Tuesday, January 02, 2024

பெரு(ம்) பயணம் - 2

பெருவின் வரலாறு என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது இன்கா நாகரிகமும் மாச்சு பிச்சுவும்தான். ஆனால் அதன் வரலாறு மிகத் தொன்மையானது. ஏறத்தாழ இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் இங்கு வாழத் தொடங்கியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இன்கா நாகரிகத்திற்கு முன்னர் சேவின் (Chavin), பராகஸ் (Paracas), நாஸ்கா (Nasca), வாரி (Wari), மோச்சி (Moche) எனப் பல நாகரிகங்கள் தொடர்ச்சியாக இருந்து வந்ததற்கான சான்றுகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. 

ஆசியாவில் இருந்து வட அமெரிக்கா வழியாக தென் அமெரிக்காவிற்கு மனிதர்கள் வந்திருக்க வேண்டும் என யூகிக்கின்றனர் விஞ்ஞானிகள். முதலில் வடக்கு மற்றும் மத்திய கடலோரப் பகுதிகளில்தான் இவர்கள் வாழத் தொடங்கினர். ஆயகுச்சோ (Ayacucho) பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பிக்கிமாச்சே (Pikimachay) குகைகளில் கிடைத்த பழமையான கல் கருவிகள் மற்றும் இதர பொருட்களை ஆராய்ந்து அங்கு மக்கள் பொயுமு 12,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் இது குறித்த தீர்மானமான முடிவுகள் இதுவரை வரவில்லை. இது வரை கிடைத்துள்ள மனித உடல் பகுதிகளின் வயது பொயுமு 7000 ஆண்டுகள் என நிர்ணயித்துள்ளார்கள். இதே கால அளவில் குகை ஓவியங்களும் கிடைத்துள்ளன.

கரால் (Caral) என்ற இடத்தில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு முழுமையான நகரம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகக் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டு இருக்கிறது. இருபதாயிரம் பேர் வரை இந்நகரத்தில் வசித்திருக்கலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மக்கள் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென இந்நகரம் கைவிடப்பட்டு இருக்கிறது. அதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை. பூகம்பம் அல்லது காலநிலை மாற்றம் காரணமாக மக்கள் இந்நகரைக் கைவிட்டு வேறிடம் சென்றிருக்கலாம் எனக் கருதுகின்றனர். 




இதற்குப் பின் தோன்றிய முக்கியமான நாகரிகங்களைப் பற்றி பார்க்கலாம். 


சேவின் (1200 - 400 பொயுமு): மத்திய பெருவில் தோன்றிய இந்த நாகரிகம்தான் மூத்த நாகரிகமாகக் கருதப்படுகிறது. இவர்கள் அமைதியான இனத்தவராகத் திகழ்ந்தார்கள். போர்கள் புரிந்ததாகத் தெரியவில்லை. மண்பாண்டங்கள், நெசவு மற்றும் கல் வேலைகள் செய்வதில் திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. இவர்கள் கட்டடக்கலையில் சிறந்து விளங்கினார்கள். இன்றும் இவர்களின் கோயில் ஒன்றினை வ்வாரெஸ் (Huaraz) என்ற ஊரின் அருகே பார்க்கலாம். 


பராகஸ் (700 பொயுமு - 200 பொயு): தென்கடலோரப் பகுதிகள் வாழ்ந்தவர்கள் இவர்கள். பண்டைகால நாகரிகங்களில் இவர்கள் நெசவு செய்த துணிகள்தான் மிக நேர்த்தியானவை எனச் சொல்லலாம். அது மட்டுமில்லாமல் கிடைத்த சில மண்டை ஓடுகளை வைத்துப் பார்க்கும் பொழுது தலையில் ஓட்டை போட்டு எதோ சிகிச்சையும் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 


மோச்சி (200 - 1100 பொயு): வட கடலோரப் பள்ளத்தாக்குகளில் வாழ்ந்த இவர்கள்தான் முதல் நகர்புற நாகரிகம் எனச் சொல்லலாம். அக்கம்பக்கம் இருந்த சிறுகுழுக்கள் மேல் போர் தொடுத்து தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவாக்கியவர்கள் இவர்கள். சூரியனுக்கும் நிலவுக்கும் இவர்கள் எழுப்பிய கோயில்கள் அந்நாளில் மனிதர்களால் கட்டப்பட்ட பெரும் கட்டடங்களாகத் திகழ்ந்தன. இவர்களின் கல்லறைகளில் கிடைத்த பொருட்கள் மூலம் அரசர்கள், செல்வந்தர்கள், போர் வீரர்கள், பொது மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று நன்றாகத் தெரிய வருகிறது. 


நாஸ்கா (300 - 800 பொயு): பராகஸ் அருகே அமைந்த நாகரிகம் இது. இவர்களின் பொறியாளர்களின் திறன் வியக்க வைப்பது. பாலை நிலைத்தில் நிலத்தடியில் கால்வாய்கள் அமைத்து தண்ணீரைக் கொண்டு வந்து விவசாயம் செய்திருக்கிறார்கள். அதே போல நாஸ்கா கோடுகள் என்ற வியக்கத்தக்க ஓவியங்களையும் படைத்துள்ளனர். அவற்றை நாம் பின்னர் பார்ப்போம். 


வாரி (600 - 1100 பொயு): ஆண்டிஸ் மலைத்தொடரில் ஆரம்பித்த நாகரிகம் இது. போர் செய்து தம் எல்லைகளை விரிவடையச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்தவர்கள். அவர்களின் உச்சத்தில் அவர்களது எல்லை இன்றைய சீலேவில் இருந்து பொலிவியா வரை இருந்தது. மலைப்பகுதிகளில் படிகள் போலச் செய்து அதில் விவசாயம் செய்யும் முறையினை இவர்கள் திறம்படச் செய்தனர். 


இவர்கள் தவிர சிமு (Chimu), சசபோயாஸ் (Chachapoyas), இகா (Ica) இன்னும் பல நாகரிகங்கள் இந்தச் சமயத்தில் பெருவின் பல பகுதிகளில் தழைத்தன. இவர்களுக்கு பின் வந்தவர்கள்தாம் இன்கா. 


இன்கா (1200 - 1532 பொயு): பெரு என்றாலே இன்கா என்ற அளவுக்கு இவர்களின் தாக்கம் இன்னமும் இருக்கிறது.  மாச்சு பிச்சு மட்டுமின்றி நாடு முழுவதும் இவர்களது கோயில்களும் அரண்மனைகளும் நிறைந்து கிடக்கின்றன. இவர்களது உச்சம் ஒரு நூற்றாண்டுதான் என்றாலும் இவர்களது நாட்டின் எல்லைகள் தற்கால கொலம்பியாவில் இருந்து சீலே வரை நீண்டு இருந்தன. சுமார் 3500 மைல்கள். மாச்சு பிச்சு போகும் பொழுது இவர்களின் திறமைகள், கடவுள்கள், பழக்க வழக்கங்கள் பற்றி எல்லாம் விரிவாகப் பார்க்கலாம்.




இப்பேர்பட்ட நாகரிகம் எதனால் வீழ்ந்தது? வழக்கம் போல ஐரோப்பியர்களின் காலனியாதிக்கம்தான். ஸ்பெயினில் இருந்து வந்தவர்கள் சதித் திட்டம் தீட்டியும் போர் செய்தும் இவர்கள் எல்லோரையும் இல்லாமல் செய்தார்கள். அவர்கள் கொண்டு வந்த தொற்றுநோய்களுக்கு இவர்கள் பலியானார்கள். பிரித்தாளும் சூழ்ச்சிக்குச் சோரம் போனார்கள்.


ஸ்பானிஷ் படைகள் பெருவை கைப்பற்றியதையும், அவர்களிடமிருந்து விடுதலை பெற்ற நவீன பெரு பற்றியும் இன்று அங்கிருக்கும் நிலை பற்றியும் அடுத்த பகுதியில் படிப்போம். அதற்குப் பின் பயணம்தான்.


பிகு: படங்கள் இணையத்தில் எடுக்கப்பட்டவை.


8 comments:

துளசி கோபால் said...

இது இது இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் !

வரலாற்றுக் குறிப்புகளுடன் பயணக்கட்டுரை அருமை !

Tulsi Gopal said...

இது இது இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் !

வரலாற்றுக்குறிப்புகளுடன் பயணக்கட்டுரை அருமை !

Anonymous said...

இது இது இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் !

வரலாற்றுக்குறிப்புகளுடன் பயணக்கட்டுரை அருமை !

இந்த அநாமதேயம் நாந்தான்.

Tulsi Gopal

Anonymous said...

பொயுமு / பொ.ஆ.மு. ...எது? ஏன்?

இலவசக்கொத்தனார் said...

AD / BC என்ற கால அளவீடலை விடுத்து Common Era / Before Common Era என்று வரலாற்றாளர்கள் குறிக்கின்றனர். இவற்றை ஆங்கிலத்தில் CE / BCE என வழங்குகின்றனர். இவற்றின் தமிழாக்கம் பொது யுகம், பொது யுகத்திற்கு முன் (பொயு / பொயுமு).

நன்றி.

இலவசக்கொத்தனார் said...

ரீச்சர், பாஸ் மார்க் போட்டதுக்கு நன்றி. தொடர்ந்து படிச்சு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்க

Boston Bala said...

Excellent narrative and loving the travelogue

Vijay said...

👍🏽👍🏽