Friday, January 05, 2024

பெரு(ம்) பயணம் - 5

இன்னமும் பெருவின் கோஸ்டா பகுதியில்தான் சுற்றிக் கொண்டு இருக்கிறோம். கோஸ்டா என்றால் பாலை நிலம் என்றார்கள் ஆனால் லீமா அப்படி இல்லையே என்று நினைக்க வேண்டாம். ஏற்கனவே சொல்லியது போல ஆறுகள் இருக்கும் இடம் என்பதால் அது பாலை நிலம் போலில்லை ஆனால் கொஞ்சம் தள்ளி வந்தால் பாலை நிலம்தான் என்பதை நான் உணர்ந்து கொள்வோம். இதை நன்கு உணர லீமாவில் இருந்து சுமார் நான்கு மணி நேரத் தொலைவில் இருக்கும் பராகஸ் என்ற ஊருக்குப் பயணம் செய்வோம். 


முன்பே சொல்லியது போல் இந்த பயணங்கள் அனைத்தையும் எங்கள் முகவரே ஒருங்கிணைத்து அதற்குத் தேவையான அனைத்தையும் செய்துவிட்டதால் எங்கள் பணி நேரத்திற்குக் கிளம்புவது, ஊர் சுற்றிப் பார்ப்பது என்றானது. எந்த வித அழுத்தமுமே இல்லாமல் இருந்தது. வழக்கம் போல கடலை ஒட்டிய நெடுஞ்சாலையில் பயணம். முந்தும் வண்டிகளுக்கு இடம் விட்டு நிதானமாகச் சென்றார் எங்கள் ஓட்டுநர். நடுவே தென்படும் காட்சிகளைக் குறித்த விளக்கங்களைத் தந்து கொண்டிருந்தார் உடன் வந்த வழிகாட்டி. மதியம் பராகஸ் வந்து சேர்ந்தோம்.


இங்கு தங்கிய விடுதி பற்றி குறிப்பிட்டாக வேண்டும். கடலோரத்தில் அமைந்த விடுதி. பின்வழியா கடலுக்குச் சென்று விடலாம். எந்நேரத்தில் சென்றாலும் கடற்கரையில் பறவைகளைக் காண முடிந்தது. விடுதியின் வரவேற்பறை, சாப்பாட்டறை, பார் என எங்கு பார்த்தாலும் பழமையான பொருட்களை நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தனர். விடுதியின் உள்ளேயே ஒரு சிறிய அருங்காட்சியகம் கூட இருந்தது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது அங்கு எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெம்மிங்வே தங்கி இருந்து மீன் பிடித்ததைக் குறிப்பிடும் பதாகைதான். எழுத்தாளர்களுக்கு மரியாதை செய்யும் கலாச்சாரம் நம்மை மகிழச் செய்யும்தானே! 


பராகஸ் விடுதி



கரையோரப் பறவைகள்


சென்ற இடமெல்லாம் சிறப்பு


விடுதி அருங்காட்சியகத்தில்

க்வெட்சுவா மொழியில் பராகஸ் என்றால் மணல் மழை எனப் பொருள். கடலோரப்பகுதி என்பதால் வீசும் காற்றில் மண் எழுந்து மீண்டும் மழை போல விழுவதால் இந்தப் பெயர். அப்பொழுதே இந்தப் பகுதி பாலையாகத்தான் இருந்தது என்பதற்கு இது சான்று. பொயுமு 800ஆம் ஆண்டில் இருந்து பொயு 200ஆம் ஆண்டு வரை இங்கு பராகஸ் என்ற இனம் தழைத்தோங்கி இருந்தது. இவர்களின் நெசவுத் தொழில் மிகவும் நேர்த்தியானதாக இருந்தது. 


1820ஆம் ஆண்டு பெருவின் சுதந்திரத்திற்காகப் போராட வந்த சான் மார்ட்டின் இங்குள்ள கடற்கரையில்தான் கரையேறினார். அவர் தன்னுடன் ஆறு கப்பல்களைக் கொண்டு வந்திருந்தாராம். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியில் சுற்றுலாப் பயணம் வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதற்கேற்றாற்போல் பல விடுதிகள் கட்டப்பட்டன. சுற்றுலா இன்று இப்பகுதியின் முக்கிய தொழிலாக உள்ளது. 


மணற்மழை என்ற பெயர் கொண்ட இடத்தில் முதலில் செய்ய வேண்டியது மணல் விளையாட்டுகள்தான் என முடிவு செய்து பாலைவனத்தில் உள்ளே எங்களைக் கூட்டிச் சென்றார்கள். அங்கு பெரிய மணற்குன்றுகள்தாம். வேறு எதுவுமே இல்லை. அதற்காக வடிவமைக்கப்பட்ட ஊர்திகளில் எங்களை அமரச் செய்து கண்ணிலும் மூக்கிலும் மணல் நுழையாது இருக்க பிரத்யேகமாகச் செய்யப்பட்ட கண்ணாடிகளை அணிவித்தனர். பின்னர் அந்த வண்டிகளைப் பெருவேகத்தில் ஓட்டத் தொடங்கினர். இஷ்டம் போல வளைப்பதும், மேடுகளை ஏறுவதும் இறங்குவதும், ஒருவரை ஒருவர் முந்துவதுமாக தங்கள் வித்தைகளை முழுவதும் காட்டினர் அந்த ஓட்டுநர்கள். கடைசியாக ஒரு பெருங்குன்றின் உச்சியில் நிறுத்தி பனியில் சறுக்குவது போல ஒரு பலகையைக் கொண்டு நாங்கள் மண்ணில் சறுக்குவதற்கு உதவினர். இறங்குவதற்கு எளிதாக இருந்தாலும் அந்தப் பலகையைத் தூக்கிக் கொண்டு மீண்டும் மலையேறுவது கடினமாகத்தான் இருந்தது! இந்த மணல் விளையாட்டுகள் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.







அன்றிரவை விடுதியில் போக்கிவிட்டு அடுத்தநாள் நாங்கள் சென்றது பயேஸ்டாஸ் தீவுகளை (Islas Ballestas) நோக்கி. வட பயேஸ்டாஸ், மத்திய பயேஸ்டாஸ், தென் பயேஸ்டாஸ் என்ற மூன்று தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டம் பயேஸ்டாஸ் தீவுகள். இத்தீவுகளில் கரையேற விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மட்டுமே அனுமதி உண்டு. பொதுமக்கள் பராகஸ்ஸில் இருந்து படகு மூலம் இத்தீவுகள் சுற்றி வரலாம். இந்தத் தீவுகளில் வசிப்பவை ஏராளமான பறவைகள் மட்டும் கடல் சார்ந்த மிருகங்கள். கடல்நாய்கள், கடல் சிங்கங்கள், ஆமைகள், ப்ளெமிங்கோ, பெலிகன், கல், குவானோ என விதவிதமான மிருகங்களையும் பறவைகளையும் பார்க்க முடியும். ஹம்போல்ட் பென்குயின்கள் என்ற வகைப் பென்குயின்களைக்கூட இங்கு பார்க்கலாம். எதனால் இந்தச் செழிப்பு? 


பயேஸ்டாஸ் தீவு
புவியியல் பாடம் படித்தோம், வரலாற்றுப் பாடம் படித்தோம், கொஞ்சம் உயிரியல் பாடமும் படிப்போம். இதற்குக் காரணம் ஹம்போல்ட் பெருங்கடல் ஓட்டம் (Humboldt Ocean Current). தென் பசபிக் பெருங்கடலில் இருந்து குளிர்ந்த நீரை பூமத்திய ரேகை நோக்கி, தென்னமெரிக்காவின் மேற்குக் கடற்கரையை ஒட்டி இருக்கும் நீரோட்டம் இது. இப்பகுதியில் வெகுநாள் தங்கி ஆராய்ச்சி செய்த ஜெர்மன் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் அவர்களின் பெயர் சூட்டப்பட்ட இந்த நீரோட்டம் பெரு நீரோட்டம் என்றும் அழைக்கப்பெறுகிறது. தெற்கில் இருந்து வரும் குளிர்ந்த நீரானது வடப்பகுதியில் இருக்கும் நீரின் சூட்டினை ஏழு முதல் எட்டு டிகிரி செல்ஷியஸ் வரை குளிர்வித்துவிடுகிறது. கடலின் அடிப்பகுதியில் இருக்கும் வளங்களை இந்த நீரோட்டம் மேலெடுத்து வருகின்றது. இதனால் சீலே, பெரு, ஈகுவேடார் நாடுகளின் கடலோரப்பகுதிகள் மிக வளமானவையாக இருக்கின்றன.  மீன்வளம் அதிகரிக்க அவற்றை உண்டு வாழும் மற்ற விலங்குகளும் இங்கு ஏராளமாக வாழ்கின்றன. எல் நீன்யோ காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் இந்த சூழலமைப்பு கெடுவதாகச் சொல்கிறார்கள். 


உயிரியல் பாடம் போதும். மீண்டும் வரலாற்றுப் பக்கம் செல்வோம். கடலின் நடுவே பாறைகள். பாறைகள் நிரம்பப் பறவைகள். பறந்து சென்று கடலில் மீன்களைப் பிடிக்க வேண்டியது, பாறையில் வைத்து உண்டு பின் இளைப்பாற வேண்டியது. இதுதான் இவற்றின் வேலை. இவை இடும் எச்சத்தால் அப்பாறைகளே வெள்ளையாக மாறிவிட்டன. இந்த எச்சத்தின் பெயர் குவானோ (Guano). இப்பாறைகளின் மேல் இருந்த எச்சம் 20 மீட்டர் முதல் 70 மீட்டர் உயரம் வரை இருந்ததாம். 


குவானோ - பறவை எச்சம்

இந்த எச்சம் நல்ல உரம் என்பதை இன்கா நாகரிக காலத்திலேயே கண்டு கொண்டனர். ஆனால் பொயு 1850 காலகட்டத்தில் பெருவின் அதிபராக இருந்த தளபதி ரமோன் காஸ்டியா இந்த எச்சத்திற்கான மதிப்பை உணர்ந்து, வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு விற்கத் தொடங்கினார். அன்றைய பெருவின் பொருளாதாரத்தை கிடுகிடுவென உயர்த்தியது இந்த பறவை எச்ச ஏற்றுமதி. பின்னர் இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு இப்பொழுது கடுமையான விதிகளுக்கு உட்பட்டு வருடத்திற்கு மூன்று மாதங்கள் மட்டுமே குவானோ சேகரிப்பு நடைபெறுகிறது. 


பறவைகளின் கூச்சலையும் பென்குயின்களில் தளிர்நடையையும் கடலின் ஆட்டத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். உயிரியல் ரசிகர்களுக்கு அருமையான இடம் இந்தப் பயேஸ்டாஸ் தீவுகள்.









பராகஸில் இருந்து பயேஸ்டாஸ் தீவுகளை நோக்கிச் செல்லும் பொழுது பாறைகளில் வரையப் பட்ட ஒரு பெரும் சித்திரத்தைப் பார்க்க முடிகிறது. பராகஸ் கேண்டலப்ரா (Paracas Candelabra) என்று அழைக்கப்படும் இந்தச் சித்திரம் பாறைகளில் இரண்டு அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டுள்ளது. இச்சித்திரத்தின் உயரம் கிட்டத்தட்ட 600 அடி. யாரால் வரையப்பட்டது, எப்பொழுது வரையப்பட்டது என்பது பற்றி எந்தவித தீர்மானத்திற்கும் ஆராய்ச்சியாளர்களால் வரமுடியவில்லை. ஆனால் நவீன நாகரிகத்திற்கு முன்பாக எப்படி இவ்வளவு பெரிய சித்திரத்தை பாறைகளில் வடிவமைத்திருக்க முடியும் என்று பார்த்தால் ஆச்சரியம்தான். 


பராகஸ் கேண்டலப்ரா

இன்று படகில் இருந்து பார்த்தது ஒரு விதம் என்றால் நாளை நாம் பார்க்கப் போவது ஒரு விமானத்தில் ஏறி வானில் இருந்து…. 


பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன -  பராகஸ் புகைப்படங்கள் 





0 comments: