னா பின்னூட்டத்துலயும் உப்புமா கிண்டறவர் நம்ம கொத்ஸு.


வெறுமனே பின்னூட்டம் வாங்கணும்னா அதுக்கு எத்தனையோ டாபிக்ஸ் இருக்கு. அந்தந்த செக்ஷன் ஆளுங்க வந்து தானா போட்டுட்டு போவாங்க. ஆனா அது எல்லாமே குழுக்களா இருக்கும். ஆனா எந்தக்குழுவுக்குள்ளும் சிக்காம தொடர்ச்சியா சிக்ஸர் அடிக்க முடியுதுன்னா எந்த பக்கத்திலயும் சாயாத ஜோரான உப்புமா போடற திறமை கொத்ஸுக்கு இருக்கறதுனால மட்டுமே. அந்த unique நடையும் நக்கலும் இல்லேன்னா இலவசம் இவ்வளவு பிரபலமாகியிருக்குமா? பதிவு மட்டும் உப்புமாவா இருந்தா போதுமா? கண்டிப்பா போதாது. பின்னூட்டத்துலயும் உப்புமா கிண்டத்தெரியணும். கிண்டாம விட்டா கல்லாகிடும். வந்து பின்னூட்டம் போட்டவன் வாயக் கிண்டனும். கிண்டக் கிண்டக் கவுண்டரும் குன்ஸாவாரு. ப்ளாக்கரும் ரென்சன் ஆவாரு. இதுல எதிரணியில இருந்தும் தானே மனமுவந்து சூனியம் வச்சுகிட்டு இந்த பாயிண்ட கொடுத்த அக்காவுக்கு நன்னி.


அய்யா...கண்ணாடி போட்டவங்கள்லாம் எம்ஜிஆர் ஆக முடியுமா? பதிவு போட்டவங்கள்லாம் உப்புமா மன்னனாக முடியுமா? மிச்ச பதிவுகள்ல போடற பின்னூட்டங்களால மட்டும் தான் கொத்தனாரின் பதிவுகளிலும் பின்னூட்டங்கள் எகிறுதுங்கற மாதிரி கருத்த தேவு சொல்லிருக்காரு. இதவிட தவறா கொத்ஸோட புல்லிங் பவர மதிப்பிட முடியாது. கொத்தனாரின் பதிவுகள்ல போய் நீ கொடுத்த தவசதானியத்துக்கு இப்ப நாங்க மொய் வைக்கிறோம்னு பலகாலம் கழிச்சா பின்னூட்டம் போடறாங்க? இங்க பின்னூட்டம் போடறவங்களோட நோக்கம் கொடுத்து வாங்கறது இல்ல. உப்புமா ருசிக்க வந்தவங்கள தப்பா எடை போடலாமா?


அந்த மாதிரி மொக்கை பின்னூட்டங்கள் - ஒண்ணு நமக்கு நாமே போட்டுக்கணும் இல்லேன்னா பொழுது போகாத நண்பரை கட்டாயமா உட்கார வச்சு போடச் சொல்லணும். இதுல இன்னஸண்டான வெளியாளுங்க (அதாவது சாட்ல "மச்சான் வெளாடுவோம் வா"னு கூப்பிடப்பட்டவர்கள் அல்லது ஆஞ்சலீனா அண்டர்க்ரவுண்ட் சொஸைடிஸோட பார்களிலிருந்து மோப்ளாக் செய்பவர்கள்) வந்து மே ஐ கம் இன்' னு வந்து சொல்லிட்டு -, நீ உருப்படுவியா, நீமட்டும் உருப்படுவியான்னு இப்படியாக யாஹூல பண்ணவேண்டிய கான்பரன்ஸை போடலாம். போடறாங்க. ஆனா பொதுவா மத்தவங்களுக்கு துளிக்கூட சுவாரசியமா இருக்காது. எல்லாரையும் இன்வால்வ் பண்ண வைக்கிற திறமை இல்லேன்னா இப்படி தொடர்ந்து செய்ய முடியாது. மேற்சொன்ன வழிமுறைகள்ல இந்த பின்னூட்ட வெறி பிடிச்சவங்களுக்கு ஒரு சில பதிவுகள்ல வெற்றி கிடைச்சாலும் அவங்களால அத தக்க வச்சுக்க முடியாது.


அதுதான் நான் சொல்ல வர்றது. உப்புமாத் திறமையும் வெறியும் இல்லேன்னா பின்னூட்டங்களும் வரப்போறதில்லை. வரும் ஆனா ரெண்டு மூணு பேரு மட்டும் ஜோக் பண்றேனு ஜோக்கர் ஆவற காமெடி பண்ணி எல்லாரையும் கழுத்தறுத்து ஓடவச்சிருவாங்க. உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் தேவையில்லை.


இப்ப கடைசியா பஞ்ச் செக்ஷனுக்கு வந்திருக்கோம். ரெண்டு காதுக்கு ரெண்டு பஞ்ச். பஞ்சு வச்சுக்குற அளவுக்கு விஷ்க் விஷ்கோட டயலாக் சொல்லலேனா எப்படி?


ஒண்ணு: தெளிவா சொல்லிடறேன். எதிர் அணியினர் புரிஞ்சுதான் இந்த பட்டிமன்றத்துல கலந்துகிட்டாங்களானு தெரியாது. ஆனா என்னப் பொறுத்தவரைக்கும் இப்ப நாம எழுதிருக்கோமே - இதுதான் உப்புமாவுக்கு டெபனிஷன். இந்த மாபெரும் உப்புமா மன்றத்துல உங்கள எதிரணியில பேசக்கூப்பிட்டதுல இருக்குற உள்குத்தை புரிஞ்சுக்காம பேசியிருக்காங்க. அக்காதான் இன்னஸெண்டுன்னா தேவு அவர வச்சு காமெடி கீமடி பண்ற்த புரிஞ்சுக்காம ரொம்ப நல்லவர் மாதிரி கச்சேரி நடத்திருக்காரு.


ரெண்டு: கடுகு தாளிக்காம உப்புமா சாப்பிடலாம். ஆனா உப்புமா பண்ணாமா வெறுமனே கடுகு மட்டும் தாளிச்சா சாப்பிட முடியாது.

சாலமன் பாப்பையா

மருத்துவரே வாங்க. மத்த டாக்டருங்க எல்லாம் கை பிடிச்சுப் பார்த்து விஷயம் என்னான்னு சொல்லுவாங்க. நீங்க விஷயம் என்னான்னு சொல்லிட்டு கைத்தட்டலை அள்ளிக்கிட்டீங்க. பாட்டு என்ன, கதை என்னான்னு தூள் கிளப்பிட்டீங்க. இனிமேலாவது அந்த ஸ்ரீதர் வெங்கட் இது பட்டிமன்றம்தான்னு ஒத்துப்பாருன்னு நினைக்கிறேன்.

இப்போ, ரெண்டு அணியும் தங்களுக்குக் கொடுத்த தலைப்பை எடுத்துப் பிரமாதமா பேசிட்டாங்க. கூடவே வந்து பின்னூட்டங்களில் காரசாரமா வெளுத்து வாங்கிட்டாங்க சிலர். இப்போ எல்லாத்தையும் சீர் தூக்கிப் பார்த்து தீர்ப்பு சொல்லும் வேளை வந்தாச்சு.

அதுக்குள்ள டைரக்டர் அங்க என்னமோ கையைக் காட்டறாரே, என்ன விஷயமுன்னு பார்க்கலாம். என்னது ப்ரேக் போகணுமா? சரி சரி.

யாரு வெற்றி பெறப் போறாங்க பின்னூட்டமா, உப்புமாவான்னு பார்க்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன ப்ரேக்!


(தொடரும்)

Tuesday, December 04, 2007

தேவு பிழிந்த சேவு - பட்டிமன்றம் பாகம் 3

சாலமன் பாப்பையா

மீண்டும் விளம்பர இடைவேளை எல்லாம் முடிஞ்சு மீண்டும் நம்ம பட்டிமன்றத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்கிறேன். துளசி ரீச்சரும் பெனாத்தலாரும் கலக்கி எடுத்துட்டாங்க. அடுத்து பின்னூட்ட வெறியேன்னு பேச வரது கொத்ஸின் ரசிகர் மன்ற செயல் தலைவர் தேவ். வாங்க தேவு, வந்து பிழியுங்க சேவு!

நேத்து விளம்பரம் போட நேரமில்லாம ரெண்டு பேரை பேசச் சொல்லிட்டேன்னு டைரக்டர் கோச்சிக்கிட்டாரு. அதனால இன்னிக்கு ஒருத்தர் பேசின உடனே ஒரு சின்ன ப்ரேக். (என் நேரமடா, இந்த சின்னப் பொண்ணுங்க மாதிரி கையை ஆட்டிக்கிட்டே ப்ரேக் சொல்ல வேண்டியதாப் போச்சு. நல்ல வேளை குட்டியா ஒரு டவுசர் போட்டுக்கச் சொல்லாம விட்டாங்களே!)

தேவ்

பதிவுலகம் போற்றும் பின்னூட்டக் கலையின் பிதாமகனே... பின்னூட்ட இலக்கணத்தின் மொத்த உருவமே... உங்கள் பதிவுலக வாழ்க்கையில் இது ஒரு மைல் கல்லாம்...100 வது பதிவாம்... என்னச் சொல்லுவது... பதிவுகளின் எண்ணிக்கை என்பது எதிரணியில் இருக்கும் மதிப்பிற்குரிய நண்பர்களுக்கும் பிறருக்கும் வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்கும்..ஆனால் பின்னூட்ட வள்ளலாகிய உங்களுக்கு இதுவரை 10000 ஆயிரத்துக்கும் அதிகமான பின்னூட்டங்கள் வாங்கிய உங்களுக்கு பின்னூட்ட எண்ணிக்கையை வைத்து அல்லவா விழா எடுக்க வேண்டும்...

பதிவுகளின் எண்ணிக்கையை இங்கு நாளும் கூட்டுவோர் பலருண்டு..அது பதிவுலக இயல்பு..ஆனால் ஒரே பதிவை இட்டு அந்த பதிவிலேயே பின்னூட்டக் கச்சேரியை நிகழ்த்தி.. அந்தக் கச்சேரியை எண்ணிக்கைக்கே வலிக்கும் அளவுக்கு ஏற்றி போற்றி உயர்த்தும் உங்களுக்கு எதில் வெறி என்று ஒரு பட்டி மன்றம்...அதை விவாதிக்க ஒரு பதிவு..

எதிரணியில் இருக்கும் நண்பர்கள் செய்த முதல் குற்றம் அண்ணனின் பதிவுகளைப் படித்தது...பொதுவாக அண்ணனின் எண்ணற்ற என்னைப் போன்ற அன்புத் தொண்டர்கள் அண்ணன் பதிவை எவ்வாறு நோக்குகிறோம் என்பதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்...கேட்டப் பிறகாவது உண்மையைப் புரிந்து உடனே ஒத்துக் கொள்ளுங்கள்

கிரிக்கெட் ஸ்கோர் எப்படி பார்க்க வேண்டுமோ அப்படி பார்க்க வேண்டும் தலைவர் கொத்தனார் பதிவுகளை... சும்மா பந்துக்கு பந்து ரன் ஏத்தும் சச்சின் போல... தமிழ்மணத்தில் அண்ணன் பதிவு பின்னூட்டப் பகுதியில் தெரிய ஆரம்பித்ததும்... ஒவ்வொரு முறை ரிபிரெஷ் ஆகும் போதும்.. பின்னூட்டம் ஏறும் அழகைப் பார்த்து இருந்தால் இப்படி ஒரு வாதம் இடவே நீங்கள் முயன்று இருக்க மாட்டீர்கள்

உங்களுக்கு எல்லாம் பதிவு போடுவதோடு பணி முடிந்தது எனப் பின்னூட்டப் பெட்டியைத் திறந்து வைத்துவிட்டு உறங்கப் போய் விடுவீர்கள்..ஆனால் அண்ணன் ஸ்டைலே தனிய்யா....சும்மா பதிவு போட்டுட்டு. கீ போர்டு நிமிர்வதற்குள் பின்னூட்ட வரிசையில் முதல் ஆளாய் நின்று பின்னூட்ட விளையாட்டை அண்ணனே ஆரம்பித்து வைக்கும் அழகு என்ன....அது ஒரு அழகான வெறி என இந்த இடத்தில் கூறிக்கொள்கிறேன்..
அண்ணன் போட்டக் கடைசி பத்து பதிவுகளில் 1000 பின்னூட்டங்களை அனாசயமாகத் தொட்டவர் என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்...அவசரத்தில் உப்புமாத் தின்று விட்டு இங்கே மேடையேறியிருக்கும் அருமை நண்பர்களுக்கு எப்படித் தெரியும்...

பின்னூட்டப் புயலாரின் சாதனைகளை அவர் தம் இலவசம் என்ற பதிவிற்குள்ளே அடக்க நினைக்கிறார்கள் எதிரணி நண்பர்கள்... அண்ணன் பின்னூட்டக் கோலம் போடாத தமிழ் பதிவு என்பது இனி தமிழ் மணத்தில் பிறக்கப் போகும் பதிவு என்றே அர்த்தம்..அந்த அளவுக்கு பதிவுகளில் பின்னூட்டச் சுனாமியாய் புகுந்துப் புறப்படும் ஆற்றல் படைத்தவர் எங்கள் அண்ணன்,

பதிவுகளுக்கு நேரமுண்டு...பின்னூட்டங்களுக்கு நேரம் காலமுண்டா... ஒரு நாளுக்கு 24 மணி நேரமென்றால் தன் பின்னூட்ட நற்பணிக்காகவே அடுத்த நாளிடம் எக்ஸ்ட்ராவாக இரண்டு மணி நேரம் கடன் வாங்கி பின்னூட்டப் பணி புரியும் எங்கள் அண்ணனை ஒரு உப்புமாச் சட்டிக்குள் அடைத்து வைக்க நினைக்கும் உங்களைப் பார்த்தால் எனக்குச் சிப்பு சிப்பாக வருகிறது,..

அவரவர் பதிவினைப் பாருங்கள்..உங்களால் கண்டு கொள்ளாமல் விடப் பட்டப் பின்னூட்டங்கள் எத்தனை... நீங்கள் பதில் சொல்லத் தயங்கிய பின்னூட்டங்கள் எத்தனை...வெளியிடத் தயங்கிய பின்னூட்டங்கள் எத்தனை... மொத்தப் பின்னூட்டங்களுக்கு ஒற்றை பின்னூட்டத்தில் நன்றி நவின்று நகர்ந்த தருணங்கள் எத்தனை? இப்படி எதாவது ஒரு நிகழ்வை அண்ணனின் பதிவினில் காட்ட முடியுமா?

அண்ணனின் பின்னூட்ட வெறி ஒரு கட்டத்தில் கரை உடைத்துப் பொங்கி கடலாக பாய...அதைத் தொடர்ந்து பின்னூட்டக் கயமை என அந்த கலையை ஆதிக்க வர்க்கம் அறிவித்து அண்ணன் மீது பின்னூட்டக் கயமைப் பிரிவு போலீஸ்காரை ஏவி விட்டது உலகறிந்த செய்தி..அந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் போது அண்ணன் எங்களுக்கு உப்புமா வழங்கவில்லை.. பின்னூட்டங்கள் தான் வழ்ங்கினார் என்பது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுத வேண்டிய செய்தி

ஆயிரம் பின்னூட்டங்கள் வந்தாலும் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் பதில் பின்னூட்டம்... நக்கல் பின்னூட்டத்துக்கு நயமான பின்னூட்டம்...கேலிப் பின்னூட்டத்திற்கு கலக்கலானப் பின்னூட்டம், அனானியாக வந்து உசுப்பேத்திப் பின்னூட்டினாலும் அதற்கும் தக்க பின்னூட்டம் என அசத்தும் அண்ணனை எங்கள் பின்னூட்டப் பேரசானை... உப்புமா எனச் சொல்லுவதை எதிர்த்து இந்த நிமிடமே டீ குடிக்கும் போராட்டத்தை அறிவிக்க ஆயுத்தமாக உள்ளேன்... அண்ணனின் விழா என்பதால் காபியும் குடிக்க தயார் என அறிவிக்கிறேன்...

பொதுவாக அண்ணனுக்காக உணர்ச்சிவசப் படும் கோடானு கோடி தொண்டர்களில் முதல் தொண்டன் நான்..அந்த முறையில் அண்ணனின் பின்னூட்டப் பணிகளுக்காகவே அவருக்கு உலகமெங்கும் ஆயிரமாயிரம் மன்றங்கள் இயங்கி வருகின்றன என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்

வாழும் பின்னூட்ட வரலாறு அண்ணன் கொத்ஸ் அவர்களின் 100வது பதிவிற்கு அண்ணனை வாழ்த்தி வணங்குவதோடு.... அண்ணனின் பின்னூட்ட வெறியை மீண்டும் நினைவுப்படுத்தி நிலைனிறுத்தி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.

சாலமன் பாப்பையா


பெனாத்தலார் பின்னூட்ட உயரெல்லை பத்திப் பேசினா இவரு பின்னூட்ட கயமை பத்திப் பேசிட்டாரு. அவரு பப்ளிஷ் பண்ண டயம் சோன் பத்திப் பேசினா இவரு 24 மணி நேரமும் பின்னூட்டம் போடறதைப் பத்திப் பேசிட்டாரு. தடாலடியா டீ குடிப்பு போராட்டம் அறிவிச்சுட்டாரே அடுத்தது என்ன போண்டா தின்னும் போராட்டமான்னு கேட்க வந்தா அதுக்கு வலையுலகில் அர்த்தமே வேறயாமே. அதுனால பக்கோடா தின்னும் போராட்டம் ஒண்ணு ஆரம்பிங்கப்பா. அடுத்து பக்கோடா தின்ன வருவது, அட, உப்புமா சுவையைப் பத்திப் பேச வருவது நம்ம இராமநாதன் அவர்கள். வாங்கய்யா.

(தொடரும்)

Monday, December 03, 2007

கோதாவில் பின்னூட்டநாயகியும் உப்பு மாமாவும் - பட்டிமன்றம் பாகம் 2

சாலமன் பாப்பையா

விளம்பர இடைவேளை எல்லாம் முடிஞ்சு மீண்டும் நம்ம பட்டிமன்றத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்கிறேன். இப்போ முதலில் பேசப்போறது நம்ம பின்னூட்ட நாயகி துளசி ரீச்சர். வாங்கம்மா வாங்க.

துளசி ரீச்சர்

முதல்லே அனைவருக்கும் வணக்கம். உப்புமாவா, பின்னூட்டமா என்றதுதான் விவாதமுன்னா.........கொஞ்சம் நீங்களே யோசிங்க. உப்புமா...... ஹஹ்ஹஹா....... மறுநாளே ஊசிப்போயிரும். பின்னூட்டங்கள் அப்படியா? நாளாக ஆக மெருகு கூடுமேயன்றிக் குறையாது. இது புதுப்புதுக்கருத்துக்கள் ஊற்றுபோல பொங்கிவரும் ஆழ்கிணறு.

ஆழமா(??) எழுதும் பதிவர்களின் பதிவுகளில் பார்த்தீங்கன்னா.......பதிவையும் விடப் பின்னூட்டங்களிலே இருக்கும் கருத்துப் பரிமாற்றங்கள்(???) அதி'ரசமா' இ(னி)ருக்கும். பின்னூட்டம் வரலைன்னா கவலையே படாத பதிவர்கள் இருக்கலாம். ஆனால் (நல்ல) பின்னூட்டம் வந்ததால் மகிழ்ச்சி அடையாதவர்கள் இருக்கவே முடியாது. நம்ம பதிவுகள் நல்லதோ சொத்தையோ, மக்கள் அதைப் படிச்சிருக்காங்கன்றதுக்கு ஆதாரமே பின்னூட்டம்தான். அது கும்மியானாலும் சரி, கோலாட்டமானாலும் சரி.

பின்னூட்டங்களை மதித்து, அதுக்குப் பின்னூட்டங்களைப் போடறதுன்றது ஒரு கலை. எல்லாருக்கும் எளிதாக் கை வராத ஒரு கலை. 'வருகைக்கு நன்றி, கருத்துக்கு நன்றி'ன்னு சப்பையாப் பதில் சொல்லாம,ஆடற மாட்டுக்கு...அடடா ..... சரி. ஆடற பின்னூட்டத்துக்கு ஆடியும், பாடற பின்னூட்டத்துக்குப் பாடியும் பதில் சொல்லணும். எப்பப் பின்னூட்டங்கள் வருமுன்னே தெரியாத ஒரு நிலையில் கண் துஞ்சாமல் ( பதம் சரியா?) மெய் வருத்தம் பாராமல் உடனுக்குடன் அதுகளை 'மாடு விரட்டிப் பட்டியில்' அதாங்க பெட்டியில்...எந்தப் பெட்டியா? சரியாப்போச்சு விடியவிடிய ராமாயணம் கேட்ட கதைதான் போங்க....பின்னுட்டப்பெட்டியில் அடைச்சு, 'அதுக்குத் தண்ணி காமிக்கறது' லேசுப்பட்ட வேலையா?

பின்னூட்டத்துக்குப்போய் இவ்வளவு மெனெக்கெடணுமான்னு கேக்கறவங்க நெஞ்சுலே கை வச்சு யோசியுங்க. உங்களில் எத்தனைபேர் பின்னூட்டிட்டு, அது பப்ளிஷ் ஆச்சா ஆச்சான்னு போய்ப்போய் பார்த்து கவுண்ட்டரை ஏத்திக்கிட்டு இருந்தீங்க? ஆகலைன்னா என் பின்னூட்டத்துக்கு என்ன ஆச்சுன்ற எதிர்க்கேள்வி வேற....... இவ்வளோ என்னத்துக்கு? பப்ளிஷ் பட்டனை ஒரு முறைக்குப் பலமுறையா அழுத்தி ஒரே பின்னூட்டம் நாலைஞ்சுதடவை வெளிவர்றதைக் கவனிச்சிருப்பீங்கதானெ?

என்னவோ இப்ப ப்ளொக்கர் பகவான் அருளாலே பின்னூட்ஸ் எல்லாம் உங்க மெயில் பொட்டிக்கே வந்துருது. கவுண்(ட்)டரும் கம்னு கிடக்கார். உப்புமா ஒரு பூனைன்னா பின்னூட்டம் ஒரு யானை. பூனையைக் கவனிக்காமப்போறவங்க இருப்பாங்க. யானையைக் கவனிக்காம இருப்பாங்களா? இல்லே இருந்துற முடியுமா ? ஏன்? அதோட பிரமாண்டம் அப்படி!!!

எதைச்சொன்னாலும் எழுதுனாலும் 'எங்கே இதுக்குச் சான்று?'ன்னு கேக்கும் மக்கள்ஸ்க்கு இந்த இடத்தில் இன்னொண்னும் சொல்லிக்க ஆசைப்படறேன். பின்னுட்ட வெறிதான் என்பதற்கு சான்று வேணுமா ? இங்கே இந்தப் பட்டிமன்ற அறிவிப்புலேயே பாருங்கைய்யா..!!!! 'நான் உப்புமா, நானுப்புமா 'ன்னு உப்புமாக் கட்சியாளுங்கக்கூட அதைப் பின்னூட்டத்துலே வந்துதான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. பின்னூட்டங்களைக் கவனிச்சு, யார் யார் ஆதரவு தராங்கன்னுக் கவனிச்சுக்கிட்டே இருக்காங்கைய்யா....கவனிச்சுக்கிட்டே இருக்காங்க. இப்பப் புரிஞ்சிருக்குமே உங்களுக்கு எந்தச் சுவை மிகுதியா இருக்குன்னு (கடைசி வரியை சிவாஜி ஸ்டைலில்,நடிகர்திலகம் சிவாஜிய்யா படிக்கவும்.)

வெறும் நூறு பதிவுக்குப் ஆயிரக்கணக்கில் பின்னூட்டங்கள் வாங்கி இருப்பது வெறி என்று நீங்கள் நினைத்தால் அது வெறிதான். ஏன்? நாய்க்கு மட்டும்தான் வெறி பிடிக்கணுமா? மனுஷன் நாயைவிடக் கேவலமா? ஷாஜகானின் காதல் வெறிதான் இன்னிக்கு உலகம் முழுசும் வாயைப்பிளந்து 'ஆ'வெனப்பார்க்கும் அதிசயம். பணவெறி, நிறவெறின்னு வெறிகள் நிரம்பின உலகத்திலே என்
அருமை மாணவரான கொத்ஸின் பதிவுகளில் விஞ்சி....விஞ்யென்ன விஞ்சி?
மிஞ்சி இருப்பதும் பின்னூட்டவெறிதான் என்பதில் மிகவும் பெருமைகொண்ட ரீச்சருள்ளத்துடன் ( தாயுள்ளம் மாதிரி இது ஒரு உள்ளமுன்னு வச்சுக்குங்க) நூறு பதிவு கண்ட கொத்ஸ் நீடூழிவாழ்ந்து இன்னும் பலநூறு பதிவுகள் காணட்டுமென வாழ்த்துகின்றேன்.

வணக்கம்.


சாலமன் பாப்பையா

கும்மி ஆனாலும் சரி கோலாட்டமானாலும் சரி என பேசி பெண்கள் அனைவரையும் கவர்ந்துட்டாங்க துளசி. இவ்வளவு வெறித்தனமா பேசின இவங்களுக்குப் பதில் சொல்ல வராரு உப்பு மாமா அப்படின்னு எல்லாரும் செல்லமா கூப்பிடற வலைமாமணி பெனாத்தலார் அவர்கள். வாங்கய்யா வந்து ப்ளாஷுங்க, ச்சீ விளாசுங்க.

பினாத்தல் சுரேஷ்


ஊசிப்போவதுதான் உப்புமா என்ற சமையலறைக் கண்ணோட்டத்தோடு மட்டும் பார்க்கும் மதிப்பிற்குறிய ரீச்சர் அக்கா, உப்புமா என்பது என்போன்ற, கொத்ஸ் போன்ற பதிவர்களின் ஜீவனோபாயம் என்பதை முதற்கண் புரிந்து கொள்ளுங்கள்!

உப்புமா என்பது பதிவிடுதல் மட்டுமே, வெறி அல்ல என்ற பார்வையிலிருந்து வெளியே வாருங்கள். உப்புமாவும் ஒருவகை வெறிதான்! பின்னூட்டத்துக்கு அல்ல, ஹிட்டுக்கு வெறி.

சூடான தலைப்பை ஒட்டி வெட்டிப் போடுவது, நாலணா பெறாத மேட்டரை முதல் நாலு வரிகளில் பில்ட் அப் கொடுத்து ஊதிப் பெரிதாக்குவது, வலைப்பதிவர்களின் பெயர்களைத் தலைப்பில் வைத்து அனைவரையும் ஆசைகாட்டுவது, நன்றி என உணர்ச்சிவசப்பட்டு தலைப்பு கொடுத்து உள்ளே போய்ப் பார்த்தால் "டிக்கெட் காசு போக நாலணா திருப்பிக் கொடுத்த பேருந்து நடத்துனருக்கு நன்றி" என்று ஏமாற்றுவது, விடைபெறுகிறேன் என்ற தலைப்பில் "ஆஹா தமிழ் வலைப்பதிவுகளுக்கு வந்ததடா நல்ல காலம்" என்று நினைத்துக்கொண்டு உள்ளே போனால் அல்பமாய் குவிஸ் வைத்து விடை கேட்பது.. இதுதான் உப்புமா.. இப்படிப்பட்ட பதிவுகள் இல்லாவிட்டால் கொத்ஸின் பதிவுகள் பூரிபோல் நூறாக உப்புமா? நேர்மையானவர் பார்வையில் இப்பதிவுகள் தப்புமா? இப்படி பதிவு போடாவிட்டால் பின்னூட்டங்கள் அவர் மெயிலை ரொப்புமா?

தமிழ்மணத்தில் பின்னூட்ட உயரெல்லை என ஒரு கருத்தாக்கத்தைக் கொண்டுவந்தபோது முதலில் கலங்கக்கூடிய ஆள் என எல்லாரும் நினைத்தவர் கொத்ஸ்.. ஆனால் தன் உப்புமாமேல் உள்ள நம்பிக்கையால் பின்னூட்டம் வந்தாலென்ன, முகப்பைவிட்டுப் போனாலென்ன என தன்கடன் உப்புமா செய்து கிடப்பதே என்று கருமமே கண்ணானார் நம் கொத்ஸ். இதிலிருந்தே தெரியவில்லையா அவருக்கு இருப்பது பின்னூட்டவெறியல்ல, உப்புமா வெறிதான் என்பது?

இவருடைய உப்புமா வரலாறை சற்றே திரும்பிப் பார்ப்போம். இவருடைய பதிவுகளில் முதல்முதலாக பேசப்பட்ட பதிவு "போலி டோண்டுவும் மறுமொழி மட்டுறுத்தலும்".. அன்றல்ல இன்றல்ல, என்றும் தமிழ் வலைப்பதிவுகளில் ஹிட் வாங்கித் தரக்கூடிய முக்கியமான் குறிச்சொல் டோண்டு - திட்டினாலும் படிப்பார்கள், வாழ்த்தினாலும் படிப்பார்கள். அதுவும் கூட போலி சேர்ந்தால் - தமிழ்மணம் படிப்பவர்களுக்கு அடுத்த நொடி க்ளிக்காவிட்டால் வலிப்பே வந்துவிடும். ஆனால் எல்லாருமே பின்னூட்டம் போட அஞ்சும் களம் இஃது! பின்னூட்ட வெறியா இப்படி ஒரு பதிவிடச் சொல்லும்? இத்துடன் அன்றைய ஹாட் டாபிக்கான மறுமொழி மட்டுறுத்தலையும் சேர்த்தது ஹிட்டுக்கு மண் சுமக்கும் வெறி அன்றி வேறு என்ன? உப்புமா இலக்கணம் மீறாமல், பதிவுக்குள் இவற்றைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை! இந்த தரமான உப்புமாவுக்குக் கிடைத்த பரிசுதான் 400க்கு மேல் பின்னூட்டங்கள்.

நீங்கள் சொல்கிறீர்கள்,

// உங்களில் எத்தனைபேர் பின்னூட்டிட்டு , அது பப்ளிஷ் ஆச்சா ஆச்சான்னு போய்ப்போய் பார்த்து கவுண்ட்டரை ஏத்திக்கிட்டு இருந்தீங்க ? ஆகலைன்னா என் பின்னூட்டத்துக்கு என்ன ஆச்சுன்ற எதிர்க்கேள்வி வேற ....... // என்று.

ஏன் அவர் உடனடியாக பப்ளிஷ் செய்வதில்லை? ஏனென்றால் உப்புமாக்கலையை - ஹிட் வெறியை ஒரு விஞ்ஞானமாகப் பயின்றவர் கொத்ஸ். உடனே வெளியிட்டு உடனே பதில் சொன்னால் ஒரு ஹிட், நேரம் பார்த்து வெளியிட்டு (அமெரிக்க நேரம், அமீரக நேரம், இந்திய நேரம் இங்கிலாந்து நேரம் - எல்லாம் கொத்ஸுக்கு அத்துபடி) அதில் ஒரு 100 ஹிட் பார்த்து, பிறகு இன்னொரு நேரம் பார்த்து பதில் சொல்லி இன்னொரு 100 ஹிட் பார்ப்பது பின்னூட்ட வெறியா ஹிட் வெறியா?

வெறும் வெண்பாப் பதிவிலும் குமரன் என்ற சகவலைப்பதிவரை இழுப்பது, நன்றி, விடைபெறுகிறேன், தமிழ்மணத்தில் 33% ஒதுக்கீடு, ஈழ நண்பர்களுக்கு கேள்வி, விளிம்புநிலை மாந்தர்களும் ஊடகச் சார்புநிலைகளும் (அவருக்காவது புரிஞ்சிச்சா இந்தத் தலைப்பு?) க்ரீமி லேயரை ஏன் தூக்கணும்?, கமலின் வலி எனக்குப் புரிகிறது, துளசி டீச்சருக்கு சமர்ப்பணம், சர்வைவல் ஆப் பிட்னஸ் என்று எல்லா நேரங்களிலும் வைத்த தலைப்புகளிலேயே தெரிகிறதே இவருடைய உப்புமா வெறி?

சான்று சான்றுன்னு சலம்பிகிட்டிருக்காய்ங்களே துளசி அக்கா, சாதா பதிவரெல்லாம் 100ஆவது பதிவுன்னா என்ன பண்ணுவாங்க? "வணக்கம், இது என் நூறாவது பதிவு"ன்னு ஒரு லைன் மேட்டர் எழுதி, அதுக்கு நன்றி நன்றின்னு ஒரு டைட்டிலைக் கொடுத்தாலே போதும், 100க்கு வாழ்த்து, வாழ்த்த வயதில்லை, திட்ட திடமில்லைன்னு கும்மி, உங்கள் சேவை நாட்டுக்குத் தேவைன்னு ஆதரவு, வரிக்கு வரி உடன்படுகிறேன், படிச்சிட்டு வந்து பதில் சொல்றேன் (எழுதினதே ஒரு வரி) அப்படி இப்படின்னு 100 பின்னூட்டம் தேத்திடலாமே, பின்னூட்டவெறியா இருந்தா அதானே பண்ணியிருப்பாரு கொத்ஸும்? ஆனா என்ன பண்ணாரு? அவரு தன்னோட உப்புமா பாசத்தைக் காட்டினாரு, டைட்டில்லே என்னன்னு புரியாம மையமா எதையோ எழுதினாரு, வர ஆளுங்களை ரிப்பீட் ஆடியன்ஸ் ஆக்க பின்னூட்டத்துலயும் விடாம உப்புமா கிண்டிகிட்டே இருக்காரு.. இது எதுக்கு சான்றுன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாக்க வாணாம்?

நட்சத்திர வாரத்திலும் விடாமல் உப்புமா கிண்டிய கொத்தனாருக்கு பின்னூட்டவெறியை தாராளமாக, ஏராளமாக விஞ்சி இருப்பது ஹிட் வெறியே - உப்புமாச் சுவையே என்று ஆணித்தரமாக, போல்டுத் தரமாக, ஸ்க்ரூத் தரமாகக் கூறி வாய்ப்புக்கு நன்றிசொல்லி கிண்டுகிறேன், நன்றி வணக்கம்.


சாலமன் பாப்பையா


உப்புமா இது தப்புமான்னு நினைச்சேன். ஆனா சும்மா கிண்டி எடுத்துட்டீரே. ஆணி, போல்ட்டு, நட்டு, ஸ்க்ரூ அப்படின்னு ஒரு ஹார்ட்வேர் ஸ்டோரே திறந்துட்டாரு பெனாத்தலார். இதுக்கு எந்த மாதிரி ஆயுதங்களை வெச்சு பதில் சொல்லப் போறாரு நம்ம தேவ் அப்படின்னு பார்க்கலாம். அவரு வர வரையில் பார்வையாளர்கள் நீங்கள் எல்லாரும் உங்க வாதங்களை எடுத்து வையுங்க.


(தொடரும்)

Sunday, December 02, 2007

ஒன்றானவன் - இரண்டானவன் - இப்ப நூறானவன்! பட்டிமன்றம் பாகம் 1!

மாயண்ணன் வந்திருக்காக மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக மற்றும் நம் உறவினர் எல்லாம் வந்திருக்காக. வாம்மா மின்னல் அப்படின்னு ஒரு மீசைப் பார்ட்டி சவுண்ட் விடறது நம்ம எல்லாருக்கும் தெரியும். அந்த மாதிரி இன்னிக்கு நம்ம பதிவில் துளசி ரீச்சர் வந்திருக்காக, பெரியவர் பினாத்தலார் வந்திருக்காக, தலைவர் தேவ் வந்திருக்காக, ரஷ்ய பனிக்கரடி இராம்ஸ் வந்திருக்காக, ரொம்ப முக்கியமா நம்ம பதினெட்டுப்பட்டி பஞ்சாயத்துக்கு நாட்டாமை, ச்சீ, பட்டிமன்றதுக்கெல்லாம் நடுவரா இருக்கிற சாலமன் பாப்பையா வந்திருக்காக.

என்னடே விசேஷம், இம்புட்டு பேரும் ஒண்ணா வந்திருக்காகன்னு பாக்கீயளா? நாமளும் கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா பதிவு போட்டுக்கிட்டு இருக்கோம். இப்போ 100 பதிவு போட்டுட்டோமுன்னு நம்ம ஆளுங்க கிட்ட சொல்லப் போக அவங்க பொங்கல் தீவாளின்னு நாள் கிழமை வந்தா பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்துறதுதேன் மொறை. அதனால நம்ம 100ஆவது பதிவுக்கும் அவர் தலைமையில் பட்டிமன்றம் நடத்தணுமுன்னு ஒரே அடம். அவனவன் எம்புட்டு வேகமா 100, 200ன்னு பதிவு போடறான், அதுல 1000க்கு மேல பதிவு வேற போட்டவக எல்லாம் இருக்காங்க. இதுல நாம 100 பதிவு போட்டதுக்கு எல்லாம் கொண்டாட்டமான்னு கேட்டா அதெல்லாம் அப்படித்தான். நாங்க பாத்துக்கிடுதோம் நீர் சும்மா இரும்வேன்னு சொல்லிட்டு ஏற்பாடு செஞ்சுட்டாக.

என்னமோ பட்டிமன்றமாம். நம்ம சாலமன் பாப்பையாதான் நடுவரா இருக்காராம். நான் இப்படி ஓரமா இருந்து பாக்கப் போறேன் நீங்களும் வாங்களேன். நடுவர் பாப்பையா அவங்க பேச ஆரம்பிச்சுட்டாக. என்னான்னு கேப்பமா? அவரு பேசுத கொரலு மறந்து போச்சுன்னா இங்ஙன போயி ஒரு வாட்டி பாத்துக்கிடுங்கடே.

பூமிப் பந்தில் பல்வேறு தளங்களில் கொத்தனாரின் நூறாவது பதிவை கொண்டாடும் வலை மக்களே, உங்கள் அனைவரையும் வாழ்த்தி இந்த பட்டிமன்றத்திற்கு வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு என்னான்னு சொல்லிட்டாங்க. அதாவது இன்னைக்கு எத்தனையோ பேரு பதிவு எழுதறாய்ங்க. அதை எத்தனை பேரு படிக்காய்ங்க? ஆனா நம்ம கொத்தனார் எழுதினா எல்லாரும் வந்து படிச்சுடறாங்க இல்லையா. படிக்கலைன்னா அவர் வந்து தனிமடல் எல்லாம் போட்டு, மின்னரட்டையில் வந்து மிரட்டி நம்மளைக் கூட்டிக்கிட்டு வந்திடறாரு அது வேற விஷயம். ஆனா வந்து படிச்சுடறாங்க.

இதுல பாருங்க அவனவன் வந்து என்னென்னமோ எழுதறான். துறை சார்ந்த பதிவுன்னு எழுதறான், நுரை சார்ந்த பதிவுன்னு சோப்பு போடறான். ஆனா எல்லாத்துக்கும் வராத ஒரு கூட்டம் நம்ம கொத்தனார் பதிவுக்கு வருதுன்னா அதுல ஒரு சுவை இருக்கணும். சுவைன்னு சொன்னா பல விதமான சுவை இருக்கு. நகைச்சுவை இருக்கு, அரசியல் சுவை இருக்கு, கவிதைச் சுவை இருக்கு. இப்படி என்னென்னமோ இருக்கு. ஆனா இவரு பதிவுல இருக்கிறது உப்புமா சுவை அப்படின்னு சொல்ல ரெண்டு பேரு வந்திருக்காங்க. இந்த சுவையுணர்வு கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கிற ஆளுங்கதான். ஒருத்தர் வலைமாமணி, உப்புமாமா என பல பட்டங்களை வாங்கின பெனாத்தலாரு. அவரு கூட அந்த அணியில் இருக்கிறது அவரு கட்சி ஆளு மருத்துவர் இராமநாதன்.

சுவை என்னய்யா சுவை. அந்தச் சுவை எல்லாம் தாண்டி அவருகிட்ட ஒரு வெறி இருக்குப் பாருங்க அந்த வெறிதான் அவர் வெற்றியில் பெரும்பங்கு அப்படின்னு சொல்லறாங்க இந்த எதிர் அணியினர். வெறி என்ற சொல்லுக்கு நடுவில 'ற்' அப்படின்னு போட்ட வெற்றிதானே. அதுனால அவங்க சொல்லறது சரியாத்தான் இருக்கும் போலத் தெரியுது. அதுவும் என்ன வெறியாம் - பின்னூட்ட வெறியாம். அட இதை யாரு சொல்லறாங்கன்னு பார்த்தா பின்னூட்ட நாயகி அப்படின்னு பெயர் எடுத்த வலையுலக மாதாமகி துளசி ரீச்சர். இந்த சப்ஜெக்ட் பத்தி இவங்க சொன்னா சரியாத்தானே இருக்கும். இவங்க கூட ஆமாம் போடப் போறது சும்மா தல தல அப்படின்னு சொல்லி கொத்தனாரை ஏத்தி விட்டு வேடிக்கை பார்க்கும் தெள்ளுதமிழ் நாயகன் தேவ்.


ஆக, நாம இன்னிக்கு பேசப் போகும் தலைப்பு "கொத்தனாரின் பதிவுகளில் விஞ்சி நிற்பது உப்புமாச்சுவையா அல்லது பின்னூட்ட வெறியா? ". வலையுலக சர்வீஸ் படி சீனியரான துளசி அவர்களை முதலில் வந்து பின்னூட்ட வெறியே என்ற தலைப்பில் பேசுமாறு அழைக்கிறேன். வாங்கம்மா வாங்க.


(தொடரும்)

Thursday, November 29, 2007

கலைஞரே, உம்ம வேலையைப் பார்த்துக்கிட்டு போம்!

நார்மலா, நம்ம பதிவுலகில் சில டாபிக்குகள் எல்லாம் உடனே பல பேர் பதிவு போடற மேட்டராத் தெரியும். அது போலவே அந்தந்த சீசனில் நிறையா பேரு அந்த தலைப்பில், அந்த விஷயத்தைப் பத்தி பதிவு போடுவாங்க. இந்த தலைப்பா இருந்தா அதுக்குப் பதிவு போட ஒரு குழு, அந்தத் தலைப்பா இருந்தா அதுக்கு வேற ஒரு கும்பல் என எழுதப்படாத விதிகளும் உண்டு. இதில் ஆதரவுப் பதிவுகள், எதிர்ப்புப் பதிவுகள் எல்லாம் வரும்.

இன்னைக்கு அந்த மாதிரி ஒரு பரபரப்பான நாளா இருக்கும் அப்படின்னு எதிர்பார்த்தேன். அப்படி எதுவும் இல்லாததால நானே இந்தப் பதிவைப் போடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

இப்போ ஒரு முறை தலைப்பைப் படிச்சுக்குங்க. உடனே பிளட் பிரஷர் எல்லாம் ஏறி என் மூதாதையர் பத்தியும் என் பனியனுக்குள் நெளிவது பத்தியும் பேசத் தயாராகும் முன்னரே சொல்லிடறேன். இது நான் சொன்னது இல்லை. இதைச் சொன்னது மலேசியாவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான நஸ்ரி அசீஸ் என்பவர்.

மலேசியாவில் சில கோரிக்கைகளை முன் வைத்து ஹிந்திராப் என்ற அமைப்பின் மூலம் ஒரு போராட்டம் நடைபெற்றது. இந்த கோரிக்கைகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இந்த பதிவும் அது பத்தி இல்லை. ஆனால் போலீஸர் கண்ணீர் புகை குண்டுகள் வீசிக் இக்கூட்டத்தினரைக் கலைத்தது பற்றியும், கிட்டத்தட்ட 250 பேரை கைது செய்தததையும் தமிழக முதல்வர், இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த இந்தக் கூட்டதினரை நடத்திய விதம் குறித்த தம் வருத்தத்தைத் தெரிவித்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த மலேசிய அமைச்சர் அசீஸ் 'Tamil Nadu Chief Minister M Karunanidhi should "lay off" ' எனச் சொல்லி இருக்கிறார். கிட்டத்தட்ட உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க எனப் பொருள்படும்படி பேசி இருப்பது மிகவும் மரியாதை குறைவாகவே கருத வேண்டியிருக்கிறது. இது மலேசியா. அவரது இடம் தமிழகம். அங்கே இருக்கும் பிரச்சனைகளை அவர் கவனித்தால் போதும் எனப் பொருள்படும் படியாகப் பேசி இருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

தமிழர்களைப் பற்றி கவலைப்பட தமிழகத்தின் முதல்வருக்குத் தகுதி கிடையாதா? ஒரு மூத்த அரசியல்வாதியை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை இப்படித் தரகுறைவாக விமர்சித்திருப்பதற்கு நாம் அனைவரும் நம் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து மலேசியாவில் இருக்கும் பதிவர்களோ, தமிழகத்தில் இருக்கும் பதிவர்களோ பதிவிட்டிருப்பதாகத் தெரியவில்லை. மற்ற விஷயங்களுக்கு கொந்தளித்து எழுபவர்கள் இதற்குச் சும்மா இருப்பதன் பின்புலம் புரியவில்லை. மீண்டும் சொல்கிறேன் மலேசிய அமைச்சரின் பேச்சு கண்டிக்கப் பட வேண்டியது. இதற்காக இந்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போராட்டம் குறித்து அமெரிக்கா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் எந்த நாட்டு குடிமக்களும் தம் அமைதியான முறையில் தம் கருத்துக்களை வெளியிடும் உரிமை இருப்பதாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு ஒரு முறை வெளிநாட்டு வாழ் இந்தியர்களைப் பற்றி நான் எழுதிய பொழுது, வேறு ஒரு நாட்டின் குடிமக்களாக மாறிவிட்ட பின் அவர்கள் இந்தியர்கள் இல்லை என கருத்துத் தெரிவித்தவர்கள், இன்று மலேயா வாழ் தமிழர்களுக்காக கலைஞர் குரல் கொடுத்ததைத் தவறென்று சொல்வார்களா எனத் தெரியவில்லை.

Friday, November 16, 2007

சா(ை)ல சிறந்தது!

என்னாத்த சொல்ல? இந்த மாசம் இந்த போட்டோ பதிவு குழுவினர் குடுத்து இருக்கும் தலைப்பு "சாலை". நிறையா பேர் ரொம்ப ஆர்வமா கலந்துக்கிட்டு இருக்காங்க. இந்த ஜோதியில் என்னையும் சேரச் சொல்லி நம்ம வெண்பா வாத்தி படுத்தி எடுக்கறாரு. நாமளும் படம் எடுக்கத் தெரியாத விஷயத்தை வெளிய சொல்ல வேண்டாமேன்னு ரொம்ப வேலை அது இதுன்னு பந்தா விட்டா, யோவ் ரோட்டைதானே போட்டோ எடுக்கணும் சும்மா வீட்டு வாசலில் போயி எடுத்து அனுப்புமய்யா அப்படின்னு அன்பா ஆணையிட்டுட்டாரு.

சரின்னு நானும் ஒரு நாள் காலையில் ஆபீஸ் போகும் முன் காமிராவை எடுத்துக்கிட்டு போய் நின்னா, பனி விழும் நகர்புறம், தெரியாதே எதிர்புறம் அப்படின்னு பாலுமகேந்திரா படம் மாதிரி ஒரே பனியா இருக்கு. சரின்னு ஒரு படம் எடுத்தாச்சு.


அப்புறம் அந்த இடத்தையே ரெண்டு நாள் கழிச்சு பளிச்சுன்னு வெயில் அடிக்கும் போது போய் எடுத்தேன். எடுத்துட்டு தங்கமணி கிட்ட காமிச்சா ரோட்டை படம் எடுக்கச் சொன்னா என்ன இது வீட்டைப் படம் எடுத்துட்டு வந்து நிக்கறீங்க? ஒரு வேலை ஒழுங்காச் செய்யத் தெரியுமான்னு வழக்கமான பல்லவியைப் பாட ஆரம்பிச்சுட்டாங்க.
சரி அவங்க சொல்லிட்டாங்களேன்னு இந்தப் பக்கம் வந்து ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் படம் எடுத்துப் போட்டாச்சு. இலையுதிர் காலம் என்பதால் மரங்கள் எல்லாம் பச்சை யூனிபார்மை கழட்டிவிட்டு கலர் கலராய் ட்ரெஸ் பண்ணிக் கொண்டு அட்டகாசமாய் இருப்பதால் சாதாரண சாலைகளும் சும்மா சூப்பரா இருக்கு. கொஞ்சம் பிரயத்தனப்பட்டிருந்தால் நல்ல லொகேஷனாய் போய் படம் பிடித்திருக்கலாம். ஆனால் நம்ம சோம்பேறித்தனம்தான் ஊரறிஞ்சதாச்சே!!



நமக்கு இந்த போஸ்ட் ப்ரொடக்ஷன் கட் பேஸ்ட் எல்லாம் தெரியாது. அதனால எடுத்த படத்தை அப்படியே போட்டுடறேன். நடுவர்களா, கொஞ்சம் பார்த்து எதாவது செய்யுங்கப்பா.

Monday, November 12, 2007

ஸ்ருதி சேரா சங்கீதம்

இதனை எழுதும் பொழுது பேசாப் பொருளைப் பேச துணிந்த உணர்வு எனக்கு. எழுத வேண்டுமா வேண்டாமா? இதனை நான் எழுதுவதை இசை ஆர்வலர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? தெரியவில்லை இருந்தாலும் எழுதுகிறேன். கர்நாடக சங்கீதம் ஒரு சிறந்த நுண்கலை, அதிலும் கடந்த பத்து இருபது வருடங்களில் பலருடைய பங்களிப்பால் வெகுவாக வளர்ந்து வரும் கலை. கடந்த சில வருடங்களாக இதில் சாதி மத ரீதியாக இருக்கும் பாகுபாடுகள் பற்றி பலர் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். இது பொதுவாக சமுதாயத்தில் காணப்பட்ட பாகுபாடுகளின் பிரதிபலிப்புதான். அதே சமயம் சாதி மதங்களைத் தாண்டி சில மிகப் பெரும் இசையாளர்களிடையே குரு சிஷ்ய உறவோ அல்லது பாடுபவர்கள், உடன் வாசிப்பவர்கள் என்ற உறவோ உறுதி பெற்று இருந்ததைப் பற்றிய புரிதலும் நம்மிடையே முழுதாக இல்லை.

ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி இன்று நம் கண் முன் தென்படும் ஒரு மிகப் பெரும் பாகுபாடு கர்நாடக சங்கீத உலகில் பெண்களுக்கு எதிராக நடத்தப் படும் பாகுபாடுதான். நேரடியாகச் சொல்ல வேண்டுமானால் அன்றும் சரி இன்றும் சரி தாங்கள் ஒரு பெண் பாடகருக்கு உடன் வாசிப்பதையோ அல்லது தனக்கு ஒரு பெண் கலைஞர் உடன் வாசிப்பதையோ மறுக்கும் கலைஞர்கள் அனேகம் பேர். முற்காலத்தில் இருந்த சமுதாய கட்டுப்பாடுகளும், அன்று இருந்த மனத்தடைகளும் பெண்களுக்கு சுதந்திரம் தராத நிலையில் இது போன்ற சூழம் ஏற்பட்டிருக்கிறது. இத்தடைகளை மீறி வந்தவர்கள்தான் இத்துறையில் வெற்றி பெற்ற பெண் கலைஞர்கள். ஆனால் இந்த பாகுபாடும் இன்றைய தலைமுறையினர் மட்டுமல்லாது அடுத்த தலைமுறையிடமும் பரவி வருவதுதான் வேதனை.

இன்று பல ஆண் கலைஞர்கள் தமக்கென ஒரு பெயர் கிடைக்கும் வரை பெண் கலைஞர்களுக்கு உடன் வாசிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. இன்னும் பச்சையாக சொல்ல வேண்டுமானால் தன்னை ஆண் கலைஞர்கள் உடன் வாசிக்க அழைக்கும் வரை பெண்களுடன் மேடையை பகிர்ந்து கொள்கிறார்கள். சிலர் தான் இனி பெண்களுக்கு பக்க வாத்தியமாக செல்லப் போவதில்லை என்ற தீர்மானத்தை பெருமையுடனே சொல்லிக் கொள்கின்றனர். இத்தகைய தீர்மானங்களை வரவேற்கும் விதமாகவே இன்றைய சூழ்நிலை இருக்கிறது. இதற்குப் பின்னால் பெரிதாக அரசியல் அல்லது சமுதாயக் காரணங்கள் எல்லாம் இல்லை. தனக்கு வாய்ப்புகள் தேவை என்ற வரையில் பெண்களுடன் வாசிக்கத் தயங்காத இவர்கள் தமக்கென ஒரு பெயர் வந்த பின் பெண் கலைஞர்களைக் கழற்றி விட்டு விடுகின்றனர். இன்று எல்லா இடங்களிலும் இருக்கும் வேலை முடிந்த பின் தூக்கி எறிந்து விடும் (Use and Throw) கோட்பாடுதான் இங்கேயும் கடைபிடிக்கப் படுகிறது.

இதுவே பெண் பக்க வாத்திய கலைஞர்களை எடுத்துக் கொண்டால், ஆண் கலைஞர்களுக்கு இணையான தகுதி இருந்தாலும் தமக்கு ஆண் பாடகர்கள் சரியான வாய்ப்பு தரவில்லை என்பது இவர்கள் குறை. இவர்கள் பெண்கள் என்பதாலே இவர்களுக்கு வாய்ப்பு குறைவது உண்மைதான். ஒரு ஆண் பாடகராக நான் இதற்குச் சொல்லக் கூடிய ஒரே காரணம் - ஆண் ஆதிக்க மனப்பான்மை!

இதுக்கு ஆண் கலைஞர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும்? அதிக அளவில் கூறப்படக் கூடிய காரணம் - பெண்களின் ஸ்ருதி மிகவும் மேல்ஸ்தாயியாக இருப்பதால் வயலினாகட்டும் மிருதங்கமாகட்டும் அந்த ஸ்ருதியில் நன்றாக ஒலிப்பதில்லை என்பதுதான். மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது ஒரு சரியான காரணமாக இருந்தாலும் கொஞ்சம் யோசித்தால் இதன் அபத்தம் புரியும். இவர்கள் முதலில் பெண்களுக்கு வாசிக்கும் பொழுது இது ஒரு பொருட்டாகத் தெரியவில்லையா? அல்லது ஆண் பாடகர்களில் மேல்ஸ்தாயியில் பாடுபவர்களுக்கும், பல விதமான கருவிகள் வாசிப்பவர்களுக்கும் இவர்கள் வாசிப்பதில்லையா? அப்பொழுது இது ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லையா? ஆக இந்த காரணம் சரியான ஒன்றாகத் தோன்றவில்லை.

மற்றொரு பிரபலமான காரணம் ஒரு பெண் பாடகரின் கச்சேரி நல்ல விதமாக நடந்தால் அதற்கான பெருமை அந்த பெண் கலைஞருக்கே போய் சேருகிறது என்றும் தான் எவ்வளவு நன்றாக வாசித்தாலும் தமக்கு எந்த விதமான பெருமையும் வருவதில்லை என்பார்கள். இது ஆண் பாடகர்களுடன் வாசிக்கும் பொழுதும் நிகழக்கூடியதுதானே? அப்பொழுது மட்டும் பரவாயில்லையா? பொதுவாக பெண் பாடகர்களுக்கு பக்க வாத்தியம் வாசித்தால் தமக்கு அந்தஸ்து கிடைப்பதில்லை என்றும் மேலும் ஒரு படி சென்று பெண் பாடகர்களுக்கு வாசிக்காவிட்டால்தான் தனக்கு அந்தஸ்து என்றும் கூடச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் இது ஒரு சரியான அணுகுமுறையே இல்லை. அந்தஸ்து என்பது ஒருவரது திறமையை சக கலைஞர்களும் பொது மக்களும் உணர்ந்து கொள்வதால் வருவதே தவிர யாருக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறார்கள் என்பதால் இல்லை.

இன்னும் சொல்வார்கள் பெண் கலைஞர்களுக்கு வாசிக்கும் பொழுது சுதந்திரமாக வாசிக்க முடிவதில்லை என்று. இதற்கு என்ன அர்த்தம்? ஒரு குறிப்பிட்ட முறையில் வாசிக்க வேண்டும். அது பெண் பாடகிகளோடு வாசிக்கும் பொழுது முடிவதில்லை. அதனால் என்ன? ஆண் பாடகர்களில் பல விதமாக பாடுபவர்கள் இல்லையா? அதற்கு ஏற்றால் போல் வாசிக்க முடியும் பொழுது இப்படி வாசித்தால் மட்டும் தவறா? பாடகர்கள், அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தாங்கள் உடன் வாசிப்பவர்களை உத்தேசித்து தாங்கள் பாடும் விதத்தை சிறிதே மாற்றிக் கொள்வது இல்லையா? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இதெல்லாம் இயற்கையான சிறு மாற்றங்கள்தானே?

அடுத்ததாக பெண்கள் ஏன் ஆண்கள் போல் பாட வேண்டும்? ஒரு காலத்தில் பெண் பாடகிகளுக்கு கிடைக்கப் பெற்ற பெரும் பாராட்டு அவர்கள் ஆண்கள் போல் பாடுகிறார்கள் என்பதாகும். என்னளவில் இது ஆண் ஆதிக்கத்தைப் பறைசாற்றும் கடும் சொற்கள் இவை. பெண்களின் இசை ஆண்களின் இசையை விட வித்தியாசமாகத்தான் இருக்கும், இருக்கவும் வேண்டும். நாம் இந்த வித்தியாசத்தைப் போற்ற வேண்டும். ஆகையால் பெண் பாடகர்களுக்கு உடன் வாசிக்கும் பொழுது பக்க வாத்தியக்காரர்களும் வித்தியாசமாகத்தான் வாசிக்க வேண்டும். பெண் பாடகர்களுக்கு ஆண்களை ஒத்த இசை ஞானம் இருப்பதை மறுக்க முடியாது. இதனை எந்த ஆண் பக்க வாத்தியக்காரரும் மறுக்கவும் மாட்டார்கள். இது சரி இல்லை எனச் சொன்னால் ஆண் கலைஞர்கள் பெண் கலைஞர்களை விட அதிக திறமையும் ஞானமும் உடையவர்கள் என ஆகி விடும். இது நம்பக்கூடிய விஷயமா என்ன?

பெண் பாடகர்கள் ஆண் பக்க வாத்தியக்காரர்களை சரி வர நடத்துவதில்லை என்பது என்னிடமே சிலர் சொல்லி இருக்கும் ஒரு குற்றச்சாட்டு. அதையும் பார்க்கலாம். ஒரு பக்கவாத்தியக்காரரிடம் ஒரு ராகத்தை மேலோட்டமாகவோ அல்லது தனியா வாசிக்கும் நேரத்தைக் குறைக்கச் சொன்னாலோ அது தவறுதான். அதைச் செய்தது ஆண் பெண் என்ற பேதமே கிடையாது. ஆனால் இதை ஒரு பெண் செய்தால் அது பெருங்குற்றமாக கருதப்படுகிறது. நான் ஒரு ஆண் பக்கவாத்தியக்காரரிடம் இப்படி ஒரு உதவி கேட்டால் அது கோரிக்கை ஆனால் அதுவே ஒரு பெண் பாடகர் கேட்டால் அது தவறு எனப் பார்ப்பது சரியா? இதையே நான் பாடும் பொழுது என்னுடன் வாசிக்கும் ஒரு பெண் பக்க வாத்தியகாரரிடம் இப்படி நடந்து கொண்டால் அது தப்பு இல்லையா? இது போன்ற தவறுகளை இரு பாலருமே செய்யலாம். அது யார் செய்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது. இதுதான் நான் சொல்ல வருவது.

ஒரு பெண் பக்கவாத்தியக்காரருக்கு ஆண் பக்கவாத்தியக்காரர்கள் அளவிற்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. நல்ல திறமையுள்ள பெண் கலைஞர்களை உதாசீனப்படுத்துவதற்கு எந்த விதமான காரணமும் கிடையாது. ஆனால் இன்று பெண்களுக்கு வாசிக்காத ஆண் கலைஞர்களைத்தான் நமக்கு பக்கவாத்தியம் வாசிக்க விரும்புகிறோம். இது ஒரு மடத்தனமான மனோநிலை என்பதைத் தவிர என்ன சொல்ல? நம்மால் திறமையுள்ளவர் என கணிக்கப்பட்ட அனைவரையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டும். ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல். இதுதான் என் நிலைப்பாடு.

இவ்வளவு எல்லாம் பேசுகிறானே, இவன் ஒரு பக்கவாத்தியக்காரனா? இவனுக்கு என்ன தெரியும்? என்ற கேள்விகள் வரும். நியாயமான கேள்விதான். அதற்கு நான் சொல்லும் பதில் ஒன்றுதான். சில பெண் பாடகர்கள் பாடிக் கேட்கும் பொழுது இவர்களுக்கு ஒரு நாளாவது நாம் பக்கவாத்தியம் வாசிக்கும் பாக்கியம் கிடைக்காதா என நினைப்பேன் என்பதுதான். அது மட்டுமில்லாமல் எனக்காக எத்தனையோ பெண் பக்கவாத்தியக்காரர்கள் வாசித்து இருக்கின்றனர். அவர்கள் எனக்கு வாசித்த ஆண் பக்கவாத்தியக்காரர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதைச் சொல்வதிலும் எனக்குத் தயக்கம் கிடையாது.

நாம் எடுக்கும் நிலைப்பாடுகள் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அதற்கான விடைகள் நம்முள்ளேயே கிடைக்கும். இதைப் பற்றிப் பேசப் படுவதே விலக்கப்பட்ட ஒன்றாக இருப்பதற்கான காரணம் என்ன? தான் செய்வதில் தவறொன்றும் இல்லை என்ற நம்பிக்கையினால்தான் இது பற்றி பொது இடங்களில் பேசுவதை ஆண்கள் விரும்புவதில்லையா? படித்த நம்மால் நம் நம்பிக்கைகள் பற்றி தைரியமாக பேச முடியாதா? அதைவிட நாம் செய்வது தவறு என்ற புரிதல் வரும் பொழுது இதுவரை செய்தது தவறென்று ஒத்துக் கொள்ள முடியாதா? இந்த விஷயத்தில் நம் நிலைப்பாடு தவறென்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

இதெல்லாம் நான் எழுதினது இல்லை. பிரபல கர்நாடக சங்கீதப் பாடகர் திரு டி.எம்.கிருஷ்ணா சமீபத்தில் ஹிந்து நாளிதழில் எழுதிய ஒரு கட்டுரையின் தமிழாக்கம். உங்கள் கருத்தையும் பின்னூட்டத்தில் சொல்லி விடுங்களேன்!

Sunday, November 04, 2007

குயி...குயி...குயி...குயிஜு! விடை தரும் தருணம்!

ஆச்சுங்க! இன்னும் ஒரு நாள் கூட நம்மால மேனேஜ் பண்ணி இருக்க முடியாது. அவ்வளவு ரெஸ்பான்ஸ். இந்த புதிர் போடும் போது சொன்னேன் சில நண்பர்களிடம் இந்த கேள்விகள் சிலதை ப்ரிவ்யூ காண்பித்ததாக. அதில் பெனாத்தலாரும் ஒருவர். அவர் கேள்விகளைப் பார்த்துட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லாம் கேள்விகளைப் பார்த்துட்டு ஓடிப் போயிடுவாங்க அப்படின்னு கருத்து சொன்னர். நானும் அந்த பயத்தோடதான் போட்டேன். ஆனா இவ்வளவு பேர் இவ்வளவு ஆர்வத்தோட கலந்துப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை. கிட்டத்தட்ட 40 - 50 பேர் வந்து கலந்துக்கிட்டாங்க. வந்த பின்னூட்டங்களும் அதுக்கு நான் சொன்ன பதிலும் எனப் பார்க்கும் பொழுது கிட்டத்தட்ட 1200 பின்னூட்டங்கள். அதுவும் எல்லா பதில்களையும் படிச்சு, சரி பார்த்து, மார்க் போட்டு, பதில் சொல்லி, அடுத்த பாகத்தை ரெடி பண்ணி என பெண்டு நிமிர்த்து விட்டது.

இனிமேலும் இது தனியாளாகச் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. இவ்வளவு ஆர்வம் இருக்கிறதுனால இதையும் ஒரு குழுவா சேர்ந்து செய்யலாம் எனப் பார்க்கிறேன். இதுக்காக புதிர்கள் என்ற பெயரில் ஒரு புதிய பதிவு ஒண்ணு தொடங்கி வைத்திருக்கிறேன். இதனைப் பற்றிய விபரங்கள் பின்னர் வெளிவரும். இவ்வளவு ஆர்வமாக நடந்த புதிர் போட்டியின் பொழுது இதனைச் சொல்வதில் மிகவும் பெருமையடைகிறேன்.

மீண்டும் இப்போட்டிக்கே வருவோம். இதுவரை பத்து பேர் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் கூறி 54 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். முதன்முதலாக முழு மதிப்பெண்கள் பெற்றவர் பெனாத்தல் சுரேஷ்தான். உங்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் பெனாத்தலாரே! வெற்றிக்குப் பரிசு என்ன எனக் கேட்ட உங்களுக்கு எனது பதில் - அடுத்த போட்டியில் நீங்கள் கேள்வி கேட்கலாம், க்விஸ் மாஸ்டராக இருக்கலாம். :)

கேள்விகளைப் பல இடங்களில் தேடித்தான் எடுத்தேன். நமக்குத் தெரியாத விஷயங்களில் கேள்வி கேட்பது எவ்வளவு தப்பான காரியம் எனத் தெரிந்து கொள்ள வைத்தது இப்போட்டிகளில் இரு கேள்விகள். முதலில் வரலாறு 1. ஹிந்தி சினிமா பற்றி அதிகம் தெரியாத நான் இக்கேள்வியைக் கேட்டு இருக்கக் கூடாதுதான். இதில் அமிதாப் மற்றும் இந்திராகாந்தி ஆகியோரை சரியாகச் சொன்ன பலரும் தயாரிப்பாளராக பல பெயர்களை முன்வைத்தனர். அதற்குப் பல ஆதாரங்களையும் தந்தனர். சிலர் நான் எதிர்பார்த்த விடையையும் தந்ததால் அதற்கு மட்டுமே முழு மதிப்பெண்கள் வழங்குவது என முடிவு செய்தேன். இதற்கு நடுவே சரியான விடை எது என நான் கூகிளுகையில் அப்படி ஒரு சிபாரிசு கடிதமே நான் வாங்கவில்லை என அமிதாப் சொன்ன ஒரு செவ்வியும் கிடைத்தது. இந்த முறை க்விஸ் மாஸ்டரின் முடிவே சரியானது என அழுகுணி ஆட்டம் ஆடினாலும் அடுத்த முறை இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அடுத்த கேள்வி விஞ்ஞானம் 5 - போபியா பற்றிய கேள்வி. நான் எதிர்பார்த்த விடை ஹைட்ரோபோபியா, ஆனால் விக்கி சுட்டியுடன் அனேகம் பேர் போட்டோபோபியாவும் சரியான விடையே எனச் சொன்னதால் அதற்கும் மதிப்பெண் தந்துவிட்டேன். மருத்துவர் இராமநாதனோ இவை எல்லாமே தவறு. சரியான விடை வேறொன்று எனச் சொல்லி அது பற்றி விளக்க முயன்றார். அது பற்றி அவர் விக்கியில் விரிவாக எழுதுவார் என நம்புகிறேன். இத்துறையிலும் நமக்கு அதிகப் பரிச்சியம் இல்லாததால் விளைந்த குழப்பம் இது. அடுத்த முறை இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

பாகம் 4ல் நான் நன்றி சொன்ன ஆறு பேர் முறையே - டுபுக்கு, ஜீவ்ஸ் என்ற ஐயப்பன், கூகிள், பெனாத்தல் சுரேஷ், என் தங்கமணி,ஆர்வமாய் கலந்து கொண்ட பதிவர்கள். இதில் கடைசிக் கேள்விக்கு விக்கி பசங்க, சற்று முன் குழு, வ.வா. சங்கம் எனப் பல பதில்கள் வந்தது ஆச்சரியம்தான். ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு தன்னடக்கம் கூடாது!

மீண்டும் ஒரு முறை ஆர்வத்துடன் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். ஒவ்வொரு கேள்விக்கும் அழகாக அதிக தகவல்களுமாக தந்த பாலராஜன் கீதா அவர்களுக்கும் வந்து பிழை திருத்தங்கள் சொன்ன ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி. பாலா, மீதி இருக்கும் கேள்விகளுக்கும் உங்கள் பாணிப் பதில்கள் தேவை.

ஆஹா, இம்புட்டு நேரம் பேசிட்டு விடைகளைச் சொல்ல மறந்துட்டேனே. எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள் இங்க இருக்கு. இறுதி மதிப்பெண் நிலவரம் இங்க இருக்கு. பார்த்துக்குங்க.

அடுத்த முறை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றியுடன் விடைபெறுவது
உங்கள்
கொத்ஸ் .... கொத்ஸ்.... கொத்ஸ்....

Thursday, November 01, 2007

என் வால் ஏன் ஆடுது? - க்விஸ் பாகம் 4

என்னடா இவன் போன பதிவிலேயே கேள்விகள் எல்லாம் கேட்டாச்சுன்னு சொன்னானே. இப்போ என்னமோ புதுசா நான்காம் பாகத்தோட வந்திருக்கானேன்னு பார்க்கறீங்களா? இந்த வாரம் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் என நான்கு பதிவுகள் போட்டாச்சு. நல்ல வரவேற்பைப் பெறாம இருந்தா அப்படியே ஓடிப் போய் இருக்கலாம். ஆனா எல்லாரும் ஆர்வத்தோட வந்து கலந்துக்கிட்டதால, வெள்ளிக்கிழமையும் ஒரு பதிவு போட்டா நட்சத்திர வாரத்துக்கு அப்புறம் தினம் ஒரு பதிவு போட்ட வாரம் எனச் சொல்லிக்கலாமே. அதான் இந்தப் பதிவு.

சரி மேட்டருக்கு வருவோம். இந்த வாரம் நல்லா போனதுக்கு சில பேர் காரணமா இருந்திருக்காங்க. அவங்களுக்கு நன்றி சொல்லத்தான் இந்தப் பதிவு. இப்போ தெரியுதா என் வால் ஏன் ஆடுதுன்னு! 'அட நாயே!, இதுக்காடா இம்புட்டு பில்டப்!' அப்படின்னு திட்ட வந்தா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நிறையா பேருக்கு நன்றி சொல்லணும். இருந்தாலும் நம்ம ஸ்டைல் தலைப்புக்கு ஆறு கேள்வி என்பதால் அவர்களில் ஆறு பேருக்கு இங்க நன்றி சொல்லப் போறேன். அதுவும் அவர்களைப் பற்றிய கேள்விகளாக. அவர்களைக் கண்டுபிடியுங்க பார்க்கலாம்.

நன்றி நவில்தல்

1) இந்த கேள்விகள் தயார் செய்யக் காரணமாக இருந்தது இவர் என்னிடம் வேறு ஒரு இடத்தில் பயன்படுத்த கேள்விகள் தயார் செய்து தருமாறு கேட்டதுதான். இவரின் பதிவைப் பார்த்துத்தான் நானும் பதிவெழுத வந்ததே என்று பல இடங்களில் சொல்லி இருக்கிறேன். எனது பள்ளி ஜூனியரான இவரின் நகைச்சுவை ததும்பும் எழுத்திற்கு ஒரு தனி வாசக வட்டம் உண்டு. இவரின் சீடர் என்றே புனைப்பெயர் வைத்துக் கொண்ட ரசிகர் உட்பட.

2) முதல் பதிவிலேயே சொல்லி இருந்தேன், தமிழில் கேள்விகளைத் தயார் செய்தவர் ஒரு சிறப்பாசிரியர் என்று. இவருக்கு கற்றுத் தருவதில் பெருத்த ஆர்வம். வெண்பாவாகட்டும், புகைப்படமாகட்டும் இவர் கற்றுத்தர முதல் ஆளாக நிற்பார். இரு பெயர்களில் எழுதி வரும் இவரை தொடர்ந்து எழுத வைப்பதுதான் சவாலான வேலை, காடு மலை கடந்து வந்தோம் சாமியேன்னு பாட்டெல்லாம் பாடணும் போல. மூன்றாம் பாகத்தில் இந்தத் தோழர் பணிபுரியும் நிறுவனத்தைப் பற்றிய கேள்வி ஒன்று இருக்கிறது.

3) இவர் பிறந்தது செப்டம்பர் 7, 1998. இந்த ஆறு பேரில் இவர்தான் இளையவர் என்றாலும் இவரின்றி என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. உங்களில் பலராலும் கூட. இவரின் பெயர் உலகளவில் தெரிந்த ஒன்று என்றாலும் அது வந்தது ஒரு எழுத்துப்பிழையினால் என நம்பப்படுகிறது.

4) இவர் ஒரு தொழில் முறை ஆசிரியர். அதனால் நான்கு ஆண்டுகளாக (சமீபத்தில்தான் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததாகச் சொன்னார்) எழுதிக் கொண்டிருக்கும் தன் வலைப்பூவில் கூட அடிக்கடி ஆசிரியராக மாறிவிடுவார். "நகைச்சுவை என்பதற்காகக் கோமாளித்தனமோ வலிந்த திணிப்புகளோ இல்லாமல் இயல்பு நடையிலேயே எழுத முடிவது" இவரது சாமர்த்தியம் என வேறு ஒரு பதிவரால் பாராட்டப்பட்டவர். இதுக்கு மேல் என்ன சொன்னாலும் கண்டுபிடித்து விடுவீர்கள் என்பதால் ஸ்டாப். இவரில்லாமல் இந்த புதிர்களுக்கு கிடைத்து இருக்கும் 'நல்ல' தலைப்புகள் கிடைத்து இருக்காது.

5) இவரை உங்களில் அனேகம் பேருக்குத் தெரியாது. ஆனால் உங்களில் பலரை இவருக்குத் தெரியும். இவரது முழுநேர வேலைகளில் ஒன்று அலுவலகத்தில் மட்டுமில்லாது வீட்டிலும் மடிக்கணினியை கட்டி மாரடித்துக் கொண்டிருக்கும் ஒரு சாதுவான ஜீவனைப் பராமரிப்பது. கடந்த ஒரு வாரமாக ஒரு வித நோய்வாய்ப்பட்டு கணினி அருகிலேயே கிடக்கும் இந்த ஜீவனுக்கு இருக்கும் இடத்தில் வந்து சாப்பாடு கொடுத்து நல்ல விதமாகக் கவனித்து வரும் ஆத்மா. இவரால் காப்பாற்றப்பட்டு வரும் அந்த 'வாயில்லா ஜீவனை' உங்கள் எல்லாருக்கும் தெரியும்!

6) இது ஒருவரல்ல. ஒரு குழு. இதில் ஒருவரையாவது உங்கள் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தெரிந்து இருக்கும். புதிதாகத் தகவல்கள் தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகம் உள்ளவர்கள் இவர்கள் அனைவருமே. ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம், சரி, சிங்கம், புலி இன்னும் பலவகை பிராணிகளாய் புறப்படும் இவர்களது பெயர்கள் ஒரு இணையக் கோப்பில் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அது கடந்த சில நாட்களில் தமிழ்வலையுலகில் அதிகம் பார்வையிடப்பட்டதாகவும் கேள்வி.

இது தவிர இன்னும் எத்தனையோ பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். சில கேள்விகளைப் பத்தி அதிக தகவல்கள் தந்த, கேள்வி சரியில்லை என விவாதம் செய்த மருத்துவர்கள் எஸ்.கே., ராமநாதன், மேற்பார்வை பார்த்து தனது பொறுப்பை சரியாக செய்து தந்த துளசி ரீச்சர், வெளியில் இருந்து ஆதரவு தந்த பாபா என நன்றி சொல்ல வேண்டிய பட்டியல் நீண்டு கொண்டே போகும். எல்லாருக்கும் என் நன்றிகள்.

முன்பே சொன்னது போல் விடைகள் இந்திய நேரம் திங்கள் காலை வெளியிடப்படும். அப்பொழுது இந்த கேள்விகளுக்கும் விடை சொல்வேன். ஆனால் இது வரை கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்ன நீங்கள் இதற்குச் சொல்லாமலேயா போய் விடுவீர்கள்? :))