Sunday, March 04, 2007

இளம் சிறார்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு

இன்றைக்கு வீட்டில் சுவாரசியமான ஒரு சம்பவம் நடந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதுடன் அதைப் பற்றி உங்கள் கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாம் என நினைத்தே இந்த இடுகை.

என் நண்பன் அவர் குடும்பத்துடன் இந்த வாரயிறுதியை எங்களுடன் கழிக்க வந்திருந்தார். அவரது பையனுக்கு மூன்றரை வயதாகிறது. என் பையனுக்கு ஐந்தரை வயது. இருவரும் நல்ல நண்பர்கள். வாய் ஓயாமல் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்கள். இவர்களை வேடிக்கை பார்ப்பதே எங்களுக்கு ஒரு பொழுது போக்கு.

இன்று காலை இவர்களுள் ஒரு பலத்த வாக்குவாதம் நடந்தது போல் தோன்றியது. என்னவென்று சென்று பார்த்தால் இருவரும் அவரவர் தந்தையின் பெருமைகளைப் பேசிக் கொண்டு இருந்தார்கள். என் தந்தைதான் பலம் மிக்கவர், என் தந்தை செய்யும் வேலைதான் பெருசு என்றெல்லாம் பேசிக் கொண்டு இருந்தார்கள். இருவரும் தத்தம் தந்தைகளை ஒரு ஹீரோ அளவுக்கு உயர்த்திப் பேசியதும், தாங்கள் வளர்ந்த பின் தத்தம் தந்தைகளைப் போல் இருப்போம் எனச் சொன்னதும் கிட்டத்தட்ட ஒரு ஹீரோ வொர்ஷிப் அளவிற்கு இருந்தது.

இது எங்களிடையே ஒரு சுவாரசியமான பேச்சு ஒன்றைத் தொடங்கி வைத்தது. அதில் எழுந்த சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.

  • அது எப்படி இவர்களுக்குத் தம் தந்தைதான் உயர்வானவர் என்ற எண்ணம் வருகிறது? தம் தந்தையரை விட்டுக் கொடுக்காமல் பேச வேண்டும் எனத் தோன்றுகிறது?
  • இவர்கள் இருவரும் ஆண் பிள்ளைகளாக இருந்ததினால்தான் தந்தையரைப் பற்றிப் பேசினார்களா? இதுவே பெண் குழந்தைகளாக இருந்தால் தாய்மார்களைப் பற்றிப் பேசி இருப்பார்களா?
  • முதலில் பெற்றோர், பின் பள்ளி ஆசிரியர், பின் திரைப்பட நாயகர்கள் என்று எப்பொழுதும் நமக்கு ஏன் இப்படி வழிபாட்டிற்கு யாரேனும் தேவைப் படுகிறது?
  • இப்படி ஹீரோவாக இருப்பவர் சிறிய காலத்திற்குப் பின் மாறிக்கொண்டே இருப்பது ஏன்?

கேள்விகளை கேட்டாச்சு. 40க்கு எல்லாம் பயப்படாமா வந்து கருத்துக்களைச் சொல்லுங்கப்பா. இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு, உங்க இளமைக்கால ஹீரோக்கள் பத்தியும் சொல்லுங்க. தனிப் பதிவா போட்டா மறக்காம லிங்க் குடுங்க! :-D

Tuesday, February 27, 2007

சக்சஸ்! சக்சஸ்!

என்னடா இவன் பராசக்தியில் நடிகர் திலகம் சொன்ன வசனத்தை மீள்பதிவு செய்யறானேன்னு பாக்கறீங்களா! வேற ஒண்ணுமில்லை மக்கள்ஸ். நாம் நடத்திய சோதனை பெரும் வெற்றியைப் பெற்று விட்டது என்பதைச் சொல்லத்தான் இந்த பதிவு.

தமிழ்மணத்தில் பின்னூட்டங்கள் இற்றைப்படுத்துகையில் பின்னூட்டங்களின் உயரெல்லை முப்பதாக (இப்படி கரடுமுரடா வார்த்தைகளை எங்க இருந்து பிடிக்கறாங்கப்பா!) தீர்மானிக்கப் பட்டு அது சார்ந்த அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து, அதற்கு முன் சில பிரச்சனைகளை சந்தித்தாதால், வார்ப்புருவில் மாற்றங்கள் தேவையில்லை என்பதனை நிரூபணம் செய்துகொள்ள நான் மேற்கொண்ட சோதனை பதிவு பற்றியும் அனேகர் அறிவீர்கள்.

அந்த பதிவு வெற்றிகரமாக தமிழ்மணத்தில் சேர்க்கப்பட்டு பின்னூட்டங்களும் திரட்டப்பட்டதால் வார்ப்புருவில் எந்த விதமான மாற்றங்களும் தேவையில்லை என்பது தெளிவாகிற்று. பதிவிட்ட பின் முகப்பில் வழக்கம் போல் வந்த பதிவு, பின்னூட்டங்கள் 30 (குமரனின் பேராதரவுடன்!) தாண்டியபின் நிர்வாகத்தினர் சொன்னது போல் காணாமலேயே போனது.

ஆனால் முகப்பில் வரவில்லை என்றாலும் தொடர்ந்து திரட்டப்படும் என நிர்வாகத்தினர் சொல்லி இருந்ததால் ஒரு வேளை "கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" என்ற பகுதியிலாவது வருகிறதா என பார்த்தால் அங்கும் வரவில்லை. அதனால் தொடர்ந்து திரட்டப்படுவது என்பது பற்றி நிர்வாகத்தினரிடம் கேட்டுள்ளேன். அவர்கள் பதில் அளித்தவுடன் இங்கு இடுகிறேன்.

30க்கு பின்னால் என்ன? என்ற ஒரு குழப்பம் நம்மிடையே நீடிக்கும் (அட்லீஸ்ட் எனக்கு மட்டுமாவது இருக்குங்க) நிலையில், இந்த கேள்வியும் அதற்கான பதிலும் நமக்கு ஒரு தெளிவைத் தரும் என்பதற்காகவே இந்த பதிவு.

மற்றபடிஅனானி ஆட்டமில்லாமல், அடுத்தவரை வசை பாடாமல் வெறும் ஜாலிக்கு பின்னுட்ட விளையாட்டு நடந்தால், வழக்கம் போல பதிவுக்கு வரும் நண்பர்களும் வந்து கொண்டுதான் இருப்பதால் பின்னூட்ட விளையாட்டுக்கு உடனடி ஆபத்தில்லை என்பதும் நிச்சயமாகிறது.

இங்கு குறிப்பிட்டு இருந்த பதிவு தமிழ்மண நிர்வாகத்தினரால் நீக்கப்பட்டு விட்டது. இனி இங்கிருந்தால் விளம்பரம் தருவது போலாகும் என்பதால் நானும் அது பற்றிய குறிப்பினை எடுத்து விடுகிறேன். தமிழ்மணத்தின் தரம் காக்கும் நிர்வாகத்தினரின் இந்த செய்கைக்கு எனது நன்றி.

Monday, February 26, 2007

சோதனைப் பதிவு

டிஸ்கி: இது ஒரு சோதனைப் பதிவு. சொல்லப் போவது என் சோகக் கதையை. வேண்டாதவர்கள் சாய்ஸில் விட்டு விடுங்கள்.

சனிக்கிழமை வரை ஒழுங்காக தமிழ்மண முகப்பில் வந்து கொண்டிருந்த எனது பதிவுகள், திடீரென ஞாயிற்றுக் கிழமையிலிருந்து அண்மையில் மறுமொழியப்பட்ட பதிவுகளில் வரக் காணோம். இத்தனைக்கும் நான் வார்ப்புருவில் எந்த வித மாற்றமும் செய்யவில்லை. என்ன செய்வது எனத் தெரியாது திணறி நின்ற பொழுது இந்தப் பதிவு கண்ணில் பட்டது.

தமிழ்மண நிர்வாகக் குழுவினர் இனி 30 பின்னூட்டங்களுக்கு மேல் போகும் பதிவுகளை திரட்ட போவதில்லை என்ற அவர்களது முடிவை வெளியிட்டு இருக்கும் பதிவு இது. இந்த அறிவிப்பு இவர்கள் இன்றுதான் வெளியிட்டு இருந்தாலும் ஒரு வேளை அதற்குரிய மென்பொருளை நேற்றே சோதனை செய்து இருப்பார்களோ, அதனால்தான் முப்பதிற்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் இருக்கும் அந்தப் பதிவு தெரியாமல் போனதோ என சந்தேகம்.

இந்த பதிவும், இதில் வரும் மறுமொழிகளும் தமிழ்மணத்தில் சரிவரத் தெரிந்தால் வார்ப்புருவில் கை வைக்க வேண்டாம். அல்லது அதில் என்ன பிரச்சினை எனப் பார்க்க வேண்டும். அந்த சோதனைக்காகவே இந்தப் பதிவு. இவ்வளவு நேரம் பொறுமையாக எதேனும் இருக்கும் எனப் படித்து இருந்தீர்களானால் என்னை மன்னிக்கவும். இது உண்மையிலேயே ஒரு சோதனைப் பதிவு.

Friday, February 23, 2007

இண்டிபிளாக்கீஸைத் தொடர்ந்து ஒரு கின்னஸ் சாதனை!

இப்போதான் இண்டிபிளாக்கீஸ் தேர்தலில் நம்ம பினாத்தலார் வெற்றி பெற்ற சந்தோஷச் செய்தியை பகிர்ந்துகிட்டேன். அதுக்குள்ள அடுத்த செய்தி. இது கின்னஸ் சாதனை. பின்னூட்டத்தில் கின்னஸ் சாதனை செஞ்சதா நம்ம பேரு வந்திருக்கா? ச்சீ, ச்சீ அதெல்லாம் இல்லைங்க. இது வேற ஒரு இனிப்பான செய்தி.

அதாவது உலகத்திலே அதிக காரமுள்ள மிளகாயா நம்ம அசாம் மாநிலத்தில் விளையும் ஒரு ரக மிளகாயைத் தெரிவு செஞ்சிருக்காங்க. அதுதான் அதிக காரமுள்ள மிளகாய் என்ற சாதனை என்பதை கின்னஸ் நிறுவனத்தாரும் உறுதி செஞ்சுருக்காங்க. இப்போ சொல்லுங்க. இது இனிப்பான செய்திதானே. இன்னும் கொஞ்சம் தகவல் சொல்லறேன் கேட்டுக்குங்க.

இந்த மிளகாயின் பெயர் பூத் ஜோலோகியா (Bhut Jolokia), அதாவது பூத மிளகாய். இந்த மிளகாய் விஷ மிளகாய், நாகா மிளகாய், ராஜ மிளகாய் என்றெல்லாமும் அழைக்கப் பெறுகிறது. அசாம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் பங்களாதேசத்தின் சில பகுதிகளில் பயிராகிறது. இந்த மாதம் அமெரிக்காவில் உள்ள நியூ மெக்ஸிகோ மாநில பல்கலைக்கழகத்தின் மிளகாய் மன்றத்தின் (New Mexico State University Chili Pepper Institute) பேராசிரியர் போஸ்லேண்ட் என்பவர் நடத்திய ஆய்வுகளின் இறுதியில் இந்த முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது.

சரி. இந்த மிளகாயின் காரத்தை எப்படி அளக்கிறார்கள் என்று கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா? காரத்தின் அளவு ஸ்கோவில் அளவுகோலால் (Scoville Scale) நிர்ணயிக்கப்படுகிறது. 1912ஆம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானி வில்பர் ஸ்கோவில் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகோல் இது. மிளகாயின் சாற்றில் காரம் தெரியாத அளவு சர்க்கரைத் தண்ணீரைச் சேர்க்கிறார்கள். சேர்க்கப்படும் தண்ணீரின் அளவினைக் கொண்டு காரத்தின் அளவை நிர்ணயிக்கிறார்கள். தற்பொழுது இதனை விட துல்லியமான அளவுகளுக்காக High Performance Liquid Chromatography என்ற முறையையும் கையாள்கிறார்கள்.

நம்ம ஹீரோ (பெனத்தலார் இல்லைங்க நம்ம பூத் ஜோலோகி) ஸ்கோவில் முறைப்படி 1,001,304 கார அளவினைப் பெற்றுள்ளார். இதற்கு முன் எந்த மிளகாய்க்கும் இந்த அளவு ஒரு மில்லியனைத் (10 இலட்சம்) தாண்டியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்னங்க இவ்வளவு அருமையான செய்தியைத் தேடி தருகிறானே என கண்ணீர் வருகிறதா!!

இன்னும் ஒரு மிளகாய் செய்தி. மனிதர்கள் சுமார் 6100 ஆண்டுகளுக்கு முன்பாகவே மிளகாய்ச் செடிகளை வளர்த்துள்ளனராம். அது பற்றிய செய்திக் குறிப்பு இதோ. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய காரம் சேர்க்கும் பழக்கம் போல இருக்கிறது. அது எந்த வகை மிளகாய்ன்னு பார்க்கணும்.

சாதனை குறித்த செய்தி

பூத் ஜோலோகியா குறித்த விக்கி குறிப்பு
ஸ்கோவில் அளவுகோலைக் குறித்த விக்கி குறிப்பு

Thursday, February 22, 2007

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ....

என்னவென்று சொல்வதம்மா இன்று வந்த செய்திதனை..

செய்தியைக் கேட்ட உடனே எம்புட்டு சந்தோஷமா இருக்கு. கையும் ஓடலை காலும் ஓடலை அப்படின்னு சொல்ல வந்த கை எப்படிடா ஓடுமுன்னு ஒரு டெவில் ஷோ நடத்துவீங்களோன்னு பயமா இருக்கு. அதனால அதைச் சொல்லலை.

ஆனா செய்தியைக் கேட்ட உடனே சும்மா இருக்க முடியுதா? அதான் இல்லை. வீட்டு சோபாவில் துள்ளிக் குதிச்சதைப் பார்த்து தங்கமணி டென்சனானதுதான் மிச்சம். அதுவும் வாயெல்லாம் பல்லா இருக்கா, விஷயத்தைச் சொல்லாம ஆடுறானேன்னு ஒரே கடுப்பு. என்னது?, உங்களுக்கும் அதே கடுப்புதானா? விஷயத்தைச் சொல்லணுமா? சரி சொல்லறேன்.

இண்டிபிளாக்கீஸ் தேர்தல் முடிவு வந்திருச்சுங்க!

நம்ம ஆளு, விக்கி சகோதரர், நகைச்சுவை மன்னர், நக்கல் நாயகன் பினாத்தலார் 2006ன் சிறப்பான பதிவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். வெற்றி பெற்ற நம்மவர் அண்ணன் பினாத்தலார் அவர்களுக்கு அனைவரும் ஒரு பெரிய ஓ! போடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


(ஏன் மஞ்ச கலரா? அதான்ய்யா ஆளுங்கட்சி கலரு, அதான். இதே வேற சமயமா இருந்த பச்சையா போட்டு இருக்க மாட்டோம்.)

அதுவும் வெற்றின்னா வெற்றி, சாதாரண வெற்றி இல்லைங்க. மகத்தான வெற்றி. அவரது வெற்றிக்கு காரணமாய் இருந்த நம் சக வலைப்பதிவர்கள் அனைவரும் என் நன்றிகள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட அளவு பின்னூட்டங்கள் விரைவில் வந்து சேர ஏற்பாடு செய்யப்படும். பினாத்தலார் பதவி ஏற்றுக்கொண்ட உடன் இடும் முதல் கையெழுத்து பின்னூட்ட போலீஸ்துறையை கலைப்பதாகத்தான் இருக்கும். ஆகவே இனி பின்னூட்டங்களுக்குப் பஞ்சமே இருக்காது!

இந்நேரத்தில் வெறும் ரீமேக் செய்ததற்கே இப்படி எல்லாம் பட்டம் கிடைக்கையில் நீர் சொந்தமாக எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற பாசிச பேச்சுகள் எதையும் பேசி அண்ணன் அவர்கள் மூடை அவுட் ஆக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகார பூர்வ அறிவிப்பில் கள்ள ஓட்டுக்களை கண்டுபிடித்து நீக்கிவிட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள். அது கண்டுபிடிக்க முடியாத வகையில் கள்ள ஓட்டுக்களைப் போட்டு கழக பலத்தை காட்டிய கண்மணிகளுக்கு என் நன்றி. நல்ல வோட்டு மட்டுமே போட்ட பொதுஜனங்களுக்கும் எனது நன்றி. (கூட ரெண்டு வோட்டு போட்டு இருந்தா குறைஞ்சா போவீங்க?). பினாத்தலாரின் பெருவெற்றிக்கு அயராது உழைத்த அனைவருக்கும் என் நன்றியைக் கூறி அண்ணன் அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்களைக் கூறி இப்பதிவை முடித்துக் கொள்கிறேன். நன்றி! வணக்கம்!



இண்டிபிளாக்கின் அதிகார பூர்வ முடிவறிவிப்பு

அண்ணன் வாங்கிய வாக்கு விபரங்கள்

Thursday, February 15, 2007

இரு தலை கொள்ளி எறும்பு

இப்படி என் நிலமை ஆகுமுன்னு எதிர்பார்க்கவே இல்லையே. எந்த விஷயமா இருந்தாலும், என்னதான் நடுநிலமைவியாதி (நன்றி: யாருக்குன்னு உங்களுக்கே தெரியும்) வேஷம் போட்டாலும், உள்ளுக்குள்ள நம்ம வோட்டு எந்தப் பக்கமுன்னு சரியாத் தெரியுமே. ஆனா இன்னைக்கு நம்மளை இப்படித் தொங்க விட்டுட்டாங்களே! மேட்டர் என்னான்னு கேட்கறீங்களா? எல்லாம் இந்த பாழாப்போன இண்டிபிளாக்கீஸ் தேர்தல்தாங்க.

எப்பவும் தேர்தல்ன்னு வந்தா நம்ம வோட்டு யாருக்குன்னு எளிதா முடிவு பண்ணிட்டு, தேர்தல் நாளன்று வோட்டு போட முடியாமல் எங்கயாவது வெளியூரில் ஆணி புடுங்குறதுதானே நம்ம வழக்கம். ஆனா இந்த முறை பாருங்க அந்த மாதிரி ஒரு முடிவுக்கு வர முடியாதபடி தவிக்க விட்டுட்டாங்களே. போதுமய்யா புலம்பல், மேட்டருக்கு வான்னு சொல்லறீங்களா? இருங்க வரேன்.

இந்த இண்டிபிளாக்கீஸ் இருக்காங்களே, இவங்களுக்கு வேற வேலையே இல்லை. வருஷா வருஷம் சிறந்த பதிவுகள் அப்படின்னு சில பதிவுகளைத் தேர்வு செய்து அவங்களுக்கு பரிசெல்லாம் குடுத்து அவங்களைக் குட்டிச்சுவராக்கறதே வேலையாப் போச்சு. அதுல பல பிரிவுகள் வேற. நமக்குத் தமிழ்மணத்தை விட்டு வேற என்ன தெரியும்? அதுனால இந்த தேர்தலை எல்லாம் சாய்ஸில் விட்டு வேடிக்கைப் பார்க்கலாம்ன்னு நினைத்தால் சிறந்த தமிழ்ப் பதிவு அப்படின்னு ஒரு பிரிவை வெச்சுத் தொலச்சுட்டாங்க. 24 மணி நேரமும் தமிழ்மணத்தில் குடியிருக்கற நாம இந்த தேர்தலில் பங்கேற்று ஓட்டுப் போடாம யாரு போடப்போறாங்கன்னு உள்ள போயி பார்த்தா அங்கதான் நமக்கு அதிர்ச்சி.

ஆமாங்க, நம்ம பசங்களோட பசங்களா, விக்கி பசங்களா இருக்கிற ரெண்டு பசங்களை இந்த தேர்தலில் மோத விட்டு இருக்காங்க, இந்த பாழாப் போன இண்டிபிளாக்கீஸ். அதுவும் ரெண்டு பேரும் நமக்கு ரொம்பவே நெருக்கமான, வேண்டியப்பட்ட பசங்க. அது மட்டும் இல்லாம நம்ம ப.ம.க.வில் வேற ரெண்டு பேரும் பெரும் தலைங்க. இப்போ நான் யாருக்குன்னு வோட்டு போட? அதான் என்ன பண்ணினேன், இவருக்கு ரெண்டு வோட்டு, அவருக்கு ரெண்டு வோட்டுன்னு பிரிச்சுப் போட்டு இருக்கேன். என்ன பண்ண, நம்ம நிலமை அக்னி நட்சத்திரம் விஜயகுமார் மாதிரி ஆகிப் போச்சே!

என்னது யாரு அந்த ரெண்டு பேரா? சரியாப் போச்சு. நம்ம பெனாத்தலாரும், ரஷ்ய மருத்துவர் ராமநாதனும்தாங்க அவங்க. நீங்களும் என்ன பண்ணுங்க, இவருக்கு ஒரு வோட்டு, அவருக்கு ஒரு வோட்டுன்னு ஒண்ணுக்கு ரெண்டா ஓட்டு போட்டு நம்ம ஆளுங்களை பெருவாரியான வோட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வையுங்க.

வோட்டு போடறது எல்லாம் ரொம்ப சிம்பிளுங்க. வோட்டுக்கு ஒரு மெயில் ஐடி வீதம் ரெண்டு மெயில் ஐடி வேணும். அதை வெச்சுக்கிட்டு இந்த தளத்துக்குப் போங்க. போயி உங்க மெயில் ஐடியைக் குடுத்தீங்கன்னா அந்த மெயில் ஐடிக்கு ஒரு மெயில் வரும். அதில் ஒரு சுட்டி இருக்கும். அதை சொடுக்கி வோட்டிடும் பக்கத்திற்குப் போங்க. அங்க இரண்டாவது பக்கத்தில் indic blog (tamil) என்ற பிரிவு இருக்கும். அங்க போயி Theriyala என்ற தளத்திற்கு ஒரு வோட்டும், Penathals என்ற தளத்திற்கு ஒரு வோட்டும் போடுங்க.

ஞாபகம் இருக்கட்டும் ஒரு மெயில் ஐடிக்கு ஒரு வோட்டுதான். அதனால இவங்க ரெண்டு பேருக்கும் வோட்டு போட ரெண்டு ஐடி வேணும். எனக்கு ரெண்டு ஐடி இல்லை அப்படின்னு பொய் சொல்ல நினைக்காதீங்க, அப்படி இல்லைன்னு சொன்னா நம்ம கிட்ட சொல்லுங்க இலவசமா ஒரு ஜிமெயில் ஐடி தரேன்!

போடுங்கய்யா வோட்டு, விக்கி பசங்கள பாத்து!
போடுங்கம்மா வோட்டு, விக்கி பசங்கள பாத்து!

Friday, January 26, 2007

நானும் குரு பதிவு போடறேன்! (கொஞ்சம் லேட்டா)

நம்ம மக்கள்ஸ் எல்லாரும் குரு பதிவு போடறாங்களே, நாமளும் போட்டா என்னான்னு ரொம்ப நாளாவே ஒரு யோசனை. அதுல பாருங்க நம்ம ஊரில் ஹிந்தியில்தான் குரு வந்தது. தமிழில் வரலை. அம்புட்டுப் பணம் குடுத்து ஹிந்தியில் பாக்கணுமா, அப்படிப் பார்த்தா நமக்கு வலையுலகில் என்ன முத்திரை குத்துவாங்கன்னு யோசிச்சுக்கிட்டே பாக்காம விட்டாச்சு. ஆனாலும் இந்த பதிவு போடற ஆசை மட்டும் போகவே இல்லை. அதுக்கு ஏத்தா மாதிரி ஒரு சான்ஸ் கிடைச்சுது. விடுவோமா? அதான் இந்த பதிவு!

வீட்டுலேர்ந்து நியூயார்க் நகரம் போகணுமுன்னா ரயிலில்தான் போகணும். அப்படிப் போகும் போது இலவசமா ரெண்டு மூணு செய்தித்தாள்கள் கிடைக்கும். பெரும்பாலும் உள்ளூர் செய்திகளே தாங்கி வரும். அதுவும் நம்ம ஊரில் இந்திய மக்கட்த்தொகை ரொம்ப ஜாஸ்தியா, அவங்களுக்கே ஒரு தனி செய்தித்தாள் வேற போட்டுட்டாங்க. அதுதான் DesiNJ.

நாம போன அன்னிக்கு அந்த செய்திதாளில் பார்த்த விஷயம் என்னன்னா...அட அதை நீங்களே பாருங்களேன்!



அதாவது குருவில் அமிதாப் நடிப்பைப் பார்த்து அபிஷேக்குக்கு ரொம்ப பெருமையாம். என்னடா இது நாம கேள்விப்பட்ட வரை அமிதாப் அந்த படத்தில் நடிக்கவே இல்லையேன்னு அந்த செய்தியை பூரா படிச்சா அமிதாப்புக்கும் அபிஷேக்குக்கும் கன்பூஸன் ஆகிட்டாங்க இந்த மக்கள். அதை நம்ம கும்பலுக்கு காமிச்சு சிரிச்சு அன்னைக்கு நம்ம கம்பார்ட்மெண்டையே ரெண்டு பண்ணிட்டோமில்ல. நீங்களும் இந்த வாரயிறுதியை ஒரு சிரிப்போட ஆரம்பியுங்க. Have a great FUNNY weekend!

அந்த செய்தித்தாளில் பார்த்த இன்னொரு விஷயம் இது. ஆனா போன செய்தியோட லட்சணத்தைப் பார்த்த பின் நம்பணுமா வேண்டாமான்னு தெரியலை. நீங்களே படிச்சி முடிவு பண்ணிக்குங்க.



அதாவுதுங்க பொதுவா ஒரு மொழிக்கு மேல பேசறவங்களுக்கு டிமெண்ஷியா என்ற நோய் தாக்கும் தருணம் லேட்டா ஆகுதாம். டிமெண்ஷியா என்றால் என்ன அப்படின்னு கேட்கறவங்களுக்கு அகராதி தரும் பொருள் - severe impairment or loss of intellectual capacity and personality integration, due to the loss of or damage to neurons in the brain. கொஞ்சம் புரியறா மாதிரி சொல்லணுமுன்னா Madness! அதாங்க சித்தம் இழந்து பயித்தியம் ஆகறது.

இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா முதல்செய்தியைத் தந்த ஆளுக்கு ஒரே ஒரு மொழிதான் பேசத் தெரியும்! (அட அது யாருடா அது? சைடில் வந்து நம்ம தமிழ் வலைப்பதிவர்கள் நிறையா பேருக்குக் கூட ஒரு மொழிதான் தெரியும் போல அப்படின்னு சவுண்ட் விடறது!)

Sunday, January 14, 2007

பொங்கல் போனஸ்

இன்றைக்குப் பொங்கல். எல்லோரும் பொங்கலிட்டு மகிழ்ந்திருக்கும் இந்த வேளை எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே இனிக்கிறது. வலையுலகில் பல காலம் படித்தும் பின்னூட்டம் அளித்தும் வந்திருந்தாலும் நான் பதிவுகள் எழுத வந்து ஒரு வருடம் ஆகிறது. ஆமாம் கடந்த ஆண்டு ஜனவரியில்தான் நான் என் வலைப்பூவைத் தொடங்கினேன்.

ஒரு வருடமாக நாமும் எழுதிக் கொண்டு இருக்கிறோமே, நாம் எழுதுவதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிந்து கொள்ள ஒரு ஆவல். யாரைக் கேட்பது என யோசித்துக் கொண்டே பழைய பதிவுகளைப் புரட்டினால், என் முதல் இடுகையின் முதல் பின்னூட்டம் அளித்து என்னை இந்த வலையுலகிற்கு வரவேற்றவர் நம் ஜிரா எனப் பார்த்தேன்.

சரிதான், முதன் முதலில் நம்மை வாழ்த்தி வரவேற்ற அவரையே நம் முதல் வருட அப்ரெய்சலைச் செய்யச் சொல்லலாம் எனக் கருதி அவரை அணுகினேன். என் வேண்டுகோளை மதித்து அவர் ஒரு பதிவாகவே எழுதி அனுப்பி வைத்தார். இதுவே எனது பொங்கல் போனஸ். எனக்காக பதிவு எழுதி, அதனை பொங்கல் பரிசாக எழுதி அனுப்பியதற்கு நன்றி ஜிரா.

அந்தப் பரிசினை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நீங்களும் உங்கள் மேலான கருத்துக்களைச் சொல்லி எனது நிறை குறைகளை சுட்டிக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இனி ஜிரா


ஜனவரி மாதம் பத்தாம் நாள் 2006ல் ஜனங்களுக்கு வரி போடும் அரசாங்கங்கள் உலகமெங்கும் இருக்கையில் இலவசமாக ஒரு வலைப்பூ பூத்தது. பூ இருந்தால் பழமும் இருக்கத்தானே வேண்டும். மாதுளையும் கூடக் கிடைத்தது. மாதுளை என்றால் இந்தியில் அனார். அதுவும் ஒன்று இரண்டு அல்ல. ஒரு கொத்து. அதாவது கொத்து அனார். அதாகப்பட்டது கொத்தனார். இலவசக் கொத்தனார்.

வரும் போதே வந்துட்டேன் வந்துட்டேன்னு இரண்டு தடவை சொல்லிக்கொண்டு வந்தார். ஏன் இரண்டு முறை? இலவசமாக ஒன்று கிடைக்கிறதென்றால் அந்தப் பொருளை ஒருமுறையா வாங்குவோம்? இரண்டாம் முறையும் வாங்குவோம் அல்லவா. அதனால்தான் இரண்டு முறை சொன்னார். அது அவரது பின்னவீனத்துவ கருத்தாய்வுத் திறனின் ஆழத்தின் உச்சத்தை விளங்கச் சொல்லும் வகையில் இருந்தது என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. அதனால்தான் அவரது பதிவில் முதல் பின்னூட்டமிட்ட வலைஞர் என்ற பெருமையை எனக்களித்துப் பெருமைப் படுத்தினார். (மயிலார் : கொத்சோட தலையெழுத்து. உருப்படியா யாராவது போட்டிருக்கக் கூடாது. பெருமையில இருக்குற பெக்கு பதிலா எ போட்டா சரியாயிருக்கும்.)

வந்ததுமே...இரண்டாவது பதிவில் "There is sex for money and there is sex for free. And sex for free costs more!" என்று நகைச்சுவையாக குறும்போடு சொன்னார். திடீர்னு என்னாச்சோ ஏதாச்சோ தெரியலை எவன்ன, மல்மல், வர்ளம்வர், குமழைடை, மனமத்தாப்பூசு-னு சொன்னாரு. என்னடான்னு கேட்டா ரீபஸ்சாம். (மயிலார்: ரீபஸ்னா? சுரங்கள்ள ஸ-பஸ்சுக்கும் க-பஸ்சுக்கும் நடுவுல வருமே அந்த ரீபஸ்சா?)

சொடக்குப் போடும் பழக்கம் நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. ஆனால் சூடோகு போடும் பழக்கம் நல்லதாம். ஏனென்றால் சூடோகு என்பது கணக்கு விளையாட்டு. அதை நன்றாக விளையாடினால் கூட ஒரு இலவசம் கிடைக்குமாம். அதுதான் நீண்ட ஆயுள். இத்தோடு சேர்த்து பத்துப் பதிவு கூட வந்திருக்காது. ஆனால் பின்னூட்டங்கள் மட்டும் 150, 350 என எகிறிக் குதித்தன. இது கயமைத்தனமா என்று போலீஸ் வைத்துப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் கண் பட்டதோ....அவருக்கும் வந்தது ஒரு சோதனை.

இப்படி ரீபஸ் பதிவுகளாகப் போட்டுக்கொண்டிருந்தவர் மைசூர் அரண்மனைக்குப் போனார். அங்கு சிவாவைச் சந்தித்தார். ஆமாம். கால்காரி சிவாவைத்தான். மைசூர் அரண்மனை கால்காரியில்தானே இருக்கிறது. மைசூர் போண்டோ கிடைக்கிறதோ இல்லையோ...காலிபிளவர் வறுவல் கிடைக்கும். (மயிலார்: திங்கிற பண்டம் எங்க எது கெடைக்கும்னு சரியாச் சொல்லீருவயே!)

பெண்பா எல்லாம் என்பா என்று வெண்பா வடிக்கும் கூட்டத்திற்கு நடுவில் தன்பா எல்லாம் நிறத்திலும் வெண்பா என்று கொத்தனார் எழுதத் தொடங்கினார். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமென்று பலபா ஏற்கனவே எழுதப்பட்ட நிலையில் கண்பார் குமரனை வைத்து நண்பார் எனப் புகழ்ந்து ஒரு தண்பா எழுதினார். இதற்குக் கிடைத்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 134. ஜீவ்ஸோடு சேர்ந்து கொண்டு இயன்ற அளவில் இனிய தமிழில் என்று வெண்பாக்களாக எழுதித் தள்ளினார். (மயிலார்: எழுத்து விளையாட்டாக்கும்? நெனப்புதான் பொழப்பக் கெடக்குது! ஒழுங்கா எழுதுனாலே ஒன்னும் புரியாது. இது மட்டும் யாருக்காவது முழுசா சரியாப் புரிஞ்சிருச்சு...அவங்களுக்கு பரிசு ஒரு மயிலிறகு!)

பரோட்டா பரோட்டா நான் குத்தும் பரோட்டா.......என்று ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாட்டு போட்டிருக்கிறார். கொத்தனாரோ பதிவு போட்டிருக்கிறார். முட்டை பரோட்டா குத்தியதை அழகாகச் சொல்லி அவர் அள்ளிய பின்னூட்டங்களின் எண்ணிக்கை முன்னூற்றுக்கு இருபத்தைந்து குறைவு. அத்தோடு விட்டாரா? தண்ணியப் போட்டா சந்தோஷம் பிறக்கும்...தள்ளாடி நடந்தா உல்லாசம் கிடைக்கும்....ஓ பார்வதீன்னு கமல் ஒரு படத்தில் பாடுவாரே...அந்த அளவிற்கு ஒரு பதிவு. அதைப் படித்தவர்கள் எல்லாம் நம்ம சிங்காரிச் சரக்கு நல்ல சரக்கு என்று பாடிப் புலம்பியதாகத் தகவல். தகவல் மட்டுமே.

இப்படிப் பதிவுகளாகப் போட்டுக் கொண்டு பின்னூட்டங்களை மொத்தக் குத்தகைக்கு எடுத்திருந்த கொத்தனாரின் வாழ்விலும் திருப்பம் வந்தது. பக்கிப் பசங்க என்று அனைவராலும் அன்போடும் பண்போடும் குணத்தோடு மணத்தோடு நிறத்தோடு திடத்தோடும் அழைக்கப்படும் விக்கிப் பசங்க என்ற குழும வலைப்பதிவில் அவர் மாட்டிக் கொண்டார். அதிலிருந்து அவர் அறிவாளி போலக் காட்டிக் கொள்ளப்பட வேண்டிய நிலை வந்தது. அதற்கெல்லாம் அசரவில்லை கொத்தனார். ஏமாந்தவர்களைச் சேர்த்துக் கொண்டார். கூட்டத்தோடு கோவிந்தா போட்டு விக்கிப்பசங்களை ஊரறியச் செய்தார். பின்னூட்ட நாயகிக்கு அடுத்த வாரிசு என்று பிரகடணம் செய்தார். அதை இன்றும் மறுப்பார் இல்லை. இதுதான் இலவசக் கொத்தனாரின் ஓராண்டுக்குள் நிகழ்ந்த மாபெரும் இமாலயச் சோதனை...சீச்சீ சாதனை. அவரை வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோம். (மயிலார்: வாழ்த்துவோம். வாழ்த்துவோம். இதுக்குத்தான் நம்மளக் கூப்புடுறாங்க)

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, January 07, 2007

ஈழ நண்பர்களுக்கு ஒரு கேள்வி

முதலில் டிஸ்கி. (இது போடாமல் கேள்விகள் கேட்க முடியவில்லையே, என்ன செய்வது.)

உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான் கேட்கிறேன். யாரையும் கேலி செய்ய வேண்டும் என்பதோ அல்லது புண்படுத்த வேண்டும் என்பதோ இப்பதிவின் நோக்கமல்ல.
டிஸ்கி முடிந்து விட்டது. இனி விஷயத்திற்குப் போகலாமா?

தமிழகத்தில் பேசப்படும் தமிழுக்கும் ஈழத்தின் பேசப்படும் தமிழுக்கும் சில வேறுபாடுகள் இருந்து வருவது நமக்குத் தெரிந்ததுதான். ஈழத் தமிழில் இன்று தமிழகத்தில் பாவிக்கப்படாத சொற்கள் பல இருக்கின்றன. நம் நண்பர்களின் பதிவுகளைப் படித்துப் படித்து அவைகளில் பல நமக்கு பழகியும் விட்டன. உதாரணமாக கதைக்கலாம் என்றால் பேசலாம் என்பது போல்.

சில சொற்கள் சற்றே உருமாறி இருந்தாலும் படிக்கும் பொழுது அவற்றின் பொருள் எளிதாக விளங்கி விடுகிறது. உதாரணமாக எண்டெல்லாம் (என்றெல்லாம்), இண்டைக்கு (இன்றைக்கு).

ஆனால் எனக்கு ஒரு வகையான மாற்றங்கள் மட்டும் ஏன் இப்படி மாறுகிறது என்பது புரிவதேயில்லை. அது ஆங்கிலத்தில் 'T' என்ற எழுத்து வரும் சொற்களை ஈழத் தமிழில் எழுதும் பொழுது நிகழும் மாற்றம்தான் அது. உதாரணத்திற்கு Toronto என்ற கனேடிய நகரின் பெயர் தமிழில் எழுதும் பொழுது 'ரொறன்ரோ' என எழுதுகிறார்கள். டொராண்டோ என எழுதினால் எளிதாகப் படிக்க முடிகிறதே. அதே போல் Beta 'பேற்றா' ஆனது. டிவி என்பது கூட 'றீவி' என ஆகிறது. நான் பார்த்த வரையில் கிட்டத்தட்ட எல்லா 'T'க்களும் இப்படி 'றீ'க்களாகவே எழுதப்படுகின்றன.

இனி கேள்விகள்

  1. இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன?
  2. பேசும் பொழுது இவ்வார்த்தைகளை எப்படி உச்சரிக்கிறார்கள். நம்ம உதாரணம் டொராண்டோவாகவே இருக்கிறதா அல்லது ரொ றன்ரோ என்றே உச்சரிக்கவும் படுகின்றதா?
  3. எல்லா 'T'க்களும் இப்படி 'றீ'க்களாகவே எழுதப்படுகின்றனவா? அல்லது இவ்விதிக்கு எதேனும் மீறல்கள் இருக்கின்றனவா?
  4. 'T' என்ற எழுத்து மட்டும்தான் மாறுகிறதா அல்லது 'D' என்ற எழுத்தும் இப்படி மாறுகிறதா?
  5. 'T' தவிர வேறேனும் எழுத்துக்களும் இவ்வாறு மாறுகின்றனவா? (BBCயை றீபிசி எனப் படித்ததாக ஒரு ஞாபகம். இது சரியாக இருந்தால் இது இன்னமும் குழப்பமான ஒரு விஷயம்.)
இது எனக்கு மட்டும் உண்டான கேள்விகள் இல்லை என்பது சில நண்பர்களின் பதிவுகளில் வரும் பின்னூட்டங்கள் மூலம் அறிய முடிகிறது. ஈழ நண்பர்கள் தயவு செய்து விளக்கங்கள் தருவீர்களா? தாங்கள் இங்கு தரும் விளக்கங்கள் மூலம் எனக்கு மட்டுமல்லாது மேலும் பலருக்கு ஒரு புரிதல் ஏற்படுமென்பது திண்ணம்.

Monday, January 01, 2007

மருதகாரய்ங்க காலரைத் தூக்கி விட்டுக்குங்கடே

இன்னைக்கு காலையில் இணையத்தில் செய்திகளைப் படிக்கும் போது கண்ணில் பட்ட தகவல் இது. பாரம்பரியம் மிக்க பி.பி.சி. ஒலிபரப்பு நிறுவனத்தின் தலைமை பொறுப்பைத் தற்காலிகமா ஏற்றுக் கொண்டிருப்பவர் டாக்டர். சித்ரா பரூச்சா என்ற பெண்மணியாம். இதுவரைத் தலைமைப் பொறுப்பில் இருந்த மைக்கேல் கிரேட் என்பவர் இங்கிருந்து விலகி போட்டி நிறுவனமான ஐ.டிவிக்கு சென்றுவிட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை சித்ரா நிரப்புவார்.



இது வரை பி.பி.சி. நிறுவனத்தின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வந்த போர்ட் ஆப் கவர்னர்ஸ் என்ற குழு கலைக்கப்பட்டு அந்த பொறுப்பு பி.பி.சி. ட்ரஸ்ட் என்னும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ட்ரஸ்டின் தலைமைப் பதவிக்குத்தான் சித்ரா தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார். இது வரை இந்த ட்ரஸ்டின் உபத் தலைவராக பதவி வகித்து வந்தார். ஒரு முழு நேர செயல்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இவர் இந்தப் பதவியை வகிப்பார்.

1972 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த இவர் 1996 ஆம் ஆண்டு வரை மருத்துவத் துறையில் பல்வேறு பதவிகளை வகித்தார். அதன் பின் ஊடகங்களின் பால் தன் கவனத்தைத் திருப்பி அதிலும் பல பதவிகளை வகித்தவர். பெப்ஸி இந்திரா நூயியைத் தொடர்ந்து ஒரு மிக பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்க இருக்கும் இந்தியப் பெண் சித்ராவிற்கு நம் வாழ்த்துக்கள்.

இதுக்கு நம்ம மருதக்காரய்ங்க ஏன் காலரத் தூக்கி விடணமுன்னு கேட்கறீங்களா? சித்ரா நம்ம மருத பொண்ணுங்க!

இது பற்றிய செய்திக் குறிப்பு 1, செய்திக் குறிப்பு 2